சமீபத்திய பதிவுகள்

மே 2ம் நாள் உலகத்தமிழர் பெருவாரியாக வாக்களிக்க அணிதிரள்க

>> Friday, April 9, 2010

மே 2ம் நாள் உலகத்தமிழர் பெருவாரியாக வாக்களிக்க அணிதிரள்க: உருத்ரகுமாரன் அழைப்பு 

  •  

மே 2ம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் பெருவாரியாக அணிதிரண்டு வாக்களிப்பதன் ஊடாக அனைத்துலக சமூகத்திற்கு காத்திரமான செய்தியை தெரிவிக்க முடியும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க செயற்குழு இணைப்பாளர் வி. உருத்ரகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார்.

டென்மார்கின் மூன்று நகரங்களில் இவ்வார இறுதியில் நடைபெற்ற நாடு கடந்த அரசாங்கம் தொடர்பான விளக்கக்கூட்டங்களில் காணொலி ஊடாக நேரடியாக உரையாற்றும் போதே உருத்ரகுமாரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டென்மார்க்கின் Herning, Velje மற்றும் Holbæk ஆகிய நகரங்களில் ஏப்ரல் 4ஆம், 5ஆம் நாட்களில் விளக்கக்கூட்டங்கள் நடைபெற்றன.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமென்ற அரசியல் வலுமையம், ஜனநாயகப் பண்பாட்டின் உச்ச வெளிப்பாடாக எமது சமூகத்திலிருந்து வெளிப்படவேண்டுமென்ற எதிர்பார்ப்பு எமக்கு உண்டு.

இம்முயற்சியின் பலம் என்பது மக்கள் பலத்திலிருந்துதான் கட்டியெழுப்பப்படவுள்ளது. எனவே புலம்பெயர் தமிழ் மக்கள், மே 2ம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில், தமிழர் தாயகத்தில் வாக்களிப்பில் பங்கேற்கும் மக்களின் தொகையை ஒத்ததாக பங்கேற்று வாக்களிக்கும் பட்சத்தில் அது அனைத்துலக சமூகத்தின் அவதானிப்பினைப்பெறும்.

மே 18-19ஆம் நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வைக் கூட்டுவதன் மூலம், ஈழத் தமிழினம் நொந்துபோன ஒரு இனமாக, அவர்களின் விடுதலை உணர்வைச் சிதைத்துவிட்டதாக கொக்கரிக்கும் சிறிலங்கா பேரினவாத அரசுக்கு தகுந்த பதிலடியைக் கொடுப்பதோடு, தமிழ் மக்களின் விடுதலை வேணவாவை உலகறியச் செய்ய முடியுமெனவும் அவர் உறுதிபடக் கூறினார்.

உருத்ரகுமாரன் மக்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான பன்னாட்டு மதியுரைக்குழு சார்பில் பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா, மருத்துவர் சிவநேந்திரன் சீவநாயகம் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க நோர்வே செயற்குழுவின் இணைப்பாளர் கில்லறி லீயோ ஆகியோரும் கருத்துரை ஆற்றினர்.

மருத்துவர் சிவநேந்திரன் சீவநாயகம் உரையாற்றுகையில்,

சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் உரிமையை மட்டும் உரத்துக் கேட்ட ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தினை சிறிலங்கா பேரினவாத அரசுடன் அனைத்துலக சமூகமும் சேர்ந்து மழுங்கடித்தன. இதற்கான அடிப்படைக் காரணங்களை நாம் ஆராய வேண்டும்.

அதேவேளையில் அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டியவற்றை ஆராய்ந்தறிந்து- புதிய வழிமுறைகள் – வடிவங்களைக் கையிலெடுத்து முன்னேறுவதற்குரிய முயற்சிதான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமெனும் இம்முயற்சியாகும்.

எமது விடுதலைப் போராட்டம் பற்றி – அதனுடைய சாதனைகள் பற்றி பெருமை கொள்ளும் அதேவேளை, எம்மை நாமே சுயவிமர்சனம் செய்வதன் மூலம்தான் இம்முன்னேற்றப் பாதையில் துணிவுடன் பயணம் செய்யலாம்.

வலிமை மிக்க புலம்பெயர் சமூகமாக வாழும் நாம், எமது பொருளாதார வளத்தினையும், அரசியல் பலத்தினையும், எமது ஆற்றல் மிகு இளைய தலைமுறையினரின் ஆளுமைகளையும் ஒருங்கிணைக்கக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பின் மூலம் – அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்காது, பலம் பொருந்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்போம் எனவும் மருத்துவர் சீவநாயகம் அவர்கள் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான பணிகளுக்காக அமைக்கப்படவுள்ள நாடு வாரியான டென்மார்க் செயற்பாட்டுக்குழுவுடன், டென்மார்க் தமிழர் பேரவையும் இணைந்து தேர்தல் பணிகளை முன்னெடுக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளையில் கனடாவில் தேர்தல் பணியகம் திறந்து வைக்கப்பட்டது

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான கனடிய தேர்தல் ஆணையம் அதன் உப தேர்தல் ஆணையாளர் ஸ்பிரோஸ் பாபதனசாகிஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் அவர் பேசுகையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கோட்பாடு வரவேற்கத்தக்கதும் நன்மை பயப்பதுமானதொரு விடயம் என்று தெரிவித்தார்

உபதேர்தல் ஆணையாளர்களில் ஒருவரான திரு.பொன் குலேந்திரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட சில வினாக்களுக்கு கனடிய செயற்பாட்டுக் குழுவின் ஊடகப் பிரிவு பொறுப்பாளரான திரு. ராம் சிவதாசன் பதிலளித்தார். இந்த நிகழ்வின் போது கனடாவின் நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தலில் போட்டியிட முன் வந்த வேட்பாளர்களிடம் அவர்களுக்கான பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.

பொது மக்கள், கனடாவின் தமிழ் ஊடகவியலாளர்கள், வேட்பாளர்கள் ஆகியயோருடன் கனடிய தமிழ் பேரவையின் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை, மற்றும் அதன் நிறைவேறறுப் பணிப்பாளர் திரு. டான்ரன் துரைராஜா ஆகியோர் கலந்து கொண்ட இவ்வைபவம் தேர்தல் ஆணையாளர் டாக்டர் ஆஷ்லி மொலோய் வழங்கிய வாழ்த்து உரையோடு நிறைவுற்றது.



source:nerudal
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP