சமீபத்திய பதிவுகள்

போருக்குப்பின் உணர்த்தப்போகும் வரலாற்றுத் தீர்ப்பு!

>> Saturday, August 8, 2009

 

vannimயாழ்., வவுனியா தேர்தல்கள் மூலம் தமிழர்களின் அரசியல் வேட்கையை மீண்டும் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், '' இலங்கையில் யாழ்ப்பாண மாநகரசபை, வவுனியா நகரசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இந்த தேர்தல்களால் ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு நேரடியான பயன் எதுவுமில்லை என்பது உண்மையே. ஆனால் அதன் காரணத்தாலேயே இத்தேர்தலைப் புறந்தள்ளி இருந்துவிட முடியாது.

இலங்கை அரசுக்கும் உலக நாடுகளுக்கும் இந்தத் தேர்தலின் மூலமாக தமிழ் மக்கள் தமது அரசியல் வேட்கையை, தமது கோரிக்கைகளை, தமது கொள்கைகளை மீண்டும் ஒலிக்கச் செய்யவேண்டிய தேவையுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் முழுமையான அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்து ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அமைப்பு.

அக்கோட்பாடுகளின் அடிப்படையில் தேர்தலைச் சந்தித்து ஈழத் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்று வெற்றி பெற்றதோடு இன்றுவரை அதன் அடிப்படையிலேயே செயல்பட்டும் வருகிறது.

சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் அல்லது நடவடிக்கைகள் சிலவேளைகளில் அவர்கள் மீதான சந்தேகத்தை உண்டு பண்ணினாலும்கூட அவர்கள் அனைவரும் தமிழர்களின் அடிப்படைக் கோட்பாடுகளான தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கொள்கையில் இன்றுவரை உறுதியோடு இருக்கிறார்கள் என்பதையும் அதற்காக அவர்களும் பல தியாகங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதையும் மறக்கக்கூடாது.

அதேவேளையில், இலங்கை அரச – இராணுவ இயந்திரத்திற்குள்ளிருந்துதான் அவர்கள் செயல்படவேண்டிய இக்கட்டில் உள்ளார்கள் என்பதையும் அதற்குள் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகளையும் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவே, தமிழ்த் தேசியத்தின் அடிப்படை கோட்பாடுகளை நீர்த்துப் போகவிடாமல் தக்கவைத்திருப்பதற்கும், தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை தொடர்ந்தும் உலகுக்கு வெளிப்படுத்துவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைய வேண்டிய தேவை உள்ளது. இதற்காக தமிழர்கள் அனைவரும் உழைக்க வேண்டிய கடமை உள்ளது.

நடைபெறப்போகும் தேர்தலில் யாழ்ப்பாண மற்றும் வவுனியாப் பகுதியில் வாழும் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்புத்தான் தமிழர்கள் இதுவரை காலமும் நடத்திய போராட்டத்தின் நியாயதன்மையைப் போருக்குப்பின்னும் உணர்த்திய வரலாற்றுத் தீர்ப்பாக இருக்கப்போகிறது.

அந்த வகையில், தேர்தலில் வாக்களிக்கப் போகும் தமிழர்கள் தமது வரலாற்றுக் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

சி.பி.ஐ. தொடங்கிய திமிங்கில வேட்டை...

முன்னாள் மத்திய அமைச்சர் - அந்த அரசியல் குடும்பம்!
சி.பி.ஐ. தொடங்கிய திமிங்கில வேட்டை...

''திமிங்கிலங்களை கடலில் பார்த்திருக்கிறோம். ஆனால்... தொடர்ந்து எங்களுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் துறைமுகத் திலேயே இப்போது பார்த்துவிட்டோம்...'' - தங்கள் பிடிக்கு வந்துள்ள சென்னை, தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகங்களின் முன்னாள் தலைவர் சுரேஷ் பற்றி, சி.பி.ஐ. அதிகாரிகள் புருவம் உயர்த்திச் சொல்கிறார்கள் இப்படி!

''செல்வாக்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை விரல் சொடுக்கும் நேரத்தில் சந்தித்து பற்பல காரியங்கள் முடிப் பவர்!'' என சுட்டிக் காட்டப்படும் சுரேஷ், சி.பி.ஐ. வலையில் இப்படி வசமாகச் சிக்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சுரேஷ் மீது சி.பி.ஐ-யின் கரங்கள் நீளக் காரணம், சென்னை துறைமுகத்தில் பல மாதங்களாக நின்றிருந்த பழுத டைந்த கப்பல்தான். ஆனால், சுரேஷைப் பற்றி விசாரிக்கப் போனால்... அது கடலின் ஆழத்தை விடவும் அதிகமாக இருக்கும் போல!

தாதா வைத்த ஆப்பு!

''அண்ணா நகர் ஆளுங்கட்சிப் பிரமுகருக்கு வேண்டப்பட்ட தாதா ஒருவர்தான் சுரேஷுக்கு இவ்வளவு பெரிய ஆப்பு வைத்து விட்டார்!'' என்று சொல்ல ஆரம்பித்தார்கள் சென்னை துறை முகத்தில் அன்றாடம் நடமாடும் சில

ஏஜென்ட்கள். ''சி.பி.ஐ. தோண்ட ஆரம்பித்திருக்கும் கப்பல் விவகாரம் தொடர்பாக... நாங்கள் பல முறை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் புகார் எழுதிப் போட்டோம். இத்தனை நாளும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, டெல்லியில் ஆளும் காங்கிரஸ் அரசின் பார்வை மாறத் தொடங்கியிருப்பதால், ஒருவழியாக சுரேஷ் மீது சி.பி.ஐ. பாய்ந்துள்ளது. முதல் கட்டமாக பழைய புகார் ஒன்றைத் தூசி தட்டி எடுத்திருக்கிறார்கள்!'' என்று கூறி... தற்போதைய ரெய்டுக்கு அடிபோட்ட விவகாரத்தைக் கூறுகிறார்கள்.

''சிங்கப்பூர் நிறுவனத்துக்கு சொந்தமான 'எம்.வி. சேன் ஜியோர்ஜியோ' (MV SAN GIORGIO) என்ற கப்பல் தென்னாப்பிரிக்காவிலிருந்து தேக்கு மரக்கட்டைகளை ஏற்றி வந்தது. அதில் இருந்த கட்டைகள் இந்தியர் ஒருவருக்கு சொந்தமானது. கப்பல், வரும் வழியிலேயே பழுதாகிவிட்டது. 'அந்த கப்பல் மேலும் பயணம் செய்யக் கூடாது. ஏதாவது துறைமுகத்தில் நிறுத்தி, கட்டைகளை இறக்கி விட வேண்டும்' என்று தகவல் வர... முதலில் அந்த கப்பலின் அதிபர் குஜராத் துறைமுகத்தை அணுகினார். அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடுத்து இந்தியாவின் பல துறைமுகங்களும் அந்த கப்பலுக்கு இடம் தர மறுத்தன.

இந்த நிலையில், சுரேஷ் கொடுத்த யோசனைப்படி அந்தக் கப்பல் அதிபர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். மும்பை நீதிமன்றம் கொடுத்த ஒரு இடைக்கால தீர்ப்பின்படி, சென்னை துறைமுகத்தில் கப்பலை நிறுத்த ரூட் க்ளியரானது. அந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் வந்தவுடன், அந்தக் கப்பலில் இருந்த கட்டைகளை துறைமுகத்துக்குள் இருக்கும் அம்பேத்கர் முனையத்துக்கு முன்பு இறக்கி வைத்து, மூடி வைத்தார்கள். கப்பலுக்கான வாடகை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டு போக, கப்பல் அதிபர் எஸ்கேப் ஆனார். கப்பல் ஊழியர்களும் சென்னை வழியாக அவர வர் நாடுகளுக்குப் போய் விட்டார்கள். கடைசியில், கட்டைகளுக்கு சொந்தக்காரரை கப்பலுக்கான வாடகை கட்ட நிர்ப்பந்தம் செய்தார்கள். இதெல்லாம் பெயரளவுக்குத்தான். ஆனால், நிர்ப்பந்தமெல்லாம் எடுபடவில்லை...'' என மூச்சுவிட்டவர்கள், இந்த கட்டை விவகாரத்தில் பெரிய அரசியல் குடும்பத்தின் தொடர்பு களையும் அவிழ்க்க ஆரம்பித்தனர்.

 

''கப்பல் அதிபர் ஒரு பெரிய தொகையை சுரேஷ் மூலமாக அந்த அரசியல் குடும்பத்துக்கு செட்டில் செய்து விட்டார் என்று துறைமுகக் கழகத்துக்குள் பரபரப்பான பேச்சு எழுந்தது. இன்னொரு பக்கம் தேக்குக் கட்டைகளுக்கு சொந்தக்காரரும் எட்டிப் பார்க்க வில்லை. இது அந்த மூன்றெழுத்து சென்னை தாதாவுக்கு வசதியாகப் போனது. கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டைகளை கடத்த ஆரம்பித்தார். இது வரை ஆயிரம் டன்களுக்கும் மேலான கட்டைகளை அந்த தாதா அப்புறப்படுத்தி விற்று விட்டார். ஒரு கொலை வழக்கு தொடர்பாக தன் தொழிலை மூட்டை கட்டி வைத் திருந்த அவர், மீண்டும் மூத்த அமைச்சரின் தம்பியின் துணையோடு தொழில் செய்ய ஆரம்பித்தார். இதை சுரேஷ் தட்டிக் கேட்க, அந்த தாதாவோ பழுதான கப்பல் அதிபர் பெரிய குடும்பத்துக்குக் கொடுத்த தொகைக்கான கணக்கைக் கேட்க ஆரம்பித்தார். அதாவது, கைமாறிய பணத்தில் சுரேஷ் ஒதுக்கிக்கொண்டது எவ்வளவு என்று புள்ளிவிவர சுத்தமாகக் கணக்கு கேட்டார்.

ஒருகட்டத்தில், குறிப்பிட்ட அரசியல் குடும்பத்துக்கு ஆகாத மற்றொரு குடும்பத்தின் இளைய தலைமுறை மூலமாக விஷயத்தை ஊதினார். இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் பற்றியும் சேர்த்தே பல 'பிட்'டுகளைப் போட்டார். ஏற்கெனவே அந்த முன்னாள் அமைச்சர் மீது காட்டத்தில் இருந்த இந்த குடும்பத்துக்கு, கிடைத்த விவகாரங்கள் வாகான பிடியாக அமைந்துவிட்டன. அவ்வளவுதான்... தேக்கு மரக்கட்டையால் பெரிய குடும்பத்துக்குள் அதிகாரத் தீ பற்றிக் கொண்டது. ஆகாத குடும்பத்தின் ஆசியுடன்தான் சில முக்கிய ஆவணங்கள் சி.பி.ஐ. கைக்குப் போய்ச் சேர்ந்தது!'' என்கிறார்கள் இவர்கள்.

சுரேஷ், துறைமுக துணை பாதுகாப்பு அதிகாரி சின்ஹா, ஹரி அண்ட் கம்பெனி, சிங்கப்பூரை சேர்ந்த ஓலம் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத் தியதாக வழக்குப்பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ. அந்த தாதாவால் சி.பி.ஐ. வளையத்தில் சிக்கிய சுரேஷ், இப்போது தாதாவின் கைங்கர்யங்களை விசாரணை அதி காரிகளிடம் கொட்டித் தீர்க்கலாமா என்ற ஆத்திரத்தில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மலைமலையாய் மர்மங்கள்!

இது ஒரு புறம் என்றால்... ''கப்பல் விவகாரமெல்லாம் ஜுஜுபிதான் சார்... ரெய்டுக்குப் பின்னணியில் எக்கச் சக்க மர்மங்கள் இருக்கின்றன. தோண்டித் துருவிப் பாருங்க சார்...'' என்று சி.பி.ஐ. வட்டாரத்துக்கு தாராளமாக தகவல் உபயம் செய்கிறார்களாம் அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலரே!

''சுரேஷுக்கு ஆளும் தரப்பில் நிறைய தொடர்புகள் இருந்தன. அதனால் துறை ரீதியான சம்பாதிப்புகளை நடத்த அவர் தயங்கவே இல்லை. தூத்துக்குடி துறைமுகத்தின் பொறுப்பு சுரேஷுக்கு வழங்கப்பட்டதும், அங்குள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து சில ஒப்பந்தங்களைப் போட முயற்சித்தார். துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளும் முனையம் அமைப்பதற்கு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கும் அந்த ஒப்பந்தத்துக்கு தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. அதனால், அந்த திட்டத்தை கிடப்பில் போட்டார். அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தால், பலகோடி கைமாறி இருக்கும். துறைமுகத்தில் கப்பலை கொண்டு வந்து நிறுத்துவதற்கான பர்த் அலார்ட்மென்ட் ஒதுக்குவது தொடங்கி, டிராஃபிக் மேனேஜ்மென்ட்டுக்கு ஆட்கள் நியமிப்பது வரை வசூல் மழைதான்.

அதேபோல், இறக்குமதி பொருட்களை கையாளு வதற்கு டெண்டர் விடுவதிலும் நிறைய தப்புத் தண்டாக்கள் நடந்தன. ஆறு மாதங்களுக்கு முன்பு நிலக்கரி இறக்குமதிக்கும், கடல் கடந்த வாணிபத்துக்கும் சென்னை துறைமுகம் டெண்டர் விட்டது. இதில் எழுபது பேர் கலந்து கொண்டார்கள். தலா பத்து லட்சம் ரூபாய் என ஏழு கோடியை துறைமுக பொறுப்புக் கழகத்திடம் கட்டினார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் மத்திய அமைச் சர் நின்ற தொகுதிக்கான தேர்தல் வேலைக்காக அவர் களிடம் பணம் கேட்டிருக்கிறார் சுரேஷ். ஆனால், அப்போதைய சமயத்தில் வெளியான கருத்துக் கணிப்புகளைப் பார்த்துவிட்டு, யாரும் பணம் தர முன்வரவில்லை. ஏற்கெனவே தேர்தல் செலவுக்காக கட்சி நிதி கொடுத்திருந்ததைச் சுட்டிக் காட்டி ஒதுங்கிக் கொண்டார்கள். இதைப் பார்த்து கோபம் அடைந்து, அந்த டெண்டர் அப்படியே கிடப்பில் போடப் பட்டது. இதில் எரிச்சல் அடைந்த சிலரும் சி.பி.ஐ. அதிகாரிகளை அணுகி பலமாகவே பற்ற வைத்தபடி இருக்கிறார்களாம்.

அரசியல்ரீதியாக பலமான சர்ச்சைக்கு ஆளான ஒரு நீர்வழி போக்குவரத்துத் திட்டத்திலும் ஆதாய வேலைகளை நடத்தினார் என்று சி.பி.ஐ-க்கு சுரேஷ் பற்றி புகார் போயிருக்கிறதாம். அந்தத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு கடந்த ஆட்சியின்போதே ரகசிய மாக ஒரு டீமை அமைத்து விசாரணை நடத்தியது. கிடைத்த விவரங்களில் அதிர்ந்துபோயிருந்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், அந்தத் துறைக்கு காங்கிரஸிலிருந்தே அமைச்சரை நியமித்து மேலும் விவரங்களைத் தோண்டியபடி உள்ளது. ஆக, சுரேஷை மையமாக வைத்து அந்த நீர்வழி போக்குவரத்துத் திட்டம் தொடர்பானவர்களையும் மத்திய அரசு பலமாகக் குறி வைக்கும் என்று இப்போது ஹேஷ்யங்கள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.

 

அம்மாவும் சேமிப்புக் கிடங்குகளும்...

சுரேஷ் மீது சி.பி.ஐ. பிடியை இறுக்கி இருக்கும் நிலை யில் நம்மிடம் பேசிய சென்னை துறைமுக ஊழியர்கள் சிலர், ''துறைமுகத்தில் இறக்கு மதியாகும் பொருட்களை வைக்க முக்கியமான இரண்டு சேமிப்புக் கிடங்குகளுக்கு எப்போதும் படுகிராக்கியாக இருக்கும். அதன் வாடகை ஒரு நாளைக்கு சதுர அடிக்கு ஒரு ரூபாய்! மேற்கத்திய பெயர் கொண்ட ஒரு சென்னை ஏஜென்ஸிதான் இப்போது சென்னை துறைமுகத்தில் மிக அதிகமாக நிலக்கரியை இறக்கு மதி செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலக்கரியைத்தான் தமிழக அரசும் கொள்முதல் செய்து கொண்டிருக்கிறது. அந்த ஏஜென்ஸி தொடர்பான அம்மா மீது சுரேஷுக்கு மிகுந்த பயபக்தி உண்டு! சுரேஷ் துறைமுக பொறுப்புக்கழக அலுவலகத்தில் இருந்ததை விட அந்தம்மாவின் பார்வை யில்தான் அதிகம் வளைய வருவார். பல சமயங்களில் மதிய உணவு நேரங்களில் அந்தம்மா பிறப்பிக்கும் கட்டளைகளை இவர் பின்பற்றி பல உத்தரவுகள் போட்டிருக்கிறார். ஒருமுறை, இரவோடு இரவாக இரண்டு சேமிப்புக் கிடங்குகளின் ஓடு வேயப்பட்ட கூரையை சில மர்ம மனிதர்கள் பெயர்த்தெடுத்த விவகாரம் நடந்தது. இதுபற்றி பெயரளவுக்கு ஒரு விசாரணை நடந்து, கடைசியில் ஒரு சிலர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் எடுக்கப்பட்டது. அதேசமயம், 'இந்த கிடங்குகள் பாதுகாப்பு குறைவாக இருப்பதால், இவற்றைப் பயன்படுத்த வருவோர்க்கு வாடகையில் சலுகை' என்று ஒரு அறிவிப்பு வெளியானது. அந்தம்மா தொடர்பான நிலக்கரி ஏஜென்ஸிக்கு 'ஒரு சதுர அடிக்கு ஐம்பது பைசா' என்று பாதி ரேட்டுக்கு வாடகைக்கு அந்த கிடங்குகளைத் தந்துவிட்டார்கள்'' என்று சொல்லி தலை சுற்ற வைக்கிறார்கள்.

வலுவான உறவுகள்!

சுரேஷின் அரசியல் தொடர்புகளை அறிந்திருக்கும் சிலரிடம் பேசினோம். ''ஆளுங்கட்சியின் சகவாசங்களை சுரேஷுக்கு ஏற்படுத்திக் கொடுத்தவரே பொள்ளாச்சி ஏரியாவைச் சேர்ந்த ஒருவர்தான். இதன் பின்னணியில் சுரேஷுக்கு பக்கபலம் காட்டியவர் தமிழகத்தைச் சேர்ந்த பெரிய அமைச்சர் ஒருவர். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்ச மாக அரசியல் சகவாசங்கள் பெருகி, பவர் ஸ்டேஷன்களில் ஒரு இடமான அதிகார வீட்டிலும் சுரேஷ் கொடி நாட்டத் தொடங்கினார். அந்த வீட்டுக்கு சுரேஷ் எப்போது வேண்டுமானாலும் போய் வரலாம். அந்தளவுக்கு செல்வாக்குப் பெற்றிருந்த சுரேஷ், நிலக்கரி கப்பல்கள் வரும்போது அவற்றை இறக்குவதற்கான கான்ட்ராக்ட்டை அந்தக் குடும்பத்தினர் குறிப்பிடுகின்ற ஆட்களுக்கே வழங்கி இருக்கிறார். மத்திய அமைச்சர் ஒருவரின் ஆட்களுக்கும், மாநிலத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கும் சில ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்கும் நிலக்கரியை இறக்கு வதற்கான கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற் கிடையில், தமிழகத்தில் இருக்கும் வடமாநில போலீஸ் அதிகாரிகளிடத்திலும் நட்பு பாராட்டத் தொடங்கினார் சுரேஷ்.

ரெய்டில் நடந்தது என்ன?

சுரேஷின் வீட்டில் ரெய்டு நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''நாங்கள் ரெய்டுக்காக வருவோம் என்பதை சுரேஷ் குடும்பத்தினர் கொஞ்சமும் உணர்ந்திருக்கவில்லை. வீட்டுக்குள் அதிகமாகக் கண்ணில் பட்டது வெளிநாட்டு மளிகைப் பொருட்கள்தான். சமையலுக்கான அரிசி கூட வெளிநாட்டு இறக்குமதியாக இருந்ததுதான் பெரிய ஆச்சர்யம். சில அறைகளில் டின் பீர் பாட்டில்கள் எக்கச்சக்கமாக கிடந்தன. பீரோவில் மூன்று கிலோ தங்கமும் 14 லட்ச ரூபாய் பணமும் இருந்தது. கூடவே 6,500 அமெரிக்க டாலரும் கிடைத்தது. எங்களின் அடுத்தகட்ட விசாரணையில் தி.நகர் ஏரியாவில் இருந்த வங்கி லாக்கர் ஒன்றில் மட்டுமே ஒரு கிலோ தங்கம் எடுக்கப்பட்டது. பெங்களூருவில் ஒரு வீடு, சூளைமேட்டில் இரண்டு கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வீடு, தூத்துக்குடியில் ஏகபோக நிலபுலன்கள் என சுரேஷின் சொத்துகள் எங்களை மலைக்க வைத்து விட்டன. சுரேஷ் வீட்டில் இருந்த தங்கத்தை பரிசோதிக்க நாங்கள் ஒரு அப்ரைஸரை அழைத்துப் போயிருந்தோம். சுரேஷ் வீட்டில் இருந்த வெங்கடாஜலபதி படத்தைக் காட்டிய அவர், 'இந்த ஓவியம் தங்கத்தாலேயே வரையப்பட்டிருக்கிறது' எனச் சொன்னதைக் கேட்டு, நாங்கள் வாய் பிளக்காத குறைதான். சுரேஷ் வீட்டில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு தொப்பி எங்களை ஆச்சர்யத்தோடு பார்க்க வைத்தது. அதோடு, வீடு முழுக்க ஆயிரக்கணக்கான சென்ட் பாட்டில்களும் இறைந்து கிடந்தன. தினமும் சென்ட் ஊற்றிக் குளித்தால்கூட, அந்த பாட்டில்கள் முடிய பல வாரங்கள் பிடிக்கும். வெளிநாட்டு சென்ட் பாட்டில்களை ஏன் இந்தளவுக்கு சுரேஷ் வாங்கி வைத்திருந்தார் என்பது போகப் போகத் தெரியத்தானே போகிறது!'' எனச் சொன்னார்கள்.

குவைத்தில் இருக்கும் பிசினஸ் புள்ளி, தமிழகத்து கவிஞர் ஆகிய இருவரும் சுரேஷுக்கு மிக நெருக்கமான நண்பர்கள். அவர்களின் மூலமாக அறிமுகமான அரசியல் நண்பர்களுக்கு முதல் சந்திப்பிலேயே மொத்தமாக தொகையை தட்டிவிட்டு திகைக்க வைக்கிற காரியங்களும் நடந்துள்ளன!'' எனச் சொல்லி அதிரடிக்கிறார்கள் அந்த விஷயப்புள்ளிகள்.

தில்லுமுல்லு முன்னாள்!

''சுரேஷிடம் சி.பி.ஐ. மேற்கொள்ளும் விசாரணை சரியான பாதையில் சென்றால் குறிப்பிட்ட ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் வசமாக சிக்குவார்!'' என்று வட சென்னை கட்சிப் பிரமுகர்களே வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் வாயையும் கிளறினோம். ''இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கண்டெய்னர் கையாளும் தளம் சென்னை துறைமுகத்தை ஒட்டி இருக்கிறது. கண்டெய்னர்களை கப்பலில் ஏற்றி இறக்க முப்பது வருட குத்தகையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் எடுத்திருக்கிறது. இதற்கு போட்டியாக வளைகுடா நாட்டு நிறுவனம் ஒன்று இந்தியாவுக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலிய நிறுவனத்தின் குத்தகையை கேன்சல் செய்ய இந்திய அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் முதலில் வளைக்கத் தொடங்கியது அந்த வளைகுடா நிறுவனம். எப்படியோ சுரேஷின் அருமைகளைத் தெரிந்து கொண்டு, அந்நிறுவன அதிகாரி கள் சென்னைக்கு பறந்து வந்தார்கள்.

அப்போது மத்திய அமைச்சராக இருந்த அரசியல் புள்ளி, அந்த நிறுவனத்தினரை சிங்கப்பூருக்குப் போகச் சொன் னார். அவர்கள் போன இடத்துக்கு பெரிய குடும்பத்துப் பெண்மணியும் அவருடைய வாரிசும் சிங்கப்பூர் சென் றார்கள். அங்கே என்ன பேசினார்களோ... அடுத்த சில நாட்களில் சென்னை துறைமுக பொறுப்புக்கழகம் ஆஸ்திரேலியா நிறுவனத்துக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கியது. மத்திய அமைச்சரும் இதுகுறித்து ஆர்வம் காட்டினார். ஒரு வழியாக அந்த நிறுவனம் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேற, வளைகுடா நிறுவனம் கண்டெய்னர்களை கையாளத் தொடங்கியது. இந்த விவகாரத்தில், துறைமுகத்துக்கு வருடத்துக்கு நானூறு முதல் எண்ணூறு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்னொரு விஷயம் என்னவென்றால்... சுரேஷும், அந்த மத்திய அமைச்சரும் பதவியில் இருந்த வரை... துறை முக பொறுப்புக் கழகத்தின் அறிவிக்கப்படாத தலைமை அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் சொகுசான ஒரு கடைக்குப் பின்னால் இருக்கும் பங்களாதான். அந்த அலுவலகத்துக்குள் சி.பி.ஐ. தாமதமின்றி புகுந்தால், இன்னும் பலே பின்னணிகள் தெளிவாகும்!'' என்றார்கள்.

- வி.அர்ஜுன், எஸ்.சரவணகுமார், 
இரா.சரவணன், பி.ஆண்டனிராஜ்
   
     
 

 

நன்றி:ஜூனியர் விகடன்

StumbleUpon.com Read more...

அன்பால் அம்மி நகர்ந்தாலும் நகரும்:ஆனால்?:பிரபாகரன் பேசுகிறார்


                   ஸ்ரீஅரபிந்தோ அவர்களின் எழுத்துக்களில் இதனைப் படித்தேன்: ""ஏனைய தேசங்கள் போராட்டங்களாலும், யுத்தங் களாலும், வேதனைகளாலும், இரத்தக் கண்ணீராலும் வென்றவற் றை நாங்கள் பெரும் தியாகங்கள் செய்யாமல் பத்திரிகையாளர் களின் பேனா மையைக் கொண்டும், கோரிக்கை மனுக்கள் எழுதத் தெரிந்தவர்களின் உதவியுடனும், மேடைப் பேச்சாளர்களின் திற மையைக் கொண்டும் சுலபமாகச் சாதிக்க அனுமதிக்கப்படுவோம் என்று எண்ணுவது வேடிக்கையும் வீண் கனவும் ஆகும்''.

பிரசவ வலியின்றி பிள்ளை பிறக்குமா என்ன? சும்மா கிடைப்பதற்கு சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா? சுக்கு மிளகு கூட இன்று சும்மா கிடைக்காது!

ஈழம் மலர வேறொன்றும் நடக்க வேண்டுமென கடந்த இதழில் நிறைவு செய்திருந்தோம். நீதியான தீர்வொன்று உறுதி செய்யப்படும் வரை ஆயுதம் தாங்கிய கொரில்லா போராட்ட மொன்று அங்கு தேவை. துணிவானதொரு போராட்ட இயக்கமும் நம்பகமான தலைமையும் களத்தில் இல்லாதவரை "எல்லை கடந்த தமிழீழ அரசு' என்ற யோசனையெல்லாம் கடைசியில் தலாய்லாமா அவர்களைப் போல் பயணங்கள் செய்து சொற்பொழிவுகளும் கருத் தரங்க உரைகளும் ஆற்றிக் கொண்டிருப்பதாகத்தான் முடியும்.

ஸ்ரீஅரபிந்தோ அவர்களைப் போல் வேலுப்பிள்ளை பிரபாகரனும் தெளிவாக இருந்தார். சற்றேறக்குறைய அரபிந்தரின் வார்த்தைகளையே வெளிப்படுத்தினார்: ""தியாகங்கள் இல்லாமல் விடுதலை வருமென்டு நினைப்பது வெறும் கனவு. மற்ற சமூகங்க ளெல்லாம் பெரும் விலை கொடுத்து பெற்ற சுதந்திரத் தை சிங்களவன் எமக்கு இலவசமாகத் தருவான் என்று நான் நம்ப வில்லை'' என்றார்.

நேர்காணலின் நடுவழியே அறையில் ஓரமாக வந்து உட்கார்ந்து கொண்ட காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் இருவரையும் ஓரக்கண்ணால் பார்த்து குறும்புப் புன்னகை உதிர்த்துக் கொண்டே தொடர்ந்தார்: ""எங்கட பழமொழிகள் உங்களுக்குத் தெரியும் தானே...? மயிலே மயிலே இறகு போடென்டா போடாது. அன்பா சொல்லி அம்மி நகராது. அப்படியே மயில் இறகு போட்டு, அம்மி நகர்ந் தாலும் கூட சிங்களவன் தமிழ் மக்க ளுக்கு தானாக முன்வந்து அரசியல் உரிமைகள் தரமாட்டான்'' என்றார்.

குறும்பு, குழந்தைத்தனம், இயல் பான நகைச்சுவை, தன்னைப் பற்றின சுய பிரக்ஞையே இல்லாத எளிமை, தெளிவு, தீர்க்கம், உறுதி இவை யாவுமானதான ஓர் அற்புத ஆளுமையாகவே அவரைக் காணமுடிந்தது. முன்பொரு முறை நான் குறிப் பிட்டது போல் தமிழ் வரலாற் றில் ஆறுபடைகளை கட்டி யெழுப்பிய இந்த அதிசய மனிதர். ""ஃபாதர்... ஏ.ஆர்.ரஹ் மானின் கண்ணாமூச்சி ஏனடா பாட்டு கேட்டினிங்களா? என்னென்டு மியூசிக் போட்டிருக்கார்... சரியான திறமைக்காரன்'' என்று கபடும் கசடுமின்றி வியக்கிற விடலைப் பிள்ளையாகவும் இருந்தார்.

மதிய உணவின் போது இசைஞானி இளையராஜா அவர்களுடன் சிம்பொனியில் திருவாசகம் செய்து கொண்டிருப்பது பற்றிக் கூறினேன். ""ஆளெ (இளைய ராஜாவை) இஞ்செ கூட்டிக்கொண்டு வாருங்களேன்... தமிழ்ச்செல்வன் எல்லா ஒழுங்குகளையும் செய்து தருவார். அவரின்டெ பாட்டுகளால்தானே ஒரு தலை முறைக்கு தமிழ்மொழி மேல் ஈர்ப்பு அதிகமாச்சுது... நீங்க எப்ப வேண்டுமென்டாலும் வரலாம். கிளிநொச்சியிலெ விஸ்தாரமான திறந்தவெளி அரங்கெல்லாம் இருக்குது. எங்கட சனமும் பெரிய இசைக்கச்சேரி பார்க்கலாம் தானே... திருவாசகம் செய்யிறதென்டா முல்லைத்தீவு அம்மன் கோயில் அருகாலெ செய்யலாம்...'' என்று பேசிக் கொண்டே இருந்தார்.

இந்த முல்லைத்தீவு அம்மன் கோயில் ஈழத்தமிழ் வரலாற்றின் அதி உயர் இரகசியங்கள் சிலவற்றிற்கு சாட்சியாய் இருந்திருக்கக்கூடும். ஏனென்றால் மே-15 அன்று முல்லைத்தீவு களத்தை விட்டு வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது முதல்வட்ட தற்கொலைப் படையணியும் இந்த முல்லைத்தீவு அம்மன் கோயில் வழியாகத்தான் வெளியேறும் திட்டம் வைத்திருந்ததாக மிக மிக நம்பகமானதோர் தகவல் கடந்த வாரம் கிடைத்தது. அதுதொடர்பான விபரங்களை பின்னர் நிச்சயம் எழுதுவேன்.

நாம் சொல்லி மயில் இறகு போட்டு, அன்பால் அம்மி நகர்ந்தாலும் கூட சிங்களப் பேரினவாதம் தமிழருக்கு நீதியானதொரு தீர்வினைத் தராது என வேலுப்பிள்ளை பிரபாகரன் நேர்காணலில் கூறிய காலகட்டம் அமைதிப் பேச்சுவார்த் தைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டம்: ""அப்படியென்றால் ஏன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் போனீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர் கூறினார்: ""புலிகள் யுத்த வெறியர்களென்ற பார்வை உலக நாடுகளுக்கு இருக்கிறது. நாங்களும் சமாதானத்தைத்தான் விரும்புகிறோம். இப்போது கூட பேச்சுவார்த்தை என்று கூறிக் கொண்டே இலங்கை அரசு பெருமளவு ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் பலவற்றோடு ராணுவ ஒப்பந்தங்கள் செய்து எங்களை கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிர் கால ராணுவ முற்றுகைக்குள் நகர்த்திக் கொண்டி ருக்கிறது. எனினும் நாங்கள் சமாதானத்தையே விரும்புகிறோம். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனையைத் தீர்க்க முடியுமென்றால் அதையே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் போர் வெறியர்களல்ல என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லவும், சிங்களப் பேரினவாத மனோபாவம்தான் தமிழரின் அரசியல் சிக்கலுக்கு அடிப்படை காரண மென்பதை உலகம் புரிந்து கொள்கிற நிலையை உருவாக்கவும் வேண்டியே பேச்சுவார்த்தைகளில் தொடர்கிறோம்'' என்றார்.

அவரது பதில் உருவாக்கிய தருணத்தைப் பயன்படுத்தி வன்னிப் பகுதிக்கு நான் பயணித்து அவரிடம் நான் கூறவேண்டுமென்று விரும்பி, ஆனால் மனம் திறந்து சொல்லலாமா என தயங்கி, குழம்பி நின்ற ஓர் விஷயத்தை படபடவென்று சொல்லத் தொடங்கினேன். அது என்னவென்ற விபரத்தையும் பின்னர் எழுதுவேன்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தெளிவான தீர்க்கதரிசன பார்வையை வரலாறு இன்று நிரூபித்திருக்கிறது. ""சிங்களப் பேரினவாதம் தமிழருக்கு எதுவும் தராது'' என்ற அவரது பார்வை யை ராஜபக்சே அரசு வெள்ளிடை மலையாய் உலகிற்கு இன்று காட்டி நிற்கிறது. உலக நாடு களினது உதவியோடு புலிகளின் ராணுவ பலத்தை நிர்மூலமாக்கி இன அழித்தலையும் செய்து முடித்த பின், ""அரசியல் தீர்வா? எதற்கு..? பிரச்சனைதான் முடிந்து போயிற்றே...'' என்ற ரீதியில் பேசுகிறார் ராஜபக்சே. இந்தியா பேசி வந்த கதைக்குதவாத 13-வது சட்ட திருத்தம் பற்றிகூட இப்போது கப்சிப். ஆனால் இந்தியாவோ ராஜபக்சே கேட்காமலேயே ஐநூறு கோடி ஆயிரம் கோடி என அள்ளிக் கொ டுக்கிறது, கேள்விகள் எதுவும் கேட்காமல். இப்போது புரிகிறதா ""புலிகளின் ராணுவ பலம்தான் தமிழருக்கான அரசியல் பலம்'' என்று நம்பியவர்கள் எவ்வளவு சரியாகக் கணித்திருந்தார்களென்று?

எனவேதான் எல்லை கடந்த தமிழீழ அரசெல்லாம் அமைத்தாலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறினாலும், இலங்கை பொருளாதார ரீதியாகப் பலவீனப்பட்டாலும், உலக கருத்து தமிழீழத்திற்கு ஆதரவாக மாறினாலும் அங்கு களத்தில் உறுதியான தலைமை இல்லையென்றால் எதுவும் வராது. அந்தத் தலைமையை புலிகள்தான் தரவேண்டுமா, வேறு ஜனநாயக சக்திகள் தரக்கூடாதா என்ற நியாயமான கேள்வியை பலர் முன் வைக்கலாம். கேள்வி நியாயம்தான். ஆனால் முப்பது ஆண்டுகால விடுதலைப் போராட்டம் ஒன்றரை லட்ச மக்களின் உயிர்த் தியாகம், இன அழித்தல் வரை வந்த பேரழிவுகள் இவற்றிற்கெல்லாம் பிறகு... அதுவும் முல்லைத்தீவில் பெருங் கொடுமை நடந்து நூறு நாட்கள் கூட ஆக வில்லை. கேவலம் யாழ்ப்பாண மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்காய் ராஜபக்சேவிடம் மண்டியிடுகிறார்களே அங்கிருக்கும் தமிழ் கட்சிகள்- தலைவர்கள்... எச்சில் பொறுக்கித் தின்னும் தெருநாய்களுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? மிகக்குறைந்தபட்சம் ""கொலை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களையும் விடுவியுங்கள், நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்'' என்று சொல்கிற மிகமிகமிகமிக குறைந்தபட்ச ஒழுக்கம் கூட இல்லாத அந்த தமிழ் அரசியல் கட்சிகளை, தலைவர்களை என்னென்று சொல்வது? எனவேதான் விதைநெல்களாய் எஞ்சியிருக்கிற தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் ஒருங்கிணை வது வரலாற்றுக் கட்டாயமாகிறது. அவர்கள் இல்லாமல் தமிழர்களுக்கு மிகக்குறைந்தபட்ச அரசியல் தீர்வுகூட கிட்டுமென்று நான் நம்பவில்லை.

அருட்தந்தை ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கலாமா என்று அன்பர்கள், அடியவர்கள் அங்கலாய்த்துக் கேட்க லாம். நான் நக்கீரனில் எழுதுவது அருட்தந்தையாய் மட்டுமல்ல... ஓர் அரசியல் மாணவனாயும், அதற்கும் மேலாய் தமிழனாயும், உண்மையில் தமிழருக்கு அறிவுரை சொல்கிற ஒழுக்க யோக்யதைகள் அனைத்தையும் இந்த உலகம் முற்றாக இழந்து நிற்கிறது. மானுடத்தின் பொது விழுமியங்கள், அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள், அனைத்துலக யுத்த விதிகள் அனைத்தும் உலக நாடுகளின் மேற்பார்வையிலேயே மீறப்பட்டும், அதே உலக நாடுகளின் ஆயுத, பொருளாதார, ராஜதந்திர உதவிகளுடனும் தமிழ் இன அழித்தல் மிகவும் கொடூரமான உன்மத்தத்தோடு நடத்தப்பட்டது.

தமிழர்களுக்கு அறிவுரை சொல்ல உலகத்திற்கு இனி என்ன தார்மீகம் இருக்கிறது? உண்மையில் பாதாளத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட தமிழர்கள் இலங்கை மீது -இந்த உலகின் மீது இதுவரை இல்லாத அளவிலானதொரு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டால்கூட -அப்படி நடக்கக்கூடாதென நான் பிரார்த்திக்கிறேன் -ஆனால் அப்படி நடந்தால்கூட அதனை கண்டிக்கிற ஒழுக்க தார் மீகத்தை இந்த உலகம் இழந்து நிற்கிறதென்பதுதான் உண்மை. முல்லைத் தீவெங்கும் உடைந்தும் கைவிடப்பட்டும் சிதறிக்கிடக்கிற புலிகளின் பழைய படைக்கருவிகள் மௌனமாய் காற்றுவெளிக்குச் சொல்கின்றன. ""புலிகளின் ராணுவ பலம்தான் தமிழரின் அரசியல் உரிமைகளுக்கு கடைசியான உத்தரவாதமாய் இருந்தன''.

"மீண்டும் தமிழீழ எழுச்சி சாத்தியமா?' என நீங்கள் கேட்கலாம். இன அழித்தலுக்கு நீதியும், குறைந்தபட்சம் தன்னாட்சி உரிமையென்ற அரசியல்தீர்வும் வழங்கப்படாத வரை தமிழீழத்திற்கான எழுச்சிக்கு மரணமில்லை. 

(நினைவுகள் சுழலும்)

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP