சமீபத்திய பதிவுகள்

ஐ.பி.எல்... சந்தோஷங்களும், சங்கடங்களும்!

>> Saturday, June 7, 2008

   
  
 
``அதிகம் அலட்டிக் கொள்ளாத சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவரான டோனியையே ஐ.பி.எல். ஒரு வழியாக்கி விட்டது...''

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி பெருவெற்றி பெற்றிருக்கிறது. சந்தோஷத்தில் மிதக்கிறார்கள் இந்திய

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள். ஆனால் ஐ.பி.எல். ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் என்னென்ன?

ஐ.பி.எல். போட்டிகள் துவங்கியபோது இது எந்தளவு `ஹிட்' ஆகும் என்று எல்லோருக்குமே பொதுவான சந்தேகம் இருந்தது. காரணம், கிரிக்கெட் ஆர்வத்துடன் பின்னிப் பிணைந்த `தேசப்பற்று'. ஆஸ்திரேலியர்களுடன் அல்லது பாகிஸ்தானியர்களுடன் இந்தியர்கள் கோதாவில் இறங்கும்போதுதான் சூடு பிறக்கும். அதனால்தான் நம் நாட்டு உள்ளூர் ரஞ்சி டிராபி போன்ற முதல்தரப் போட்டிகளில் ஸ்டேடியங்கள் காற்றாடும்.

அந்தவகையில், சென்னையும் பெங்களூரும் மல்லுக்கு நிற்பதை எந்தளவு ரசிகர்கள் ரசிகëகப் போகிறார்கள் என்ற யோசனை இருந்தது.

ஆனால் `ஐ.பி.எல். டுவென்டி- 20' முதல் தொடர், அதன் அசல் தன்மை போலவே தொடங்கிய சில நாட்களிலேயே சூடுபிடித்துவிட்டது.

ஒரு விறுவிறுப்பான சினிமா போல மூன்றே மணி நேரத்தில் முடிந்துவிடுவது, சர்வதேச நட்சத்திர வீரர்களுடன், திரை நடëசத்திரங்களும் பங்கேற்றது, களத்தில் கலக்கிய `சியர் லீடர்' பெண்கள் என்று எல்லாவகையிலும் ரசிகர்களை காந்தமெனக் கவர்ந்தது ஐ.பி.எல். இப்போட்டி காரணமாக சில சினிமா படங்களின் திரையீடு கூட தள்ளிப் போடப்பட்டது என்பது இத்தொடர் எந்தளவு மக்களிடம் பிரபலமானது என்பதை எடுத்துக்காட்டியது.

44 நாட்களில் 56 `லீக்' போட்டிகள்... பெரும் எதிர்பார்ப்புடன் பெருந்தொகைக்கு வாங்கப்பட்ட அணிகளும், ஸ்டார்களும் சொதப்ப, இத்தொடருக்கு முன் அதிகம் அறியப்படாத சில இளம்வீரர்களோ தூள் கிளப்பினார்கள்.

ஆனால் இத்தொடர் ஏற்படுத்தியிருக்கும் முக்கிய பாதகமான விளைவு என்று பார்த்தால், இந்த ஒன்றரை மாத காலத்தில் வீரர்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் எட்டு நகரங்களுக்கு இடையே பறந்து பறந்து விளையாட வேண்டியிருந்தது. அதன் தாக்கம் வீரர்களிடம் இருக்கும் என்கிறார்கள்.

உதாரணமாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித்துக்கு தனது அணி சாம்பியனானபோது மகிழ்ச்சியும், வருத்தமுமான மனநிலை. அணி வென்றதால் ஆனந்தம், ஆனால் இத்தொடரில் காயம் பட்டதால், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தாயக அணிக்காக விளையாடுவது கடினம் என்பதால் துக்கம்.

இப்படி உருட்டிப் புரட்டிப் போடும் ஐ.பி.எல்., அதிகம் அலட்டிக்கொள்ளாத இந்திய ஒருநாள் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவரான டோனியையே ஒருவழியாக்கிவிட்டது.

``இது அதீத உழைப்பு தேவைப்படும் ஆட்டமுறை. எங்களுக்கு ஓய்வு எடுப்பதற்கு நேரம் கிடைப்பதே மிக அரிதாக இருந்தது. அதிலும் நாங்கள் அரையிறுதி, இறுதிப் போட்டியை 24 மணி நேர இடைவெளியில் ஆடி இருக்கிறோம். இதெல்லாம் இப்போட்டியின் ஓர் அங்கம்தான் என்றபோதும், எங்களை வருத்திவிடுகிறது என்பதும் உண்மை'' என்று கூறியிருக்கிறார் டோனி. கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் இறுதிக்கட்டத்தில் `கீப்பிங்' பொறுப்பை பார்த்தீவ் பட்டேலிடம் ஒப்படைத்துவிட்டார் டோனி.

முக்கியமாக, இப்போட்டித் தொடரின்போது அடைந்த காயம் காரணமாக இந்தியாவின் `லிட்டில் மாஸ்டர்' சச்சின் டெண்டுல்கரும், வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானும் வங்காளதேசத்தில் நடைபெறும் முத்தரப்புப் போட்டி மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க முடியாத நிலை.

சென்னை அணிக்காக அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய வீரர் மாத்ï ஹெய்டன், வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மேற்கிந்தìயத் தீவுகளுக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் விளையாட முடியாமல் இருக்கிறார். இலங்கை வீரர் குமார் சங்கக்காராவும் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாமல் தவித்தார்.

இனி வருங்காலங்களில், ஐ.பி.எல்., இங்கிலாந்து கவுண்டி மற்றும் சர்வதேசப் போட்டிகள் என்று வருடம் முழுவதும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் `பிசி'யாக இருக்க வேண்டிவரும். இந்த நெருக்கடி நிலையில், வீரர்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

அடுத்து அதிகம் விவாதத்துக்குள்ளாகும் விஷயம், ஐ.பி.எல். `டுவென்டி-20' பரபரப்புக் கவர்ச்சியால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மெல்ல மெல்ல தமது மவுசை இழக்கும் என்பது.

அணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து வீரர் களும் தவறாமல் பங்கேற்குமë வகையில், ஐ.பி.எல். போட்டியை ஐ.சி.சி. தனது சர்வதேச போட்டி காலண்டரில் சேர்க்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. கோரிவரும் நிலையில், இதனால் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் என்னவாகும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

`டெஸ்ட் போட்டிகளுக்கு ஐ.பி.எல். சாவுமணி அடிக்கக்கூடும்!' என்று இமëரான்கானும், அவரது சகநாட்டு ஜாம்பவனான வாசிம் அக்ரமும் கடுமையாக விமர்சிக்க, சச்சின் தெண்டுல்கர், மார்ட்டின் குரோ போன்றோர், `டுவென்டி- 20' முறை பிரபலமாக்கப்பட்டால் உலகளவில் கிரிக்கெட் மேலும் செல்வாக்குப் பெறும் என்கிறார்கள்.

ஐ.பி.எல். மூலம் குறுகிய காலத்தில் கிடைக்கும் பெரும் பணத்தால், பன்னாட்டு வீரர்கள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து விரைவிலேயே சுயவிருப்ப ஓய்வு பெறும் வாய்ப்பு அதிகம் என்றும் அச்சப்படுகிறார் அக்ரம்.

ஆனால் `டுவென்டி- 20' என்பது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஆட்டமுறை. இதைவிட, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தங்கள் திறமையை நிரூபிக்கத்தான் எல்லா வீரர்களும் விரும்புவார்கள் என்ற கருத்தை பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொள்கின்றனர். `ஐ.பி.எல். தொடரின் `நீளத்தை'க் குறைத்தால் போதும்' என்று நயன் மோங்கியா, சந்துபோர்டே, சந்திரகாந்த் பண்டிட் போன்ற `முன்னாள்கள்' கூறுகின்றனர்.

தவிர, கடுமையான `டுவென்டி- 20' பயிற்சி காரணமாக டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் எல்லாமே தரம் உயரும். அணிகள் முன்னூறு ரன்களை தாண்டுவதெல்லாம் இனி சர்வசாதாரணமாகும் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

அதிலும் குறிப்பாக, இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல். ஓர் அருமையான களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. இவர்கள் சர்வதேச களத்தில் இறங்கும்முன்பே சர்வதேச நட்சத்திர வீரர்களுடன் இணைந்தும், எதிர்த்தும் விளையாடும் அரிய வாய்ப்பு. `ஐ.பி.எல். போட்டியால் இந்திய கிரிக்கெட் அணி மேலும் வலுவாகும்' என்று பாகிஸ்தான் அதிரடியாளர் அப்ரிடியும் கூறியிருக்கிறார்.

சாதாரண ரசிகனின் பார்வையில் ஐ.பி.எல். என்பது அட்டகாசம்! `தனது' அணிக்காக விளையாடும் அப்ரிடி அல்லது ஜெயசூர்யாவுக்காக கைதட்டுவதையும், `எதிரணி' என்பதால் காம்பீரின் கம்பீரமான சிக்சருக்கு அமைதி காப்பதையும் அவனே நினைத்து பார்த்திருக்க முடியாதே!
 
http://www.dailythanthi.com/muthucharam/Home/second_page.asp?issuedate=6/7/2008&secid=11

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP