சமீபத்திய பதிவுகள்

காடு என்பது வெறும் மரங்களல்ல‌

>> Friday, October 24, 2008

 
 01.09.08 நேர்காணல்

லகெங்கும் பெரும் பிரச்னையாக விவாதிக்கப்படும் பிரச்சினை சுற்றுச் சூழல் பிரச்னை. இதையொட்டி ஆக்கபூர்வமான இயக்கப் பணிகளை தமிழில் பல குழுக்கள் செய்து வருகின்றன. இதில் குறிப்பிடத் தகுந்த குழுவாக `பூவுலகின் நண்பர்கள்' குழுவைச் சொல்லலாம். நெடுஞ்செழியனின் பங்களிப்பில் இயங்கிய இக்குழு அவரது மறைவிற்குப் பிறகு கொஞ்சம் தேக்கம் கண்டது. இதனுடன் இணைந்து செயலாற்றிய காளிதாஸ், இப்போது தன் நண்பர்களுடன் சேர்ந்து `ஓசை' என்ற சுற்றுச் சூழல் இயக்கத்தை இயக்கி வருகிறார்.

ஆரம்பக் காலங்களில் திராவிட இயக்க செயல்பாடுகளில் மும்முரம் காட்டிய இவர் ஒரு கட்டத்திற்கு மேல் கானுயிர் ஆர்வளராக மாறியவர். கனரா வங்கியில் பணிபுரிந்த காளிதாஸ் சுற்றுச் சூழல் கருத்தியலைப் பரப்புவதற்காக வங்கிப் பணியைத் துறந்தவர். தமிழக கடலோர மேலாண்மை குழுமத்தின் உறுப்பினராக செயல்பட்டும் வருகிறார். கோவை, கோத்தகிரி, குஞ்சப்பனை என்று மூன்று நாட்கள் தொடர்ந்து இந்நேர்காணல் தீராநதிக்காக பதிவு செய்யப்பட்டது. அதன் கொஞ்சம் பகுதிகள் மட்டும் இங்கே பிரசுரம் காண்கிறது.

தீராநதி : தமிழ்நாட்டில் 1,30,058 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் சுமார் 22,748 ச.கி.மீட்டர் மட்டுமே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கிறது. சதவீதக் கணக்கில் இது 17.5 சதவீதம் என்று வரையறை செய்யப்படுகிறது. சுற்றுச் சூழல் சமன் நிலை குலையாமல் இருக்க வேண்டுமென்றால், மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகளாக இருக்க வேண்டும். செயற்கைக் கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் 17.5 சதவீதத்திற்கும் குறைவாகவே காடுகள் இருப்பதாக சொல்கிறது. மழைக்காடுகள், இலையுதிர்க்காடுகள், முட்புதர்க்காடுகள் என்று மூன்று பிரிவுகளாக காடுகள் வகைப்படுத்தப்படும் காடுகளில் மழைக்காடுகளே அரிதானவை. தமிழ்நாட்டில் இவற்றை உங்களைப் போன்றவர்கள் சோலைக்காடுகள் என்று குறிப்பிட்டு அழைக்கிறார்கள். பூமத்திய ரேகையின் இரு புறங்களில் மட்டுமே வளரக்கூடிய இக்காடுகளில் சமீபத்திய ஆய்வுகளின் படி இங்கு வளரும் தாவரங்கள் வளர்ச்சி நிலையில் உச்சநிலையை அடைந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. சோலைக்காடுகளை மையமாக வைத்து களப் பணி செய்து வருபவரான நீங்கள், இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் ஏற்கிறீர்களா? பெரும்பாலான ஆய்வுகள் எல்லாம் மேஜை வைப்பறையின் மீது நிகழ்த்தப்படுவனவாக உள்ளதால் உங்களைப் போன்ற களப்பணியாளர்களின் தகவல் சற்று ஆழத்தை நோக்குமென்பதால் இதை நான் கேட்கிறேன்?

காளிதாஸ் : நாட்டின் மூன்றில் ஒரு பங்கு காடாக இருந்ததென்றால், அந்த நாட்டிற்குத் தேவையான இயற்கை வளங்களை அந்தக் காடு தரும் என்பதால்தான் இந்த 33 சதவீதம் காடு தேவை என்று இயற்கை ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள். நம்மிடம் 17.5 சதவீதம் காடுகள்தான் இருக்கிறது என்ற தகவலும் உண்மையானதுதான். 17.5 சதவீதம்தான் காடுகள் இருக்கின்றது என்ற உண்மையிலிருந்து நமக்கு முதலில் உரைப்பது என்னவென்றால், அவற்றை மேலும் அழியவிடாமல் உடனே காப்பாற்றியாக வேண்டும் என்பது. அதை எப்படி 33 சதவீதத்திற்கு வளர்த்தெடுப்பது என்பதெல்லாம் அதற்கு பிற்பாடுதான். நீங்கள் குறிப்பிட்டுக் கேட்ட மூன்று வகையான காடுகள் என்பதை ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்றவாறு பிரிக்கிறார்கள். இலையுதிர்க் காடுகள் என்று ஒரே வகையாகவும் பிரிக்கலாம். அல்லது ஈர இலையுதிர்க்காடுகள், காய்ந்த இலையுதிர்க்காடுகள் என்றும் பிரிக்கலாம். இந்த அறிவியல் பூர்வமான பிரிவினைகளுக்குள்ளாக நாம் போக வேண்டாம். ஆனைமலையில் மட்டும் ஆறுவகையான காடுகள் இருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது. தகவல் என்றால் ஒரு ஆய்வே இருக்கிறது. காட்டைப் பற்றி நாம் கொஞ்சம் இங்கே சுயநலமாகவே முதலில் பேசுவோம். மனிதர்களுக்கும் காட்டிற்குமான நேரடியான உறவு பற்றி முதலில் பேசுவோம். தமிழ்நாட்டில் இன்றைக்கு மிச்சம் இருக்கின்ற இந்தக் காடு நமக்கு ஏன் தேவை என்பது முதல் கேள்வி. தமிழ்நாடு மலைமறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு பகுதி. காவிரி, தென்பெண்ணை, பாலாறு தமிழ்க் கண்டதோர் வைகை பொருநை நதி என்று பாரதி நம் பாப்பாக்களுக்குப் பாடிய நதிகளில் இன்றைக்கு பாதிக்கு மேல் சீரழிந்து போய்விட்டன. இந்தச் சீரழிவுக்கு மூல காரணம் எங்கே இருக்கிறது என்று தேடினோமானால் காடுகளுக்கும் நதிக்கும் இருந்த உறவு முறையை நீங்கள் அறிய முடியும். பாலாறு பெரும்பாலும் வற்றிப் போய் விட்டது. காவிரி கர்நாடகத்திலிருந்து திறந்து விடும் நாளில் மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. மற்ற எல்லா நதிகளுமே பருவ காலத்தில் மட்டுமே வருகின்றன. பல இறந்தே போய்விட்டன. எந்த நதியும் சமவெளியில் உற்பத்தியாகாது. மலைகளில்தான் உற்பத்தியாகும். மலைகளில் கூட கரடுகளில் உற்பத்தியாகாது. காடுகளில் தான் உற்பத்தியாகும். அந்தக் காடுகள் எதுவென்று பார்த்தால் சோலைக்காடுகள். புல்வெளிகள் அடங்கிய சோலைக்காடுகள். இந்தச் சோலைக்காடுகளின் முக்கிய பங்களிப்பு என்னவென்றால், தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் 33_லிருந்து 50 நாட்கள்தான் மழைநாட்கள். நமக்கு மழை நாட்கள் என்பது மிகக் குறைவானவை. 900 மில்லி மீட்டர் மழை ஆண்டிற்கு இங்கே பெய்கிறது. சராசரியாக பார்க்கும் போது இந்த அளவு அதிகபட்சமான மழை அளவுதான். பெரும்பாலான மழை வடகிழக்குப் பருவ காலத்திலேயே பெய்து விடுகிறது. தென்மேற்குப் பருவகாலத்தில் கொஞ்ச மழைதான் பெய்கிறது. மழைக் காலம் குறைவாக இருக்கும்போது பெய்த மழையைத் தேக்கி வைக்கக் கூடிய இயற்கை வளம் நமக்கு வேண்டும். அந்த இயற்கை வளம்தான் சோலைக்காடு. ஒரு மழை பெய்தாலும் அந்தத் தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடிய ஆற்றல் புல்வெளிகளுக்கும் சோலைக்காடுகளுக்கும் உண்டு. நகரங்களில் மும்மாரி பெய்யாவிட்டால் பரவாயில்லை. காடுகளில் மும்மாரி பொழிந்தால் மூன்று மாதத்திற்கு இந்தத் தண்ணீரை அது தேக்கி வைக்கும். சோலையும், புல்வெளியும் தேக்கிய தண்ணீர்தான் ஓடைகள். எங்கெல்லாம் சோலைகளும் புல்வெளிகளும் இருக்கிறதோ அங்கெல்லாம் வற்றாத ஓடைகள் இருக்கும். வற்றாத ஓடைகள் ஒன்று சேர்ந்தால் சிற்றாறுகள். சிற்றாறுகள் ஒன்று சேர்ந்தால் பெரும் நதிகள். இன்றைக்கு நம்முடைய நதிகள் வற்றிப் போய் இருக்கிறது, வறண்டு போய் இருக்கிறது என்பதெல்லாம் காட்டை நாம் இழந்து கொண்டிருப்பதற்கான குறியீடுகள். இன்றைக்கு தமிழிலக்கியத்தையும் சுற்றுச் சூழலையும் உற்றுநோக்குபவர்கள் நம்முடைய `திணை'க் கோட்பாட்டை புதிய பரிணாமத்தோடு பார்க்கிறார்கள்.

`எகோ சிஸ்டம்' என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்களால் முன்மொழியப்படுகின்றவற்றைத்தான் நம்முடைய முன்னோர்கள் திணைக் கோட்பாடாக வைத்து வாழ்ந்தே காட்டி இருக்கிறார்கள் என்று, இவை இரண்டையும் ஒப்பிட்டு ஆய்ந்தவர்கள் இன்றைக்கு வாதிடுகிறார்கள் `ஃபாரஸ்ட் எகோ சிஸ்டம்' என்று சொல்லப்படுவதுதான் முல்லை நிலம். `மௌன்டன் எகோ சிஸ்டம்' என்று சொல்லப்படுவதுதான் குறிஞ்சி நிலம். இப்படியே `ரிவர் எகோ சிஸ்டம்', `மெரைன் எகோ சிஸ்டம்' என்று நிறைய பிரிக்கிறார்கள். ஆனால் நம்முடையது ஒரு பொதுவான ஐந்து சிஸ்டம். அதில் முதலாவது; குறிஞ்சி. அந்த மலை, மலைசார்ந்த பகுதியில்-நம்முடைய வரலாறு தெரிந்தளவில் பேரழிவெதுவும் நடந்ததில்லை. நாம் காட்டை அழித்து கழனியாக்கி இருக்கிறோம்.அதாவது முல்லை நிலத்தை அழித்து மருத நிலமாக்கியுள்ளோம். ஆனால் குறிஞ்சியை அழித்து நாம் எதுவுமே பண்ணவில்லை. அந்த அழிவு வெள்ளைக்காரனின் காலத்தில்தான் ஆரம்பித்தது. வியாபாரம் பண்ண வந்தான், நாடு பிடிக்க வந்தான் என்ற வரலாறெல்லாம் நமக்குத் தெரிந்ததே. நாடு பிடித்து நாட்டை சுரண்டிக் கொண்டிருந்த போது அவனுக்கு இருந்த ஒரே சிக்கல், வருடத்தில் பல மாதங்கள் மழை பெய்யும் குளிர்நாடான இங்கிலாந்திலிருந்து வந்த அவன் வருடம் முழுக்க வெயில் அடிக்கும் இந்தியா போன்ற ஒரு நிலப்பரப்பில் வசிப்பதென்பது இலகுவானதாக இல்லாமல் இருந்தது. வியாபாரமும் அரசியல் போரும் நடத்திய போது அவனுக்கு இது தெரியவில்லை. இங்கு காலூன்றிய பிறகு அவன் தன் நாட்டைப்போன்ற குளுமையான பகுதிகளைத் தேட ஆரம்பித்தான். வெறும் பழங்குடி மக்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த நீலகிரி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு அந்தப் பழங்குடி மக்களைப் பின் தொடர்ந்து சென்று அவன் பார்த்தபோது அங்கிருந்த தட்பவெட்பம் அவனுக்குப் பிடித்து விட்டது. உடனே அங்கேயே தங்கிவிட்டான். அப்படிபோய் உட்கார்ந்த பிறகுதான் அங்கிருந்த தாவர வளமையை - அவன் நாட்டில் இல்லாத வளமையை உணர்ந்தான். தேக்கு, ஈட்டி, சந்தனம் போன்ற மரங்களை வெட்டிக் கொண்டு போய் அவனது நாட்டில் கட்டிடங்களைக் கட்ட பயன்படுத்தினான். அப்படி அவனால் அழிக்கப்பட்ட சோலைகளில் புதியதாக தேயிலையைக் கொண்டுவந்து பயிரிட்டான். சும்மா கிடந்த புல்வெளிகளை `வேஸ்ட் லேண்ட்' என்று தனது நிலப் பதிவேட்டில் பதிவு செய்தான். அவனது நாட்டிலுள்ள புல்வெளி என்பது `வேஸ்ட் லேண்ட்'டாக இருந்ததை எண்ணி இதையும் அவன் அப்படிக் குறிப்பிட்டான். ஆனால் நமது புல்வெளிகள் தரிசு நிலம் அல்ல; பல காலம் தண்ணீரைத் தேக்கி வைத்து ஜீவநதிகளை உற்பத்தி செய்யக்கூடிய மூலநிலங்கள் அவை. அதை அவன் உணரவில்லை. அந்தத் தரிசு நிலங்களை முன்னேற்றுவதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து சதுப்பு நிலங்களின் தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கக் கூடிய யூக்கலிப்டஸ், வேட்டல் போன்ற மரங்களைக் கொண்டு வந்து நமது புல்வெளிகளில் நட்டு வைத்தான். இதனால் நமது இயற்கைச் சுழற்சியை மாற்றி அமைத்தான். வெள்ளைக்காரன் போன பிறகும் அதே வழிகளை நாம் பின்பற்றினோம். நீலகிரி, கூடலூர் பகுதிகளில்மட்டும் கடந்த 40 ஆண்டுகளில் மூவாயிரம் வற்றாத ஓடைகள் வற்றிப்போய் இருக்கின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன. காரணம், என்னவென்றால், அந்த ஓடைகளைப் பெற்றுத் தந்த சோலைப் புல்வெளிகளை இன்றைக்கு நாம் இழந்து இருக்கிறோம். நான் என்னுடைய பால்ய பருவத்தில் மழை பெய்து ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடினால் சந்தோஷப்படுவேன். இன்று மழை பெய்த பிற்பாடு ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடுவதை நான் பார்க்கும் போது எனக்கு வலிக்கிறது. ஏனென்றால் மழை பெய்தால் உடனே ஆற்றில் தண்ணீர் ஓடக் கூடாது. மழை பெய்த தண்ணீர் காட்டில் தேங்கியிருக்க வேண்டும். அந்தத் தேங்கிய தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து ஆற்றிற்கு வரும். அன்றைக்கே ஓடுகிறதென்றால் மழைநீரைத்தேக்கி வைக்கக் கூடிய காடுகள் அழிந்துவிட்டன என்று தெரிய வருகிறது. ஆக, இதை உணர்ந்திருப்பதனால்தான் எனக்கு இன்றைக்கு வலிக்கிறது. மழை பெய்த நாலாவது நாளே கடலில் போய் கலக்கிறது. இல்லையென்றால் அழுக்கடைந்து வீணாகிறது. ஆற்றிற்கும் வடிகாலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் ஓடினால் அது வடிகால். மழை பெய்யாக்காலத்திலும் தண்ணீர் ஓட வேண்டும், அப்போதுதான் அது ஆறு. மழை பெய்யாத காலத்திலும் ஆற்றில் எப்போது தண்ணீர் ஓடுமென்றால் மழை நீரைத்தேக்கி வைக்கக்கூடிய புல்வெளிகள் இருக்கும் போதுதான். ஆக நம்முடைய சுய நலத்திற்காகத்தான் காட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறோம். இன்றைக்கு வளர்ச்சி பற்றிப் பேசுகிறோம். அந்த வளர்ச்சி தண்ணீரைச் சார்ந்திருக்கிறது. தண்ணீர் காட்டிலிருந்து உற்பத்தியாகிறது. அப்போது காடுகளைக் காப்பாற்றியாக வேண்டும் என்று நாம் சொல்கிறோம்.

இப்போது சோலைக்காடுகளில் உள்ள தாவரங்களின் வளர்ச்சி உச்சநிலையை அடைந்திருக்கிறதா என்ற உங்களுடைய கேள்விக்குள்ளாக வருவோம். நம்மிடம் உலகத்தில் பெரிய மலை எது என்று யாராவது கேட்டால் இமயமலை என்று உடனே பதில் சொல்லி விடுவோம்.

இமயமலை மூத்ததா? நம்முடைய மேற்குத் தொடர்ச்சி மலை மூத்ததா? என்றால், ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் இமயமலை தோன்றுவதற்கு சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவாவது மேற்குத் தொடர்ச்சி மலை தோன்றி இருக்கும் என்று. இந்தப் பழமை எங்கு தெரிகிறது என்று கேட்டால், இந்த மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் தெரிகிறது. தாவரவியல் ஆய்வுகள் இன்றைக்கு இதை நிரூபித்திருந்தாலும் அதற்கு முன்பாகவே மண்ணியல் ஆய்வுகள் இதை நிரூபித்துள்ளன. சோலைக்காடுகளில் படிந்திருக்கக் கூடிய மேல் மண், அங்கிருக்கின்ற இலை தழைகளால் உருவாகின்ற மண். இந்தச் சோலைக் காடுகளைத்தான் வள்ளுவர் `அணி நிழற்காடு' என்று சொல்லி இருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. சோலைக்காடுகள் உயர்ந்து வளராவிட்டாலும் அடர்ந்து வளரும். சூரிய ஒளி உள்ளே புகாது. அந்த சூரிய ஒளி உள்ளே புகாத இருட்டுப் பகுதியில் இலை தழைகள் கீழே விழுந்து, பறவை, விலங்குகளின் கழிவுகள் கலந்து நுண்ணுயிர்களால் மாற்றம் செய்யப்பட்டு அந்த மண் உருவாகிறது. ஒரு அரை இஞ்ச் அந்த மேல்மண் படிவுகள் உருவாகுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகுமென்று மண்ணியல் ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையினுடைய சோலைக்காடுகளில் அடுக்கடுக்காக அந்த மண் படிவுகள் இருக்கின்றன. அத்தனை அடுக்குகளும் அந்தக் காட்டின் பழமையைக் குறிக்கின்றன. இது உணர்த்துகின்ற இன்னொரு உண்மை, இந்தக் காட்டை நம்மால் உருவாக்க முடியாது என்பது. காடு வளர்ப்புப் பணிகள் என்று பலவற்றை நாம் செய்யலாம். காடு என்பது வெறும் மரங்கள் அல்ல. மரங்கள் என்பது மதிப்புடையதுதான். ஆனால் காடு என்பது நம்மால் உருவாக்க முடியாதது. சமூகக் காடுகள் என்று நம்மால் சில தோப்புகளை உருவாக்க முடியும். ஆனால் சோலைக்காடு என்று சொல்லப்படுவது அங்குள்ள நுண்ணுயிர், பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள், மற்றும் பல வளமைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இதை உங்களால் உருவாக்க முடியாது.

தீராநதி : குறிஞ்சி நிலத்தைப் பற்றி விரிவாகப் பேசியதால் இதைக் கேட்கிறேன். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மலரும் `குறிஞ்சி மலர்ச் செடிகள்' தமிழகத்தின் கொடைக்கானல், நீலகிரியிலுள்ள முக்குறுத்தி மலைப் பகுதிகளில் 1600 மீட்டர் உயரத்தில் காணப்படக்கூடிய ஒரு தாவரம். தோல் பதனிடும் தொழிலுக்குத் தேவையான சீகை (wattle) மரங்களையும், செயற்கை நூலிழைக்காகத் தைல மரங்களையும் குறிஞ்சி நிலத்தில் நட்டு விட்டதால் இன்று குறிஞ்சித் தாவரம் அழிந்து விட்டது என்று ஒரு தகவல் கிடைக்கிறது. சேர்வராயன் மலைத் தொடரிலுள்ள, ஏற்காடு மக்களால் சிலுவை மரம் என்றறியப்படும் (wattle) என்ற மரம் இந்தியாவிலேயே காணக்கூடிய அரிய வகை மரம். தற்போதைய கணக்கீட்டின் படி இவை இரண்டே மரங்கள்தான் மீதமிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் எல்லா வகைக் காடுகளிலும் வளரக்கூடிய, நூறு இனங்களைக் கொண்ட மூங்கில் மரங்கள் (இது புல்வகையைச் சார்ந்தது) நவீன காகிதத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்ட பின் வரம்பின்றி அழிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பாரம்பரியமாக கூடை முடைவோரான பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தையும் அது பாதித்திருப்பதாகத் தெரிய வருகிறது. இந்த மாதிரியான பாதிப்புகள் குறித்த உங்களுக்குத் தெரிந்த மேலும்  சில விவரங்களைச் சொல்ல முடியுமா?

காளிதாஸ் :  குறிஞ்சியில் பலவகையான குறிஞ்சிகள் உண்டு. நாம் சிறப்பாக குறிப்பிட்டுச் சொல்லும் குறிஞ்சி என்பது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக் கூடிய குறிஞ்சிச் செடியைத்தான். அது இந்தச் சோலைக்காடுகளை ஒட்டிய புல்வெளிகளில் வளரக் கூடியது. அந்த சோலைப் புல்வெளியில்தான் யூக்கலிப்டஸ், வேட்டல் மரங்கள் வெள்ளைக்காரனால் நடப்பட்டன என்று நாம் முன்பே பேசினோம். சீகை மரத்தின் பட்டைகள்தான் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தப்பட்டன. இன்றைக்கு அதற்குக் கூட அந்தப் பட்டைகளை யாரும் பயன்படுத்துவதில்லை. தைல மரம் என்பது நட்டது மட்டும்தான் நிற்கும். இன்னொன்று பரவாது. சீகை மெல்ல மெல்ல சோலைகளில் பரவி சோலையை அழித்து விடும். அந்த மரத்தின் கீழ் ஒரு புல் பூண்டு கூட முளைக்காது. புல்வெளிகளையே இல்லாமல் பண்ணி விடும்.

நாட்டின் வளர்ச்சிக்காக காடுகளை அழிக்கலாமா? தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக மூங்கில் மரங்களை மட்டுமல்ல வேறு எந்த மரங்களையும் அழிக்கலாமா? காகிதத் தொழிற்சாலைகளின் மூலம் என்பது மரம். அப்படி என்றால் மரத்தை வெட்டுவதில் என்ன தவறு? அப்போது காகிதம் வேண்டாமா? இதைச் செய்யத் தடுக்கும் சுற்றுச்சூழல் வாதிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு பொதுவாக வைக்கப்படுகிறது. போன நூற்றாண்டின் தொடக்கத்தில் வேண்டுமென்றால் இந்தக் கருத்தியல் சரியானதாக இருக்கலாம். வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படுகின்ற எல்லா நாடுகளும் சுற்றுச்சூழலை நாட்டின் வளர்ச்சியில் பிரதானமாக கருதுகின்றன. வளர்ச்சி பற்றிய அவர்களின் பார்வை மாறி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வளர்ச்சி என்று அவர்கள் நினைத்தது எல்லாமே தொழிற்சாலைகளை அதிகப்படுத்துவது, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைப் பெருக்குவதுதான். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதி அவர்களுக்கு வேறு விைளவுகளைக் கற்றுக் கொடுத்தது. தொழிற்சாலைகளால் ஏற்படக் கூடிய விளைவுகளை அவர்கள் உணர ஆரம்பித்த பிற்பாடு அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், இன்றைய தேவைக்கான வளர்ச்சி மட்டுமே வளர்ச்சியல்ல; என் வளர்ச்சி அடுத்த தலைமுறையையும் பாதிக்காததாக இருக்க வேண்டும் என்றார்கள். அதனால் `டெவலப்மெண்ட்' என்ற வார்த்தையை `சஸ்டைனபுல் டெவலப்மெண்ட்' என்று மாற்றி உச்சரிக்க ஆரம்பித்தார்கள். வளர்ச்சிக்கும் நிரந்தர வளர்ச்சிக்குமான வித்தியாசம். நிரந்தர வளர்ச்சி என்பது நிஜமான வளர்ச்சி. இதையே மையப்படுத்தி தமிழகத்திலுள்ள ஒரு நிஜமான உதாரணத்தைச் சொல்ல முடியும். திருப்பூர் நகரம். இன்றைக்கு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ளது. திருப்பூரிலிருந்து நாம் பனியன் ஏற்றுமதி செய்கிறோம். எந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோமென்றால் உலகத்தின் வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படுகின்ற எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். இந்த வளர்ந்த நாடுகள் நமக்கு என்ன தருகிறதென்று கேட்டால் கம்ப்யூட்டர் தருகிறது, கலர் டி.வி. தருகிறது, செல்ஃபோன் தருகிறது, கார் தருகிறது. விதவிதமாக கலர் டி.வி., செல்போன், கம்ப்யூட்டர், கார் தருகின்ற நாடுகளால் பனியனை ஏன் உற்பத்தி செய்ய முடியவில்லை? அவர்களுக்கு தொழில்நுட்பம் தெரியாது என்று சொல்ல முடியாது. திருப்பூரில் இருக்கின்ற எல்லா தொழிற்சாலைகளுக்கும் தேவையான எல்லா தொழிற் கருவிகளும் மேலை நாடுகளிலிருந்துதான் வருகின்றன. தொழிற்கருவிகளை கொடுக்கக் கூடிய அவர்கள் ஏன் பனியனை உற்பத்தி செய்யவில்லை? அவர்களுக்குத் தெரியும் இந்தத் தொழிற்சாலையை வைத்தால் தன் மண் அழுக்கடையும், தன் ஆறு அழுக்கடையும் என்று. திருப்பூர் பக்கத்திலுள்ள ஒரத்துப்பாளையம் டேம் அதற்கு வாழும் சாட்சியாக இருக்கிறது. உலகிலேயே மிக விசித்திரமான டேம் எதுவென்றால் அது ஒரத்துப்பாளையம் டேம்தான் என்று நான் சொல்வேன். ஏனென்றால் நொய்யல் ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ள டேம் அது. உலகத்தில் எந்த அணையில் பிரச்னை ஏற்பட்டாலும் அணைக்குக் கீழே இருப்பவர்கள் அணையைத் திறந்து விடுங்கள் என்று பிரச்னை செய்வார்கள். அணைக்கு மேல் இருப்பவர்கள் திறந்து விடாதே என்று தகராறு செய்வார்கள். ஆனால் ஓரத்துப்பாளையம் அணையில் மட்டும்தான் கீழே இருப்பவர்கள் தண்ணீரைத் திறந்துவிட வேண்டாம் என்றார்கள். மேல் இருப்பவர்கள் தேக்கி வைக்காதே என்றார்கள். அப்பகுதிகளில் வீட்டுத் தோட்டத்திலுள்ள கிணற்றில் குனிந்து எடுக்கும் அளவிற்கு நீர் நிரம்பி இருக்கிறது. ஆனால் அந்தத் தண்ணீரை அவனோ அவனது கால்நடைகளோ குடிக்க முடியாது. தொட்டால் அரிப்பு வரும். குடித்தால் கால்நடைகள் செத்துப்போகும். தென்னை மரங்களில் இளநீர் வண்ணம் மாறி காய்க்கக் கூடிய அவலம் அங்கே ஏற்பட்டிருக்கிறது. இப்படி அணை முழுவதும் தண்ணீர் நிரம்பி இருந்தது. தண்ணீர் என்ற பெயரில் ஒரு திரவ வெடி குண்டு அங்கிருந்தது. அத்தனையும் திருப்பூர் சாயப்பட்டறையிலிருந்து வெளியேற்றப்பட்ட சாயக்கழிவுகள். இன்றைக்கு வரைக்கும் வந்து கொண்டிருக்கிறது. நொய்யல் காவிரியின் துணை ஆறு. அப்போது நொய்யல் ஆற்றில் கழிவுகளைத் திறந்து விடப்பட்டால் காவிரியில்போய் கலக்கும். காவிரி எனக்கு சோறு போடுகின்ற நதி. அப்படியானால் நாம் ஏற்றுமதி செய்வது பனியனையா? இல்லை, நம் வயலை, நம் தண்ணீரை, நம் ஆற்றை. இதைத்தான் நாம் ஏற்றுமதி செய்கிறோம்.

குடிப்பதற்கான தண்ணீர் வேறு நாட்டிலிருந்து கன்டெய்னரில் வந்து இறக்குமதி ஆகுமா என்று காத்துக்கிடக்கின்ற ஒரு தேசமாக நம் தேசம் மாற வேண்டுமா என்ற கேள்வியோடுதான் இன்றைக்கு வளர்ச்சியைப் பற்றிப்பேச வேண்டி இருக்கிறது. மரங்களை வெட்டவே கூடாது என்று நான் வாதிடவில்லை. இன்னமும் நமது நாட்டில் தரிசு நிலங்கள் அதிகமாக இருக்கின்றன. அதில் தொழிற்சாலைகளுக்கான மூங்கில் மரங்களை நட்டு வளர்க்கலாம். நம்மிடம் ஒரு கலாச்சாரம் இருந்தது. நம்முடைய வீட்டில் வளர்ந்த பூவரசன் மரத்தை வெட்டி கட்டில் செய்த கலாச்சாரம் அது. பூவரசனை வெட்டி விற்று அந்தக் காசில் கல்யாணம் பண்ணியவர்கள் நம் முன்னோர்கள். அந்த மரம் நாம் நட்டவை. அதை நாம் வெட்டலாம். மரம் நடும் கலாச்சாரத்தையே விட்டு விட்டு வெறும் ரியல் எஸ்டேட்டுகளை விற்கக்கூடியவர்களாக நாம் இன்றைக்கு மாறி இருக்கிறோம். இந்த ஆபத்துகளை முதலில் நாம் உணர்ந்தாக வேண்டும். அமெரிக்கா, ஜப்பான்போன்ற வளர்ந்த நாடுகளில் அவர்களின் வீட்டு உபயோகத்திற்கான மரங்களை அவர்கள் காட்டிலிருந்து அவர்கள் வெட்டுவதில்லை. தெரியுமா உங்களுக்கு?

தீராநதி :  இந்த இடத்தில் ஒரு சம்பவம் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜப்பான் நாட்டில் வீட்டு மாடியிலிருந்து பூனைகள் விழுந்து திடீர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டனவாம். இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தேடித் துருவிய போது, அந்தப் பூனைகள் சாப்பிடும் மீன்களில் இருந்த `மெர்க்குரி' தான் என்று தெரிய வந்தது. மீன்களுக்குள் எப்படி `மெர்க்குரி' வந்திருக்கும் என்று மேலும் ஆராய்ந்தபோது, அந்த மீன்கள் உற்பத்தியாகும் ஏரியில் `மெர்க்குரி' கலந்திருப்பது தெரிய வந்தது. அந்த ஏரியின் அருகாமையில் இருந்த தொழிற்சாலையின் கழிவிலிருந்து வெளியேறிய `மெர்குரி'கள்தான் ஏரியில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த `மெர்க்குரி' கலந்த மீனைத் தின்றதால்தான் பூனைகளின் நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இந்தத் தற்கொலைகள் நடந்திருக்கின்றன எனத் தெரிய வந்தது. இது உலகம் முழுக்க விவாதத்தை எழுப்பிய சம்பவம். ஆனால் இங்கு நீலகிரியில் இருக்கும் ஃபிலிம் பேக்டரியிலிருந்து அதே மாதிரியான மெர்க்குரிகள் வெளியேறி சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது என்று பல ஆய்வாளர்கள் எடுத்துச் சொல்லியும், அந்தத் தொழிற்சாலை எவ்வித இடையூறும் இல்லாமல் இன்றுவரை நடந்து வருகிறதே?

காளிதாஸ் : நீங்கள் குறிப்பிட்ட இந்தச் சம்பவம் ஜப்பானில் மினமாட்டா தீவில் ஏற்பட்டது. உலகை உலுக்கிய ஒரு சம்பவம் அது. 1950களின் இறுதியில் நடந்தது. அது ஒரு பாதரசத் தொழிற்சாலை. வெளியேறியது பாதரசக் கழிவல்ல; பாதரசமே வெளியேறியது. அப்படி வெளியேறிய பாதரசம் மினமாட்டா ஆற்றில் கலந்தது. பாதரசம் என்பது ஒரு தனிமம். அந்தத் தனிமம் தண்ணீரில் கலந்துவிட்டால் `மெத்தில் மெர்க்குரி' என்கிற ஒரு உயிரிப் பொருளாகிவிடும். அது பல்கிப் படர்ந்து பெருகும். அப்படி தாவரங்களில் படர்ந்தது. தாவரங்களை சாப்பிடக் கூடிய சின்ன மீன்கள் வயிற்றில் படர்ந்தது. சின்ன மீன்களை சாப்பிட்ட பெரிய மீன்களின் வயிற்றிற்குப் பிறகு இடம் மாறியது. இந்த மீனைச் சாப்பிட்ட பூனைகளின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பூனைகள் தற்கொலை செய்து கொண்டன. இதற்கு `கேட் டான்ஸ்' என்று கூட தனிப் பெயரே வைத்தார்கள். பூனைகள் இறந்த சில காலத்திலேயே அந்த அறிகுறிகள் மனிதர்களிடம் தென்பட்டன. மனிதர்களின் தலை பெரிதானது. குழந்தைகள் ஊனமுற்றுப் பிறந்தன. கை கால்கள் எல்லாம் ஒருவித நோய்க்கு உள்ளாகி சூம்பிப் போயின. இதற்கெல்லாம் காரணம், அந்தத் தொழிற்சாலைதான் என்று சொன்னபோதும் அந்த கம்பெனி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நீண்ட ஆய்வுக்குப் பிறகு அந்த நிறுவனம் மூடப்பட்டது. 1960களின் தொடக்கத்தில் மூடப்பட்டது. ஆனால் இங்கே 1990-களில் கொடைக்கானல் மலை உச்சியில் ஒரு தெர்மா மீட்டர் இந்துஸ்தான் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. இதே மெர்க்குரி இங்கும் பயன்படுத்தப்பட்டது. டன் கணக்கில் மெர்க்குரி இறக்குமதி செய்யப்பட்டது. கொடைக்கானல் உச்சியில் அது பயன்படுத்தப்பட்ட தென்றால் எந்தப் பக்கத்திலிருந்து அது வழிந்தாலும் கீழே இருக்கக் கூடிய ஓடைகளுக்கும் ஆறுகளுக்கும் வந்து சேரும். ஜப்பானில் `க்ரீன் பீஸ்' போன்ற இயக்கங்களின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு அந்த கம்பெனி அங்கு மூடப்பட்டது மட்டுமல்ல; மிச்சம் இருந்த மெர்குரியை உலக வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. நம்முடைய கேள்வி என்னவென்றால், 1960 களில் ஜப்பானில் தூக்கி எறியப்பட்ட ஒரு கம்பெனி இந்தியாவிற்கு 1990களில் ஏன் வந்தது? இது மட்டுமல்ல; இன்றைக்கு இந்தியாவின் கருப்பு இரவாகக் கருதப்படுகின்ற, டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட போபால் விஷ வாய்வுக் கசிவில் பல உயிர்களைப் பலிவாங்கிய அந்த யூனியன் கார்ப்பெட் நிறுவனமும் அமெரிக்காவில் வைக்கத் தகுதியற்ற நிறுவனமாகச் சொல்லி வெளியேற்றப்பட்ட நிறுவனம்தான். `க்ளமென்ஸ்' என்ற கப்பல் இந்தியாவிற்கு பிரான்ஸிலிருந்து வந்த வரலாறு என்பது நமக்குத் தெரியும். `க்ளமென்ஸ்' கப்பல் காலாவதியான ஒரு கப்பல். உலகத்தில் காலாவதியாகின்ற கப்பல்களை இந்தியாவில் வைத்து உடைத்து விற்கக்கூடிய பெரிய பணக்காரர்கள்  நம் நாட்டில் இருக்கிறார்கள். வெறும் கப்பலை மட்டும் உடைத்து விற்றார்கள் என்றால் பரவாயில்லை.

`க்ளமென்ஸ்' கப்பல் காலாவதியான உடனே பிரான்ஸ் அரசு கப்பலை மட்டுமே இங்கு அனுப்பவில்லை. கப்பலில் பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் விஷக் கழிவுகளையும் சேர்த்து ஏற்றி அனுப்பியது. சர்வதேச சட்டப்படியே இது தவறு. ஒரு நாட்டிலிருந்து ஒரு நாட்டிற்கு விஷக் கழிவுகளை அனுப்பக்கூடாது என்று சர்வதேச ஒப்பந்தமே இருக்கிறது. ஆனால் அனுப்பியது. இந்தியாவில் யாரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் நமக்கு யாருக்கும் இது தெரியாது. நல்ல வேளை க்ரீன் பீஸ்ஸின் பிரான்ஸ் கிளை இதை எதிர்த்தது. `டாக்ஸிகிளிக்' என்ற  அமைப்பு இந்தியாவில் இந்தத் தகவலை வெளிப்படுத்தியது. நாங்கள் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். இந்த எதிர்ப்பையெல்லாம் மீறி இந்தியஅரசு என்ன சொன்னதென்றால், ``இட் இஸ் யூஷ்வல்'' என்றது. அப்படி என்றால் இதற்கு முன்னும் கூட இந்த மாதிரியான விஷங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் சர்வதேச எதிர்ப்புகளுக்குப் பிறகு பிரான்ஸ் அரசே அந்தக் கப்பலை திரும்பப் பெற்றது. கூவம் நதிக்கரையில் ஐரோப்பிய நாடுகளில் காலாவதியான சாக்லெட்கள் கொட்டப்பட்டு இருக்கின்றன. இந்தத் தகவல் அதிர்ச்சியாக இல்லையா உங்களுக்கு? சமீபத்தில் கோவைப் பக்கத்திலுள்ள காரமடை பகுதியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து பேப்பர்களை வாங்கி ரீ சைக்கிள் செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்று அங்கு கொட்டிக் கிடக்கின்ற கழிவுகளைப் பார்த்தால் வெறும் மருத்துவக் கழிவாக கொட்டிக் கிடக்கிறது. எலக்ட்ரானிக் கழிவுகளாக கொட்டிக் கிடக்கிறது. நம்முடைய நாட்டிலேயே `பயோ மெடிக்கல் வேஸ்ட்' என்று சொல்லப்படுகின்ற கழிவுப் பொருட்களை வெளியில் கொட்டுவதற்கு கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. இதை மீறி இவற்றைக் கொட்டும் ஆஸ்பத்திரிகளும் உண்டு. இவ்வளவு நெருக்கடியான சட்டங்கள் இருக்கும் போது எப்படி வெளிநாட்டிலிருந்து மருத்துவ விஷக் கழிவுகள் எவ்விதத் தடையும் இன்றி காரமடை பகுதிக்கு வந்து சேர்கின்றன?

தீராநதி :  சர்வதேச நாடுகளிலிருந்து பல படிப்பினைகளை நாம் கற்றுக் கொண்டபோது இங்குள்ள சில அரசியல் பேர சுய லாபத்திற்காகவே இந்தியா குப்பை நாடாக மாற்றப்படுகிறது. அரசியல் தலைவர்களுக்கு இந்த அபாயத்தை எப்படி உணர்த்தலாம் என்று நினைக்கிறீர்கள்?

காளிதாஸ் :  அரசியல்வாதிகள் என்பவர்கள் எங்கிருந்தோ தோன்றிய தேவதூதர்கள் அல்ல; நம்மிலிருந்து முளைத்தவர்கள்தான். இந்தக் கேள்விகளை வைத்து நான் என்ன சொல்கிறேன் என்றால், முதலில் சுற்றுச்சூழலைப் பற்றிப் பேசுவது பொழுதுபோக்கானதல்ல; சுற்றுச்சூழல் என்பதே அரசியல்தான். சுற்றுச்சூழல் என்பது பொருளாதாரம். அது வெறும் `மரம் நடுவோம் மழை பெறுவோம்' என்று நின்று போகின்ற புள்ளியல்ல. அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கக் கூடிய அல்கோர் `இன்கன்வீனியனெட் ட்ரூத்' என்று உலக வெம்மையாக்கலைப் பற்றி அவர் கவலைப்படுகிறார் என்று சொன்னால், அது அரசியல், சுற்றுச்சூழலைச் சார்ந்ததுதான். 

நம் மீது கொட்டப்படுகின்ற அழுக்குகள் எல்லாம் ஒரு வல்லரசினுடைய அதிகாரத்தை நம் மீது திணிப்பது. இதற்கு கைப்பாவையாக நம்முடைய அரசியல்வாதிகள், அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது உண்மை. சுற்றுச்சூழல்தான் வேளாண்மையைத் தீர்மானிக்கிறது. வேளாண்மை என் தேசத்தைத் தீர்மானிக்கிறது. அப்படியானால் என்தேசத்தைத் தீர்மானிக்கக்கூடிய சுற்றுச் சூழலையும், வேளாண்மையையும் காப்பாற்ற வேண்டுமென்றால் என் தேசத்தின் அரசியலை இதற்குத் தகுந்த மாதிரி மாற்றவேண்டும். Rhine நதியைக் காப்பாற்றுவதற்கு ஷெர்மனியில் சுற்றுச்சூழல் இயக்கங்கள்தான் முதன் முதலில் முன்மொழித்தன. தேம்ஸ் நதியைக் காப்பாற்றுவதற்கு இங்கிலாந்தில் இயக்கமாக சேர்ந்து போராடினார்கள். ஆக, நாமும் நமது ஆறுகளை, இயற்கை வளங்களைக் காப்பதற்கு இயக்கமாகப் போராட வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது. இந்த மக்கள் இயக்கம்தான்

kumudam.com/magazine/Theranadi/2008-09-01

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP