சமீபத்திய பதிவுகள்

சிவப்புக் கோட்டையை தகர்த்து மம்தா வரலாறு

>> Wednesday, May 18, 2011

http://img.dinamalar.com/data/large/large_240598.jpg


கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், கடந்த 34 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகள் கட்டிக்காத்து வந்த சிவப்புக் கோட்டையை, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இந்த தேர்தலில் தகர்த்து, வரலாறு படைத்துள்ளார். திரிணமுல் காங்கிரசுக்கு கிடைத்த அமோக வெற்றியின் மூலம், மேற்கு வங்க மாநிலத்தின் அடுத்த முதல்வராக, மம்தா பதவியேற்கவுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கடந்த 34 ஆண்டுகளாக, இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக விளங்கி வந்தது. கடந்த 1977ல், காங்கிரசின் சித்தார்த் சங்கர் ராய், முதல்வராக பதவி வகித்தார். அதற்கு பின், தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் தான், ஆட்சியும், முதல்வர் பதவியும் இருந்து வந்தது. கடந்த 1977ல் இருந்து, 2000 வரை, கம்யூனிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு முதல்வராக பதவி வகித்தார். அவருக்கு பின், கடந்த பத்தாண்டுகளாக, கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சார்யா, முதல்வராக இருந்து வருகிறார்.இந்நிலையில், மேற்கு வங்கத்துக்கு சட்டசபை தேர்தல் தேதி, கடந்த மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை கருதி, ஆறு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில், ஆளும் இடதுசாரி கூட்டணி ஒரு அணியாகவும், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் - காங்கிரஸ், மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன.

திரிணமுல் கட்சி, 227 தொகுதிகளிலும், காங்கிரஸ் 65 தொகுதிகளிலும் போட்டியிட்டன.ஆறு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. இதில், துவக்கத்தில் இருந்தே, திரிணமுல் - காங்கிரஸ் கூட்டணி, பெரும்பாலான தொகுதிகளில் முன்னணியில் இருந்தது.மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, தனித்து ஆட்சி அமைக்க 148 தொகுதிகள் தேவை. ஆனால், திரிணமுல் காங்கிரஸ் கட்சி, இதைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், திரிணமுல் - காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளிலும், இடதுசாரி கூட்டணி கட்சிகள் 63 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மேற்கு வங்க அரசியலில், இந்த வெற்றி, மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இடதுசாரி கூட்டணியில் அமைச்சர்களாக இருந்த, பெரும்பாலானோர் தோல்வியைத் தழுவினர்.

கொண்டாட்டம் : வெற்றிச் செய்தி கிடைத்ததும், கோல்கட்டாவில் உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டு முன், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். "தீதி வாழ்க' என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. அங்கு திரண்டிருந்த தொண்டர்கள், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும், தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும், மம்தாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவரது இல்லத்துக்கு படையெடுத்து வந்தனர்.

இரண்டாவது சுதந்திரம் தங்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி குறித்து, மம்தா பானர்ஜி கூறுகையில், "இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. அன்னை, இந்தப் புனித மண், மனிதர்கள் ஆகியோருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். இந்த நாளை, மேற்கு வங்க மக்களுக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்த நாளாக கருதுகிறேன். வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளுக்காக, மேற்கு வங்க மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் காத்திருந்தனர்' என்றார்.

எதிர்பாராதது : தேர்தல் தோல்வி குறித்து இடதுசாரி கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பிமன் போஸ் கூறுகையில், "இந்த முடிவு எதிர்பாராதது. தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். சட்டசபையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, இடதுசாரி கட்சிகள் செயல்படும். தோல்விக்கான காரணம் குறித்து, கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, விவாதிக்கப்படும்' என்றார். தகர்ந்தது கோட்டைஇந்த தேர்தல் வெற்றி மூலம், கடந்த 34 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இடதுசாரி கூட்டணியின் வெற்றிக்கு, முற்றுப்புள்ளி வைத்துள்ளார், மம்தா. இதன்மூலம், இடதுசாரி கட்சிகள் கட்டிக் காத்து வந்த, சிவப்புக் கோட்டையையும் தகர்த்துள்ளார்.

மம்தா, தற்போது ரயில்வே அமைச்சராக இருப்பதால், அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, முதல்வராக பதவியேற்கவுள் ளார். மேலும், மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கவுள்ளது. சித்தார்த் சங்கர் ராய்க்கு பின், மேற்கு வங்கத்தின் முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கப் போகும், கம்யூனிஸ்ட் கட்சியை சாராத முதல்வர் என்ற பெருமையும், மம்தாவுக்கு கிடைக்கவுள்ளது.

முதல்வர் புத்ததேவ் தோல்வி : கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வீசிய, மம்தா ஆதரவு அலையில், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் தோல்வி அடைந்தார். அவரது அமைச்சரவையில் இருந்த 17க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர்.மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், ஜாதவ்பூர் தொகுதியில், இடதுசாரி கூட்டணி சார்பில், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா போட்டியிட்டார். அவரை எதிர்த்து, மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலர் மணிஷ் குப்தா, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

மாநிலம் முழுவதும் வீசிய மம்தா ஆதரவு அலையில், இடதுசாரி கூட்டணிக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தோல்வி அடைந்தனர். முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் தோல்வி அடைந்தார். அவருக்கு, 87 ஆயிரத்து 288 ஓட்டுகள் கிடைத்தன. மணிஷ் குப்தா, ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 72 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில், அவர் தோல்வியை தழுவினார். இதுதவிர, இடதுசாரி கூட்டணி அரசில் அமைச்சர்களாக இருந்த 17க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர்.  .

source:dinamalar

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP