சமீபத்திய பதிவுகள்

இலங்கையின் போர்க் குற்றங்கள்........ “சர்வதேச விசாரணை தேவை”

>> Wednesday, May 19, 2010


மே 18,2010

மே 18, 2009... இந்நாளில் தான் 'விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர்; போர் முடிவுக்கு வந்தது,' என இலங்கை அரசு அதிகாரப்பூர்மாக அறிவித்தது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான உயிர்ப் பலிகளுக்கு உள்ளான 37 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்தது என ஊடகச் செய்திகள் புள்ளிவிவரங்களை வெளியிட்டன.

கொண்டாட்டத்தைத் தடுத்த மழை...

இதோ போர் முடிந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், புலிகளை வீழ்த்திவிட்டதாக வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது, இலங்கை அரசு. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆனால், தற்போது இலங்கையில் பல்வேறு பகுதிகளில் மழை விடாமல் கொட்டிக் கொண்டிருக்கிறது. பெருவெள்ளம் காரணமாக, வெற்றிக் கொண்டாட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்திருப்பதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. சிறப்பு ராணுவ அணிவகுப்பு மற்றும் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி முதலிய நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.

போர்க்குற்றங்களும் சர்வதேச விசாரணையின் தேவையும்...

இலங்கையில் போர் நடந்து முடிந்து ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளச் சூழலில், அந்தப் போர் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது, அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நெருக்கடிக் குழு (ICG - International Crisis Group).

அந்த ஆய்வறிக்கையில், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களைப் பற்றியும் அந்நாட்டு அரசு நேர்மையான முறையில் ஒரு விசாரணையை நடத்த தயாராக இல்லாத நிலையில், அங்கு நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஒரு சர்வதேச விசாரணையை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையரும், முன்னாள் கனடா உச்ச நீதிமன்ற நீதிபதியுமான லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) தான் ICG அமைப்பின் தலைவர். அவர் தலைமையில் இயங்கும் குழுவே இந்த ஆய்வினை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது என்பதால் உலக அளவில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

ICG ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்களாவன:

இலங்கையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் கடைசி 5 மாத காலத்தில் மட்டும் குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

இலங்கை அரசும், விடுதலைப்புலிகள் இயக்கமும் போர் தொடர்பான சர்வதேச சட்டங்களை மீறியுள்ளன. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது, அவர்கள் அனுபவித்த மிகுதியான துயரங்கள் முதலியவற்றைப் பார்க்கும்போது, இதற்கு உரிய ஒரு பதில் தரப்படவேண்டும்.

பல ஆண்டுகளாக சர்வதேச மனித நேய சட்டங்களை மீறியிருந்தாலும், போரின் இறுதி மாதங்களில் தான் இந்த மீறல்கள் அதிகளவில் நடந்துள்ளன. அந்த மீறல்களின் தன்மை மிகவும் ஆபத்தானவையாக இருந்திருக்கிறது.

இலங்கையின் ராணுவம் மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே சர்வதேச சட்டத்தை மீறி, பொதுமக்களைத் தாக்குவது, மருத்துவமனைகளைத் தாக்குவது, மனித நேய நடவடிக்கைகள் நடக்கும் இடங்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

நோ ஃபயர் சோன் (No Fire Zone) எனப்படும் மக்களைப் பாதுகாக்கக் கூடியதும், தாக்குதல்கள் தவிர்க்கப்படும் பகுதி என்று இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீதே ராணுவம் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதற்கான சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதை வைத்துப் பார்க்கும்போது, இந்தப் போர்க் குற்றங்கள் இலங்கை பாதுகாப்புப் படைகளில் இருக்கும் குறிப்பிட்ட சில தனி நபர்களால் இழைக்கப்பட்டன என்று நம்புவதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன.

நோ ஃபயர் சோன்பகுதிகளில் கனரக குண்டு தாக்குதலை இலங்கை ராணுவம் நடத்துவதற்கு, விடுதலைப்புலிகளே தூண்டினர் என்று கருதுவதற்கும் இடமில்லை. விடுதலைப்புலிகள் இந்த இலக்குகளுக்கு மிக நெருக்கமாக இருந்ததாலும், அந்த இலக்குகளுக்குள்ளேயே அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இருந்ததாலும், அவர்கள் இந்தக் கனரக குண்டுத் தாக்குதல்களைத் தூண்டியிருப்பார்கள் எனக் கருத முடியவில்லை.

தாக்குதல்கள் தவிர்க்கப்படும் பகுதிகளுக்கு சேல்லுமாறு பொதுமக்களுக்கு உத்தரவிட்டதே இலங்கை அரசுதான். மக்கள் இருந்த இடமும் அரசுக்குத்தான் தெரியும். அப்பகுதியில் இருக்கும் மக்கள் சிவிலியன்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும். அரசுக்கு ஐ.நா. அலுவலர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளிடம் இருந்து தகவல்களும் வந்துகொண்டிருந்தன. அத்துடன், செயற்கைக்கோள் படங்களும் அரசிடமே இருந்தன.

எனவே, அப்பகுதிகள் நேரில் பார்க்கக் கூடியதாகவும் இருந்திருக்கிறது. ஆனால், பல மாதங்களாகவே தொடர்ந்து சிவிலியன்கள் மீது குண்டுவீசித் தாக்குதல்களை நடத்துகிறீர்கள் என்று பலமுறை குற்றம்சாட்டியும் கூட, இலங்கைப் படையினர் தொடர்ந்து அதே பாணியில் தாக்குதல்களை நடத்திவிட்டு, 'சிவிலியன்கள் தாக்கப்படவில்லை,' என்று கூறி வந்தனர்.

அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட இத்தகைய சம்பவங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளின் நடத்தை விசாரிக்கப்பட வேண்டும்.

இந்தத் தாக்குதல்களுக்கு ஆளான மக்களுக்கு உணவும் மருந்துகளும் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னைகள், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள், மனித நேய நடவடிக்கைகள் நடந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்றவை மனித குலத்துக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தனி நபர்களே பொறுப்பா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.

இந்தப் போர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து 'இன்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப்' கருத்து கேட்டதற்கு, இலங்கை அரசு பதிலளிக்க மறுத்துவிட்டது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும் போர்ப் பகுதியிலிருந்து தப்பி வெளியேற முயன்ற பொதுமக்களை தடுத்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதால், அவர்களும் சர்வதேச சட்டங்களை மீறியிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இவ்வாறு இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்ததையும், ஆயிரக் கணக்கான பொதுமக்களை ராணுவம் கொன்று குவித்ததையும் ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ள இன்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப், மனித இனத்துக்கு எதிரான இந்த நிகழ்வுகளில் சர்வதேச நாடுகள் அக்கறை கொள்ளாதிருந்ததையும் கண்டிப்புடன் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இலங்கையில் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் நடந்துகொண்டிருந்தபோது, சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகள் மெளனம் காத்திருத்தன என்றும், மாறாக - மனிதத்தைக் கொன்றதப் பொருட்படுத்தாமல், விடுதலைப்புலிகளை தோற்கடிக்கப்பட்டதற்காக இலங்கை அரசுக்கு பல்வேறு நாடுகள் வாழ்த்து தெரிவித்தன என்று குறை கூறியிருக்கிறது அந்த ஆய்வறிக்கை.

ராணுவத்தின் உரிமை மீறலை விசாரிக்கிறது இலங்கை அரசு?!

இலங்கை ராணுவத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட அமைப்புகள் உரிமை மீறல் புகார்களை அடுக்கி வந்துகொண்டிருந்த நிலையில், இப்போது செவிசாய்த்திருக்கிறது இலங்கை அரசு.

ராணுவத்தினரின் உரிமை மீறல் புகார்கள் குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட கமிஷன் ஒன்று அமைக்கபப்ட்டுள்ளதாக இலங்கை அரசு திங்கட்கிழமை அறிவித்தது. சித்தரஞ்சன் டிசில்வா தலைமையிலான இந்த கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்சேயின் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணை கமிஷனில் சந்திரபால் சண்முகம், மனோகரி ராமநாதன் ஆகிய இரு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2009-ம் ஆண்டு மே மாதம் வரையிலான 7 ஆண்டு கால கட்டத்தில் நடைபெற்ற உரிமை மீறல்கள் குறித்து இந்த கமிஷன் விசாரிக்கும். இந்தக் கால கட்டத்தில் கற்றுக்கொண்ட பாடம், அதுபோன்ற தவறுகள் மேற்கொண்டு நடைபெறாமல் தடுத்து நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்து இந்த விசாரணை கமிஷன் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


source:vikatan



--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP