சமீபத்திய பதிவுகள்

Answering PJ: பிஜேயின் மிகப்பெரிய பாவம்: இறைவனுக்கு இணை வைத்தல்

>> Monday, November 8, 2010

 

பிஜேயின் மிகப்பெரிய பாவம்: இறைவனுக்கு இணை வைத்தல்

முன்னுரை: "பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம் இறைவனுக்கு இணை வைத்தலாகும்", அதாவது, ஒரு மனிதனை இறைவனுக்கு சமமாக கருதுவது, அல்லது தொழுதுக்கொள்வது. பிஜே அவர்கள் இதைப் பற்றி தன் குர்-ஆன் மொழியாக்கத்தில் என்ன கூறியுள்ளார் என்பதை முதலில் காண்போம், அதன் பிறகு ஏன் இந்த கட்டுரை எழுதப்படுகின்றது என்பதை விளக்குகிறேன்.

பிஜே குர்-ஆன் மொழியாக்கம், தமிழ் கலைச் சொற்கள், பக்கம் 71:

இவ்வாறு இறைவனுக்கு இணை கற்பித்தல், மனிதர்கள் செய்கின்ற குற்றங்களிலேயே மிகவும் பெரிய குற்றம் எனவும், இக்கொள்கையிலிருந்து திருந்திக்கொள்ளாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு மன்னிப்பு இல்லை; என்றேன்றும் நரகத்தில் கிடப்பார் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

பிஜே குர்-ஆன் மொழியாக்கம், பொருள் அட்டவணை, தலைப்பு: "11. அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கக் கூடாது", பக்கம் 109:

. . . அல்லாஹ்விற்கு இணை கற்பித்தல் பெரும் பாவமாகும் – 4:48

அல்லாஹ்விற்கு இணை கற்பித்தல் பெரும் வழிகேடு – 4:116

அல்லாஹ்விற்கு இணை கற்பித்தல் மிகப்பெரும் அநியாயம் – 31:13 . .

பிஜே அவர்கள் ஒரு புதிய தளத்தை கிறிஸ்தவர்களுக்கு பதில்கள் தருவதற்காகவே ஆரம்பித்துள்ளார், அந்த தளம் பற்றி நான் கொடுத்த அறிமுக கட்டுரையை கீழே படிக்கவும்.

கிறிஸ்தவத்திற்கு பதில்: பீஜேயின் புதிய தளம் ஆரம்பம்

இந்த புதிய தளத்தில், அவர் முதலாவது முகப்பு பக்கத்தில் பதித்து இருந்த ஒரு கட்டுரை: "மறுக்க முடியுமா, இதை மறைக்க முடியுமா?" என்பதாகும். இந்த கட்டுரைக்கு நாம் இப்போது பதிலை காணலாம்.

பிஜே அவர்கள் தம்முடைய புதிய தளத்தில்(http://jesusinvites.com/) எழுதியவைகளை முதலாவது படிப்போம்:

பாரான் (ஹிரா) மலையின் பிரகாசம்

கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி,சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்,பாரான் மலையிலிருந்து பரிசுத்தவான்கள் நடுவிலிருந்து பிரசன்னமானார். அவர் வலதுபுறத்தில் அக்கினிமயமான பிரமானம் அவர்களுக்கு வெளிப்பட்டது.

(உபகாமம் 33:1,2)

"பாரான் மலையிலிருந்து பிரகாசமாய்த் தோன்றி" என்பதன் பொருள் என்ன? பாரான் மலை என்பது மோசே வாழ்ந்த பகுதியிலும் இல்லை. இயேசு வாழ்ந்த பகுதியிலும் இல்லை. மாறாக அது மக்காவில் அமைந்துள்ள மலைகளில் ஒரு மலையின் பெயராகும். அவன் வளர்ந்து வனாந்திரத்தில் குடியிருந்தான். அவன் வளர வளர வில் வித்தையிலும் வல்லவனானான். பாரான் வனாந்தரத்தில் அவன் குடியிருக்கையில் அவனுடைய தாய் எகிப்து தேசத்துப் பெண் ஒருத்தியை அவனுக்கு விவாகஞ் செய்வித்தான்

(ஆதியாகமம் 21:12-21)

சீனாய் மலையில் தோன்றிய பிரகாரசம் மோசேவின் வேதம் என்றால், சீயேரில் தோன்றிய ஒளி இயேசுவின் வேதம் என்றால், பாரானில் தோன்றிய பிரகாசம் எது?

மோசே காலம் முதல் நபிகள் நாயகம் காலம் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர அப்பகுதியில் எவரும் கர்த்தரின் தூதர் என அறியப்படவில்லை.

எனவே, பாரான் (ஹிரா) மலையிலிருந்து தோன்றிய பிரகாசம் என்பது நபிகள் நாயகத்தையும் அவர்களுக்கு அருளப்பட்ட வேதத்தையும் குறிக்கிறது , மறுக்க முடியுமா, இதை மறைக்க முடியுமா?

பிஜே அவர்களுக்கு தமிழ் கிறிஸ்தவனின் பதில்:

பிஜே அவர்களின் மேற்கண்ட வரிகளின்படி, அவர் கீழ்கண்ட விவரங்களை முன் வைக்கின்றார்:

1) உபாகமம் 33:1-2 வசனங்களில் முஹம்மது பற்றிய தீர்க்கதரிசனம் உள்ளது.

2) இவ்வசனங்களில் வரும் "பாரான்" மலை என்பது, மக்காவில் இருக்கும் ஒரு மலையாகும் (ஹிரா).

3) பாரான் மலையிலிருந்து தோன்றிய பிரகாசம் என்பது முஹம்மதுவையும், குர்-ஆனையும் குறிக்கும்.



பிஜே அவர்களின் மேற்கண்ட கூற்றுகளுக்கு நாம் பதிலைக் காண்போம்.

1) உபாகமம் 33:1-2ம் வசனங்களின் பின்னணி:

மோசே தன் மரண தருவாயில் இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிக்கின்றார், அந்த ஆசீர்வாதத்தில் இஸ்ரவேல் வம்சங்களின் பெயர்களை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு ஆசீர்வதிக்கிறார். இதனை உபாகமத்தின் 33ம் அதிகாரத்தை முழுவதுமாக படித்து தெரிந்துக்கொள்ளலாம். முதலாம் வசனத்திலேயே இதனை சுருக்கமாக காணலாம்.

பிஜே அவர்கள் வசன குறிப்பில் உபாகமம் 33:1,2 என்று குறிப்பிட்டாலும், முதல் வசனத்தை பதிக்கவில்லை, என்ன காரணமோ நமக்குத் தெரியாது. முதல் வசனத்தை பதித்தால், தாம் சொல்லவந்த பொய்யை சொல்லமுடியாது என்று நினைத்தாரோ என்னவோ? இது ஆசீர்வாதம் பற்றி பேசுகின்றதே, தீர்க்கதரிசனம் பற்றி இல்லையே என்று வாசகர்கள் புரிந்துக்கொள்வார்கள் என்று பயந்தாரோ?

இப்போது உபாகமம் 33:1-2ம் வசனங்களை படிப்போம்:

33:1 தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:

33:2: கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி,
      சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்;
         பாரான் மலையிலிருந்து பிரகாசித்து,
            பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்;
              அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.

இந்த இரண்டு வசனங்கள் சொல்லும் செய்திகள் என்ன?

• முதலாவதாக, இந்த வசனங்களில் சொல்லப்பட்டது "ஆசீர்வாதங்களாகும், இவைகள் எதிர்காலத்தில் வரவிருக்கும் ஒரு நபரைப் பற்றிய தீர்க்கதரிசனமல்ல". இதனை முதல் வசனத்திலேயே நாம் கண்டு கொள்ளலாம்.

• இரண்டாவதாக, இங்கு மோசே குறிப்பிடுவது நடந்து முடிந்துவிட்ட நிகழ்ச்சியைப் பற்றியதாகும், எதிர் காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி அல்ல. அதாவது இறந்தகால நிகழ்ச்சியைப் பற்றி இரண்டாம் வசனத்தில் குறிப்பிடுகின்றார். இவ்வசனத்தில் வரும் "உதயமானார், பிரசன்னமானார், புறப்பட்டது" என்ற வார்த்தைகள் இறந்த கால வார்த்தைகளாகும். இதில் பிஜே அவர்களுக்கு எந்த சந்தேகமும் இருக்காது என்று நம்புகிறேன்.

• மூன்றாவதாக, மிகவும் முக்கியமான விவரம் என்னவென்றால், இரண்டாம் வசனம் "கர்த்தர் சீனாயிலிருந்து. . ." என்று ஆரம்பிக்கிறது, இரண்டாம் வசனத்தில் சொல்லப்பட்ட அனைத்து விவரங்களும் கர்த்தராகிய யேகோவா தேவன் செய்த விவரங்கள் பற்றி பேசுகின்றது. கர்த்தர் என்பது பைபிளின் தேவனை குறிக்கும் என்று பீஜே அவர்களுக்கு மிக மிக நன்றாகத் தெரியும்.

இதைப் பற்றி விவரமாக இப்போது காண்போம்.

2) கர்த்தர் என்றால் யார்?

குர்-ஆனின் இறைவனுக்கு எப்படி "அல்லாஹ்" என்ற தனிப்பட்ட பெயர் உள்ளதோ, அதே போல, பைபிளின் இறைவனுக்கு தனிப்பட்ட பெயர் "யேகோவா" என்பதாகும். [சிலர் குர்-ஆனின் அல்லாஹ்வும், பைபிளின் தேவனும் ஒருவர் தான் என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள், இது தவறானதாகும். அல்லாஹ்வும் யேகோவா தேவனும் ஒருவரல்ல என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்].

இந்த உபாகமம் 33:2ம் வசனத்தில் "கர்த்தர்" என்று தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்கள், ஆனால், "யேகோவா" என்று தான் எபிரேய மொழியில் வருகிறது.

இந்த சிறிய விவரத்தை அறிய நாம் மூல மொழிக்கும் போகத் தேவையில்லை, தமிழில் படித்தாலே போதும் புரிந்துக்கொள்ளலாம். பழைய ஏற்பாட்டில் "கர்த்தர்" என்று வரும் இடங்களில் எல்லாம் "யேகோவா" என்ற தனிப்பட்ட பெயர் தான் உள்ளது.

கர்த்தர் என்று வந்தால் அது "மனிதனை அல்ல, இறைவனைக் குறிக்கும்" என்று பிஜே அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆக, கர்த்தரைப் பற்றி சொல்லியுள்ள வசனத்தில், யேகோவா தேவன் பற்றி சொல்லிய விவரத்தில் பிஜே தன் கை வரிசையை காட்டியுள்ளார்.

உபாகமம் 33:2: கர்த்தர் . . . எழுந்தருளி, . . . உதயமானார்; . . . . பிரகாசித்து, . . . பிரசன்னமானார்; அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.

அறிவுள்ள ஒரு மனிதன் மேற்கண்ட வசனத்தை படித்தால், கீழே தரப்பட்ட விதமாகத் தான் புரிந்துக்கொள்வான்.

கர்த்தர் எழுந்தருளினார்

கர்த்தர் உதயமானார்

கர்த்தர் பிரகாசித்தார்

கர்த்தர் பிரசன்னமானார்

கர்த்தருடைய கரத்திலிருந்து பிரமாணம் (சட்டம்) புறப்பட்டது.

இது தான் இந்த வசனம் கூறும் செய்தியாகும், இதனை திருத்தி பிஜே அவர்கள் கூறியுள்ளார், சரி இதன் விளைவுகள் என்ன? மேற்கொண்டு படிக்கவும்.

3) பிஜே அவர்களின் இணைவைத்தல் என்ற பாவம்

பிஜே அவர்கள் தங்கள் குர்-ஆன் மொழியாக்கத்தில் சொல்லியபடி இணைவைத்தல் என்பது மிகப்பெரிய குற்றமாகும். இந்த பாவத்தை அவரே செய்துள்ளார் என்று நினைக்கும் போது வேதனையாகத் தான் உள்ளது. இவர் இதனை "தெரிந்து" செய்தாரோ அல்லது "தெரியாமல் அறியாமையில்" செய்தாரோ நமக்குத் தெரியாது, ஆனால் சுட்டிக்காட்டும் போது திருந்திவிடவேண்டும்.

இஸ்லாம் பற்றி நன்கு தெரிந்த கிறிஸ்தவர்கள் "யேகோவா தேவனும், அல்லாஹ்வும் ஒருவரே" என்று சொல்லமாட்டார்கள்", ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும், பைபிளின் தேவனும் அல்லாஹ்வும் ஒருவரே என்று நம்புகின்றனர், அப்படித்தான் குர்-ஆன் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. ஆனால், யேகோவா தேவனை அல்லாஹ்வோடு ஒப்பிடக்கூடாது என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது, அதாவது அந்நிய தெய்வங்களை எனக்கு சமமாக்கக்கூடாது என்று தேவன் கூறியுள்ளார்.

"கர்த்தர்" தான் "அல்லாஹ்" என்று பிஜே நம்புகிறார். (இப்படி கிறிஸ்தவர்கள் நம்ப மாட்டார்கள், அப்படி நம்பினால் இது யேகோவா தேவனுக்கு விரோதமான பாவமாகும், அல்லாஹ் என்ற ஒரு பழங்குடி கற்பனையை, உயிருள்ள தேவனுக்கு ஈடாக கற்பனைக் கூட செய்து பார்க்கமாட்டார்கள் கிறிஸ்தவர்கள்)

பீஜே அவர்கள் இயேசு இறைமகனா என்ற புத்தகத்தின் முன்னுரையில் என்ன எழுதியுள்ளார் என்பதை ஒரு முறை படிக்கலாம்.

முன்னுரை

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல கர்த்தரின் திருநாமத்தால்...

இயேசு அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும் ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டும் மக்கள் வணங்க வேண்டும் என்று போதனை செய்த சீர்திருத்த வாதிகளில் ஒருவர் என்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

ஆக, "கர்த்தர்" என்றால் "அல்லாஹ்" என்று பிஜே அவர்கள் நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட நம்பிக்கையுள்ள பீஜே அவர்கள் ஏன், "அல்லாஹ்வைப் பற்றி" சொல்லிய இடத்தில் முஹம்மதுவை நுழைத்து "இணை வைத்தல்" என்ற பாவத்தை செய்துள்ளார்.

ஒருவேளை மேலே நான் எழுதியவைகளை பீஜே அவர்கள் எழுதுவதாக இருந்திருந்தால் கீழ்கண்டவாறு எழுதியிருப்பார்:

அல்லாஹ் எழுந்தருளினார்

அல்லாஹ் உதயமானார்

அல்லாஹ் பிரகாசித்தார்

அல்லாஹ் பிரசன்னமானார்

அல்லாஹ்வின் கரத்திலிருந்து பிரமாணம் (சட்டம்) புறப்பட்டது.

ஆக, பீஜே அவர்கள் தன் அறியாமையினால், அல்லாஹ்விற்கு சொல்லப்பட்ட வசனத்தில், "அல்லாஹ் பிரகாசித்தார்… அல்லாஹ் பிரசன்னமானார்" என்று இருப்பதை, "முஹம்மதுவிற்கு சம்மந்தப்படுத்தி" கூறியுள்ளார். இது இறைவனுக்கு கோபத்தை உண்டாக்கும் பாவமில்லையா? இதை பீஜே போன்ற மார்க்க அறிவாளிகள் செய்யலாமா?

பீஜே அவர்கள் செய்த பிழையை நான் சுட்டிக்காட்டியுள்ளேன், அவர் இறைவனிடம் இந்த இணைவைத்தல் என்ற பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு தன் தவறை உணர்ந்தால் சரி, இல்லையானால் முடிவு என்ன என்று அவருக்குத் தெரியும். பிஜே அவர்கள் வசனத்தை உருப்படியாக படித்து, யாரைப் பற்றி இவ்வசனம் பேசுகின்றது, என்ன பேசுகின்றது என்று சிறிது சிந்தித்து இருந்திருந்தால், இப்படி நடந்திருக்காது. உண்மையை தெரிந்துக்கொண்டும், ஏதோ கிறிஸ்தவர்கள் மீது குற்றம் சுமத்தவேண்டும், நாங்களும் பதில் சொல்கின்றோம் என்று நினைத்துவிட்டு எழுதினால், முடிவு மிகவும் சோகமாக இருக்கும். பீஜே அவர்களே நீங்கள் செய்த குற்றம் மிகப்பெரிய குற்றமாகும், வாதம் புரிவதும், விவாதம் புரிவதும் நல்லது தான், அதற்காக நீங்கள் சொன்ன கோட்பாட்டையே தகர்த்து விட்டு, வாதம் புரிவது சரியானது அல்ல.

இனியாவது ஒழுங்காக பைபிள் வசனங்களை படித்து விளக்கம் அளியுங்கள். கிறிஸ்தவர்களுக்கு பதில் அளிக்கிறேன் என்றுச் சொல்லி, உங்கள் மீட்பை நழுவ விட்டுவிடப்போகிறீரகள் பீஜே அவர்களே...

முடிவுரை:

சரி, சீனாய், சேயீர் மற்றும் பாரான் என்பவைகள் பற்றி என்ன? என்று சிலர் கேட்கக்கூடும். இதற்கு விளக்கம் அவசியமே இல்லை, காரணம் அவர் முன்வைத்த அந்த ஒரு வசனத்தின் அடிப்படையையே அவர் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை, இறைவனைப் பற்றி சொல்லப்பட்ட விபரத்தை அவர் முஹம்மதுவைப் பற்றி என்றுச் சொல்லி தவறு செய்துவிட்டார். எனவே, அதே வசனத்திற்கு அவர் கொடுத்த இதர விளக்கம் தவறானதாக மாறிவிட்டது.

தற்போதைய கட்டுரையிலேயே பிஜே முன்வைத்த ஆதாரங்கள் பொய்யானவைகள் என்று தெரிந்துவிட்டது, இனியும் இன்னொரு பதில் வேண்டுமா? இருந்தாலும், இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில், "பாரான்", பற்றிய விளக்கத்தை நாம் காண்போம்.

இரண்டாம் பாகம் வருவதற்குள்ளாக இந்த என் பதில் பற்றி அவர் கருத்து என்ன என்று தன் தளத்தில் (ஆன்லைன் பிஜே தளத்திலோ அல்லது ஜூசஸ் இன்வைட்ஸ் என்ற தளத்திலோ) எழுதுவாரா? இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ள விளக்கத்தை ஏற்பதாக இருந்தால் தன் தளத்திலிருந்து மேலே குறிப்பிட்ட வசனத்தை நீக்குவாரா? அல்லது தனிமையில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பை கேட்டு பெற்றுவிட்டு மறுபடியும், பழைய குருடி கதவை திறடி என்பதற்கு ஏற்ப பழைய நிலையை மாற்றிக்கொள்ளாமல் இருப்பாரா… யானறியேன் பராபரமே!

மறுக்கமுடியுமா? இதை மறைக்கமுடியுமா? என்று கேள்வி கேட்டு இருந்தீர்கள், ஆனால், நாங்கள் எதையும் மறைக்காமல் உங்கள் வாதத்தை மறுத்துவிட்டோம். இனி மறுத்து மறைப்பதோ அல்லது மறைக்காமல் மறுப்பதோ உங்கள் கையில் உள்ளது.

எசேக்கியேல் 3:17-19

17 மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. 18 சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன். 19 நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.




--
11/06/2010 12:36:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது




--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP