சமீபத்திய பதிவுகள்

வரலாறு கொடுத்த வாய்ப்பு பயன்படுத்துவார்களா தமிழர்கள்?

>> Thursday, October 29, 2009

 நீண்டகால மௌனத்தின் பின்னர் சர்வதேச சமூகம் மஹிந்தர் அரசிற்கு நடைமுறை அழுத்தத்தினைக் கொடுக்க தொடங்கிவிட்டது. இலங்கையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சர்வதேச சக்திகள் என்பவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், இந்தியா என்பவைதான். இவையனைத்தும் தனித்தும் கூட்டாகவும் அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன. கூட்டு அழுத்தம் பொதுவாக ஐக்கிய நாடுகள் சபை மூலம்தான் கொடுக்கப்படுகின்றது.

eelamquestionஅமெரிக்கா, இலங்கை விவகாரம் தொடர்பான அறிக்கையை செனற்சபையில் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவின் தென்ஆசியாவிற்கான இராஜாங்கச் செயலாளர் பிளேக் இது தொடர்பாகக் கடுமையான அறிக்கைகளை விடுத்துவருகின்றார். ஐரோப்பியி யூனியன் "ஜி.எஸ்.பி. பிளஸ்' சலுகையை நிறுத்தும்படி தனது உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசு செய்துள்ளது. இதற்கு அப்பால் பிரிட்டன் இலங்கைத் தலைவர்கள் பலரின் பிரிட்டனுக்கான விசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது.  ஜனாதிபதியுடன் ஜப்பான் பயணம் செய்யவிருந்த பலருடைய விசா விண்ணப்பங்களை ஜப்பான் நிராகரித்ததுடன் ஜப்பான் சென்ற பிரதமரையும், அரை மணி நேரத்திற்கு மேலாக விமான நிலையத்தில் தாமதப்படுத்தி கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்து அவமானப்படுத்தியுள்ளது.

இந்திய அழுத்தம்

இந்தியா இவற்றுடன் இணைந்து செயற்படாவிட்டாலும் மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு ஆகியன தொடர்பாகக் கடுமையான அழுத்தத்தினைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக இந்தியப் பிரதமரின் கடிதம் நேரடியாகவே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி தனது ஐ.நா. பயணத்தைக் கைவிட்டு பிரதமரை ஐ.நாவிற்கு அனுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பல தலைவர்களின் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என அவர் அஞ்சியிருக்கலாம். இதற்கு அப்பால் சர்வதேச சக்திகளின் கூட்டு அழுத்தம் என்ற வகையில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது. அடுத்தடுத்து இலங்கை வருகின்ற ஐ.நாவின் பிரதிநிதிகள் முன்னரைப்போன்று அல்லாமல் காட்டமான அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை செயற்படாமை

சர்வதேச சமூகம் அழுத்தங்களைக் கொடுப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.  அதில் முதலாவது,  சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் வந்து செயற்பட இலங்கை மறுக்கின்றமையாகும். சர்வதேச சக்திகளிடம்  குறிப்பாக மேற்குலக சக்திகளிடம்  தமது ஆதிக்கத்தை உலகில் மேலோங்கச் செய்வதற்கு அரசியல், பொருளாதார ரீதியாக சில பொறிமுறைகள் உண்டு. ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டவாட்சி, ஊடகச் சுதந்திரம், திறந்த பொருளாதாரம், உதவி வழங்குதல் என்பவையே அப் பொறிமுறைகளாகும். இப் பொறிமுறைகள் உயர்ந்தபட்சம் செயற்படும்போதுதான் தமது ஆதிக்கத்தை அவர்களால் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

இப்பொறிமுறைகளைப் பின்பற்ற இலங்கை அரசு மறுப்பதுடன், இவ்வழுத்தங்களுக்கு முகங்கொடுப்பதற்காக மேற்குலகத்தினதும், பிராந்திய சக்தியினதும் எதிர் சக்திகளோடு உறவு கொள்ளவும் அது முயற்சிக்கின்றது. போர்க்காலத்திலும் இந்த உறவினைப் பயன்படுத்தியே மேற்குலக, பிராந்திய சக்திகளின் எதிர்ப்பினை அது தடுத்து வந்தது. தற்போதும் அதன் தொடர்ச்சியையே அது பேண முயற்சிக்கின்றது.

மேற்குலகத்தைப் பொறுத்தவரையில் ஆசிய மட்டத்தில் எதிர்நிலையில் உள்ளவை என கருதப்படுபவை, சீனா, ஈரான், மியன்மார் என்பவைதான். இச்சக்திகளின் ஆதிக்கம் இலங்கைத் தீவில் வளரக் கூடாது என்பதற்காகத்தான் போர்க் காலத்தின்போது அரசு  பக்கத்தில் மேற்குலகச் சக்திகள் நின்றன.

இலங்கைத்தீவு தென்னாசியாவின் கேந்திர மையத்தில் இருப்பதனால் எதிர்நிலை சக்திகளின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கும்போது முழு தென்னாசியாவில் மட்டுமல்லாமல் கிழக்காசியா, மேற்காசியா என்பவற்றிலும் மேற்குலகின் ஆதிக்கத்திற்கு அது பாதிப்பைச் செலுத்தும் என்பது அவற்றிற்கு நன்றாகவே தெரியும்.

இத்தகைய கேந்திர அரசியல் நோக்கு காரணமாக முழு இலங்கைத் தீவும் தமக்குத் தேவை என்பதாலேயே தமிழ் மக்களின் தமிழீழ கோரிக்கையை ஆதரிக்க இவை முன்வரவில்லை. எனினும் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இல்லாவிட்டால் அரசினைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என்பதாலும், மனித உரிமைகள் மோசமாக பாதிக்கப்பட்டதாலுமே போரை நிறுத்த அவை முனைந்தன. ஆனால் இந்திய ஆதரவு கிடைக்காததினால் அது இயலவில்லை.

சர்வதேசக் கூட்டுப் பொறிமுறையின் ஆதிக்கத்தைத் தக்க வைக்கும் முயற்சி

இரண்டாவது காரணம்  ஐக்கிய நாடுகள் சபையின் நம்பகத்தன்மை சரிந்து சென்றுவிடும் என்ற அச்சமாகும். சர்வதேச சக்திகள் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு கூட்டு பொறிமுறைக் கருவியாக ஐக்கிய நாடுகள் சபையினையே பயன்படுத்துகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இங்கை செயற்படாதபோது அதனைத் தடுக்காவிட்டால், ஐக்கிய நாடுகள் சபையின் நம்பகத்தன்மை சரிந்து போவது தவிர்க்க முடியாததே. போர்க் காலத்தில் சட்ட திட்டங்களை மறுப்பதற்கு நியாயம் கூறினாலும், போர் இல்லாக் காலத்தில் அதனை தொடர்ச்சியாக அனுமதிப்பது நம்பகத்தன்மையை வெகுவாகவே பாதிக்கும். அதுவும் வேறு, வேறு நாடுகளில் வேறு, வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றும்போது கண்டனங்களும், எதிர்ப்புகளும் வருவதற்கு அதிகமாகவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை அரசியல் காரணங்களுக்காக சூடான், மியன்மார் விடயங்களில் தீவிரமான போக்கினையும், இலங்கை விடயத்தில் மென்மையான போக்கினையும் கடைப்பிடித்து வந்தது. இதற்கு பிரதான காரணம் இந்தியாவே. இதனால் பலத்த கண்டனங்களை அது எதிர்நோக்க வேண்டியிருந்தது. 

இன்று ஐக்கிய நாடுகள் சபையுடன் அதன் செயலாளரினதும் நம்பகத்தன்மையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கையாலாகாதவர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. ஐ.நா. செயலாளருடன் இணைந்து தான் முன்னர் வெளியிட்ட கூட்டறிக்கையை இலங்கையரசு பின்னர் சிறிது கூட கணக்கில் எடுக்காததினால் அவரின் நம்பகத்தன்மை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது.

சர்வதேச சக்திகள் தமது கூட்டு ஆதிக்கத்தை முன்னர் கூறியமை போல ஐக்கிய நாடுகள் சபையினூடாகவே செயற்படுத்துவதினால், ஐ.நாவின் நம்பகத்தன்மை ஒரு மட்டத்திற்கு மேல் சரிந்து செல்வதை அவற்றால் அனுமதிக்க முடியாது. இதனாலேயே அவசர அவசரமாக பல முனைகளுக்கு ஊடாக அழுத்தங்கள் பீறிட்டுப் பாய்கின்றன.

உண்மைகளைப் படுக்கை விரிப்புக்குள் மறைத்தல், வாக்குறுதிகளை வழங்கிவிட்டு நடைமுறையில் அவற்றுக்கு எதிராக செயற்படுதல் என்பவைதான் சர்வதேச சக்திகளை அதிக கோபத்திற்குள்ளாக்கியிருக்கின்றன. ஐ.நா. ஊழியர்கள் கைது செய்யப்பட்டமை, யுனிசெவ் அதிகாரியின் விசா இரத்து செய்யப்பட்டமை, பத்திரிகையாளர் திஸாநாயகத்திற்கு 20 வருட தீர்ப்பு வழங்கப்பட்டமை போன்ற அண்மைக்கால நிகழ்வுகள் சர்வதேச சக்திகளை உசுப்பேற்றி விட்டுள்ளன.

புலிகளின் மீள் எழுச்சிக்கான வாய்ப்புப் பற்றிய அச்சம்

மூன்றாவது  தமிழ் மக்களுக்குச் சார்பான நடவடிக்கைகள் சிறிதளவாவது முன்னேறாவிட்டால் புலிகள் மீள் எழுச்சி பெறுவர் என்ற அச்சமாகும். புலிகள் திரும்ப மீள எழுவார்களேயானால் நியாயம் அவர்களின் பக்கமே இருக்கும். இது எதிர் நடவடிக்கைகள் எவற்றையும் அவர்கள் மீது எடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தும். அதற்கான தார்மீக உரிமையும் அற்றுப் போயிருக்கும்.

தமிழ் மக்கள் தற்போது புலிகள் இல்லாத வெற்றிட நிலையினை அனுபவ ரீதியாகவே உணர்ந்து வேதனைப்படுகின்றனர். அவர்கள் மீள எழும்புவார்களாக இருந்தால் முன்னரைவிட மிகப்பெரிய ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும். புலிகள் தனித்துப் போராடுவதற்குப் பதிலாக உலகத் தமிழர்கள் அனைவரும் இணைந்து போராடக் கூடிய சூழல் ஏற்படும். உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் போராட்டத்திற்குத் துணையாக நிற்கும். வெறுமனே தேசிய இனத்தின் போராட்டமாக இல்லாமல் மனித தர்மத்திற்கான போராட்டமாக அது வளர்ச்சியடையும். இவ்வாறான நிலை வருமாக இருந்தால், அமெரிக்கா, இந்தியா மட்டுமல்ல எவராலுமே இப்போராட்டத்தை தடுக்க முடியாது போகலாம். இவ் எழுச்சி தமிழீழம் நோக்கி நகர்வதையும் தடுக்க முடியாது. இந்தச் சூழல் வருவதை மேற்குலகோ, இந்தியாவோ விரும்பவில்லை.

ஒருபுறம் சீன, பாக். ஆதிக்கம் மறுபுறம் மேற்குலக ஆதிக்கம்

இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. முதலாவது சீனாவினதும், பாகிஸ்தானினதும் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து வருவதை எவ்வாறு தடுப்பதென்பதாகும். சிங்கள சமூகமும், இந்தியாவை விட சீனா, பாகிஸ்தான் சார்பு நிலையை இலங்கை எடுப்பதையே விரும்புகின்றது. சிங்கள சமூகம் என்றைக்குமே இந்தியாவிற்கு ஆதரவாக இருந்ததில்லை. இதனால் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையைக் கொண்டு வருவதில் இந்தியா தோல்வியையே தழுவி வருகின்றது.

இத்தோல்வி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியிலிருக்கின்ற எல்லாக் காலங்களிலும், இந்தியாவிற்கு ஏற்படுவது வழமைதான். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் இங்கு மேற்கின் ஊடுருவலுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இங்கு சீனாவின் ஊடுருவலுக்கும் இந்தியா முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

மேற்குலகத்தின் ஊடுருவலின் போது இந்தியா, இலங்கை அரசிற்கு எதிராக கடுமையான நிலையினையே எடுப்பதுண்டு. இலங்கையிலுள்ள எதிர்க்கட்சியையும் அதற்காக உச்ச வகையில் பயன்படுத்துவதற்கு இந்தியா தவறுவதில்லை. சிங்கள சமூகத்திடமும் மேற்குலக எதிர்ப்பு நிலை தீவிரமாக இருப்பதினால்  சிங்கள இனவாத சக்திகள் அதற்கு வலிமையான ஆதரவினை வழங்கி நிற்கும். இதனால் இந்தியாவின் செயற்பாடும் இலகுவாகவிடும்.

சலுகைகள் மூலம் சமாளிப்பு

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சிக் காலத்தில் அதன் சீன, பாகிஸ்தான் சார்பு நிலைக்கு எதிராக இவ்வாறான எதிர்ப்பு நிலையினை எடுக்க முடியாது. சீனா, பாகிஸ்தான் சார்பு நிலையை சிங்கள இனவாதிகள் ஆதரிப்பதாலும், ஐக்கிய தேசிய கட்சி சீனா, பாகிஸ்தானை வெளிப்படையாக எதிர்க்க தயாரில்லாமல் இருப்பதனாலும் கடுமையான எதிர்ப்பு நிலையை எடுக்க இந்தியவால் முடிவதில்லை.  

இதனால் பல சலுகைகளைக் கொடுத்து இலங்கை ஆட்சியாளர்களை வளைத்துப் போட இந்தியா முயற்சிப்பதுண்டு. இவ்வளைப்பின் மூலம் தனக்கெதிராக செல்லவிடாது அது இலங்கையைத் தடுப்பதுண்டு. ஸ்ரீமா  சாஸ்திரி ஒப்பந்தம் (1964), ஸ்ரீமா  இந்திரா ஒப்பந்தம் (1974), கச்சத்தீவு ஒப்பந்தம் (1974) என்பவற்றை இந்த வகையிலேயே அதிக விட்டுக் கொடுப்புகளைக் கொடுத்து அது கைச்சாத் திட்டிருந்தது. இதற்காக மலையக மக்களின் நலன்களையும், தமிழக மீனவர்களின் நலன்களையும் விலையாகக் கொடுக்கவும் அது தயங்கவில்லை.
இவ்வாறான வரலாற்று நிலையே தற்போதும் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. வன்னிப் போரின் போது தமிழ் மக்களின்           நலன்களையும், தமிழக  மீனவர்களின் நலன்களையும் விலையாகக் கொடுத்து இலங்கை அரசுடன் இணைந்து போரை அது நடத்தியது. எனினும் சீன ஊடுருவலையோ, தென்னிலங்கை அதிகளவில் சீனா நோக்கிச் சரிவதையோ  இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியவில்லை.   அந்த ஊடுருவல் இந்தியாவின் கைகளுக்கு அப்பால் சென்றுவிட்டது. மியன்மார் போன்ற நிலைக்கு அது இன்னமும் வராவிட்டாலும் அதனை நோக்கி வேகமாகச் சரிந்து கொண்டிருக்கின்றது.

இந்தியாவை முடக்கும் முயற்சி

இலங்கை அரசு தென்னிலங்கைக்குள் இந்தியாவைக் கால் பதிக்க விடாமல் வடக்கு  கிழக்கில் மட்டுப்படுத்த முயற்சிக்கின்றது. ஆனால் இந்தியாவிற்கு வடக்குகிழக்கு மட்டும் போதுமானதாக இல்லை. அதற்கு முழு இலங்கையுமே தேவை. வடக்கு  கிழக்கு மட்டும் தேவையாக இருந்திருந்தால், தமிழ் மக்களின் போராட்டத்தை அது ஆதரித்திருக்கும்.

வட  கிழக்கில் வலிமையாக கால்பதிப்பதற்கும் தமிழ் மக்களின் ஆதரவும் அதற்கு இல்லை. சம்பூர் பிரதேசத்தை அணு மின் நிலையத்தைச் சாட்டாக வைத்து இந்தியா ஆக்கிரமித்தமை தமிழ் மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தியாவின் நலன்களுக்காக போரின் போது தமிழ் மக்களின் நலன்களை அது விலையாக கொடுத்தமையையிட்டும், தமிழ் மக்கள் அதிருப்தியுற்றுள்ளனர்.

கிழக்கில் புலிகள்  கருணா முரண்பாட்டுடன் கால் பதிக்க இந்தியா விரும்பியது. கருணா லண்டனில் கைது செய்யப்பட்ட நிலையில் இருந்ததினால் பிள்ளையானைத் தனக்குச் சார்பாக பயன்படுத்த முனைந்தது. ஆனால் தற்போது மஹிந்தர் அரசு இதனை விரும்பாததினால் கருணாவை இதற்கு எதிராக இலங்கை திருப்பி விட்டுள்ளது. கருணா அம்பாறை மாவட்டம் முழுவதும் பிள்ளையானுக்கு எதிராக  தற்போது போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். படையினரும் அதற்கான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர்.

உண்மையில் இங்கு பிள்ளையானும், கருணாவும் மோதவில்லை. மாறாக இந்தியாவும், இலங்கையுமே மோதுகின்றன. இந்திய சார்பு சக்திகள் வலிமையுடன் இலங்கையில் இருப்பதனை இலங்கை அரசும் இராணுவமும் அறவே விரும்பவில்லை.

இந்தியா பயன்படுத்த வடக்கில் எவருமில்லை

வடக்கில் இந்தியா பயன்படுத்துவதற்கு எவருமேயில்லை. டக்ளஸ் தேவானந்தாவை பயன்படுத்த முனைந்த போதும் இலங்கையரசுடன் முரண்படக் கூடாது என்பதற்காக அவர் அதற்கு சம்மதிக்கவில்லை.

இந்தியா தமிழ் மக்களுக்குச் சார்பான நிலைப்பாட்டினை எடுக்கும் வரை தமிழ் மக்களின் மத்தியில் ஒரு தளத்தினை ஒரு போதும் அதனால் அமைக்க முடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது பாதுகாப்பிற்காக இந்தியாவை சார்ந்து நின்றாலும் இந்தியாவின் எடுபிடியாகச் செயற்பட அதனால் முடியாது. அதற்குரிய வலிமையும் அதனிடம் கிடையாது. இந்தியாவிற்கு தேவையானபோது ஆயுதம் தரிக்கக் கூடிய அமைப்பே தற்போது அவசியம். அதனாலேயே பிள்ளையானை ஆதரிக்க அது முற்பட்டது. ஆனால் வடக்கில் அதற்கான சாத்தியங்கள் இல்லை.

தமிழகத்தின் நெருக்கடி

அடுத்தது  தமிழ் நாட்டிலிருந்து எழும் நெருக்கடியாகும். தமிழ் நாட்டுத் தேர்தல் அரசியல் எப்படித்தான் இருந்தாலும் தமிழக மக்கள் இலங்கை தமிழர்களோடுதான் நிற்கின்றனர். போரில் தமிழ் மக்களின் அழிவும், புலிகளின் தோல்வியும், தமிழக மக்களை வெகுவாகவே பாதித்திருக்கின்றன. தங்களால் இவற்றைப் பாதுகாக்க முடியவில்லையே என அவர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர். இவையெல்லாவற்றிற்கும் இந்திய அரசே காரணம் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக புலிகள் மீதிருந்த அதிருப்தி எதுவும் தற்போது தமிழக மக்களுக்குக் கிடையாது. மாறாக அனுதாபமேயுள்ளது. இதனை ராகுல் காந்தியின் தமிழகப் பயணத்தின் போதும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அங்கு பத்திரிகையாளர்கள் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ராகுல் காந்தியைக் கேள்விகளால் துளைத்தெடுத்திருந்தனர். இறுதியில் இதற்கு முகம் கொடுக்க முடியாமல் இரண்டு மணிநேர நேர்காணலை 41 நிமிடத்துடன் முடித்துக் கொண்டு செல்லவேண்டிய நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டது.

எனவே தமிழ் நாட்டு அதிருப்தியையும், சமாளிக்க வேண்டிய தேவையும் இந்தியாவிற்கு உள்ளது. இல்லையேல் விரும்பத்தகாத நிகழ்வுகள் தமிழ் நாட்டிலும் ஏற்படலாம் என அது அஞ்சுகின்றது. சிங்கள சக்திகளை பாதுகாக்கச் சென்று தமிழ் நாட்டை இழந்துவிட வேண்டாம் என இந்தியா ஆய்வாளர்கள் இந்தியரசிற்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.

 மற்றைய விடயம்  புலிகள் மீள் எழுச்சி பெறுவர் என்ற அம்சமாகும். இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்க்காத வரை புலிகள் மீள் எழுவதற்கான வெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். புலிகளின் வெற்றிடத்தை புலிகளிலிருந்து உருவாகும், புதிய புலிகளால் நிரப்ப முடியுமே தவிர ஏனைய அமைப்புகளினால் ஒருபோதும் நிரப்ப முடியாது. ஏனைய அமைப்புகளின் கையாலாகாத நிலை போர் முடிந்து சில மாதங்களுக்குள்ளேயே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது. பேரின வாதத்திற்கு எதிராக சிறிய துரும்பைக் கூட அசைக்க முடியாத நிலையில் அந்த அமைப்புகள் உள்ளன. புலிகள் வலிமையோடு இருக்கின்ற வரை தனது கட்சியின் சொந்தச் சின்னத்தில் போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தா எவ்வளவோ முயற்சி செய்தும் தனித்துப் போட்டியிட அரசு சம்மதிக்கவில்லை.

புலி எதிர்ப்பு சக்திகள் வாய் பொத்தி மௌனம்

13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்த புலம்பெயர் நாடுகளின் புலி எதிர்ப்பு சக்திகள் இன்று வாய் பொத்தி மௌனம் காக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ் நாட்டில் மாநாடு நடத்த முயற்சி செய்தும் இந்திய உளவுப் பிரிவு அதனை இடையில் குழப்பவிட்டது.

புலிகள் வலிமையாக இருந்த போதுதான் புலி எதிர்ப்பு சக்திகள் இலங்கை அரசிற்கு தேவைப்பட்டன. தற்போது அத்தேவை இல்லாததினால் சிறியளவிற்கு கூட இச்சக்திகளுக்கு மதிப்பினை இலங்கை அரசு கொடுப்பதில்லை.

புலிகளின் மீள் எழுச்சி முன்னைய புலிகளைப் போல ஒருபோதும் இருக்காது. சர்வதேச ரீதியாக வலுவான நியாயத்தைக் கொண்ட உலகத் தமிழர்களையும், உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் இணைத்த பேரெழுச்சியாகவே அது இருக்கும். இராணுவ ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியிலும் பலம் கொண்டவர்களாகவே அவர்கள் விளங்குவர். இது இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் மட்டுமல்லாமல் மஹிந்தருக்கும் நன்றாகவே தெரியும். இந்திய ஆட்சியாளர்கள், அதுவும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இதனை அறவே விரும்பவில்லை.

எனவே இந்நிலைமையைத் தவிர்க்க குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தினையாவது நடைமுறைக்கு கொண்டு வரவேண்டிய கட்டாய நிலை இந்தியாவிற்குள்ளது. ஆனால் மஹிந்தர் அரசு அதற்கும் தயாரில்லாமல் இருப்பது இந்தியாவிற்கு பெரும் எரிச்சலைத் தருகின்றது.

மொத்தத்தில் தற்போதைய போக்கு தமிழ் மக்களுக்கு சாதகமான அரசியல் போக்காகும். மஹிந்தர் ஆட்சி இலங்கையில் இருக்கும் வரை இப்போக்கு வளர்ந்தே செல்லும். மேலும் சில வருடங்களுக்கு மஹிந்தர் ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது. எனவே மேற்குலக  இலங்கை முரண்பாடு, இந்திய  இலங்கை முரண்பாடு தொடர்ந்தும் வளர்ச்சிடைவதற்கான வாய்ப்புக்களே உள்ளன.

வரலாற்று வாய்ப்பு இது!

வரலாறு, சந்தர்ப்பங்களை அடிக்கடி உருவாக்கிக் கொடுக்கும். தற்போதும் உருவாக்கி கொடுத்துள்ளது. தமிழ் மக்கள் இதனை எவ்வாறு பயன்படுத்த போகின்றனர்? இதுதான் இன்று எழும் மிகப்பெரிய கேள்வி.

தமிழ்த்தேசிய அரசியலுக்கான அரசியல் தளம் இன்று மூன்று பிரதான இடங்களில் விரிந்து காணப்படுகின்றது. தாயகம், புலம்பெயர் நாடுகள், தமிழகம் என்பவையே அம்மூன்றுமாகும். தாயகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், புலம்பெயர் நாடுகளில் புலம்பெயர் மக்களுக்கும், தமிழ்த்தேசிய ஆதரவு சக்திகளுக்கும் இது தொடர்பான மிகப்பெரும் பொறுப்புக்கள் உள்ளன.

இவை மூன்றிலும் தலைமை சக்தியாக இயங்கக் கூடிய தளம் புலம்பெயர் தளம்தான். இதுவே மூன்று தளங்களையும் ஒருங்கிணைத்து தலைமை கொடுக்கும் தகைமையில் உள்ளது.

புலம்பெயர் மக்கள் தலைமை சக்தியாக இருப்பதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் உள்ளன.  முதலாவது புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசிய சக்திகள் வினைத்திறனுடன் செயற்படக்கூடிய தளமாக புலம்பெயர் தளமேயுள்ளது.  புலிகளின் தோற்கடிக்கப்படாத பிரிவினரும் அங்குதான் பெருமளவில் உள்ளனர். தாயகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பணிகளை முன்னெடுக்க முடியுமே தவிர, தீவிரமான பணிகளை குறிப்பட்ட காலத்திற்கு முன்னெடுக்க முடியாது. இராணுவ நிர்வாகம் அவற்றை அனுமதிக்கப் போதில்லை.

இரண்டாவது  தற்போதைய சூழலில் மேற்கொள்ள வேண்டிய மிகப் பிரதான பணி சர்வதேச அரசியலை எமக்குச் சார்பாகத் திருப்புவதுதான். ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் இப்பணியினை செய்யாமல், அதில் வெற்றி பெறாமல், எதிர்காலத்தில் ஓர் அடி கூட தமிழ்த்தேசிய அரசியலினால் முன்னோக்கி நகர முடியாது. இப்பணி அதிகளவில் புலைமை சார்ந்த அரசியல் இராஜதந்திரப் பணியாகவும், மக்களை இணைத்து போராட்டங்களை நடத்தும் வெகுஜனப் பணியாகவும் இருப்பதினால் புலம்பெயர் நாடுகளே அதற்கு ஏற்ற தளங்களாக இருக்கின்றன.

புலம்பெயர்ந்த மக்களின் பொறுப்பு

புலம்பெயர் மக்கள் இந்த வரலாற்றுப் பொறுப்பைச் சீராக மேற்கொள்வதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். கூடிய வகையில் ஒத்த கருத்துள்ளவர்கள் ஓர் அமைப்பை உருவாக்கி ஒன்றிணைந்து பணிகளை முன்னெடுத்தல் வேண்டும். இராணுவ ரீதியான வெற்றிகளை மட்டும் கேட்டுப் பழகியவர்களுக்கு இந்த அரசியல் வேலைகளின் நுண் தளங்கள் புரியாமல் இருக்கலாம். ஆனால் காலத்திற்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் எம்மால் ஒருபோதும் முன்னேற முடியாது. இதுவரை கால தியாகங்களை ஒரு சரியான பாதையில் கொண்டு வந்து நிறுத்தி நகர்த்துவதற்கு எங்களது அரசியல் பார்வைகளை விரித்துக் கொள்வது அவசியமானதாகும்.
மாற்று அரசியல் சக்திகளெனத் தம்மைக் கூறிக் கொள்பவர்கள் உப்புச்சப்பற்ற 13ஆவது திருத்தத்திற்குப் பின்னால் நகர்வதை விடுத்து தமது வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து சரியான பாதைக்கு வரத் தவறக் கூடாது. அவ்வாறு தவறுவார்களேயானால் மீண்டும் ஒரு தடவை வரலாறு அவர்களைப் புறக்கணித்துவிட்டு முன்னோக்கி நகரப்பார்க்கும்.

கூட்டமைப்பின் கடமை

தாயகத்தில் தமிழ்த்தேசிய உணர்வை விழிப்புடன் வைத்திருக்க வேண்டியவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே ஆவர். அவர்கள் அப்பொறுப்பை உண்மையில் உணர்ந்திருக்கின்றார்களா என்பது சந்தேகம் தான். இல்லையேல் எந்தவித நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் ஜனாதிபதியுடன் பேசச் செல்வது, நிவாரணப் பொருட்களுக்கு கையேந்த அடிபடுவது போல ஜனாதிபதியின் கையைப்பற்ற முன்னிற்பது, தமிழ் மக்கள் எப்போதோ நிராகரித்து விட்ட ஸ்ரீலங்காவின் தேசிய கீதத்தை பக்திப் பரவசத்துடன் பாடுவது எல்லாம் நடந்திருக்காது.

ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அரசுடன் பேச வந்தமை அரசாங்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியென தொழிற்சங்க தலைவர்களின் சந்திப்பொன்றில் கூறியிருக்கின்றார். தம்மோடு வலிமையாக மோதிக் கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம் எனக் கூறி சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளுவதற்கு அரசிற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தனைக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்த எந்தக் கோரிக்கைக்கும் தெளிவான பதில் எதையும் ஜனாதிபதி வழங்கவில்லை.  பேச்சு நடைபெற்று ஒரு மாதம் ஆகியும் கூட இன்னமும் அகதி முகாம்களுக்கு அவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தடுப்புக் காவலில் இருக்கும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பனர் கனக ரத்தினத்தையும் விடுவிக்க செய்ய முடியவில்லை.

கூட்டமைப்பின் இயலாமை

தமிழ் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேசுவது அவசியம் தான். பேச்சுக்கு ஒரு சாட்சி தேவை என்ற வகையில் வெளி மத்தியஸ்தத்துடனேயே பேச்சுகளை மேற்கொள்ள வேண்டும. குறைந்தபட்சம் சரியான நிகழ்ச்சி நிரல்களுடன் ஒரு தொடர் பேச்சுக்குச் சென்றிருக்க வேண்டும். வெறுமனே அரசு சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்புவதற்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் பேசக் சென்றிருக்க கூடாது.

ஜனாதிபதியுடனான கூட்டமைப்பின் சந்திப்பு தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. மாறாக அரசிற்கே நன்மையைக் கொடுத்துள்ளது. அரசும் யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடியும் வரை பேச்சுக்குச் செல்லவில்லை. அத்தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தால், தமிழ் மக்கள் தங்களோடு நிற்கின்றனர் என அது பிரசாரம் செய்திருக்கும். அது நடைபெறாததினாலேயே பேச்சுக்குச் சென்றிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதையாவது செய்வதற்கு முன்னர் தமது அந்தஸ்தையும், பொறுப்பையும் உணர்ந்து கொள்வது அவசியம். இவ்வளவு காலத் தியாகங்களைப் போட்டுடைக்கும் செயல்களில் அது இறங்கக் கூடாது.

அமைப்பு, தொழிற்பாடு என்பவற்றை பொறுத்தவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மிகவும் பலவீனமானது. விடுதலைக்காக போராடும் மக்களின் ஒரு பகுதிப் பொறுப்பினை ஏற்றிருக்கும் அமைப்பு என்ற வகையில் இவை உச்ச நிலையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சாதாரண அரசியற் கட்சிக்கு இருக்க வேண்டிய பண்புகள் கூட அதனிடம் இருக்கவில்லை. பல்வேறு அமைப்புகளை இணைத்த ஒரு கதம்பக் கூட்டமாகவே அது உள்ளது. அவற்றுடன் இணைந்த அமைப்புகளும் வெறும் பெயர்களுடன் இருக்கின்ற அமைப்புகளே தவிர தம்மளவில் உள்ளார்ந்த வலிமையானவையாக இல்லை.

இக்குறைபாடு அதன் தொழிற்பாடுகளிலும் பாதிப்புச் செலுத்துகின்றது. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் என்று எதுவும் அதனிடன் கிடையாது. அவ்வப்போது கைக்கு வந்தவற்றை மேற்கொள்கின்ற போக்குத்தான் அதனிடம் உள்ளது.

இதனால் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதோ, வெளிநாட்டு பிரதிநிதிகளைச் சந்திக்கச் செல்லும் போதோ, அரசுடன் பேசுவதற்குச் செல்லும் போதோ போதிய ஆயத்தங்களுடன் அது செல்வதில்லை. அதற்கான ஆவணங்களை தேடி தயாரிப்பதுமில்லை. அவற்றை மேற்கொள்வதற்காகத் தங்களுக்குள் ஒழுங்காகக் கூடுவதுமில்லை. அதற்கேற்ற ஒழுங்குவிதிகளும் அதனிடம் கிடையாது. 22 நாடாளுமன்ற உறுப்பனர்கள் இருந்தும் 10 பேரைக் கூட நாடாளுமன்றத்தில் ஒன்றாகக் காண முடியாது. அங்கு உரையாற்றும் போது ஏனோ தானோ என்ற வகையில் உரைகள் ஆற்றப்படுகின்றனவே தவிர திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி ஆற்றப்படுவதில்லை.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் என்பது மிகவும் முக்கியமானது. பழைய தமிழரசுக் கட்சிக் காலத்தில் அப்போதைய உறுப்பினர்கள் இதனை நன்றாகவே பயன்படுத்தியிருந்தனர். ஆனால் தற்போது கேள்வி நேரம் பற்றி சிறிய அக்கறை கூட செலுத்தப்படுவதில்லை.

தமிழ் மக்களின் போராட்டம் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் என்ற கட்டத்திற்குள் சென்ற பின்னர் நாடாளுமன்றக் கட்சிகளிàல் பெரியளவிற்குச் சாதிக்க முடியாது என்பது உண்மைதான். நாடாளுமன்ற அரசியல் என்பதே சமரச அரசியல் அப்பிரிவால் என்பதால், தமிழ்த் தேசியக் அரசியலில் பிரதான பாத்திரத்தை வகிக்க முடியாது என்பதும் உண்மைதான். ஆனால் சிறந்த துணைப் பாத்திரத்தை அதனால் வகிக்க முடியம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு துணை பாத்திரத்திற்கு ஏற்ற அமைப்பாகவும் இல்லை என்பது தான் கவலைக்குரியது. இதனை சமாதான காலத்தில் நன்றாகவே அவதானிக்க கூடியதாக இருந்தது.

துணைப் பாத்திரத்தையாவது சரியாக ஆற்றுவார்களா இவர்கள்?

புலிகள் இல்லாத தற்போதைய நிலையில், தமிழ்த்தேசியக் கூடடமைப்பை எப்படியாவது துணைப் பாத்திரத்தை ஆற்றக்கூடியதாக மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு உடனடியாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பன் ஒரு மாநாட்டைக் கூட்டி கட்சியின் இலக்கு, கொள்கை, வேலைத் திட்டம், அமைப்பு வடிவம் என்பவற்றை தெளிவாக வரையறுத்துக் கொள்வது அவசியமானதாகும். பழையவர்கள் ஒழுங்காக செயற்படாவிட்டால் புதியவர்களை இணைத்தாவது கட்சியின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வது அவசியம். தமிழ் சிவில் சமூகம் விழிப்புடன் இருந்து அழுத்தங்களைக் கொடுக்கும் போதே இவை சாத்தியமானவையாக இருக்கும்.

பிரதான பாத்திரத்தைப் புலிகள் அல்லது அதனிடமிருந்து தோற்றம் பெறும் புதுப் புலிகள் தான் ஆற்றமுடியும். ஒரு விடுதலை இயக்கத்தை வெளிப்படையச்செயற்படுத்தும் களம் இலங்கையில் இல்லாததினால், புலம்பெயர் நாடுகளிலேயே ஒரு குறிப்பட்ட காலத்திற்கு அதனை இயக்க வேண்டியுள்ளது. முன்னர் கூறியது போல இன்றைய காலகட்டம் இராணுவச் செயற்பாடுகளை விட அரசியல் ரீதியான இராஜதந்திரச் செயற்பாடுகளை வேண்டிய நிற்பதால், அதற்கேற்றவாறு விடுதலை இயக்கத்தினைப் புனரமைத்துக் கொள்வதும்  அவசியமானதாகும்.

அடுத்தது தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளாகும். இந்தியா தமிழ்த்தேசியத்திற்கு எதிராகச் செல்வதைத் தடுப்பதற்கு தமிழ் நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முக்கியமானவையாகும். தமிழக சிவில் சமூகம் இனறு மிகவும் விழிப்புணர்வு நிலையில் இருக்கின்றது. ராகுல் காந்தியின் தமிழகப் பயணத்தின் போது அதனைத் தெளிவாகவே பார்க்க முடிந்தது. கருணாநிதியின் வங்குரோத்துத்தனமான செயற்பாடுகளினால்தான் அரசியல் ரீதியாக எழுச்சியடைய முடியவில்லை. அரசியல்வாதிகளை மட்டும் நம்பியிராமல் சிவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் அறிவூட்டி அமைப்பாக்கும் போதே அங்கு வினைத்திறன் மிக்க வினைபயன்களை எதிர்பார்க்கக் கூடியதாகவிருக்கும்.

தலைமை, தாயகம், தலைமை மூன்று தளங்களில் பொறுப்பு

இவை எல்லாவற்றிற்கும் முதலாவது நிபந்தனை தலைமை அமைப்பை மீண்டும் சீர் செய்வதே. அதனைச் சீர்செய்து தலைமை, தாயகம், தமிழகம் மூன்றையும் ஒரே நேர்கோட்டில் ஒழுங்கிணைத்து முன்னேறும் போது காத்திரமான பாய்ச்சலை மேற்கொள்ள முடியும்.

இரண்டாம் கட்ட பணியென்பது திட்டமிட்ட வகையில் இராஜதந்திரப் போரை நடத்துவதே. உலகெங்குமுள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளை இணைத்து முன்னேறும் போது இரண்டாம் கட்டப் பணிகளிலும் எம்மால் இலகுவாக முன்னேற முடியும்.


source:nerudal


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வேலையின்மை, வறுமை மட்டுமல்ல தண்ணீராலும் வளரும் தீவிரவாதம்

 

ஜம்மு, : வேலையில்லா திண்டாட்டம், பசி, வறுமை ஆகியவற்றால் இளைஞர்கள் தீவிரவாதத்துக்கு தள்ளப்படுவதெல்லாம் பழைய நடைமுறை. தண்ணீர் கிடைக்காமல் தீவிரவாதியாவது புதியது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் Ôபஞ்சாபி தலிபான்Õ தீவிரவாதம் அதிகரித்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜிகாதி அமைப்புகள், இளைஞர்களை பஞ்சாப் தலிபானில் சேர்க்கின்றன. அவர்களிடம் இந்தியாவுக்கு எதிராக ஜிகாதி அமைப்புகள் போடும் தூபம் என்ன தெரியுமா? தண்ணீர். பஞ்சாப் வழியாக பாகிஸ்தானின் பஞ்சாபுக்குள் ரவி, சட்லஜ், பீஸ் என மூன்று நதிகள் பாய்கின்றன. தென்மேற்கு பருவமழை பல வடமாநிலங்களில் பொய்த்துப் போனதால் அந்த நதிகளில் நீர் இல்லை. ஆனால், நிலைமையை மறைத்து, 

பாகிஸ்தானுக்குள் வரும் நதி நீரை இந்தியா தடுத்து, வறட்சி ஏற்படுத்தி விட்டதாக பாக். பஞ்சாபில் ஜிகாதி அமைப்புகள் விஷ(ம) பிரசாரம் செய்கின்றன. இந்த அமைப்புகளுக்கு லஷ்கர் &ஈ& தொய்பா, அல்&கய்தா, தலிபான் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளது. Ôநதிகளில் அணைகளை கட்டி நீரைத் தடுத்து, பாகிஸ்தானில் வறட்சி ஏற்படுத்தும் இந்தியாவுக்கு எதிராக ஆயுதமேந்துங்கள்Õ என்று பாக். பஞ்சாப் இளைஞர்களை இந்த அமைப்புகள் தூண்டி விடுவது தெரிய வந்துள்ளது. அவர்களது பொய் பிரசாரத்தை உண்மை என நம்பி, பஞ்சாப் தலிபான் தீவிரவாத அமைப்புகளில் சேர்ந்து அப்பாவி இளைஞர்கள் ஆயுத பயிற்சி பெற்று வருகின்றனர். வெடிமருந்துகள், ஆயுதங்களுடன் இந்தியாவில் விரைவில் தாக்குதல் நடத்தவும் தயாராகி வருவதாக உளவுத் துறை தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மும்பையில் நடந்த பயங்கர தாக்குதல் போல மீண்டும் வெளிநாட்டு தீவிரவாதிகளின் நாசவேலை நடைபெறும் வாய்ப்புள்ளதாக சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் தெரிவித்தனர். பஞ்சாப் தலிபான் தீவிரவாதிகள், தாக்குதலுக்கு தயாராகி வரும் தகவலை அடுத்தே அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.


source:dinakaran

StumbleUpon.com Read more...

இந்தப்படம் சொல்லும் செய்தி என்ன?







link: http://www.athirvu.com/


StumbleUpon.com Read more...

சிங்கள தேசம் அறுவடையை நோக்கி நகர்கின்றது:

சிங்கள தேசம் அறுவடையை நோக்கி நகர்கின்றது: பாரிஸ் ஈழநாடு
 
சிங்கள தேசம் அறுவடையை நோக்கி நகர்கின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகையில் இன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுரையில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழீழ மக்கள் மீதான இன அழிப்புப் போரை வெற்றிகரமாக நிறைவேற்றி, அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்த ராஜபக்ஷக்களுக்கு சனி பார்வை பெரும் அச்சத்தைக் கொடுத்து வருகின்றது. இந்திய ஆதரவு என்ற பொங்கு சனி பார்வையில் அனைத்தையும் விருப்பம்போல் நிறைவேற்றிய ராஜபக்ஷக்களுக்கு இப்போது போதாத காலம்தான்.

மேற்குலகிலிருந்து வெளிவரும் அறிக்கைகளும், அறிவுறுத்தல்களும், கண்டனங்களும் ஒரு பக்கம் கலக்கத்தைக் கொடுத்தாலும், இருப்புக்கே ஆபத்தாக சரத் பொன்சேகா வயிற்றில் புளி கரைத்து வருகின்றார். வளர்த்த கடா மார்பில் பாய்வதற்குத் தயாராகி வருவதான செய்திகள் ராஜபக்ஷக்களின் தூக்கத்தைக் கெடுத்து வருகின்றது.

சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தை சிங்கள கடும்போக்கு அரசியல் கட்சிகளான ஜே.வி.பி.யும், சிஹல உறுமயவும் வரவேற்றுள்ளன.

ஈழத் தமிழர்கள் மீதான போர் வெற்றியின் மொத்த சொந்தக்காரராகத் தம்மைக் காட்டி அரசியல் களத்தில் வெற்றிகளைக் குவித்து வரும் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து நின்று ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற முடியாது என்ற யதார்த்தத்தை ஒப்புக்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தனது இடத்தை சரத் பொன்சேகாவுக்கு வழங்க முடிவு செய்துவிட்டார். சரத் பொன்சேகாவும் இதற்கு இணங்கியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

பராக் ஒபாமாவே போட்டியிட்டாலும் இன்னமும் 30 வருடங்களுக்கு மகிந்தவே ஜனாதிபதியாக இருப்பார் என்ற அரச தரப்பு எச்சரிக்கைகளும், இராணுவத்தினர் அரசியலில் ஈடுபட முடியாது. அத்துடன் அவர்களை இணைத்து யாரும் செய்திகள் வெளியிட முடியாது என்ற அறிவித்தல்களும் ஆளும் கட்சி மிரண்டு போயுள்ளதையே உணர்த்துகின்றது.

மகிந்த ராஜபக்ஷவுக்கு நிகரான போட்டியாளராக சரத் பொன்சேகா சிங்கள தேசத்தில் நோக்கப்படுகின்றார். சிங்களத்தின் யுத்த கள வெற்றியை பங்கு போடும் வேட்பாளராகவும், சிங்கள கடும் போக்காளர்களின் ஆதரவுக்குரியவருமான சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டால் நிச்சயம் அவர் வெற்றி பொறுவார் என்பதே சிங்கள தேசத்தின் கணக்காக உள்ளது.

இதனால், உத்தியோகபூர்வமாக ஐக்கியதேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகா அறிவிக்கப்பட்டதும் தற்போதைய ஆளும் அரசில் அமைச்சர்களாக உள்ள பலரும் கட்சி மாறுவதற்கும் ஆயத்தமாக உள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் அணி மாறுவதற்குத் தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். குடும்ப அரசியலைக் கோலாகலமாக நடாத்திய மகிந்த ராஜபக்ஷவுக்கு அருகிலிருந்தே பலர் குழி பறிக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்.

சிங்கள தேசத்தில் அரசியல் களம் கூடு பிடித்துள்ள நிலையில் தமிழர்கள் எவரும் இது குறித்துக் கவலை கொள்ளப் போவதில்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரே ஒரு தடவை திருமதி சந்திரிகாவின் பேச்சுக்களை நம்பி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வாக்களித்ததைத் தவிர, வேறு எந்த ஜனாதிபதி தேர்தலிலும் அவர்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை.

தமிழின அழிப்பைக் கொடூரமாக நடாத்தி முடித்ததுடன் அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியதும், வன்னி மக்களை வதை முகாம்களில் அடைத்ததுவும் தமிழர்களால் மறக்கப்படக்கூடிய, மன்னிக்கக்கூடிய விடயங்களாக இல்லை. சிங்கள தேசிய இனவாதிகளில் யாரையும் வெற்றிபெற வைக்க வேண்டிய தேவையும் தமிழீழ மக்களுக்குக் கிடையாது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் விடுதலைப் புலிகளின் அழைப்பை ஏற்று, அந்தத் தேர்தலைப் புறக்கணித்தது போலவே, இந்தத் தேர்தலும் அவர்களால் புறக்கணிக்கப்படும் என்பதே யதார்த்தமாக உள்ளது. அதனை அவர்கள் யாழ். மாநகரசபைத் தேர்தலிலும் உணர்த்தியுள்ளார்கள்.

வேண்டப்படாத அரசியல்வாதியான மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக அரியணை ஏறுவதை மேற்குலகு விரும்பப் போவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ரணில் போட்டியிட்டு வெல்வதையே அவர்கள் விரும்புவார்கள். அதற்கு சார்பாக, இனவாத சிந்தனையூட்டப்பட்ட சிங்கள இனத்தைத் திருப்ப முடியாது என்ற யதார்த்தத்தையும் மேற்குலகு புரிந்து கொள்ளும்.

இந்தியாவுக்கு களம் அமைத்துக் கொடுத்து, சீனாவுடன் சீட்டாட்டம் நடாத்தி வந்த மேற்குலகு, சீனா பக்கம் முற்றாகச் சாயக்கூடிய சரத் பொன்சேகா ஆட்சிக்கு வருவதை விரும்பாது. இந்த நிலையில் மேற்குலகு கடும் நிலையை எடுக்க முற்பட்டால் இலங்கைத் தீவு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தோற்றுப்போவதை இந்தியா விரும்பப் போவதில்லை. தமிழர்கள் மீதான இன அழிப்பிற்குத் துணை நின்றதுடன், அதன் பின்னரான மேற்குலகினதும், ஐ.நா.வினதும் அழுத்தங்களிலிருந்து இன்றுவரை மகிந்தவைப் பாதுகாத்து வரும் இந்தியா மீண்டும் மகிந்தவை ஆட்சியில் அமர்த்துவதன் மூலமாகத் தனது நலன்களைப் பாதுகாக்கவே முன்வரும். அதற்காக, இலங்கைத் தீவின் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மீது தனது செல்வாக்கைப் பிரயோகிக்கவும், மகிந்தவை வெல்ல வைப்பதற்கான பொருளாதார பலத்தை வழங்கவும் முன்வரும்.

தமிழர்கள் மீதான யுத்த வெற்றியை சொந்தம் கொண்டாடும் இரு சிங்கங்களும் உறுமல்களோடு தேர்தல் களத்தை சூடாக்க ஆரம்பித்துள்ளன. போகப் போக இந்தக் கர்ச்சிப்புக்கள் அதிகமாகி, அதன் மூலம் பல யுத்தகள உண்மைகளும் வெளிவரக் கூடும். எந்தப் படுபாதகத்திற்கும் அஞ்சாத மகிந்த ராஜபக்ஷ தனது எதிர்காலத்திற்கு சவாலாக உருவெடுக்கும் சரத் பொன்சேகாவை அழித்து விடவும் முயற்சிக்கக் கூடும்.

அதற்கும் இருக்கவே இருக்கிறது 'விடுதலைப் புலிகள்' என்ற பிரம்மாஸ்திரம். ராஜபக்ஷக்களின் திட்டங்கள் எதுவானாலும் நிறைவேற்றக் காத்திருக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களும் அவர் வசம் உள்ளன. மாறாக, சரத் பொன்சேகாவும் அவருக்குச் சளைத்தவரல்ல. இராணுவ தளபதியாக இருந்த அவர் பின்னால் அணி வகுக்கக்கூடிய ஆயுத படையினர் இருக்கவே செய்வார்கள்.

இராணுவத்தின் வெற்றியை, தனது குடும்ப வெற்றியாக்க மகிந்த முயற்சி செய்கிறார் என்ற பிரச்சாரத்துடன் வெற்றியைத் தனதாக்க முடியாமல் போனால், ஒரு இராணுவப் புரட்சி மூலம் சாதிக்க முயற்சிக்கமாட்டார் என்றும் உறுதியாக நம்ப முடியாது.

ஆக மொத்தத்தில், சிங்கள தேசம் அறுவடையை நோக்கி நகர்கின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.


source:tamilwin


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அதிவேக ஆப்பரா பிரவுசர் வெளியானது


 
 

பிரவுசர் போட்டியில் பல்வேறு புதிய வசதிகளுடன் எப்போதும் ஆப்பரா அறிமுகமாகும். இருந்தாலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் பிரவுசர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் மற்றும் பரபரப்பு இதற்குக் கிடைப்பதில்ல. ஆனால், இன்று பிரவுசர்களில் அதிகம் பேசப்படும் பல புதிய வசதிகளை ஆப்பரா தான் முதலில் வடிவமைத்தது என்பது அதன் சிறப்பு. டேப் பயன்பாடு, பக்கங்களுக்கான தம்ப்நெயில் உருவாக்கம், இணைய பக்கங்களில் எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பம் போன்ற புதிய வரைமுறைகள் ஆகியவற்றை ஆப்பரா தான் முதலில் கொண்டு வந்தது. இதே போல் இப்போது வெளியிடப்பட்ட பிரவுசரிலும் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.

ஆப்பரா தனக்கென பல வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து இவர்கள் ஆப்பராவினையே பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வெளியாகியுள்ள ஆப்பரா 10 நிச்சயம் இதன் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பதாகவே இருக்கும். இதன் சிறப்புகளை இங்கு பட்டியலிடலாம். முதலில் இதன் வேகத்தைக் கூற வேண்டும். இது செயல்படும் தன்மை முதன் முதலில் கூகுள் குரோம் பிரவுசரை இயக்கிய போது ஏற்பட்ட உணர்வைத் தருகிறது. மிக வேகமாக இது இயங்குகிறது. சூப்பர் பாஸ்ட் என்று கூடச் சொல்லலாம். இதற்கு முன்னால் வந்த பதிப்பு 9.6 பதிப்பைக் காட்டிலும் 40% வேகம் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.



மற்றபடி இன்றைக்கு வருகின்ற பிரவுசர்களில் இருக்கும் புதிய வசதிகள் பல இதிலும் உள்ளன. பாப் அப் பிளாக்கர், ப்ளக் இன் வசதிகள், ஆர்.எஸ்.எஸ். ரீடர், பிஷ்ஷிங் தடுக்கும் வசதி எனப் பல வசதிகள் இதில் கிடைக்கின்றன. மற்ற சில பிரவுசர்களில் இல்லாத இமெயில் கிளையண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதில் பி.ஓ.பி.3 மற்றும் ஐமேப் மெயில் வசதி உள்ளது. இதனால் நீங்கள் உங்கள் பி.ஓ.பி. 3 மெயில்களை இந்த பிரவுசர் மூலமாகவே கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம்.
அனைத்து வசதிகளையும் பயன்படுத்த எளிதான யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது இதன் இன்னொரு சிறப்பு. 



இதன் டேப்களை அமைக்கும் வசதி சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு டேப்பின் மேலாக அதன் தளக் காட்சியினை ஒரு தம்ப்நெயில் படமாக அமைத்துக் கொள்ளலாம். இது ஒரு புதிய உத்தி ஆகும். இதற்கு முன் கர்சரை அந்த டேப்பின் மேலாகக் கொண்டு செல்கையில் மட்டும் இந்த படம் தெரியும். மேலும் இவை அமைந்துள்ள டேப் பாரின வலது இடதாக இழுத்து அமைத்துக் கொள்ளலாம். இப்போது கிடைக்கும் மிக அகல மானிட்டர் வைத்திருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
அடுத்த சிறப்பு இதன் ஸ்பீட் டயல் வசதியாகும். நீங்கள் அடிக்கடி திறந்து பார்க்க விரும்பும் டேப்பிற்கான தளத்தினை அடுத்துப் பார்க்கும் 4 முதல் 24 தளங்களின் மேலாக, ஒரு தம்ப் நெயில் படமாக வைத்துக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அத்தளத்தைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அப்போது அதனைக் கிளிக் செய்து, தளத்திற்குச் செல்லலாம். இந்த வசதி டிபால்ட்டாகக் கிடைக்கிறது. 



இதன் இன்னொரு குறிப்பிடத்தக்க வசதி இதிலுள்ள இன் – லைன் ஸ்பெல் செக்கர் வசதி. இது பிளாக்குகளை அமைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் புதுமையாக ஆப்பரா டர்போ என்ற பேஜ் கம்ப்ரஸ்ஸன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் டயல் அப் வகை இன்டர்நெட் இணைப்பில் கூட, வேகமாக பிரவுசிங் செய்திட முடியும். இணைய இணைப்பின் வேகம் குறையும்போது, இந்த தொழில் நுட்பம் அதனைக் கண்டறிந்து, இணைய தளங்களை ஆப்பராவின் சர்வர்களில் கம்ப்ரைஸ் செய்து பின் தருகிறது. இதனால் டேட்டா குறைவாக இறக்கம் செய்யப்பட்டாலும் நமக்குப் பின்னணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பக்கங்கள் கிடைக்கும். இவை தவிர இணையப் பக்கங்களை வடிவமைப்பவர்களுக்குத் தொழில் ரீதியான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆப்பரா தந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு முக்கியமான வசதி இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இப்போதைய பிரவுசர்கள் தரும் பிரைவேட் பிரவுசிங் வசதி இதில் இல்லை. இந்த வசதி இருந்தால் நாம் பிரவுசிங் செய்த தளங்கள் குறித்த குறிப்புகள் பிரவுசரில் தங்காது. பிரவுசரை மூடியவுடன் நீக்கப்படும். இந்த வசதியை ஆப்பரா பிரவுசர் தரவில்லை. எனவே இந்த வசதி கட்டாயம் வேண்டும் என்பவர்கள் இதன் பக்கம் போக வேண்டாம். வேண்டாதவர்கள் தாராளமாக ஒரு முறை பயன்படுத்திப் பார்த்து, பிடித்திருந்தால் இதனையே வைத்துக் கொள்ளலாம்.



உங்களுக்கு ஆப்பரா பிரவுசர் தேவை என்றால் கீழ்க்காணும் முகவரிக்குச் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம். அனைத்து வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குமான பைல் இங்கு இலவசமாகக் கிடைக்கிறது.
http://www.opera.com /browser/download/


source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

உங்களுக்குத் தெரியுமா?

 
 

அடுத்து வந்து மாற்றத்தைத் தர இருக்கும் ஒரு கம்ப்யூட்டர் சாதனம் – புளுடூத் லேசர் விர்ச்சுவல் கீ போர்டு (Bluetooth Laser Virtual Keyboard). இது எந்த சமதளமான இடத்திலும் கீ போர்டு ஒன்றைக் காட்டும். இதன் மூலம் நீங்கள் எந்த டெக்ஸ்ட்டையும் டைப் செய்யலாம். டைப் செய்கையில் ஏற்படும் கிளிக் சத்தம் இதிலும் ஏற்படும். 63 கீகளுடன் கூடிய முழு குவெர்ட்டி கீ போர்டாக இது கிடைக்கும். ஒரு ஸ்டாண்டர்ட் கீ போர்டில் எந்த வேகத்தில் டைப் செய்திட முடியுமோ அந்த வேகத்தில் இதில் டைப் செய்துவிடலாம். வர இருக்கும் மிகச் சிறந்த அறிவியல் சாதனமாக இது இருக்கும்.


முதல் முதலாகத் தானாக இயங்கும் முழுமையான ஆட்டோமேடிக் மொபைல் சிஸ்டம்

(MTA Mobile Telephone System) எரிக்சன் நிறுவனத்தால் வடிவமைக்கப் பட்டது. வர்த்தக ரீதியாக 1956ல் இது வெளியிடப்பட்டது. இதன் ஒரே பிரச்சினை இதன் எடை தான். 90 பவுண்ட் அதாவது ஏறத்தாழ 40 கிலோ எடையில் இது இருந்தது. பின்னர் இதன் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ஒன்று ட்ரான்சிஸ்டர்களைக் கொண்டு (DTMF)  சிக்னல் வகையைப் பயன்படுத்தியது. தொடக்கத்தில் இதற்கு 150 வாடிக்கையாளர்கள் இருந்தனர். நடத்த முடியாமல் மூடியபோது இதன் வாடிக்கை யாளர்கள் எண்ணிக்கை 600. இது நடந்தது 1983ல்.


உலகின் முதல் வெப்சைட் CERN ஆகஸ்ட்6, 1991 ஆம் ஆண்டு ஆன்லைனில் வைக்கப்பட்டது.

World Wide Web  எப்படி இருக்கும் என்பதனை விளக்குவதற்காக இது ஆன்லைனில் அமைக்கப் பட்டது. அத்துடன் ஒருவர் எப்படி ஒரு வெப்சைட்டைத் தன்னு டையதாக அமைத்துக் கொள்ளலாம் என்றும் வெப் சர்வர் ஒன்றை எப்படி அமைக்கலாம் என்று விளக்கியது. இதுதான் உலகின் முதல் வெப் டைரக்டரியும் கூட. ஏனென்றால் பெர்னர்ஸ் லீ இதில் மற வெப்சைட்களின் பட்டியலையும் வெளியிட்டிருந்தார்.


இன்டர்நெட்டை மிகச் சிறந்த முறையில் வரையறைகளை வகுத்துக் கண்காணித்து வரும் World Wide Web Consortium (W3C)  என்ற அமைப்பு,1994 ஆம் ஆண்டு, மாசசு ட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பல்கலையில் பெர்னர்ஸ் லீ (BernersLee)யினால் அமைக்கப்பட்டது. இணைய வலையின் தன்மையை மேம்படுத்த எண்ணம் கொண்ட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து இதனை உருவாக்கின. இந்த அமைப்புக்கான கட்டமைப்பு மற்றும் சார்ந்த கொள்கைகளையும், எந்தவிதமான ராயல்டி பணமும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாகத் தர முன்வந்தார். அதனாலேயே பல நாடுகள் அவற்றைப் பின்பற்ற முன்வந்தன.

1955, அக்டோபர் 28 – இது என்ன நாள்? பில்கேட்ஸ் பிறந்த நாள். சாதாரண பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்த பில்கேட்ஸ் தனக்கு கம்ப்யூட்டர் மேல் உள்ள ஆர்வத்தினைத் தன் 13 ஆவது வயதில் உணர்ந்தார். தன் 18 ஆவது வயதில், 1973ல், ஹார்வேர்ட் பல்கலையில் படிக்கும்போது மைக்ரோ கம்ப்யூட்டர்களுக்கான BASIC  என்னும் புரோகிராமிங் மொழியை உருவாக்கினார்.

புளுடூத் என்ற தொழில் நுட்பத்திற்கு ஏன் அந்த பெயர் வந்தது? சத்தியமாக பல்லுக்கும் கலருக்கும் இந்த தொழில் நுட்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பத்தாம் நூற்றாண்டில் ஒரு டேனிஷ் மன்னன் Harald Blatand என்ற பெயரில் இருந்தான். இந்த பெயரை புளுடூத் என்று உச்சரிக்க வேண்டுமாம். இந்த மன்னர் ஸ்காண்டிநேவியாவில் துண்டு துண்டாக இருந்த நிலப்பரப்பை ஒன்றினைத்து ஒரு நாட்டை உருவாக்கி அரசாட்சியை ஏற்படுத் தினாராம். புளுடூத் டெக்னாலஜியிலும் துண்டு துண்டான டேட்டாவை குறுகிய ஏரியாவிற்குள், எந்த இணைப்பும் இன்றி இணைப்பதால், புளுடூத் கண்டறிந்த வல்லு நர்கள் இந்த பெயரினைக் கொடுத்தார்கள். 


3ஜி போன் இதோ அதோ என்று இந்தியாவிற்கு வருவது இருக்கட்டும். விரைவில் 4ஜி வந்து இந்த உலகைப் புரட்டி எடுக்கப்போகிறது. 4ஜி மொபைல் இந்த உலகத்தை மட்டுமல்ல, உங்கள் தனிநபர் உலகினையும் மாற்றப் போகிறது. உள்ளங்கைக்குள் அடங்கும் போனாக அது இருக்கும். எடை என்பது குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்காது. நம் வர்த்தக பேரம், பேமென்ட் எல்லாம் இதன் வழியாக மாறிவிடும். இப்போது கடைகளில் பொருள் வாங்கிப் பணம் கொடுக்கச் சென்றால் கேஷா? கார்டா? எனக் கேட்கிறார்கள். 4ஜி வந்துவிட்டால் கார்டா? போனா? என்று கேட்பார்கள். நியூஸ் பேப்பர் வாங்க மாட்டீர்கள். இதிலேயே எளிதாகவும் மலிவாகவும் படித்துக் கொள்ளலாம். இதிலிருந்தே திரைப்படம் ஒன்றை சுவரில் காட்டிப் பார்க்கலாம். உங்கள் ஏர் கண்டிஷ னரையும், மைக்ரோ ஓவன் அடுப்பையும் இதன் மூலம் உங்கள் அலுவலகத்திலிருந்தே இயக்கலாம். விபத்து ஏற்பட்டால் இதன் மூலம் உங்கள் டாக்டர் என்ன செய்திட வேண்டும் என செய்து காட்டலாம்.


உங்கள் மேஜையில் வைக்கப்பட்ட உணவு தரமானது இல்லை என்று உங்கள் மொபைல் கூறும். "தொடர்ந்து போகாதே; அங்கு ஒருவன் துப்பாக்கியுடன் உள்ளான்' என்று கூட எச்சரிக்கும். காத்திருங்கள் 4ஜி மொபைல் போனுக்கு. விண்டோஸ் இயக்கத்தில் பல புரோகிராம்களை எப்படி ஸ்டார்ட் அப் விண்டோவில் கிடைக்கும் ரன் கட்டத்தில் கொடுத்து வாங்குவது என்று இதற்கு முன் கம்ப்யூட்டர் மலரில் எழுதப்பட்டுள்ளது. கீழே இன்னும் சில புதிய கட்டளைகள் தரப்படுகின்றன. இவற்றைச் சரியாக ரன் கட்டத்தில் டைப் செய்தால் தரப்பட்டுள்ள இடத்திற்கான ஷார்ட் கட் கீகளாக அவை அமையும்.


1. மை கம்ப்யூட்டர் பெற:  


explorer.exe /root,,::{20D04FE03AEA1069A2D808002B30309D}


2. மை கம்ப்யூட்டரில் சி டிரைவ் செலக்ட் செய்தபடி கிடைக்க
explorer.exe /select,c:


3. மை நெட்வொர்க் பிளேசஸ் செல்ல:


explorer.exe /root,,::{208D2C603AEA1069A2D708002B30309D}


4. ரீசைக்கிள் பின் பெற:
explorer.exe /root,,::{645FF0405081101B9F0800AA002F954E}


5. டாஸ்க் மேனேஜர் கிடைக்க:
taskmgr.exe


6. கம்ப்யூட்டர் மேனேஜ்மெண்ட் விண்டோவிற்கு:


compmgmt.msc


7. சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் கிடைக்க:
control.exe sysdm.cpl


8. வால்யூம் கண்ட்ரோல் கிடைக்க:
sndvol32.exe


9. டேட் மற்றும் டைம் ப்ராபர்ட்டீஸ் கிடைக்க:
sndvol32.exe


10. லாக் ஆப் செய்திட:
shutdown.exe l


11. யூசர் மாற்றவும் கம்ப்யூட்டரை லாக் ஆப் செய்திடவும்:
rundll32.exe user32.dll LockWorkStation


12. சிஸ்டம் ஹைபர்னேட் செய்திட:
rundll32.exe powrprof.dll,SetSuspendState


13. சிஸ்டம் ரீஸ்டார்ட் செய்திட:
shutdown.exe r


14. ஷட் டவுண் செய்திட:
shutdown.exe s


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP