சமீபத்திய பதிவுகள்

அழகுக்கு அப்டேட் அவசியம்"

>> Wednesday, April 21, 2010

 

சுந்தரா. அழகுக் கலை நிபுணர். மூலிகைப் பொருட்களின் மூலம் அழகு சிகிச்சை அளிப்பதில் கைத்தேர்ந்தவர். சன் டி.வி.யின் 'மலரும் மொட்டும்', 'அழகுக் குறிப்புகள்' நிகழ்ச்சிகளின் மூலம் வெகுவாக அறியப்படுபவர். அழகுக் கலையின் நுணுக்கங்களை பல்வெறு நாடுகளுக்கும் சென்று அறிந்து வருவதில் ஆர்வம் உடையவர். ஒருபுறம் பியூட்டி கிளினிக்கை நடத்திக் கொண்டு, மறுபுறம் தனது அகாடெமி மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்களை அழகுக் கலை நிபுணர்களாக உருவாக்கி வருகிறார். இதோ தனது அனுபவங்கள் மூலமாக அழகுக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டுகிறார் வசுந்தரா...

முகம் மிருதுவாகவும் பொலிவுடனும் இருக்க, ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால், பச்சைப் பயிறு மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளப்பாகும்.

அழகுக் குறிப்பு

"சன்ரைஸ் ஆவதற்கு முன்பே எழுந்து, என்னதான் 'லொங்குலொங்கு'னு வாக்கிங் போய் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொண்டாலும், பார்லர் வந்து டச்சப் எடுக்காவிட்டால் பெரும்பாலான பெண்களுக்கு தன்னம்பிக்கையே போய்விடுகிறது. அந்த அளவுக்கு எல்லாப் பெண்களிடமும் அழகுதான் இன்றைக்கு நம்பிக்கை நட்சத்திரம். எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறோமோ, அதே அளவுக்கு அழகாகவும் இருக்க வேண்டும் என்பது நவநாகரிக உலகின் ஃபேஷனாகிவிட்டது. அதனால், பெண்களின் வாழ்க்கையில் பியூட்டி பார்லர்கள் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன.

எல்லோர் மத்தியிலும் தன்னை ஹைலைட்டாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையெல்லாம் 20 வருடத்துக்கு முன்பு வரை குறைவுதான். சினிமா நடிகைகள், மேல்தட்டுப் பெண்கள், மணப்பெண்கள் மட்டும்தான் அப்போதெல்லாம் பியூட்டி பார்லர் வருவார்கள். இந்த குறைந்த அளவு வாடிக்கையாளர்களை நம்பி அதிக அளவு அழகு நிலையங்களும் அன்றைக்கு இல்லை. ஆனால், எனக்கு நம்பிக்கை இருந்தது. தெருவுக்குத் தெரு எஸ்.டி.டி. பூத் இருப்பது மாதிரி பியூட்டி பார்லர்களும் எதிர்காலத்தில் முளைக்கத்தான் போகின்றன என்று.

இந்த நம்பிக்கையை மனதில் விதைத்தவர், என் மாமியார்தான். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு, என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் காய்கறி நறுக்கிக்கொண்டு இருந்த என்னை, 'காய்களை நறுக்கும்போதே இவ்வளவு பதமாக, அதுவும் அழகாக நறுக்குகிறாயே... நீ ஏன் பியூட்டி கோர்ஸ் படிக்கக் கூடாது' என்று மாமியார் கேட்டார். காய்களை நறுக்கிக் கொண்டு இருந்தவளுக்கு சந்தோஷத்தில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 'சரி'யென்று சொல்வதற்குள், 'பியூட்டி தெரபி அண்ட் ஹேர் டிரஸ்ஸிங்' படிக்க என் கணவர் சீட் வாங்கிவிட்டார். பியூட்டி கல்ச்சர் அகாடமியில் ஆறு மாதம் டிப்ளமோ படித்தேன்.

இந்த ஆறு மாதத்தில் அழகு சம்பந்தமாக நிறைய தெரிந்துகொண்டேன். படித்து முடித்த சூடு ஆறுவதற்குள், நிறைய பேர் என்னிடம் ஸ்டூடன்ட்டாக சேர வந்துவிட்டார்கள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை; தெரிந்ததெல்லாம் சொன்னேன். வீட்டிலேயே வகுப்பு எடுத்தேன். படித்து, முடித்ததும் பயிற்சி கொடுத்ததால் எனக்கு நானே நிறை தெளிவடைய முடிந்தது. அதற்கு ஏழு மாதம் ஆனது. என் மாமியார் பெங்களூர் போனார். திரும்பி வரும்போது பார்லர் வைக்கத் தேவையான எல்லாப் பொருட்களையும் கையோடு வாங்கி வந்துவிட்டார். இதையெல்லாம் வாங்கி வரப்போகிறார் என்பது அதுவரை எனக்குத் தெரியாது. பெற்றெடுத்த அம்மா மாதிரி மறுபடியும் சந்தோஷ அதிர்ச்சியைக் கொடுத்தார், என் மாமியார். சாரி, அம்மா.

பார்லர் தொடங்கி, நான்கைந்து வருடம் வாடிக்கையாளர் வருகை கம்மியிலும் கம்மி. ஆனால், நான் சளைக்கவில்லை. "கவலைப்படாதே... வருவார்கள். அதுவரை பொழுதுபோக்காக செய்," என்று எனர்ஜி கொடுத்தார்கள் அம்மாவும் கணவரும். அழகுப்படுத்திக் கொள்வது பற்றி பெண்களிடம் நிறைய விழிப்பு உணர்வுகள் ஏற்படத் தொடங்கின; மீடியாவின் வளர்ச்சியும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

திடீரென்று ஒருநாள் சன் டி.வி.யிலிருந்து அழைப்பு. 'மலரும் மொட்டும்' குழந்தைகள் நிகழ்ச்சி செய்யச் சொன்னார்கள். அதிர்ச்சி, ஆச்சர்யம். பியூட்டி பார்லர் நடத்திக் கொண்டு இருக்கிற நம்மை எதற்கு குழந்தைகள் நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள் என்று அதிர்ச்சி. எப்படி இந்த வாய்ப்பு நம்மைத் தேடி வந்தது என்று ஆச்சர்யம். ஆனால், இரண்டையும் ஓரம்கட்டிவிட்டு பரவாயில்லை செய்துதான் பார்ப்போமே என்று தைரியம் வந்தது. அந்த நிகழ்ச்சி சக்ஸஸ் ஆனது.

அதைத் தொடர்ந்து, 'அழகுக் குறிப்புகள்' நிகழ்ச்சி பண்ணமுடியுமா என்று கேட்டார்கள். 'முடியுமாவா... அதானே என் தொழில்!' சம்மதித்தேன். ஒவ்வொரு நிகழ்ச்சி பண்ணும்போதும் ஏதாவது வித்தியாசமா செய்யணும்னு யோசிச்சு யோசிச்சு நிறைய கற்றுக்கொடுத்தேன்; கற்றுக்கிட்டேன்.

தினமும் ஏதாவது கத்துக்கிட்டே இருந்தாலும், எனக்கு இருந்த ஆர்வம், இந்தக் கலை மேல் இருந்த தாகம் தீரவேயில்லை. மீண்டும் அழகு சம்பந்தமா படிக்கத் தொடங்கினேன். நிறைய சர்டிஃபிகேட் கோர்ஸ் படிச்சேன். ஒவ்வொரு இடத்தில் படிக்கும்போதும் நிறைய ஐடியா வந்தது.

லண்டனுக்குப் போய் 'அட்வான்ஸ்ட் சி அண்ட் ஜி பியூட்டி தெரபி - ஹேர் டிரஸ்சிங்' பி.ஜி. டிப்ளமா படித்தேன். சென்னையில் இருந்து ஐந்து பேர் போயிருந்தோம். பிராக்டிக்கல், தியரி எல்லாம் முடிந்தது. பரீட்சை எழுதினேன். சர்டிஃபிகேட் வாங்கினேன். லண்டன் போய் வந்ததில் இன்னும் கிளாரிட்டி கிடைத்தது. இப்போ அதே கோர்ஸ் எங்க அகாடமியில் பாடமாக இருக்கிறது. நான் என்ன படித்தேனோ, அதையே என் மாணவர்களும் படிக்கிறார்கள். இங்கிலாந்து பயணத்துக்குப் பிறகு சிங்கப்பூர், தாய்லாந்து, பிரேசில் என என் பயணங்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. இப்படி உலகெங்கும் அழகுக் கலை சம்பந்தமாகவும் அழகுபடுத்துவது சம்பந்தமாகவும் என்னவெல்லாம் படிப்பு இருக்கிறது; என்னவெல்லாம் பயிற்சிகள் அளிக்கப்படுக்கின்றன என்று தாகமெடுத்து தேடினேன்; தேடிக்கொண்டு இருக்கிறேன்.

கத்தரிக்கோலும் சீப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் 'ஹேர் கட்டிங்' செய்ய முடியும் என்று இங்கு நினைக்கிறார்கள். அதிலும் தொழில்நுட்பம் இருக்கிறது; அறிவியல் இருக்கிறது; புதிய உத்திகள் தேவை இருக்கிறது. அதையெல்லாம் படிக்க வேண்டும்; பயிற்சி எடுக்க வேண்டும் என்ற தாகம் தனியாமல் இருக்க வேண்டும். அந்த தாகம் இப்போது கூட என்னிடம் அப்படியே இருக்கிறது.

நான் என்ன கற்றுக்கொள்கிறேனே, அதையெல்லாம் என் மாணவர்களுக்கும் கற்பிக்கிறேன். இப்படி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என்று நிறைய செமினார் வகுப்புகள் நடத்தியதில் நல்ல வரவேற்பு. இலங்கையில் சற்று அதிகம். அங்குதான் ஒரே நேரத்தில் 600 பேர் செமினார் பயிற்சி வகுப்பில் பங்கு எடுத்துக்கொண்டார்கள். அதேவேளையில் வெளிநாட்டுக்காரர்கள் இந்தியா வந்து கற்றுக்கொள்வதில் நிறைய ஆர்வம் காட்டுவதை அந்த செமினார் வகுப்புகளில் என்னால் பார்க்க முடிந்தது.

அழகுக் கலைக்கு வெளிநாடுகளில் இல்லாத பாடத்திட்டங்கள், பயிற்சி முறைகள் அப்படி என்ன இந்தியாவில் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம், இருக்கிறது. இந்தியாவில் மூலிகை இருக்கிறது. வெளிநாடுகளில் கெமிக்கல்களில் இருந்துதான் அழகு சாதனப் பொருட்கள் தயாராகின்றன. ஆனால், மூலிகையிலிருந்து நிறைய அழகு சாதனப் பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி அழகுபடுத்துவதால், அழகுபடுத்திக்கொள்வதால் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மேலும், நிறைய நன்மைகள்தான் கிடைக்கின்றன.

அழகுக்கான ஆரோக்கியமான பாதை இந்தியாவில் இருப்பதால், நிறைய வெளிநாட்டினர் இங்கு வந்து அழகுக் கலையைப் படிக்கிறார்கள். இப்படி அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்று எல்லா கண்டங்களில் இருந்தும் மாணவர்கள் வருகிறார்கள்.

இந்தத் துறையில் ஆர்வத்துடன் சேர்ந்து கற்கும் மாணவர்கள் பொருளாதார சுதந்திரத்தோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் வேலையில் முழு திருப்தியும் இருக்கிறது. குறிப்பாக, நிறைய பெண்களுடைய வாழ்க்கையை சாதகமான சூழலுக்கு மாற்றக்கூடிய வல்லமை இந்தத் துறைக்கு உண்டு. இதில், எனக்கு நேரடி அனுபவம் நிறைய இருக்கிறது.

அட்வான்ஸ்டான 'மேக்கப்' எல்லாம் இப்பதான் வந்தது. அந்தக் காலத்தில் மருதாணியைத்தான் லிப்ஸ்டிக்காக உபயோகித்தார்கள். அதேமாதிரி அவுரி விதையை அரைத்து அதிலிருந்து வருகிற கலரை ஹேர் கலராக பூசினார்கள். குங்குமப் பூவை அரைத்து உடல் முழுக்கத் தடவினார்கள். அதிலிருந்து வெளிப்படும் நிறங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்காதவை. ஆனால், நீண்ட நாளைக்கு நீடிக்காது. குளிக்கக் குளிக்க காணாமல் போய்விடும்.

எந்த மேக்கப் போட்டாலும் அதற்கான தேவை முடிந்ததும் அதைக் கலைத்துவிடணும். குறைந்தபட்சம் தூங்கப்போகிற நேரத்திலாவது முகத்தை கழுவிட்டுவிட்டு படுக்கணும். இல்லாது போனால் பக்கவிளைவுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாளாக நாளாக மேக்கப் ரத்தத்தில் கலக்கும்.

மேக்கப் போடும்போது நல்ல பிராண்ட்டட் அயிட்டமா யூஸ் பண்ணி மேக்கப் போடணும். விலை கம்மியாக கிடைக்கிறது; ரொம்ப சீப்பா பிளாட்பார்மில் வாங்கிடலாம் என்று நினைத்து தப்பு கணக்குப் போடக்கூடாது. அப்புறம் இன்னும் அதிக பணத்தை செலவழிக்க வேண்டிய நிலை ஆகிடும். இதெல்லாம், அழகுக் கலையில் சில அடிப்படையில் விஷயங்களுள் சில.

மத்திய தொழில் துறை அமைச்சகத்துக்காக அழகு சம்பந்தப்பட்ட 9 புத்தகங்களை தயாரித்து இருக்கிறேன். ஒவ்வொரு புத்தகத்திலேயும் அழகு தொடர்பான ஒவ்வொரு சிகிச்சை முறைகளைப் பற்றி சொல்லியிருக்கோம். ஹேர் கலரிங், ஹேர் கட்டிங், ஸ்பா, அரோமா இப்படி எல்லாமே இருக்கு. நல்லாவும் இருக்கு. அரசு இதை அங்கீகரித்து இருப்பதில் மகிழ்ச்சி.

அழகுக் கலைப் பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் இதற்க்குரிய பாடங்களைப் படிப்பதோடு, வாடிக்கையாளர்களிடம் எப்படி பேச வேண்டும்; எப்படி பழக வேண்டும் என்பன பற்றியெல்லாம் கற்றுக் கொள்வது மிகவும் அவசியம். எல்லா மொழி வாடிக்கையாளர்களிடமும் சுலபமாகத் தொடர்புகொள்ள வேண்டும். அதற்கு, ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் படிக்கும் போதெல்லாம் இந்த அளவுக்கு ஆலோசனைகளைக் கொடுப்பதற்கு ஆட்கள் இல்லை. இப்போது நிறைய வசதிகள் - வாய்ப்புகள் இருக்கிறது. இவற்றையெல்லாம் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த வகை பாடத்திட்டங்களில் ஒரு பிரிவாக, 'கலர் காமினி' என்று ஒரு கோர்ஸ். அதில் உயரம் குறைந்தவர்களுக்கு எந்தக் கலர், உயரமானவர்களுக்கு எந்தக் கலர் செட்டாகும்; கல்யாணப் பெண்ணுக்கு எந்த மாதிரி மேக்கப் போடணும், எந்த டிரஸ் போட்டா மேட்சாகும். வெயில் காலம், மழைக் காலம், குளிர்காலம்... இப்படி எந்தெந்தக் காலங்களில் எந்த மாதிரியான கலர் டிரஸ் போடணும். கூல் கலர்ஸ்னா என்ன..? வார்ம் கலர்ஸ்னா என்ன..? என்பன குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

அதேமாதிரி மேக்கப்பில் நிறைய வெரைட்டி இருக்கு. டே மேக்கப், ஈவினிங் மேக்கப், சினிமா மேக்கப், போட்டோகிராஃபி மேக்கப். இந்த மேக்கப்பிலே எல்லா ஷேப்பும் இருக்கு. ஆனால், ஓவல் ஷேப்தான் பெஸ்ட். டைமண்ட் ஷேப்பைக்கூட ஓவலா மாற்ற முடியும். இப்படி மேக்கப்லேயே நிறைய டைப்ஸ். ஆயில் மேக்கப் எப்படி பண்ணணும்; மேட் பினிஷிங், ஹை டெஃபினிஷியன் மேக்கப், கேமரா மேக்கப், லைட் மேக்கப் (வெயிட்டே இல்லாம எப்படி மேக்கப் பண்றது) எப்படி பண்ணணும்... இப்படி எல்லா வகையான மேக்கப்பையும் கற்றுகொள்ளும் வாய்ப்பு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிகமாகவே இருக்கின்றன. அதேபோல், வேலை உத்தரவாதமும் உண்டு. எளிதில் தனியாக தொழில் தொடங்கி வெற்றி பெறவும் முடியும்.

இந்தத் துறையில் இவ்வளவுதான் படிப்புன்னு சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் நிறைய விஷயங்கள் வந்துகிட்டே இருக்கு. நம்மை நாமே அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும்.

இந்தக் காலகட்டத்தில் ஸ்கின் அண்ட் ஹேர் பிராப்ளம் அதிகமாக இருக்கிறது. வெயிலில் போகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் பயணிக்கிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அதனால், எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக அணுக வேண்டிய தேவை அதிகமாகிவிட்டது. அதேநேரத்தில் பொருட்களும் இயந்திரங்களும் முன்னற்றம் அடைந்துகொண்டே இருக்கு. அதனால், பியூட்டிஷியன் எப்போதும் அப்டேட்டடாக இருக்க வேண்டும்.

இந்தத் துறைக்கு வருகிறவர்கள், சும்மா யாரிடமாவது கற்றுக்கொண்டோமா கடையை விரித்தோமா என்று இல்லாமல், அரசு சான்றிதழ் பெற்ற அகாடெமியில் சேர்ந்து, கோர்ஸை நன்கு படித்துவிட்டு ஆரம்பிப்பதுதான் நல்லது. அப்போதுதான் இந்தத் துறையில் அப்கிரேட் ஆகமுடியும். இதில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் நீங்களும் அழகுக் கலை நிபுணராக வலம் வரலாம்!"


source:vikatan

--
www.thamilislam.blogspot.com

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP