சமீபத்திய பதிவுகள்

கத்தரிக்காய், தேங்காய் ஸ்டைலில் கும்மிடிப்பூண்டியில் குவியல் குவியலாகக் கிடைத்துள்ள குண்டுகள், தோட்டாக்கள் தமிழகத்தில் குபீர் பீதியைக் கிளப்பி உள்ளன

>> Thursday, June 19, 2008

 
19.06.08    மற்றவை 
 

கோயம்பேடு மார்க்கெட்டில் குவித்துப் போட்ட கத்தரிக்காய், தேங்காய் ஸ்டைலில் கும்மிடிப்பூண்டியில் குவியல் குவியலாகக் கிடைத்துள்ள குண்டுகள், தோட்டாக்கள் தமிழகத்தில் குபீர் பீதியைக் கிளப்பி உள்ளன.`ஒருவேளை இது தீவிரவாதிகளின் ஆயுதக்களஞ்சியமாக இருக்கலாம்' என  ஜெயலலிதா அவரது வழக்கமான பாணியில் இதை வைத்து அரசியல் செய்ய, ஆரம்பமாகி விட்டது அமர்க்களம்.

கும்மிடிப்பூண்டி சித்திரராஜ கண்டிகையைச் சுற்றியுள்ள தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக்குழு (சிப்காட்) வளாகத்தில் பதினேழு இரும்பு உருக்காலைகள் செயல்படுகின்றன.இந்த உருக்காலைகள் வெளிநாடுகளில் இருந்து பழைய இரும்புச்சாமான்களை கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்து, அவற்றை உருக்கி இரும்புப் பொருட்களைத் தயாரிக்கின்றன. இதே பகுதியில் தாசில்தார் அலுவலகமும் இலங்கை அகதிகள் முகாம்ஒன்றும்  உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அகதிகள் முகாமைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் அந்தப் பகுதியில் உள்ள பழைய கிணறு ஒன்றில் குளிக்கச் சென்றிருக்கிறார்கள்.அதில் ஒரு சிறுவன் துண்டுபீடி ஒன்றை அணைக்காமல் அருகில் இருந்த புதரில் தூக்கியெறிய, புதர் தீப்பிடித்து... அடுத்தநிமிடம் ஒரு வெடியோசை! அந்த படுபயங்கர வெடிச் சத்தத்தைக் கேட்டு சிறுவர்கள் அருகே சென்றபோது,மீண்டும் ஒரு வெடியோசை.அவ்வளவுதான். இரண்டு சிறுவர்கள் அதில் காயமடைய, உடனடியாக அவர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

`இலங்கை அகதிகள் முகாம் அருகே குண்டுவெடித்து விட்டது' என்ற செய்தி இதற்குள் காற்றில் பரவ, அந்த மர்மப் பொருள் வெடித்த பகுதிக்கு திருவள்ளூர் மாவட்ட உதவி ஆட்சியர் சங்கீதா,  எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. நவீன் சந்திரன் ஆகியோர் வந்து சேர்ந்தனர். அந்தப் பகுதியை ஆராய்ந்தபோது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக,அங்கே குவியல் குவியலாகக் குண்டுகள், தோட்டாக்கள்,ராக்கெட் லாஞ்சர்கள்,கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் மொத்த எடை ஒரு டன்னுக்கும் மேலே.

தொட்டுவிடும் தூரத்தில் இலங்கை அகதிகள் முகாம். அதனருகில் குண்டுகள், தோட்டாக்கள். இது போதாதா? உடனே இலங்கை அகதிகளுக்கும், இந்த ஆயுதக்குவியலுக்கும் முடிச்சுப் போட்டு பரபரப்பு இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தது.இது நக்ஸல் இயக்கத்தினரின்ஆயுதக்களஞ்சியம் என்ற வதந்தியும் அமளிதுமளிப்பட்டது. இந்த நிலையில்தான் மேற்படி பிரச்னையை அரசியலாக்கி, அறிக்கை விட்டு பெருமை தேடிக் கொண்டார் ஜெ. `அப்படியில்லை. கும்மிடிப்பூண்டியில் கண்டுபிடிக்கப்பட்டவை அங்குள்ள இரும்புத் தொழிற்சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பழைய இரும்புகள், அதாவது பயன்படுத்தப்பட்ட குண்டுகள்' என்று அவசர அவசரமாக அறிக்கை விட்டார் டி.ஜி.பி. ஜெயின்.

அதன்பிறகு அந்தப் பகுதியில் உள்ள ஏனைய பதினாறு இரும்புத் தொழிற்சாலைகளிலும் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர், அதில் `ஷ்ரீவிநாயகா அலாய் ஸ்டீல்' என்ற தொழிற்சாலையில் ஆய்வு நடத்தியபோது, அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய இரும்புகளில் பீரங்கிக் குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள், துப்பாக்கித் தோட்டாக்கள், ஏ.கே. 47 எந்திரத் துப்பாக்கிகளுக்கான குண்டுகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் கிணற்றில் குண்டு மற்றும் தோட்டாக்களைப் போட்டு பதுக்கி வைத்திருந்தவர்களும் இதே தொழிற்சாலைக்காரர்கள்தான் என்பது தெரிய வந்தது. அதையடுத்து, ஆலை உரிமையாளர் அசோக்குமார்  ஜெயின், மேலாளர் மனோஜ்குமார் ஜெயின் மற்றும் சூப்பர்வைசர் ராகேஷ்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டியில் உண்மையில் என்னதான் நடந்தது என்பதை அறிய, அங்கு நாம் விசிட் அடித்தோம்.முதலில் சிப்காட் பகுதியில் சில தொழிற்சாலை ஊழியர்களிடம் பேசினோம்.

``வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் வரும் இரும்புக்கழிவுகளை இங்குள்ள ஆலைக்காரர்கள் கொதிகலனில் இட்டு உருக்கி கம்பி மற்றும் கட்டுமானப் பணிக்குத் தேவையான இரும்பு உபகரணங்களைத் தயாரிக்கின்றனர். இப்படி வரும் பழைய இரும்புக் கழிவுகளில் பயன்படுத்தப்பட்ட பழைய குண்டுகள், தோட்டாக்களும் இருப்பதுண்டு. தோட்டா மற்றும் பீரங்கிக் குண்டுகளில் இருந்து அதிகஅளவில் தரமான இரும்பை உருக்கி எடுக்க முடியும் என்பதால்,  இதுபோல குண்டுகள் வந்தால் தொழிற்சாலை உரிமையாளர்கள் குஷியாகிவிடுவார்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு தொழிற்சாலையில் இப்படி இறக்குமதி செய்யப்பட்ட குண்டுகளை உருக்கும் போது உஷ்ணம் தாங்காமல் அவை வெடித்துச் சிதறின. அந்த விபத்தில் தொழிலாளர்கள் சிலர் இறந்தும் போனார்கள்.

அந்த அசம்பாவிதத்துக்குப் பின், `இதுபோல குண்டுகள், தோட்டாக்கள் இரும்புக்கழிவுடன் சேர்ந்து வந்தால் அவற்றை எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும்' என்று போலீஸார் அறிவித்தனர். அதோடு சரி. அதன்பிறகு இது தொடர்பாக போலீஸார் பெரிய அளவில் எந்த முயற்சியும்மேற்கொள்ளவில்லை. இதன்பிறகு பழைய இரும்பில் கலந்து வரும் அபாயகரமான வெடிபொருட்களை என்ன செய்வது என்று தெரியாமல்தொழிற்சாலை உரிமையாளர்கள் திணற ஆரம்பித்தார்கள்.  அப்படிப்பட்ட குண்டுகளையும் தோட்டாக்களையும் சிலர் பாழடைந்த கிணறுகள், புதர்களில் மறைக்க ஆரம்பித்தார்கள். அந்தநிலையில்தான் இப்படி ஒரு பிரச்னை வெடித்திருக்கிறது'' என்று ஆதங்கப்பட்டனர் அவர்கள்.

சர்ச்சையில் சிக்கிய ஷ்ரீவிநாயகா அலாய் ஸ்டீல்ஸ் தொழிற்சாலைக்குள் நாம் நமது புகைப்படக்காரருடன் நுழைந்தோம்.போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிக் குண்டுகள், கண்ணி வெடிகள், தோட்டாக்கள் ஆகியவை அங்கு ஆயுதக்கிடங்கு ஸ்டைலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தத் தொழிற்சாலை ஊழியர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

``இறக்குமதியாகும் இரும்புகளுடன் இதுபோன்ற குண்டுகள், தோட்டாக்கள்  வந்துவிட்டால் அவற்றை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் எந்தத் தெளிவான நடைமுறையும் இங்கு இல்லை. யாருக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்றுதான் அவற்றை கிணற்றில் கொட்டினோம்(!) ஆனால், சிறுவர்களின் விளையாட்டால் அசம்பாவிதம் அரங்கேறிவிட்டது. எங்கள் தொழிற்சாலையில்  பீரங்கிக் குண்டுகள், தோட்டாக்களைப் பறிமுதல் செய்து எங்களை ஏதோ நக்ஸல் போல போலீஸார் சித்திரிக்கிறார்கள். ஆனால்,  இங்கே எந்தத் தொழிற்சாலையில்தான் இது போன்ற பழைய குண்டுகள், தோட்டாக்கள் இல்லை? இங்குள்ள மற்ற பதினாறு  தொழிற்சாலைகளிலும் போலீஸார் சோதனை நடத்தினால்  இதைவிடப் பயங்கர ஆயுதங்கள் வெளிச்சத்துக்கு வரும்'' என்று நம் புருவங்களை உயரச் செய்தனர் அந்த ஊழியர்கள்.

இதனிடையே, தடய அறிவியல் துறை இயக்குனர் விஜயகுமார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, பறிமுதலான கண்ணிவெடி மற்றும் குண்டுகளின் மாதிரியையும் அதில் ஒட்டியிருந்த வெடி மருந்துகளையும் சேகரித்துள்ளனர்.  சிப்காட் காவல் நிலையத்தில் டி.எஸ்.பி.யுடன் ஆலோசனையில் இருந்த தடய அறிவியல் இயக்குநர் விஜயகுமாரிடம் பேசினோம்.

``பொதுவாக, பீரங்கி, துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் குண்டுகள், தோட்டாக்களில் வெடி மருந்துகள் கலந்திருக்கும். அவற்றை பீரங்கி, துப்பாக்கியில் வைத்து ஒருமுறை சுட்டால் அதிலுள்ள வெடிமருந்து சாம்பலாகிவிடும். அதன்பின் ஆபத்தில்லை. அவை பழைய இரும்புப் பொருட்களாகக் கருதப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் சிலசமயம், அவற்றில் வெடிக்காத குண்டுகள், தோட்டாக்களும் கலந்து வருவதால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புண்டு. இப்போது நாங்கள் சேகரித்துள்ளது வெடிமருந்தா? அல்லது வெறும் மண்ணா? என்பது ஆய்வில்தான் தெரியவரும்.

இதுபோன்ற பயங்கர ஆயுதங்களை உருக்கி இரும்புப் பொருட்களைச் செய்யவே கூடாது. காவல்துறையிடம் தான் ஒப்படைக்க வேண்டும். இங்கே கிடைத்திருக்கும் கண்ணிவெடிகள், பீரங்கி ஷெல்கள் தற்போது புழக்கத்தில் இல்லாத பழைய ரகங்கள். இவை 1917 முதல் 1967 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். அதில் உள்ள கழுகு சின்னத்தை வைத்துப் பார்க்கும்போது இரண்டாம் உலகப்போரின்போது இவை அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் போலத் தோன்றுகின்றன.  இதில் ஏதாவது சதி இருக்கிறதா? என விசாரிப்பது  நாட்டின் பாதுகாப்புக்கு உகந்தது'' என்று முடித்துக் கொண்டார் அவர்.

தென்னை மரத்தில் தேள்கொட்ட பனை மரத்துக்கு நெறி கட்டிய  கதையாக இந்தக் காயலான் கடை சம்பவத்துக்குத் துளியும் சம்பந்தமில்லாத இலங்கைத் தமிழ்அகதிகள் இப்போது பீதியில் இருப்பதுதான் வேதனை.

படங்கள்: ஞானமணி
ஸீ  வே. வெற்றிவேல்

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

StumbleUpon.com Read more...

பல்கலைகழகம் பெயரில் போலி வெப்சைட்?

 
 

நெல்லை பல்கலைக்கழக `வெப்சைட்' பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யிருக்கிறது. `சட்டத்திற்குப் புறம்பாய் போலி முகவரி கொடுத்து பல் கலைக்கழக வெப்சைட்டை உருவாக்கிய கில்லாடி யார்?' என்பதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் சங்கம் துணைவேந்தரிடம் மனு கொடுக்கவே, விவகாரம் பற்றியெரியத் தொடங்கியிருக்கிறது.

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கென இரண்டு வெப்சைட்டுகள் இருக்கின்றன. முன்னாள் துணைவேந்தர் சிந்தியா பாண்டியன் காலத்தில்தான் பல்கலைக்கழகத்திற்கென்று புதிய வெப்சைட் உருவாக்கப்பட்டது. அண்மையில் சில பேராசிரியர்கள் பல்கலைக் கழகத்தின் வெப்சைட்டுகளைப் பார்க்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், இரண்டு வெப்சைட்டுகளுமே ஓப்பன் ஆகவில்லை. இதனால் அதிர்ந்து போன பேராசிரியர்கள் உடனடியாய் பல்கலைக்கழக வெப்சைட்டுகளுக்கு என்ன ஆயிற்று என்பதைத் தெரிந்துகொள்வதற்காக `இன்ரிஜிஸ்ட்ரி' என்கிற வெப்சைட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். இந்த இன்ரிஜிஸ்ட்ரி வெப்சைட்டில் உலகம் முழுதும் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கும் வெப்சைட்டுகள், அதை ரிஜிஸ்டர் செய்தது யார்?  என்ற விவரங்களை அக்குவேறு, ஆணிவேறாகத் தெரிந்து கொள்ளலாம்.

எனவே, அந்த வெப்சைட்டைத் திறந்து பார்த்த பேராசிரியர்களுக்கு பயங்கர அதிர்ச்சி. அதில் பல போலி தகவல்கள் இடம் பெற்றிருந்ததே இதற்குக் காரணம். இது குறித்து சில பேராசிரியர்களிடம் பேசினோம். "பல்கலைக்கழகத்தின் `எம்.எஸ்.யு.ஏ.சி.இன்' என்கிற வெப்சைட் கடந்த 2.2.08-ம் தேதியோடு நின்று போயிருக்கிறது. அதாவது, சிந்தியா பாண்டியன் ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெப்சைட் குளோஸ் செய்யப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்த வெப்சைட் 4.12.09-ம் தேதி வரை இயங்க அனுமதி பெற்றிருக்கிறது. எனவேதான் இதில் ஏதோ சதி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு உடனடியாய் இன்ரிஜிஸ்ட்ரி வெப்சைட்டில் நமது பல்கலைக் கழக வெப்சைட் பற்றிய தகவல்களை அலசி ஆராய்ந்தோம். அப்போதுதான் மேலும் சில பகீர் தகவல்கள் கிடைத்தன. அதாவது, `எம்.எஸ்.யு.ஏ.சி.இன்' வெப்சைட்டைப் பதிவு செய்தவரின் இமெயில் முகவரியாக `எஸ்சிதுரை@யாகூ.காம்' என்றும், அதை நிர்வகிப்பவர் எஸ்.சின்னதுரை, தொலைபேசி எண் என்று பல்கலைக் கழகத் தொலைபேசி எண் இல்லாமல் வேறு தொலைபேசி எண்ணும்  குறிப்பிடப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகத்தில் சின்னதுரை என்று யாருமே இல்லை. எனவே இது ஒரு போலி முகவரி. போலி முகவரி கொடுத்து பல்கலைக் கழகத்தின் பெயரில் வெப்சைட் ஓப்பன் பண்ணியது யார், எதற்காக இப்படியொரு காரியத்தைச் செய்தார் என்பது புரியவில்லை. பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு முதலாளி பதிவாளர்தான். பல்கலைக்கழகத்தின் எல்லா சொத்துக்கள், வாகனங்களுமே பதிவாளர் பெயரில்தான் இருக்க வேண்டும் என்பது விதி. அப்படியிருக்கும் போது, பதிவாளர் பெயரை விடுத்து தனியார் பெயரில் பல்கலைக் கழக வெப்சைட்டை ஓப்பன் பண்ணியது யாரென்று  எங்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.

அதே மாதிரி `எம்.எஸ்.யுனிவர்சிட்டி.ஏசி.இன்' என்ற இன்னொரு வெப்சைட்டும் பதிவாளர் பெயரில் இல்லை. அதன் நிர்வாகி என்று கிருஷ்ணன் நல்லபெருமாள் என்று பேராசிரியர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வெப்சைட்டும் வரும் 10.11.08-ம் தேதி வரை இயங்க அனுமதி பெற்றிருக்கும் நிலையில், கடந்த 5.12.07-ம் தேதியோடு நிறுத்தப்பட்டிருக்கிறது.

 எங்களைப் பொறுத்தவரை இந்த இரண்டு வெப்சைட்டுகளும் காலாவதியான மாதிரி தெரியவில்லை. யாரோ சிலர் மட்டும் ரகசிய குறியீடுகளைப் பயன்படுத்தி இயக்கி வருகிறார்கள். எனவே, பல்கலைக் கழக வெப்சைட்டுகள் பப்ளிக் வெப்சைட்டாக இல்லாமல் இன்டர்னல் வெப்சைட்டாகச் செயல்படுகிறதோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. தீவிரவாதிகள்தான் இப்படி தங்கள் வெப்சைட்டுகளைப் பயன்படுத்துவார்கள்'' என்றவர்களிடம் `இப்படி சீக்ரெட்டாய் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன?' என்று கேட்டோம்.

 "பல்கலைக்கழகத்துக்கு வெளிநாட்டு நிதிகள் பெறப்பட்ட விஷயம் புதிய துணை வேந்தருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று யாரோ சிலர் திட்டமிட்டுச் செயல்படுத்துற சதிதான் இது. அண்மையில் கூட பல்கலைக்கழகத்திற்கு ஒன்றரைக் கோடி ரூபாய் வந்ததில் பதினைந்து லட்சத்துக்குத்தான் கணக்கு சொல்லப் பட்டிருக்கிறது. இது துணைவேந்தர் சபாபதி மோகனுக்குத் தெரிந்தால் பிரச்னையாகிவிடுமே என்று பயப்படுகிறவர்கள்தான் இத்தகைய காரியத்தில் ஈடுபடுகிறார்கள்'' என்றார்கள்.

இந்தப் பிரச்னையை பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம், துணைவேந்தர் சபாபதி மோகனிடமே நேரில் புகார் செய்திருக்கிறது. பேராசிரியர்கள் சங்கச் செயலாளர் சாமுவேல் ஆசீர்ராஜிடம் பேசினோம். "பல்கலைக்கழகத்திற்கு மறைமுகமாகச் செயல்படுகிற வெப்சைட் எதற்கு?  என்பதே எங்கள் கேள்வி. தவிர, பதிவாளர் பெயரில் வெப்சைட்டைப் பதிவு     பண்ணாதது மாபெரும் தவறு. எனவே இது பற்றி துணைவேந்தரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்தே எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை அமையும்'' என்றார் சுருக்கமாய். 

பேராசிரியர்களின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு துணைவேந்தர் சபாபதி மோகன் என்ன பதில் சொல்கிறார்? அவரிடமே கேட்டோம். "என்னிடமும் இந்தப் புகார் வந்திருக்கிறது. பல்கலைக் கழகத்திற்கென மூன்று வெப்சைட்டுகள் இருக்கின்றன. பேராசிரியர்களும் தனியாக வெப்சைட்டுகளைப் போட்டிருக்கிறார்கள். இப்போது புதிதாக மா.சு. என்கிற பெயரில் புதிய வெப்சைட்டை பதிவாளர் பெயரில் போடச் சொல்லியிருக்கிறேன். வெளிநாட்டு நிதியெல்லாம் கண்டிப்பாக பதிவாளர் பெயருக்குத்தான் வரும். தனி நபர் பெயரில் வராது. இதெல்லாம்
பேராசிரியர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பகையின் காரணமாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் என்று  நினைக்கிறேன். என்றாலும் புகாரை நான் அலட்சியப்படுத்தப் போவதில்லை'' என்றார் பொறுப்புடன்.           ஸீ

ஸீ ஏ.டி.சாமி

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

StumbleUpon.com Read more...

இஸ்லாமிய இளைஞரின் இறுதிவேளையில் இயேசு

இஸ்லாமிய இளைஞரின் இறுதிவேளையில் இயேசு







Source: http://ca.geocities.com/mistertoronto/nasar.html
http://isaforall.blogspot.com/2008/06/blog-post_9720.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP