சமீபத்திய பதிவுகள்

புலிகளின் குரல் வானொலியின் சாப்ட்வேர்

>> Saturday, July 18, 2009

புலிகளின் குரல் வானொலியின் கணிணி பிளேயர் மென்பொருள் தரவிறக்க கீழே உள்ள புலிச்சின்னத்தின் மேல் அழுத்தவும்.



StumbleUpon.com Read more...

புதுப்பொலிவுடன் புலிகளின் குரல்

StumbleUpon.com Read more...

'சீனத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த கல் எறிவதாக சொன்னவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?'

     
  
 

altசீன- சிங்கள உறவு வளருவதால் நாம் வருத்தம் கொள்ளவில்லை. ஆனால், சிங்களத்தில் சீனத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தத்தான் ஈழத்திற்கு எதிராக நாங்களும் கல் எறிகிறோம் என்று சொன்னவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என பத்திரிக்கையாளர் சோலை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

குமுதம் ரிப்போட்டர் இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை..

ஈழம் இன்றைக்கு மயான பூமியாகக் காட்சி அளிக்கிறது. அந்த கோரக் காட்சிகளைக் காண ஐ.நா. அமைப்புக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்இ சர்வதேசப் பத்திரிகையாளர்கள் எவருமே அனுமதிக்கப்படவில்லை. அங்கே ஆந்தைகளும் கோட்டான்களும் கூடுகட்டுகின்றன.

அந்த செவிவழிச் செய்திகளை வெளியிட்ட சிங்களப் பத்திரிகையாளர்கள்கூட சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களில் பலர் இன்றைக்கும் விலை வைத்து தேடப்படுகிறார்கள்.

குண்டுவீச்சுக் கொடுமைகளால் எப்படி முல்லைத்தீவு நகரமே இடிபாடுகளாகக் காட்சி அளிக்கிறது என்பதற்குச் சாட்சியாக ஒரே ஒரு புகைப்படம் மட்டும் வெளி உலகை எட்டிப் பார்த்தது. அந்தப் படமும் வானில் பறந்து போகும்போது எடுக்கப்பட்ட மரண சாட்சியாகும்.

கூண்டுக்குள் சிக்கிய சிறைப் பறவைகளாக லட்சோப லட்சம் ஈழ மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இரவு நேரங்களில் சிங்கள ராணுவக் கழுகுகள் அங்கே சுதந்திரமாகப் பறந்து வருகின்றன. இளம் ஈழத்து தமிழச்சிகளைக் கொத்திக் கொண்டு போகின்றன. அவர்களில் திரும்பாமலே காணாமல் போனவர்களும் உண்டு. ரத்தத்துளிகளோடு நடைப் பிணமாகத் திரும்பியவர்களும் உண்டு.

சொந்த வீடு வாசல்கள் இருந்தும் முகாம்களில் முடக்கப்பட்ட இளைஞர்களைத் தரம் பிரிக்கிறார்கள். இவர்கள் விடுதலைப் புலிகளோ என்று சந்தேகம் எழுந்தால் போதும். அடுத்த சில தினங்களில் அவர்கள் காணாமல் போகிறார்கள்.

ஈழத் தமிழர்களை முன்னர் சுட்டுப் புதைத்தனர். இப்போது புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டி எடுத்து இரவோடு இரவாக எரியூட்டி சாம்பலாக்குகிறார்கள். இனி அவர்களெல்லாம் காணாமல் போனவர்களின் பட்டியலில் கணக்குச் சொல்லப்படுவார்கள்.

இப்படிப் பல்வேறு வழிகளிலும் இன்றைக்கு ஈழத்தமிழ் இனம் அழிக்கப்படலாம். ஆனால், அந்த ஈழம் சபிக்கப்பட்ட பூமி அல்ல. ஒரு நாள் வேழமாக எழும். இட்லர் விரும்பியபடி யூத இனம் அழிந்தா விட்டது? இல்லை.

ஓர் இனத்தை அழிக்க சிங்கள இனவாதம் தொடுத்த போர் ஓய்ந்து விட்டது. ஆனால், அதன் அவலங்களும் ஓலங்களும் சர்வதேச சமுதாயத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

என்ன ஆச்சரியம்? இந்திய அரசின் இதயத்தில் கூட ஈரம் சுரந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்ற ஈழத் தமிழர்களை உடனடியாக அவர்களுடைய இல்லங்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய அரசு கோரியிருக்கிறது. நல்லது.

இன்றைக்கு முகாம்களில் கால்நடைகளைப் போல் அடைக்கப்பட்ட மக்களில் 24,000 பேருக்கு அம்மை கண்டிருக்கிறது. ஐயாயிரம் பேருக்கு மஞ்சள் காமாலை வந்திருக்கிறது. போதிய மருத்துவ வசதிகள் இல்லை. நோய்களாலும் எஞ்சிய தமிழன் இறப்பைத் தழுவட்டும் என்று சிங்கள இனவாதம் எண்ணக் கூடும்.

கண்ணிவெடிகளை அகற்றிய பின்னர்தான் சூழ்நிலைக் கைதிகளை சொந்த ஊர்களுக்கு அனுப்ப முடியும் என்று சிங்கள அரசு சொல்கிறது. அந்தக் கண்ணிவெடிகளை ஒரே வாரத்தில் அகற்றி விட முடியும்.

ஈழத்தமிழ் உணர்வுள்ளவனுக்கு எதிர்காலம் இல்லை என்று முகாம்களிலேயே தீர்மானிக்கிறார்கள். அந்தச் சித்திரபுத்திரன் வேலை நடைபெறுகிறது. எனவே, முகாம்களில் அடைபட்ட தமிழர்கள் சொந்த மண்ணிற்குத் திரும்ப வேண்டும். அழுவதற்குக் கூட அனுமதியில்லாத அவர்கள் பிறந்த பூமியைப் பார்த்தாவது பெருமூச்சு விடவேண்டும். ஏதோ ஈழப் பரப்பைப் பரம்படித்து செம்மைப்படுத்தப் போவதாக இந்திய அரசு கூறுகிறது. அதனை அனுபவிக்க எஞ்சிய தமிழர்களாவது இல்லம் திரும்ப வேண்டாமா?

ஈழத்தை இப்போதைக்கு வெற்றி கொள்ள சீனத்தையும் பாகிஸ்தானையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட சிங்கள அரசு, இந்தியாவையும் பயன்படுத்திக் கொண்டது. ஆனால், சோதனையான நேரங்களில் இந்தியாவை நோக்கித்தான் குரல் கொடுக்க முடியும். திருமதி பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் சிங்கள அரசின் சிம்மாசனம் ஆட்டம் கண்டது. அப்போதும் இந்தியாவின் உதவியைத்தான் நாடியது.

ஆனால், இனி இந்தியாவின் தோழமைக்கு சிங்கள அரசு எந்த அளவிற்கு நேசக்கரம் நீட்டும் என்பதனை இனிதான் காணப் போகிறோம். ஈழத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற சிங்கள ராணுவம் உடனடியாகத் தங்கள் முகாம்களுக்குத் திரும்ப வேண்டும் என்று இந்திய அரசு கோரியிருக்கிறது.

அந்தக் காரியம் நடைபெற்றாலே ஈழ மக்கள் ஓரளவிற்கு நிம்மதி பெறுவார்கள். ஏனெனில், இன்றைக்கு ஈழம் முழுக்க புற்றுநோய்க் கட்டிகளாக ராணுவ முகாம்கள் முளைத்திருக்கின்றன. அதுமட்டுமல்ல, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே சிவாலயங்களையும் தேவாலயங்களையும் சிங்கள அரசு ராணுவ முகாம்களாக மாற்றி விட்டது. இன்றுவரை அந்தத் தெய்வீகத் திருத்தலங்கள் குருதிச் சேற்றில்தான் குளித்துக் கொண்டிருக்கின்றன.

முகாம்களில் அடைபட்டிருக்கின்ற ஈழத் தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டும். சிங்கள ராணுவம் தமது முகாம்களுக்குத் திரும்ப வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கைகளை ஏற்றாலே சிங்கள அரசு இந்திய நட்புறவு பற்றி சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது என்று அர்த்தம்.

ஈழப் பிரதேசத்தில் இன்றுவரை இயல்பு நிலை திரும்பாததற்கு என்ன காரணம்? சிங்கள ராணுவத்தினரின் தங்குதடையற்ற நடமாட்டம்தான். அவர்களை எவராலும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனை சிங்கள அரசு அனுமதிக்கிறது. காரணம், தமிழனுக்கு என்று இனி தனி அடையாளம் இருக்கக் கூடாது என்று கருதுகிறது.

ஈழம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பைச் சந்தித்து விட்டது. இடிந்து போன வீடுகளையும் எரிந்து போன வனங்களையும்தான் காண முடிகிறது. எனவே, இந்தப் பிரதேசத்தில் கூட இனி ராணுவ நடமாட்டம் தேவைதானா?

கண்ணிவெடிகளைக் காரணம் காட்டினால், அதனை அகற்றும் பணியை ஒரே வாரத்தில் நாங்களே செய்து முடிக்க முடியும் என்றும் இந்தியா தெரிவித்திருப்பதாக அறிகிறோம்.

இலங்கை அதிபரின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் பாசில் ராஜபக்சவும், ராணுவத்துறை அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவும் அண்மையில் டெல்லி வந்தனர். உண்மையில் அவர்களை அழைத்ததே இந்திய அரசுதான் என்று எண்ணத் தோன்றுகிறது.

அவர்கள் இருவருமே இலங்கை அதிபரின் உடன் பிறப்புக்கள் மட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்தின் அச்சாணியாகச் செயல்படுகிறவர்கள். எனவே, அவர்களை அழைத்து அடுத்து ஈழத்தில் என்ன நடைபெற வேண்டும் என்ற தமது நிலையை இந்தியா தெரிவித்திருக்கிறது. அதனை எச்சரிக்கையாகவும் கூறியிருக்கலாம். இந்தப் பணிகளில் உங்களுக்கு உதவத் தயார் என்று வேண்டுகோளாகவும் தெரிவித்திருக்கலாம்.

ஈழத்தின் மறுசீரமைப்பிற்கு எல்லா வழிகளிலும் இந்தியா உதவி செய்யும். அதே சமயத்தில் கல்வி, வேலை வாய்ப்பு உள்பட அனைத்து உரிமைகளும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சிங்களப் பிரதிநிதிகளிடம் இந்திய அரசு எடுத்துக் கூறியிருக்கிறது.

ஈழமே தங்கள் தாயகம் என்று போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம், இப்போதைக்கு அழிக்கப்பட்டதாகத் தோன்றலாம். ஆனால், என்னென்ன காரணங்களுக்காக ஈழ விடுதலை இயக்கம் பிறந்ததோ அந்தக் காரணங்கள் அனைத்தும் பசுமையாக இருக்கின்றன என்பதனையும் சிங்கள அதிபரின் தூதர்களிடம் இந்தியா எடுத்துக் கூறியிருப்பதாகவும் அறிகிறோம்.

அந்தக் காரணங்களுக்கு சிங்கள இனவாத அரசு தீர்வு காண வேண்டும். ஆனால், அத்தகைய தீர்வுகளை சிங்கள இனவெறியர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக்குறிதான்.

"கச்சத்தீவில் ராணுவ தளம் அமைக்க மாட்டோம். சீனம் அங்கே ராணுவ தளம் அமைக்கவும் அனுமதிக்கமாட்டோம்" என்று சிங்கள அதிபரின் தூதர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான உரிமைகள் காக்கப்படவேண்டும். அதற்கான உறுதிமொழியை சிங்கள அரசு இதுவரை தரவில்லை.

எல்லை கடந்து வருகின்ற சிங்கள மீனவர்களை இந்தியக் கடற்படையினர் இதுவரை சுட்டுப் பொசுக்கியதில்லை. அவர்களுடைய வலைகளை அறுத்தெறிந்ததில்லை. அவர்கள் பிடித்த மீன்களை அள்ளிக் கொண்டதில்லை. சிறைகளில் சித்திரவதை செய்ததில்லை.

ஆனால், விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி இதுவரை சிங்கள ராணுவம் தமிழக மீனவர்களை வேட்டையாடி வந்தது. இனி புலிகள் என்று காரணம் கூற முடியாது. ஆனால், அத்தகைய கொடுமைகள் இன்றுவரை நீடிக்கவே செய்கின்றன.

இன்னும் ஆறுமாத காலத்தில் ஈழத்தில் வசந்தம் பிறக்கும். முல்லைத்தீவு மணம் பரப்பும் என்று சிங்கள அதிபரின் தூதர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள். ஆறு மாத காலம் என்பது காலைப் பனித்துளியாய் விரைவில் கரைந்து போகும். அதற்குள் நடக்கும் அதிசயத்தைக் காண நாமும் தயாராக இருப்போம்.

ஆனால், இந்தக் கட்டுரையை முடிக்கும்போது மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் உணர்ச்சிக்குரல் கேட்கிறது. வரவேற்கிறோம்.

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் மறுவாழ்விற்கு சிங்கள அரசு இதுவரை எந்தப் பணியும் தொடங்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். சிங்கள அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாகத் தெரியவில்லை என்றும் அதிருப்தியை அறிவித்திருக்கிறார். செஞ்சிலுவைச் சங்கம் போன்ற உலகத் தொண்டு நிறுவனங்கள் ஈழப் பகுதியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்கிறார். ஈழத்தமிழர்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ள முகாம்களை சர்வதேசப் பத்திரிகையாளர்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்கிறார்.

ஈழத்தமிழர்களின் மறுவாழ்விற்கு உதவியாக இந்திய அரசு 500 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது என்றாலும், ஈழத்தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களையே இலங்கை அரசு வகுக்கவில்லை என்கிறார்.

இதனை இந்திய அரசின் முதல் குற்றப்பத்திரிகையாகக் கருதலாமா? சிங்கள அரசு திசை மாறுகிறது என்பதனைத்தான் சிதம்பரத்தின் அடுக்கடுக்கான அறிவிப்புக்கள் உணர்த்துவதாக எடுத்துக் கொள்ளலாமா?

இந்திய அரசு தெரிவித்த எந்த யோசனையையும் இனி சிங்கள அரசு செயல்படுத்தாது. அதற்கு மாறாக, ஈழ மக்களின் சொந்த பூமியை சீனத்திற்குச் சீதனமாகக் கொடுக்கப் போகிறது.

ஆம். முல்லைத்தீவுப் பகுதியின் நிலங்களை முழுமையாகக் கைப்பற்றி, அதனை சீனத்திற்கு அளிக்கிறது. அங்கே பொருளாதார மண்டலங்களை சீனம் அமைக்குமாம்.

அங்கு மட்டுமல்ல திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய ஈழப்பகுதிகளிலும் தமிழர்கள் நிலங்களைக் கைப்பற்றி பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுமாம்.

ஆனால், சிங்களவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களில் பொருளாதார மண்டலங்கள் அமையாதாம். இனி ஈழத்தமிழன் சொந்த பூமிக்காக சிங்கள அரசிடம் பிச்சை எடுக்க வேண்டும். இல்லையேல், இன்னொரு போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். சிங்கள அரசும் இன்னும் பௌத்த குண்டுகளை பத்திரமாக வைத்திருக்கிறது.

சென்ற வாரத்தில் வந்த சில செய்திகளை மட்டும் டெல்லிக்கு நினைவுபடுத்துகிறோம்.

சிங்களப் பரப்பில் சீனம் புதிய துறைமுகம் கட்டித் தருகிறது. மின் உற்பத்தியைப் பெருக்க சீனத்தோடு புதிதாக உடன்பாடு கண்டிருக்கிறது. சீன முதலீடுகளை வெகுவாகக் கவருவதற்கு சிங்கள வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங் சென்று இருக்கிறார். இரு நாடுகளின் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வழி வகைகள் காணப்படும்.

பெருமளவில் முதலீடு செய்ய வருகின்ற சீனக் கம்பெனிகள் குறைந்தபட்சம் 33 ஆண்டுகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

இப்படி சீன- சிங்கள உறவு வளருவதால் நாம் வருத்தம் கொள்ளவில்லை. ஆனால், சிங்களத்தில் சீனத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தத்தான் ஈழத்திற்கு எதிராக நாங்களும் கல்லெறிகிறோம் என்று சொன்னவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

StumbleUpon.com Read more...

ஜூனியர் விகடன் எழுது பரபரப்பு மர்ம கதை :யாரும் சிரிக்காதீங்க

 

சிங்களப் படையினரின் கொத்துக் குண்டுகள், தமிழர்களின் மரண ஓலம் இவற்றுக்கிடையே ஈழப் போரின் இறுதி நாள் வரை அங்கேயே இருந்து, நடந்ததை அறிந்து அவதானித்து வைத்திருக்கும் ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு... சில நாட்களுக்கு முன் வன்னி செட்டிக்குளம் வதை முகாமிலிருந்து படகு மூலம் தப்பித்து, நடுக்கடலில் தத்தளித்து, தமிழகக் கரையேறியிருக்கிறார்..!

 

ஈழ நிலைமை என்ன? பிரபாகரனைப் பற்றிய மர்மங்களுக்கு விடை என்ன? இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் இப்போதைய ஒரே சாட்சி திருநா வுக்கரசுதான். மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்ட திருநாவுக்கரசை நிறைய சிரமங்களுக்குப் பிறகு சந்தித்தோம். நம் பலத்த வற்புறுத்தலுக்குப் பிறகே பேசத் தொடங்கினார்.

''ஈழத்தின் கடைசிக்கட்ட நிலைமை எப்படி இருந்தது?''

''ராணுவம் அனைத்துப் புறமும் சூழ்ந்துவிட்டது. இனி தப்பிக்க முடியாது என்கிற

எண்ணம் மக்களிடத்திலும் போராளிகளிடத்திலும் உருவாகி விட்டது. பங்கருக்குள் பதுங்கி இருந்த மக்கள், ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிப் போகத் தொடங்கி விட்டார்கள். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாததால், போராளிகளும் திக்கற்று நின்றார்கள். திரும்பிய பக்கமெல்லாம் கதறல்... பிணங்கள் சிதறிக் கிடந்த பாதைகளில் மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய மனதிலுமே இதுதான் இறுதி நிமிடம் என்கிற பதைபதைப்பு... இறப்பைக் காட்டிலும் இறக்கப் போகிறோமே என்கிற பதற்றம் ரொம்பக் கொடுமையானது... வார்த்தைகளால் சொன்னால் புரியாது, அனுபவித்தால்தான் தெரியும்...''

''இறுதி நெருக்கடிகளை புலிகள் எப்படி சமாளிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்?''

''புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம். அதனால் போரின் இறுதி நிலை கொடூர மானதாகவும், தாங்க இயலாததாகவும் இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். புலிப்படைத் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் இருந்த அசாத்திய நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் தகர்ந்து போனது. ஆரம்பத்தில்... கிளிநொச்சியைத் தாண்டி ராணுவத்தால் முன்னேற முடியாது என்று புலிகள் உறுதியாக நம்பி இருந்தனர். ஆனால், ராணுவம் அசுர பலத்தால் அடுத்தடுத்த நிலப் பகுதிகளை வீழ்த்தத் தொடங்கி விட்டது. அதன்பிறகு மக்களுக்கும் 'இனி ஜெயிக்க முடியுமா' என்கிற தயக்கமும் பயமும் ஏற்பட்டது. ஆனாலும், பிரபாகரன் கொஞ்சமும் தளராமல் உறுதியோடு போரை முன்னெடுத்து நடத்துவதில் தீவிரமாக இருந்தார். எத்தகைய சூழலிலும் தோல்வி குறித்த அச்சம் அவரிடத்தில் இல்லை. ஆனால், இறுதி நேரம் முழு நம்பிக்கையும் தகர்ந்து போகிற அளவுக்குக் கொடூரமானதாக மாறி விட்டது.

பிரபாகரனை குறிவைத்துத் தாக்குதல் நடப்பது தெரிந்து, 600 புலிகள் அவரை அனந்தபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நான்கு புறமும் ராணுவம் சூழ்ந்துகொண்டு தாக்குதலை நடத்தியது. அப்போது பிரபாகரனுடன் அசாத்திய திறமை படைத்த கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட போராளிகளும் அடுத்தநிலை தளபதிகளும் பாதுகாத்து நின்றனர். அந்த இலக்கை குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்த, அதில் புலிகளுக்கு நினைத்துப்பார்க்க முடியாத பேரிழப்பு ஏற்பட்டது. பிரபாகரனின் அதிமுக்கிய தளபதிகள் அதில் கொல்லப் பட்டார்கள். ஆனாலும், பானு உள்ளிட்ட முக்கிய தளபதிகளால் அந்தத் தாக்குதலில் இருந்து நூலிழையில் காப்பாற்றப்பட்டார் பிரபாகரன்!''

''கடைசி நேரத்தில் புலிகள் சமாதானத் துக்குத் தயாரானதாகவும், அதனை சிங்கள ராணுவம் சட்டை செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறதே?''

''ராணுவத்தின் அடுத்தடுத்த கொடும் தாக்குதல்களை சமாளிக்க முடியாது என்பதை, புலிகளின் முக்கியத் தளபதிகளே தெரிந்து வைத்திருந்தார்கள். இதையடுத்து, அரசியல் பிரிவின் பொறுப்பாளரான பா.நடேசன், சமாதானப் பிரிவு பொறுப்பாளரான புலித்தேவன் உள்ளிட்டவர்கள் பிரபாகரனிடம் பேசினார்கள். ஆனால், பிரபாகரன் அமெரிக்க அரசை உறுதியாக நம்பினார். 'ஹிலாரி கிளின்ட்டனிடம் நம்ம ஆட்கள் பேசி விட் டார்கள். அதனால் சீக்கிரமே அமெரிக்கா நம் விவகாரத்தில் தலையிடும். நாம் இன்னும் மூன்று நாட்கள் வரை தாக்குப்பிடிப்போம்' என பிரபாகரன் நம்பிக்கையோடு சொன்னார். ஆனால், அமெரிக்காவின் உதவி கைகூடுவதில் சில சிக்கல்கள் உருவாகி விட்டன. இந்தி யாவைக் கடந்து அமெரிக்காவால் உதவ முடியாது என்பதை புலித் தலைவர்கள் தாமதமாக... அதாவது காலம் கடந்தபிறகே புரிந்துகொண்டனர். இதற்கிடையில், ராணுவம் முற்றாக வளைத்து விட்டது. கடைசி நேரத்தில் சரணடைவது குறித்து நடேசன், பிரபாகரனிடம் பேசினார். 'நீங்கள் சரணடையச் செல்லுங்கள்... நான் களத்திலேயே நிற்கிறேன்!' என உறுதியாகச் சொல்லி விட்டார் பிரபாகரன். இந்தக் கணத்தில்தான் நாங்கள் மக்களோடு மக்களாகக் கலந்து ராணுவப் பகுதிக்கு போனோம். கடந்த மே 16-ம் தேதி வரை புலித் தலைவர்கள் பற்றிய நிலவரம் இதுதான். ஆனால், அடுத்தடுத்த நாளிலேயே புலித் தலைவர்கள் வீழ்த்தப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன.''

''வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன் உள்ளிட்ட வர்களை ராணுவம் சுட்டுக் கொன்றதாக வந்த செய்திகள் குறித்து..?''

''நடேசன் சமாதானத்துக்கு முயன்றது எனக்கு உறுதியாகத் தெரியும். ஆனால், சமாதான விஷயத்தை சிங்களத் தரப்புக்கு சொன்னவர்கள், அதனை எப்படி முன்னெடுத்தார்கள்என்பது யாருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. சிங்கள ராணுவத்தின் கட்டமைப்புப்படி சமா தானத் தகவல் பல கட்டங் களைத் தாண்டித்தான் சம்பந் தப்பட்ட பட்டாலியன் வீரர்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். அந்த இடைவெளிக்குள் துயரங்கள் நடந்தேறி இருக்க வாய்ப்பிருக் கிறது. அந்தக் கணத்தில் நாங்கள் முகாம் பக்கம் வந்து விட்டோம்... அதனால், என்ன நடந்தது என்பது குறித்து உறுதி யான தகவல் இல்லை!''

''பிரபாகரனின் நிலை என்ன ஆனது?''

''சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. 'சரணடைவதைவிட சாவதே மேல்' என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது!''

''பிரபாகரனின் பிரேதம் என சிங்கள ராணுவம் காட்டிய படம்..?''

''அதற்கு முன்னர் நான் பிரபாகரனை பார்த்திருக்கிறேன். முக அமைப்புகள் எல்லாம் அவரைப் போலவேதான் இருந்தது. ஆனாலும், அதில் வேறேதும் ஜோடிப்பு செய்யப் பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச்சிருந்தது. அடுத் தடுத்த தினங்களில் பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை முக்கால்வாசி மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள். பிரபாகரனைப் பிடிக்காதவர்கள்கூட, அவர் மரணித்ததாக வந்த செய்தியை நினைத்துக் கலங்கினார்கள். ஏனென்றால், தமிழீழப் போராட்டத்துக்கு அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது தமிழ் மக்கள் மனதில் ஆணியாக அறையப் பட்டிருக்கும் உண்மை.''

''பிரபாகரனின் குடும்பத்தினர் தப்பி விட்டதாக சிலரும், அவர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிலரும் முரணான கருத்துகளைச் சொல்கிறார்களே?''

''பிரபாகரன் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையுமே ஈழத்து மண்ணில்தான் வைத்திருந்தார். போர் நெருக்கடியான நிலைக்கு வருவதற்கு முன்னரே, அவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்திருக்க முடியும். ஆனாலும், அதில் பிரபாகரனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. இரண்டு மகன்களையும், மகள் துவாரகாவையும் மக்கள் பார்க்கும் படியான நிலையில்தான் அவர் வைத்திருந்தார். தன்னுடைய குடும்பத்தினரை மட்டும் வெளியே அனுப்பினால், அது புலிகள் இயக்கத்தின் பிடிப்பை உடைத்து விடும் என்பதை அவர் உறுதியாகத் தெரிந்து வைத்திருந்தார். சார்லஸ் ஆண்டனியை போர்க்களத்தில் நிறுத்தி இருந்தார். போர் மிகத் தீவிரமாக உருவெடுத்தபோது, பிரபாகரனின் மனைவி மதிவத னியை வெளியே அனுப்ப சிலர் முயற்சி எடுத்தார்கள். ஆனால் 'மதிவதனி வெளியேறக் கூடாது...' என உறுதியாக அறி வித்து விட்டார் பிரபாகரன். 'மக்கள் வேறு... குடும்பத்தினர் வேறு...' என்று அவர் ஒருநாளும் பிரித்துப் பார்த்ததில்லை.

உண்மையைச் சொல்வதானால், 'போரின் முடிவு தன் குடும்பத்தினர் கூண்டோடு அழிவதாகக்கூட இருக்கும்' என்பதையும் அவர் அனுமானித்து வைத்திருந்தார். அதற்காகவே பிரத்யேகமாக ஒரு மருத்துவரைச் சந்தித்து தன்னுடைய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் ஸ்பெஷலாக சயனைடுகளை தயாரிக்கச் சொல்லி வாங்கி வைத்திருந்தார். அதனைக் கொடுத்தனுப்பிய மருத்துவரே என்னிடம் சொன்ன விவரம் இது. சாவை பற்றிய அச்சமோ தயக்கமோ பிரபாகர னுக்கு ஒரு போதும் இருந்ததில்லை என்பதற்கு, இந்த ஒரு சம்பவமே போதும்!''

''பிரபாகரனின் குடும்பத்தினர் யாரும் தப்பித்திருக்க வாய்ப்பில்லையா?''

''போரின் இறுதி நேரம் நான் தங்கி இருந்த பங்கருக்கு அருகே ஒரு பெரிய பங்கர் இருந்தது. அங்கே நான் போன போது, அதில் பிரபாகரனின் பெற்றோர் தங்கி இருந்தார்கள். அவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, கதிர்காமர் முகாமில் வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்களை ராணுவம் சித்ரவதைகள் ஏதும் செய்யவில்லை. அதன்பிறகு, பாதுகாப்பு கருதி ஒரு ஸ்பெஷல் அறையில் வைத்து, அவர்களை ராணுவத் தரப்பு மரியாதையுடன் நடத்துவதாக எனக்குத் தகவல் வந்தது. பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி போரில் மடிந்ததை நேரில் பார்த்தவர்களே உறுதி செய்திருக்கிறார்கள். அதே நேரம் துவாரகா, பாலச்சந்திரன், மதிவதனி ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது முகாமில் இருந்த எனக்கு சரிவரத் தெரியவில்லை!''

''பாலச்சந்திரன் கொல்லப்பட்டது போன்ற படம் இணைய தளங்களில் வெளியாகி இருக் கிறதே?''

''பாலச்சந்திரன் போரின் கடைசி வரை ஈழத்தில் இருந்தது உண்மை. மற்றபடி, அவர் எப்போது பிடிபட்டார் என்பது பற்றியெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அவர் கொல்லப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதுதான் என் சிந்தைக்கு எட்டிய விஷயம்.''

''புலிகள் தரப்பில் பலரும் காடுகளுக்குள் பதுங்கி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையா?''

''போரின் இறுதி நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் ராணுவத்திடம் சரணடைந் தார்கள்.மொத்தமாக புலிப்படையில் 24ஆயிரம் புலிகள் இருந்தார்கள். போரின்போது ஏழாயிரத் துக்கும் மேற்பட்ட புலிகள் வீரச்சாவு அடைந் தார்கள். இதுதவிர, இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட புலிகள் இப்போது காடுகளுக்குள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கு இப்போதைக்கு சாத்தியங்கள் ஏதுமில்லை. அவர்களை ஒருங் கிணைக்க இப்போதைக்கு வழியுமில்லை!''

''பொட்டு அம்மான் பற்றி எந்தத் தகவலும் இல்லையே..?''

''பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட போராளித் தலைவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்... பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மையெனில், அது பொட்டு அம்மானைக் கொன்ற பிறகுதான் நடந்திருக்க முடியும். பொட்டு அம்மான் குறித்து ராணுவத்துக்கே சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதுதான் சர்ச்சைகளுக்கு விதை போட்டிருக்கிறது. அதே நேரம், பொட்டுஅம்மான் ராணுவத்தின் கஸ்டடி யில் இருப்பதாக சொல்வதில் நிஜமில்லை!''

''இந்தியத் தேர்தல், ஈழத்து நிலைமையை மாற்றும் என புலிகள் எதிர்பார்த்தார்களா?''

''இந்தியாவில் காங்கிரஸ் அரசுதான் மறுபடியும் அமையும் என்பதை ஈழத்தில் இருந்த அடித்தட்டு மக்கள்கூட நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். மாற்று அணி வலிமையானதாக இல்லை என்பது எல்லோருக்குமே புரிந்தது. அதனால் இந்திய ஆட்சியில் மாற்றம் வரும் என்று புலிகள் எண்ணவே இல்லை. இருந்தாலும், தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாக எழும்பிய ஒற்றுமை, ஈழ மக்களை நெகிழ வைத்தது!''

- இரா.சரவணன்
படம்: வி.செந்தில்குமார்
   
 
நன்றி:ஜூனியர் விகடன்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP