சமீபத்திய பதிவுகள்

இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு

>> Monday, January 18, 2010

 

ழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலைகளில் சர்வதேச நியதிகள் யாவும் மீறப்பட்டன என்பது உலகுக்கே தெரியும். போரின் கடைசி நாட்களில் இலங்கை அரசோடு புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், ஆயுதங்களைக் கைவிட முன்வந்ததையும் நாம் அறிவோம். அவர்களை வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சொன்னதின் பேரில், அதை ஏற்று முன்னே சென்றவர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டதையும் உலக நாடுகள் அறிந்ததுதான்.

பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருந்த அப்பாவி மக்கள் அப்படியே புல்டோசர்களால் புதைத்து சமாதியாக்கப்பட்டது உலகில் எங்குமே நடந்திராத பச்சைப் படுகொலை. அப்படிக் கொல்லப் பட்டவர்கள் ஒருவர், இருவர் அல்ல. நூறு பேர் இருநூறு பேர்கூட அல்ல; ஆயிரக்கணக்கான மக்கள்! போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மே 17-ம் தேதிக்குப் பிறகும்கூட முள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்து படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன. போரின் இறுதியில் பிடித்துச் செல்லப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி கண்களையும், கைகளையும் கட்டி அவர்களை சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகள் சில மாதங்களுக்கு முன்னால் உலகமெங்கும் வெளியாகின. அவையெல்லாம் பொய் யான காட்சிகள் என்று சிங்கள அரசாங்கம் மறுத்து வந்தது. ஆனால், அந்த வீடியோ காட்சிகளை அறிவியல்பூர்வமாக சோதனை செய்த ஐ.நா. சபை, அது உண்மையான காட்சிதான் என்பதை இப்போது உறுதி செய்து உள்ளது.

ஐ.நா. சபையில் உள்ள சட்டவிரோதமான படுகொலைகள் குறித்து ஆராயும் பிரிவுக்கு பொறுப்பாக உள்ள பிலிப் ஆல்ஸ்டன், இது குறித்து சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, கடந்த டிசம்பர் 18-ம் தேதி இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியிருக்கிறார். அதில், 'இலங்கை அரசு போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்த நாளுக்கு முன்தினமான 2009, மே 17-ம் தேதி நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய புலிகளின் மூன்று தலைவர்களும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வடக்குப் புறமாக ஓர் இடத்தில் சிக்கிக் கொண்டனர். தூதர்கள் மூலமாக அவர்கள் உங்கள் அரசை தொடர்புகொண்டு இலங்கை ராணுவத்திடம் தாங்கள் சரணடைய விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். ராணுவத் துறை செயலாளரும், உங்கள் அரசு ஆலோசகர்களில் ஒருவராக உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர்களை வெள்ளைத் துணியேந்தி வருமாறு கூறியுள்ளனர். அந்த சமயத்தில் போர் முனையிலிருந்த இலங்கை ராணுவத்தின் 58-வது படைப்பிரிவின் தலைவருக்கு ராணுவ ஆலோசகரிடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. சரணடைய வந்த புலிகளின் தலைவர்கள் மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு அதில் கூறப்பட்டுள்ளது. மே 18-ம் தேதி அதிகாலையில் நடேசன், புலித் தேவன், ரமேஷ் ஆகிய மூவரும் வெள்ளை துணிகளை பிடித்தபடி ராணுவத்தை நோக்கிச் சரணடைய வந்தபோது அவர்கள்மீது இலங்கை ராணுவத்தினர் சரமாரியாக சுட்டு, அவர்களை படுகொலை செய்துள்ளனர். அவர்களோடு வந்த அவர்களது குடும்பத்தினரையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்...' என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிலிப் ஆல்ஸ்டன், இந்த விவரங்களையெல்லாம் முன்னாள் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் எனவும், சம்பவம் நடத்த நேரத்தில் இலங்கை ராணுவத்தோடு சென்று கொண்டிருந்த பத்திரிகையாளர் சிலரும் இந்தத் தகவல்களை உறுதிப் படுத்தியுள்ளனர் என்றும் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

1949-ம் ஆண்டில் இயற் றப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு 3, போர்க்காலத்தில் கடைப் பிடிக்கப்பட வேண்டிய நியதிகள் பற்றிக் கூறியுள்ளது. 'போரில் நேரடியாகப் பங்கெடுக்காதவர்கள், போரில் ஈடுபட்டுள்ள வீரர்களின் குடும்பத்தினர், ஆயுதங்களை கைவிட்டு சரணடைய முன்வந்தவர்கள், காயத்தாலோ, நோயாலோ பாதிக்கப்பட்டவர்கள், சிறை பிடிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மனிதாபிமான முறையில் நடத்தப்பட வேண்டும்!' என்று வலியுறுத்தியுள்ளது. அது போலவே சர்வதேச மனித உரிமை சட்டங்களும், ஆயுதங்களைக் கைவிட்டவர்களைக் கொல்லக் கூடாது என்பதை வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில், இலங்கையில் நடைபெற்றுள்ள இனப்படுகொலை என்பது சர்வதேச சட்டங்களுக்கும், நியதிகளுக்கும் மாறானதாக நடத்தப்பட்டுள்ளது. எனவே, இதைப் பற்றி இலங்கை அரசு விளக்கமளிக்க வேண்டும் என பிலிப் ஆல்ஸ்டன் கூறியிருக்கிறார். அவர் எழுதிய கடிதத்தின் இறுதியில் மூன்று பிரச்னைகளை வலியுறுத்தி உள்ளார். 'போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் உண்மைதானா? அதை நீங்கள் மறுப்பீர்களேயானால்... அப்படி இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை என்று நிரூபிக்க ஆதாரங்களோடு உங்கள் அரசு முன்வர வேண்டும். நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது குடும்பத்தினர் கொல்லப்பட்டது குறித்து நீங்கள் தரும் விளக்கம் என்ன? இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து நாங்கள் தெரிவித்துள்ள கருத்துகளைப் பரிசீலித்து, அதற்கு நீங்கள் பதில் கூறவேண்டும்!' என ஆல்ஸ்டன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்காக ஐ.நா. சபை விளக்கம் கேட்டுள்ள நிலையில், ஐ.நா. சபையைச் சேர்ந்த அதிகாரிகளே இத்தகைய இனப்படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஐ.நா. பொதுச்செயலாளரின் தலைமை காரியதரிசியாக இருக்கும் விஜய் நம்பியார், ஈழத்தில் நடந்த யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் ஒரு சமாதானத் தீர்வை எட்டுவதற்காக பலரிடமும் அணுகிப் பேசி வந்தார். யுத்தத்தின் கடைசி நாட்களில் புலிகளின் மூத்த தலைவர்கள் சிலர் விஜய் நம்பியார் வழியாக சமாதானம் பேச முற்பட்டனர். அவர்கள்தான் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். புலிகளின் மூத்த தலைவர்கள் கொல்லப் பட்டதில் விஜய் நம்பி யாருக்கும் பங்கு உள்ளது என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, அவர் மீது முதலில் ஐ.நா. சபை விசாரணை நடத்தட்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஈழத்தில் இறுதி யுத்தம் முடிந்து சுமார் எட்டு மாதங்கள் ஆகும் நிலையிலும் அங்கே தமிழர்கள் கொல்லப்படுவது நின்றபாடில்லை. 'மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள்' வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்போதும் கூட சிங்கள ராணுவம் இப்படி சித்ரவதை செய்கிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 'வன்னி டெக்' என்னும் நிறுவனத்தின் இயக்குநராயிருந்த கதிரவேலு தயாபர ராஜா என்பவர் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற விவரத்தை அந்த அறிக்கை வெளியிட்டுள்ளது. புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த பாலகுமார், தன் மகனோடு சரணடைந்து ராணுவத்தினால் கூட்டிச் செல்லப்பட்டும் அவர் எங்கு இருக்கிறார் என்பதை ராணு வம் ரகசியமாக வைத்துள்ளது என்று குற்றம் சாட்டியிருக்கும் அந்த அறிக்கை, தயாபர ராஜாவுக்கு நடந்ததை விரிவாக எடுத்துக் கூறியுள்ளது.

வன்னி டெக் என்பது சுயேச்சையாக நடத்தப்பட்டு வந்த ஓர் அமைப்பு. சில காலத்துக்குப் பிறகு புலிகள் அந்த அமைப்பை தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். அதற்கு தேவையான டீசல், ஜெனரேட்டர் முதலானவற்றை புலிகள் வாங்கி வந்தனர். இன்னும்கூட அந்த நிறுவனம் சுதந்திரமாகவே செயல்பட்டு வந்தது. அதன் இயக்குநராக இருந்த தயாபர ராஜா தனக்கென்று சம்பளம் எதையும் வாங்கிக் கொண்டதில்லை. அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உதயகலா என் பவரும் தயாபர ராஜாவும் திருமணம் செய்து வாழ்ந்தனர். அந்தத் திருமணம் புலிகளுக்கு உடன்பாடாக இல்லாத காரணத்தால் அவர் தனது பதவியை விட்டு விலகி விட்டார். அந்த நேரம் புதுக்குடியிருப்பு பகுதியில் யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. தனது பதவியிலிருந்து விலகி மனைவியோடு வெளியேறிய தயாபர ராஜா, இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். உளவுத் துறையின் விசாரணைக்கென்று அவர் அழைத்துச் செல்லப்பட்டார். கொழும்புவுக்கும் அதன் பின்னர் அடையாளம் தெரியாத ஒரு முகாமுக்கும் அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தயாபர ராஜாவும், உதயகலாவும் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர். போர் முடிந்து பல மாதங்கள் வரை அவர்கள் சித்ரவதை செய்யப்படுவது நிற்கவே இல்லை.

இடையிடையே உதயகலாவின் பாட்டி அவர்களைச் சென்று சந்தித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் சித்ரவதை செய்யப்பட்ட விவரம் அவருக்கு நன்றாகத் தெரியும். இதனிடையே, கடந்த 2009 செப்டம்பர் 15-ம் தேதி தயாபர ராஜா இறந்து விட்டார். அதற்கு முன் இப்படி யாராவது இறந்தால் அவர்களை புலிகள்தான் கொன்றுவிட்டார்கள் என்று இலங்கை ராணுவம் எளிதாகப் பொய் சொல்லித் தப்பித்து விடும். ஆனால், புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட இன்றைய சூழலில் இலங்கை ராணுவம் பழி போடுவதற்கு யாரும் இல்லை. ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தயாபர ராஜா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டபோது, அவரது மார்பில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயம் இருந்தது. உதயகலா இப்போது விடுதலை செய்யப் பட்டிருக்கிறார். ஆனால், அவரால் நடக்கக் கூட முடியாத நிலை. அந்த அளவுக்குக் கொடிய சித்ரவதை...!

இலங்கையில் தமிழ் மக்கள் இப்போதும் எவ்வாறு கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சியாகும். தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடிய புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழர்களுக்கென்று பாதுகாப்பாக எவரும் இல்லை என்ற நிலை ஏற்பட் டுள்ளது. அங்கு அதிகாரத்துக்காகப் போட்டியிடும் இரண்டு கொலைகாரர்களில் எவருக்கு வாக்களிப்பது என்பதில் அவர்கள் போட்டாபோட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டியது மிக மிக அவசியமாகும். அந்தக் கடமை தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் அதிகம் உள்ளது.

இலங்கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் சில முன்முயற்சி எடுத்தபோது, அதைத் தடுத்து இலங்கை அரசை காப்பாற்றியது இந்தியாதான். இன்று மீண்டும் அத்தகைய சூழல் உருவாகியிருக்கிறது. ஐ.நா. சபையின் அதிகாரி பிலிப் ஆல்ஸ்டனின் அறிக்கைக்குப் பிறகு சர்வதேசச் சூழல் சற்றே மாறியிருக்கிறது. இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு, இலங்கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்த வேண்டும். இலங்கையை, 'இனப்படுகொலை செய்த நாடு' என்று அறிவிக்குமாறு ஐ.நா. சபையை இந்திய அரசு வலியுறுத்தினால்... நிச்சயமாகக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

இலங்கைப் பிரச்னையை புலிகளை மட்டுமே மையமாக வைத்து அணுகிக்கொண்டிருந்த இந்திய அரசு, அதே வித அணுகுமுறையை இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனைக்கு உரியதாகும். தற்போது இலங்கையின் ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு இந்தியாவுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பது முன்பைவிட, இப்போது அதிகம் தெளிவாகி உள்ளது. இந்நிலையிலேனும் இந்தியாவின் பாதுகாப்பைக் கருதியாவது இலங்கை ஆட்சியாளர்கள் மீது போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்தியா வலியுறுத்த வேண்டும். இதற்காக தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் யாவும் கட்சி பேதம் பாராமல் ஒருமித்துக் குரல் எழுப்ப வேண்டும்


source:vikatan


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP