சமீபத்திய பதிவுகள்

இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி-ஆலந்திடம் வீழ்ந்தது

>> Friday, June 5, 2009

 
 
 
 
 
 


லண்டன், ஜுன்.6-

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா லண்டனில் நேற்று தொடங்கியது. ஆலந்துக்கு எதிரான பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

தொடக்க விழா ரத்து

2-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. இதை யொட்டி நடனம், பாடல் உள்ளிட்ட தொடக்கவிழா நிகழ்ச்சிகளுக்கு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாக தொடர்ந்து லேசாக மழை தூறல் விழுந்து கொண்டே இருந்தது. இதனால் வேறு வழியின்றி தொடக்க விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து இங்கிலாந்து-ஆலந்து அணிகள் (பி பிரிவு) இடையிலான முதலாவது ஆட்டம் 20 நிமிடம் தாமதமாக தொடங்கியது. இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர் பீட்டர்சனுக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

இங்கிலாந்து பேட்டிங்

டாஸ் வென்ற ஆலந்து அணி முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய கேட்டுக் கொண்டது. இதன்படி ரவி போபராவும், லுக் ரைட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள். இருவரும் ஆலந்து பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தால் சற்று தடுமாற்றமும் காணப்பட்டது.

இருவரும் நிலைத்து நின்றதால், இங்கிலாந்து அணி வலுவான தொடக்கத்தை பெற்றது. 20 ஓவர் சர்வதேச போட்டியில் முதல் முறையாக இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தது. இறுதியில் ஸ்கோர் 102 ரன்களை எட்டிய போது, இந்த ஜோடி பிரிந்தது. ரவி போபரா 46 ரன்களில் ( 34 பந்து, 5 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

இதன் பிறகு வந்த வீரர்கள் வேகமாக ரன் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் கடைசி 5 ஓவரில் எதிர்பார்த்த ரன்கள் (38 ரன்கள் எடுத்தனர்) வரவில்லை. லுக் ரைட் 71 ரன்களில் (49 பந்து, 8 பவுண்டரி) கேட்ச் ஆனார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் ஒரு வீரரும் சிக்சர் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலந்து வெற்றி

பின்னர் 163 ரன்களை இலக்காக கொண்டு ஆலந்து ஆடியது. அவர்களின் ஆட்டம் வியப்பளிக்கும் வகையில் இருந்தது. எந்த ஒரு பந்தையும் தடுத்து ஆடாமல் தொடர்ந்து அடித்து ஆடிக் கொண்டே இருந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தாலும் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி கொண்டே போனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

கடைசி ஓவரில் ஆலந்து அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. அதன் பிறகு கடைசி பந்தில் 2 ரன் தேவையாக இருந்த போது, இங்கிலாந்தின் மோசமான பீல்டிங்கால் அதனையும் எடுத்து விட்டனர்.

ஆலந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. டாம் டி குரூத் (49 ரன், 30 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), போர்ரன் (30 ரன், 25 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆலந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

இங்கிலாந்து அணியின் பீல்டிங் நேற்று படு மோசமாக இருந்தது. பல எளிதான ரன்-அவுட்களை தவற விட்டனர். குறிப்பாக கடைசி ஓவரில் மட்டும் 4 ரன்-அவுட் மற்றும் ஒரு கேட்ச்சை கோட்டை விட்டனர். இதனால் தான் அவர்கள் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணியின் சூப்பர்-8 சுற்று வாய்ப்பு சிக்கலாகி உள்ளது.

 

StumbleUpon.com Read more...

ஐ.நா. கையாலாகாதது, ஒன்றுக்கும் உதவாதது

ஐ.நா. கையாலாகாதது, ஒன்றுக்கும் உதவாதது, அதனால் அது கலைக்கப்படவேண்டும் – ஐநா இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல்

 un_geniva1ஐ.நா சிறுபான்மையினரைக் காக்கத் தனது அடிப்படைக் கடமைகளைச் செய்யத் தவறி விட்டது என ஒபாமாவுக்கான தமிழர்கள் மே 29, 2009 அன்று கூறினர். விடுதலைப்புலிகளைக் கண்டனம் செய்தும் ஸ்ரீலங்காவின் அட்டூழியங்களைப் பற்றி ஏதும் குறிப்பிடாமலும் ஸ்ரீலங்கா முன்மொழிந்த தீர்மானத்தை ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆலோசனைச் சபையில் நிறைவேற்றியது "ஏற்கனவே பாதிப்படைந்துள்ள ஐ.நா.வின் நம்பகத்தன்மைக்கு இன்னும் குந்தகம் விளைவிக்கக் கூடியதாகக் கருதப்படும்" என தி ஃபைனான்சியல் டைம்ஸ் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய சிறுபான்மையினரைக் காக்க வேண்டிய தெளிவான கடமையை எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில் ஐ.நா. மந்தமாகவும், மௌனம் காத்தும் வந்துள்ளது எனத் தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஐ.நா. தனது பணியைச் செய்யவில்லை, ஒபாமாவுக்கான தமிழர்கள் கூறுகிறார்கள்.

"மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணும் கடமை ஐ.நா.வுக்கு உள்ளது" எனத் தமிழ்க் குழுவின் பேச்சுத் தொடர்பாளர் ஒருவர் கூறினார். "தங்களது கடமையைச் செய்யாதிருக்க என்னென்ன சாக்குப்போக்குகளைச் சொல்லலாம் என்பதிலேயே ஐ.நா அதிகாரிகள் குறியாக இருக்கிறார்கள்."

1992-ல் தேசிய சிறுபான்மையினரின் உரிமைகள் பிரகடனத்தை ஐ.நா. ஏற்றுக் கொண்டது. தங்களது சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்ற தார்மீகக் கடமையை ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் மீதும், தனது உறுப்பினர்கள் அவ்வாறு செய்வதை உறுதி செய்யும் கடமையை ஐ.நா.வின் மீதும் இப்பிரகடனம் விதிக்கிறது.

ஒரு இலண்டன் டைம்ஸ் பகுத்தாய்வின்படி "சர்வாதிகாரிகள் அல்லது இனப்படுகொலை புரிபவர்கள் ஆகியோரை எதிர்த்து நிற்கத் தவறிய கையாலாகாத்தனத்தால் ஐ.நா சீரமைக்கப்படவேண்டும் அல்லது கலைக்கப்பட வேண்டும் என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் ஐ.நா 1994-ல் நடைபெற்ற ருவாண்டா இனப்படுகொலையை தடுத்து நிறுத்தத் தவறியதையும், ஸ்ரெப்ரெனிகா படுகொலையைத் தடுக்கத் தவறியதையும், இஸ்ரேலை மட்டும் விமர்சனம் செய்யும் பிடிவாதப் போக்கையும், சூடான் இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியதையும் சுட்டிக் காட்டுகின்றனர்."

"நமது தலைமுறையில் நடந்த பெரும்பாலான முக்கிய நிகழ்வுகளில் ஐ.நா கையாலாகாத்தனமாகவே இருந்துள்ளது" என்கிறார் ஹட்சன் இன்ஸ்டிட்யூட்டின் ஐ.நா நிபுணர் ஆன் பேயெவ்ஸ்கி. ஐ.நா இலங்கையில் கொடூரங்களைக் கண்டிருந்தும் பார்க்காதிருப்பது போல் நடிப்பதற்கு முடிந்தளவுக்கு முயன்றது எனத் தமிழர்கள் இன்னொரு குற்றச்சாற்றைச் சேர்க்கப் போகிறார்கள்.

ஐ.நா மனிதநேய ஒருங்கிணைப்பு அலுவலகம் பேச்சுத் தொடர்பாளர் எலிசபெத் பிர்ஸ் ஏ.எப்.பி-க்குக் கூறியது:

"கடந்த மாதங்களில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் எண்ணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத அளவுக்கு அதிகமானது என ஐ.நா வெளிப்படையாக மீண்டும் மீண்டும் கூறியது மட்டுமல்லாமல் அத்தகவல்களை அரசாங்கத்தோடும் மற்றும் இவ்விடயத்தில் தொடர்புடைய அனைவரோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறது."

ஒபாமாவுக்கான தமிழர்கள் பேச்சுத் தொடர்பாளர் கூறியது:"ஐ.நா இறந்தவர்களின் எண்ணிக்கை 'ஏற்றுக் கொள்ளப்பட முடியாத அளவுக்கு அதிகமானது' எனக் கூறியது உண்மைதான். ஆனால் எந்த எண்ணிக்கையும் 'ஏற்றுக் கொள்ளப்பட முடியாத அளவுக்கு அதிகமானது' ஆக இருக்கலாமே.

பத்து சாவுகள் கூட 'ஏற்றுக் கொள்ளப்பட முடியாத அளவுக்கு அதிகமானது' ஆகலாம். இது ஒரு வகையில் எண்ணிக்கையை வெளியிடாமலிருக்கச் செய்யும் தந்திரம், பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ளாமலிருக்கக் கடைபிடிக்கும் உபாயம்."

"டைம்ஸ் இதழுக்குக் கிடைத்த இரகசியமான ஐக்கிய நாடுகள் ஆவணங்களின் படி கிட்டத்தட்ட 7,000 அப்பாவிப் பொது மக்கள் ஏப்ரல் இறுதி வரையில் கொல்லப்பட்டிருப்பது பதிவாகியுள்ளது. ஐ.நா மூலங்களின் படி அதன் பின்னர் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்தது, ஏறக்குறைய ஒரு நாளைக்கு 1,000 அப்பாவிப் பொது மக்கள் என விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட அடுத்த நாளான மே 19 வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சாவுத்தொகை போர்-விலக்குப் பகுதியிலிருந்து ஓடிவந்து தற்போது மனிக்ஃபார்ம் ஏதிலிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் கத்தோலிக்கக் குருவான தந்தை.அமல்ராஜ் தி டைம்ஸ் நாளிதழுக்குக் கொடுத்த எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறது.

இது கொல்லப்பட்டோரின் இறுதி எண்ணிக்கையை 20இ000-க்கும் மேலே கொண்டு செல்லும். 'இன்னும் அதிகம்' என ஒரு ஐ.நா மூலம் டைம்ஸ்க்கு தெரிவித்தது.

'இந்த இறப்பு எண்ணிக்கை மேலும் கூடிச்செல்லும் '." ஒபாமாவுக்கான தமிழர்களின் பேச்சுத் தொடர்பாளர் தெரிவித்ததாவது:

"இவை ஐ.நாவின் இரகசிய ஆவணங்களிலிருந்து வரும் எண்ணிக்கைகள். ஆகையால் ஐ.நா இவற்றை வெளியிடும் என்று எதிர்பார்க்காதீர்கள்."

டைம்ஸ் இன்னும் கூறுவது "சீனா, எகிப்து, இந்தியா மற்றும் கியூபா உட்பட்ட நாடுகளின் ஆதரவினால் புதன்கிழமை ஸ்ரீலங்கா எந்தத் தவறும் இழைக்கவில்லை என ஐநா மனித உரிமைகள் ஆலோசனைக் குழுவினால் விடுவிக்கப்பட்டது.

"இது ஒரு குற்றவாளிக் கும்பல் இன்னொரு குற்றவாளிக் கும்பலைப் பாதுகாக்கும் செயலுக்கு ஒப்பானது என ஒபாமாவுக்கான தமிழர்கள் குறிப்பிடுகின்றனர்.

பாதுகாப்பு வலயத்தில் தங்களுக்கென்று செய்தி மூலங்கள் இருப்பதாக ஒபாமாவுக்கான தமிழர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மூலங்களின் படி கடந்த ஜனவரியில் 3,60,000 தமிழ்ப் பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்தனர்.

இப்போது, செய்தியறிக்கைகளின் படி 2,90,000 பேர் மட்டுமே உள்ளனர். ஒபாமாவுக்கான தமிழர்களின் கணக்கு மிகத் தெளிவானது: கடந்த ஐந்து மாதங்களில் ஏறக்குறைய 70,000 அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் மாயமாகி விட்டார்கள்.

ஐநாவின் உண்மை மறுப்புப் போக்குக்கு முந்தைய எடுத்துக்காட்டாக, ஐ.நா பேச்சுத் தொடர்பாளர் கோர்டான் வெய்ஸ் இந்த மாதத்தில் இலங்கையின் வடபகுதி பாதுகாப்பு வலயத்தில் நடைபெற்ற 'அன்னையர் தினப் படுகொலை'யைப் பற்றிப் பேசியதாவது:

"வார இறுதியில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டது, இரத்தக்களரி உண்மையாகி விட்டது என்பதைக் காட்டுகிறது." ஆனால் கடந்த வாரம் இலங்கைக்கு வந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி-மூனோ ஐ.நா பேச்சுத் தொடர்பாளர் சாட்சியம் பகர்ந்ததை மறுத்தார். இரத்தக்களரியைக் குறித்துப் பேசுகையில், "நான் அந்த வார்த்தையை குறிப்பிடவே இல்லை என்பதைத் தெளிவாக்க விரும்புகிறேன்" எனக் கூறினார்.

ஸ்ரீலங்கா 'பாதுகாப்பு வலயத்தில்' கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதைக் காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் யு.எஸ்ஸிடம் உள்ளன. "ஐ.நா பல மூலங்களிலிருந்து கசிய விட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களிலிருந்து போர் விலக்குப்பகுதி என அறிவிக்கப்பட்ட பின்னரும் ஸ்ரீலங்கா விமானப்படை அந்தப் பாதுகாப்புப் பகுதியில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களைக் குண்டு வீசி அழித்ததைக் காட்டுகிறது" என இலண்டன் டைம்ஸ் ஆன்லைன் கூறுகிறது.

ஆனால் பான் கி-மூனோ CNN நேர்காணலில் அவர் பொதுமக்களுக்கெதிராகக் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தியதற்கான 'தெளிவான ஆதாரங்கள் எதையும் தான் காணவில்லை' எனக் கூறினார்.

தனது ஸ்ரீலங்கா உபசாரத்திற்கு மரியாதையளிக்கும் விதமாக பதிலளித்து ஐ.நாவின் செயலாளர் நாயகம் ஸ்ரீலங்காவின் கொடூரங்களை நிரூபிக்கும் ஐ.நாவின் சாட்சியங்களையே புறந்தள்ளி தமிழ் மக்களைக் காக்கும் பொறுப்பைத் தட்டிக் கழித்தார்.

பான் கி-மூனின் தலைமை அலுவலரான விஜய் நம்பியார் கடந்த மாதம் வடக்கு இலங்கையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மனிதப் பேரவலம் குறித்தத் தகவலறிய இலங்கைக்கு வருகை தந்தார். அதன்பின்னர் தான் அறிந்து கொண்டவற்றை தனது உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்க மறுத்தார்.

ஒரு 'நடுநிலையாளராக' தான் ஸ்ரீலங்கா அதிபர் மற்றும் அவரது சகோதரர்களிடம் பேசியது பாதுகாப்பு அவைக்கும் தெரியப்படுத்த முடியாத அளவுக்கு "இரகசியத்தன்மை வாய்ந்தது" என்று முரட்டுவாதம் செய்தார்.

இரகசியாக மூடிய அறையில் அறிக்கை அளிக்கவும் முதலில் மறுத்தார், பின்னர் பன்னாட்டு அழுத்தத்திற்குப் பணிந்தார். அவரிடம் இலங்கையில் தமிழர்களின் மனிதப் பேரவலத்தைப் பற்றி சொல்ல ஏதாவது இருந்திருந்தாலும் அதை உலகிற்குச் சொல்ல அவர் தயாராக இல்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆலோசனைச் சபை இலங்கை முன்மொழிந்த "நாடுகள் தங்களது உள்நாட்டுப் பிரச்சனைகளை வெளித்தலையீடு இல்லாமல் கையாளும் உரிமையை மட்டும் வலியுறுத்தி" அரசுப் படைகள் செய்த கொடூரமான பாதகச் செயல்களைக் குறிப்பிடாத தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது என டைம்ஸ் ஆன்லைன் தெரிவித்தது.

அதேநேரத்தில் போர் நடைபெற்ற பகுதிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கும் பன்னாட்டு உதவி நிறுவனங்கள் செல்லும் உரிமை கோரும் சுவிட்சர்லாந்தால் முன்மொழிந்து ஐரோப்பிய நாடுகளால் ஆதரிக்கப்பட்டதீர்மானம் சபையில் தோற்கடிக்கப்பட்டது.

சுவிஸ் தீர்மானம் ஸ்ரீலங்கா செய்திருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் மீது விசாரணை வேண்டும் எனவும் வேண்டியிருந்தது.

StumbleUpon.com Read more...

உலகிலேயே மிக ஆபத்தான நாடு சிறிலங்கா-பத்திரிகையாளர் அமைப்பு அறிவிப்பு

பத்திரிகையாளர்களுக்கு உலகிலேயே மிக ஆபத்தான நாடு சிறிலங்கா: உலக கருத்துரிமை அமைப்பு
பத்திரிகையாளர்கள் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் சர்வ சாதாரணமாக நிகழும் இலங்கைதான் உலகிலேயே பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடாக உள்ளது என்று சர்வதேச கருத்துரிமைச் சுதந்திரச் சமூகம் (IFEX) கண்டனம் செய்துள்ளது.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கூடிய சர்வதேச கருத்துரிமைச் சுதந்திரச் சமூகம் (International Freedom of Expression Community - IFEX) அமைப்பு, இலங்கையில் சமீபத்தில் பத்திரிகையாளர் போத்தல ஜயந்த தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து சிறிலங்கா  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

பன்னாட்டு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட 30 கருத்துச் சுதந்திர அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு "பத்திரிகையாளர்கள் மீதான போரை நிறுத்து" என்று தலைப்பிட்டு அனுப்பியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"சுதந்திரமாக செயல்பட்டு செய்திகளை அளித்துவரும் பத்திரிகையாளர்களை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி, சிறிலங்கா அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அறிக்கை விட்டு நேரடியாக மிரட்டி வருவதைக் கண்டு பத்திரிகைச் சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் காப்பாற்றுவதற்கான சர்வதேச சமூகமும் கவலை கொள்கிறது.

உங்களுடைய அரசின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருவதாக சில நாட்களுக்கு முன் உங்கள் அரசாங்க அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்ட மூத்த பத்திரிகையாளரும், பத்திரிகைச் சங்க நிர்வாகியுமான போத்தல ஜயந்த, ஜூன் 1ஆம் தேதி கடத்தப்பட்டு காட்டு மிராண்டித்தனமாக தாக்கப்பட்டதை சர்வதேச பத்திரிகைக் கூட்டமைப்பும் (IFJ), மற்ற சர்வதேச கருத்துச் சுதந்திர அமைப்புகளும் உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

இரும்புக் கம்பிகள், கட்டைகளையும் கொண்டு ஆறு பேர் ஜயந்தவை கடுமையாக தாக்கியுள்ளனர். அவரை இனி பத்திரிகையாளராக செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவருடைய கையை அடித்து நொருக்கியுள்ளனர்.

பத்திரிகையாளர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு, அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்ட வேண்டாம் என்று உங்களது அரசு அலுவலர்களை தடுத்து நிறுத்துமாறு சிறிலங்கா அரசின் ஜனாதிபதியாக உள்ள தங்களை மிகுந்த மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மக்களின் சமூக, அரசியல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மதிப்போம், பாதுகாப்போம் என்று உறுதி கூறும் சர்வதேச உடன்படிக்கையில் (International Covenant on Civil and Political Rights - ICCPR) கையெழுத்திட்ட நாடுகளில் ஒன்று என்ற அடிப்படையில் பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருடைய கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை காப்பாற்றும் கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர்களை சமூகத்தின் ஒரு அங்கமாகக் கொண்டு காப்பாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்யும் 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி கையெழுத்தான ஜெனிவா உடன்படிக்கையும், 1977ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட உள்நாட்டு ஆயுத மோதலில் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் கூடுதல் நெறிமுறை விதிகளையும் (Additional Protocol on the Protection of Victims of Non-International Armed Conflicts (Protocol II)) ஆகியன சிறிலங்காவை கட்டுப்படுத்துகின்றன.

"அப்பாவி மக்கள், தனி நபர்கள் ஆகிய எவராயிருப்பினும் அவர்கள் தாக்குதல் இலக்குகளாக்கப்படக்கூடாது. மக்களை அச்சுறுத்தக்கூடிய, அவர்களிடையே அச்சத்தை பரப்பம் முதன்மை நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் ஆகியன தடுக்கப்படவேண்டும்" என்று அந்த உடன்படிக்கையின் கூடுதல் விதிமுறை 13 கூறுகிறது.

"பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், அப்பாவி மக்கள் ஆகியோரை போரில் சம்மந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் சர்வதேச அளவில் ஒப்புக் கொண்ட கடமை என்பதன் அடிப்படையில் பாதுகாக்க வேண்டிவர்கள்" என்று வலியுறுத்தி, ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் 2006ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 1738 ஐ சிறிலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இன்றைக்கு பத்திரிகையாளர்களுக்கு மிகவும் அபாயகரமான இடமான இலங்கை உள்ளது. உங்களுடைய அரசில் பத்திரிகையாளர்கள் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் மிகச் சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமானவர்கள் என்று இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படவுமில்லை.

1) ஜனவரி 8ஆம் தேதி கொழும்பில் பட்டப்பகலில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார்.

2) மார்ச் 11ஆம் தேதி சிறிலங்கா எதிர்க்கட்சியின் ஊடக ஆலோசகராக இருந்த தன்மிக கங்காநாத் திசநாயக கடத்திச் செல்லப்பட்டார்.

3) பெப்ரவரி 26ஆம் தேதி கொழும்பில் இருந்து வெளிவரும் சுடரொளி, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் ஆகிய நாளிதழ்களின் ஆசிரியரான என். வித்தியாதரன் வெள்ளை வான் ஆட்களால் கடத்தப்பட்டார். பிறகு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக காட்டப்பட்டது.

4) மே 22ஆம் தேதி தி நேஷன் பத்திரிகையின் பாதுகாப்பு தொடர்பான செய்தியாளர் கெய்த் நோயாஹர் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இப்படி கடத்திய, தாக்கிய நபர்களின் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத சிறிலங்கா அரசின் அதிகாரிகளின் நடத்தை குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம்.

பத்திரிகையாளர்களை துரோகிகள் என்று கண்டனம் செய்து உங்கள் அரசின் மூத்த உறுப்பினர்களும், இராணுவ அதிகாரிகளும் பேசி வருவது குறித்தும் அச்சப்படுகிறோம். பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் மீது நடத்தப்படும் இத்தாக்குதல்களுக்கு அரசும் பொறுப்பு என்றே கருதுகிறோம்.

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், அப்பாவி மக்கள் ஆகியோரை தேச சட்டங்களின்படியும், சர்வதேச சட்டங்களின்படியும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், அதே நேரத்தில் அவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்துமாறும் உங்கள் அரசின் அதிகாரிகளுக்கு நீங்கள் உத்தரவிடவேண்டும்.

ஜனநாயக செயல்பாடுகளை ஆதரிக்கும் கருத்துரிமைச் சுதந்திரம் அடிப்படையானது என்பதை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட செயல்பாடுகள் உங்கள் அரசிற்கு எதிராக இருந்தாலும், எல்லா விதமான கருத்துகளும் வெளியிடும் சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது என்ற அடிப்படையை நீங்கள் ஏற்க வேண்டும் என்றும் கோருகிறோம்.

இதுவரை பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வழக்குத் தொடர்ந்து சீரிய முறையில் புலனாய்வு செய்து அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், அனைத்து மக்களின் மனித உரிமைகள், கருத்துரிமை, ஆகியவற்றை பாதுகாக்கும் அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்கா ஜனாதிபதியாகிய உங்களிடம் பணிவுடன் கோரிக்கை வைக்கின்றோம்" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள அமைப்புகளின் பெயர்கள் :

International Federation of Journalists (IFJ)
Canadian Journalists for Free Expression (CJFE)
Cartoonists Rights Network International (CRNI)
Centre algérien de défense de la liberté de la presse (CALP)
Center for Journalism in Extreme Situations (CJES)
Centro Nacional de Comunicación Social (CENCOS)
Centro de Periodismo y Etica Publica (CEPET)
Center for Media Studies and Peace Building (CEMESP)
Comité por la Libre Expresión (C-Libre)
Foro de Periodismo Argentino, (FOPEA)
Freedom of Expression Institute (FXI)
Globe International
Institute for Reporters' Freedom and Safety (IRFS)
Independent Journalism Center (IJC), Moldova
Instituto Prensa y Sociedad (IPYS)
Journaliste en danger (JED)
Media Foundation for West Africa (MFWA)
Media Institute
Media Institute of Southern Africa (MISA)
Media Watch
Mizzima News
National Union of Somali Journalists (NUSOJ)
Observatorio Latinoamericano para la Libertad de Expresión (OLA)
Observatory for the Freedom of Press, Publishing and Creation in Tunisia
(OLPEC)
Pacific Freedom Forum (PFF)
Pakistan Press Foundation (PPF)
Public Association "Journalists"
Sindicato de Periodistas del Paraguay (SPP)
South East European Network for Professionalization of Media (SEENPM)
Southeast Asian Press Alliance (SEAPA)
World Association of Newspapers (WAN)

சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட இச்செய்தியை மக்கள் சமூக உரிமைக் கழகம் (PUCL) அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ளது.

StumbleUpon.com Read more...

20 ஓவர் உலக கோப்பை அட்டவணை


இன்று (05.06.09) தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் களம் இறங்கும் 12 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.


ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த இரு அணிகளுக்கு தரநிலை அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளில் ஏ1
இந்தியா, ஏ2 வங்காளதேசம் ஆகும். பி' பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து முறையே பி1, பி2 அந்தஸ்தை பெற்றுள்ளன. இதே போல் சி' பிரிவில் ஆஸ்திரேலியா (சி1), இலங்கை (சி2), டி' பிரிவில் நிழூசிலாந்து (டி1), தென்ஆப்பிரிக்கா (டி2) ஆகிய அணிகளுக்கு ஐ.சி.சி. தரநிலை வழங்கி உள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறை லீக்கில் மோதிய பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். தரநிலை பெறாத அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறினால் அந்த பிரிவில் எந்த அணி வெளியேறுகிறதோ அந்த அணியின் தரநிலை வழங்கப்படும்.

மேலும், லீக் சுற்று முடிவில் முதல்நிலை தர அந்தஸ்து பெற்ற ஒரு அணி தனது பிரிவில் 2 வது இடத்தை பிடிக்கும் நிலைமை ஏற்பட்டாலும், தரநிலையில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. உதாரணமாக ஏ' பிரிவில் லீக் முடிவில் வங்காளதேசம் முதலிடமும், இந்தியா 2 வது இடமும் பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் போது இந்தியா ஏ1 அணி என்றே கருதப்படும். அதில் மாற்றம் கிடையாது.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் அணிகள் இ , எப் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் இ பிரிவில் ஏ1, பி2, சி1, டி2 ஆகிய அணிகளும் எப் பிரிவில் ஏ2, பி1, சி2, டி1 ஆகிய அணிகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் மோத வேண்டி வரலாம்.



தேதி மோதல் பிரிவு இடம் இந்திய நேரம்

ஜுன் 5: இங்கிலாந்து ஆலந்து பி லண்டன் இரவு 10 மணி

ஜுன் 6: நிழூசிலாந்து ஸ்காட்லாந்து டி லண்டன் பிற்பகல் 2.30 மணி

ஜுன் 6: ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் சி லண்டன் மாலை 6.30 மணி

ஜுன் 6: வங்காளதேசம் இந்தியா ஏ நாட்டிங்காம் இரவு 10.30 மணி

ஜுன் 7: ஸ்காட்லாந்து தென்ஆப்பிரிக்கா டி லண்டன் மாலை 6 மணி

ஜுன் 7: இங்கிலாந்து பாகிஸ்தான் பி லண்டன் இரவு 10 மணி

ஜுன் 8: வங்காளதேசம் அயர்லாந்து ஏ நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 8: ஆஸ்திரேலியா இலங்கை சி நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 9: ஆலந்து பாகிஸ்தான் பிலண்டன் மாலை 6 மணி

ஜுன் 9: நிழூசிலாந்து தென்ஆப்பிரிக்கா டி லண்டன் இரவு 10 மணி

ஜுன் 10: இலங்கை வெஸ்ட் இண்டீஸ் சி நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 10: இந்தியா அயர்லாந்து ஏ நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 11: டி1 ஏ2 நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 11: பி2 டி2 நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 12: பி2 சி2 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 12: ஏ1 சி1 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 13: சி1 டி2 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 13: டி1 பி1 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 14: ஏ2 சி2 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 14: ஏ1 பி2 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 15: பி2 சி1 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 15: பி1 ஏ2 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 16: டி1 சி2 நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 16: டி2 ஏ1 நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 18: முதலாவது அரைஇறுதி நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 19: 2 வது அரைஇறுதி லண்டன் இரவு 10 மணி

ஜுன் 21 இறுதிப்போட்டி லண்டன் இரவு 7.30 மணி

StumbleUpon.com Read more...

பிரபாகரன்:தொடரும் துரோக வரலாறு

தொடரும் துரோக வரலாறு – அருட்தந்தை ஜெகத்கஸ்பர்

gasparசென்னை சங்கமம் இத்துணை பெரிய வெற்றியைப் பதிவு செய்யுமென நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. காலம் சிலவற்றை எதற்காகவோ கொண்டாடித் தள்ளிவிடுகிறது. அப்படி நிகழ்ந்ததுதான் சென்னை சங்கமம் வெற்றியும். இந்த வெற்றி எங்களுக்கே புரிந்து கொள்ள முடியாத வியப்பென்றால் பலருக்கு அது வயிற்றெரிச்சலைத் தந்திருக்க வாய்ப்பு உண்டு. இலட்சியங்களிலும், உயர்ந்த விழுமியங்களிலும் புடமிடப்பட்டவர் போல் பம்மாத்து காட்டும் எழுத்தாளர் ஞானி சங்கமத்தை கனிமொழியின் விளம்பர விழா என்று எழுதினார். நான் சொல்வது தவறாக இருக்கலாம், ஆனால் சதா விமர்சித்துக் கொண்டே இருப்பது ஒருவகை மனநோய் என்பது என் எண்ணம். இத்தகையோரை நெருங்கி அணுகிப் பார்த்தீர்களென்றால் சிறுமைகள் அவர்களிடத்து நிறைய இருக்கும். ஆதலினால் பொதுவாக இத்தகையோருக்கு நான் பரிந்துரைப்பது கனிவான உளநல உதவி.

பயணங்களின் போது நான் தேடி பணம் கொடுத்து வாங்கிப் படித்து வந்த பத்திரிகை "காலச்சுவடு'. அவர்கள் சென்னை சங்கமத்தை ஜீரணிக்க முடியாமலும் நாலு வார்த்தை பாராட்டாதிருந்தால் தனது நடுநிலை முற்போக்கு முலாம் சேதாரப்பட்டுவிடுமோ என்ற ஜாக்கிரதை உணர்விலும்பட்டிருந்த அவஸ்தை பரிதாபமாய் இருந்தது. போலித்தனங்களும், நாடகத் தன்மைகளும் இன்றி சமூக வாழ்வை கட்டமைத்தல் கடினம்தான். ஆனால் முற்போக்காளர் என தமக்கு முகவரி இட்டுக் கொள்கிறவர்களின் நாடகத்தன்மை அருவருப்பாகிறது.

நக்கீரனைப் போன்ற இன்னொரு பத்திரிகை எனக்கு முகப்பு அட்டை மரியாதை தந்தது. ""அரசின் ஆசிபெற்ற மர்ம மனிதர்" என்பது பெருந்தலைப்பு. ""யார் இந்த ஜெகத் கஸ்பர்?" என்பது துணைக் கேள்வி. சர்ச்சைக்குரிய ஒருவராக சமூக-அரசியற் களத்தில் ஆக்குவதன் மூலம் இயங்கும் ஆற்றலை மட்டுப்படுத்தலாம் என்ற நுட்பமான மேலாதிக்க அரசியல் அதில் இருந்தது. பொழுதுபோக்கு வியாபாரப் பத்திரிகைகளை பொதுவாக நான் விமர்சித்து மெனக்கெடுவதில்லை, அவசியமுமில்லை. ஆனால், அப்பத்திரிகைகள் தலையங்கம் எழுதி ஊருக்கு உபதேசம் செய்யும்போதுதான் பற்றிக் கொண்டு வரும். உபதேசிப்பதற்கு சில அடிப்படை யோக்கியதைகள் வேண்டும் என்றே நினைக்கிறேன். பொதுவாழ்வில் இருப்போரது தனிவாழ்வை சந்திக்குக் கொண்டு வந்து வியாபாரம் நடத்துகிற பத்திரிகை முதலாளிகளின்

தனிவாழ்வில் இருக்கிற வக்கிரங்களை அவர்தம் வாசகர்கள் அறிந்தார்க ளென்றால் ஆடிப் போவார் கள். அந்த வேலையை செய்வதற்கென்றே தனியாக ஒரு பத்திரிகை தொடங்க லாமா என்று கூட நான் யோசித்ததுண்டு.

ஜெயா தொலைக் காட்சி ஏதோ "இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வரும்' உலகப் புகழ்பெற்ற த்ரில்லர் திரைப் பட விளம்பரம் போல் "சென் னை சங்கம திடுக்கிடும் மர்மங்களுக்கு' இடைவிடா முன் விளம்பரம் செய்து கொண்டிருந்தது. முன் விளம்பரத்தில் எனது முகத்தை நரகாசுரன் போல் கிராபிக்ஸில் வடிவமைத்திருந் ததை நான் நன்றாகவே ரசித்தேன்.

"சென்னை சங்கமம் ஊடாக பெரும் பணம் வந்தது. வந்த அப்பணம் விடுதலைப்புலிகளுக்குச் சென்றது என்பதுதான்' இவர்களது பிரதான கதை. துணைக் கதை அமெரிக்காவில் புலிகள் இயக்கத் தடையை நீக்க லஞ்சம் கொடுத்ததாய் கைது செய்யப்பட்ட நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் எனக்கு நண்பர் என்பது. உண்மையில் துணைக் கதை உண்மைதான். நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் நான் பார்த்த அறிவாளிகளில் மறக்க முடியாதவர். ஒரு நேரத்தில் நான்கு விஷயங் களை சிதறாமல் சிந்திக்கும் அபார அறிவாற்றல் கொண்டவர். அமெரிக்காவின் அணு ஆயுத திட்டமொன் றில் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். 1970-களில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக் கிய தமிழ் அக்னி குஞ்சுகளில் ஒருவர். சேலம் சேந்த மங்கலத்துக்காரர். அற்புதமான மனிதர். எனக்கு நண்பர்.

தந்தை பெரியாரின் கொள்கைபால் ஆழ்ந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டவர். ஒரு விதவையை மணம் புரிந்தவர், அதுவும் கலப்புத் திருமணமாய் ஜாதி மீறல் செய்தவர். அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க அவர் உழைத்து வந்தது உண்மை. அதிலொன்றும் தவறேதும் இல்லை. அது சட்டரீதியான செயற்பாடு. ஆனால் அவரை ஏமாற்றி, வஞ்சக வலை விரித்து, 5000 டாலர்கள் ஒரு அதிகாரிக்கு "ஊக்கப்பணம்' கொடுக்க வைத்து சிக்க வைத்ததில் போதைப்பொருள் கடத்தும் கும்பல் தலைவன் சங்கரசே என்ற தமிழனும், ரஜினிகாந்தின் "பாஷா' திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு தங்கையாக வரும் ஒரு கேரக்டரும் உண்டு என்பதை உலகறியாது.

ஜெயா தொலைக்காட்சியில் அந்நிகழ்ச்சி நிஜ மாகவே என்னை மனவருத்தப்படுத்தவில்லை. ஏனென்றால், முன்பு நான் குறிப்பிட்டது போலவே தமிழ் ஈழ ஆதரவு விஷயத்தில் குற்றம் சாட்டப்படுவது பெருமையே என்பது ஒருபுறமிருக்க, பொய் வேகமாகப் பரவினாலும் உண்மை ஒருநாள் உருண்டு, புரண்டு வந்து சேரும் என்ற எனது நம்பிக்கையும் முக்கிய கார ணம். ஆனால் எது வலித்ததென்றால் அந்த நிகழ்ச்சி யை ஆக்கிய பலரில் சௌபா என்ற சௌந்தர பாண்டி முக்கியமானவராக இருந்தார், பணத்திற்காக அதைச் செய்தார் என்று நான் கேள்விப்பட்டபோது உண்மையி லேயே மனது வலித்தது. ஏனென்றால் எனது மாணவப் பருவத்தில் ஏழை மனிதர்களுக்காய் அவர் எழுதிய கட்டுரைகள் படித்து நம்பிக்கை பெற்றவன் நான். அந்த நம்பிக்கை தகர்ந்தபோது வலித் தது. அதுவும் பணத்திற் காகச் செய்தார் என்றபோது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நமது இனத்தின் போர் வாளாய் நிற் கும் ஆற்றல் கொண்ட தோழர் கள், சில்லறை விஷயங்களுக் காய் சோரம் போவது காண எழும் வேதனை அனுபவித்தவர் களுக்கு மட்டுமே தெரியும். வெளியே ஈழத்தமிழர் களின் துயரத்தை வியாபாரமாக்கிக் கொண்டு இலங்கை தூதரகத் தின் மது விருந்துகளுக்கு மலிவாய் துணை போன பத்திரிகை -ஊடக நண்பர்கள் ஒவ்வொருவரையும் நான் அறிவேன். அவர்கள் மீதான கோபம் தீர்ந்து விட்டது. ஆனால் வலி தொடர்கிறது. துரோக வரலாற்றிலிருந்து நான் சார்ந்த இனத்திற்கு இறைவா, விடிவே இல்லையா என்ற கேள்வியில் வருகிற வலி அது.

கருணா என இன்று நாம் அறிகிற கருணம்மான் விடுதலைப் போராட்டத்தை விட்டு விலகியபோதும் இதே உணர்வுதான் ஏற்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது உடல் என சொல்லப்பட்டதை அடையாளம் காட்டவென இலங்கை ராணுவம் கருணாவை முல்லைத்தீவுக்கு கடந்த மே 17-ம் தேதி கூட்டிச் சென்றது. முல்லைத் தீவு மண்ணில் தமிழின அழித்தலின் குரூர சாட்சியங்களுக்கு நடுவில் நிறுத்தப்பட்டிருந்த கருணம்மானின் முகத்தில் படர்ந்திருந்த வேதனை இறுக்கத்தை தொலைக்காட்சி வழி நான் பார்க்கத் தவறவில்லை. எந்த இனத்தின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து தலைவன் போற்றிய தளபதியாய் உயர்ந்தாரோ அந்த இனம் தோற்கடிக் கப்பட்டு, பல்லாயிரம் சடலங்களால் பிணக்காடா கிக் கிடந்த அவலத்தின் சாட்சியாய் நிற்க வேண் டிய சாபத்தை எண்ணி கருணம்மான் உள்ளுக்குள் அழாமல் இருந்திருக்க முடியாது. ஒரு காலத்தில் வன்னிக் காடுகளில் வளரும் போராளியாய் தன் தலைவன் பிரபாகரன் உண்டு மிச்சம் வைத்த உணவை உண்ணும் பாக்கியத்திற்காய் தவமிருந்த நாட்கள் கருணம்மானின் மனசாட்சியை அக்கணம் குத்திக் கிழித்து ரணப்படுத்தியிருக்கும்.

2002-ம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நான் நேர்கண்ட கையோடு வேறு பல மூத்த தளபதிகளையும் நேர்காண முயன்றேன். அவர்களில் முக்கியமானவர் கருணம்மான். மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதியிலுள்ள அவ ரது முகாமில் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மியன்மார் என்ற பர்மா, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள் உலகின் பணக்கார நாடுகளாகவோ, பெரிய நாடுகளாகவோ புகழ்பெறவில்லைதான். ஆனால் இந்நாடுகளுக்குப் பயணம் செய்தீர்களென்றால் பொறாமை யாக இருக்கும். அந்த அளவுக்கு எங்கு நோக்கினும் காடுகள், ஆறுகள், நீர் நிலைகள்… ""மீன் பாடும் தேனாடு" என தமிழர்கள் கொண்டாடும் மட்டக்களப்பு பிராந்தியமும் அப்படித்தான். எங்கு பார்த்தாலும் ஆறுகள், நீர்நிலைகள், காடு, கடல் என செழுமை சிறந்த பிராந்தியம். எளிமையான மக்கள், அவர்தம் விருந்தோம்பல் காவியத்தன்மை கொண்டது. எங்கள் வேரித்தாஸ் வானொலிக்கு மட்டக்களப்பு நகரில் கள அலுவலகம் இருந்தது. உயிரைப் பணயம் வைத்து தொடர்பாளர்களாய் கடமையாற்றிய இருவரை உயிருள்ளவரை நான் மறக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு கருதி அவர்கள் பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை.

கருணம்மானை பேட்டி காண நான் விரும்பி யமைக்கு பலவேறு காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணம் முக்கியமானது. ஓர் அரசியல்- ராணுவ ஆய்வாளன் என்ற வகையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்த மகத்தான ராணுவ வெற்றியானது என்னைப் பொறுத்தவரை ""ஜெயசிகுறு எதிர்சமர் தான். அதிபர் சந்திரிகா அரசு யாழ்ப்பாணத்துக்கு வவுனியாவிலிருந்து தரைவழிப்பாதை திறக்க முயன்ற ""ஜெயசிகுறு" எனப் பெயரிடப்பட்ட யுத்தம் வென்றிருக்குமேயானால் இன்று முல்லைத்தீவில் நடந்தது 12 ஆண்டுகளுக்கு முன்னரேயே நடந்திருக்க வாய்ப்புண்டு. அந்த ""ஜெயசிகுறு" ராணுவப் பெருநகர்வை எதிர்கொண்டு முறியடித்த வரலாற்றில் முக்கிய பங்காற்றியவர்கள் கருணம்மானும் அவரது படையாளிகளும். உள்ளபடியே வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ""போராட்ட வரலாற்றில் மகத்தான ராணுவ வெற்றி எது?" என நான் கேட்டபோது அவரும் ""ஜெயசிகுறு எதிர்சமர்" என பதில் தர, நான் உளம் சிலிர்த்ததும் உண்மை. எனவே ஜெயசிகுறு எதிர்சமரின் நாயகன் கருணம்மானை நான் நேர்காண விரும்பியதில் வியப்பில்லை.

முப்பது ஆண்டு கால வீர வரலாற்றின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கருணம்மாவின் பிரிவு என்பது யாவரும் அறிந்ததே. கிழக்கின் போர் அணிகள் இல்லாது போனது பேரிழப்பென்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராணுவ, பூகோள, அனைத்துலக செயல்பாடு ரகசியங்களை இலங்கை அரசுக்கு அவர் தந்துதவியது கடந்த ஈராண்டு கால போரின் போக்கை முக்கியமாகத் தீர்மானித்தது. உண்மையில் கருணம்மான் இயக்கத்திலிருந்து பிரிந்துவிட்ட செய்தி கேட்ட அன்று மனதில் அவநம்பிக்கை படர்ந்தது, போராட்டம் பெருத்த பின்னடைவு காணும் என உள்மனது சொன்னது. இன்று தன் எஜமானர்களை திருப்தி செய்ய வேண்டி கருணா பிரபாகரன் அவர்கள்மீது பல விமர்சனங்களை வைக்கலாம். ஆனால் பிரபாகரன் நெஞ்சார நேசித்த போராளிகளில் ஒருவர் கருணம்மான் என்பதே உண்மை. ஏனென்றால், திறமையாளர்களை பிரபாகரனுக்குப் பிடிக்கும். கருணம்மான் வியத்தகு ஆளுமைத்திறன் கொண்ட ஒரு தளபதி. படையணிகளை கட்டி யெழுப்புவதில் மட்டுமல்ல, மக்களோடு நெருங்கி உறவாடி ஆதரவுத் தளத்தை விரிவாக்கு வதிலும் கெட்டிக்காரன். விடுதலைப் புலிகள் இயக்கம் முதலில் பயன்படுத்திய எறிகணை எந்திரம் (Artillery Machine) கருணாவால் இலங்கை ராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட் டது. அந்த எறிகணை எந்திரத்தை வன்னியில் நின்ற தன் தலைவனிடம் ஒப்படைப்பதற்காக சுமார் 100 கிலோமீட்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பாதை அமைத்துக் கொண்டு சென்று சேர்த்தவர் கருணா. அந்த அளவுக்கு துடிப்பும் செயல்வேகமும் மதிநுட்பமும் கொண்ட கருணா விடுதலைப் போராட்டத்தின் அழிவுக்கு தானும் ஒரு காரணம் ஆனது எப்படி?

அடுத்த வாரம்.

(நினைவுகள் சுழலும்)

நன்றி நக்கீரன்

StumbleUpon.com Read more...

அமெரிக்காவுடன் உறவை முறிக்க வேண்டும்; முஸ்லிம் நாடுகளுக்கு பின்லேடன் எச்சரிக்கை

 

துபாய், ஜுன்.5-

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஒபாமா, முதன் முறையாக முஸ்லிம் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். எகிப்து நாட்டுக்கு நேற்று சென்ற அவர், `அமெரிக்க வரலாற்றில் முஸ்லிம்களுக்கு பங்கு உண்டு. முஸ்லிம்களுக்கு அமெரிக்கா எதிரானது அல்ல. அமெரிக்காவுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கு இடையே புதிய தொடக்கம் ஏற்பட வேண்டும்' என்று பேசினார்.
மத நம்பிக்கையற்றவர்கள் மற்றும் அவர்களுடைய ஏஜெண்டுகளுக்கு (மேற்கத்திய நாடுகள்) எதிரான நீண்ட கால போர் தொடருகிறது. மதநம்பிக்கையற்ற உலகத்துக்கு எதிரான போரில் உங்களை தியாகம் செய்ய வாருங்கள். இஸ்லாத்தின் வெளிச்சத்தில் நாம் வாழ வேண்டும் அல்லது நம் கவுரவமாக இறக்க வேண்டும். முஸ்லிம்கள் மத்தியில் வெறுப்பு விதைகளை ஒபாமா விதைத்து வருகிறார்.

இவ்வாறு அந்த கேசட்டில் பின்லேடன் தெரிவித்துள்ளான்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP