சமீபத்திய பதிவுகள்

இஸ்ரவேலும் - இஸ்மவேலும் -பைபிள் அருளிய தீர்கதரிசன வார்த்தைகள்

>> Monday, November 3, 2008

இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
(SELECTED)
சத்திய வேதாகம திறவுகோல் - Pr.S.GNANAMUTHU 1972

சரித்திர செய்தி: இஸ்மவேல் சந்ததி:

முற்பிதாக்களில் மூத்தவனான ஆபிரகாம் காலம் துவக்கி ஏறத்தாழ கி.பி.600    வரை 1600 வருஷங்களாக இஸ்மவேல் ஜாதியார் யெகோவாவை அறியாத அஞ்ஞானிகளாகவே வாழ்ந்துவந்தனர். கி.பி.570க்குப்பிறகு அவர்களில் பெரும்பகுதியினர் முகமதிய மார்க்கத்தை தழுவ துவங்கினார்கள். பூர்வகாலம் முதலே அவர்கள் ஒருவித முரட்டாட்டம் நிறைந்தவர்களாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே தங்களின் குடியிருப்பின் எல்லைகளை உண்டாக்கிக்கொண்டனர். இவர்கள் அனைவருமே சுகபோகிகளும்,    வியாபாரிகளாகவும் காணப்பட்டனர்.    இவர்களின் பூர்வ வாசஸ்தலம் பாரான் வனாந்தரமாயிருந்தது.          அங்கு வைத்துதான் இஸ்மவேல் வில்வித்தைகளில் தேர்ச்சி பெற்றவனாயிருந்தான். ஆதி 21:20-21. வனாந்தரத்தை தங்கள் வாசஸ்தலமாக மாற்றிக்கொண்ட இவனின் பின் சந்ததியினர் அங்கே அலைந்து திரிந்து காட்டுக்கழுதையைப்போல ஜீவித்து வந்தனர் என்று  வேதவசனம் கூறுகிறது.      யோபு 39:5-8      பவுல் அப்போஸ்தலன் சுன்னத்துக்காரர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று பிலி 3:2ல் கூறுவது இவர்களைப்பற்றியதே.

  லோத்தின் வம்சம்   -   இஸ்மவேல் வம்சம்: ஆபிரகாமை விட்டுப்பிரிந்து எகிப்துக்குப்போன லோத்தின் வம்சத்தினரும் யாக்கோபைவிட்டு பிரிந்து சேயீர் மலைநாட்டில் போய் குடியேறிய இஸ்மவேலும் ஒன்று கூடினர்.

  ஏதோமியா: யாக்கோபின் சகோதரனான ஏசா இஸ்மவேலின் குமாரத்தியை விவாகம் பண்ணினான். ஆதி 28:9,36:2-3.      இவர்களின் சந்ததியினர் ஏதோமியர் என்று அழைக்கப்பட்டனர்.      இவர்களோடு அமலேக்கியர் என்கிற ஜாதியினரும் சேர்ந்து இஸ்ரவேல் ஜனத்திற்கு சத்துருக்களாயினர். இஸ்ரவேலருக்கு சத்துருக்கள் யாரென்றால் ஆபிரகாமின் கூடாரத்தில் தங்கியிருந்து அவனுடைய ஆகாரத்தை சாப்பிட்டு வளர்ந்தவர்களே இப்போது ஆபிரகாமின் சந்ததியான இஸ்ரவேலருக்கு சத்துருக்களாக மாறினர்.

  இஸ்மவேலர்கள்: இஸ்மவேலின் தாயும், மனைவியும் எகிப்து தேசத்தைச் சேர்ந்தவர்கள். இஸ்மவேலுக்கு பிறந்த 12 பிள்ளைகளும் 12 பிரபுக்களானார்கள். அவர்களில் சிலர் ராஜாக்களாகவும் கருதப்பட்டார்கள். அவர்களாவன: அரேபியா, மொராக்கோ, அல்ஜீரியார, துனூஷியா, ஏமான், குவெய்த்தா, ஜோர்டர்ன், ஈரான், ஈராக், சிரியா, துருக்கி, லெபனான் ஆகியவர்களே இவர்களின் எல்லை ஆவிலா தேசம் துவங்கி அசீரியாவின் வடக்கே உள்ள சூருக்குப்போகும் இடம் மட்டாய் பரந்து விரிந்து காணப்பட்டது. ஆதி 25:12-18, 16:1, 22:21.

இஸ்ரவேலர்: இனி இஸ்ரவேலனப்பற்றிப் பார்ப்போம் கி.பி.70ல் தீத்து ராயன் இஸ்ரவேல் தேசத்தை முற்றிலுமாய் அழித்து கணக்கில் அடங்கா யூதர்களை கொன்று குவித்தான். தங்களின் தேசத்தை இழந்து மீதியாயிருந்த யூதர்கள் உலககெங்கும் சிதறி ஓடினர். தேசத்தை பறிக்கொடுத்த அவர்கள் ஏறத்தாழ 1900 வருஷங்கள் அகதிகளாக ஆங்காங்கே பல நாடுகளிலும் ஜீவித்துவந்தனர். சிலகாலம் கழித்து பலஸ்தீனா தேசம் துருக்கியர் ஆளுகைக்குள் வந்தது. தங்களை மீண்டும் பலஸ்தீனா தேசத்திலே வீடுகளைக் கட்டிக்கொண்டு குடியிருக்க அனுமதிக்கும்படி இஸ்ரவேலர்கள் கெஞ்சிக்கேட்டும் தரமுடியாது என்று துருக்கி சுல்தான் மறுத்துவிட்டான். அது மாத்திரமல்ல, அவன் யூதர்களைப்பார்த்து தெற்கு திசையை நோக்கி பாயும் நைல் நதியை வடக்கே பாயும்படியாய் திருப்பிவிட்டு பலஸ்தீனாவை செழிப்பாக்க உங்களால் முடியுமா? அப்படி செய்தால் நான் உங்கள் தேசத்திலே குடியேறப்பண்ணுவேன் என்று பரியாசம் பண்ணினான். எனவே யாதொரு உதவியுமற்ற யூதர்கள் பல தேசங்களில் பலவிதமான கஷ்டங்களையும், பாடுகளையும், சொல்லமுடியாத துயரங்களையும் அனுபவித்துவந்தனர். யூதர்களை சக்கந்தம் பண்ணின அந்த துருக்கி சுல்தானுக்கு சரியான பாடம் கற்பிக்க விரும்பின ஆண்டவர் முதலில் ஜெர்மனியையும், பிரிட்டனையும் மோதவிட்டார். 1914ல் அது உலகப்போராக மாறினது. யூதர்களை அவர்களின் சுயதேசத்தில் குடியேற்றுவதற்காய் ஆண்டவர் ஆரம்பித்த வேலை இது. இந்த யுத்தத்தில் ஜெர்மனியோடு துருக்கியும் கூட்டு சேர்ந்தது.    இவ்விரு தேசங்களும் சேர்ந்து பிரிட்டனைக் கடுமையாக தாக்கவே, இங்கிலாந்து படை சற்று பின்னடைந்தது. எனவே உலகில் உள்ள சகல கிறிஸ்தவர்களும் இங்கிலாந்து தேசத்தின் வெற்றிக்காய் ஜெபிக்க ஆரம்பித்தனர். இந்த  சமயத்தில்தான் டாக்டர்.WEIZMAN என்கிற யூத விஞ்ஞானி சவக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட ஒருவித ரசாயனப் பொருளான யூரேனியம் என்கிற தாதுப்பொருளினால் அதிக சக்தி வாய்ந்த பீரங்கிக்கான வெடிமருந்தை கண்டுபிடித்தார். இந்த வெடிமருந்தை இங்கிலாந்து நாடு பெற்று அதன் உதவியைக்கொண்டு ஜெர்மனியையும், துருக்கியையும் யுத்தத்தில் கடுமையாக தாக்கி அழித்தது. கர்னல் அல்லன்பி என்கிற பிரிட்டிஷ் தளபதி எகிப்து தேசத்தின் அலெக்ஸாண்டரியா துறைமுகத்தில் தங்கியிருந்த ராணுவப்படையை டர்க்கிக்கு எதிராய் அனுப்பினபோது வழியில் ராணுவவீரர்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அப்போது எகிப்துதேசத்தில் பாயும் நைல் நதியின் தண்ணீரை பெரிய குழாய் மூலம் எடுத்து ஏராளமான பணசெலவில் காடு, மலைகளையெல்லாம் கடந்து தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பலஸ்தீனாவரை அந்த தண்ணீர் போய் சேரும்படியான மகா பெரிய வேலைகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றார்கள். ஆண்டவரே இந்த காரியத்தில் அவர்களுக்கு அனுகூலமாயிருந்து துருக்கி சுல்தான் பரியாசம் பண்ணி சொன்ன அந்த வார்த்தையை நிறைவேற்றித்தந்தார். சுமார் 500 மைல்களை கடந்து வந்த நைல் நதியின் தண்ணீர் பலஸ்தீனா தேசத்தை செழிப்பாக்கியது. இதற்கு மூலகாரணரான கர்னல் அல்லன்பி சகலராலும் பாராட்டப்பட்டார். ஒரு வழியாக யுத்தம் ஓய்ந்தது. இங்கிலாந்து தேசம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


யூதர்களுக்கு சொந்த தேசம் உதயம்:

இந்த காலகட்டத்தில் யுத்தத்தில் ஜெயம் பெறக்காரணமாயிருந்த யூத விஞ்ஞானியான டாக்டர்.WEIZMANஐ அழைப்பித்து அவரை கவுரப்படுத்த விரும்பின இங்கிலாந்து தேசம் அவரைப் பார்த்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் எங்கள் தேசத்திலே நாங்கள் குடியேறும் உரிமையை எங்களுக்கு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இங்கிலாந்து அவர் கேட்டுக்கொண்டபடியே கி.பி.1918ல் யூதர்களுக்குரிய சுயராஜ்யமாக பலஸ்தீனாவை ஆர்ஜிதம் செய்து கொடுத்தனர். அதே ஆண்டில் சுமார் ஆறு லட்சம் யூதர்கள் உலகத்தின் பல பாகங்களிலிமிருந்து வந்து அங்கே குடியேறினார்கள். ஏராளமான யூதர்கள் நாள்தோறும் கூட்டம் கூட்டமாக வந்து பலஸ்தீனாவில் குடியேறினபடியினால் அங்கிருந்த அரபியர்களுக்கு அது பயங்கர பிரச்சனையாகத் தோன்ற ஆரம்பித்தது. இங்கிலாந்து தேசம் தங்களுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் எண்ணெய்களை பெற அரபு நாடுகளை எதிர்நோக்கியிருந்தபடியினால் யூதர்கள் குடியேறும் விஷயத்தில் யூதர்களுக்கு ஆதரவாய் நடந்துக் கொள்ளாமல் அரபியர்களுக்கு அனுசரணையாய் இருப்பதுபோல் நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். எனவே யூதர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரபு நாடுகள் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் ஆண்டவர் அரபியர்களின் இந்த கட்டுப்பாட்டினை முறியடிக்க அமெரிக்க நாடு இதில் தலையிட்டு நிர்வாகக்குழு (LEAGUE OF NATIONS) என்கிற ஒரு அமைப்பினை உருவாக்க முன்வந்தது. பலஸ்தீனாவில் எருசலேமை மட்டும் நீக்கிவிட்டு மீதி பாகத்தை இரண்டாகப்பிரித்து ஒரு பகுதியை  இஸ்ரவேலருக்கும் மற்ற பகுதியை அரபியர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தது. யோவேல் 3:2ல் தீர்க்கதரிசியின் மூலமாய் உரைக்கப்பட்ட பிரகாரம் அவர்கள் என் தேசத்தை பங்குப்போட்டுக் கொண்டார்கள் என்கிற தேவனுடைய வார்த்தை இங்கே நிறைவேறியது. ஆனாலும் இருசாராருமே இந்த பங்கீட்டில் திருப்தி அடையவில்லை.    முழுதேசமும் எங்களுக்கே சொந்தம் என்று இரண்டு கூட்டத்தாரும் வாதாடினார்கள்.


இரண்டாவது உலக மகா யுத்தம்:
இந்நிலையில் கி.பி.1947ல் பிரிட்டிஷ்படை பாலஸ்தீனத்தைவிட்டு வெளியேறின கையோடு இரண்டாவது உலக யுத்தம் ஆரம்பமானது. யுத்தத்தில் நேச நாடுகளான இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகியவற்றிற்கு ஜெயம் கிடைத்தது. அதையொட்டி யூதர்கள் அனைவரும் ஒன்றுகூடி எங்களுக்கு தனிநாடு அந்தஸ்தும், சுதந்திரமும் வேண்டுமென்று உலக வல்லரசுகளை நிர்பந்தப்படுத்தத் துவங்கினது. இதைத் தொடர்ந்து L.O.N என்கிற 11 நாட்டு பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அவர்கள் எடுத்த முடிவின்படி யூதர்களுக்கு தனிராஜ்யம் பிரகடனப்படுத்தத் அவர்களின் தேசத்திற்கு இஸ்ரவேல் தேசம் என்கிற பெயரையும் கொடுத்தது. இந்த பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத அரேபியர்கள் ஆங்காங்கே கலவரங்களை உண்டுப்பண்ணி ஏராளமான யூதர்களை கொன்று குவித்தனர். அமெரிக்காவும், பிரிட்டீசும் இதை அதிகமாய் கண்டுக்கொள்ளவில்லை. ஏனெனில் அரபியர்களுக்கு எதிராய் நடவடிக்கை மேற்கொள்ளும்போது தங்களுக்கு கிடைக்க வேண்டிய பெட்ரோல் கிடைக்காமல் போய்விடுமே என்று அஞ்சினர்.
எனவே யாருடைய உதவியுமில்லாமல் இஸ்ரவேலர் தனித்து நின்று அரபியர்களோடு அவ்வப்போது சண்டையிட்டப்படியினால் இரு தரப்பிலும் அநேகர் மரிக்க நேரிட்டது. இதையொட்டி அரபு நாடுகளான எகிப்து, சிரியா, லெபனான், ஈராக், துருக்கி ஆகியோர் ஒன்றுகூடி பெரும்படையுடன் குறுக்குப்பாதையில் வயல்வழியாக இஸ்ரவேலருக்கு எதிராக யுத்தம் பண்ணவந்தனர்.      அங்குள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான ஒருவித பயங்கர விஷத்தன்மை கொண்ட வண்டுகள் கூடுகட்டி வசித்துவந்தது. இந்த விஷயம் அரபியர்களுக்கு தெரியாது. அரபியரின் இராணுவ ஓசையில் அவைகள் பயந்துபோய் கூட்டைவிட்டு வெளியேவந்து ராணுவ வீரர்களையும் அவர்களின் குதிரைகளையும் கொட்டி, மகாவேதனையால் துடிதுடித்த ராணுவவீரர்கள் மேல்நோக்கி செல்லமுடியாமல் வந்த வழியே திரும்பி ஓடத்துவங்கினர். அநேகர் மரிக்கவும் நேர்ந்தது. யூதர்களுக்கு ஆதரவாக காட்டிலுள்ள குளவிகளை கர்த்தரே அனுப்பி அந்த யுத்தத்தை நடப்பித்தார் என்பதாக அமெரிக்க பத்திரிக்கைகள் தலையங்கம் தீட்டினது.
இப்போது பாலஸ்தீனாவில் யூதர்களின் கை ஓங்கவே அங்கிருந்த சுமார் 7 லட்சம் அராபியர்கள் அங்கிருந்து தங்கள் தங்கள் நாட்டிற்கு குடிப்பெயரத்தொடங்கினார்கள். இதை அறிந்த ஈராக் நாட்டின் ராஜா தன்னுடைய நாட்டிலுள்ள யூதர்கள் அனைவரும் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்கிற அவசர சட்டத்தை பிரகடனம் பண்ணினான். இதனிமித்தமாய் ஈராக்கிலிருந்து 1,22,000 யூதரும், பல்கேரியாவிலிருந்து 44000 யூதரும், போலந்திலிருந்து 40000 யூதரும் வெளியேற்றப்பட்டு பலஸ்தீனா வந்தடைந்தனர். இதை தொடர்ந்து ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் பல தேசங்களில் குடியிருந்த யூதர்கள் தாங்களாகவே அவ்விடம் விட்டு வெளியேறி தங்கள் சுயதேசத்திற்கு திரும்பிவந்தனர்.    இப்படியாய் வந்து சேர்ந்த யூதர்களின் எண்ணிக்கை இப்போது 10    லட்சமாக அதிகரித்தது.    இதை கண்ணுற்ற அரபியர்கள் யூதர்களின்மீது அதிக மூர்க்கம்கொண்டு இவர்களை எப்படியாவது அழித்து தீர்க்கவேண்டுமென்று திட்டமிட்டனர். அதன் காரணமாக கி.பி.1956ல் யூதர்களுக்கும் அரபியர்களுக்கும் இடையே ஒரு யுத்தம் உண்டானது. அந்த யுத்தத்தில் அரபுநாட்டுக்கு தோல்வியும், பயங்கர உயிர்சேதமும் உண்டானது. இந்த யுத்தத்தின் மூலம் அரபியருக்கு சொந்தமாயிருந்த சில பட்டணங்கள் இஸ்ரவேல் வசமானது. சுமார் 10 வருஷம் யாதொரு சண்டையும் செய்யாமல் அதேசமயம் தங்கள் இராணுவத்தை இரகசிமாய் பலப்படுத்தும்வேளையில் அரபியர் ஈடுபட்டு வந்தனர். திடீரென்று எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் இஸ்மவேலின் தாய்நாடான எகிப்து தன்னுடைய சேய் நாடுகளோடு சேர்ந்து கொண்டு 1967 ஜுன் மாதம் 5ம் தேதியன்று பயங்கர யுத்த தளவாடங்களுடன் இஸ்ரவேல் தேசத்தை தாக்க துவங்கினது. நாசர் என்பவன் அப்போது எகிப்தின் அதிபதியாக இருந்து வந்தான். ஐ.நா சபையின் பொதுச்செயலாளராக அப்போது இருந்து வந்த ஊதாண்ட் என்பவர் நாசரிடம் யுத்தம் வேண்டாம்.    சமாதானமாய் போங்கள் என்கிற கோரிக்கையை வைத்தபோது நாசர் கூறின வார்த்தை:    நாங்கள் யூதர்களை அழித்தே தீருவோம்.    அந்த தேசத்தின் பெயரை பூகோள வரைப்படத்திலிருந்து நீக்கியே தீருவேன் என்று ஆவேசத்துடன் கர்ஜனை பண்ணினான். அது உலக யுத்தமாக மாறிவிடுமோ என்று சகலரும் பயப்பட்டனர். ரேடியோவின் மூலம் சகல அரபு நாடுகளுக்கும் 2 பெரிய பிரசங்கங்களை நாசர் போர் பிரகடனமாக அறிவித்தான். இந்த செய்தியை உலகிலுள்ள சகல நாடுகளும் தங்கள் தங்கள் பிராந்திய மொழிகளில் வெளியிட்டது.      இத்தனை பெரிய நாடுகளின் படையெடுப்பில் சின்னஞ்சிறு நாடான இஸ்ரவேல் என்னவாகப்போகிறதோ என்று பலரும் அனுதாபப்பட்டனர்.
  தீர்க்கதரிசனம் நிறைவேறல்: ஆனால் நாசரின் இந்த அறைகூவலை கி.மு.1000 வருஷங்களுக்கு முன்னமே ஆண்டவர் தனது ஊழியக்காரனான ஆசாபின் மூலமாக சங்கீதம் 83:4,12  வசனங்களின் மூலமாய் அறிவித்திருந்ததை நம்மில் பலரும் நினைவுகூற மறந்துவிட்டோம்.      ஜெனரல் நாசருக்கும் இது தெரிந்திருக்க நியாயமில்லை.
  இதோ அந்த தீர்க்கதரிசனம்: அவர்கள் இனி ஒரு ஜாதியாய் இராமலும் இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதாக. அவர்களை அதம் பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள். தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்கு சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்கிறார்களே!
  நாசரின் பிரசங்க சுருக்கம் இதோ: நாம் புறப்பட்டு போய் பலஸ்தீனா நாட்டை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ளுவோம். இஸ்ரவேல் என்கிற ஒரு ராஜ்யம் இனி பூகோள வரைப்படத்தில் இடம் பெறக்கூடாது. நாம் எல்லாரும் ஒன்று கூடி அந்த தேசத்தாரை நிர்மூலம் பண்ணி நம்முடைய பகையைத் தீர்த்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்பதே. அமெரிக்கப் பத்திரிக்கையான வாஷிங்டன் போஸ்ட் 1967 ஜுன் 3ம் தேதி இந்த செய்தியை பிரசுரித்திருந்தது. சுமார் 3000 வருஷங்களுக்கு முன்பாக ஆசாப் மூலம் ஆண்டவர் உரைத்துப்போன தீர்க்கதரிசன நிறைவேறுதலைப் பார்த்தீர்களா? தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
இதோ தேவனுடைய மனுஷனாகிய ஆசாப் தொடர்ந்து பேசுகிறதை வாசியுங்கள்.      தேவனே மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும், தேவனே சும்மாயிராதேயும் உமது ஜனத்திற்கு விரோதமாய், உமது சத்துருக்கள் கொந்தளித்து உமது பகைஞர் தலையெடுக்கிறார்கள். உமது ஜனத்திற்கு விரோதமாய் உபாய தந்திரங்களை யோசித்து உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனை பண்ணுகிறார்கள். அவர்கள் இனி ஒரு ஜாதியாயிராமலும் இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக அவர்களை அதம் பண்ணுவோம் என்கிறார்கள். இப்படி ஏதோமின் கூட்டத்தாரும் (ஏசா வம்சத்தார்) இஸ்மவேலரும் (12 பிரபுக்கள்), மோவாயியரும், அம்மோனியரும் (லோத்தின் மக்கள்) ஆகாரியரும் (ஆகாரின் தாய்நாடான எகிப்து தேசத்தார்) கேபாலரும், தீருவின் குடிகளோடு கூடிய பெலிஸ்தியரும் ஏகமன நிர்ணமாய் ஆலோசனை பண்ணி உமக்கு விரோதமாய் ஒப்பந்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அசீரியரும் (சிரியா நாட்டினர்) அவர்களுக்குப் புயபலமானார்கள்.
தேவனே கடந்த காலங்களில் (அதாவது 1918ன் போது எங்களுக்கு நேரிட்ட ஆபத்துகளில் உதவி செய்யாமல் இருந்ததுபோல)      மவுனமாயிராதேயும்,      நீர் எழுந்து வந்து அவர்களை நாணப்பண்ணி வெட்கத்தால் அவர்கள் முகங்களை மூடி,      காற்று முகத்தில் பறக்கும் தூசிக்கும்,      சுழல் காற்று அடித்துக்கொண்டு போகும் துரும்புக்கும் அவர்களை சமானமாக்கி தீயோனியருக்கும் சிசேரா, யாபீன் என்பவர்களுக்கு செய்ததுபோல செய்துவிடும்.      தேவரீர் ஒருவரே சகல ஜனங்களுக்கும் மேலான உன்னதமான தேவன் என்று எல்லா மனிதரும் கண்டு உணரும்படி செய்யும்.    இப்படியாய் 3000 வருஷங்களுக்கு முன்பாகவே ஆசாப் பாட்டாக பாடிக்காட்டிப்போனதின் விளைவாக அந்த ஆறுநாள் யுத்தத்தில் மிகப்பெரிய மகத்தான் வெற்றியை கர்த்தர் இஸ்ரவேலருக்குப் பெற்றுத்தந்தார். ஆசாபின் தீர்க்கதரிசன வாக்கியங்களுக்கும்,    நாசரின் போர் பிரகடன வாசகங்களும் எவ்வளவு சரியாய் பொருந்தி வருகிறதென்பதை பார்த்தீர்களா? அது மாத்திரமல்ல, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசுகளெல்லாம் பார்த்து பிரமிக்கத்தக்கதாய் இந்த சின்னஞ்சிறிய நாடு (இலங்கையை காட்டிலும் சிறியதேசம்) எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை பெறமுடிந்தது? என் ஆச்சரியப்பட்டனர். இஸ்ரவேலரின் ராணுவ பலத்தையும், அவர்களிடமிருந்த பயங்கர யுத்த கருவிகளும், தளவாடங்களும் அவர்கள் பின்பற்றின யுத்தமுறைகளும் உலகநாடுகளையே சிந்திக்கவைத்தது. இந்த யுத்தத்தின்மூலம் இஸ்ரவேல் நாட்டின் மீது ஒரு மரியாதையும் அதேசமயத்தில் அவர்களைப்பற்றிய ஒரு பயமும் எல்லாருடைய உள்ளத்திலும் தோன்ற தொடங்கினது. நாசரோடு கைகோர்த்துக்கொண்டு யுத்தத்திற்கு வந்த அரபு தேசங்களின் கப்பல்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு சூயஸ் கால்வாயை அடைத்துப்போட்டது. கப்பல்கள் யாதென்றும் அதன் வழியாய் செல்ல முடியாதபடி அதில் நொறுங்கி கிடக்கும் கப்பலின் பாகங்களை இந்நாள் மட்டும் எடுத்து சுத்தம் பண்ணி போக்குவரத்திற்கு ஏற்றதாய் மாற்ற முடியவில்லை.
தீர்க்கதரிசனம் நிறைவேறல்: இதோ, இதைப்பற்றியதான தேவனுடைய தீர்க்கதரிசனம் எசே 29:3ல் நிறைவேறி வருகிறது.      எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது. நான் அதை எனக்காக உண்டு பண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே.      இதோ நான் உனக்கு விரோதமாய் வந்து....... (இந்த தீர்க்கதரிசனம் அந்த ஆறு நாள் யுத்ததின்போது நிறைவேறியது). சூயஸ் கால்வாய் நாங்கள் வெட்டியது. அன்னியரின் கப்பல்கள் அதிலும் விசேஷமாய் இஸ்ரவேலின் கப்பல்கள் அதன் வழியாய் செல்ல ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று எகிப்தின் அதிபதி நாசர் முழக்கமிட்டான். எல்லா நாடுகளும் வாயைமூடிக்கொண்டு மவுனமாயிருந்தது. ஆனால் இஸ்ரவேலின் படைகள் ஜெனரல்.மோசே தயான் என்கிற யுத்த அமைச்சரின் தலைமையின் கீழ் அந்த கால்வாயில் நின்று கொண்டிருந்த யுத்தக் கப்பல்கள் அனைத்தையும் விமான படைகளை கொண்டு தாக்கி அழித்தது. இதுவும்கூட ஆண்டவர் தமது ஜனத்திற்காக முன் நின்று நடத்திய யுத்தமே. பனிரென்டு அரபிய பிரபுக்களும் பத்துகோடி மக்களும் பத்து வருஷங்களுக்குமேல் யுத்ததிற்கான சகல ஆயத்த வேலைகளை செய்து பார்த்தும் அவர்கள் எண்ணியபடி நிறைவேறாமல் போகவே சர்வதேச அரங்கில் அரபியர்கள் ஒரு கேலிக்குரியவர்களாய் பேசப்பட்டனர். பவிஞ்சு பவிஞ்சாய் புறப்பட்டு வந்த விமானங்களில் யாதொரு எழுத்தும் அடையாளமும் காணப்படாததால் அவை அமெரிக்காவுக்கு சொந்தமான விமானங்கள் என்றும், இஸ்ரவேலுக்கு ஆதரவாய் அவை அனுப்பப்பட்டிருக்கக்கூடும் என்றெல்லாம் எகிப்து குற்றஞ்சாட்டியது. ஆனால் அமெரிக்காவோ அதை மறுத்தது.      அந்த விமானங்கள் இஸ்ரவேலருடையதுமல்ல. அமெரிக்க வினுடையதுமல்ல. தேவனால் அனுப்பப்பட்ட தேவ தூதர்களாய் இருந்திருக்ககூடும் என்று இதை எழுதுகிற நான் விசுவாசிக்கிறேன். யாத் 14:14ன் நிறைவேறுதல் என்று கூட இதை சொல்லலாம். அந்த விமானங்களை நோக்கி பயங்கர ஏவுகணைகளை அனுப்பியபோதிலும் ஒன்றாகிலும் அவற்றை தாக்கி வீழ்த்தவில்லை. இது அமெரிக்கா உட்பட எல்லா தேசத்தாரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த ஆறு நாள் யுத்தத்தின்போது எகிப்து தேசத்தில் மூன்று முறை பூமி அதிர்ச்சியும் நிகழ்ந்தால் எகிப்தியருக்கு மேலும், பயங்கர நஷ்டத்தையும், உயிர்சேதத்தையும் உண்டுபண்ணியது. ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமானது. இடிபாடுகளை சோதனை செய்தபோது அது விமான தாக்குதலால் உண்டானதல்ல. பூமி குலுங்கினதால் உண்டான சேதம் என்பதாக தீர்மானிக்கப்பட்டது. இஸ்ரவேலரைப்பற்றிய பயம் அரபியர்களுக்கு உண்டாகி ஐயா சாமி ஆளைவிட்டால் போதும் என்று சொல்லி எகிப்துக்கு உதவிகரம் நீட்டிய நாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாய் விலகிப்போக ஆரம்பித்தது. 1918ல் பலஸ்தீனாவுக்கு கிடைத்த சுயதேச அங்கீகாரமும் 1948ல் கிடைத்த அரசுரிமையும், 1956ல் கிடைத்த புதிய பெலனும் 1967ல் யுத்தத்தில் புதிதாய் கிடைக்கபெற்ற காசா, கோலன் குன்றுகளும், இன்னும் அதை ஒட்டிய அநேக ஊர்களும் மற்றும் அகபா வளைகுடாவும், எருசலேம் பட்டணமும் யூதர்களின் வசமாயிற்று. இஸ்ரவேலருக்கு விரோதமாய் எழும்புகிறவர்களுக்கு நேரிடும் வாதைகள், அவர்களுக்கு துணையாய் வருவோருக்கு உண்டாகும் நாசங்களையும் குறித்து தீர்க்கதரிசன வாக்கியங்கள் மூலம் அறியலாம்.
  காலா காலங்களாக தேவனை விட்டுவிலகி சத்துருக்கள் கைகளில் சிக்கி பட்டமரமாய்போன யூதஜாதி தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தின்படி இரங்கிப் பட்டுப்போன அத்திமரமாகிய யூத ஜாதியினர் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விடத்துவங்கி உள்ளார்கள். உடனே பூத்துக் குலுங்கி அதில் காய் மற்றும் கனிகள் உண்டாகிவிடாது.    இவர்கள் இதுவரை அனுபவித்த மகா கொடிய வேதனைகள் மூலம் பாடம் படிக்கவும் திரும்பவும் ஆண்டவரிடமாய் இவர்கள் மனம் திரும்புவதற்கு ஆண்டவரே அவர்களை இத்தகைய பாதைகளில் நடத்த சித்தம் கொண்டார்.
  அன்றைக்கு எகிப்துதேசத்தின் அடிமைகளாக இருந்த 6 லட்சம் பேரை அங்கிருந்து புறப்படப்பண்ணி வனாந்தர மார்க்கமாய் வழி நடத்தின தேவன், அவர்களுக்கு எதிராய் வந்த சகல சத்துருக்களையும் அழித்து அவர்களை கானான் தேசத்தில் கொண்டுபோய் சேர்த்ததுபோலவே (யாத் 3:8) இந்நாட்களிலும் இஸ்ரவேலில் உள்ள சுமார் 6 லட்சம் யூதர்களை வேலி அடைத்து பாதுகாத்து அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா உலக வல்லமைகளையும் அவரே தகர்த்து போடுகிறார்.    இந்த இரகசியம் உலகத்துக்கு தெரியாது.        வேதாகமத்தை கையில் வைத்திருக்கிறவர்களும்கூட அதுபற்றி தெரியாமலிருக்கிறார்கள்.
  இதோ அந்த இரகசியத்தை சங் 76ஐ எடுத்து வாசியுங்கள். சாலேமில் (எருசலேமில்) அவருடைய    கூடாரம் இருக்கிறது. அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும் யுத்தத்தையும் முறித்தார்.      தைரிய நெஞ்சுள்ளவர்கள் (அரபியர்கள்) கொள்ளையிடப்பட்டு நித்திரையடைந்து அசந்தார்கள்.    வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல் போயிற்று யாக்கோபின் தேவனே உமது கண்டித்ததினால் இரதங்களும், குதிரைகளும் உறங்கி விழுந்தது. நீர் நீரே பயங்கரமானவர் உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கும்படிக்கு தேவரீர் எழுந்தருளினபோது பூமி பயந்து அதிர்ந்தது. பிரபுக்களின் ஆவியை அடக்குவார். பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர். இதுதான் யாக்கோபின் சந்ததியாரான இஸ்ரவேலருக்கு ஆண்டவர் தந்திருக்கும் ஆறுதலான வார்த்தைகள்.
  இஸ்ரவேலருக்கு தரப்பட்ட இந்த வாக்குதத்தமானது தூரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட (புற  ஜாதியிலிருந்து தெரிந்துகொள்ளப்பட்ட நமக்கும்) யாவருக்கும் உரியவைகள் என்பதை நாம் அறியவேண்டும்.      இஸ்ரவேலரின் இந்த சரித்திரம் கர்த்தருடைய வருகைக்கு நம்மையும் ஆயத்தப்படுத்துகிறதாய் அமைந்துள்ளது.

 

thanks to

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP