சமீபத்திய பதிவுகள்

பிரபாகரன் தலைமையில் தமிழீழம் மலர்வது உறுதி களம் புகுவோம்! கடமையாற்றுவோம்!

>> Monday, June 29, 2009

பிரபாகரன் தலைமையில்
தமிழீழம் மலர்வது உறுதி
களம் புகுவோம்! கடமையாற்றுவோம்!
பழ.நெடுமாறன்

30 ஆண்டு காலம் அறவழியிலும் 30 ஆண்டு காலம் மறவழியிலும் ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற நடத்திய போராட்டத்தை முற்றிலுமாக முறியடித்து விட்டதாக சிங்களப் பேரினவாத அரசு வெற்றிமுரசு கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமும் ஒருபோதும் ஓய்ந்து விடுவதில்லை. விழவிழ எழுவோம் என்பதுதான் விடுதலைப் போராளிகளின் இலட்சிய முழக்கமாகும்.

இராசபக்சேயைவிட மிகக்கொடிய இனவெறியர்களான இட்லரும், முசோலினியும் அய்ரோப்பாவில் பல்வேறு தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கச் செய்த முயற்சிகள் இறுதியில் என்ன ஆயின என்பதை உலக வரலாறு நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. வரலாறு கூறும் இந்த உண்மைகளை அறியாதவர்கள்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழ முடியாத வகையில் ஒடுக்கப்பட்டு விட்டது என வாய்வீச்சு வீசி வருகின்றனர்.






தமிழீழத்தில் ஏற்பட்டிருக்கிற மனிதப் பேரவலம் இதுவரை உலகம் சந்தித்திராத ஒன்றாகும். ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 3 இலட்சத் திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு இராணுவ முகாம்களுக்குள் பூட்டப்பட்டு ள்ளனர். போதுமான உணவோ மருந்தோ சுகாதார வசதிகளோ இல்லாமல் உயிர் வாழப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் தனிமைப் படுத்தப்பட்டு சொல்லொணாத சித்ரவதை களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். இளம் பெண்கள் பிரித்தெடுக்கப்பட்டு சிங்கள இராணுவத்தின் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.


சிங்களப் படையினர் நோயாளிகளை தனியாகப் பிரித்தெடுத்து அவர்களை வேறிடத்திற்கு கொண்டுச் சென்று அடைத்து வைத்துள்ளனர். உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அந்த நோயாளிகளின் கண்கள், சிறு நீரகங்கள், ஈரல், எலும்பின் உட்சத்து, இருதயம் ஆகியவற்றை மயக்க மருந்து தராமலேயே வெட்டி எடுத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின் றனர்.

குறைந்தது இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு அவர்கள் தங்கள் ஊர்களுக்கோ வீடுகளுக்கோ திரும்பு வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என சிங்கள அரசு வெளிப்படையாகக் கூறுகிறது. அவர்கள் வாழ்ந்த இடங்களில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப் பட்டிருப்பதாகவும் ஆகவே அவற்றை யெல்லாம் அப்புறப்படுத்திய பிறகே மக்களை குடியேற அனுமதிக்க முடியும் என்று சிங்கள அரசு கூறுகிறது. உண்மை அது அல்ல. இராணுவம் ஆக்கிரமித்த ஊர்களில் உள்ள வீடுகள் எல்லாம் விமான குண்டு வீச்சு களினாலும் பீரங்கித் தாக்குதல்களினாலும் அனேகமாக இடிந்து தகர்ந்துவிட்டன. இடியாமல் இருந்த வீடுகளை சிங்கள இராணுவம் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டது. விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. தமிழர்களை மீண்டும் தங்கள் ஊர்களில் வாழ்வதற்கு சிங்கள அரசு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்பது திண்ணம். அவர்களை எல்லாம் உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக செயலற்றுப்போக வைக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. தாங்கள் வாழ்ந்த வீடுகளைப் பற்றியோ ஊர்களைப் பற்றியோ மக்கள் நினைத்துப் பார்க்கக் கூடாத அளவில் மறந்துவிட வேண்டும். இராணுவ காவலோடு உள்ள முகாம்களில் காலமெல்லாம் வாழ்ந்து மடியவேண்டும் அப்பொழுதுதான் அவர்களுக்கு மொழி உணர்வோ இன உணர்வோ கொஞ்சம்கூட இல்லாமல் மழுங்கிப்போன மக்களாக விளங்குவார்கள் என சிங்கள அரசு கருதுகிறது.

இந்த மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து வெளியேறியவர்கள். இறுதி வரை அவர்களுடன் உறுதியாக நின்றவர்கள் என்ற காரணத்திற்காக அவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன் சிங்கள அரசு நடந்து கொள்கிறது.

சிங்கள அரசின் திட்டம் குறித்து பல செய்திகள் கிடைத்துள்ளன. ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களை ஒழித்துவிட்டு அவர்கள் வாழ்ந்த இடங்களில் ஜெர்மானிய மக்களை குடியேற்றினர். ஜெர்மன் மக்களுக்கு வாழ்வதற்கு இடம் தேவை ஆகவேதான் யூதர்களை ஒழித்துக்கட்டியதாக இட்லர் கூறினர். அதே திட்டத்தைத்தான் இராசபக்சே இன்றைக்குச் செயல் படுத்துகிறார். தமிழர்களைப் படுகொலை செய்துவிட்டு எஞ்சிய தமிழர்களை வதைமுகாம்களில் அடைத்துவிட்டு அவர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களர்களைக் குடியேற்றத் திட்டமிட்டு இருக்கிறார். இராணுவம் கைப்பற்றிய இடங்களில் புத்த விகாரைகள் அவசர அவசரமாகக் கட்டப்படுகின்றன. விகாரைகளைச் சுற்றி சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.


"எதிர்காலத்தில் இலங்கையில் இரண்டு இனங்கள் தான் இருக்கும். ஒன்று சிங்கள இனம், மற்றொன்று சிங்கள கலப்பினம்"

என இராசபக்சே வெளிப்படை யாகவே கூறுகிறார். அதாவது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கி சிங்களக் கலப்பினத்தை தோற்றுவிப்பது அவரின் திட்டமாகும். தமிழ் இளைஞர்களை எல்லாம் தனிமைப்படுத்தி இராணுவம் கொன்று குவித்துவருகிறது.

தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்க் குழந்தைகள் சிங்களம் கற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். அரசு அலுவலகங்களில் இனி சிங்கள மொழி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி வேகவேகமாக தமிழர் பகுதிகளைச் சிங்கள மயமாக்கும் முயற்சி நடைபெறுகிறது. எதிர்காலத்தில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதே கேள்விக்குறியாக மாறிவிடும்.


சிங்கள அரசின் சதி

திடீரென இந்த நிலை ஏற்பட்டு விடவில்லை. புலிகளுடனான இறுதிப் போருக்கான ஆயத்தங்களை சிங்கள அரசு முன் கூட்டியே செய்தது.

1. இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் ஏராளமான ஆயுதங் களை வாங்கிக் குவித்தது.

2. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சிங்கள இராணுவ வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அதி நவீன பயிற்சிகள் அளித்தன. நவீன ஆயுதங்களை எப்படிக் கையாள்வது என்பதை கற்றுக் கொடுத்தன. சிங்கள இராணுவ வீரர்களில் 63 சதவீதம் பேர் இவ்வாறு பயிற்சி பெற்றவர்களே யாவார்கள்.

3. இந்தியக் கடற்படையும் சிங்களக் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளித்தது. பாகிஸ்தான் விமானப்படை அதிகாரிகள் சிங்கள விமானிகளுக்குப் பயிற்சி அளித்தார்கள்.

4. இந்திய உளவு விமானங்கள் இந்துமாக்கடல் பகுதியில் புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டுவந்த கப்பல்களைக் கண்டறிந்து அவற்றை மூழ்கடிப்பதற்கு உதவின.

5. செய்மதிகள் மூலம் புலிகளின் நடமாட்டத்தையும் இருப்பிடத்தையும் கண்டறிந்து சிங்கள இராணுவத்திற்குத் தெரிவித்தன.

6. ஈவு இரக்கம் இல்லாமல் அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் கொலைவெறி இராணுவமாக சிங்கள இராணுவத்தை மாற்றினார்கள்.

7. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி களில் வாழ்ந்த புலிகளின் ஆதரவாளர் களையும் குடும்பத்தினரையும் வெள்ளை வாகனங்களில் கடத்திப் படுகொலை செய்தார்கள்.

8. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். எஞ்சிய உறுப்பி னர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உலக நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.

9. சிங்கள அரசைக் கண்டித்த நடுநிலையான சிங்களவர்களையும் ஊடகங்களைச் சேர்ந்தவர்களையும் புலி ஆதரவாளர்கள் எனக்கூறி படுகொலைச் செய்தார்கள்.

10. கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் கூலிப்படை தமிழர் களுக்கு எதிராக அட்டுழியங்களைச் செய்தது.

11. சர்வதேச ஊடகவியலாளரை நாட்டைவிட்டு வெளியேற்றினர்.

12. தொண்டு நிறுவனங்கள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், அய்.நா. அகதிகள் ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் திட்டமிட்டு வெளியேற்றப் பட்டனர்.

சாட்சி சொல்ல யாரும் இல்லாத நிலைமையை உருவாக்கிக்கொண்டு தமிழின அழிப்பு நடவடிக்கையை சிங்கள இராணுவம் தொடர்ந்தது.

ஐந்து ஆண்டுகாலத்திற்கு மேலாக சிங்கள அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமரசத் தூதராக செயல்பட்ட நார்வே பிரதிநிதிகளை அவமதிப்பான வகையில் சிங்கள அரசு வெளியேற்றியது. இதற்கு இந்தியாவும் உடந்தையாக இருந்தது. இலங்கை இனப்பிரச்சினையில் இருந்து நீங்கள் வெளியேறிவிடுவது நல்லது என நார்வே பிரதிநிதியான எரிக் சொல்கைம்மிடம் இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக அவரே கூறினார். அதாவது இலங்கைப் போரை இந்தியாதான் நடத்துகிறது. எனவே வேறு யாரும் அங்கிருக்கத் தேவையில்லை என்பதுதான் இந்திய அரசு சொன்ன செய்தியாகும்.


ஜே.வி.பி. நோக்கம்

சிங்கள தீவிரவாத இயக்கமான ஜேவிபி இயக்கம் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இயக்கம் மட்டுமல்ல. இந்தியாவுக்கும் எதிரான இயக்கமாகும். அந்த இயக்கத்தின் தலைவர் சோமவன்ச அமரசிங்க என்பவர் போர் முடிவுற்ற பிறகு நடத்திய சிறப்புச் செய்தியாளர் மாநாட்டில் பின்வருமாறு அறிவித்தார்.

"விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவை விட அதிகமான உதவி செய்த நாடு உண்டென்றால் அது பாகிஸ்தான் ஆகும். எனவே இலங்கைப் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக அழுத்தம் கொடுக்க ஏனைய நாடுகளைவிட பாகிஸ்தானுக்கே முழு உரிமையும் தகுதியும் உண்டு. நமது நாட்டின் தேசியப் பிரச்சினைகளில் சர்வதேச அழுத்தங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் தீர்வுகாணப்போவதாக அதிபர் இராசபக்சே தெரிவித்திருக்கிறார். அப்படி யானால் 13-ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு தீர்வை முன்வைக்க முடியாது. 13-ஆவது திருத்த சட்டம் என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் தேவைகளுக்கான தீர்வுத்திட்டம் ஆகும். 1987-ஆம் ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்த இந்தியா எடுத்த முயற்சிகள் சிங்கள மக்களின் எதிர்ப்புகளால் தோல்விகண்டது.

இந்த உள்நாட்டுப் போரில் சிங்கள இராணுவம் வெற்றியடைவதற்கு கனரக ஆயுதங்கள் பாகிஸ்தான் வழங்கி உதவியது. அடுத்து சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் பெரும் உதவி அளித்தன. ஆனால் மேற் கண்ட 3 நாடுகளும் இலங்கையின் உள் விவகாரங்களில் அநாகரிகமான முறையில் தலையிடவில்லை. எவ்வித உள் நோக்கமும் இன்றி இலங்கைக்கு உதவி செய்தவர்களை புறக்கணித்துவிட்டு இலங்கையின் மீது எப்போதும் ஒரு கண் வைத்து கபடத்தனமாகவும் குள்ளநரி போலவும் காய்களை நகர்த்தும் இந்தியாவுக்கு இடமளிப்பது எந்த வகையிலும் நல்லதல்ல"

இதே சோமவன்ச அனுராதபுரத்தில் பேசியபோது யார் நமது எதிரிகள் என்ற கேள்வியை எழுப்பி அவரே அதற்குப் பதிலும் கூறினார். "முதலில் நார்வே, பிறகு ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை நமது நிரந்தர எதிரிகள் ஆனால் இன்னொரு பகை மறைந்தி ருக்கிறது அதுதான் இந்தியா."

13ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஈழத் தமிழர் களுக்கு உரிமைகளை வழங்க இலங்கை அரசு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்திய உயர் அதிகாரி களும் அடிக்கடி கூறி வருகிறார்கள். ஆனால் இராசபக்சேயை வழி நடத்தும் ஜேவிபி இயக்கம் இதற்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. அந்த இயக்கத்தைப் பகைத்துக் கொண்டு இராசபக்சே ஒரு போதும் செயல்பட மாட்டார். எனவே இந்தியாவின் இந்த நம்பிக்கை வீணான நம்பிக்கை என்பது மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்.


இந்திய நிலை - பின்னணி

இலங்கை இனப்பிரச்சினையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாகவும் இந்திய அரசு எடுத்துள்ள நிலைக்கு எவை காரணங்கள் என்பதை நாம் ஆராய வேண்டும். இந்திய அரசின் சார்பில் கீழ்க்கண்ட காரணங்களைக் கூறுகிறார்கள்.

1. இலங்கையில் நடைபெறுவது தமிழர்களுக்கு எதிரான போர் அல்ல. பயங்கரவாதத்திற்கு எதிராக நடைபெறும் போராகும்.

2. புலிகளைத் தோற்கடிப்பது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.

3. இலங்கையில் சீனாவின் கை மேலோங்காமல் இருப்பதற்கு சிங்கள அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

4. ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரிப்பது தமிழ்நாட்டில் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும்.

5. இந்தியாவின் நட்பு நாடாக இலங்கையை வைத்திருக்க வேண்டும்.

மேலே கண்ட காரணங்கள் எந்த வகையிலும் சரியானவை அல்ல. பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்று சொன் னால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது ஏன்? தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரையே சிங்கள அரசு நடத்தி வருகிறது என்ற உண்மையை இந்திய அரசு மறைக்கிறது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு புலிகள் ஒருபோதும் எதிரான நிலை எடுத்ததில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எவற்றிடமும் விடுதலைப்புலிகள் எந்த உதவியையும் நாடியது மில்லை. பெற்றதுமில்லை. அவர்கள் நினைத்திருந்தால் சுலபமாக பெற்றி ருக்க முடியும். தமிழர் தாயகப் பகுதியில் அந்நிய வல்லரசுகளின் இராணுவத் தளங்கள் அமைவதற்கு எதிராகவும் புலிகள் போராடி வந்திருக் கிறார்கள். இன்னொரு வகையில் அத்தகைய தளங்கள் அமைவது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை புலிகள் தெளிவாக உணர்ந்திருந்தார்கள். எனவே அவற்றை எதிர்த்துப் போராடினார்கள். இந்தியாவின் பாதுகாப்புக்காக போராடிய புலிகளுக்கு உதவ வேண்டிய இந்தியா அதற்கு நேர்மாறாக அவர்களுக்கு எதிரான சிங்களருக்கு உதவியிருப்பது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதற்கு சமமாகும்.

இலங்கையில் சீனாவின் கை மேலோங்காமல் இருப்பதற்காகவே சிங்கள அரசுக்கு ஆதரவு அளிப்பதாக இந்தியா கூறுவது அப்பட்டமான ஏமாளித்தன மானது. இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றிவிட்டது.

ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கும் என்று கூறுவது எதிர்மறையான அணுகுமுறை யாகும். வங்க விடுதலைப் போராட்டத்திற்கு இந்தியா உதவ முன்வந்தபோது, இந்தியாவிலும் ஒரு வங்கம் இருக்கிறது. இரண்டு வங்கங்களும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒன்றாக இருந்தவை. எனவே கிழக்கு வங்கம் சுதந்திரம் பெற உதவினால் இந்தியாவில் உள்ள மேற்கு வங்கமும் பிரிந்து போய்விடும் என்ற கருத்து அப்போது யாருக்கும் எழவில்லை. வங்காளி மீது வராத சந்தேகம். எதற்காக தமிழர்கள் மீது வருகிறது?

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு தமிழீழமும் தமிழகமும் வெவ்வேறு நாடுகளாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. இரண்டும் இணைந்து ஒரே நாடாக ஒருபோதும் இருந்ததில்லை. ஈழத் தமிழர்கள் விடுதலைபெற உதவினால் தமிழ்நாடு அதற்கு நன்றி பாராட்டும். ஆனால் அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இந்தியா துணை நிற்கிறது என்ற செய்தியே தமிழக மக்கள் மத்தியில் ஆறாத கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள அரசுகள் பல கட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் கை கோர்த்திருக்கின்றன. இந்தியாவின் மீது சீனா படையெடுத்தபோதும், வங்காளதேசப் போராட்டம் நடைபெற்றபோதும். இந்தியா வுக்கு எதிராகவே இலங்கை செயல் பட்டது. இப்போதும் இந்தியாவுக்கு எதிரான நாடுகளான சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இலங்கையில் தளங்கள் அமைக்க உதவி யுள்ளது. இலங்கை ஒருபோதும் இந்தியா வுக்கு உண்மையான நட்பு நாடாக இருந்ததில்லை.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது இப்படியொரு தவறான தளத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது. ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி போன்ற பெரும் தலைவர்கள் வகுத்து வழிநடத்திய வெளியுறவுக் கொள்கை என்பது இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய சில அதிகாரி களால் வழிநடத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அரசின் வெளியுறவுத் துறையில் மலையாளிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக சிவசங்கரமேனன், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன், ஜெனீவாவில் மனித உரிமை ஆணையத்தில் இந்தியப் பிரதிநிதியாக கோபிநாத் அச்சம் குளங்கரே, அய்.நா. பொதுச்செயலாளரின் அலுவலக தலைமை அதிகாரியாக விஜய்நம்பியார், இந்திய அமைச்சரவையின் செயலாளராக பி.கே.நாயர் ஆகிய மலையாளிகள் அமர்ந் திருக்கிறார்கள். இவர்கள்தான் இலங்கை பற்றிய இந்திய அரசின் தவறான கொள்கை வகுப்பாளர்கள். அதுமட்டுமல்ல. அய். நாவில் உயரதிகாரியாக இருக்கும் விஜய் நம்பியாரின் சொந்த சகோதரர். லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா என்பவர் இந்திய இராணுவத்தில் உயரதிகாரியாக பதவி வகித்தவர். பிறகு அய்.நா அமைதிப் படையில் பதவி வகித்தவர். 2002-ஆம் ஆண்டிலிருந்து சிங்கள இராணுவத்திற்கு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

இலங்கையில் போரின் இறுதி நாட்களில் இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி குறித்த அத்தனை உண்மை களையும் விஜய நம்பியார் அறிவார். ஆனால் அய்.நா. பொதுச்செயலாளருக்கோ மற்ற நாடுகளுக்கோ தெரியாமல் அவற்றை அவர் மறைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.

மேற்கண்ட அதிகாரிகள் அனை வரும் தமிழர்களுக்கு எதிராகவே செயல் பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருக்கு உலக பிரச்சினைகள் குறித்து எதுவும் தெரியாத நிலையில் இந்த அதிகாரிகள் கூறும் ஆலோசனையின்படி அவர்கள் நடந்துகொள்கிறார்கள். சில வேளைகளில் இந்த அதிகாரிகள் பிரதமர் கருத்துக்கு எதிராகவும் பகிரங்கமாகவே செயல்படுகிறார்கள்.


10-06-09 அன்று வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கரமேனன் "இலங்கை இனப்பிரச்சினையில் இனி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லமாட்டோம், அப்படி சொல்வது இந்தியாவின் வேலை அல்ல. இது தொடர்பாக அதிபர் இராசபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நான் நடத்தினேன் என்று இலங்கை அதிபர் இராசபக்சே சொன்னது ஒருவகையில் சரிதான். இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்பு டன் பின்னிப் பிணைந்திருக்கிறது. இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறு த்தல் ஏற்படும் போது இந்தியா பாதுகாப்பாக இருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு முன் தினம் இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் "இலங்கையில் சிங்களவர் களுக்குச் சமமான உரிமைகளை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளவேண்டும்" என வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் அதைக் கொஞ்சமும் மதிக்காத வகையில் ஒரு அதிகாரியான சிவசங்கரமேனன் நடந்துகொள்கிறார்.

இலங்கை இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரசியா, மேற்குநாடுகள், ஈரான், பாகிஸ்தான் ஆகியவை சிங்கள அரசுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவிகளை வழங்கி வந்திருக்கின்றன. இந்நாடுகளுக்கிடையே பகைமை இருந்தாலும் சிங்கள அரசுக்கு உதவுவதில் ஒன்றாக உள்ளன. நார்வே நாட்டின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் அங்கு நிரந்தரமான அமைதி நிலவவேண்டு மானால் சிங்கள அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே படை வலு சம நிலையில் பேணப்பட்டிருக்க வேண்டும். போஸ்னியா போன்ற பிரச்சினைகளில் உலக நாடுகள் இந்த அணுகுமுறையைத் தான் கையாண்டன. ஆனால் இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் போர்நிறுத்த காலத்தில் சிங்கள இராணுவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு மேற்கண்ட நாடுகள் அனைத்தும் உதவின.

தமிழர் பகுதிகள் மீது சிங்கள அரசு பொருளாதாரத் தடை விதித்தபோது உலக நாடுகள் அதைக் கண்டிக்கவில்லை. இந்திய - இலங்கை உடன்பாட்டின்படி இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாநிலங்களை சிங்கள அரசு மீண்டும் பிரித்தபோது இந்திய அரசும் ஏன் என்று கேட்கவில்லை. உலக நாடுகளும் ஒதுங்கிக் கொண்டன.

விடுதலைப்புலிகளின் வினியோகக் கப்பல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல் கள், புலிகளின் நகர்வு தொடர்பான செய் மதித் தகவல்கள் கடற்புலிகளின் நடவடிக் கைகள் தொடர்பான தகவல்கள் சிங்கள அரசுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்டு வந்தன. தமிழ்நாட்டுக் கரையோரங்களில் வான்பாதுகாப்பு ராடர்களை நிறுவியதன் மூலம் வான்புலிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்கும் முயற்சி களிலும் இந்தியா ஈடுபட்டிருந்தது.

சமரச முயற்சியிலிருந்து நார்வே அகற்றப்பட்டபோது இந்தியா மகிழ்ந்தது. இலங்கையின் ஆட்சியாளர்கள் இனி இந்தியாவை நம்பியிருப்பதைத் தவிர வேறுவழியில்லை என கருதியது. ஆனால் இந்தியாவுக்கு பிராந்திய எதிரிகளாக உள்ள சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை நோக்கியே இலங்கை நகர்ந்ததே தவிர இந்தியாவை நாடி வரவில்லை.


இந்தியாவின் துரோகம்

குதிரை கீழே தள்ளியதல்லாமல் குழியையும் பறித்த கதையாக ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்கள இராணுவத்திற்கு எல்லாவகையிலும் உதவி செய்த இந்தியா அந்நாட்டின் போர்க் குற்றங்களை மறைக்கவும் உதவியுள்ளது.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் சீர்குலைவு பற்றி ஆராய 2009 அன்று மே இறுதியில் 20 நாடுகளின் ஆதரவுடன் சுவிட்சர்லாந்து நாடு ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தது. சுவிட்சர்லாந்து விண்ணப்பத்தை மறுத்து இலங்கைத் தூதர் ஒரு தீர்மானத்தை அனுப்பினார். இலங்கயின் தீர்மானத்தில் ஒரு நாட்டின் உள்நாட்டு நடவடிக்கை களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடது என வற்புறுத்தப்பட்டது. ஆனால் சுவிட்சர் லாந்து நாட்டின் தீர்மானத்திற்கு பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு இல்லை என்பதால் இலங்கை அரசின் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. 27-5-09 அன்று நடைபெற்ற அய்.நா மனித உரிமை அமைப்பின் கூட்டத்தில் இலங்கை தீர்மானத்திற்கு 29 நாடுகளின் ஆதரவும் 12 நாடுகளின் எதிர்ப்பும் இருந்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

சுவிட்சர்லாந்து நாட்டின் தீர் மானத்தை முதலில் மனித உரிமை அமைப்பு எடுத்துக்கொண்டபோது. இந்தியா அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தது. இலங்கை தீர்மானம் குறித்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் இணைந்து திரட்டிய ஆதரவின் பேரில் 29 நாடுகள் வாக்களித்தன.


இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவரமும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாத முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ர வதை செய்யப்படுவதும். அண்டை நாடான இந்தியாவிற்கு தெரியாமல் இல்லை. அப்படியிருந்தும் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகச் செயல் பட்டிருப்பது மன்னிக்க முடியாத ஒன்றாகும்.

அதுமட்டுமல்ல 2008ஆம் ஆண்டு மே மாதத்தில் இதே மனித உரிமை அமைப்புக்கு 4 நாடுகளை தேர்ந் தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இலங்கையும் போட்டி யிட்டது. உலகிலேயே மனித உரிமைகளை மிகவும் சீரழிக்கும் நாடான இலங்கைக்கு உலக நாடுகள் எதுவும் ஆதரவு தரக் கூடாது என உலக அளவில் இயங்கிய முக்கியமான மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தேர்தலில் இந்தியா இலங்கையையே ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இலங்கை படுதோல்வியடைந்தது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அய்.நா. மனிதஉரிமை விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளை 6-6-09 அன்று வலியுறுத்தி இருந்தார். அவரின் இந்த கருத்துக்கு அய்.நா மனித உரிமைக் குழுவின் இந்தியப் பிரதிநிதி கோபிநாத் அச்சம் குளங்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஈழத்தமிழர் பிரச்சினை தனக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத இன்னொரு நாட்டு பிரச்சினைபோல இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அமைக்கப்பட்டி ருப்பதுதான் இதற்குக் காரணமாகும். அதிலும் குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி எல்லா வகையிலும் இராசபக்சேயின் அரசை வருடிக் கொடுப்பதையும், குளிர்விப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தார். சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் நடுவில் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பேசும்போது இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் போரை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார். ஆனால் இதை அடுத்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பிரணாப் முகர்ஜி மக்களவையில் அளித்த அறிக்கையில் "இலங்கை இனப் பிரச்சினை அண்டை நாட்டின் பிரச்சினை, இதில் தலையிடவோ அல்லது போரை நிறுத்துங்கள் என கட்டளையிடவோ இந்தியாவுக்கு அதிகாரமில்லை" எனக் குறிப்பிட்டார். இதனால் இராசபக்சே அரசு மேலும் துணிவுபெற்றது. ஆகவேதான் அவர் ஒருமுறை அல்ல பலமுறை கீழ்க்கண்ட இரண்டு கருத்துக்களை திரும்பத் திரும்பக் கூறினார்.

1. போர் நிறுத்தம் செய்யும்படி இந்திய அரசு ஒருபோதும் இலங்கையிடம் கூறவில்லை.

2. விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்தியா நடத்தவேண்டிய போரை, இலங்கை நடத்துகிறது.

இராசபக்சே யாரோ எவரோ அல்ல. ஒரு நாட்டின் அதிபர். அவர் மேற்கண்டவாறு பலமுறை கூறியதை இந்திய அரசு ஒருபோதும் மறுக்கவில்லை. ஏன்? அப்படியானால் அதன் பொருள் என்ன?

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்று வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்தி இருப்பதாக பலமுறை கூறினார்.

9-4-09 அன்று இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அண்ணா சமாதியில் சாகும் வரை உண்ணா நோன்பை மேற்கொண்டார். 5 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக இந்திய அரசிடமிருந்து செய்தி வந்திருப்பதாகக் கூறி உண்ணாநோன்பை முடித்துக் கொண்டார். ஆனால் அன்றைய தினமே சிங்கள இராணுவமானது அப்பாவி தமிழர்கள் மீது விமானகுண்டு வீசி தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக் கானவர்களை கொன்று குவித்தது என்பதுதான் உண்மை. ஆக திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக இது போன்ற நாடகங் களை இந்திய அரசும் தமிழக முதல்வரும் நடத்தினார்களே தவிர, அங்கு உண்மை யில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் எதையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதை இராச பக்சேயின் கூற்றும் அம்பலப்படுத்தியது.


தமிழகத்தின் கடமை

தமிழீழப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதற்கான முழுப் பொறுப்பும் தமிழ்நாட்டு மக்களிடம்தான் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 6 மாத காலமாக நடைபெற்றுவந்த போராட்டங்களும் அவற்றின் விளைவாக உருவான எழுச்சியும்தான் உலகத்தமிழர்களின் எழுச்சிமிக்க போராட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே தான் தமிழகத்தின் எழுச்சியை திசை திருப்புவதற்காகவும் மழுங்கடிப்பதற் காகவும் இந்திய அரசின் கொள்கை வகுப் பாளர்களும், இந்திய உளவுத் துறையான "ரா" அமைப்பும் மிகக்கடுமையான முயற்சிகளை தொடர்ந்து மேற் கொண்டனர்.

தமிழகத்திலிருந்து ஆயுதங் களையும் வெடிப் பொருட்களையும் புலிகள் கைப்பற்றியதாகவும் தமிழக மீனவர்களைப் புலிகள் கடத்தியதாகவும் "ரா" உளவுத்துறை திட்டமிட்டு பொய்யான செய்திகளைப் பரப்பியது. இதற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் முழுமை யான ஒத்துழைப்புக் கொடுத்தார். ஆனாலும் தமிழகத்தின் எழுச்சி கொஞ்சமும் குறையவில்லை. நாளுக்கு நாள் வளர்ந்தோங்கியது. இதன் உச்சக்கட்டமாக தி.மு.க., அ.தி.மு.க. அணி களிலிருந்த பல கட்சிகளும் இந்த இரு அணிகளைச் சாராத கட்சிகளும் ஒன்றி ணைந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி அதன் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள், மனிதச் சங்கிலிகள், பேரணிகள், கருப்புக் கொடி ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தின. இதன் விளைவாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி உச்சக்கட்டத்தை அடைந்தது. இதன் விளைவாக தமிழக ஆளும் கட்சிக்கு ஈழப்பிரச்சினையில் ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

14-10-08 அன்று முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றிணைக் கூட்டினார். அந்தக் கூட்ட த்தில் இருவாரக் காலத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட உரிய நடவடிக்கை களை இந்திய அரசு மேற்கொள்ளா விட்டால் தமிழகம் - புதுச்சேரியைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்ற தீர்மானம் ஒரே மனதாக நிறைவேற்றப் பட்டது. இந்தத் தீர்மானம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திற்று. அதே வேளையில் உலகெங்கும் இருந்த தமிழர்கள் உற்சாகமும் புதிய நம்பிக்கை யையும் பெற்றார்கள்.

இதன் விளைவாக பிரதமர் மன் மோகன்சிங் உடனடியாக இலங்கை அதிபர் இராசபக்சேவுடன் தொலைப்பேசியின் மூலம் பேசி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாயின. இதன் பிறகு வெளியுறவுத்துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு தனக்கு மனநிறைவை அளித்திருப்பதாகவும் இந்திய அரசு சரியான வகையில் செயல்படுவதாகவும் அறிவித்த முதலமைச்சர் கருணாநிதி நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை என அறிவித்தார். 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முடிவு செய்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தன்னிச்சையாகக் கைவிடும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை. மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அக்கூட்டத்தில் பிரணாப்முகர்ஜி தெரிவித்த கருத்துக்களை கூறி அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒப்புதலைப் பெற்று அதற்குப் பின்னர் இவர் அறிவித்திருந்தால் சரியானதாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு முதலமைச்சர் தவறிவிட்டார். அனைத்துத் தலைவர்களின் நிர்ப்பந்தத் திற்கு பணிந்து நாடாளுமன்ற உறுப்பினர் கள் பதவி விலகவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் மத்திய ஆட்சிக்குப் பணிந்து அக் கருத்தை கைவிட்டுவிட்டார்.


உளவியல் சமர்

உலகம் முழுவதிலும் ஏறத்தாழ 9 கோடி தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இதில் மிக மிக அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறார்கள். இந்த ஆறரைக்கோடி தமிழர்கள் ஈழத்தமிழ் மக்களுக்காக அணி திரளும்போது அதற்கான வலிமை என்பது மிக மிக அதிகமானதாகும். அனைத்து லகத்திலும் அதனால் ஏற்படும் தாக்கம் மிக அதிகமானதாகும். ஒட்டுமொத்த தமிழகமும் அணி திரண்டு ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுக் கரத்தை நீட்டும்போது இந்திய அரசு மட்டுமல்ல உலகநாடுகளும் சிந்திக்க முற்படும்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட மாபெரும் எழுச்சி இந்திய அரசின் இரட்டை வேடத்தை உலகத் தமிழர் களுக்கு இனங்காட்டியது. ஈழத்தமிழரை அழித்தொழிக்க சிங்கள பேரின வாதத்திற்குத் துணைபோகும் இந்திய அரசுக்கு எதிராக உலகத் தமிழர்கள் நடுவில் கொதிப்புணர்வு உருவாகியுள்ளது. இதை சிதைக்க வேண்டும் என்று இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இலங்கையில் புலிகளின் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் மீண்டும் அந்தப் போராட்டம் சிலிர்த்தெழுந்துவிடக்கூடாது என இந்திய அரசு நினைக்கிறது. மீண்டும் விடுதலைப் புலிகளின் எழுச்சி உருவாகி விடக்கூடாது என கருதும் இந்தியா அதற்கான சூழ்நிலைகள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து வரக்கூடும் என கருதுகிறது.

எனவேதான் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீது உளவியல் ரீதியான சமர் ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டு ள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்பதைப் பற்றி பல செய்திகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு அதனடிப் படையில் எழும் விவாதங்கள் விரிவடைந்து நீண்டு செல்ல வேண்டும் என இந்தியா விரும்பு கிறது.

இந்திய அரசின் இந்த சதித் திட்டத்தை முறியடிக்கவேண்டிய கடமை தமிழகத் தமிழர்களுக்கு உண்டு. அவர்கள் அதை சரிவரச் செய்வார்களானால் புலம் பெயர்ந்த தமிழர்களும் புத்துணர்வோடும் புதிய நம்பிக்கையோடும் செயல்படுவார்கள். தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.


புலிகளின் போர் நமது போர்

நான்காம் ஈழப்போரில் சிங்கள இராணுவம் வெற்றிப் பெற்று விட்டதாகத் தம்பட்டம் அடிக்கலாம். ஆனால் உலக அளவில் ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.


உலகின் முக்கிய நாடுகள் பலவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது பயங்கரவாதப் பட்டத்தைச் சுமத்தி அதற்குத் தடை விதித்திருக்கும் சூழலில் அந்த நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் எங்கள் சுதந்தி ரத்தை வென்றெடுக்கப் போராடும் போராளிகள் என உரத்தக் குரலில் முழக்கமிட்டனர். புலிகளுக்கு எதிரான போர் தமிழர்களுக்கு எதிரான போர் என்றும் அவர்கள் உலகிற்குப் பறையறைந்து தெரிவித்தனர்.

புலிகளுக்குத் தடை விதித்திருக்கும் நாடுகளில் இலட்சக்கணக்கானத் தமிழர்கள் புலிக் கொடிகளைத் தாங்கி பிரபாகரனின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை பிடித்த வண்ணம் உணர்ச்சி மயமான ஊர்வலங்களை நடத்திய போது அந்த நாடுகளின் காவல்துறையும் சட்டங்களும் திகைத்துத் திணறி நின்றன.


நீண்ட காலமாக தமிழர்களின் போராட்டங்களுக்கு செவி சாய்க்காத உலகம் இன்று புலிக் கொடிகளோடு தமிழர்கள் தெருக்களில் இறங்கிய பிறகுதான் தமிழர் பிரச்னைகளில் கவனத்தைத் திருப்புகிறது.


உலக நாடுகளில் மட்டுமல்ல. ஆறரைக் கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிலும் மக்கள் மாபெரும் எழுச்சிப் பெற்றுள்ளனர். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவதே குற்றம் என அடக்கு முறைச் சட்டங்கள் சீறிப் பாயும் காலக்கட்டத்தில் தமிழகத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவம் பொறித்த பதாகைகளை தூக்கிப் பிடித்த வண்ணம் பல்லாயிரக் கணக்கான மக்கள் தமிழக வீதிகளில் திரண்ட போது ஆளும் வர்க்கம் அதிர்ந்தது. இந்தப் போராட்டங் களைத் தடுக்க அது துணியவில்லை. மக்களும் அடக்குமுறைகளுக்கோ கொடிய ஆள் தூக்கிச் சட்டங் களுக்கோ அஞ்சி ஒடுங்கும் நிலையிலும் இல்லை.

தமிழ்நாட்டு மக்களின் இந்த மகத்தான எழுச்சிதான் உலகத் தமிழர்களின் பேரெழுச்சிக்கு வழிகாட்டியது.

பெரும் பொறுப்பும் கடமையும் தமிழ்நாட்டுத் தமிழர்களை எதிர்நோக்கி நிற்கின்றன. சாவின் விளிம்பில் நிறுத்தப் பட்டிருக்கும் ஈழத் தமிழினம் நம்மைத்தான் பெருநம்பிக்கையோடு எதிர்நோக்கி நிற்கிறது.

2000 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட தமிழர் வரலாற்றில் நெருக்கடி யான காலக்கட்டம் இது. இதிலிருந்து ஈழத் தமிழினம் மட்டுமல்ல நாமும் மீண்டாக வேண்டும். நம்மை எதிர்நோக்கி நிற்கும் அறைகூவல்களை துணிவோடு சந்தித்தாக வேண்டிய கட்டம் இது. இந்த காலக் கட்டத்தில் எவ்வித கலக்க மில்லாமலும் சோர்வில்லாமலும் நமது கடமையை நாம் செய்தாக வேண்டும்.

இந்திய, சீனா, பாகிஸ்தான் போன்ற அணு ஆயுத வல்லரசுகளின் துணை யோடு போராடும் சிங்கள வல்லரக்கர்களை எதிர்த்து தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் புலிகளும் ஈழத் தமிழர்களும் களத்தில் போராடி வருகின்றனர். எவ்வளவோ இழப்புகளுக்கு நடுவே உறுதியாக அவர்கள் நிற்கின்றனர். அவர்களுக்குத் தோள் கொடுத்து துணை நிற்க நம்மைத் தவிர வேறு யாரும் இல்லை. இதைத் தவிர நமக்கு வேறு முக்கிய கடமையும் இல்லை.


நம்மை குழப்பவும் சோர் வடையச் செய்யவும் பிரபாகரன் குறித்த பொய்யானச் செய்திகளை இந்திய ரா உளவுத் துறையும் ஊடகங்களும் பரப்புகின்றன. நெடி துயர்ந்து நிற்கும் தமிழ்ப் பொதிகை மலை போல அந்தத் தலைவன் களத்தில் காலூன்றி நிற்கிறான். முழுமதியை சில நேரங்களில் மேகங்கள் மறைக்கலாம். ஆனால் நிரந்தரமாக மறைத்து விட முடியாது. முகிலை கிழித்து முழு மதி முன்னிலும் ஒளிவிட்டு மின்னும். தலைவர் பிரபாகரனும் முன்னிலும் அதிகமான துடிப்புடன் நம்மை வழிநடத்துவார்.

தமிழர் வரலாற்றில் பிரபாகரனைப் போன்ற ஒரு வீரன் பிறந்ததில்லை என மறைந்த முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதன் அவர்கள் ஒரு முறை மன நெகிழ்ச்சியுடன் கூறினார். கல்லின் மேல் எழுத்துப் போன்ற அந்த சொற்களை மனதில் பதிய வையுங்கள். வாராது போல் வந்த மாமணியாக அந்த தலைவன் வாழும் காலத்திலேயே தமிழீழம் மலரும். அதன் மூலம் உலகத் தமிழர்களுக்கும் விடிவுப் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்குவோம். கடமையாற்றுவோம்.

தமிழக வரலாற்றில் ஈழத் தமிழர் களுக்கு ஆதரவாகத் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்ட தியாக சீலர்கள் நம் காலத்தில் வாழ்ந்தார்கள். நம் கண் முன்னாலேயே மறைந்தார்கள். முத்துக் குமார் தொடக்கி வைத்த இந்த தியாக காவியத்தில் தமிழகத்தில் 13 தோழர்களும் வெளிநாடுகளிலும் 3 தோழர்களும் என்றும் அழியாத இடம் பெற்றுள்ளனர். அவர்கள் எதற்காக தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டார்கள்? வாழ வேண்டிய வயதில் தங்கள் குடும்பங்களை குறித்தோ, வேறு எதைப் பற்றியுமோ சிந்திக்காமல் ஈழத் தமிழ்ச் சகோதரர்களுக்காக தியாகத் தீப்பிழம்புகளாக மாறி எரிந்து சாம்பலான இவர்களின் உன்னதமான தியாகம் ஒரு போதும் வீணாகக் கூடாது. அந்த தியாக தீபங்களின் சுடரொளியில் தமிழகத்தில் பரவியிருக்கும் இருளை அகற்றுவோம். அந்த வழிகாட்டும் ஒளியில் இலட்சியப் பாதையில் முன்னேறுவோம்.
 
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP