சமீபத்திய பதிவுகள்

ராஜஸ்தானில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் ஜெய்ப்பூரில் 7 இடங்களில் சங்கிலி தொடர் குண்டு வெடிப்பு(போட்டோவுடன்)

>> Tuesday, May 13, 2008

ராஜஸ்தானில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்
ஜெய்ப்பூரில் 7 இடங்களில் சங்கிலி தொடர் குண்டு வெடிப்பு
60 பேர் உடல் சிதறி சாவு
150-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 7 இடங்களில் சங்கிலி தொடர் போல நேற்று மாலை குண்டுகள் வெடித்தது. தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் 60 பேர் பலியானார்கள். 150-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.

ஜெய்ப்பூர்,மே.14-

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் மக்கள் நெரிசல் மிகுந்த 7 இடங்களில் நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

தொடர் குண்டு வெடிப்பு

இரவு 7.40 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 12 நிமிடங்களில் மொத்தம் 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. சாந்த்போல், சங்கனேர் கேட், திரிபோலியா பஜார், ஜோகரி பஜார், மனாஸ் சவுக், பதி சவுபால், சோட்டி சவுபால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் வெடித்தன. வழிபாட்டு தலங்கள், மார்க்கெட் பகுதிகள் ஆகியவற்றை குறிவைத்து தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தினர்.

மாலை நேரம் என்பதால், இந்த பகுதிகளில் எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, நிறைய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இவற்றில் ஒரு குண்டு, காரில் வைக்கப்பட்டு இருந்தது. அனைத்தும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் ஆகும்.

60 பேர் பலி

திரிபோலியா பஜார் பகுதியில் புகழ்பெற்ற அனுமன் கோவில் உள்ளது. செவ்வாய்க்கிழமை, அனுமனுக்கு விசேஷ நாள் என்பதால், அனுமனை வழிபடுவதற்காக பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்த கோவிலுக்கு வெளியில் குண்டு வெடித்ததால் பலர் உயிரிழந்தனர். அதனால் அந்த இடமே ரத்தமயமாக காட்சி அளித்தது.

சம்பவத்தின்போது, ஏராளமான மக்கள் பொருட்கள் வாங்குவதற்காக மார்க்கெட் பகுதிக்கு வந்திருந்தனர். குண்டு வெடிப்பை தொடர்ந்து, அவர்கள் பீதியில் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர். இதனால் தள்ளுமுள்ளு உருவானது. சில நிமிடங்களில் அந்த இடமே ஆள் நடமாட்டமின்றி காட்சி அளித்தது. மேலும் குண்டுகள் வெடிக்கும் என்ற பீதி நிலவியதால், அனாதையாக கிடக்கும் எந்த பொருளையும் தொடாதீர்கள் என்று போலீசார் பொதுமக்களை எச்சரித்த வண்ணம் இருந்தனர்.

இந்த குண்டு வெடிப்புகளில் 60 பேர் பலியானார்கள். 150 பேர் படுகாயம் அடைந்தனர்.

வெடிக்காத குண்டுகள் சிக்கின

இந்த தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ராஜஸ்தான் மட்டுமின்றி நாடு முழுவதும் பதட்டம் எழுந்தது. போலீஸ் டி.ஜி.பி. கில் உள்பட உயர் அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றனர். மீட்பு பணிகளை உடனடியாக முடுக்கி விட்டனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடங்களில் சோதனை செய்ததில், வெடிக்காத 3 குண்டுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை போலீசார் பத்திரமாக செயல் இழக்கச் செய்தனர்.

நாடு முழுவதும் உஷார்

இது தீவிரவாதிகளின் நாசவேலை என்று போலீஸ் டி.ஜி.பி. கில் நிருபர்களிடம் தெரிவித்தார். சக்திவாய்ந்த ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். சைக்கிளில் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்து இருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு, இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என்று உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில எல்லைகள் மூடப்பட்டன.

டெல்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய முக்கிய நகரங்கள் உள்பட நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ், ரெயில் நிலையங்கள், சினிமா தியேட்டர்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

முதல்-மந்திரி விரைந்தார்

ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே டெல்லி சென்றிருந்தார். குண்டு வெடிப்பு பற்றிய தகவல் அறிந்தவுடன் அவர் விமானப்படை விமானம் மூலமாக ஜெய்ப்பூருக்கு விரைந்தார். நிலைமையை சமாளிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர் கண்டனம்

ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைதி காக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜஸ்தான் அரசுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=412535&disdate=5/14/2008&advt=1

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP