சமீபத்திய பதிவுகள்

அல்லாவின் திருப்பெயரால்… ….

>> Wednesday, February 6, 2013

 

கடந்த இரண்டு வார காலமாக, தமிழகத்தில் நீடித்து வந்த சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.  விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக, இஸ்லாமியர்கள் தரப்புக்கும், கமல்ஹாசன் தரப்புக்கும் தமிழக அரசு நடத்திய கட்டப்பஞ்சாயத்தின் மூலம் ஏற்பட்ட உடன்பாட்டின் காரணமாக, போராட்டங்களை விலக்கிக் கொள்வதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.  கமல் தரப்பு 7 காட்சிகளில் ஒலியை நீக்குவது, குறைப்பது உள்ளிட்ட சமரசங்களுக்கு ஒப்புக் கொண்டதால், இன்று (03.02.2013) மதியம், அனைத்து மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.
Kamal-Sir-4
காட்சியை நீக்குவதாக கமல் ஒப்புக் கொண்டதோடு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்ற ஒப்பந்தம், கமலின் கையை முறுக்கி கையெழுத்திட வைத்திருப்பதாகவே தோன்றுகிறது.    மராட்டிய மாநிலம் தொடர்பாகவோ, மராட்டியர்கள் தொடர்பாகவோ, திரைப்படத்தில் கிண்டலாகவோ, கேலியாகவோ ஏதாவது காட்சிகள் வந்தால், அப்படம் வெளியாகும் தியேட்டர்களை சிவசேனை குண்டர்கள் அடித்து நொறுக்குவதும் பின்பு சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள், பால் தாக்கரேவின் காலில் விழுந்து, தங்கள் திரைப்படத்தை காப்பாற்றிக் கொள்வது போன்றதொரு காட்சி தமிழகத்திலும் அரங்கேறியிருக்கிறது.
இத்திரைப்படம் இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவு படுத்துகிறது என்று தமிழக இஸ்லாமிய அமைப்புகள் கொதித்தெழுந்தன.  இங்கு இஸ்லாமிய அமைப்புகள் என்று குறிப்பிடுவது, அந்த அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமே.  தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், இறை நம்பிக்கையோடு, உழைத்து தங்கள் வாழ்வை நடத்தி வருகிறார்கள்.  ஆனால், இஸ்லாமிய அமைப்புகள் என்று இஸ்லாமிய மக்களின் பெயரால் பிழைப்பு நடத்தி வரும் அமைப்புகள் மட்டுமே, ஒரு திரைப்படத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளை தீவிரவாதிகளாகக் காட்டியதால் இஸ்லாத்தே இழிவுபடுத்தப்பட்டு விட்டது என்று கூக்குரலிட்டு, இத்தனை களேபரங்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
DSC_0241
ஆயிரக்கணக்கான ஆண்டு பழமை வாய்ந்த ஒரு மதம், பல கோடி மனிதர்களால் பின்பற்றப்பட்டு, வளர்க்கப்பட்டு வரும் ஒரு மதம், ஒரே ஒரு திரைப்படத்தால் இழிவு படுத்தப்படும் என்று பிரச்சினை செய்யும் இந்த மதவாதிகள், உண்மையிலேயே, இஸ்லாமை அறிந்திருக்கிறார்களா என்ற சந்தேகமே ஏற்படுகிறது.  எத்தனையோ நெருக்கடிகளையும், போர்களையும் தாண்டியும் இன்று இஸ்லாத் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.  ஒரு திரைப்படமா இஸ்லாத்தை இழிவுபடுத்தி விடும் ?
இஸ்லாமியர்கள், இந்தியா முழுக்க பரவலாக இருக்கிறார்கள். விஸ்வரூபம் திரைப்படம், தமிழகத்தைத் தவிர, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் கேரளாவில் வெளியிடப்பட்டு கடந்த ஒரு வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  ஐதராபாத்திலும், கேரளாவிலும் கணிசமான அளவுக்கு இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.  எந்த இடத்திலும், இஸ்லாமியர்கள் இத்திரைப்படத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தியதாக தகவல் இல்லை.   பெரும்பாலான இடங்களில் இத்திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடி வருகிறது.  ஆனால், தமிழகத்தில் உள்ள மதவாதிகள், தமிழகத்தின் அனைத்து இஸ்லாமியப் பிரதிநிதிகள் போல, நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால், வெட்டுவோம், கொளுத்துவோம் என்று மிரட்டி அந்த மிரட்டலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் தனிப்பட்ட பிடிவாதத்தின் காரணமாக, இந்த மதவாதிகளின் கோரிக்கைக்கு, தமிழக அரசின் ஆதரவு கிடைத்தது. விஸ்வரூபம் திரைப்படத்தை வைத்து, ஜெயலலிதா தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். மதவாதிகள், நாங்கள் நினைத்ததை நிறைவேற்றியே தீருவோம்… எங்களைப் பகைத்துக் கொண்டால், எதுவும் நடக்காது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதாக இறுமாந்து இருக்கிறார்கள்.   இந்தப் பிரச்சினையின் வீச்சு என்ன, இதன் எதிர்கால விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை ஜெயலலிதா உணர்ந்தாரா இல்லையா என்பது தெரியவில்லை… ஆனால் மதவாதிகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
உள்துறைச் செயலாளரிடம் புகார் கொடுத்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த, இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், இத்திரைப்படம் முழுக்க முழுக்க, இஸ்லாத்தை இழிவுபடுத்துவதற்காகவே எடுக்கப்பட்டுள்ளது.. அதனால், இப்படம் வெளியிடுவதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம் என்றார்கள்.  இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக வாதிட்ட, வழக்கறிஞர் சங்கர சுப்புவும், ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர, மொத்த திரைப்படமும் முஸ்லீம்களை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று கூறினார்.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில், படத்தில் சில காட்சிகளை 7 நிமிடங்கள் குறைத்துக் கொள்ள கமல் தரப்பு ஒப்புக் கொண்டதால், திரைப்படத்துக்கு எதிராக போராட்டங்கள் வாபஸ் பெறப்போவதாக அறிவித்துள்ளனர்.  முழுக்க முழுக்க இஸ்லாத்தை இழிவுபடுத்துவதாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், வெறும் ஏழு நிமிடங்கள் குறைப்பதால், எப்படி ஏற்றுக் கொள்ளக் கூடிய திரைப்படமாக மாறியது என்பது இந்த மதவாதத் தலைவர்களுக்கே வெளிச்சம்.
2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 5.5 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள். 2001 கணக்கெடுப்பின்படி, இந்த 5.5 சதவிகிதம் 34,70,647.  தற்போது இந்தத் தொகை 50 லட்சம் என்று வைத்துக் கொள்வோம்.   இந்த 50 லட்சத்தில் 50 பேர் மட்டுமே இத்திரைப்படத்தை நிறுத்த வேண்டும், கொளுத்த வேண்டும் என்று முழக்கமிட்டவர்கள்.  இந்த 50 பேரின் பின்னால் இருப்பவர்கள் எப்படிப் பார்த்தாலும்  5 லட்சத்தைக் கூடத் தாண்டாது. இந்த 5 லட்சத்தைக் கழித்து விட்டால், மீதம் உள்ள 45 லட்சம் இஸ்லாமியர்கள் அமைதியை விரும்புபவர்கள்.  சகோதரத்துவத்தோடு, தங்கள் வாழ்வை உழைத்து வாழ வேண்டும் என்று நாள்தோறும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள்.  இவர்களுக்கு, கடவுள் மனதில் இருக்கிறார்.  இவர்கள் இறைவனை மனதில் நினைத்து வாழ்வை நடத்துபவர்கள்.
An_Indian_Muslim_old_man
குரானில் சொன்னது போல,
"கடுமையாகச் சண்டையிடுபவன்,  மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம்  மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"(நபியே!) கூறுவீராக: ""தங்கள் ஆன்மாக்களுக்கு கொடுமை இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! இறைவனின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக இறைவன் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான். திரும்பிவிடுங்கள் உங்கள் இறைவனின் பக்கம்'.
இறைநம்பிக்கையாளன் நேசத்தின் சிகரமாவான். மக்களை நேசிக்காதவனிடமும், மக்களால் நேசிக்கப்படாதவனிடமும் எந்த நன்மையும் இல்லை.
உங்களுக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பாத வரையில் நீங்கள் உண்மையுள்ள இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது."
என்பது போன்ற பொன்மொழிகளைப் பின்பற்றி தங்கள் வாழ்க்கையை நடத்துபவர்கள்.  அவர்களுக்கு நன்றாகத் தெரிந்தது, எவனோ ஒருவன் சினிமாவில் மோசமாகச் சித்தரிப்பதாலும், எவனோ ஒருவன் இறையை தவறாகப் பேசுவதாலும், இறைவனை இழிவுபடுத்தி விட முடியாது… ஏனெனில் இறைவன் மிகப்பெரியவன், அவன் கருணையே வடிவானவன் என்பதை உணர்ந்தவர்கள்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சம்.  இதில் இஸ்லாமியர்கள் ஏற்கனவே சொன்னது போல 50 லட்சம் இருப்பார்கள்.  இதில் இந்த மதத் தலைவர்களின் பின்னால் உள்ளவர்கள், சுமாராக 5 லட்சம்.  இந்த 5 லட்சத்திலும், தியேட்டர்களில் கல்லெறிபவர்கள், மதவாதிகளின் கட்டப்பஞ்சாயத்துகளுக்கு துணை சென்று, இதையே பிழைப்பாக வைத்திருக்கும் இவர்கள் அதிகபட்சம் 10 ஆயிரம் இருப்பார்கள்.  இந்த 10 ஆயிரம் பேருக்கு வேறு பிழைப்பு இல்லை.  எங்கே எப்போது பிரச்சினையை உண்டு பண்ணலாம்.  எந்த இடத்தில் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கலாம் என்று காத்துக்கொண்டே இருப்பார்கள்.
"ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக் கொண்டவர்களே சுதந்திரமானவர்கள்." என்கிறார் நபிகள்.  ஆனால் இந்த மதவாதிகளின் ஆசைகளுக்கும், தேவைகளுக்கும் எல்லையே இல்லை. பணம், பதவி, பகட்டு, சொகுசு என்ற இவர்களின் தேவைகளுக்கு அளவே கிடையாது.
உன் சகோதரனுக்கு உதவி செய் என்கிறது இஸ்லாம்.  இஸ்லாத்தின் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும் ?  இதே தேசத்தில் கல்வியறிவு இல்லாமலும், வறுமையிலும் வாழும் இஸ்லாமியர்களின் நிலையை மேம்படுத்த வேண்டுமா   இல்லையா ? ஆறு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் தலைமையிலான குழு, முஸ்லிம்களின் கல்வியறிவு, முஸ்லிம் பட்டதாரிகளின் சதவிகிதம், பள்ளிப் படிப்பை கூட நுகராத முஸ்லிம்களின் நிலை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் வாழும் முஸ்லிம்களின் சதவிகிதம், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் முஸ்லிம்கள் உணவு, உடை, இருப்பிடம் இல்லாத வாழத் தகுதியற்ற நிலையில் இருக்கும் நிலை, குடிநீர், கழிப்பிட வசதியின்றி வாழும் முஸ்லிம்கள், 88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை எத்தனை என்பது உள்ளிட்ட முஸ்லிம்களின் சமூக வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
மதக் கலவரங்கள் ஏற்படும்போது முஸ்லிம் சமுதாயம் அதிகளவில், பொருளாதார சூறைக்கும், உயிர் பலிக்கும் ஆளாவதையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பு பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பரிந்துரை செய்திருந்தார் நீதிபதி சச்சார். பாதுகாப்பு தொடர்பான பணிகளில் முஸ்லிம் பிரதிநிதித்தவம் வெறும் 3 சதவீதம்தான் என்கிறது சச்சார்  அறிக்கை. இதன்படி, பாதுகாப்பு பணிகளில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை ஏற்று, இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் இருக்கின்ற காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு முஸ்லிம் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது மத்திய அரசு.  இந்த பரிந்துரைகளில் ஒன்றாவது அமல்படுத்தப்பட்டிருக்கிறதா ?  சென்னை நகரையே எடுத்துக் கொண்டால், சென்னையில் எத்தனை இஸ்லாமியர்கள் ஆய்வாளர்களாக இருக்கிறார்கள் ?  விரல் விட்டு எண்ணி விடலாம்.
இதையெல்லாம் அமல்படுத்த வேண்டும் என்று இந்த இஸ்லாமிய அமைப்புகள் போராடியிருக்குமேயானால், இவர்களோடு, தோளோடு தோள் நின்று, போராட மனித உரிமையாளர்களும், நடுநிலையாளர்களும் களத்தில் குதித்திருப்பார்கள்.  ஆனால், அற்பத்தனமான, ஒரு திரைப்படத்திற்காக, கச்சைக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கும் இந்த மதவாதத் தலைவர்களின் உண்மை முகங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
திரைப்படம் எடுத்தவனை அடாவடி செய்து, மிரட்டுவது…..  முகநூலில் முண்டா தட்டுவது…. எங்களை ஏன் இப்படி இழிவுபடுத்துகிறீர்கள் என்று வரிந்து கட்டிக் கொண்டு முகநூலில் மணிக்கணக்காக எழுதுவது … இப்படி முகநூலில் சண்டை போட்டுக் கொண்டிருப்பதால், ஒரே ஒரு இஸ்லாமியனுக்காவது இது பயனளிக்குமா ?   இதையா நபிகள் சொன்னார் ?
விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை பல உண்மைகளை உணர வைத்தது.  பல காலமாக நெருக்கமாகப் பழகிய இஸ்லாமிய நண்பர்கள் ஒரே நாளில் விரோதிகளானார்கள்.  பேசுவதை நிறுத்தினார்கள்.   நீ ஒரு ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்றார்கள்.  வலதுசாரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதுகிறாய் என்றார்கள்.  அடையாளம் தெரியாமல், பின்னூட்டம் போட்டு மிரட்ட நினைக்கும் இவர்கள், இதே சவுக்கு தளம், அஜ்மல் கசாப்புக்கு உரிய உரிமைகளை வழங்காமல் இரவோடு இரவாக தூக்கிலிட்டதைக் கண்டித்து எழுதிய ஒரே ஊடகம் சவுக்கு மட்டுமே என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.  வெளிப்படையாக சவுக்கு தளம் அதைக் கண்டித்து எழுதியபோது, இவர்கள் அஜ்மல் கசாப்புக்காக ரகசியமாக தொழுகை நடத்தினார்கள்.
நான்கு ஆண்டுகளாக நெருக்கமாகப் பழகிய ஒரு தோழர், தாலிபான்கள் விடுதலைப் போராளிகள்… அவர்களை கமல்ஹாசன் விமர்சிப்பதே தவறு என்றபோது, அதிர்ச்சி மட்டுமே மேலிட்டது.  அத்தோடு நிற்காமல், அவர், தாலிபான்களையும் விடுதலைப் புலிகளையும் ஒப்பிட்டுப் பேசினார்.  புலிகள் இயக்கம், பெண் புலிகளை உருவாக்கி போர்க்களத்திற்கு அனுப்பியது.  தாலிபான்கள், பெண்களை முக்காடிட்டு, இருட்டில் அடைக்கிறார்கள்.  யாரை யாரோடு ஒப்பிடுவது ?   இத்தனை ஆண்டுகளாக, தாலிபான்களை விடுதலைப் போராளிகளாக நினைத்த ஒருவருடனா பழகியிருக்கிறோம் என்ற அதிர்ச்சி மட்டுமே எஞ்சி நிற்கிறது.    தாலிபான்களை விடுதலைப் போராளிகள் என்று கூறும் ஒரு நபரிடம் என்ன விவாதிப்பீர்கள் ?  அதற்கு மேல் அவரிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது ?
முகநூலில் நடைபெறும் பெரும்பாலான விவாதங்களில் கூறப்படும் ஒரு விஷயம், இந்து தீவிரவாதம்.  இந்து தீவிரவாதத்தில் ஈடுபட்ட கர்னல் புரோகித் மற்றும் பெண் சாமியாரிணி சாத்தி பிரக்ஞா சிங் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டாம் என்று யாருமே கூறவில்லை.  அவர்கள் செய்ததையும் யாரும் நியாயப்படுத்தவில்லை.  ஆனால், தீவிரவாதச் செயல்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த யாருமே ஈடுபட்டதில்லையா ?  மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்…!!!
இந்தியாவில் நடந்த முக்கியமான தீவிரவாதத் தாக்குதல்களின் பட்டியல் இதோ…
1993 மும்பை குண்டு வெடிப்பு மரணம் 257, 1993 சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு மரணம் 11, 1996 பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு மரணம் 33, 1997 பாண்டியன் எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மரணம் 3, செங்கோட்டை துப்பாக்கிச் சூடு மரணம் 3, காஷ்மீர் சட்டசபை தாக்குதல் மரணம் 38, பாராளுமன்றத் தாக்குதல் மரணம் 7, 2002 ஜான்பூர் ரயில் குண்டு வெடிப்பு மரணம் 12, 2002 மும்பை பஸ் வெடி குண்டு மரணம் 2, 2002 கர்னூல் ரயில் தகர்ப்பு மரணம் 20, 2002 அக்ஷர்தாம் கோயில் தாக்குதல் மரணம் 31, 2003 மும்பை குண்டு வெடிப்பு மரணம் 1, 2003 மும்பை ரயில் குண்டு வெடிப்பு மரணம் 11, 2003 மும்பை பஸ் வெடிகுண்டு மரணம் 4, 2003 மும்பை கார் குண்டு வெடிப்பு 52, 2005 ஜான்பூர் ரயில் குண்டு வெடிப்பு மரணம் 13, 2005 புதுதில்லி தீபாவளி குண்டு வெடிப்பு 70, 2006 வாரணாசி குண்டு வெடிப்பு மரணம் 21, 2006 மும்பை ரயில் குண்டு வெடிப்பு மரணம் 209, ஐதராபாத் லும்பினி பார்க் குண்டு வெடிப்பு மரணம் 42, 2007 லூதியானா தியேட்டர் குண்டு வெடிப்பு மரணம் 6, 2007 வாரணாசி, லக்கோ மற்றும் பைசாபாத் குண்டு வெடிப்பு மரணம் 16, 2008 ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு மரணம் 63, 2008 பெங்களுரு சின்னசாமி விளையாட்டரங்க குண்டு வெடிப்பு மரணம் 2, 2008 அகமெதாபாத் தொடர் குண்டு வெடிப்பு மரணம் 29, 2008 டெல்லி மார்க்கெட் குண்டு வெடிப்பு மரணம் 21, 2008 இம்ப்பால் குண்டு வெடிப்பு மரணம் 17, 2008 தாஜ் ஓட்டல் தாக்குதல் மரணம் 171, 2010 பூனா பேக்கரி குண்டு வெடிப்பு மரணம் 17, 2011 மும்பை குண்டு வெடிப்பு மரணம் 18, 2011 டெல்லி நீதிமன்ற குண்டு வெடிப்பு மரணம் 10. இந்த அத்தனை குண்டு வெடிப்புகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் / தண்டிக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
20081101T125107Z_01_DEL07_RTRMDNP_3_INDIABLASTASSAM
அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு மற்றும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு ஆகிய இரண்டில் மட்டும்தான் இந்து தீவிரவாதிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்க முடியுமா ?  இந்து தீவிரவாதம் இருக்கிறது என்பதை யாராவது மறுக்க முடியுமா ?  யாரும் மறுக்கவுமில்லை… மறைக்கவுமில்லை.  ஆனால், மீதம் உள்ள அத்தனை குண்டு வெடிப்புகளையும் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் ?  அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகளா ?  பம்பாய் படத்தை இயக்கியதற்காக, இயக்குநர் மணிரத்னத்தின் வீட்டில் குண்டு வீசியது யார் ?
இந்த குண்டு வெடிப்பு மற்றும் தீவிரவாத வழக்குகளில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் அனைவரும் நாத்தீகர்களா ?  மார்க்சியம் பேசுபவர்களா ?  அவர்களும் ஐந்து வேளை தொழுகிறார்களா இல்லையா ?  குரான் படிக்கிறார்களா   இல்லையா ?
ஆப்கானிஸ்தானில் குண்டு வைக்கப்படுவதாகவும், அதில் சம்பந்தப்பட்டவன், கோவையிலும் மதுரையிலும் தங்கியிருந்ததாகவும் ஒரு திரைப்படம் எடுத்தால் அரசாங்கத்தோடு கூட்டு சேர்ந்து, இத்தனை அராஜகமா ?   கமல்ஹாசன் இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் போலச் சித்தரிக்கிறார் என்று கூறும் மதவாதிகளே…. நீங்கள் செய்யும் காரியத்தால்தான் அப்படி ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது.  தாலிபான்களை தீவிரவாதிகளாகக் காண்பித்தால் தமிழக முஸ்லீம்கள் ஏன் கோபப்படுகிறார்கள் என்ற கேள்வி இயல்பாக எழுகிறதா  இல்லையா ?   நீங்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா.. இல்லை தாலிபான்களுக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா என்ற கேள்வி எழுமா எழாதா ?
இந்த மதவாதிகள் விஸ்வரூபம் படத்தில் ஏற்படுத்திய பிரச்சினைகளால் ஏற்பட்டிருக்கும் சேதம் குறைவானதல்ல.  சாதாரணமாக, எவ்வித அரசியல் பிரக்ஞையுமின்றி, இயல்பாக தன் வாழ்வை நடத்தும் ஒரு நடுத்தர வர்க்க இந்து, இஸ்லாமியர்களை எடுத்த எடுப்பில் திட்டுகிறான்…. ஏன் இப்படிச் செய்கிறார்கள்….  இந்தப் படம் வந்தால் என்ன குடி முழுகப் போகிறது.. என்று கேட்கிறார்கள்….   ஏன் இவர்களைப் பற்றிப் படம் எடுக்கக் கூடாதா ? இது ஜனநாயக நாடுதானே என்று கேட்கிறார்கள்.
நாளை ஒரு வேளை தப்பித் தவறி, ஒரு மதக்கலவரம் உருவானால், அதனால் பாதிக்கப்படப் போவது யார் தெரியுமா ? பீடி சுற்றி பிழைக்கும், கறிக்கடை வைத்திருக்கும் ஏழை இஸ்லாமியன்தான் பாதிக்கப்படுவான்.  இன்று அரசோடு பேச்சுவார்த்தை நடத்தும், இந்த இஸ்லாமியத் தலைவர்கள் ஒருவரைக் கூடப் பார்க்க முடியாது.  அனைத்தும் நடந்து முடிந்தபிறகு, ஆறுதல் சொல்ல வருவார்கள்.
விஸ்வரூபம் திரைப்படத்துக்காக இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் உள்துறைச் செயலாளர் ராஜகோபாலன் யார் தெரியுமா ?   மரணப்படுக்கையில் இருக்கும் ஒரு இஸ்லாமியச் சிறைவாசியை பரோலில் அனுமதிக்க மறுத்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருப்பவர். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் மூன்று ஆண்டு சிறை தண்டனை பெற்று, ஒரு சிறை அதிகாரியை கொலை செய்ததற்காக வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்று கோவையில் இருந்து வருபவர்தான் அபுதாஹிர்.  இந்த அபுதாஹிரின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டன.  இதயமும் பலவீனமாக உள்ளது.  இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டதால், வாரத்துக்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும்.  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய, இவருக்கு சிறுநீரக தானம் செய்ய யாரும் முன்வராததால், இவர் தினந்தோறும் மரணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்.  இவரை சிறை விதிகளின் படி, 90 நாட்களுக்கு பரோலில் அனுப்ப வேண்டும் என்று இவரது சகோதரர் உள்துறைச் செயலாளரிடம் கோரிக்கை வைக்கிறார்.  இந்த ராஜகோபால், அவரது மனுவை நிராகரிக்கிறார்.  90 நாட்கள் பரோலில் அனுப்ப உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிடுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பால் வசந்தகுமார், 24.08.2012 அன்று கீழ்கண்டவாறு உத்தரவிடுகிறார்.
Rajagopal_IAS_2
உள்துறைச் செயலாளர் ராஜகோபாலன்
"Considering the medical report dated 10.08.2012, the Writ Petition is disposed of with a direction to the first respondent (Home Secretary) to grant leave to the petitioner's brother, the life convict No. 1487 for 90 days from 30.08.2012 on condition that the petitioner's brother shall report before the Ukkadam police station once in 15 days between 10 am to 12 noon"
10.08.2012 நாளிட்ட மருத்துவ அறிக்கையை பரிசீலித்ததன் அடிப்படையில், மனுதாரரின் சகோதரரான வாழ்நாள் சிறைவாசி (தண்டனைச் சிறைவாசி எண் 1487)க்கு 90 நாட்கள் விடுப்பு (பரோல்) வழங்குமாறும், அந்தச் சிறைவாசியின் சகோதரரான மனுதாரர், ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை உக்கடம் காவல் நிலையத்தில் காலை 10 மணி முதல் 12 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்து பரோல் வழங்குமாறு உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிடப்படுகிறது.
நான் முடியாது என்று உத்தரவிட்ட பிறகு, அதற்கு மேல் உத்தரவிட நீதிமன்றத்துக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்ற இறுமாப்போடு நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையிலேயே சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்கிறார் ராஜகோபாலன்.  இந்த சீராய்வு மனுவை நீதிபதி பால் வசந்தகுமார் 14.09.2012 அன்று தள்ளுபடி செய்கிறார்.
தீர்ப்பு வழங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், அத்தீர்ப்பை அமல்ப்படுத்தவில்லை ராஜகோபாலன்.  29.09.2012 அன்று ராஜகோபாலனுக்கு, உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக் கூடாது என்று வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பப் படுகிறது.  இந்த வழக்கறிஞர் அறிவிக்கைக்குப் பிறகு, நீதிபதி பால் வசந்தகுமாரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்கிறார் ராஜகோபாலன்.  அந்த மேல்முறையீட்டு மனுவை, அப்போது தலைமை நீதிபதியாக இருந்த இக்பால், வேறு டிவிஷன் பென்ச்சுக்கு மாற்றி உத்தரவிடுகிறார்.  தற்போது இந்த வழக்கு நீதிபதிகள் கே.என்.பாஷா மற்றும் தேவதாஸ் முன்னிலையில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, மேலும் ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், அரசு மருத்துவமனையில் சரியன சிகிச்சை வழங்கப்படாததால், தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில், டயாலிசிஸ் செய்ய அனுமதி வழங்கப்பட்டு, கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அபுதாஹிர்.  கடந்த 18.01.2013 அன்று அவரை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தனர் மருத்துவர்கள்.  அன்று சிறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அபுதாஹிரின் உடல்நிலையைப் பார்வையிட்ட சிறை அதிகாரிகள், அவரை சிறையில் அனுமதிக்க முடியாது…. மருத்துவமனையில் அனுமதியுங்கள் என்று கூறியதன் அடிப்படையில் 19.01.2013 முதல் கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார்.  இன்று (04.02.2013) மாலை நிலவரப்படி, அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
உள்துறைச் செயலாளரான ராஜகோபாலன் ஐஏஎஸ் அபுதாஹிருக்கு பரோல் வழங்காமல் இருப்பதற்கு தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எனக்கு உத்தரவு போட நீதிபதி யார்…. ?  புரட்சித் தலைவி அம்மாவின் அருளாசி பெற்ற ஒரே ஐஏஎஸ் அதிகாரி நான்தானே…. எனக்கு இல்லாத அதிகாரமா ?  அப்படியே நீதிமன்றம் உத்தரவு போட்டாலும், நான் பணிந்து விடுவேனா என்ற இறுமாப்பும் திமிரும் மட்டுமே இதற்கான காரணம்.
அந்த உள்துறைச் செயலாளரிடம்தான், இந்த இஸ்லாமிய அமைப்புகள் விஸ்வரூபம் திரைப்படத்துக்காக மணிக்கணக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளன.  மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு இஸ்லாமியனை, தன் இறுதி நாட்களில் குடும்பத்தோடு இருந்து மரணத்தைத் தழுவுவதற்கு இந்த இஸ்லாமிய அமைப்புகள் உதவியிருக்க வேண்டுமா இல்லையா ?  அபுதாஹிருக்கு பரோல் வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்து என்று இந்த 24 இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமா இல்லையா ?  இந்த இஸ்லாமியனுக்காக போரட்டம் நடத்துவதை விட, விஸ்வரூபம் திரைப்படம் முக்கியமா ?
துப்பாக்கித் திரைப்படத்துக்காகவும், விஸ்வரூபம் திரைப்படத்துக்காகவும், ஒன்று கூடிய 24 இஸ்லாமிய அமைப்புகள், சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தவோ, அபுதாஹிர் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்ப்படுத்தவோ, இவ்வாறு ஒன்று கூடவில்லை என்பதிலிருந்தே  இவர்கள் இஸ்லாமியர்களின் பெயரைக் கூறி பிழைப்பு நடத்தும் வியாபாரிகள் என்பது புரிகிறதா இல்லையா ?  இஸ்லாமியர்களின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறையை விட, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கடைக்கண் பார்வையில் இருக்க வேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை இருக்கிறது.
இன்று இஸ்லாமிய அமைப்புகளின் பெரும் தலைவர்களாக இருக்கும் சிலர், தமிழகத்தில் நடந்த பல குண்டு வெடிப்புச் சம்பவங்களில் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள்.  அவர்கள் உத்தரவின்படி குண்டு வைத்தவர்கள் சிறையில் இருக்கிறார்கள்…. உத்தரவிட்டவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  கோவை குண்டு வெடிப்பில் தண்டிக்கப்பட்ட கைதிகளின் குடும்பங்கள் இன்று என்ன நிலையில் இருக்கிறது என்று என்றைக்காவது இத்தலைவர்கள் அக்கறை பட்டதுண்டா ?
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனையாகி, சிறையில் இருக்கும் அஸ்ரப் அலி என்பவரின் சகோதரி ஆமினா என்பவர், வறுமை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டார்.  அவரின் வறுமையைப் போக்கவோ, அவர் வாழ்வை செழிக்க வைக்கவோ எந்த உதவியும் செய்யாத, அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், குரானுக்கு எதிராக பாலியல் தொழில் செய்தார் என்ற காரணத்தால் அவரைக் கொலை செய்து, அவர் உடல் பாகங்களை சிதைத்து வீசியெறிந்தனர்.  இதுதான் இவர்களின் இரட்டை வேடம்.
கோவை குண்டு வெடிப்பில் தண்டிக்கப்பட்டவர்களின் குடும்பங்களோடு, சாதாரண முஸ்லீம்கள் பழகுவதைத் தவிர்க்கிறார்கள்.  இவர்களோடு பழகினால், போலீஸ் தொந்தரவு வரும் என்று விலகியே இருக்கிறார்கள்.   கடுமையான வறுமையில் இருக்கும் இவர்களின் குடும்பங்கள், ஆட்டோ ஓட்டியும், பஜாரில் திருட்டு விசிடி விற்றும், பிழைத்துக் கொண்டிருக்கின்றன.
1997ம் ஆண்டு பாண்டியன் விரைவு வண்டி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று கூறி, 19 வயது இளைஞர் கைது செய்யப்படுகிறார்.  12 ஆண்டுகள் கழித்து, அவரை நிரபராதி என்று 2010ம் ஆண்டு விடுதலை செய்தது நீதிமன்றம்.  தன் இளமைக் காலம் முழுவதையும் சிறையில் கழித்த அந்த இளைஞர், இன்று பிழைக்க வழியில்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்.  அந்த இளைஞருக்கு என்ன செய்தன இந்த இஸ்லாமிய அமைப்புகள்…. குறைந்தபட்சம் அந்த இஸ்லாமிய இளைஞர் எங்கிருக்கிறார் என்பதாவது இந்த அமைப்புகளுக்குத் தெரியுமா ?
எங்காவது ஒரு குண்டு வெடிப்பு நடந்தால் சமூகத்தைத் திருப்தி செய்வதற்காக, கையில் கிடைத்த முஸ்லீம்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைக்கும் அரசு.  யார் குற்றம் செய்தவன்… யார் செய்யாதவன் என்ற பாரபட்சமெல்லாம் பார்க்காமல், இக்குற்றத்தை கண்டு பிடித்து விட்டோம் என்று சமூகத்தை சமாதானப்படுத்துவதற்காக அப்பாவிகளைக் கூட காவல்துறை கைது செய்யத் தயங்காது.
அது போன்ற அப்பாவி இஸ்லாமியர்கள் பாதிக்கப்படக் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் மனித உரிமையாளர்களும், ஜனநாயகவாதிகளும், மதத்தின்பால் அல்லாமல் மனிதத்தின்பால் போராடிக்கொண்டிருக்கிறோம்.   ஆனால், அந்த ஜனநாயகவாதிகளையும், மனித உரிமையாளர்களையும் முகம் சுளித்து ஒதுங்க வைக்கும் வேலைகளைத்தான் இந்த மதவாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர்.
விஸ்வரூபம் திரைப்படத்தில் ஏற்படுத்திய பிரச்சினையால், இஸ்லாமிய சமுதாயத்துக்கு இழப்பே அதிகம்.  ஒரு சிலர், அரசைப் பணிய வைத்து, அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தங்களின் சக்தியை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, சமுதாயத்தில் ஒரு மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டார்கள்.  இஸ்லாமியர்களை ஒரு தீவாக மாற்றி விட்டார்கள்.
இனி எந்த திரைப்பட இயக்குநரும், திரைப்படங்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒரு பாத்திரமாக வைக்கக் கூட தயங்குவார்கள்.  இஸ்லாமியர்களின் கேரக்டரே இல்லாத வகையில் கதையமைப்பார்கள்.  இஸ்லாமிய சமூகத்தின் வாழ்க்கை முறை, சூழல், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவை தமிழ்த்திரைப்படங்களில் இடம்பெறாமலேயே போய் விடும் அபாயம் விஸ்வரூப சர்ச்சையால் ஏற்பட்டிருக்கிறது.
மலையாளத்தில் 2011ம் ஆண்டு ஆதாமிண்டே மகன் அபு என்று ஒரு திரைப்படம் உருவானது.  ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் ஹஜ் பயணம் எவ்வளவு முக்கியமானது….  அந்தப் பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்ன…. எப்படிப்பட்ட மனிதனாக அவன் இருக்க வேண்டும் என்று அற்புதமாக எடுத்துரைத்த ஒரு படம்.  சிறந்த வெளிநாட்டுத் திரைப்படமாக 2011ம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் அது.
Adaminte_Makan_Abu
ஆயுஷும்மா மற்றும் அபு ஆகிய இருவரும் மலபார் பகுதியில் வசிக்கும் மாப்ளா முஸ்லீம்கள்.  எழுபது வயதாகும் அபு ஒரு அத்தர் வியாபாரி.  அவர்களின் ஒரே மகன், அரபு நாடுகளுக்கு வேலைக்குச் சென்று அவர்களை மறந்து விடுகிறான். எப்படியாவது அந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல வேண்டுமென முடிவெடுக்கும்அபு, அது வரை அவர் சேர்த்து வைத்திருந்த அத்தனை சேமிப்புகளையும் கணக்கிட்டால் மிகவும் குறைவாக இருக்கிறது.  ஆயுஷும்மா அவள் ஆசையாக வளர்த்து வந்த கோழிகளையும், மாடுகளையும் விற்கிறார். அப்போதும் பணம் குறைவாக இருக்கிறது.  ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கும் ஒரு பிராமணர், அபுவின் நண்பர்.  அவர் அபுவுக்காக பணத்தை கடனாக அளிக்கிறார்.  கடன் பெற்று ஹஜ் செல்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அவர் அந்த உதவியை அன்போடு மறுக்கிறார்.
இறுதியாக வாசலில் இருக்கும் பலா மரத்தை வெட்டி விற்றால் பணம் முழுமையாக வரும் என்று உணர்ந்து பல ஆண்டுகளாக வீட்டு வாசலில் இருக்கும் பலா மரத்தை மர வியாபாரிக்கு விற்கிறார். மரத்தை விற்பனை செய்து விட்டு, ஹஜ் பயணத்துக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் அபுவுக்கு பக்கத்து வீட்டுக்காரராக இருந்தவரோடு சிறு சண்டை ஏற்பட்டது.  பக்கத்து வீட்டுக்காரர் அபுவை அப்போது அடித்து விடுகிறார்.  பல ஆண்டுகளுக்குப் பின்னால், அவரைத் தேடி அவர் குடியிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து, பல மைல்கள் பயணம் செய்து அவரைக் கண்டுபிடிக்கிறார்.  அந்த பக்கத்து வீட்டுக்காரர், பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
அபு அவரிடம் சென்று, நான் ஹஜ் பயணம் செல்கிறேன்.  எந்தக் கடனையும் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது.  பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் உன்னோடு சண்டையிட்டேன்…  என்னை மன்னித்து விடு… என்று கேட்பார்.  அபுவை ஏற்கனவே அடித்திருந்த அந்த பக்கத்து வீட்டுக்காரர், கண்கணில் கண்ணீரோடு, நான் உன்னை அடித்ததற்குத்தான் ஆண்டவன் என்னை பக்கவாதத்தில் படுக்க வைத்துள்ளான் என்று அழுவார்.  இந்தக் காட்சி அபு என்ற மனிதனின் அற்புதமான குணத்தையும், ஹஜ் பயணம் ஒரு மனிதனை எப்படி பக்குவப்படுத்துகிறது என்பதையும் சிறப்பாக எடுத்துரைத்தது.
ADAMINTE_MAKAN_1_853933f
பயண ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடக்க, ஹஜ் பயணத்துக்கான பொருட்கள், உடைகள் அனைத்தையும் நகரத்துக்கு சென்று வாங்கி  விட்டு, விசா பெற்றுக் கொண்டு கிராமத்துக்கு திரும்புவார்.  திரும்புகையில் மரக்கடைக்காரர், அவர் வெட்டிய பலாமரம் உளுத்துப் போயிருந்தது… எதற்கும் பயன்படாதது என்பதைக் கூறுவார்.   அபு இடிந்து போவார்.   ஆனால் அந்த மரக்கடைக்காரர், மரம் போனால் போகிறது….. உங்களது ஹஜ் பயணத்துக்கு எனது அன்பளிப்பாக அந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று பணத்தைக் கொடுப்பார்.  அந்த பணத்தை வாங்க மறுத்து, சோகமாக வீடு தீரும்புவார் அபு.
வீட்டுக்கு வந்ததும் தன் மனைவியிடம்….  அந்தப் பலா மரமும் ஒரு உயிர்தானே…  அதைக் கொன்று நான் பாவமிழைத்து விட்டேன் அல்லவா ?  அதனால்தானோ என்னவோ இறைவன் என்னை ஹஜ் பயணத்துக்கு வர விடாமல் தடுத்து விட்டான் என்று கூறி விட்டு, ஒரு பலா மரக்கன்றை நடுவார்.
ஹஜ் பயணம் சென்றிருக்க வேண்டிய மறுநாள், தொழுகைக்குச் செல்லும் காட்சியோடு அத்திரைப்படம் நிறைவடையும்.
எத்தனை அற்புதமான திரைப்படம் பார்த்தீர்களா….. இப்படி ஒரு திரைப்படத்தை தமிழில் எடுக்கவில்லையென்றாலும், அபு போன்ற பாத்திரங்களைப் படைக்கும் சிறப்பான இயக்குநர்கள் தமிழில் இருக்கிறார்கள்.  அப்படி ஒரு சூழலை மறுத்து, முடக்கும் வேலையைத்தான் இந்த இஸ்லாமிய மதவாதிகள் செய்திருக்கிறார்கள்.
திரைப்படத்தை காரணமாக வைத்து, மதவெறியைத் தூண்டும் மதவாதிகளே…. !!! உங்களை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். ஒரு திரைப்படத்துக்காக சமுதாய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மதவாதிகளே…  குரானின் இந்த வாசத்தைப்   படித்திருக்கிறீர்களா ?
"இறைக்கட்டளைகளை எடுத்துரைக்க மட்டுமே உரிமை உண்டு. ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கட்டாயப் படுத்துவது, மனிதனின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். சுதந்திரம் வழங்கப்பட்ட மனிதனையே இறைவன் மறுமையில் அவனது செயல்களுக்கு பொறுப்பாளி ஆக்கி விசாரணைக்குட்படுத்தி தீர்ப்பு வழங்க முடியும்."
மனிதனின் சுதந்திரத் பறிக்கும் உங்களைப் பற்றி குரான் என்ன கூறுகிறது தெரியுமா ?
"(இந்நயவஞ்சகர்கள்) இறைவனையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரே அன்றி வேறில்லை; எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. அவர்களுடைய நெஞ்சங்களில் நோயிருக்கிறது.
(நபியே) இந்நயவஞ்சகர்கள் பேச ஆரம்பித்தால் நீர் இவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருந்து விடுவீர். ஆனால், உண்மையில் இவர்கள், சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள் (எதற்கும் உதவாதவர்கள்). இவர்கள் ஒவ்வோர் உரத்த சப்தத்தையும் தங்களுக்கு எதிரானதாய் கருதுகின்றனர். இவர்கள் தாம் கடும் பகைவர்களாவர்."
சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதற்காகவே திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மதவாதிகள் உண்மையில் சமூகத்திற்கு கேடு விளைவிப்பவர்கள்.  அமைதியான சமூகத்தை சீர்குலைக்கும் பாவிகள்.  அவர்கள் அவர்களின் பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கட்டும். நமக்கு ஆதாமின் மகன் அபு போன்ற இஸ்லாமியர்களோடு மரியாதையும், நட்பும், அன்பும், தோழமையும் எப்போதும் உண்டு.  அந்த உழைப்பாளி இஸ்லாமியர்கள் நமது சகோதரர்கள்.
c2
மதவெறியைத் தூண்டும் இந்தப் பாவிகளை, அளவிளாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய அல்லாவின் திருப்பெயரால் மன்னிப்போம்.


NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP