சமீபத்திய பதிவுகள்

ஆனையிறவும் அதனூடே முல்லைத்தீவும்

>> Saturday, January 24, 2009

 
தியன் பியன் பூவில் ஹோசிமிங்கின் படைகளின் வலிமையையும் சீனத்து போரியல் பேறறிஞர் சான் சூவின் தத்துவங்களையும் களமுனை பின்னகர்வுகளின் போதான தயவூட்டும் காரணியாக, அல்லது எங்களை ஆசுவாசப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய எம் எண்ணங்களிலெல்லாம் மண்ணைத் தூவிவிட்டு சிறிலங்கா அரசின் வீச்செல்லை அல்லது தாக்குதல் ஆக்ரோசம் மிகுந்திருக்கிற நேரமிது.

யாதார்த்ததை உள்ளபடி கிரகிக்க முடியாதபடி அல்லது எதையுமே சமநிலையோடு ஏற்றுக்கொள்கிற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள இயலாத வகையில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமிழ்த் தேசியம் சார் அரசியல் ஆய்வாளர்கள் எனப்படுவோர் வைத்திருந்தார்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு ஒருமுறை தாயகத்தை திரும்பிப் பார்ப்போமா?. வெற்றிகளின் படிக்கட்டில் பயணிக்கின்ற போதிலும் பின்னடைவு அல்லது பின்வாங்கல் என்பது அசாத்தியமானதொரு தற்காப்புப் போர்முறை என்ற புகட்டலில்லாமல் சிங்களத்தின் பிணங்கள் ஒன்றிரண்டு சரியும் போதெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்களை உருவேற்றி உண்மையை உணரவிடாது தடுத்தமையே இந்த போரின் உண்மை முகம் பற்றிய தெளிவான பார்வையை அவர்கள் பெறாததற்கான காரணம்.

ஏனெனில் சூதாட்டப் பந்தயத்தில் கலந்து கொள்கிற இரு குதிரைகளாகவே சிறிலங்கா அரசையும், விடுதலைப் புலிகளையும் இதுவரைப் பார்த்து வந்திருக்கிறோம். எங்களுடைய குதிரை முந்துகிற போதெல்லாம் விசிலடித்து புழகாங்கிதித்த மனம் இப்போது போராட்டம் மந்த கதியை அடைகிறதா அல்லது மங்கிச் செல்கிறதா என்கிற எண்ணவோட்டங்களிலெல்லாம் பயணிக்கிறது. இந்த போராட்டம் எங்கே செல்கிறது என்ற கேள்விக்கான பதில் இன்றைய உலகத்தின் இணைவுப் பாதையுடன் தன்னைத் தொடுக்க முனைகிறது என்பதேயாகும்.

இந்திய இராணுவம் வன்னிபோரில் 1987 இல் புலிகளை தள்ளிய போது எந்த ஒரு உணர்வு இருந்ததோ அல்லது ஜெயசிக்குறு போரின் போது 1998 இல் எந்த ஒரு அவலம் இருந்ததோ அதை விடப் பெரிய அவலமாக இன்றைய நிலை இல்லவே இல்லை. ஆனால், வெற்றி என்பது மட்டுமே முடிந்த முடிபு என்பதைத் தவிர எதையுமே ஏற்க மறுக்கின்ற எங்களின் மன ஆளுமையும் எதிர்காலச் சிக்கல்கள் பற்றிய சிந்தனையற்ற சிங்கள அரசின் மாறுபட்ட போரியலும் உண்மைக்குத் திரைபோட்டு இப்போரியலை ஒரு மாயவலைக்குள் சிக்க வைத்துவிட்டதே எமக்காக நாமே ஏற்படுத்திக் கொண்ட தற்போதைய துன்பமாகி விட்டது. ஆனால் உண்மை அவ்வாறல்ல.

இதைவிட நெருக்கடியான நிலையில் விடுதலைப் போர் இருந்ததென்பதும் இதனையொத்த பல காலங்களை அது தன்னகத்தே கொண்டிருந்தது என்பதுமே உண்மை. ஆனால், இலத்திரனியலின் வளர்ச்சி, செய்திகள் வந்தடைகின்ற வேகம் என்பவை இந்தப் போரை ஏனையவற்றிலிருந்து முற்றிலும் மாறுபடுத்தி தேவைக்கதிகமான செய்திகளை எமக்கு வழங்கி இப்போரை வித்தியாசமாகக் காட்ட முனைகின்றன என்பது மறுப்பதற்கில்லை. இன்றும் எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. 1987 இல் இந்திய இராணுவத்துடன் சமர் தொடங்கிய போது 'ஐயகோ! உலகின் நான்காவது வல்லரசுடனா போர்? விடுதலைப் போரே மடியப்போகிறது" என்று ஏங்கி அழுதவர்களுக்கெல்லாம் புதிய புறநானூற்றை காட்டியெழுந்தவர்கள் விடுதலைப் புலிகள்.

இதற்கும் மேலாக ஜெயசிக்குறுவுடன் முடிந்து விட்டாகள் என்பதற்கு அவர்கள் எழுதிய கணக்கு வேறுவிதமாக இருந்தது. மூன்றே மூன்று நாட்கள் ஒட்டிசுட்டான் தாக்குதல் எப்படி மாங்குளத்தை அடைந்தது வவுனியா வரை இராணுவத்தை விரட்டியது என்பது பற்றியும் கிளிநொச்சித் தாக்குதல் எப்படி கிளாலி வரை வந்து கொழும்புத்துறையை மேவி யாழ். நகரில் கைகுலுக்கக் காத்திருந்தது என்பது பற்றியும் இன்றும் வியந்து கொள்ளக்கூடிய தாக்குதல்களைத் தந்த விடுதலைப் புலிகளின் கணக்கு எப்போதுமே வேறுவிதமானது.

எந்த ஒரு மூத்த தளபதியும் போர்முனையில் இன்னுமேன் நிற்கவில்லை என்று எதிரியானவனே திகைத்து நிற்க வான்படையின் ஊர்திகள் முதல் அசுர ஆயுதங்கள் எதனையுமே இன்றுவரை இக்களங்களில் இழக்கவில்லை. மறக்க வேண்டாம் பூநகரி முனையிலிருந்து பலாலித்தளத்திற்கு பாய்ந்து சென்ற ஆட்டிலறிகளும் நகர்த்தப்படுகின்றனவே தவிர இழக்கப்படவில்லை என்பதே உண்மை. தலைவன் தனது ஆளணிகளையும் ஆயுதங்களையும் இழப்பின்றி அழகாக நகர்த்துகின்ற இப்போரியல், இன்றைய பின்வாங்கல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.

உலகின் புதிய வரலாறொன்றிற்கான தேவையின் நிமிர்த்தமான நகர்வில் இதுவல்ல இன்னமும் இடம்பெற்றாலும் அதற்கான காரணங்களை ஏற்றுக் கொள்வதற்கான மன ஆளுமையைப் பெற வேண்டியதே எம்முடைய தேவை. அதை விடுத்து, பின்வாங்கலிற்கான காரணங்களை தேடுவதிலும் அல்லது சிங்களத்தின் மேதாவித்தனத்தை வியப்போடு பார்ப்பதையும் நிறுத்திக்கொண்டு நாங்கள் யதார்த்தத்தை உணரத் தலைப்பட வேண்டும். போராட்டம் மற்றொரு முனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான பரிசில்களாகவே இப்போதைய பின்வாங்கல்களும் இழப்புக்களும் இருக்கின்றன.

பேச்சுவார்த்தை மேசைக்கு சென்ற விடுதலைப் போர் மீண்டு வந்ததாகச் சரிதமே இல்லாதிருக்கின்ற இன்றைய உலகில் எங்களது மட்டும் விதிவிலக்காகி மீண்டு வந்து கொண்டிருக்கிறது என்பதை விட என்ன உறுதி வேண்டும் எங்களுக்கு? எத்தனை எத்தனை சூழ்ச்சிகள் நடந்தேறின? ரோக்கியோ மாநாடு முதல் கயவனின் துரோகம் வரை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அதற்கும் மேலாக வழங்கல் பாதையில் பயணித்து வந்த கலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பல இழக்கப்பட்ட துன்பியல் வரலாறும் இந்த அனைத்துலக ஆதரவுடனான பேச்சுவார்த்தைக் காலம் நமக்குத் தந்த உயர்பரிசுகள் இருந்தபோதும் விடுதலைப்போர் கிஞ்சித்தும் சிதறாமல் நவீன கிரகிப்புடன் பயணிக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக நாங்கள் மாற வேண்டும்.

யாழ். முன்னரங்கு, வவுனியா முன்னரங்கு, மணலாறு முன்னரங்கு, மன்னார் முன்னரங்கு என்று வன்னிக்களப்பரப்பில் திறக்கப்பட்ட போர்முனைகள் நாற்பதிற்கும் மேல். இவையனைத்திலும் வலுவுடன் பொருதினால் விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான ஆள் இழப்பு மற்றும் காயமடைந்து களத்திலிருந்து அகற்றப்படும் போராளிகளென இழப்புக்கள் அளவு கடந்து போய் அதன்மூலம் அவர்கள் ஆட்டம் கண்டுவிடுவார்கள் என்பது சிங்களத்தின் சிம்மாசனக் கணக்கு. அதற்கு மேலாக இவ்வளவு முன்னரங்குகளிலும் பொருதும் போது தொடர்ச்சியான ஆயுத தளவாடப் பாவனைகளினால் அவர்களின் ஆயுத இருப்பும் வற்றும் நிலையை அடைந்து விடும் என்பது சிங்களத்தின் உச்சக்கனவு. அதனை தவிடுபொடியாக்கி விடுதலைப் புலிகள் நாற்பது களமுனைகளை சுருக்கி முல்லைத்தீவைச் சுற்றியுள்ள நான்கு திசைகளையும் முனைகளாக்கி பொருதுகிறார்கள்.

இப்போது கால்பதித்த இடங்களைக் காத்துக் கொள்ளத் திணறும் சிங்களத்திற்கு, முல்லைத்தீவைச் சுற்றிவரப் போர் தொடுக்கும் சிங்களத்திற்கு, தெற்கில் சிங்களப் பகுதிகளிலுள்ள படைத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கப போகிறார்கள் என்ற அச்சம் பலமாக ஏற்பட்டிருக்கிறது. தியத்தலாவையை உச்சப்பாதுகாப்பிற்குள் கொண்டு வந்தது இதற்கான இன்றைய உதாரணம். இந்த அச்சம் சிங்களத்திற்கே மட்டும் புரிந்த அச்சம். போரரங்குகள் சுருக்கப்பட்டதால் இப்போது பல நூற்றுக்கணக்கான போராளிகளை எந்தத் தேவைக்காகவும் எந்தவிடத்திலும் பாவிக்கக்கூடிய திறனை விடுதலைப் புலிகள் தாராளமாகப் பெற்றுள்ளார்கள். அதுவும் எந்தவொரு சிறந்த தளபதியும் இன்னமும் களத்தில் இழக்காத ஒரு நிலையில் இந்தத் தாராள வசதியைச் சிங்களம் செய்து கொடுத்திருக்கிறது.

விரிந்து பரந்து வியாபித்து இராணுவத்தை நிலைநிறுத்தியுள்ள சிங்களம் இன்னமும் தொடர்ந்து தக்கவைக்க இரண்டு லட்சம் பேர் தேவை என்று புலம்புவது எதைக் கூறுகிறது? அல்லது முல்லைத்தீவை உடனேயே முடக்கிவிட வேண்டும் என்று இன்றும் முயல்வது எதனைக் காட்டுகிறது? என்ற கேள்விகளுக்கான விடையை விடுதலைப் புலிகள் தரும் வரை ஒன்றை நம்புவோமாக…

தேசியத் தலைவரின் கனவுகளிற்கு நிஜவடிவம் தந்து ஒட்டுமொத்த சிங்களத்தையும் இரையாக்கிய பெருமையை மகிந்த ராஜபக்ச விரைவில் பெறப்போகிறார்.

-எ.இராஜவர்மன்-
http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1232751579&archive=&start_from=&ucat=&

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP