சமீபத்திய பதிவுகள்

சாகச சச்சின் வறுபடும் தோனி

>> Thursday, March 4, 2010


பிப்ரவரி 24-ம் தேதி... ரயில்வே பட்ஜெட்டை டி.வி-யில் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவர்கள்கூட அவசரகதியில் சேனலை கிரிக்கெட் பக்கம் திருப்பினார்கள். சாதனை மன்னன் சச்சின், ரெட்டை சதம் அடிப்பாரா... மாட்டாரா என கிரிக்கெட் ஆர்வலர்கள் நெஞ்சை இறுகப் பிடித்தபடி காத்திருக்க... அடுத்தடுத்த அடியால் 195 ரன்களை நெருங்கினார் சச்சின்.

மைதானத்தில் இருந்தவர்களும், டி.வி-க்குள் தலை நுழைக்காத குறையாக இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் எப்போதடா இன்னும் ஐந்து ரன்களைக் கடப்பார் என 195-ல் நகம் கடித்துக் காத்திருந் தனர்! மும்பையில் பல இடங்களில் பிரார்த்தனைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள் சச்சின் ரசிகர்கள். 'பெட்டிங்' உலகும் கோடான கோடிகளில் மூழ்கியது!

1997-ல் சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் குவித்த 194 ரன்களே ஒருநாள் போட்டிகளில் தனி நபரின் அதிகபட்ச ரன்களாக இருந்து வந்தது. அந்தச் சாதனையை சென்ற ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே வீரர் கோவென்ட்ரி சமன் செய்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எட்டாக்கனியாகவே கருதப்பட்டு வரும் 'ரெட்டைச் சதம்' சாதனையை நிகழ்த்த சச்சின் மட்டுமல்ல... எத்தனையோ வீரர்கள் அதற்காக மெனக்கெட்டார்கள்.

1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி 183 ரன்கள் குவித்த நிலையில், துரதிர்ஷ்டமாக ரெட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். அதே ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், சச்சின் டெண்டுல்கர் 186 ரன்கள் குவித்திருந்தபோது, 50 ஓவர்கள் முடிந்ததால் சாதனை சாத்தியப்படாமல் போனது. 2000-ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அதிரடி வீரர் ஜெயசூர்யா 189 ரன்கள் குவித்திருந்தபோது, எதிர்பாராத வகையில் ஸ்டம்பிங் செய்யப்பட... சோகத்தோடு வெளியேறினார் அவர்.

2005-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் தற்போதைய இந்தியகேப்டன் மகேந்திர சிங் தோனி 183 ரன்கள் குவித்தார். மேற்கொண்டு ஆட ரன்கள் இல்லை! 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் கொஞ்சமும் தடுமாற்றமின்றி 175 ரன்களை எட்டியபோது, 'கண்டிப்பாக ரெட்டை சதம் போட்டுவிடுவார்' என உலகமே எதிர்பார்த்தது. ஆனால், அந்த மேட்சில் துரதிர்ஷ்டமாக கிப்ஸ் விக்கெட்டை இழந்தார்.

அதே ஆண்டு மீண்டும் ஒரு வாய்ப்பு சச்சினுக்கு கிடைத்தது. நியூ சிலாந்துக்கு எதிரான போட்டியில் ரெட்டை சத கனவோடு 163 ரன்களை சச்சின் குவித்தார். மேற்கொண்டும் நிறைய ஓவர்கள் பாக்கியிருந்த நிலையில் கண்டிப்பாக சாதனை செய்வார் என நினைக்க... திடீரென அவருக்கு கடுமையான வயிற்று வலி! 'உடல்வலியா... சாதனையா..?' என சச்சின்சுதாரிப்பதற்குள்... மருத்துவர்களே மைதானத்துக்குள் வந்து சச்சினை அழைத்துப்

போனார்கள். கடந்த ஆண்டு ஆஸ்தி ரேலியாவுக்கு எதிரான போட்டியில் 175 ரன்களில் சச்சின் எதிர்பாராத வகையில் ஆட்டமிழக்க... மூன்றாவது முறையாகவும் அவருடைய டபுள் செஞ்சுரி கனவு தகர்ந்தது.

14 ஆண்டுகளாக பலிக்காமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்த இந்த சாதனையை இன்னும் சில நிமிஷங்களில் சச்சின் நிகழ்த்தப் போகிறார் என்றால்... ரசிகர்களின் பதற்றம் எப்படி இருக்கும்! அந்தப் பதற்றத்தை பன்மடங்காக்கி லட்சக் கணக்கான ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளானார் இந்திய அணியின் கேப்டன் தோனி. ரெட்டை சதத்துக்கு வெறும் ஐந்து ரன்களே சச்சினுக்கு தேவை என்கிற நிலையில், தோனி அவரை 26 பந்துகள் வரை காத்திருக்க வைக்க... ரசிகர்கள் கோபத்தின் உச்சத்துக்கே போய்விட்டார்கள். ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மேட்சில் இதேபோல் சச்சின் ரெட்டை சதத்தை நெருங்குவதற்கு வாய்ப்பில்லாதபடிரவீந்திர ஜடேஜா அடித்து விளையாடினார். அன்றைக்கு இந்தியா ஜெயிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. ஆனால், பெருமளவிலான ரன்களைக் குவித்திருக்கும் நிலையிலும் சச்சினுக்கு வாய்ப்பு கொடுக்காமல் 46, 47, 48 ஆகிய ஓவர்களில் முக்கால்வாசி பந்துகளை தோனியே எதிர்கொண்டு ஆடினார்.

உச்சகட்டமாக, ரெட்டை சதத்துக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 49 ஓவரில் ஓட்டங்கள் எடுக்காமல் முழு ஓவரையும் தோனியே எதிர்கொண்டார். அதேபோல், 50-வது ஓவரிலும் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டியவர், இரண்டாவது பந்தை பவுண்டரியை நோக்கி விரட்டினார். ஆனால், தென் ஆப்பிரிக்க வீரரின் துள்ளலான ஃபீல்டிங்கால் அப்பந்து எல்லைக் கோட்டில் தடுக்கப்பட... ஒரு ரன்னே எடுக்கப்பட்டது. அப்படியும் அடுத்த ரன்னுக்கு தோனி முயல... சச்சினோ ஒரு ஓட்டத்துடன் நிறுத்திக் கொண்டார்... தோனி பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

ஒருவழியாக தனக்குக் கிடைத்த இறுதி ஓவரின் மூன்றாவது பந்தை சச்சின் நேக்காக தட்டிவிட... அரங்கமே ஆர்ப்பரித்துக் கொண்டாட ரெட்டை சதக் கனவு நிறை வேறியது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் சச்சினை வாழ்த்து மழையால் நனைய வைக்க... கிரிக்கெட் விமர்சகர்களோ, ''இந்திய அணிக்குள் இருக்கும் உட்பூசலை இந்த ஆட்டம் அம்பலப்படுத்திவிட்டது...'' என்றே சொல்லிக் குமுறுகிறார்கள்.

சச்சினின் சாதனையை தோனி தடுக்க நினைத்ததாகவே குற்றம்சாட்டும் சிலர், ''சச்சினுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து பேட்டிங் முனையில் இருந்தார் தோனி. அதையும் மீறி ஒருவழியாக ரெட்டை சதத்தை சச்சின் அடித்த பிறகும் கேப்டன் என்கிற முறையிலாவது தோனி சந்தோஷத்தில் துள்ளிய படி சச்சினை கொண்டாடி இருக்க வேண்டும். அவரோ எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் இருந்ததே... அவருடைய மன அழுக்கை அம்பலமாக்கிவிட்டது. தோனி இருந்த இடத்தில் கங்குலி இருந்திருந்தால் மைதானத்திலேயே சச்சினை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி இருப்பார்!'' என்கிறார்கள்.

தோனியின் ஆதரவாளர்களோ, ''சச்சின் ரெட்டை சதத்தை நெருங்க ஊக்கப்படுத்தியதே தோனிதான். கடைசி நேரத்தில் சச்சினுக்கு ரொம்பவே டயர்டாகிவிட்டது. ஆடுமுனையில் இருந்திருந்தால் அவரால் தாக்குப் பிடித்து தன்னை ஃப்ரெஷ்ஷாக்கி இருக்க முடியாது. அதுதெரிந்துதான் அனைத்து பந்துகளையும் தோனியே எதிர்கொண்டார். தோனி இப்படி உதவியிருக்காவிட்டால், சச்சின் 190 ரன்களிலேயே வெளியேறி இருப்பார். இந்தளவுக்கு தோனி கைகொடுத்ததால்தான் 20 ஆண்டு நிறைவு சாதனை விருதை வாங்கிய சச்சின் அதனை தோனியின் கையில் கொடுத்து அழகு பார்த்தார்!'' என்கிறார்கள்.

எது எப்படியோ... கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அதன் ஆடம்பரத் தன்மை மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்களேகூட, சாதனை படைத்த அந்த வீர மகனை நோக்கி மைதானத்தின் நடுப்பகுதியிலிருந்து காட்டப்பட்ட வாசகங்களை மறுக்கவில்லை -''கிரிக்கெட் என்பது ஒரு மதம் என்றால்... சச்சின் அதன் கடவுள்!''

source:vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கோயிலில் கூட்ட நெரிசலில் சி்க்கி 70 பக்தர்கள் பலி

பிரதாப்கார் (உ.பி): கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கார் நகரில் ராம்ஜானகி கோயில் உள்ளது. கிரிபால்ஜி மஹராஜ் என்ற சுவாமிஜி இன்று இக்கோயிலுக்கு வந்திருந்தார். இந்த சுவாமிஜியிடம் பிரசாதம் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டிருந்தனர். பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு கூடியது. பெரும் கூட்டத்தினர் முண்டியடித்து கோயிலுக்குள் செல்ல முற்பட்ட போது, நுழைவாயிலில் இருந்த கதவு உடைந்து விழுந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தும், ஏறி மிதித்துக்கொண்டு ஓடினர். சிறுவர்கள், முதியோர் கூட்டத்தில் சிக்கி திணறினர். பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். தகவல் அறிந்ததும் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
source:dinakaran


StumbleUpon.com Read more...

டி.வி.யில் அருவருக்கத்தக்க படம்-செய்தி: கடும் கண்டனம்

டி.வி.யில் அருவருக்கத்தக்க படம்-செய்தி: கருணாநிதி கடும் கண்டனம்
  
டி.வி.யில் அருவருக்கத்தக்க படம்-செய்தி: கருணாநிதி    கடும் கண்டனம்
சென்னை, மார்ச். 4-
 
முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
பகலில் சாமி யாகவும்- இரவில் காமி யாகவும் வாழ்க்கை நடத்தி-பாமர மக்களின் வாழ்வையும் அறிவையும் பாழாக்கி வருகின்ற-பணக் கொள்ளை அடிக்கின்ற பகல்வேடக்காரர்களை; பாமர மக்களுக்கு அடையாளம் காட்ட-பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி; பலத்த எதிர்ப்புக்கிடையிலேயும் பிரச்சாரம் செய்து வந்தும் கூட, படக்காட்சிகள், நாடகங்கள் இவற்றின் வாயிலாக எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை சித்திரித்தும் கூட, உதாரணமாக படமாக வெளிவந்த சந்திரகாந்தா- சொர்க்கவாசல்- மனோகரா- வேலைக்காரி-பராசக்தி- தூக்குமேடை போன்றவற்றில் அந்தக் காவியுடைதாரிகளின் கபட நாடகத்தை எடுத்துக் காட்டியும் கூட, இன்னமும் புரிந்து கொள்ள முடியாத- புரிந்து கொண்டாலும் திருந்திக் கொள்ள இயலாத- மௌடீகத்தில் மூழ்கியோர்- நாட்டில், சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
 
சமூக நலனும், கண்ணியமும் காக்கப்பட வேண்டு மென்று, அவற்றில் அக்கறை காட்டுகிற ஒரு மக்கள் நல அரசு அண்மையில் நடை பெற்றதாக கூறப்படுகிற; காட்சியாக்கி காட்டப்படுகிற; கயமைத்தன சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
 
அதே நேரத்தில் குற்றங்கள் நடைபெறுவதை விட அந்தக் குற்றங்கள் எப்படி நடைபெற்றன-எங்கே யாரால் நடத்தப்பட்டன-எந்த முறையில் நடத்தப்பட்டன என்பதைச் சான்றாகக் காட்ட- வெளியிடப்படுகின்ற படங்களாயினும், செய்திகளாயினும் அவை அளவுக்கு மீறும்போது அவற்றை தொலைக் காட்சியிலோ பத்திரிகைகளிலோ படங்களாகப் பார்த்திடும் இளையோர் நெஞ்சங்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும் - அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதையும் எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறை கொண்டோர் அனைவரும் எண்ணிப் பார்த்து நடந்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்வது ஓர் அரசின் கடமையாகும்.
 
அந்தக் கடமையை செய்கின்ற அரசு-அந்தக் கடமையைச் செய்கின்ற நேரத்தில்-அந்தக் கடமை வெற்றி பெற அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டியது தான் அனைவரும் மேற்கொள்ளும் சூளுரையாக இருக்க வேண்டுமே யல்லாமல் ஒரு தீமையை விவரிப்பதின் மூலம்-அது மற்றொரு பெரிய தீமைக்கு வித்திடுவதாக ஆகக் கூடாது.
 
அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதனைத்தொடர்ந்து வெளிவருகின்ற செய்திகள் எவையாயினும் அவற்றை விவரம் உணர்ந்தோர் அரசுக்கும்-அரசின் காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டுமேயல்லாமல்- தாங்களே முன்னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது என்பது மட்டுமல்ல; இத்தகைய தீயவர்களுக்கு தங்கள் செயலை நியாயப்படுத்த வலிமை சேர்ப்பதாகவும் ஆகிவிடும்.
 
அருவருக்கத்தக்க செய்திகளை மற்றும் படங்களை வெளியிடுவது முள்ளை முள்ளால் எடுக்கும் காரியம் தானே" என்று சில ஏடுகளும், தொலைக் காட்சி நிறுவனங்களும் வாதிடலாம். முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் போதையேற்றும் கள்ளை அருந்தியவனை; மேலும் கள்ளையூற்றி திருத்த முடியுமா? அது போலத்தான் இந்தச் செய்திகளும் படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்து விடக் கூடாதே என்ற கவலையோடு அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
இது போன்ற ஏமாற்று வித்தைக்காரர்களையும், பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும் அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
 
இந்த அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு உண்மையிலேயே பகுத்தறிவு வளர்த்து, ஊருக்கு உபதேசிகளை ஒழித்துக் கட்ட வேண்டு மென்று எண்ணுகின்ற ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP