சமீபத்திய பதிவுகள்

தேசியத்தலைவர் பிரபாகரன் இடத்தைப் பிடிக்க பதவிச் சண்டையா?

>> Tuesday, July 14, 2009

ருத்திரகுமாரன் ஸ்பெஷல் பேட்டி!

பிரபாகரன் இடத்தைப் பிடிக்க பதவிச் சண்டையா?

நாடு கடந்த தமிழ் ஈழ அரசை உருவாக்கிவரும் நியூயார்க் வாழ் வழக்கறிஞர்-அரசியல் ஆலோசகர் விசுவநாதன் ருத்திரகுமாரனுக்கு ஈழத் தமிழர்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் பெருகிவரும் நிலையில்... முதன் முறையாக நம்மிடம் மனம் திறந்து பேசினார் அவர்.

''நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு, புலம் பெயர்ந்த அனைவரின் உதவி அவசியம் தேவை. இந்தியாவின் உதவி மிக அவசியம். இந்தியாவை நாங்கள் என்றுமே எதிரி நாடாக பாவித்ததில்லை. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழர்கள்தான் இந்த இயக்கத்தின் தூண். ஆயுதம் எங்கள் குறிக்கோள் அல்ல... இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத் தலைவர்கள் அமிர்தலிங்கம், செல்வா போன்றோர் அறவழியில் போராடி னார்கள். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். ஆனால், இலங்கை அரசு இதை நசுக்கியது. கயமைத்தனமாக அடியோடு அழிக்க முனைந்தது. வேறு வழியின்றி ஆயுதம் எடுத்தோம். அதன் பின்னரே வெளியுலகுக்கு தமிழி னத்தின் துன்பங்கள் தெரியவந்தன. 'போராட்ட வடிவங்கள் மாறினாலும், லட்சியம் ஒன்றுதான்!' என்று சதுமலையில் எங்கள் தலைவர் கூறினார்.

தமிழர்களின் தேசியப் பிரச்னைக்கு சுயநிர்ணய அடிப்படையில் ஒரு தீர்வு காண்பதற்கு இது அமைக்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு சமபல நிலை அவசியம். அரசுக்கு சமமாக இருந்தோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, இப்போது அந்த இடைவெளியை நிரப்ப மிகவும் அவசியம்.புறநிலை அரசுக்கும் [Government in excile] நாடு கடந்த அரசுக்கும் [Transnational Government] பல ஒற்றுமைகள் இருந்தாலும், சில வேறுபாடுகள் உள்ளன. ஒரு நாட்டில் அரசு அமைக்க இயலாதபோதே புறநிலை அரசு பிறக்கும். தலாய்லாமா, பாலஸ்தீனர்கள், ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் போன் றவை இந்த வகை. நாங்களோ, உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களை ஒருங்கிணைக்க இதைக் கையில் எடுத்திருக்கிறோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு இன்னமும் அமைக்கவில்லை. அதை அமைப்பதற்காகவே செயற்குழுவை ஏற்படுத்தியுள்ளோம். பலர் இந்தியாவில் இருந்து தொடர்புகொண்டு, 'உலகத் தமிழர் வரலாற்றில் இது ஒரு புதிய சகாப்தமாயிற்றே... எங்களை ஏன் சேர்க்கவில்லை?' எனக் கேட்கின்றனர்.

எங்கள் அறிக்கையை ராஜதந்திரிகள், தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி, அவர்களின் கருத்துகளையும் கேட்டிருக்கிறோம். அடுத்தது, ஒவ்வொரு நாடுகளிலும் செயற்குழுவினை அமைக்கவிருக்கிறோம். கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளன. இந்தக் குழுக்களுக்குப் பயிற்சிப் பட்டறையும் நடத்தி வருகிறோம். தமிழ் ஈழப் பிரச்னையில் - குறிப்பாக கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்களில், இந்தியாவின் பங்கை பல கோணங் களில் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் திட்டம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றுதான் கூறுகிறோம்.

இனி ஆயுதப் போராட்டம் இல்லை. இந்தியாவின் இறையாண்மையையோ அல்லது பூகோள நலன்களையோ எம்முடைய செயல்கள் பாதிக்காது என உறுதி அளிக் கிறோம்.

நாங்கள் திட்டமிடுவது, வெறும் வலைதளத்தில் மட்டுமே வாழும் அரசு அல்ல... தலைவருக்குப் பிறகான பதவிச் சண்டையும் அல்ல. எந்த ஒரு குழுவையோ அல்லது தனிநபரையோ இது முன்னிலைப்படுத்தாது. விரைவில் தேர்தலும் நடத்துவோம். ஜனநாயக முறைப்படி, அதில் யாரும் பங்கு பெறலாம். முகாம்களில் சீரழியும் மூன்று லட்சம் ஈழ மக்களைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். எங்கள் இலக்கு, தனி ஈழம். அதை இனி ஜனநாயக முறையில் இந்தியா, உலக நாடுகளின் உதவியுடன் பெறுவோம்!'' என்று நம்மிடம் சொன்ன ருத்திரகுமாரனிடம்,

''பிரபாகரன் இடத்துக்கு தாங்கள் வர முயற்சிக்கிறீர் களா?'' எனக் கேட்டோம்.

''அப்படியெல்லாம் இல்லை. அவர் இடத்தை இட்டு நிரப்புவதற்கு யாருமில்லை. அதற்கான முயற்சியை நான் மட்டுமல்ல, யாருமே எடுக்க மாட்டார்கள். அவருடைய கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சியில்தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம். ஈழ தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்காகவும் உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

யூதர்களையும் தமிழர்களையும் ஒப்பிட்டு பிரபாகரன் தனக்கு நெருக்கமானவர்களிடத்தில் பேசியதாக கடந்த 08-07-2009 ஜூ.வி. இதழில் அட்டைப் படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4-ம் தேதி அன்று, 'யுனைடெட் ஸ்டேட்ஸ் தமிழ் ஈழம் ஆக்ஷன் கமிட்டி' என்ற அமைப்பு ஈழ விடுதலைக்கான முன்னோட்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்புக்கு தலைவராக யூத இன மருத்துவரான இலைன் ஷாண்டர் என்ற பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். யூத இனம் போலவே தமிழ் இனமும் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து திமிறி எழும் என்கிறார்கள் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்.



நன்றி ஜூனியார் விகடன்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP