சமீபத்திய பதிவுகள்

”மீண்டும் யுத்தம்! தயாராகும் புலிப்படை” இந்திய – சிறிலங்கா தயாரிப்பில் புதிய திரைப்படம்!

>> Tuesday, May 25, 2010

 

"சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்" என்ற காட்சி சிறி லங்காவின் தென் பகுதிக் காடு ஒன்றில் தத்ரூபமாக எடுக்கப்படுகிறது.

காட்சியில் திருப்தி அமைந்த இயக்குனர் பாண்டியன் 'கட்' சொல்ல, காமெரா அடுத்த காட்சிக்குத் தயார் படுத்தப்படுகின்றது. "மீண்டும் யுத்தம்" என்ற இந்திய – சிறி லங்கா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் கேணல் ராம் அவர்களே நடிக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது. இந்தத் திரைப்படம் பற்றி, அதன் இயக்குனர் திரு. பாண்டியன் அவர்களைக் கேட்டோம். "கடந்த ஒன்பது மாத காலமாகவே இந்தத் திரைப்படத்திற்கான கதை வசனத்தை எழுதிவிட்டு, பல தயாரிப்பாளர்களையும் தொடர்பு கொண்டேன்.

யாரும் இப்படி ஒரு றிஸ்க் எடுப்பதை விரும்பவில்லை. அதனால், இந்தத் திரைக் கதையை இலங்கையின் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கு அனுப்பி வைத்தேன். அவர் மூலமாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் திரு. கோத்தபாய அவர்களது அறிமுகம் கிடைத்தது. அவர்தான், "இந்தத் திரைப்படத்தில் கேணல் ராம் அவர்களை ஏன் நடிக்க வைக்கக் கூடாது?" என்று கேட்டதுடன், கேணல் ராம் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவரது சம்மதத்தையும் பெற்றுத் தந்தார் என்று கூறினார். "விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கேணல் ராம் அவர்கள் எப்படி இதற்குச் சம்மதித்தார்?" என்று ஆச்சரியத்தோடு அவரிடம் கேட்டோம்.

"அதுதான் நட்பின் மகிமை…. முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளது படை அணிகள் நிர்மூலமாக்கப்பட்ட பின்னர், கேணல் ராம் அவர்கள் தனது அணியுடன் சிறிலங்கா படையிடம் சரணடைந்தார். அதன் பின்னர், அவர் தானாகவே வழங்கிய ஏராளமான தகவல்கள் சிறிலங்கா படையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், அவரை திரு. கோத்தபாய அவர்கள் நேரடியாகச் சென்று சந்தித்துள்ளார். அதனால் ஏற்பட்ட தொடர்பு, நட்பாக மலர்ந்தது. அதுவே, இந்தப் படத்தில் கேணல் ராம் அவர்கள் நடிப்பதற்குச் சம்மதம் தெரிவிக்கக் காரணமாக இருந்தது" என்றார்.

"இந்தக் கதையும் விடுதலைப் புலிகள் பற்றியதா…?" "ஆம்…, விடுதலைப் புலிகள் பற்றியதுதான். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர்… தப்பிப் பிழைத்த போராளிகள் சிங்கள அரசைப் பழிவாங்கும் நோக்கோடு குழுக்கள், குழுக்களாகப் பிரிந்து சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறார்கள். அதனை முறியடிக்க, கேணல் ராம் அவர்கள் தலைமையில் சிங்கள இராணுவத்தால் நன்கு பயிற்றப்பட்ட ஒரு குழுவினர் களம் இறக்கப்பட்டு, அவர்கள் இந்தப் பழிவாங்கும் முயற்சிகளை முறியடிப்பதோடு, புலம் பெயர் தேசங்களில் சிறிலங்காவிற்கு எதிராக உருவாகி வரும் தமிழர் எழுச்சியையும் சிதைத்து முடிவுக்குக் கொண்டு வருகிறார் என்பதே கதை" "இது தமிழர்களுக்கு எதிரான கதை போல் இருக்கிறதே, இதை அவர்கள் ஏற்பார்களா…? இந்தப் படம் வெற்றி பெறுமா…?" என்று எமது சந்தேகத்தை அவரிடம் முன் வைத்தோம். "இது ஒரு யதார்த்தமான கதை.

இதைத் தமிழர்கள் ஏற்க மறுத்தாலும், சிங்களவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைக்கும். ஒரே நேரத்தில் இந்தப் படம் தமிழ், சிங்களம், இந்தி எனப் பல மொழிகளில் எடுக்கப்படுகின்றது. இந்தப் படத்தில் பெரும்பாலும் தமிழர்களே நடிப்பதால், தமிழிலும் வெற்றி பெறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது." என்றார் உற்சாகமாக. "கதையின் தளம் பற்றிச் சிறிது கூறுங்களேன்…" "கிழக்கு மாகாணத்தின் ஒரு காட்டில் நிகழ்வதான காட்சி தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் தமிழகத்திலிருந்து வந்த பத்திரிகையாளர் பாண்டியனாக நடிக்கின்றேன்." என்றவர், திரைக் கதையின் சுருக்கம் அடங்கிய கொப்பியை எங்களிடம் நீட்டினார். "ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில்லை.

கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில்இ உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில்இ விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை" "2009 மே 17-க்குப் பிறகுஇ ஈழமக்களின் வாழ்வையும் விடு தலைப் போராட்ட நிலவரத்தையும் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டை மீறி அறிந்து வந்து சொல்வதற்கான வாய்ப்புகள் இல்லாததால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பரிதவிப்போடு இருந்தார்கள். அந்த வேனையில் பாண்டியன் என்ற பத்திரிகையாளருக்கு, ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் முக்கிய தளபதியாக விளங்கும் சங்கீதன் மூலமாக ஓர் அழைப்பு வருகின்றது. ஈழ நிலவரத்தை நேரில் அறிந்துவர அவருக்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிவித்த சங்கீதன், கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்."

"உரிய அனுமதியுடனும் ஆவணங்களுட னும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு விமானப் பயணம் மேற்கொண்ட பாண்டியன், அதற்கடுத்த சமிக்ஞைக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. அதன்பின், திருகோணமலைக்கு வருமாறு அவருக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. சாலை வழியே திரிகோண மலைக்குப் பயணித்தார் பாண்டியன். வெட்ட வெளியாய் காட்சியளிக்கும் தமிழர் பகுதிகளின் துயரங்கள் கண்ணில்படுகின்றன. சிங்கள ராணுவத்தின் வாகனங்கள் ரோந்து சுற்றிய படியே இருக்கின்றன."

"விடியற்காலை நேரத்தில் திருகோணமலைக்குச் சென்ற பத்திரிகையாளர் பாண்டியனை அழைத்துச் செல்ல ஒரு வேன் வருகிறது. அந்த வேனில் இருந்தவர்கள் இளைஞர்கள். சிவில் உடையில்தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் விடுதலைப்புலிகள். அவரை ஏற்றிக் கொண்ட வேன், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சுற்றுலாதலத்திற்குச் செல்கிறது. பக்கத்திலேயே ஒரு ராணுவ முகாம். ஜீப்புகளில் சிங்கள ராணுவத்தினர் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். வேனில் இருந்த இளைஞர்கள் பதற்றப்பட வில்லை. அந்த சுற்றுலாதலத்திற்கு வந்திருக்கும் மற்ற வாகனங் களுடன் ஒன்றாக விடுதலைப் புலிகளின் வேனும் செல்கிறது. உள்ளே இருந்த இளைஞர்களிடம் வாக்கி-டாக்கி இருக்கிறது. அதன் மூலமாக அவர்களுக்கு கட்டளைகள் வந்தபடியே இருக்க, இவர்களும் பதிலளித்துக் கொண்டே பயணிக்கிறார்கள்."

"ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேன் நிற்கிறது. "அது எந்த இடம் என்று அவருக்குத் தெரியவில்லை. இறங்கியவுடன், 'வாருங்கோ..' என்றபடி அவரை அந்த இளைஞர்கள் மலைக்காட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத காடு. மரங்கள், அடர்த்தியான புதர்கள் என வெளியே இருந்து வருபவர்களுக்கு வழி தெரியாமல் திணறடிக்கும் வகையில் இருந்த மலைக்காட்டில், இளைஞர்கள் வழிநடத்த 4 கி.மீ. தூரத்திற்கு அவரை அழைத்துச் சென்றார்கள். புதிய அனுபவம் என்பதால் அந்தச்சூழலும் நடைப்பயணமும் சற்று சிரமமாகத்தான் இருந்தது." "காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாண்டியனைக் காத்திருக்கச் சொல்கிறார்கள்.

அந்த இடத்தில் 50 பேருக்கு குறையாத அளவில் தமிழர்களின் படை இருக்கிறது. உலக நாடுகளை வியக்க வைத்த போராளி இயக்கமான விடுதலைப் புலிகளின் உடையுடன் முதன்முதலாக புலிப்படை யினரைப் பார்க்கிறார் பாண்டியன். அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. ஏ.கே.47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் இந்த ஆயுதங்களுடன் மனத் தைரியம் என்கிற வலிமையான ஆயுதத்தையும் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்." "புலிப்படையில் உள்ள ஒவ்வொருவரின் முதுகிலும் ஒரு பை இருக்கிறது.

அது, அவர்கள் ஓரிடத்திலேயே நிலைகொண்டிருப்பதில்லை என்பதையும் மலைக்காடு முழுவதும் சுற்றி வந்தபடியே இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. அவர்களின் உற்சாக-உத்வேக மந்திரம் பிரபாகரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பெயரைச் சொன்னாலே அவர்களின் நாடிநரம்புகளில் முறுக்கேறுகிறது. காட்டில் அவர்கள் மேற் கொள்ளும் பயிற்சிகளில் பிரபாகரன் பாணியை பார்க்க முடிகிறது. குறைந்த அளவிலான போராளிப் படையை வைத்துக்கொண்டு ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்கொண்டு முறியடிப்பது எப்படி என்கிற பயிற்சி களை அவர்கள் மேற் கொள்கிறார்கள். பயிற்சிகள் அனைத்தும் கடுமையான வை. காட்டுக்குள் போதிய வசதிகள் இல்லாத நிலையிலேயே இந்தப் பயிற்சிகள் தொடர்வதை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்கிறார் பாண்டியன்.

"நீங்க எங்களை மன்னிக்கணும். தற்போதைய சூழ்நிலையில் படம் எடுக்க ஏலாது. எங்கட நிலைமையை நீங்க புரிஞ்சவராய் இருப்பீர்கள் என நினைக்கிறோம்" என மென்மையான மறுப்பு வெளிப்படவே, புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிடுகிறார் பாண்டியன். "ரொம்ப நன்றிங்க அய்யா… ஏதேனும் ஒரு படம் வெளியே போய் பிரசுரமாகி, அதன்மூலம் எந்தக் காடு, எத்தனை நபர்கள் என்ற பின்புலம் தெரிந்து போகுமென்டால், மீண்டும் விடுதலைப் போராட்டத்தை வலிமைப்படுத்தும் எங்களின் முயற்சிகள் தோற்றுப்போகும்" என்கிறார்கள் புலிகள்.

"பயிற்சிகளுக்குப் பிறகு, காட்டுப்பகுதியிலேயே சமையல் நடக்கிறது. அதிகம் புகை வராத மரக்கட்டைகளைக் கொண்டு கச்சிதமாக அடுப்பு மூட்டி, உணவு தயாரிக்கிறார்கள். 'தாய்த் தமிழகத்திலிருந்து வந்திருக்கிற பத்திரிகை சகோதரருக்கு நம்ம ஊரு சொதி செஞ்சு கொடுங்கோ" என்கிறார் ஒரு புலி. "சகோதரர் கேட்பதை செய்து கொடுப்போம்" என்கிறார் இன்னொரு புலி. போராட்டக்களத்திலும் அவர் களின் விருந்தோம்பல் பண்பு குறையவில்லை. "எங்கட பண்பும் வீரமும் ஒருநாளும் மறைந்து போகாது" என்கிறார்கள் புலிகள்." "அவர்களில் ஒருவர் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார்.

பிறகு, தனது வாக்கி-டாக்கியில் யாரிடமோ பேசிவிட்டு, தயாராக இருங்கள் என்கிறார். அங்கிருந்த 50 புலிகளும் பொசிஷன் எடுத்து நிற்கிறார்கள். சிலர் தரையில் படுத்து, தலையை மட்டும் உயர்த்தி, துப்பாக்கியால் குறிபார்த்தபடி பொசிஷன் எடுக்கிறார்கள். சிலர், மலைக்காட்டில் உள்ள உயர்ந்த மரங்களில் ஏறி, அதன் கிளைகளில் படுத்தபடி, குறி பார்க்கிறார்கள். எல்லோரும் எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில், பத்திரிகையாளர் பாண்டியனை நோக்கி வேகமாகவும் கம்பீரமாகவும் வருகிறது அந்த உருவம்."

"நடுத்தர வயது. நன்றாக ஷேவ் செய்யப்பட்ட முகம். பிரபாகரன் போலவே இடுப்பில் பெல்ட் அணிந் திருக்க, அதில் துப்பாக்கிகள் இருக்கின்றன. பாதுகாப்புக்கு, துப்பாக்கி ஏந்திய புலிகள். பாண்டியனை நெருங்கி வந்து, "வாருங்கோ… வாருங்கோ.. உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்" என்று கைகொடுத்த அவர், கேணல் ராம். கிழக்கு மாகாணமான அம்பாறையின் விடுதலைப்புலிகள் தளபதி."

"புலிகளின் ராஜதந்திர உத்திகளின் படி, நான்காம் ஈழப்போரின் கடைசி கட்டத்தில் கேணல் ராம் தலைமையி லான படை பங்கேற்கவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பு வகித்த அவரையும், வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பு வகித்த நகுலனையும் தங்கள் படையினருடன் பத்திரமாக இருக்கும்படி உத்தரவிட்டார் பிரபாகரன். தன்னிடமிருந்து கட்டளைகள் வந்தபிறகு களத்திற்கு வரலாம் என்பதுதான் அவரது உத்தரவு." "2009-ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே 4000 பேருடன் இருவரது படைகளும் காட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்துவிடுகிறது.

முள்ளிவாய்க்கால் தாக்குதல்களின்போது, தலைமையின் கட்டளைப்படி இவர்கள் காட்டில்தான் இருந்தார்கள். அதனால்தான், இப்போதும் சிங்கள ராணுவத்திற்கு சவாலாக இருக்கிறார்கள்." "பாண்டியனுக்கு கைகொடுத்த கேணல் ராம், "யுத்தத்தின் கடைசி நிமிடம் வரை தலைமை எங்களை அழைக்கவில்லை. காட்டுக்குள் இருந்து போரைத் தொடரவேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். எங்களுடன் இருந்த 4000 புலிகளுடன், முள்ளி வாய்க்கால் தாக்குதல்களின்போது, வெளியேறி வந்த புலிகளையும் சேர்த்து தற்போது 6000 புலிகளாக பலம் பெற்றிருக்கிறோம். பெண் புலிகளும் இருக்கிறார்கள். சிங்கள ராணுவத்தின் கண்கள் எங்களைத் தேடுகின்றன. நீங்கள் காட்டுக்குள் 4 கி.மீ. சிரமப்பட்டு நடந்து வந்திருப்பீர்கள். நான் 20 கி.மீ. நடந்து வந்து உங்களை சந்திக்கிறேன். இது 100 கி.மீ.க்கு பரந்திருக்கும் மலைக்காடு. இதுதான் எங்களுக்கான பாதுகாப்பு கேடயம் என்கிறார்"

"எங்களிடம் உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் சர்வதேச அளவில் அழைப்புகளைப் பெற முடிகிறது. பல நாட்டு உளவுப்பிரிவினரும் எங்களைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள். எங்களது செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கிறது இலங்கை ராணுவம்."

"செல்போன், வாக்கி-டாக்கி ஆகியவற்றை ஒட்டுக்கேட்டு நாங்கள் எந்தப் பகுதியில் நடமாடுகிறோம் என்பதை தெரிந்துகொண்டு, தாக்குதல் நடத்த நினைக்கிறார்கள். நாங்கள் இப்போது பாரிய அளவிலான தாக்குதலுக்குத் தயாராக இல்லை. இப்போதைய எங்கள் நோக்கம், புலிகளை ஒருங்கிணைத்து இயக்கத்தை வலிமைப்படுத்துவது, படைபலத்தையும் ஆயுதபலத்தையும் பெருக்குவது. அதன்பின்னர், தலைமை வழியில் செயல்படுவோம்."

"சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்" என்று சொன்ன கேணல் ராமிடம், பத்திரிகையாளர் பாண்டியன் கேள்விகளை முன்வைத்தார். ஈழப்பிரச்சினையின் இன் றைய நிலவரம் குறித்த மிக முக்கியமான அந்த கேள்வி களுக்குப் பதிலளிக்கத் தயாரானார் கேணல் ராம்" என்று கதை தொடர்கிறது.

"இந்தக் கதையில் வரும் காட்சிகள் நம்பக் கூடியதாக இல்லையே…?" "இது ஆரம்பக் காட்சிகள். இடை வேளைக்குப் பின்னர் காட்சிகள் விறு விறுப்பாக இருக்கும். முதலில், விடுதலைப் புலிகளின் சிதறுண்ட அணிகளை நம்ப வைக்க இப்படியான காட்சிகள் முக்கியம். ரஜனி, விஜயகாந்த், விஜய், அஜித் என நூற்றுக்கணக்கான பயில்வான் போன்றவர்களை ஒத்தை ஆளாக நின்று அடித்துத் துவைக்கும் காட்சிகளை விசிலடித்து ரசிக்கும் எங்கள் மக்கள் இதையும் ரசிப்பார்கள்.

அத்துடன், இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கான பெரும் நிதியினை சிறிலங்கா அரசும், கணிசமான தொகையை இந்திய அரசும் ஏற்றிருப்பதால், தயாரிப்பாளர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள்." என்று நம்பிக்கையோடு கூறிய பாண்டியன், காட்சிகளின் புகைப்படங்களை எம்மிடம் நீட்டினார். "இது, நக்கீரன் கோபால் சந்தணக் கடத்தல் வீரப்பனைப் பேட்டி கண்ட காட்சிகளை நினைவு படுத்துகிறதே…?" படங்களைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தோடு கேட்டோம்

"நக்கீரன் கோபால்தான் இந்தக் கதைக்கான கருவை என்னிடம் கூறினார். அவர் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருப்பதால், நக்கீரன் சஞ்சிகையில் பல விபரங்களை வெளியிட்டு வருகின்றார். அவரது எண்ணப்படியேதான் இந்தக் காட்சிக்கான இடம், அமைப்பு தெரிவு செய்யப்பட்டது" என்றார் பெருமிதத்துடன்.

"உங்கள் முதல் படத்தையே, இப்படிப் பிரமாண்டமாக எடுக்கிறீர்களே… உங்கள் படம் வெற்றி பெறவும், கேணல் ராம் அவர்கள் சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிக் கொள்ளவும் வாழ்த்துக்கள்!" என்று கூறி விடை பெற்றோம்.

சூரிய புத்திரன்.

source:puthinamnews

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP