சமீபத்திய பதிவுகள்

போராட்டத்தின் அடித்தளம் காக்கப்படல் வேண்டும்

>> Thursday, July 23, 2009

 

இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம், சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை பேட்டிகண்டு மூன்று நாட்களாகத் தொடர்ந்து பத்திரிகையில் எழுதியமை ஒன்றும் தற்செயலான விடயமல்ல.

நன்கு திட்டமிடப்பட்டு கருணாநிதியின் அறிக்கையோடும் ப.கிருஷ்ணாவின் அறிக்கையோடும் சேர்த்து ஒரே நேரத்தில்றோவினால் இயக்கப்பட்டுத் தமிழீழத் தேசியத்திற்கும், ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும் சேர்த்து வைக்கப்பட்ட சாவு மணியாகும். கொழும்பு சென்னை டெல்லி அச்சில் செயற்படுத்தப்பட்ட ஒரு கூட்டுச் சதியே இவ் அறிக்கையும், பேட்டியும்.

பாசிஸ்டுகளினதும், ஸ்ராலினிஸ்டுகளினதும் கோட்பாடுகளைப் பின்பற்றி, போர்க் குற்றவாளிகளைக் காத்து நின்று, போரிலே தோல்வியடைந்த மக்களை மேலும் அழிவிற்குள்ளாக்கி, அவர்கள் மீது சாத்தியமற்ற தீர்வுகளைத் திணித்து, அந்த மக்களை மேலும் தடுப்பு முகாம்களிலேயே அடைத்து வைத்து ஒரு இனத்தின் போராட்டக் குணமுள்ள ஒரு பகுதியையே தொடர் அழிவிற்குள்ளாக்கும் ஒரு இனப்படுகொலைக் கட்டமைப்பையே சிறீலங்காவின் இந்தக் கூட்டுச் சதியாளர்கள் நிறைவேற்றுகிறார்கள். இன அழிப்பு வழிமுறைகளில் இன்று இராஜபக் வே முன்னணி வகிக்கின்றார்.

தமிழருக்கு எந்தத் தீர்ப்பும் தர விரும்பாது தனது தேர்தலைக் குறிவைத்து சிங்களவர் மனங்குளிரத் தமிழர்களைத் தடுப்பு முகாம்களில் வைத்து அழித்தொழிக்க நினைக்கிறார் மகிந்தர். நாட்டில் இராணுவத்தை மேலும் பெருக்கித் தனது மகிந்த சிந்தனைத் தீர்வை நிலைநாட்ட முதலீடு செய்வதற்குஉலகையும் துணைக்கு அழைக்கின்றார். கருணாநிதி தமிழீழத்தை முற்றாகப் புறக்கணித்து உரிமைகளற்ற மாநில சுயாட்சி முறையைப் பின்பற்றும்படி குரல் எழுப்பி சிங்களத்திற்கு ஒத்தடம் தடவுகின்றார். தமிழீழத் தேசியப் போராட்டத்தை ஒரு சிறுபான்மையினரின் கிளர்ச்சியாகப் பாவித்து இலங்கைத் தீவில் "பயங்கரவாதம்' ஒழிக்கப்பட்டதைப் பாராட்டி, 13 ஆவது சட்டத்தை அமுலாக்குவதில் மட்டுமே ஆர்வம்காட்டிச் சென்ற வியாழனன்று பாராளுமன்றத்தில் பேசிய ப.கிருஷ்ணாவும் சிங்களத்திற்கு சாமரம் வீசவே எத்தனிக்கின்றார்.

கொழும்பும், புதுடில்லியும் தமிழருக்கு எதையும் தரப்போவதில்லை என்பது வெட்டவெளிச்சமானது. இவர்கள் கூறிக்கொள்ளும் பயங்கரவாதத்தின் முற்றுப்புள்ளிக்குப் பின்னரும் கொழும்பும், டெல்லியும் கூட்டாக ஒரு புதியவகையான இன அழிப்புக்கட்டமைப்பை உருவாக்குகிறார்கள். இது தமிழீழம் என்ற எம் தாயகத்தையே இல்லாதொழிப்பதற்காகவும், சிறீலங்கா மீதான தனது பிராந்திய புவியியல் இலாபங்களிற்கு அப்பால் இந்தியா என்றுமே தமிழர் நலனில் அக்கறை காட்டவில்லை. இதற்காகவே கொழும்பில் இன அழிப்பு அட்டவணையை இந்தியா நிறைவேற்றுகின்றது. ஈழத் தமிழர் என்றுமே இந்தியாவை தமது விடுதலையை வழங்குவோராகவே எதிர்பார்த்திருந்தது. ஆனால் இந்திய அரசு தமிழர் நலனில் எந்த அக்கறையையும் காட்டாது தனது சுய நலன்களிற்காகத் தமிழர்களை பலியிடவே விரும்பியுள்ளது. இதற்குத் துணைபோகும் தமிழக அரசு தமிழர்களால் என்றுமே மன்னிக்கப்படாததாக அமைந்துள்ளது.

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மாபெரும் இனவழிப்புப் போரையோ அல்லது கொழும்பையோ போர்க்குற்றவாளிகளாகத் தட்டிக்கேட்க எந்த நாட்டிற்கும் துணிவற்றுப்போய்விட்டது. இவர்கள் தம்மீது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றுபோர்வையைப் போர்த்திக்கொண்டு உண்மையில் முன்னால் ஒளிந்துகொள்கின்றனர். இவர்கள் போர்த்திக்கொண்ட பயங்கரவாதம் இன்று இவர்கள் கூறுவதுபோல் அழிக்கப்பட்டுவிட்டதாயின் ஈழத் தமிழரின் சட்டபூர்வமான சுயநிர்ணயத்திற்கான தேசிய விடுதலையையும், அதன் நியாயத்தையும் ஏற்றுக்கொள்வதில் இருந்து இவர்களை இன்னும் என்ன தடுக்கின்றது?

இந்தப்போர் விடுதலைப் புலிகளிற்கு எதிரானது அல்ல, ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானதே. இலங்கைத் தீவின் புவியியல் கேந்திரப் புள்ளியில் கண் வைத்திருக்கும் புவிசார் அரசியல் சக்திகளிற்கோ அல்லது சிறீலங்காவிலும் அதன் சுற்றுச் சூழலிலும் தனது பாதுகாப்பை உறுதிசெய்ய நினைக்கும் இந்தியாவிற்கோ ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரானது எந்தவிதப் பயனுமற்றது.

இந்தப் போரை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்வளையை நசுக்குவதற்கும், இந்திய ‡சிறீலங்கா அரசுகள் நடாத்தும் போரிற்கும், தமிழீழம் என்ற கோரிக்கையை நசுக்குவதற்கும், இவர்கள் மிகவும் பொருத்தமானவராகத் தமிழின அழிப்பிற்குத் துணைபோகக்கூடியவருமாகக் கருணாநிதியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இன்றைய நிலையில் புலம் பெயர் ஈழத் தமிழர்களின் குரலானது தமது ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தி தமது சுயநிர்ணய உரிமையையும், தமிழீழத் தேசிய விடுதலையையும் உலகிற்கு உரக்கச் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இன்று இந்தியாவிற்கு நேரெதிரான நிலைப்பாட்டைக் காட்ட முயலும் மேலைத் தேசங்களும், ஒரு பக்கத்தில் மனித உரிமைகள் பற்றியும், போர்க் குற்றங்கள் பற்றியும் வாய் கிழியப் பேசிக்கொண்டு தமது சொந்த நலன்களிற்காக மறுபக்கத்தில் சிறீலங்காவைத் தூக்கி நிறுத்த முயன்றாலும், போர் முடிவடைந்ததன் பின்னாலும் கூட ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்காமலும், தமிழீழத் தேசியப் போராட்டத்தைப் புறுந்தள்ளியுமே விடுகின்றனர். எமக்கு அரசியல் தீர்வை அடக்கு முறை அரசாட்சி செய்யும் அல்லது மகிந்த பார்வைக்கு நிதியளிக்கும் ஜப்பானோ தந்துவிடப்போவதில்லை. இந்த நாடுகள் எல்லாம் போரில் தோற்ற ஜேர்மனின் பின்னான அல்லது ஜப்பானின் பின்னான "பொருளாராத அற்புதங்களை' செய்கிறோம் என்று மூக்கை நுழைத்ததுபோல் எம்மிடமும் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் நில ஆக்கிரமிப்புப் போரையும் நடத்தவில்லை, இரண்டு அணுகுண்டுகளிற்குப் பிறகு மிக்காடோ அரசுபோல் சரணடையவுமில்லை.

எமது போரானது மதிப்பிற்குரிய ஒரு இனத்தின் மூன்று தசாப்தத்திற்கும் மேலான ஒரு விடுதலைப்போர். இதில் நாம் பல அணுகுண்டுகளைப் பார்த்துவிட்டோம். பல இழப்புகளைச் சந்தித்துவிட்டோம். இவை கடந்தும் சர்வதேசத்தின் ஒருங்கிணைந்த எதிர்ப்புப் பலத்தையும் தாண்டி முன் எப்போதும் இல்லாதவாறு எமது போராட்டம் இன்று மிகவும் வலுப்பெற்றுள்ளது. எதிரி பலம், எதிரி வளம் அதிகரிக்க அதிகரிக்க எமது போராட்டமானது உரம் பெறும். இந்த அளவிற்கு எமது போராட்டம் வலுப்பெற்று வளர்வதற்கு ஒருங்கிணைந்த பலத்தோடு எமை எதிர்த்த சர்வதேச வல்லரசுகளிற்கு நன்றி.

எமது போர் சரணடைவில் முடிவடைந்துவிடவில்லை. தேசியத் தலைவர் கட்டியயழுப்பி, அதன் அத்தனை கட்டமைப்புக்களையும் உருவாக்கி, உலகை வியக்க வைத்த ஒரு சுதந்திரத் தமிழீழ அரசு என்றுமே சரணடைந்து விடவில்லை. இது தனது ஈழத் தமிழர்களின் சுதந்திர வேட்கையையும், விடுதலைப் போரையும் என்றுமே, எவரிடமுமே சரணடைய வைத்ததில்லை. இதை மனதிற் கொண்டு எம் போராட்டம் தொடரப்படல் வேண்டும்.

கொழும்பின் நிவாரணம், புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழீழத் தேசியத்தையே தற்கொலை முயற்சிக்குள்ளாக்கும் நிலையையே கொண்டுள்ளது. இந்த நிலையிலே நாம் நமது விடுதலைப்போரை உரமேற்றி தமிழீழத் தேசியத்தையும், ஈழத் தமிழர்கள் என்ற அடையாளத்தையும் ஆயுதமாகக் கைகளில் ஏந்திப் போராட வேண்டும். எமது உச்ச பலத்தைக் காட்டவேண்டும். நாம் இரண்டே இரண்டு பிரிவினர்தான் இப் போராட்டக் களத்தில் உள்ளோம். ஒன்று தமிழீழத் தேசியத்தை நசுக்கி ஒடுக்கும் பேரினவாதமும், அதன் கூட்டாளிகள், எம்மினத் துரோகிகள் என்கின்ற எதிரி அணி. மற்றொன்று தமிழீழத் தேசியப் போராட்டத்தைத் தக்கவைத்து அதன் அடித்தளத்தைத் தக்கவைத்து தமிழீழ விடுதலையைப் பெறும்வரை ஓயாது போராடும் தமிழர் கூட்டம். இதைத் தவிர எந்தப் பிரிவினையும் புதிய பிரிவுகளும் எமக்குத் தேவையில்லை. காரணம் எமது போராட்ட அடித்தளம் என்றோ நிறுவப்பட்டுவிட்டது. அந்த அடித்தளம் மீதான போராட்ட வலுவிற்கு உரம் சேர்ப்பதுதான் எம் கடமை. அந்தத் தலைமையே, அந்தக் கட்டமைப்பே எமது அடித்தளம். அடித்தளம் இழக்கப்பட்டால் போராட்ட அடிப்படை இழக்கப்படும்.

எமது போராட்டம் இங்கு புலத்தில் ஜனநாயக ரீதியாக மாற்றம் பெறலாம். ஆனாலும் களத்தில் அதன் அடிப்படை அப்படியே பேணப்படும். புலத்தில் அரசுகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்கள், யாருக்காகப் பேசுகிறார்களோ அந்த மக்களின் இதயங்களை வென்றவர்களாக இருத்தல் வேண்டும். மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். தம்மைத் தாமே பிரதிநிதியாக்கி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது. அது போராட்ட அடிப்படைக் களத்தையே சரணடைய வைப்பதற்குச் சமனாகும். சரணடைந்த போராட்டம் பேச்சுவார்த்தைக்குத் தகுதியற்றது.

போர்த்துக்கேயரிடம் சரணடையும் பத்திரத்தில் கையயாப்பமிட்ட யாழ்ப்பாண முதலியார்களாலோ அல்லது ஆங்கிலேயரிடம் சரணடைந்த கண்டி உயர்தட்டு அரசர்களாலோ நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை. சரணடைவதிலும் சாவே மேல் எனும் சித்தாந்தம் கொண்ட விடுதலைப் புலிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுபவர்கள். எங்கள் பலம் இதுதான். இந்த எங்கள் அடித்தளத்தைப் பேணுபவர்களால் மட்டுமே தமிழர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட முடியும். இந்திய அரசிடமோ, சிறீலங்கா அரசிடமோ சரணாகதியடைபவர்களால் முடியாது. பேச்சுக் கருத்துச் சுதந்திரத்தோடு வாழும் புலம்பெயர் தமிழர்கள் நாம், எமது தமிழீழத் தேசிய சுயநிர்ணய உரிமையை அரசியல் ஜனநாயக ரீதியாக 1976ல் எடுத்துக் கூறியதை மீண்டும் இந்தப் புவிசார் நலன்களிலும், பொருளாதார இலாப நட்டங்களைக் கணக்குப் பார்க்கும் இந்த மேலைத்தேய அரசுகளிற்கு மீண்டும் புரியவைப்போம். எமக்கான ஆதரவு நிலையை அவர்கள் எடுப்பதற்கான நெருக்கடியை நாம் கொடுப்போம். நோர்வேயிலும், பிரான்சிலும் சொல்லப்பட்டதை தமிழன் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் சொல்வோம். எங்கு வாழும் தமிழனாலும் ஜனநாயக முறைப்படி எமது சுயநிர்ணய உரிமையை மீள வலியுறுத்த முடிந்தாலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டும் இந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்களிற்கு இந்த அடிப்படைச் சுதந்திரம்கூடப் பறிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

புலம்பெயர் தமிழர்கள் ஒரு ஜனநாயக அமைப்பின் கீழ் இணைந்து இந்த அரசுகளோடு சவால்விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். சர்வதேசத்தில் எமது போராட்டம் சர்வதேசத்தாலேயே ஏற்றுக்கொள்ளப்படாது போய்விட்டது. சர்வதேசத்தின் ஒன்றுபட்ட முகமான ஐ.நாவாலேயே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இங்கு எமக்கான ஜனநாயக அமைப்பிற்கான அடித்தளம் இருந்திருக்கவில்லை.

இப்போது பல நாடுகளில் உருவாக்கப்படும் மக்களவைகள் இந்த வெற்றிடத்தை நிரப்பும். இதில் பல்லாயிரக்கணக்கில் நாம் அங்கத்துவம் வகிக்கவேண்டும். கல்வியாளர்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என்று அனைவரும் ஒன்றுசேர வேண்டும். இவ் அமைப்பின் மூலம் எமது தமிழீழ சுயநிர்ணய உரிமையை நாம் வலியுறுத்த முடியும். எமக்கான தேசம் கட்டியயழுப்பப்பட்டிருந்ததை சுட்டிக்காட்ட முடியும். அதை அழித்தொழித்தவர்களையே மீளக் கட்டியயழுப்பித் தரவைக்க முடியும்.

எமக்கான நிர்வாகம் சிறப்பாக இயங்கியதைச் சுட்டிக்காட்டி அதை நசுக்கியவர்களையே அதை மீளக் கட்டியயழுப்பித் தரவைக்க முடியும். எமது தேசத்தின் போராட்ட அடித்தளத்தை நாம் புலத்தில் வைத்துக் காக்கமுடியும். அது தனது இலக்கை அடையவைக்க முடியும். இவற்றின் மூலம் நாம் சர்வதேசப் பேச்சவார்த்தையை ஏற்படுத்தமுடியும். அரசுகளோடு மக்கள் பிரதிநிதிகளாக எமது நியாயத்தை முன்வைக்க முடியும்.

தேசியங்களை அங்கீகரித்து, ஈழத் தமிழரின் போராட்டத்தையும், தேசியத்தையும் அங்கீகரித்து எமது ஜனநாயகப் போராட்டங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் சர்வதேசம் மீண்டும் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியயழுப்ப முடியும். சர்வதேசம் தன் நாடுகளிற்கும், தங்கள் நாகரீகத்திற்கும், அரசுகளிற்கும், புவிசார் அரசியல் இலாபங்களால் வரும் நன்மையையும், மதிப்பையும்விட, தேசியங்களையும், தேசங்களையும் அங்கீகரிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகளும், மதிப்புகளும், இலாபங்களும், அங்கீகாரமும் பெரியது.

மக்களினுVடாக நாம் சிறீலங்கா அரசிற்கெதிரான பொருளாதாரப் போராட்டத்தையும் முன்வைக்க முடியும். சிறீலங்கா அரசின் பொருட்களின் கொள்வனவை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், முழுமையான பொருளாதாரத் தடையை புலம்பெயர் மக்களால் கொண்டுவரல் முடியும். ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் தனது சிறீலங்கா அடையாளத்தை மறுதலிப்பதன் மூலம் அந்நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்குறிக்குள்ளாக்க முடியும்.

இப்படியான முழுமையான மக்கள் போராட்டங்கள் சர்வதேசத்தின் பார்வையை எம்மீது திருப்ப வைக்க வழிவகுக்கும். அந்த முயற்சியினைத் தனிப்பட்டவர்கள் எடுக்கும்போது அது ஆக்கபூர்வமற்றதாகிவிடும். ஒருங்கிணைந்த மக்கள் முயற்சியாகத் தோற்றம் பெறும்போது அதன் தாக்கம் பலமானதாக இருக்கும். குறிப்பாக இளையோர்களை ஒன்றுசேர்த்து அவர்கள் குரலில் சர்வதேசத்திற்கு, அவர்கள் இன்னும் சிறீலங்காவைத் தாங்கிப் பிடிப்பதையும், அவர்களின் அரைகுறைத் தீர்வுகளையும் வரவேற்பதை நிறுத்திவிட்டு, ஈழத் தமிழர்களின் விடுதலைப்போரை அங்கீகரித்து, தங்களது தமிழீழத் தேசியத்தை ஒரு அங்கீகாரம் பெற்ற இனமாக ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்க வேண்டும். அனைத்து வகை வழிகளிலும், பேச்சுவார்த்தைகளையும், வேறுபல முன்னெடுப்புகளையும் மேற்கொண்டாலும் தமிழீழத் தேசியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இழக்கப்படாமலோ, மாற்றப்படாமலோ காத்தல் வேண்டும்.

இன்று பலரும் தமிழரின் போராட்டத்தின் அடித்தளத்தையே அழித்துவிடவும், தமிழீழத் தேசியத்தை இந்திய சிறீலங்கா அரசுகளின் கால்களில் சரணடைய வைக்கப் பெரும் முயற்சிகள் எடுக்கின்றனர். இதில் நாம் விழிப்பாக இருத்தல் வேண்டும். எமது தேசிய இலக்கு உடைக்கப்படுமாயின் என்றும் அது மீளக் கட்டியயழுப்ப முடியாது. அரைகுறைத் தீர்வுகளாலும், பிச்சைகளாலும் இதை உடைத்துவிட முடியாது. ஈழத் தமிழர் ஒவ்வொருவர் மனத்திலும் இந்தத் தமிழீழத் தாயகத்தின் கோரிக்கை கொளுந்துவிட்டு எரியவண்டும். விடுதலைத் தாகத் தீ அணையாது காக்கப்படல் வேண்டும். மக்களின் போராட்டக் குணமானது பேணப்படல் வேண்டும்.

புவிசார் அரசியலிலும், சில சுயநலவாதிகளினதும் வலைக்குள்ளும் சிக்காது தமிழீழம் காக்கப்படல் வேண்டும். இதற்கு நாம் எம் உணர்வில் தமிழீழம் தவிர்ந்த வேறு எதற்குமே இடமளிக்கக் கூடாது.

2000ம் வருடப் போராட்டத்தின் பின்னரும் கூட யூதர்களால் ஒரு நாடு அமைக்க முடிந்தது. காரணம் யூதர்கள் மனதில் அவர்களின் தேசிய விடுதலையும், இஸ்ரேலும் மட்டுமே நிறைந்திருந்தது. அவர்களது போராட்ட அடித்தளம் அழிக்கப்படாததால் தேசம் அவர்களிற்குச் சாத்தியப்பட்டது.

"'யூதர்களால் முடிந்தது நிச்சயம் எம்மாலும் முடியும்"'.

சோழ.கரிகாலன்

ஈழமுரசு(24.07.09)

StumbleUpon.com Read more...

வீடியோ:இந்த நூற்றாண்டின் மிகநீண்ட சூரிய கிரஹண்ஹத்தின்நேரடி காட்சி

StumbleUpon.com Read more...

வரலாற்றுச்சுவடுகள்:இலங்கை தமிழர் வரலாறு-6

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் எப்படி சூழ்ச்சிகள் செய்து நாட்டைப் பிடித்தார்களோ, அதேபோல் இலங்கைக்கு வியாபாரம் செய்யப்போன ஐரோப்பியர்கள் தந்திரமாக நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இலங்கைக்கு முதன் முதலாக வந்த ஐரோப்பியர்கள் போர்ச்சுக்கீசியர்கள். ஏறக்குறைய இந்தியாவுக்குள் போர்ச்சுக்கீசியர்கள் அடியெடுத்து வைத்த காலக்கட்டத்தில்தான் அவர்கள் இலங்கையையும் கைப்பற்றினர். கி.பி. 1505-ம் ஆண்டின் இறுதியில் போர்ச்சுக்கீசியர்கள் வந்த கப்பல் ஒன்று, புயலில் சிக்கியது. புயலில் திசை மாறி அந்த கப்பல் இலங்கையின் கடலோரப் பகுதியில் ஒதுங்கியது. அந்த கப்பலின் கேப்டன் பெயர் டாம் லூரங்கோ.

உள்நாட்டு குழப்பம்

 

அப்போது இலங்கையில் கோட்டை, சித்தவாகா, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய 4 ராஜ்ஜியங்கள் இருந்தன. இந்த 4 ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்களிடம் ஒற்றுமை இல்லை. உள்நாட்டுக் குழப்பங்கள் நிலவின.முதலில் வியாபாரம் செய்வதே போர்ச்சுக்கீசியர்களின் நோக்கமாக இருந்தது. பின்னர், இலங்கையின் சூழ்நிலையைப் பார்த்த அவர்கள், "ஆட்சியைப் பிடிக்க இதுவே தக்க தருணம்'' என்று தீர்மானித்தனர்.அவர்களிடம் நவீன போர்க் கருவிகள் இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி, இலங்கையின் மேற்கு கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பகுதிகளிலும் ஊடுருவினர்.

தமிழ் மன்னன்

போர்ச்சுக்கீசியர்கள் இலங்கையில் கோட்டை ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிக் கொண்டபோது, யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை ஜெகராஜசேகரன் என்கிற முதலாவது சங்கிலி (1519-1561) என்ற தமிழ் மன்னன் ஆண்டு வந்தான். யாழ்ப்பாண அரசை கைப்பற்ற போர்ச்சுக்கீசியர்கள் பலமுறை முயன்றும் தோற்றுப்போனார்கள்.
முடிவில், "மன்னாரில் வியாபாரம் மட்டும் செய்து கொள்கிறோம்'' என்று சங்கிலி மன்னனிடம் அனுமதி பெற்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வியாபாரம் செய்து வந்த போர்ச்சுக்கீசியர்கள், தமிழரிடையே இருந்த சாதிப்பாகுபாட்டை பயன்படுத்திக் கொண்டு, ஒரு பகுதியினரை தங்களோடு சேர்த் துக்கொண்டு, சங்கிலிக்கு எதிராகக் கலகம் செய்தனர்.

சங்கிலி அங்கு தன் படையோடு சென்று கலகத்தை அடக்கினான். கலகத்துக்கு காரணமாக இருந்தவர்களின் தலையைத் துண்டித்தான்.
இதனால் ஆத்திரம் அடைந்த போர்ச்சுக்கீசியர்கள், யாழ்ப்பாண அரசை கைப்பற்ற தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
முதலாம் சங்கிலிக்குப் பிறகு இரண்டாம் சங்கிலி (1615-1619) ஆட்சிக்கு வந்தான். அப்போது, போர்ச்சுக்கீசியர்கள் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டனர். இதற்கு, பிதுறு பொட்டன்கோன் என்ற போர்ச்சுக்கீசிய பாதிரியார் தலைமை தாங்கினார்.

கடும் போர்

உள்நாட்டுக் கலவரத்தை ஒடுக்க இரண்டாவது சங்கிலி மன்னன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டான். தனக்கு உதவி செய்யுமாறு, தமிழ்நாட்டில் இருந்த ரகுநாத நாயக்க மன்னனுக்கு செய்தி அனுப்பினான். நாயக்க மன்னனும் வர்ணகுலத்தான் என்ற தளபதி தலைமையில் 5,000 வீரர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தான்.

அதே சமயம், மன்னன் சங்கிலியை முறியடிக்க போர்ச்சுக்கீசியர்கள் படை திரட்டினர். கோட்டையில் இருந்து மன்னாரை நோக்கி நூறு போர்ச்சுக்கீசிய வீரர்களும், சில நூறு சிங்களக் கூலிப்படையினரும் அனுப்பப்பட்டனர்.

அதே நேரத்தில் தரை வழியாகவும் 130 போர்ச்சுக்கீசிய ராணுவ வீரர்களும், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிங்களக் கூலிப்படையினரும் யாழ்ப்பாணத்தை நோக்கி விரைந்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நடந்தது. சிங்கள கூலிப்படையின் உதவியுடன் யாழ்ப்பாண மன்னன் சங்கிலியை போர்ச்சுக்கீசியர் தோற்கடித்து கைது செய்தனர்.

தூக்கு தண்டனை

இந்தக் காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள கோவா நகரம் போர்ச்சுக்கீசியர் வசம் இருந்தது. அங்கு சங்கிலியை கொண்டு சென்றனர்.
சங்கிலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் தூக்கில் போடப்பட்டான்.ஈழமன்னன் முதன் முறையாக அந்நியர்களான போர்ச்சுக்கீசியர்களிடம் தோற்றதுடன், மரணத்தையும் தழுவ நேர்ந்தது. அதற்கு போர்ச்சுக்கீசியர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் சிங்களர்கள்.

இலங்கையின் மத்தியப் பகுதி, கிழக்கு கடற்கரைப் பகுதி ஆகியவை தவிர இலங்கையின் மற்ற பகுதிகள் போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கத்தின் கீழ் வந்தன.
ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளுக்கு போர்ச்சுக்கீசியர்களும், தாழ்ந்த பதவிகளுக்கு தமிழரும், சிங்களர்களும் அமர்த்தப்பட்டனர்.

சிங்களர்களையும், தமிழர்களையும் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தவர்களும், `கீழ்ச்சாதி' என்று கருதப்பட்டவர்களும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினர்.போர்ச்சுக்கீசியர்கள், இலங்கையின் முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை. மிளகு, லவங்கப்பட்டை, பாக்கு போன்றவற்றையும், யானைகளையும் தங்கள் நாட்டுக்கு கொண்டு போயினர்."போர்ச்சுக்கீசியர்கள் ஆட்சி காலத்தை இலங்கையின் இருண்ட காலம்'' என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

StumbleUpon.com Read more...

கேணல் கிட்டு, மறுக்கமுடியாத‌ மாவீரம்

 

சதாசிவம் கிருஸ்ணகுமார்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
02-01-1960 to 16-01-1993

வங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து இன்றுடன் பதினாறு ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆனால் தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன. கேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்.

அதனால்தான், தமிழீழத் தேசியத் தலைவர் "கிட்டுவை ஆழமாக நேசித்தேன், தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத் திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்து, போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்த்த நேயம் அது" என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார். கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார். எந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்து, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம் சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும் வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார்.

1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது.

அதில் கிட்டுவும் ஒருவர் தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது. வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில் துரதிஸ்ட வசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள்.

துப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாக னத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார். அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது.

1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார். இவவாண்டின் இறுதிக் காலத்தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார்.

பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார்.

யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது.

யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார். இவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார்.

தமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது.

1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொணர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார்.

எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார். சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார்.

இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது. அமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஸ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார்.

கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். களத்தில், எரிமலை' எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு,விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார்.

கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது, தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்.

கிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். "கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்" எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார்.

இன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன.

கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது. போரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரியற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம்.

ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார்.

தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும். இவை இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத் தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம்.

சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் அவர் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச்செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார். எதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி கிட்டுவின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது.

எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கிட்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றிருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது.

"கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு"

தயா

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP