சமீபத்திய பதிவுகள்

0.025 மில்லி கிராம் எமன்!

>> Wednesday, February 24, 2010

 
 

பூனையைவிட புலிகள் வலிமையானவை என்பதை எலிகள் ஏற்றுக்கொள்வது இல்லை. ஆனால், கொசுக்கள் எவ்வளவு கொடூரமானவை என்பதை உலகமே ஒப்புக்கொள்ளும்!

''கொசுக்களைக் கட்டுப்படுத்த கருணாநிதியின் அரசு தவறிவிட்டது'' என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியதும், ''ஜெயலலிதா தான் இருப்பதாகக் காட்டிக் கொள்ள கொசுதான் கிடைத்ததா?'' என்று கிண்டலடித்தார் முதல்வர் கருணாநிதி. ''எதற்கெல்லாமோ போராட்டங்கள் நடத்திப்பார்த்து ஓய்ந்துவிட்டு கொசுவுக்காகப் போராடுகிறார்'' என்று துணை முதல்வர் ஸ்டாலின் நக்கலடிக்கிறார். அவர்கள் வேண்டுமானால், கொசுக்கடியில் இருந்து தப்பி இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்களை மரண பயத்தின் பக்கம் கொசுக்கள் மெள்ள நகர்த்திக்கொண்டு இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

எங்கே பார்த்தாலும் மர்மக் காய்ச்சல். சிலர் மலேரியா என்கிறார்கள். பலர் சிக்குன்குனியா என்கிறார்கள். டெங்குவில் இது ஒருவகை எனச் சொல்லப்படுகிறது. யானைக்கால் வியாதியில் கொண்டுபோய்விடும் என்ற பயம் இருக்கிறது. நடையைத் தளர்த்தி காய்ச்சல் வந்தவரின் வாழ்க்கையை ஓரத்தில் இருத்தி உட்காரவைக்கிறது. குழந்தை, பெரியவர் என வயது வித்தியாசம் இல்லை. ஆண், பெண் பேதம் இல்லை. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் சிறு கிளினிக் வாசல்களிலும் திருவிழாக் கூட்டம்தான். மலேரியா, சிக்குன்குனியா, மூளைக் காய்ச்சல், டெங்கு, யானைக்கால் நோய் என என்ன பெயரிட்டு அழைத்தாலும் அவை ஐந்தும் கொசுக்களால் வருபவைதான்.

பொதுநல மருத்துவர் சிவந்தி பாஸ்கரிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''மலேரியாவில் நான்கு வகை உள்ளன. மலேரியா என்பது ஒட்டுண்ணி. ஆலோபீலஸ் என்ற பெண் கொசு மூலமாகப் பரவுகிறது. பிளாஸ்மோடியம் மலேரியா, பிளாஸ்மோடியம் பால்சிபேரம், ஓவேல், வைவாக்ஸ் என்ற வகைகள் உள்ளன. இதில் எது வேண்டுமானாலும் வரலாம். வைவாக்சும், பால்சிபேரமும் திரும்பத்திரும்ப வரக்கூடியவை. இவை கல்லீரலில் நிரந்தமாக இருந்துகொண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என்று திரும்பத் திரும்ப வரும். ஆரம்ப காலத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், மூளையைப் பாதிக்கும் செரிபெரல் மலேரியாவாக மாறக்கூடும். இது மிக சீரியஸான கண்டிஷன். மூளைக் காய்ச்சலாக மாறி உயிருக்கே ஆபத்தாகிவிடும். எனவே, ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை எடுக்க வேண்டும். மீண்டும் வராமல் தடுக்கும் மாத்திரைகள் தற்போது உள்ளன. அவற்றை உட்கொள்ள வேண்டும்.

பைலேரியா எனப்படும் கொசுவால் யானைக்கால் நோய் பரவுகிறது. யானைக்கால் நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துச் சரிப்படுத்திவிட்டால், வீக்கங்கள் வராது. இல்லையென்றால், கை, கால்களைப் பாதிக்கலாம். ஆண்களுக்கு விரைவீக்கம் எனப்படும் ஹைட்ரோசில் பாதிப்பு இந்தக் கொசு கடிப்பதால்தான் ஏற்படு கிறது. பெண்களுக்கு மார்பகம் பாதிக்கப்படலாம்.

டெங்கு காய்ச்சலானது ஏடிஸ் கொசுக்களால் பரவுவது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடியாகப் பரவுவதுஇல்லை. ஆனால், நோய் பாதித்தவரைக் கடித்த கொசு மற்றொருவரைக் கடிக்கும்போது இந்த நோய் பரவும். டயர், தொட்டி, போன்ற இடங்களில் தேங்கும் நல்ல தண்ணீரில்தான் இந்தக் கொசுக்கள் உற்பத்திஆகின்றன. கொசு கடித்த 18 மணி நேரத்தில் இந்த வைரஸ் தனது வேலையைத் தொடங்கிவிடும். பெரும்பாலும் கோடைக் காலத்தில்தான் அதிகமாக இருக்கும். வெயில் சீஸன் முடியும் நேரத்திலும் அதிகம் இருக்கும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குனியா தாக்குதல் அதிகமாக இருந்தது. பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்கள் அவை.

தற்போது பரவலாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ஆஸ்திரேலியன் ரோஸ்ரிவர்பற்றி சரியான தகவல் இல்லை. இதுவும் கொசுக்கள் மூலமாகப் பரவும் ஒரு வைரஸ் நோய். ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிக்குன்குனியா நோய் போன்ற பாதிப்பு இதிலும் உண்டு. இதுபற்றி ஆராய்ந்து வருகிறார்கள். இந்த நோயின் மிகப் பெரிய பாதிப்பு மூட்டுதான்'' என்றார். இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் ஒரு வாரத்தில் காய்ச்சல் குணமானாலும் இயல்பாக நடமாடுவதற்கு அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை ஆகும்.

''சாதாரணக் காய்ச்சலாக இது வந்து அது மர்மக் காய்ச்சலாக மாறி... அதன் பிறகு ஒருவரை மொத்தமாக முடமாக்கி விடும் ஆபத்தை ஒருவர் எப்படி எதிர் கொள்வது?'' என்று கேட்டபோது...

''இப்போது பரவி வருவது ரோஸ்ரிவர் காய்ச்சலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோமே தவிர, இன்னும் உறுதிப்படுத்தவில்லை. கொசு மூலம் பரவும் இந்தக் காய்ச்சல் வந்தால், இரண்டு மூன்று நாட்களுக்குக் கடுமையான காய்ச்சல்இருக்கும்.இந்த மாதிரியான காய்ச்சல்தான் வந்திருக்கிறது என்பதைக் கண்டறியும், நிரூபிக்கும் பரிசோதனைகள் எதுவும் தற்போது இல்லை. இரவு படுக்கும்போது சாதாரணமாக இருந்த ஒருவருக்கு காலையில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு இருந்தால் இந்த சீரியஸான வகையாகக் கருதலாம். கால்கள் இரண்டையும் தரையில் ஊன்ற முடியாத நிலை இருந்தால் அந்த அனுபவத்தைவைத்தும் இந்த நோயைக் கண்டறிந்துவிடலாம்.

இந்தக் காய்ச்சல் வந்த பிறகு தோலில் அரிப்பு, ஒவ்வாமை, வாய்ப் புண் ஏற்படும். இதன் மிகப் பெரிய பாதிப்பு மூட்டு வலிதான். கால் வீக்கம், வலி அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு மூன்று நன்கு மாதங்கள் வரை இந்தப் பாதிப்பு இருக்கும். உடல் வலி காரணமாக கை காலை அசைக்காமல் இருந்துவிடக் கூடாது. வீட்டுக்குள் நடப்பது, காலை மடக்கி விரிப்பது என வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த நோய் வந்தால் மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அலர்ஜி, வாய்ப் புண், மூட்டு வலி ஆகியவற்றுக்கும் டாக்டர்கள் பரிந்துரைப்படி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்களாக எந்த மருந்தையும் வாங்கி உட்கொள்ளக் கூடாது.

இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக வேகமாகப் பரவுவதில்லை. ஒட்டுவாரொட்டி கிடையாது. சாதாரணக் காய்ச்சலின்போது எடுத்துக்கொள்ளும் உணவு முறைகள் இதற்கும் பொருந்தும். நீராகாரமாக உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கென்று உணவுக் கட்டுப்பாடுகளோ, பத்திய முறைகளோ இல்லை!'' என்று சொல்கிறார்.

பொதுநல மருத்துவர் டாக்டர் நிரஞ்சனா, ''கொசுக்களை விரட்ட காயில், மேட், லிக்விட், ஜெல் அல்லது கிரீம் என்று நிறைய உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதால் சிலருக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும், தோல் அலர்ஜியும் ஏற்படுவது உண்டு. செயற்கையான கொசு விரட்டிகளுக்குப் பதில் வேப்பிலையைக் காயவைத்து அதை புகைபோட்டால் கொசுக்கள் வரத்து குறையும். வீட்டு ஜன்னல்களில் கொசு வலை அடித்துவிடுவது சீப் அண்ட் பெஸ்ட். அனைத்துக்கும் மேலாக சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது மிக முக்கியம்!'' என்கிறார்.

ஒரு கொசுவின் எடை 0.025 மில்லிகிராமாக இருந்தாலும், ஒரு பெண் கொசு தன்னுடைய ஆயுளில் 3 ஆயிரம் முட்டைகள் இடுமாம். அதை 3 ஆயிரத்தால் பெருக்கினால் என்னவாகும்? எனவே, உருவான கொசுவைக்கட்டுப்படுத்துவதைவிட, கொசு உருவா காமல் தடுப்பதுதான் முக்கியமானது. இதற்கான ஆராய்ச்சியே இன்னமும் முடியவில்லை. எனவே, அதற்கு முன் அரசாங்கம் கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''கடந்த டிசம்பர் மாதம் இந்தக் காய்ச்ச லால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டது உண்மை. சுகாதாரத் துறை எடுத்த கொசு ஒழிப்பு மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கையால் ஜனவரி மாதம் காய்ச்சல் குறைந்துள்ளது. கொசு ஒழிப்புப் பணியைத் தீவிரப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கொசுக்களை ஒழிக்க குறுகிய காலத் திட்டமும், நீண்ட காலத்திட்டமும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். அதன்படி விரைந்து செயல்பட்டு கொசுகளை ஒழிப்போம்'' என்கிறார்கள்.

இவை சீக்கிரமே நடக்கட்டும் என்று மக்கள் பிரார்த்திக்கிறார்கள்!

 source:vikatan

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP