சமீபத்திய பதிவுகள்

12 நாட்களில் தமிழீழத் தேசியத் தலைவருக்கு மீசை அடர்த்தியாக வளர்ந்தது எப்படி?

>> Friday, July 3, 2009

வன்னிக் களமுனையில் இறுதியாக என்ன நடந்தது? தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து உண்மை நிலை என்ன என்பவற்றை இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு வெளியிட்டுள்ளது.

தங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், 'மக்கள் அறிந்த போராளி' ஒருவர் ஊடாக இந்தத் தகவல்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈழமுரசு, இதுதொடர்பாக விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

ஈழமுரசு வெளியிட்டுள்ள அந்தச் செய்தியை இங்கே தருகின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் வாதப்பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இருக்கின்றார் என நம்பும் ஒரு பகுதியினரும் இல்லை என மறுத்து அறிக்கைவிடும் கூட்டத்தினருக்கும் மத்தியில் தலைவர் தொடர்பான உண்மைத் தகவல்களையும், களமுனையில் இறுதியாக என்ன நடந்தது என்பது பற்றியும் அறிந்துகொள்வதற்கு ஈழமுரசு கடந்த பல நாட்களாக எடுத்த பல்வேறு முயற்சிகளின் வெற்றியாக களமுனையில் இருந்து நம்பகத்தகுந்த பல தகவல்களைப் பெற்றுள்ளோம்.

களமுனையில் கடந்த 18.05.2009 அன்றுவரை போராடிக்கொண்டிருந்த போராளி ஒருவருடன் ஈழமுரசு அண்மையில் தொடர்புகளை ஏற்படுத்தி நடந்த சம்பவங்களை அறிந்துகொண்டுள்ளது. அந்தத் தகவல்களை வழங்கிய 'மக்கள் அறிந்த அந்தப் போராளியை' தற்போதையை சூழ்நிலையில் எம்மால் இனம்காட்டிக்கொள்ள முடியவிட்டாலும், கால ஓட்டத்தில் ஒருநாள் அவரை அடையாளம் காட்டமுடியும் என்றே நம்புகின்றோம்.

சிறீலங்கா இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட எந்த நிழற்படங்களையும் இதுவரையும் அவர் பார்த்திராதபோதும், தலைவரை இறுதியாக தான் கண்டபோது இருந்த அவரது தோற்றம் தொடர்பாக, அந்தப் போராளி வழங்கிய தகவல்கள் தலைவர் எனக்கூறி சிறீலங்கா வெளியிட்ட நிழற்படங்கள் போலித்தனமானவை என்பதை அப்பட்டமாகப் புரியவைத்தன.

அவருடனான எமது உரையாடிலின்போது பகிர்ந்துகொண்ட விடயங்களை இங்கே தொகுத்து தருகின்றோம்.

மே மாதம் 4ம் திகதி அல்லது 5ம் திகதியா என்பது சரியாக நினைவில் இல்லை. இந்த இரண்டு தினங்களில் ஒன்றில்தான் தலைவரை இறுதியாக நான் சந்தித்திருந்தேன். அன்றைய தினம் தலைவருடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. உண்டியலடிக்கு வருமாறு வந்த அழைப்பை அடுத்து போராளிகள் அங்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு சுமார் ஒன்பது வரையான உந்துருளிகளில் ஒரு அணியொன்று வந்து சேர்ந்தது.

ஒரு உந்துருளியில் தலைவரும் பொட்டம்மானும், ஏனையவற்றில் அவர்களது மெய்ப்பாதுகாவலர்களும் இருந்தனர். தலைவர் தலைக்கவசம் (கெல்மட்) அணிந்திருந்தார். வழமைபோலவே போராளிகளுடன் உரையாடியவர், தாக்குதலுக்கான திட்டங்களையும் வழங்கினார். அப்போது தலைவர் முழுமையாக முகச்சவரம் செய்திருந்தார். அவரது மீசை கூட மளிக்கப்பட்டிருந்ததை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

ஆனால், நீங்கள் சொல்லவதுபோல் சிறீலங்கா இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட படத்தில் அடர்த்தியாக மீசை உள்ள தலைவரின் உருவம் வந்திருக்க வாய்ப்பில்லை. பத்து, பன்னிரண்டு நாட்களில் அவ்வளவிற்கு மீசை வளர்ந்திருக்கும் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அத்துடன், அன்றைய சந்திப்பின் பின்னர் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி தலைவர் அந்த முற்றுகைப் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டார்.

சுமார் 45 முதல் 50 வரையான கரும்புலித் தாக்குதல்கள் நடத்தப்பட்டே படையினரின் முற்றுகைகள் உடைக்கப்பட்டு நந்திக்கடல் ஊடாக இந்த வெளியேற்றம் நிகழ்ந்ததாகவும், இதன்போது ஆயிரம் வரையான படையினர் கொல்லப்பட்டிருந்ததாகவும் களமுனையில் போராளிகளிடையே பரவலாக செய்திகள் இருந்தன.

தலைவர் இறுதி வரையும் நின்று போராடப் போவதாகவே கூறிக்கொண்டிருந்தார். ஆனால், போராளிகளும் தளபதிகளும் அவரை அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றே வலியுறுத்தி கேட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் தலைவர் வரவிட்டால் மயக்க மருந்து செலுத்தித்தான் கொண்டுபோவோம் என்று சொல்கின்ற அளவிற்கு நிலைமை இருந்தது.

இதேவேளை, சண்டை மிகவும் இறுக்கமடைந்திருந்த நிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து இரண்டு அணிகளுடன் வரவுள்ளதாக தலைவருக்கு தளபதி ஒருவரிடம் இருந்து தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தலைவர், அணிகளைச் சிதைக்காமல் அந்ததந்த இடங்களிலேயே தக்க வைத்துக்கொண்டிருக்குமாறு பணித்திருந்தார்.

தலைவர் அங்கிருந்து வெளியேறியிருந்தபோதும், தம்பிதான் இறுதிவரை எங்களுடன் களமுனையில் நின்றிருந்தார். தலைவரின் மகன் சாள்சைத்தான் அவர் தம்பி என்று குறிப்பிட்டார். அவரது மகள் துவாரகாவும் கையில் காயமடைந்த நிலையிலும் களமுனையில் போரிட்டுக்கொண்டிருந்தார் என்பதை அறியமுடிந்தது.

ஆனந்தபுரம் தாக்குதலில் கேணல் தீபனும், கேணல் கடாபியும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இறுதிச்சமர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது காயமடைந்த கேணல் சொர்ணம் அவர்களும் சயனைட்டை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். கேணல் ஜெயமும் கேணல் சூசையும் களமுனையில் இருந்து போராளிகளை பெரும் கடல் வழியாக படகுகளில் வெளியேற்றிக்கொண்டிருந்தனர்.

கேணல் ஜெயம் அவர்கள் அரைக் காற்சட்டையுடன் (ஜம்பர்) கடற்கரையில் நின்று பணிகளில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. தலைவர் வெளியேறிச் செல்வதற்கு வசதியாக அவர்கள் படையணிகளை முன்னதாகவே வேறு பகுதிகளில் கடலால் கொண்டு சென்று தரையிறக்கி வழியமைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறியமுடிந்தபோதும், அவர்கள் எங்கே தரையிறக்கப்படுகின்றார்கள் என்பதை என்னால் அறியமுடியவில்லை. எனினும், கொக்குத்தொடுவாய் பக்கமே அவர்கள் சென்று தரையிறங்கியிருக்க வேண்டும். பின்னர் ஜெயமும் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக என்னால் அறியமுடிந்தது.

கேணல் பானு அவர்களும் களமுனையில் நின்றிருந்தார். எனினும், அவர் கையில் காயமடைந்திருந்ததால் அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார். (கேணல் பானு எனக்கூறி வெளியிடப்பட்டிருந்த படத்தில் அவரது கையில் எந்தக் காயமும் இருக்கவில்லை. அத்துடன், அவர் ஏற்கனவே வயிற்றுப் பகுதியிலும் காயமடைந்திருந்தார். வெளியிடப்பட்டிருந்த படத்தில் அந்தக் காயமும் இருக்கவில்லை.)

இறுதியாக, 15ம் திகதி முள்ளிவாய்க்காலில் இருக்கும் விடுதலைப் புலிகளின் அனைத்து ஆவணங்களையும், கணினிகளையும் அழித்துவிடுமாறு எங்களுக்கு தகவல் வந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் தொடர்பான ஆவணங்களை முற்றாக அழிக்குமாறு தலைவர் அந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தியிருந்தார்.

இதனால், இராணுவத்தினர் எப்போதும் முள்ளிவாய்காலில் நுழையலாம் என்ற நிலையில், இருக்கின்ற அனைத்துப் பொருட்களையும் கொண்டுபோய் ஒரு இடத்தில் குவித்து வைத்து தீ வைத்தோம். பெரும் பிரதேசத்தில் அந்தத் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

அப்போது இராணுவத்தினர் எமக்கு மிக அருகில் நெருங்கியிருந்தனர். இந்நிலையில், வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த இன்னொரு ஆவணத் தொகுதியையும் அழிக்கவேண்டியிருந்தது. அந்த வாகனத்தில் ஏற்றப்பட்ட ஆவணங்களுக்கு தீ வைத்துவிட்டு திரும்பியபோது, இராணுவத்தினர் ஏற்கனவே தீ வைக்கப்பட்டு எரிந்த பகுதிக்குள் நுழைந்துவிட்டிருந்தனர். இறுதியாகவே நான் அங்கிருந்து வெளியேறினேன்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP