சமீபத்திய பதிவுகள்

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களைக் கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டம்

>> Sunday, May 29, 2011


  • சிறிலங்கா அரசபடைகளின் பிடியிலுள்ள  திரு. செல்வராசா பத்மநாதன்  விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார். அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணைபோகின்றார், என விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது, 2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம்.
    எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில்  அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.
    கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக்கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடாத்தி வந்தோம்.
    எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், இராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர்நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம். எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
    ஐ.நா நிபுணர்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறுபல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர்மீது மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்லமெல்ல வெளிவந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் மகிந்த அரசு செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கின்றது.
    இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத்தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்திற் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகின்றது சிங்களப் பேரினவாத அரசு.
    ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் மகிந்த அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்துகொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித்திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற திரு செல்வராசா பத்மநாதன். இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டுவருகிறது சிறிலங்கா அரசு.
    சிறிலங்கா அரசபடைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை;
    இனியும் நடக்கப்போவதுமில்லை. அவ்வகையில் திரு. செல்வராசா பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக்கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார். அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணைபோகின்றார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.
    திரு. செல்வராசா பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களைக் கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இச்செவ்வி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.
    அன்பான தமிழ்பேசும் உறவுகளே,
    சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராஜதந்திர சதிவலைக்குள் புதைந்துபோகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணைபோகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
    நன்றி.
    "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
    ஆ.அன்பரசன்,
    ஊடகப்பிரிவு,
    தலைமைச் செயலகம்,
    தமிழீழ விடுதலைப் புலிகள்,
    தமிழீழம்.


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கோப்பை சூப்பர் கிங்ஸ்

>> Saturday, May 28, 2011

http://sports.dinamalar.com/SportsImages/M-Vijay.jpg


சென்னை: ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த பைனலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முரளி விஜய், அஷ்வினின் அபார ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல், "டுவென்டி-20' தொடர் நடந்தது. நேற்று சென்னையில் நடந்த பைனலில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
"சிக்சர்' மழை:
சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து "சூப்பர்' அடித்தளம் அமைத்தனர். பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்த விஜய், அரவிந்த் பந்தை சிக்சருக்கு விரட்டி அதிரடியை துவக்கினார். மறுபக்கம் மிகவும் "பிசி'யாக இருந்த ஹசி, முன்னணி வீரரான ஜாகிர், முகமது பந்துகளில் தலா ஒரு சிக்சர் விளாசினார். தொடர்ந்து கெய்ல், வெட்டோரி சுழலில் விஜய் சிக்சர் அடிக்க, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பின் மிதுன் ஓவரில் 2 பவுண்டரி அடித்த விஜய் 29 பந்துகளில் அரைசதம் எட்டினார். தனது வாணவேடிக்கையை தொடர்ந்த இவர், அரவிந்த் வீசிய போட்டியின் 12வது ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்கள் அடித்தார். மறுபக்கம் வெட்டோரி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹசி அரைசதம் கடந்தார். முகமது வீசிய போட்டியின் 15வது ஓவரில் ஹசி, விஜய் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இதே ஓவரில் இன்னொரு சிக்சர் அடிக்க பார்த்த, ஹசி(63) பரிதாபமாக அவுட்டானார்.
நழுவிய சதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி ரன்வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். இவர், கெய்ல் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்தார். அரவிந்த் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை தூக்கி அடித்த விஜய், சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இவர் 52 பந்தில் 95 ரன்கள்(4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். இரண்டாவது பந்தில் தோனி(22) அவுட்டானார். அடுத்த பந்தை ரெய்னா தடுத்து ஆட, அரவிந்தின் "ஹாட்ரிக்' வாய்ப்பு தகர்ந்தது. நான்காவது பந்தில் ரெய்னா சிக்சர் அடித்து அசத்தினார்.
கெய்ல் வீசிய கடைசி ஓவரில் ஆல்பி மார்கல்(2) முதலில் வெளியேறினார். அடுத்த பந்தில் ரெய்னா(8) போல்டானார். கடைசி பந்தில் பிராவோ சிக்சர் அடித்து, 200 ரன்களை கடக்க உதவினார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. பிராவோ(6) அவுட்டாகாமல் இருந்தார்.
அஷ்வின் ஜாலம்:
கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, சென்னை கிங்ஸ் விரித்த "சுழல்' வலையில் அப்படியே சிக்கியது. முதல் ஓவரிலேயே அஷ்வின் பயங்கர "ஷாக்' கொடுத்தார். இவரது சுழலில் "அதிரடி' கெய்ல் "டக்' அவுட்டாக, சென்னை ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். இத்தொடர் முழுவதும் அசத்திய கெய்ல், மிக முக்கியமான பைனலில் கோட்டை விட்டதால், அரங்கில் அமர்ந்திருந்த பெங்களூரு அணியின் உரிமையாளர் மல்லையா அதிர்ச்சியில் உறைந்தார்.
சொதப்பல் ஆட்டம்:
அடுத்து வந்தவர்களும் சொதப்பலாக ஆடினர். தொடர்ந்து அகர்வாலை(10) வெளியேற்றிய அஷ்வின் இன்னொரு "அடி' கொடுத்தார். ஜகாதி சுழலில் டிவிலியர்ஸ்(18), பாமர்ஸ்பச்(2) சிக்கினர். போராடிய விராத் கோஹ்லி(35), ரெய்னா பந்தில் அவுட்டாக, பெங்களூரு கதை முடிந்தது. மீண்டும் பந்துவீச வந்த அஷ்வின், கேப்டன் வெட்டோரியை(0) வெளியேற்றினார். ஜாகிர் 21 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சவுரப் திவாரி(42*) ஆறுதல் அளித்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
இவ்வெற்றியின் மூலம் ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்லும் முதல் அணி என்ற சாதனையை சென்னை கிங்ஸ் அணி படைத்தது.
ஆட்ட நாயகன் விருதை முரளி விஜய் வென்றார்.



"ஆரஞ்ச் கேப்' கெய்ல்
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணியின் கெய்ல், 608 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடம் பெற்று, இதற்கான "ஆரஞ்ச்' தொப்பியை தட்டிச் சென்றார். இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த "டாப்-10' வீரர்கள் விவரம்:
பெயர்/அணி    போட்டி    ரன்கள்
1. கெய்ல்(பெங்களூரு)    12    608
2. கோஹ்லி (பெங்களூரு)    16    557
3. சச்சின் (மும்பை)    16    553
4. மார்ஷ் (பஞ்சாப்)    14    504
5. ஹசி (சென்னை)    14    492

மலிங்கா அபாரம்
பவுலிங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மும்பையின் மலிங்கா (28) முதலிடத்தை பெற்று, இதற்காக "பர்பிள் கேப்' பரிசை பெற்றார். இவ்வரிசையில் "டாப்-5' வீரர்கள் விவரம்:
பெயர்/அணி    போட்டி    விக்.,
1. மலிங்கா (மும்பை)    16    28
2. முனாப் படேல் (மும்பை)    15    22
3. அரவிந்த் (பெங்களூரு)    13    21
4. அஷ்வின் (சென்னை)    16    20
5. அமித் மிஸ்ரா (டெக்கான்)    14    19

இதுவரை சாம்பியன்கள்
ஆண்டு    சாம்பியன்    எதிரணி
1. 2008    ராஜஸ்தான் ராயல்ஸ்    சென்னை சூப்பர் கிங்ஸ்
2. 2009    டெக்கான் சார்ஜர்ஸ்    பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
3. 2010    சென்னை சூப்பர் கிங்ஸ்    மும்பை இந்தியன்ஸ்
4. 2011    சென்னை சூப்பர் கிங்ஸ்    பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்

சாதனை ஜோடி
ஐ.பி.எல்., வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (159) சேர்த்த ஜோடி என்ற பெருமையை, சென்னை அணியின் முரளி விஜய், மைக் ஹசி பெற்றது. இதற்கு முன் கில்கிறிஸ்ட்-லட்சுமண் இணைந்து, மும்பை அணிக்கு எதிராக 155 ரன்கள் (2008) எடுத்து இருந்தனர்.

விஜய்க்கு சூப்பர் "விசில்' அடிங்க...
சென்னை அணியின் சாம்பியன் கனவுக்கு தமிழக வீரர்களான முரளி விஜய், அஷ்வின் கைகொடுத்தனர். பேட்டிங்கில் அசத்திய முரளி விஜய் 95 ரன்கள் விளாசினார். இவர், ஐ.பி.எல்., தொடரின் பைனலில் அதிக சிக்சர் (6) அடித்தவர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக 2008 பைனலில், ராஜஸ்தானின் யூசுப் பதான் (எதிரணி-சென்னை), 4 சிக்சர் அடித்திருந்தார்.
இதே போல சுழலில் அசத்திய அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தி, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். பெங்களூரு அணி, அன்னிய வீரரான கெய்லை நம்பி ஏமாந்தது. ஆனால், சென்னை அணி மண்ணின் மைந்தர்களை நம்பி சந்தித்தது.

 தோனியின் சாதனை பயணம்
தோனியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. இவரது தலைமையில், இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற முக்கிய சாம்பியன் பட்டங்கள்...
ஆண்டு/மாதம்    வென்ற கோப்பை
1. 2007/ஆகஸ்ட்    "டுவென்டி-20' உலக கோப்பை
2. 2010/ஏப்ரல்    ஐ.பி.எல்., "டுவென்டி-20' கோப்பை
3. 2010/செப்டம்பர்    ஐ.பி.எல்., சாம்பியன்ஸ் லீக் கோப்பை
4. 2011/ஏப்ரல்    உலக கோப்பை (50 ஓவர்)
5. 2011/மே    ஐ.பி.எல்., "டுவென்டி-20'

ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹசி(கே)மிதுன்(ப)முகமது    63(45)
விஜய்(கே)வெட்டோரி(ப)அரவிந்த்    95(52)
தோனி(கே)கோஹ்லி(ப)அரவிந்த்    22(13)
ரெய்னா(ப)கெய்ல்    8(5)
மார்கல்(கே)கோஹ்லி(ப)கெய்ல்    2(4)
பத்ரிநாத்-அவுட் இல்லை-    0(0)
பிராவோ-அவுட் இல்லை-    6(1)
உதிரிகள்    9
மொத்தம் (20 ஓவரில், 5 விக்.,)    205
விக்கெட் வீழ்ச்சி: 1-159(மைக் ஹசி), 2-188(முரளி விஜய்), 3-188(தோனி), 4-199(மார்கல்), 5-199(ரெய்னா).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 4-0-30-0, அரவிந்த் 3-0-39-2, கெய்ல் 4-0-34-2, சையது முகமது 3-0-39-1, வெட்டோரி 4-0-34-0, அபிமன்யு மிதுன் 2-0-22-0.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
அகர்வால்(ப)அஷ்வின்    10(5)
கெய்ல்(கே)தோனி(ப)அஷ்வின்    0(3)
கோஹ்லி-எல்.பி.டபிள்யு(ப)ரெய்னா    35(32)
டிவிலியர்ஸ்-எல்.பி.டபிள்யு(ப)ஜகாதி    18(12)
பாமர்ஸ்பச்(கே)+(ப)ஜகாதி    2(3)
திவாரி-அவுட் இல்லை-    42(34)
வெட்டோரி(கே)+(ப)அஷ்வின்    0(1)
மிதுன்(கே)போலிஞ்சர்(ப)பிராவோ    11(8)
ஜாகிர்(கே)ஹசி(ப)போலிஞ்சர்    21(21)
சையது-அவுட் இல்லை-    2(2)
உதிரிகள்    6
மொத்தம் (20 ஓவரில், 8 விக்.,)    147
விக்கெட் வீழ்ச்சி: 1-1(கிறிஸ் கெய்ல்), 2-16(அகர்வால்), 3-48(டிவிலியர்ஸ்), 4-62(பாமர்ஸ்பச்), 5-69(விராத் கோஹ்லி), 6-70(வெட்டோரி), 7-92(அபிமன்யு மிதுன்), 8-130(ஜாகிர் கான்).
பந்து வீச்சு: அஷ்வின் 4-0-16-3, மார்கல் 3-0-24-0, போலிஞ்சர் 3-0-28-1, ஜகாதி 4-0-21-2, ரெய்னா 4-0-39-1, பிராவோ 2-0-15-1.

  source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

தலையணை சண்டை (கணோளி)



நாம் பல விதமான ஆயுதங்களை வைத்து சண்டையிடுவதை பார்த்திருக்கிறோம். இந்த சண்டையின் அயுதம் என்ன தெரியுமா? தலையணை. இந்த் தலையணைச் சண்டையைப் பார்க்கும் போது வேடிக்கையாக தான் இருக்கிறது.
2006 ம் ஆண்டு கின்னஸ் சாதனை படைத்த இந்த தலையணைச் சண்டையில் 10000 போ் கலந்து கொண்டனர்.





 

StumbleUpon.com Read more...

பேண்ட், லுங்கியாக மாறும் கோவணம், லங்கோடு

>> Friday, May 27, 2011


இந்த கட்டுரை வினவு தளத்தில் இருந்து பாவிக்கப்படுகிறது.கட்டுரையின் கருத்து நன்றாக இருந்த படியினால் இங்கு பதிகிறேன்



மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி


சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 1

இந்து மதம்தான் தேசபக்தியென்றும், மற்ற மதங்களெல்லாம் தேச விரோதமென்றும், சிறுபான்மை மத மக்களெல்லாம் வெளிநாடுகளின் பால் பற்று கொண்டவர்கள் என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் அப்பட்டமாக பிரச்சாரம் செய்கிறது. மக்களது வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் எளிய நிகழ்வுகளைக்கூட இவர்கள் தங்களது பாசிச பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். பொதுப்புத்தியில் இவர்கள் விதைக்கும் விஷம் ஆழமானது. அவற்றை வேரறுத்து புதிய கலாச்சரம் வெளியிட்டிருக்கும் இந்த நூல் தமிழகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. அந்த கட்டுரைகளை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

"மத மாற்றம் என்பது வெறும் கடவுளை மட்டும் மாற்றிக் கொள்ளும் விசயமல்ல.அது ஒரு தேசிய மாற்றம்இந்து மதத்திலிருக்கும் போது 'வணக்கம்சொன்னவர்,முசுலீமாக மாறும்போது 'அஸ்ஸலாமு அலைக்கும்என்கிறார்.
கிறித்தவர் 'தோத்திரம்அல்லது 'குட்மார்னிங்என்கிறார்வேட்டி மாறிபேண்ட்டோலுங்கியோ நிரந்தர உடையாக மாறுகிறதுபெண்கள் பூச்செடிபொட்டுவைத்துகோலமிட்டுகுத்துவிளக்கு ஏற்றுவது நின்று போகிறதுதேங்காய்உடைத்துகுத்துவிளக்கு கற்பூரம் ஏற்றி பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும்காரியங்கள் ரிப்பன் வெட்டி ஆரம்பிக்கப்படுகிறதுபிறந்த நாட்களுக்குக்கோவிலுக்குப் போகும் பழக்கம் மாறி கேக் வெட்டும் பழக்கம் வருகிறது.
'ஒருவனுக்கு ஒருத்திஎன்ற பண்பாடு மாறி பலதாரமணம்விவாகரத்துசெய்வதுமான கலாச்சாரச் சீர்கேடு ஏற்படுகிறதுபாரதத்தில் உள்ள புனிதஸ்தலங்கள் மறந்து விதேசங்களிலுள்ள மெக்காமெதினாவாடிகன்,கான்ஸ்டாண்டிநோபிள்ஜெருசலேம் – புனித நகரங்களாகக் கருதப்படுகின்றன.முன்னோர்கள்தாத்தாபாட்டிகளை முட்டாள்கள்அறிவிலிகள் என்று கருதும்எண்ணம் வளர்கிறதுசித்திரை முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடியதுபோய் ஜனவரி கொண்டாடப்படுகிறது.
மொத்தத்தில் ஆன்மீக நாட்டம் நொடிந்து லோகாயதவாதம் பெருகி கொலை,கொள்ளைகற்பழிப்பு போன்ற எண்ணற்ற குற்றங்கள் பெருகி வளர்கின்றன.மதமாற்றத்தில் ஏற்படும் தேசிய மாற்றங்களுக்கு இவை ஒரு சிலஉதாரணங்களே."
இந்து முன்னணி வெளியிட்டிருக்கும் 'மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்?' என்றவெளியீட்டில் இருந்து.
____________________________________________________________________________

நமஸ்காரம் போய் குட்மார்னிங்தோத்திரம்,அஸ்ஸலாமு அலைக்கும்.

ணக்கம் என்ற வார்த்தை பார்ப்பன இந்துப் பண்பாடல்ல என்பது முதல் விசயம். 'நமஸ்காரத்தை' ஒழித்து தமிழகத்தில் 'வணக்கத்தை'க் கொண்டு வந்தது திராவிட இயக்கத்தின் முயற்சியாகும். அது மட்டுமல்ல, க்ஷேமம் நலமாகவும், அபேட்சகர் வேட்பாளராகவும், பொதுக்கழிப்பிட ஸ்திரீ – புருஷன், ஆண் – பெண்ணாகவும், இன்னும் ஏராளமான சொற்கள் மாற்றப்பட்டு மக்களுக்கு உதவி புரிந்தன. ஆனால், இன்றும் ஆர்.எஸ்.எஸ்.- இல் இருக்கும் இளித்தவாய்த் தமிழர்கள் கூட 'நமஸ்தே ஜீ' எனக் கூற வேண்டும் என்பதுதான் அவர்கள் மரபு.
அடுத்து, 'குட் மார்னிங்' சொல்பவர்களெல்லாம் கிறித்தவரா? வெள்ளையர்கள் கொண்டு வந்த மரியாதை குறித்த சொற்களும் பழக்கங்களும்தான் இந்தியாவில் பரப்பப்பட்டன; அநேக நாடுகளிலும் வழக்கத்திலிருக்கிறது. அரசு அதிகார வர்க்கத்தில் தொடங்கிய இந்த ஆங்கில மரியாதையை அனைவருக்கும் பரப்பி விட்டதே 'அவாள்'தான். இன்று 'குட்மார்னிங்' பழைய சம்பிரதாயமாகி, "ஹாய், ஹல்லோ" தான் நகரங்களில் கொடிகட்டிப் பறக்கின்றது. இதைப் பரப்பிவிட்டவர்கள் பாதிரியார்களா என்ன?
தோத்திரம் என்ற சொல் ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருதச் சொல்தான். பார்ப்பனர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறியோது சடங்குகளையும் சமஸ்கிருதத்தையும் கொண்டு சென்றதன் விளைவே இது. அதிலும் 'ஸ்'-ஐ உருவிவிட்டு வெறும் தோத்திரமாக்கியது தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களே.
கிறித்தவர்களின் கை குலுக்கவும், இசுலாமியர்களின் ஆரத் தழுவும் முறையும், பார்ப்பனியத்தைவிட நாகரீகமான பழக்கங்களாகும். நமஸ்காரம் என்பது கை கூப்பி, தலை தாழ்த்தி முழு உடலையும் கிடத்தி வணங்கும் முறையாகும். அதுவும் கடவுள், பார்ப்பனர்கள், மன்னர்கள், மடாதிபதிகள், மேல்சாதியினர், தற்போது தலைவர்கள் – அதிகாரவர்க்கம் – மந்திரிகள் போன்றோருக்குச் செலுத்தப்படும் அடிமைத்தனமாகும்.
மக்களுக்குள் மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தி விசாரித்தல் என்பது இந்து மரபிலேயே இல்லை. பார்ப்பனியத்தின் கறைபட்ட தமிழின் 'வணக்கமும்' இதற்கு விதி விலக்கல்ல. முக்கியமாக நமஸ்காரம் யாரையும் தொட வேண்டிய அவசியமில்லாமல், தீண்டாமையை க்ஷேமமாகப் பாதுகாக்கிறது.
ஆக கிறித்தவ, இசுலாமிய மேலை நாட்டுப் பண்பாட்டின்படி சகமனிதனைக் கைகுலுக்கி, ஆரத்தழுவும் முறையையே நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கேற்ற புதிய தமிழ்ச் சொல்லும் கண்டுபிடிக்க வேண்டும். இம்முறையில் தீண்டாமை ஒழிப்பும் உள்ளது. எனவே அவமரியாதையின் பிறப்பிடமான பார்ப்பனப் பண்பாட்டின் சொந்தக்காரர்களுக்கு மரியாதை குறித்துப் பேசும் அருகதையில்லை.

வேட்டி போய் பேண்ட்லுங்கி

ந்துப் பண்பாட்டின்படி வெளி ஆடைகள் மட்டுமல்ல, உள் ஆடைகளும் மாறியிருக்கிறதா என்று ஏன் ஆராயவில்லை? கோவணம், லங்கோடு அணியாதவர்கள் எப்படி 'இந்து'க்களாக இருக்க முடியும்? ஏதோ குர்ஆனிலும், பைபிளிலிலும் சொல்லப்பட்டிருப்பதுபோல லுங்கி இசுலாத்திற்கும், பேண்ட் கிறித்தவத்திற்கும் சொந்தமானது என்பது முழு முட்டாள்தனமாகும். அரேபியாவில் எந்த முசுலீம் லுங்கி உடுத்துகின்றான்? உடைகள் என்பது வர்க்கம், தொழில், தட்பவெப்ப நிலை சம்பந்தப்பட்டதுதான். பேண்ட் உலகத்திற்கும், லுங்கி ஆசியாவுக்கும் பொதுவான உடைகள்தான்.
உழைக்கும் மக்களுக்கு லுங்கி உடுத்தினால் வேலை செய்ய வசதியாக இருக்கிறது. லுங்கி உடுத்துபவர்கள் எல்லாம் முசுலீம்கள் என்றால் இந்துக்கள் எண்ணிக்கை சிறுபான்மையாகிவிடும். சேலையைவிட முகலாயர்கள் அறிமுகப்படுத்திய சுரிதார், சல்வார் கமீஸ் வசதியாக இருக்கிறது என்பதால்தான் பெண்கள் விரும்பி அணிகிறார்கள். வேண்டுமானால் அதை ஆர்.எஸ்.எஸ் தடுக்கட்டுமே? அவ்வளவு ஏன்? ஷாகாவில் பயிற்சி பெரும் ஸ்வயம் சேவக குண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை, பெல்ட் ஷூ எல்லாம் இந்துப் பண்பாடா? இன்னும் இராணுவம், போலீசு, கமாண்டோ எல்லாருக்கும் வேட்டி, மரச்செருப்பை மட்டும் போட வைத்து பாரதப் பண்பாட்டைக் காப்பாற்றுங்கள்.  டெண்டுல்கருக்கு பஞ்சக்கச்சம் உடுத்துங்கள். பி.டி.உஷாவிற்கு மடிசார் கட்டி ஓடச் சொல்லுங்கள்.
இவற்றைவிட சட்டை, பேண்ட் துணி தயாரிக்கும் விமல், அர்விந்த், ஜே.சி.டி, குவாலியர், ரேமண்ட்ஸ், மதுரா கோட்ஸ், லட்சுமி மில் போன்ற இந்து பனியா முதலாளிகளிடம் அதை நிறுத்திவிட்டு, வேட்டி, கோவணம் லங்கோடு மட்டும் தயாரிக்க ஆணையிடுங்களேன்.

பெண்கள் பூச்சூடிபொட்டு வைத்து கோலமிட்டு,குத்து விளக்கு ஏற்றுவது நின்று போகிறது

வீடு வாசல் தெளித்து கோலமிட வேண்டுமென்றால் முதலில் வீடும் வாசலும் வேண்டும். அப்படியே இருந்தாலும் 'அழகு படுத்துவது' என்பது வர்க்கம், வசதிக்கேற்பவே மாறுகிறது. மீனவப் பெண் வீட்டின் முன் கருவாடும், விவசாயப் பெண்ணின் வீட்டில் தானியமும், குயவர் பெண் வீட்டில் களிமண் சேறும், கால்நடை வளர்க்கும் பெண்வீட்டில் புழுக்கைகளும் நிறைந்திருக்கும்.
ஆனால், பார்ப்பன – மேல்சாதி  – மேல்தட்டுப் பிரிவினரின் வீடுகள் முன் பெரிய வாசல், துளசி மாடம், சிறு கோவில், தோட்டம் எல்லாம் இருக்கும். ஏதோ உலகிலேயே இந்து வீடுதான் சுத்தமாக இருப்பது போலவும் ஏனைய வீடுகள் பன்றித் தொழுவமாக இருப்பதாகவும் இவர்கள் கூறுவது பிதற்றல். குத்து விளக்கு வகையறாவெல்லாம் என்றைக்குமே ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் பயன்படுத்தியது கிடையாது; முடியாது. முதலில் அகல் விளக்கு, காடா விளக்கு, சிம்னி, அரிக்கன் என்றுதான் மாறியது. தற்போதுதான் குத்துவிளக்கு அறிமுகமாகியது என்றாலும் அது இல்லாத வீடு  இந்து வீடில்லை என்றால் இந்துக்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள்.
அதேபோல பட்டுச் சேலை உடுத்தி, தலை நிறைய பூச்சூடி, உடல் முழுவதும் ஆபரணங்கள் அணிவது மேல்சாதி மேட்டுக்குடியினர் மட்டும்தான். உழைக்கும் பெண்களைப் பொறுத்தவரை இப்பேர்ப்பட்ட அலங்காரங்களெல்லாம் வெகு அரிது. மேலும் இந்த அழகுக் கலைகளெல்லாம் பெண்களைப் போகப் பொருளாக்கி நுகர்வதற்காக ஆணாதிக்கமும், மதமும், முதலாளித்துவமும் உருவாக்கிய அடிமைத்தனம்தான். எனவே அனைத்து மதங்களும் பெண்ணைப் போக பொருளாக வைப்பதற்கு விதித்திருக்கும் பூ, பொட்டு, பர்தா போன்றவைகளை ஒழிக்க வேண்டும் என்கிறோம். தற்போது சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் தொடங்கி ஏகப்பட்ட இந்து அப்சரஸ்கள் உலக அழகி பட்டங்களை வென்று பாரத மாதாவின் புகழை எட்டுத் திக்கும் பரப்பி வந்தாலும், அவர்கள் அழகை வளர்த்த விதமே 'கிறித்தவ'ப் பாணியிலான மேற்கத்திய அலங்கார முறைகளில்தான்.
இது குறித்துக் கவலைப்படும் இந்து மதவெறியர்கள், இந்துப் பண்பாட்டின்படி அழகிகளை உருவாக்கி உலகை வீழ்த்துவதற்கு, காமசூத்திரம், சௌந்தர்யலகரி, கனகதாரா ஸ்தோத்திரம், ஜெயதேவரின் அஷ்டபதி போன்ற பக்தி ரசம் சொட்டும் இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை வைத்துக் கல்லூரிப் பெண்களிடம் விநியோகிக்கலாம்.
அவ்வாறு செய்தால், பெண்களே இவர்களை செருப்பாலடித்து 'ஈவ் டீசிங்' கேஸில் பிடித்துக் கொடுப்பார்கள்.

பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும்காரியங்கள் மறைந்து போதல்

விமானத் தாங்கிக் கப்பல்களோ, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளோ, அணுகுண்டு வெடிப்போ அனைத்தையும் நாள் நட்சத்திரம் பார்த்து, யாகம் வளர்த்து, கற்பூரம் – குத்து விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்துத்தான் இன்றும் இயக்கி வைக்கின்றார்கள். அன்னியச் செலாவணித் தட்டுப்பாடோ, பணவீக்கமோ என்றால் ரிசர்வ் வங்கியில் உடனே ஒரு பூசை செய்கிறார்கள். குடமுழுக்கிற்கு மட்டுமல்ல, தேர்தல் நாளையே சங்கராச்சாரிதான் குறிக்கிறார். பெரும் நிறுவனங்கள் வருடந்தோறும் தமது அலுவலகங்களை வாஸ்து சாஸ்திரப்படி கன்னாபின்னாவென்று இடித்து மாற்றுகின்றன. இந்தியா என்பது 'பாம்பாட்டிகளின் தேசம், பண்டாரங்களின் நாடு' என்று பெயர் வருவதற்குக் காரணமே இந்தப் பார்ப்பன முட்டாள்தனங்கள்தான்.
அறிவியல், பகுத்தறிவு, மதச்சார்பற்ற நோக்கில் முன்னேறிவரும் வாழ்க்கைக்கு மதச் சடங்குகள் தேவையில்லை. ஏனென்றால் இம்மூன்றும் வளருவதற்குத் தடைவிதித்ததே மதங்கள்தான். எனவே, இலட்சக்கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்பட்டு 'பாரத பண்பாட்டின்படி' ஆரம்பிக்கப்படும் காரியங்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். இவைகளுக்கு ரிப்பன் வெட்டுவது எவ்வளவோ மேல். அதிருக்கட்டும். துவக்க விழாக்களில் 'இந்து' குத்துவிளக்கை 'கிறித்துவ' மெழுதுவர்த்தியால்தான் கொளுத்துகிறார் அத்வானி. பாரதப் பண்பாட்டின்படி அவர் கையில் தீவிட்டியைக் கொடுத்து விடலாமே! பொருத்தமாகவும் இருக்கும்.

'ஒருவனுக்கு ஒருத்திஎன்ற பண்பாடுபலதாரமணம்விவாகரத்து போன்ற சீரழிவுகளுக்குமாறுகிறது.

'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது இந்துப் பண்பாடல்ல. 'ஒருத்திக்கு ஒருவன்தான்' இந்துப் பண்பாடாகும். அதாவது ஆணுக்கு எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே கணவனாக முடியும். மேலும் இந்தப் பண்பாடு உலகெங்கிலும் இருக்கும் ஆணாதிக்கப் பண்பாடுதான்.
பலதாரமணத்தை ஒழித்து 'ஒருவனுக்கு ஒருத்திதான்' என்பதை 1950-இல் அம்பேத்கார்தான் சட்டமாகக் கொண்டு வந்தார். அதை மட்டுமல்ல, குழந்தை மணத்தடை, விதவை மறுமணம், விவாகரத்து அனைத்தையும் இந்துமத வெறியர்கள்தான் எதிர்த்தார்கள்; முசுலீம்கள் அல்ல. எனவே சமீபகாலம் வரை ஒருவன் பல பெண்களை வைத்திருப்பதுதான் இந்துப் பண்பாக இருந்தது. 7-ஆம் நூற்றாண்டிலாவது நபி நாயகம் 4 மனைவிக்கு மேல் மணக்கக்கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தார். ஆனால், இந்து மதத்தில் 20-ம் நூற்றாண்டு வரை அந்தக் கட்டுப்பாடு கூட இல்லை என்பதே முக்கியம்.
விவாகரத்து என்பது மேற்கிலிருந்து வந்த சாபக்கேடு என்கிறார்கள். இல்லை, அது ஒரு ஜனநாயக உரிமையாகும். இந்து தர்மப்படி புல்லாகப் பொறுக்கியாக இருந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, விவாகரத்து ஒரு பெண்ணுக்குரிய உரிமைகளைக் கொடுக்கின்றது. எனவே, மேற்கோ, கிழக்கோ சரியான பண்பாடு எங்கிருந்து வந்தாலும் முதலில் மரியாதை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்து மத இலக்கியங்களில் தெய்வங்களும் பார்ப்பனர்களும் மாறுவேடம் பூண்டு கள்ள உளவு கொள்வது, கற்பழிப்பது என்பது சாதாரண விசயம். இத்தகைய 'உரிமைகள்' இன்று பறிபோன நிலையில்தான் இந்து மத வெறியர்கள், குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். இந்தக் கொடுமைகள் பெருமளவு இல்லாமல், விவாகரத்து, மறுமணம் போன்றவை நம்நாட்டு உழைக்கும் மக்களிடம் இயல்பாக இருந்தது. இதை எண்ணித்தான் நாம் பெருமைப்பட வேண்டும்.

பாரத புனித ஸ்தலங்களை மறந்து விதேச புனிதநகரங்களை நினைப்பது

தன்படிப் பார்த்தால் இந்துக்களின் புனித இடங்களான பசுபதிநாத் நேபாளத்திலும், கைலாயமும் மானசரோவரும் சீனாவிலும் இருக்கின்றது. இவ்விடங்களுக்குச் செல்லும் இந்துக்கள் இந்தியாவின் தேசவிரோதிகள் என்றே கருத வேண்டும். உலகெங்கும் வாழ்ந்து வரும் புத்த மதத்தினர் தென் கிழக்காசிய நாடுகளில் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இவர்களுக்கு இந்தியாவின் புத்த கயா புனிதமான இடமென்பதால், அவர்கள் அந்தந்த நாடுகளின் தேச விரோதிகளா?
அதேபோல் இந்தியாவில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்பே, இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, பிஜித் தீவுகள், மொரீஷியஸ், மாலத்தீவு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்கள் குடியேறி வாழ்கிறார்கள். இன்று அந்நாடுகளின் குடிமக்களாக, ஏன் அமைச்சர்களாகக் கூட இருக்கிறார்கள். இந்தியா மறந்து போனாலும் மதம் என்ற அடிப்படையில் இங்குள்ள புனித இடங்கள்தான் அவர்களுக்கும் புனிதம். இதனால் இவர்களைத் தேசத்துரோகி என்று அந்நாடுகள் அடித்துத் துரத்தலாமா?
வாடிகனும், பெத்லஹேமும், மெக்கா, மெதினாவும் உலக கிறித்தவ, முசுலீம் மக்கள் அனைவருக்கும் புனிதமான இடங்களாகும். ஆர்.எஸ்.எஸ். கணக்குப்படி உலகிலுள்ள மற்ற கிறித்தவ, முசுலீம் நாட்டு மக்களுக்கு தேசபக்தி இல்லை என்றாகிறது. அல்லது உலகில் ஒரு கிறித்தவ நாடும், ஒரு முசுலீம் நாடும் மட்டும்தான் இருக்க வேண்டும். ஏன் அப்படி இல்லை? அப்படி இருக்க முடியாது என்பதைத்தான், ஒரு தேசத்தையோ, தேசபக்தியையோ ஒரு மதத்தால் உருவாக்க முடியாது என்ற உண்மை நமக்கு உணர்த்துகிறது. தேசம் உருவாக அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி, பண்பாடு – போன்றவைதான் காரணமாக முடியும். மத நம்பிக்கையும், புனித நகரங்களும் யாருக்கும் தேசபக்தியை உருவாக்க வக்கற்றவையே!
பார்ப்பன, மேல் சாதியினரைத் தவிர்த்து பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பண்பாட்டில் தீர்த்த யாத்திரைகளெல்லாம் கிடையாது. நாட்டுப்பற்று என்றால் என்ன? ஸ்வயம் சேவகர்கள் பாரத மாதா போட்டோவுக்குப் பூசை செய்வது அல்ல. நாட்டு மக்களைச் சுரண்டல், ஒடுக்கு முறை, பிற்போக்கு அனைத்திலும் இருந்து விடுவிக்க தளராமல் போராடுவதுதான் நாட்டுப்பற்றைக் குறிக்கும். இது காசிக்கோ, மெக்காவுக்கோ யாத்திரை செல்வதால் வருவதல்ல.

முன்னோர்கள்தாத்தாபாட்டிகளை – முட்டாள்கள்,அறிவிலிகள் என்று கருதும் எண்ணம் வளருகிறது

"கங்கைக் கரையிலும், காவிரிக் கரையிலும் அரிசியை உணவாக உட்கொண்டு வாழும் சில ஜந்துக்கள், வேதத்திலேயே எல்லாம் கண்டுபிடிச்சாச்சாக்கும் என்று மமதையுடன் பிதற்றுவதை" புதுமைப்பித்தன் குறிப்பிடுகிறார். வேதம் மட்டுமல்ல அனைத்துப் பிற்போக்குத் தன்மைகளையும் முதியோருக்குக் கட்டுப்படல் என்ற இன்னொரு பிற்போக்கின் மூலம்தான் பார்ப்பனியம் வாழையடி வாழையாகத் தொடருகின்றது. அதனால்தான் எல்லாப் பிரிவினரிடமும் உள்ள புதுமையும், துடிப்பும் கொண்ட இளைய பிரிவினர்கூட இத்தகைய முட்டாள் முதியவர்களால் விரைவில் முதியவராக்கப்படுகின்றனர்.
எனவே முதுமை, இயலாமை, ஓய்வு என்ற அளவிலே மட்டும்தான் முதியவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு ஒரு சமூகத்துக்கு இருக்கவேண்டும். அதேநேரத்தில்  அவர்களது முட்டாள் தனங்கள் பிற்போக்குக் குணங்கள் ஆகியவற்றை ஒழிப்பதற்குப் போராடுவதையும் அதே சமூகம் செய்ய வேண்டும் என்கிறோம்.

சித்திரைபோய் ஜனவரி கொண்டாடுதல்ஆன்மீகம்அருகில் லோகாயதம் சீர்கேடுகள் பெருகுதல்

இந்துப் பஞ்சாங்கத்தின்படியே எல்லா இந்துக்களுக்கும் ஒரே வருடப்பிறப்பு என்பது கிடையாது. தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, வடகிழக்கு போன்று பல வருடப் பிறப்புக்கள் கொண்டாடப்படுகின்றன. வழக்கம்போல இவையும் பார்ப்பன மேல்சாதி – மேல் தட்டினர் கொண்டாடுபவைதான். வாழ்நாள் முழுதும் ஏழ்மையில் உழலும் அடித்தட்டு மக்களுக்கு பழைய – புதிய என்ற வருடப் பிரிவினைக்கு முக்கியத்துவம் ஏதுமில்லை.
ஜனவரி ஆரம்பத்தை – கிறித்தவ மதத்தினர் மட்டுமல்ல, உலகமே கொண்டாடி வருகின்றது. கோவிலில் போய் அர்ச்சனை செய்து புத்தாண்டு கொண்டாடுவது நடுத்தர வர்க்க மக்களின் பழக்கமாக ஏற்பட்டு விட்டது. பல இசுலாமிய நாடுகளிலும் இத்தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பிறந்த நாளுக்குக் கோவிலுக்குப் போவதோ, கேக் வெட்டுவதோ முக்கியமல்ல. அப்படி ஒரு நாள் இருப்பதே தெரியாமல்தான் சாதாரண மக்கள் வாழுகின்றனர். மேலும் 'ஜன்ம நட்சத்திரம்' என்ற கடவுளர்கள், மன்னர்கள், பார்ப்பனர்கள் ஆகியோரது தினங்கள்தான் இந்துக்களுக்கு முக்கியமாகும்.
மற்றபடி பொதுமக்கள் தங்கள் பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடுவது ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பண்பாடு. இதையும் காசு உள்ள நடுத்தர வர்க்கம்தான் கொண்டாடுகிறது. கேக்கோ, பாயசமோ எல்லாம் நுகர்வுக் கலாசாரத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் லாபம் தருமே ஒழிய, மக்களுக்கல்ல. சர்வதேச மூலதனச் சுரண்டலுக்கு மத லேபிளெல்லாம் கிடையாது. 'லோகாயதம் பெருகி அராஜகங்கள் வளருவது' என்று, சாரத்தில் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்களைத்தான் குறிப்பிடுகிறார்கள். அதாவது சாதி, தீண்டாமை எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, இட ஒதுக்கீடு ஆதரவு, தேசிய இன ஒடுக்குமுறை எதிர்ப்பு ஆகிய போராட்டங்கள்தான் அவர்களுக்குக் கலிகாலத்தை உணர்த்துகின்றது.
மற்றபடி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள் மதமாற்றத்தினால் நடக்கிறது என்றால் எதைச் சொல்லி அழ? பிரேமானந்தா, சந்திராசுவாமி, சாயிபாபா, ஜெயா – சசி கும்பல், அர்ஷத்மேத்தா, ஜெயின் சகோதரர்கள், சம்பல் கொள்ளையர்கள், இன்டர்நெட் விபச்சாரி பிரகாஷ் போன்றோர்களெல்லாம் ரகசியமாக மதம் மாறியவர்களா? இதற்கு இராம.கோபாலனைப் போட்டு ஒரு விசாரணைக் கமிஷன் நியமித்து, வெள்ளை அறிக்கை வெளியிடுங்களேன்!

source:vinavu.com

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP