சமீபத்திய பதிவுகள்

இந்து மதமும் பெண்களும் (பாகம் 6)

>> Wednesday, October 1, 2008

புராணங்களை கதைகள் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அந்தக் கதைகளின் அடிப்படையில்தான் தமது சடங்குகளையும் விழாக்களையும் இந்துக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து மதம் என்பது வேதங்கள், சாத்திரங்கள், புராணங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் ரிக், யதூர் போன்ற வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. அதன் மூலம் இந்த வேதங்கள் பெண்களை இழிவுபடுத்துவதைக் கண்டோம்.

மனுதர்ம சாத்திரத்தையும் உதாரணம் எடுத்துப் பார்த்தோம். பகவத்கீதையையும் உதாரணத்திற்கு எடுத்தோம். பின்பு ஒரு புராணக் கதையையும் உதாரணத்திற்கு எடுத்தோம். எல்லாமே பெண்களை இழிவுபடுத்துகின்றன. பெண் தாழ்ந்த பிறப்பு என்று சொல்கின்றன. கற்பு அற்றவர்கள் என்கின்றன. தோசம் உள்ளவள் என்கின்றன.

நாம் பார்த்த புராணக் கதையின் படி பெண்ணினுடைய தோசம்தான் மாதவிடாயாக வெளிப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் தீட்டு என்று சொல்லி தள்ளி வைப்பதன் காரணம் இதிலிருந்துதான் வந்தது.

பெண்களை மூன்று நாட்களும் தள்ளி வைப்பதற்கு இன்றைக்கு சிலர் அசுத்தம், ஆரோக்கியம், அது, இது என்று விஞ்ஞான விளக்கங்கள் தருவார்கள். ஆனால் அவைகள் உண்மை இல்லை.

மேற்குநாட்டுப் பெண்கள் வீட்டில் தள்ளி இருப்பது இல்லை. அங்கு யாரையும் எந்தக் கிருமியும் பாதிக்கவில்லை. இன்றைக்கு பெண்கள் தமது மாதவிடாய் காலங்களிலும் பல ஆயிரம் பேர் வேலை செய்யும் தொழிற்சாலைகளிற்கு சென்று வேலை செய்கின்றார்கள். அங்கும் யாரையும் எந்தக் கிருமியும் பாதிக்கவில்லை.

ஆனால் இன்றைக்கும் மாதவிடாய் உள்ள ஒரு இந்துப் பெண்ணால் ஒரு கோயிலிற்கு சென்று வழிபட முடியாது. கோயிலில் யாரும் இல்லாத நேரத்தில் கூட போக முடியாது. தீட்டு என்று சொல்லி தடுத்து விடுவார்கள். மாதவிடாய் என்பது பெண்ணினுடைய தோசத்தின் வெளிப்பாடு என்று இந்து மதம் உறுதியாக நம்புவதே இதற்கு காரணம். ஒரு புராணக் கதை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு இது ஒரு உதாரணம்.

புராணங்களை வெறும் கதைகள் என்று தூக்கி எறியாது, அதை உண்மை என்று நம்பி தொடர்ந்தம் அவைகளை இந்து மதம் கடைப்பிடித்து வருவதாலேயே நாமும் அது குறித்து பேச வேண்டி உள்ளது. இந்து மதம் சொல்வதும் செய்வதும் அனைத்தும் பெண்களுக்கு எதிரானதே.

இந்த மதத்தில் பெண்ணை வைத்து ஒரு பிளவு ஏற்பட்டதாக சொல்லியிருந்தேன் அல்லவா? அதை இப்பொழுது பார்ப்போம்.

இந்து மதத்தில் பல பிரிவுகள் இருப்பதாக சொல்வார்கள். அதிலே சைவம், வைணவம் போன்றவைகள் முக்கியமானவை. சைவத்திலும் வீரசைவம், சிந்தாந்த சைவம் என்ற பிரிவுகள் இருக்கின்றன. வைணவத்தில் தென்கலை, வடகலை என்று பிரிவுகள் இருக்கின்றன.

வீரசைவம், சைவசிந்தாந்தம் போன்ற பிரிவுகளுக்கிடையில் பெரியளவில் சச்சரவுகள் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் வடகலைக்கும் தென்கலைக்கும் நடந்த பிரச்சனைகள் உலகப் பிரசித்தம். இன்றுவரை பல இடங்களில் இவர்களுக்குள் சர்ச்சைகள், பகையுணர்வுகள் உண்டு. ஒரு பிரிவினர் மற்ற பிரிவினருக்குள் திருமணம் செய்து கொள்வது என்பது வெகு வெகு குறைவு.

வடகலை, தென்கலை பிரிவுகளை நாமங்களை வைத்துத்தான் இனம் காண்பார்கள். வடகலையினர் "Y" வடிவத்திலே நாமம் கீறி நடுவில் ஒரு கோடு போடுவார்கள். தென்கலையினர் "U" வடிவத்தில் நாமம் கீறி ஒரு கோடு போடுவார்கள்.

இந்த நாமம் பற்றி இரு தரப்பும் தருகின்ற விளக்கம் ஒன்றுதான். நாமத்தின் இரு கரையும் உள்ள கோடுகள் பெருமாளின் பாதங்களாம். இரண்டு கோடுகளும் பெருமாளின் பாதங்கள் என்றால், நடுவில் சிவப்புக் வண்ணத்தில் உள்ள குறி எதுவென்று உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்.

சைவர்கள் ஆண்குறியை லிங்கம் என்று வணங்குவார்கள். வைணவர்கள் நெற்றியில் பூசுவார்கள். இதை பின்பு சந்தர்ப்பம் வரும் போது தனியாகப் பார்ப்போம்.

இந்த வடகலை, தென்கலை நாமம் பற்றிய ஒரு சர்ச்சை வெகுபிரசித்தம். சிறிரங்கம், காஞ்சிபுரம் பெருமாள் கோயில்களில் நின்ற யானைகளுக்கு எந்த நாமம் போடுவது என்ற பிரச்சனை வந்து அது நீதிமன்றத்தில் நீண்ட காலம் இழுபட்டது.

வெள்ளைக்காரர் காலத்தில் தொடங்கிய வழக்கு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் தொடர்ந்தது. சில நேரங்களில் ஒரு நாமத்திற்கு சார்பாக தீர்ப்பு வரும். ஆனால் அதற்குள் அந்த யானை இறந்து போயிருக்கும். இப்பொழுது புதிய யானைக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி நாமம் சாத்த மறு தரப்பு விடாது. அது பழைய யானைக்குத்தான் பொருந்தும், புதிய யானைக்கு எமது நாமத்தை சாத்தத்தான் வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றம் போவார்கள். அனேகமாக தீர்ப்பு வருவதற்கு முதல் அந்த யானையும் இறந்து போயிருக்கும்.

இங்கிலாந்து நீதிமன்றங்கள் வரை இந்தப் பிரச்சனை போனது. வெள்ளைக்கார நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இதை "Y,U" பிரச்சனை என்றுதான் அழைப்பார்கள்.

இப்படி பல வேடிக்கைகளையும் பகைகளையும் உருவாக்கிய இந்த "Y,U" பிரிவுகள் ஏன் உருவாகின என்று தெரியுமா? இதற்கு காரணம் பெண் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
 

தொடரும்…..
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP