சமீபத்திய பதிவுகள்

லவ் ஜிகாத் உண்மையா?

>> Monday, October 26, 2009


StumbleUpon.com Read more...

முழு நிலவு... திகில் இரவு! பரப்பிக்குளம் பரவசம்

 

பரப்பிக்குளம் பரவசம்!

நிறைய த்ரில்... நிறைய திகில் கலந்த சாகசப் பயணம் செல்ல ஆசையா?

'ஃபுல்மூன் சென்சஸ்' சரியான சாய்ஸ்! பரம்பிக் குளத்தின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு பௌர்ணமி இரவு முழுக்கத் தங்கலாம். ஆனால், அதற்கு உங்களுக்கு ரொம்பவே தில் தேவைப்படும்!டாப் ஸ்லிப்பில் இருந்து 30 கி.மீ. தூரத்தில்இருக் கிறது பரம்பிக்குளம். இன்னமும் வெளியுலகம் அறியாத ரகசியங்களைப் பதுக்கிவைத்திருக்கும் வனப் பகுதி. டாப் ஸ்லிப் தாண்டியதுமே குளிர் டிகிரி டிகிரியாய் எகிறியடிக்கிறது.

குறுகலான மலைப் பாதையெங்கும் ஓங்கி உயர்ந்த தேக்கு மரங்கள். ஆனைப்பாடி எகோ சென்டர் அலுவலகத்தில் வரவேற்கிறார் வன இலாகா அதிகாரி சஞ்சயன் குமார் ஐ.எஃப்.எஸ். வனக் குடில்களில் சின்ன ஓய்வுக்குப் பிறகு தொடர்கிறது பயணம். வனத் துறை ஜீப் செல்லும் வழியெல்லாம் மூங்கில் மரங்கள். ஆங்காங்கே மேய்ந்துகொண்டு இருக் கின்றன மான் கூட்டங் கள். சாலையைக் கடக்கின்றன மயில்கள். கும்பலாக நின்று ஜீப்பை முறைக்கின்றன காட்டெருமைகள். காட்டெருமைதான் பரம்பிக்குளம் வனச் சின்னம்.

ஜீப் ஓரிடத்தில் நிற்க, சில நிமிடங்கள் நடைப் பயணம். அச்சமூட்டுகிறது வன அமைதி. தூரத்தில் எங்கெங்கோ பறவைச் சத்தங்கள். சிறிது தூரத்தில் காடு விலகிக் கண் முன் விரிகிறது பெரிய ஏரி. கரை யோரம் காத்திருக்கிறது மூங்கில் தோணி. அரை மணி நேர ட்ரிப். லைஃப் ஜாக்கெட் கட்டாயம். ஏரித் தண்ணீரை மூங்கில் கட்டை கிழிக்கும் 'ப்ளக் ப்ளக்' சத்தம் மட்டுமே. தூரத்துக் கரையில் ஒரு கறுப்பு முதலை இளம் வெயிலில் சன்பாத் எடுத்துக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் மான்கள் கூட்டமாகத் தண்ணீர் குடிக்கின்றன.

ஏரியில் இருந்து ஒரு மணி நேரம் மோட்டார் போட்டில் தண்ணீரைக் கிழித்தால், ஏரிக்கு நடுவே 4 சதுர கி.மீ. பரந்துகிடக்கிறது பறவைக்கூடு தீவு. தண்ணீர் மட்டம் எவ்வளவு உயர்ந்தாலும் அந்தப் பகுதி மட்டும் மூழ்காதாம். வேம்பு, சந்தனம், எட்டி மரங்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பகல் வெளிச்சத்தில் இந்தச் சங்கதிகளை முடித் தால், நிலா வெளிச்சம் வரவேற்கிறது ஃபுல் மூன் சென்சசுக்கு!

ஜொலிக்கும் முழு நிலவு வெளிச்சத்தில் காட்டை யும், வன விலங்குகளையும் கொஞ்சம் உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் மர வீட்டில் தங்கி ரசிப்பது தான் ஃபுல் மூன் சென்சஸ். அந்த மர வீட்டை அடைய எட்டு கிலோ மீட்டர் நடந்துதான் காட்டின் மையப் பகுதியை அடைய வேண்டும். இரவு உணவை பார்சல் எடுத்துக்கொள்ள வேண் டும். இரண்டு வழிகாட்டிகள், ஒரு பாதுகாவலர் உடன் வருவார்கள்.

ஒரு சின்ன ஏரிக்கரையில் 20 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது அந்த மரக் குடில். குறுகலான மரப்படிகள், வீட்டைச் சுற்றி நடக்க நடைபாதை. வெளிச்சத்தைக் கண்டால் விலங்கு கள் ஓடிவிடும் என்பதால் மின் இணைப்பு கிடையாது. குடிலெங்கும் வெளவால்களின் வீச்சம். குடிலில் இருக்கும்போது மூச்சைக்கூட அடக்கித் தான் விட வேண்டியிருக்கும். சத்தம் காட்டினால் விலங்குகள் சுதாரித்து காட்டுக்குள் மறைந்து விடும்.

மாலை 6 மணி... மங்கிய வெளிச்சத்தில் நான் கைந்து உருவங்கள் அசைந்தன. செந்நாய்க் கூட்டம் இறந்த காட்டெருமையைக் கூறு போட்டுக் கொண்டு இருந்தன. கிட்டத்தட்ட நரியைப் போல இருக்கும் இந்தச் செந்நாய்கள் மான் குட்டிகளைத் துரத்தி வேட்டையாடுமாம்.

இரவு 8.20 மணி... இப்போது வந்தவை சாம்பர் மான்கள். இவை கொஞ்சம் அசமந்த டைப். நம்மைப் பார்த்தால், 'யார்றா இவன்?' என்று நின்று யோசிக்கின்றன. இந்தச் 'சுறுசுறுப்பினாலேயே' புலிகளுக்கு வேலைவைக்காமல் தானாக மாட்டிக்கொண்டு உயிரைவிடும் பாவப்பட்ட ஜீவன்கள்!

இரவு 10.50 மணி... ''தூக்கத்துல அசந்திருக்கும்போது படியைப் பிராண்டுற சத்தம் கேட்டா, கீழே இறங்கிப் போகாதீங்க. சமயங்கள்ல கரடி எதுனா ஏறிக்கிட்டு இருக்கும்!'' என்று கிலி ஏற்றினார் பாதுகாவலர். அவரே பிறகு, ''கவலைப்படாதீங்க. டார்ச் லைட்டை முகத்தில் அடிச்சா பயந்து ஓடிரும்!'' என்று உயிர் பயம் நீக்கினார்.

இரவு 11.05 மணி... 'உஸ்... உஸ்...' எனச் சீறும் சத்தம் கேட்டது. ''ஏதாவது ராஜநாகம் இரையைச் சாப்பிட்டுட்டு இருக்கும். அது ஜீரணமாகாம உடம்பைச் சுத்தி முறுக்கிட்டு இருக்கும்'' என்றார் வழி காட்டி.

இரவு 12.15 மணி... ஏதோ வாசனையை முகர்ந்து பரபரப்பான வழிகாட்டிகள் நம்மை அலர்ட் ஆக்கினார்கள். சில நிமிடங்களில் புள்ளிமான்கள் விநோத சத்தம் எழுப்பிக் கலைந்து ஓடின. ''வேட்டைக்காரன் வந்துட்டு இருக்கான்!'' என்றார்கள். அடுத்த நொடி காட்டையே அதிரச் செய்யும் உறுமல். புலி! ஆர்வம், சிலிர்ப்பு, பயத்தோடு எட்டிப் பார்த்தோம். இருட்டில் சின்னச் சின்னச் சலனங்களைத் தொடர்ந்து... திடீரென மழை சடசடக்க... புலி காட்டுக்குள் பதுங்கியது.

இரவு 12.55 மணி... மழை ஓய்ந்த நேரம் மூங்கில்கள் உடையும் சத்தம். ''கொம்பன்!'' என்று காது விறைத்தார்கள் வழிகாட்டிகள். புதரை விலக்கியபடி முன்னேறியது ஒற்றைக் கொம்பன் அல்ல... 10 கொம்பன்கள். நனைந்த கறுப்பு நிறத்தில், புஷ்டியாக, கம்பீரமான யானைகள். அதன் ஒவ் வோர் அடிக்கும் அதிர்ந்து அடங்கு கிறது காடு!

இரவு 2.10 மணி... தூக்கம் கண்களை அழுத்தியபோது மெள்ள முதுகைச் சுரண்டினார்கள் வழிகாட்டிகள். கொஞ்சம் பார்வையைக் கூர்மையாக்கிப் பார்த்தால் சிறுத்தை ஒன்று தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தது. திடீரென காது விடைத்த சிறுத்தை சடாரெனப் பாய்ந்து புதருக்குள் பதுங்கிவிட்டது. ''நம்ம வியர்வை வாசனையை உணர்ந்திருக்கும். அதான் ஓடிருச்சு!'' என்றார்கள். அதிகாலையில் அடிவாரம் திரும்பிய பிறகும் காதுக்குள் பிளிறல், உறுமல் கர்ஜனைகள். ஆயுளுக்கும் மறக்காது அந்த ஓர் இரவு!

வனவாச ட்ரிப் டிப்ஸ்!

முதல் நாள் நண்பகல் 12 மணி முதல் மறுநாள் 12 மணி வரை ஒரு ஜோடிக்கு ரூ.4,000. சீஸன் இல்லாத நாட்களில் ரூ.3,500. தங்குமிடம், உணவு, வழிகாட்டிகள், வாகனம் என்று அத்தனை செலவுகளும் இதில் அடங்கும்.

மது, புகை பிடிக்க அனுமதி கிடையாது. பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை.

காட்டில் சத்தமாகப் பேசவோ, பாடவோ கூடாது. சிவப்பு, மஞ்சள் வண்ண ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது.

பொள்ளாச்சியில் இருந்து காலை 6.15 மணிக்கு பரம்பிக்குளம் பேருந்து கிளம்பும். அடுத்த பேருந்துக்கு நண்பகல் 3.15 மணி வரை காத்திருக்க வேண்டும். திட்டமிட்டுக் கிளம்புங்கள்!

 
source:vikatan
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சீனாவில் ஆபாச இணையதளம் மூடல்

சீனாவில் செயல்படும் இணையத்தில்ஆபாச தளங்களைஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 44,000 ஆபாச தளங்களுக்குதடைவிதித்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்இதுதொடர்பாக கடந்த ஆண்டில் 1,911 பேருக்கு அபராதம்விதிக்கப்பட்டுள்ளதாகவும், 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்அந்நாட்டில் நடந்த தேசிய தொலை உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில்தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபாச இணையதளங்களை தடை செய்யும் பணிதொடரும் என அந்நாட்டின் மக்கள் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது ஆபாசஇணையங்களை முடக்கும் பணியில் சீன அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும்தகவல்கள் தெரிவிக்கின்றன

source:dinamani
-- 
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கடத்தப்பட்ட கால்பந்து வீரர்கள் 10 பேர் சுட்டுக்கொலை


கொலம்பியாவில் 2 வாரங்களுக்கு முன் கடத்தப்பட்ட கால்பந்து வீரர்கள் 10 பேர் சுட்டுக்கொலை
போகாடா, அக். 26-
 
தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடு கொலம்பியா. கடந்த 11-ந்தேதி இந்நாட்டில் உள்ள லாஸ் மேனி செரோஸ்- பெனாட் அணிகள் கால்பந்து போட்டியில் மோதின.
 
அப்போது விளையாடிக் கொண்டிருந்த ஒரு அணி வீரர்களை அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் கடத்தி சென்றனர்.எல்.எல்.இன் என்ற கொரில்லா அமைப்பு அவர்களை கடத்தி சென்றதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் கடத்தப்பட்ட கால்பந்து வீரர்களின் 10 பேர் உடல்கள் வெனிசூலா எல்லையில் கிடந்தன. அவர்களின் உடல்களின் பல இடங்களில் குண்டு காயங்கள் இருந்தன.
 
அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதில் ஒரு வீரர் மட்டும் உயிர் பிழைத்து இருக்கிறார். கால்பந்து வீரர்கள் கடத்தி சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

source:maalaimalar

www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

யார் துரோகி ? -ஜெகத் காச்பருக்கு கேள்விகள்

யார் துரோகி ? - நடேசனின் கேள்வி கட்டுரை

அருட்தந்தை  ஜெகத் கஸ்பாருக்கும்  அதிர்வு தளத்திற்குமான   அறிக்கை சர்ச்சையில்,  நமக்கு கீழ் கண்ட சந்தேகங்கள் வருகின்றன . அதை இங்கே கேள்வி கட்டுரையாக எழுதுகிறேன் .


ஜெகத் காச்பருக்கு நான் வைக்கும் கேள்விகள் :

உங்களின் இந்த சர்ச்சையின் நோக்கம் நீங்கள் எழுதும் தொடருக்கான பரபரப்பை கூட்டுவதா ? எனென்றால் நீங்கள் உங்கள் பதிலை அல்லது உங்களுது எந்த விளக்கத்தையும்  தொடரில் மட்டுமே எழுதுகிறீர்கள் .


உங்களுக்கு வியாபார புத்தி அல்லது பணம் சம்பாதிப்பது நோக்கம்  இல்லையென்றால்  முள்ளிவைக்காளில் என்ன நடந்தது என்பதை ஒரே நாளில் அறிக்கையாக கொடுக்க வேண்டியதுதானே ?


உங்களிடம் நேரிடையாக பேசிய  தொழில் நுட்ப துறை  நண்பர்களிடம் (பல பெயர்கள் உள்ளது) நீங்கள்,  தமிழ் உணர்வாளர்கலால்தான் ஈழம் அழிந்தது என்று பேசினீர்கள் (முள்ளிவைகால் சம்பவத்திற்கு பின்னால் ) அதில் நீங்கள் தா பாண்டியனையும் சேர்த்து பேசினீர்கள்.  இப்போது தா பாண்டியனை விட்டு விட்டீர்கள் ஏன் ? அவர் கருணாநிதி எதிர்ப்பு அணியில் தற்போது இல்லை என்பதாலா ?


முள்ளிவைகால் சம்பவத்திற்கும்  முன்னாள் , இந்திய அரசு ஒரு தீர்வு வைத்திருப்பதாகவும்  அந்த தீர்வுக்கு ஐயா நெடுமாறனும் தா பாண்டியனும் தான் முட்டுக்கட்டை  போடுவதாகவும் சொன்னீர்கள் , அது என்ன தீர்வு ? அந்த தீர்வு - இந்திய அரசாங்கம் கொடுத்தாக சொன்னீர்கள் . இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளின் அல்லது   வெளி விவகாரம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்  சாமானியரான உங்களுக்கு எப்படி தெரிந்தது? இந்த விசயத்தில் தாபாண்டியனை இழுத்து பேசிய நீங்கள் இப்போது  ஏன் அவரை விட்டுவிட்டீர்கள். அவரது வீடு தாக்கப்பட்டது போதும் என்று  நிம்மதி கொண்டீர்களா?


கடைசி நாளில் உங்களிடம் யார் யாரோ எதோ பேசினார்கள் என்றீர்களே. அது என்ன என்று முழுவதுமாய் இப்போது சொல்லுங்கள்.


பழைய சர்ச்சைகள் எப்படி இருந்தாலும் , இப்போது  ஈழ மக்கள் கண் முன்னாலேயே  திறந்த வெளி சிறையில் உள்ளார்களே அதற்கு  "அரசாங்கத்திற்கு நான் நெருக்கம் " என்று காட்டிகொள்ளும் உங்களின் தீர்வு என்ன அல்லது அதை பற்றியே பேச கூடாதா ? அல்லது உங்களுது தொடரை படித்து கொண்டே இருந்தால்தான் எழுதுவீர்களா?


நான் செவி வழி  தெரிந்தது மற்றும் ஒரு சிலரின்  பேட்டியின் மூலம் தெரிந்தது, ஈழத்தில்  விடுதலை புலிகளின் கட்டமைப்பு என்பது, ஒருவர் பேசுவதை மற்றவர் பேசமாட்டார்கள். அதாவது ஒருவரின் நடவடிக்கை  மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில்  உங்களக்கு மட்டும் எப்படி இவ்வளவு விஷயங்கள் தெரிகிறது. புலிகள் அமைப்பின் அதிர்காரபூர்வ பணிகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் இருந்தீர்களா? அப்படி இருந்தால் அது என்ன  மாதிரியான தொடர்பு அல்லது பதவி?


வைகோவும் நெடுமாறனும்  ஈழ விசயத்தில் நாடகம் ஆடுகிறார்கள் அல்லது ஏமாற்றி பிளைகிறார்கள் என்றால் நீங்கள் ஏன் வைகோவை வைத்து, அவரை உபயோகித்து அவரின் மூலம் மூன்று வருடங்களுக்கு முன்னாள்  இளையராஜாவை கொண்டு திருவாசகம் விழா எடுத்தீர்கள். அல்லது நேர்மையாக இருந்த வைகோ இப்போது மூன்று வருடங்களாக துரோகியாக மாறிவிட்டாரா?  நெடுமாறன்தான் புலிகளை தவறாக வழி நடத்தினார் என்று சொன்னீர்களே, எப்படி என்பதை விளக்குங்கள். என்னென்ன விடயங்களில் இவர் அவர்களை தவறாக வழி நடத்தினார்? வைகோவையும் நெடுமாறனையும் மட்டுமே நம்பித்தான் விடுதலை புலிகள் இயங்கினார்களா? 

சரி இறுதி நேரத்தில்தான் வைகோவும் நெடுமாறனும் குழப்பினார்கள் என்றால், இரண்டு வருடங்களுக்கு முன்பே  தமிழ் செல்வனை  இலங்கை அரசு ஏன் கொன்றது ?

செஞ்சோலை  மாணவிகளை இலங்கை என் கொன்றது ?

இலங்கை தன்னிச்சையாக போரை ஆரம்பித்து  தமிழர்களை கொள்ள ஆரம்பித்தது என்பதை ஏன் உணர மறுக்கிர்றீர்கள் அல்லது சொல்ல மறுக்குன்றீர்கள் .

போர் நடந்த கடைசி மாதத்தில்  விடுதலை புலிகள் பத்து முறையாவது நடேசன் மூலம் போர் நிறுத்த அறிவிப்பில் விருப்பம் காண்பித்தார்கள், புலிகளுக்கு அறிவுரை கூறிய  வைகோவும் நெடுமாறனும் தவறு செய்தவர்கள் என்றால்  இந்திய அரசாங்கத்திற்கு அறிவுரை கூறும் உங்கள் போன்ற மேதாவிகள்ஏன் அப்போதாவது இலங்கை போரை நிறுத்த வற்புறுத்தவில்லை?


அதற்கும் மேலாக, பிரணாப் முகர்ஜி இந்திய பாராளுமன்றத்தில், புலிகளோடு இருப்பவர்கள் வெறும் எழுபத்தி ஐந்தாயிரம் பேர் என்று எந்த அடிப்படையில் ஒரு மிகபெரிய பொய்யை சொன்னார் ? மீதி இருந்த மூன்று லக்ஷம்  பேரையும் கொல்லும் இலங்கையின் நோக்கதிர்க்கு எதுவாய் தானே  அப்படி சொன்னார் ? அப்படி இருக்கும் இந்திய அரசு எப்படி தமிழர்களுக்கு நல்லதை நினைத்தது?  அதுவும்  சிதம்பரம் மூலம்?


உங்கள் கூற்றுபடியே பார்த்தாலும், நீங்கள் எடுத்த முயற்சியின் படி, கடைசி நாளில், நடேசனை  மற்றும் புலித்தேவனை கொன்ற இலங்கை படையினர்  எந்த நம்பிக்கையில்  மீதம் சரண் அடையும் எல்லா தமிழர்களையும் கொள்ளாமல் இருப்பார்கள் என்று சொல்ல முடியும்?


நடேசன் உங்களிடம் என்ன பேசினார்? வைகோவும் நெடுமாறனும்தான் சரணடைய சொன்னார்கள் என்று சொன்னாரா?


எல்லாம் முடிந்து விட்டது. தமிழர்களை புல் டோசர்களை ஏற்றி கொன்றார்கள். முக்கல் முனகலோடு இருந்த  அனைத்து உயிர்களையும்  அழித்தார்கள். செத்தது பொது மக்கள்தானே  இதையாவது நீங்கள் சொல்லும் இந்திய தமிழர் நல அரசாங்கம்  காத்ததா?


மீதி இருந்த தமிழர்களை சிறையில் அடைத்தார்கள், ஐக்கியநாடுகள் சபையில்  இலங்கையை  எதிர்த்து வந்த "மனித உரிமை மீறல் நடவடிக்கை" காண வாதத்தில் வாகெடுப்பில், எதிரியாய் இருந்தாலும் பாகிஸ்தானையும் சீனாவையும் அனுசரித்து  என் இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது? நீங்கள் சொல்லும் இந்திய தமிழர் நல அரசாங்கம்  ஏன் அப்படி செய்தது ?


எனென்றால் இலங்கையில் போரை நடத்தியதே  இந்தியாதான். 

அதை  நிரூபித்தது  சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய அல்லது தமிழக நாடாளுமன்ற குழுதான்.

ஏனென்றால்?

  • ஐக்கிய நாடுகள் சபையை முகாமுக்குள் அனுமதிக்காத இலங்கை ,
  • மனித உரிமைகள் குழுவை முகாமுக்குள் அனுமதிக்காத இலங்கை,
  • தன சொந்த நாட்டின் எந்த பாராளுமன்ற உறுபினறையும் அனுமதிக்காத இலங்கை,
  • தன சொந்த நாட்டின் எந்த அமைப்புகளையும் அனுமதிக்காத இலங்கை .
  • அமெரிக்காவை அனுமதிக்காத இலங்கை,
  • கனடா உறுபினரை விமான நிலையத்திலேயே  மடக்கி திருப்பி அனுப்பிய இலங்கை,


... எப்படி  இந்திய அரசாங்கத்தின் சார்பில்லாத  ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்த பாராளு மன்ற உறுபினர்களை அனுமதித்தது?


ஏன் இந்தியாவிற்கு இவ்வளவு மரியாதை?  ஏனென்றால் இந்தியாதான் போரை கூலிபடையை போல் நடத்தியது. கூலிப்படைக்கு விசுவாசமாக இல்லை என்றால், குற்றவாளியும் கூலிபடையும் சேர்ந்தே மக்கள் மன்றத்தில் தண்டனை பெற வேண்டியிருக்கும்.


இந்த கூலி படைக்கு சார்பாய் பேசும் ஆட்களை நாம் எப்படி அழைத்தால் நன்றாய் இருக்கும் . வாசகர்களின்  விமர்சனத்திற்கு விடுகிறேன்.


-நடேசன், சென்னையில் இருந்து.

source:dinaithal
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ராஜபக்ஷே vs ஃபொசேகா -உடையும் வெ(ற்)றி கூட்டணி

குறுக்குவழி, அவசரவெறி கொண்டவர்களின் நட்பு கடைசியில் இப்படித்தான் போய்முடியும் என்பதற்கு இலங்கை பத்திரிகையாளர் ஒருவர் சுவாரஸ்யமான கதை சொன்னார்.

குளம் ஒன்று வறண்டுகொண்டே இருக்க, அதிலிருந்த நண்டுகள் தவிக்க ஆரம்பித்தன. அப்போது ஒரு கொக்கு வந்து சதித் திட்டம் தீட்டியது. 'உங்களை எல்லாம் நீர் ததும்பும் வேறொரு குளத்தில் கொண்டு போய் இறக்கி விடுகிறேன்,என் முதுகில் ஏறிக்கொள்ளுங்கள்!'' என்று 'மறுவாழ்வு' வாக்குறுதி அளித்தது. அப்போது அந்த நண்டு கூட்டத்திடையே ஒரு நயவஞ்சக நண்டு, கொக்குக்கு சாதகமாக மற்ற நண்டுகளிடம் பேசியது. அவற்றை சம்மதிக்க வைத்து ஒவ்வொன்றாக கொக்கின் முதுகில் ஏற்றி அனுப்பியது. கடைசி டிரிப்பாக நயவஞ்சக நண்டும் கொக்கின் முதுகில் பறந்தது. கொண்டு சென்ற நண்டுகளை வேறொரு குளத்தில் விடுவதற்கு பதிலாக கொதிக்கும் பாறையின் மீது போட்டுவிட்டு தள்ளியிருந்தது கொக்கு. அவை தானாகவே வறண்டு காய்ந்து இறந்து போனபின் ஒவ்வொன்றாக தின்றுவிடுவதுதான் கொக்கின் திட்டம். கொக்குக்கு உதவியாக இருந்த நயவஞ்சக நண்டுக்கும் இது முதலிலேயே தெரியும். எனவே, கொக்கின் முதுகில் பறந்து சென்றபோதே, அதன் கழுத்தை தனது கொடுக்குகளால் கொடூரமாக இறுக்கிக் கொன்று, நீர் நிறைந்த குளத்துக்குள் விழச் செய்து தான் மட்டும் தப்பியது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் ராஜபக்ஷே - ஃபொன்சேகா கூட்டணியின் தற்போதையை நிலையை சரியாகச் சொல்லக்கூடிய குறுங்கதைதான் இது.

போர் முடியும் வரை ராஜபக்ஷே இட்ட கட்டளைகளை ஒன்றுக்குப் பத்தாக வெறியோடு நிறைவேற்றி ராஜவிசுவாசம் காட்டிவந்த சிங்கள ராணுவத் தளபதிஃபொன்சேகா, இப்போது முகாமில் வாடும் தமிழர்களுக்கு ஆதரவாக உலகமெங்கிலும் எதிர்ப்புக் குரல் எழத் தொடங்கிவிட்ட நிலையில்... ராஜபக்ஷேவின் கழுத்தை மெதுவாக இறுக்கத் தொடங்கியிருக்கிறார்! ''சர்வாதிகார மன்னருக்கும் சாகசத் தளபதிக்கும் இடையே தொடங்கிவிட்ட பனிப்போர், விரைவில் பெரும் நெருப்பாக திகுதிகுக்கத் தொடங்கினாலும் ஆச்சர்யத்துக்கில்லை!'' என்று மணியடிக்கிறார்கள் விவரமான இலங்கைப் பத்திரிகையாளர்கள்!

இந்த பவர் பாலிடிக்ஸ் குறித்து கொழும்பில் உள்ள முக்கியஸ்தர்கள் சிலரிடம் கேட்டோம். ''2005-ம் வருடத்தின் இறுதியில்தான் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராஜபக்ஷே தீவிரமாகக் கையிலெடுத்தார். அந்த சமயத்தில்தான் ராணுவத்திலிருந்து ஓய்வு பெறும் நிலையிலிருந்த சரத் ஃபொன்சேகாவை ராணுவத் தளபதியாக நியமித்து பதவி நீட்டிப்பு வழங்கினார். புலிகளின் கொடூரத் தாக்குதலில் நூலிழையில் தப்பிய ஃபொன்சேகா, புலிகளைப் பழி தீர்க்க துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த நேரமது. அதனால் ராஜபக்ஷே கொடுத்த வாய்ப்பை சரியான சந்தர்ப்பமாகக் கை கொண்டு, மிருக வெறித் தாக்குதலை நடத்தத் தொடங்கினார் ஃபொன்சேகா. பாதுகாப்புத்துறைச் செயலாளரான கோத்தபய ராஜபக்ஷேயின் மிக நெருங்கிய நண்பரானார். உலகத்தின் மனித உரிமை அமைப்புகளின் கண்டனங்களை எல்லாம் தாண்டி, மரபு மீறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி புலிகளின் அத்தனை படையணிகளையும் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் சிங்கள மக்களிடத்தில் ஃபொன்சேகாவுக்கு கிடைத்த மதிப்பும் மரியாதையும் ஒரு கட்டத்தில் ராஜபக்ஷே சகோதரர்களுக்கு நெருட ஆரம்பித்தது. இதனால், கல்யாணம் முடிந்ததும் கறிவேப்பிலை கதையாக ஃபொன்சேகாவை கடந்த சில வாரங்களாகவே ஓரம்கட்டும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டனர்.

இதற்கு ஈடாகத் தாங்கள் கொடுத்த பரிசுகளை அள்ளிக்கொண்டு அவர் அப்படியே அடங்கி ஒதுங்கிவிடுவார் என ராஜபக்ஷே தரப்பு போட்டதுதான் தப்புக் கணக்காகிவிட்டது. சற்றும் எதிர்பாராத வகையில் ஃபொன்சேகா தரப்பை வலுப்படுத்தும் விதமாக இலங்கையின் எதிர்க்கட்சிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கி இருக்கின்றன. குறித்த காலத்துக்கு முன்பாகவே அடுத்த வருடம் தேர்தலை நடத்தி, சிங்கள மக்களின் ஆதரவோடு மறுபடி வலுவாக பதவியில் அமர ராஜபக்ஷே திட்டம் தீட்டி வர... அதையே தனக்கு சாதகமாக்கும் யோசனையில் இறங்கிவிட்டார் ஃபொன்சேகா!'' எனச் சொன்னவர்கள், மேற்கொண்டும் விளக்கத் தொடங்கினார்கள்.

''தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள்தான் பிரதானமானவை. அதேபோல் இலங்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதானம். இதில் ஐ.தே. கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான் தீவிர அரசியல் களத்துக்குள்ளேயே நுழைந்தார் மகிந்தா ராஜபக்ஷே. இலங்கையின் அரசியல் கட்டமைப்பின்படி மூன்று தடவைகளுக்கு மேல் ஒருவர் அதிபராக இருக்க முடியாது. அதனால் தனக்கு பிறகு தனக்கு நம்பிக்கைக்குரியவராக ராஜபக்ஷேவை அரசியல் களத்துக்குள் கொண்டு வந்தார் அப்போதைய அதிபர் சந்திரிகா. அதிபரின் ஸ்பெஷல் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த சமயத்தில் பிரதமராக இருந்த ரணிலின் அமைச்சரவையை கலைத்து ராஜபக்ஷேவை பிரதமராக்கினார் சந்திரிகா. பிறகு தனது இறுதி அதிபர் காலம் முடிந்ததும் ராஜபக்ஷேவை அதிபர் வேட்பாளராக அறிவித்துவிட்டு அமெரிக்கா கிளம்பி விட்டார்.

அந்த சமயத்தில் அவரை எதிர்த்து ரணில் அதிபர் தேர்தலில் களத்தில் நிற்க, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு டன் ரணில்தான் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராவார் என எல்லோரும் நினைத்திருந்தனர். ஆனால், அந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக புலிகள் தரப்பு அறிவித்ததால், ராஜபக்ஷே யிடம் ரணில் தோற்க வேண்டி வந்தது. முழுக்க முழுக்க சிங்களர்களின் வாக்குகளை வாங்கி ஜெயித்த ராஜபக்ஷே, அந்த செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளும் விதமாகவே புலிகளை அடியோடு ஒழிக்க முடிவெடுத்தார். அதற்காகவே ஃபொன்சேகாவை தேர்ந்தெடுத்து ராணுவத் தளபதியாக நியமித்தார். அதன்பின், ஃபொன்சேகாவின் ஆலோசனைப்படியே பசில் ராஜபக்ஷேவை தனது ஆலோசகராகவும், கோத்தபய ராஜபக்ஷேவை பாதுகாப்புத்துறை செயலராகவும் நியமித்தார் ராஜபக்ஷே. அவர்கள் இருவரையும் சேர்த்தே, தான் நடத்தும் போருக்குப் பொறுப்பாளர்களாக உலக நாடுகளைப் பார்க்கச் செய்யும் தந்திரம் அது.

உலக நாடுகளின் மொத்த அழுத்தத்தையும் எதிர்ப்பையும் மீறி கடுமையான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தி வெற்றியை வசப்படுத்திக் காட்டினார் ஃபொன்சேகா. போர் முடிந்ததும் எதிர்பாராத திருப்பம்! சிங்கள சிப்பாய்கள் மத்தியில் ஃபொன்சேகா மீதானஹீரோயிஸம் அதிகரித்தது. போர் வெற்றிக்கு தாங்களே காரணம் என ராஜபக்ஷேவும், அவரது சகோதரர்களும் பெருமிதமாக மார்தட்டி வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் எல்லாம் 'இது ராணுவத்துக்குக் கிடைத்த வெற்றி' என உசுப்பேத்தி னார்கள்.

'தாய் நன்றாக வாழ்ந்தால் மகளே பொறுக்க மாட்டாள்' என்பதுதானே அரசியலில் நடைமுறை. ஆட்டோமேட்டிக்காக ஃபொன்சேகா மீது பக்ஷே சகோதரர்களுக்கு பயமும் பொறாமையும் கிளம்பிவிட்டது. அடுத்து வரும் அதிபர் தேர்தலுக்கு முன்பே திடீர் ராணுவப் புரட்சியை நடத்தி ஆட்சியை ஃபொன்சேகா கைப்பற்றிவிடக் கூடும் என்கிற அளவுக்கு அவர்கள் உதறலில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். உலகம் முழுவதும், அதிக அதிகாரம் வழங்கப்பட்டு சர்வாதிகார வெறியாட்டம் போடும் வாய்ப்பு கிடைக்கிற பல ராணுவத் தளபதிகள் இப்படி புரட்சி நடத்தி ஆட்சியைப் பிடிக்கிற கதைகளைப் பார்த்தவர்கள்தானே அவர்கள்.

இதனாலேயே, அதிரடியாக ராணுவத் தளபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் சி.டி.எஸ். சட்டத்தை கொண்டு வந்துள்ளார் ராஜபக்ஷே. இந்த சட்டத்தின்படி தளபதியின் பெரும்பாலான அதிகாரங்கள் பாதுகாப்பு செயலாளருக்கு மாற்றப்பட்டன. இந்த சட்டத்துக்கு ஃபொன்சேகா எதிர்ப்பு தெரிவிக்க, அவரை ராணுவத் தளபதி பதவியிலிருந்து நீக்கி, கூட்டுப்படைகளின் தலைமை தளபதி என்கிற டம்மி பதவியில் அமர வைத்துவிட்டனர். அவருக்கு வழங்கப்பட்டு வந்த பலஅடுக்கு பாதுகாப்பை அடியோடு குறைத்து விட்டனர். 'தளபதியை அரசாங்க கூலிப்படையே கொலை செய்துவிட்டு, புலிகளின் மிஞ்சியிருக்கும் தற்கொலைப் படை மீது பழி போட திட்டம் நடக்கிறது' என்று இயல்பாகவே கிளம்பிய ஒரு சந்தேகம், ஃபொன்சேகா தரப்பை படுசூடாக்கிவிட்டதாகத் தெரிகிறது.

இதெல்லாம் ஒன்றுசேர... எதிர்க்கட்சிகளும் இதில் ஈடுபாடு காட்ட... அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக ஃபொன்சேகாவை முன்னிறுத்தவும் எதிர்க்கட்சிகள் தயங்காது என்ற பேச்சு கிளம்பியுள்ளது. இதனால் கொந்தளித்துப் போன கோத்தபய ராஜபக்ஷே ஃபொன்சேகா மற்றும் சில முக்கியத் தளபதிகளை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையட்டி 'ஃபொன்சேகா மீடியாக்களிடம் அரசியல் ரீதியாக ஏதாவது பேசக்கூடும்' என்று பயந்த ராஜபக்ஷே அரசு, 'சர்வதேச வர்த்தகத்துறை மற்றும் ஏற்றுமதி அமைச்சகத்தின் செயலாளராக ஃபொன்சேகாவை நியமிக்கத் தயார்' என்று சமாதானக் கொடியைப் பறக்கவிடும ராஜதந்திரத்தையும்அரங்கேற்றிப் பார்த்தது. ஆனால், இதெல்லாம் ஃபொன்சேகாவின் மனதை மசிய வைக்கவில்லை.

இந்நிலையில்தான் ராணுவத்தின் 60-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்காக நாடு முழுக்க தளபதியின் கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. திடீரென போலீஸார் அந்த கட்அவுட்கள் அத்தனையையும் அகற்றியுள்ளனர். கொழும்பு மத்திய வங்கியின் சார்பில் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்ட விழாவில் ஃபொன்சேகாவின் படத்தை வெட்டிவிட்டு மீடியாக்களுக்கு அரசுத் தரப்பு வழங்கியது. இதைக் கண்டு கொந்தளித்துப் போன ஃபொன்சேகா, ராணுவத் தரப்பில் நடத்தப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் தலைமையேற்காமல் புறக்கணித் தார். அதோடு ராஜபக்ஷேவுக்கு பதிலடி கொடுக்கவும் தயாராகி விட்டார்!'' என மிக விவரமாக அங்குள்ள நிலவரங்களை விளக்கினார்கள்.

''கொஞ்சகாலம் முன்பு, மாத்தளையில் உள்ள அலுவிகாரை படையினரை கௌரவிக்கும் விதமாக முக்கியஸ்தர்களின் இல்லங்களுக்கு ராஜபக்ஷேயுடன் விசிட் அடித்தார் ஃபொன்சேகா. அமைச்சர் ரோஹன குமார திஸ்ஸநாயக்கவின் வீட்டுக்குப் போனபோது, அமைச்சரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஓடோடி வந்து ஃபொன்சேகாவின் காலில் விழுந்து வணங்கினர். ஆனால், இத்தகைய மரியாதையை அவர்கள் ராஜபக்ஷேவுக்கு வழங்கவில்லை. 'அமைச்சரவையில் உள்ளவர்களிடத்திலேயே தனக்கு எப்படியெல்லாம் சர்வபலம் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்காக ஃபொன்சேகாவே செய்த ஏற்பாடுதான் அது' என்பது பிறகு தெரியவந்தபோது ராஜபக்ஷேவுக்கு முகம் கறுத்து விட்டது. மாத்தளையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் ஃபொன்சேகாவின் ஆதரவாளர்கள் ராஜபக்ஷேயை கேரோ செய்து சங்கடம் ஏற்படுத்தினர். இதையெல்லாம் ராஜபக்ஷேயின் அருகிலேயே நின்று ரசித்துக் கொண்டிருந்தார் ஃபொன்சேகா. கூடவே, 'இனி அரசியல் ரீதியான பதிலடியைப் பார்க்கத்தான் போகிறீர்கள்' என ராஜபக்ஷேவுக்கு நெருக்கமான சில ராணுவத் தளபதிகளிடம் வெளிப்படையாகவே சொல்லியும் இருக்கிறார்.

இதனால் ஃபொன்சேகாவை சமாதானப்படுத்தும் நோக்கில் அதிபரின் செயலாளரான லலித் வீரதுங்கவை அனுப்பி ஆசை காட்டும் விதமாகப் பேசியது அதிபர் மாளிகை. ஹாம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடக் கிளம்பிய ராஜபக்ஷே அதற்காக ஃபொன்சேகா வலிய அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் ஃபொன்சேகாவுக்கு களனி ரஜமகா புத்த விஹாரையின் உபதலைவர் பதவியை வழங்கினார்கள். ஃபொன்சேகாவின் மனைவி அனோமா ஃபொன்சேகாவுக்கும் முக்கியப் பொறுப்பு கொடுத்தார்கள். ஆனால், இது எதுவுமே ஃபொன்சேகாவை சாந்தப் படுத்தும் என்று தோன்றவில்லை!'' என அடுத்தடுத்த விவரங்களையும் அடுக்கினார்கள்.

இதுகுறித்து ராணுவ வட்டாரத்தில் பேசினோம். ''இலங்கை அரசியல் களத்தில் ராணுவ அதிகாரிகள் குதிப்பது புதிதல்ல. ஏற்கெனவே ராணுவத்தில் உயர் பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் லக்கி அல்கம, மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க போன்ற பிரபலமான ராணுவ அதிகாரிகள் அரசியலில் இருந்தபோதும், பதவிக்கு வருவதற்கான வாய்ப்பு கிட்டுமுன்பே அவர்கள் ஆயுள் முடிந்து விட்டது. ஃபொன்சேகாவுக்கோ அந்த வாய்ப்பு பலமாக இருக்கிறது. ஒருபக்கம் தன்னை ஹீரோவாகக் கொண்டாடும் சிங்கள மக்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வதோடு, 'யுத்தத்தின் சில வியூகங்களை இன்னும்கூட சிறப்பாகத் தீட்டியிருக்கலாம். ஆனால், அதிபரின் அவசரம் மற்றும் வற்புறுத்தல் காரணமாக 40 ஆயிரத்துக்கும் மேலான சிங்கள வீரர்களை நாம் அநியாயமாக பலிகொடுக்க நேர்ந்தது' என்று ஒரு அணுகுண்டு பிரசாரத்தையும் அரசியல் களத்தில் ஃபொன்சேகா முடுக்கிவிடக் கூடும். அதுவும் தவிர, சர்வதேச அமைப்பான ஐ.நா-வில் போரியல் குற்ற வழக்கு தொடங்கினால்... ஃபொன்சேகா கொடுக்கும் வாக்குமூலத்தின் மூலம் ராஜபக்ஷே சகோதரர்கள் 'உள்ளே' தள்ளப்படும் அபாயமும் இருக்கிறது. இதையும் மனதில் கொண்டுதான் எதிர்க்கட்சிகள் அவருக்கு கொம்பு சீவி வருகின்றன. அடுத்த வாரம், இலங்கை நாடாளுமன்றத்தில் அவசர கால சட்ட நீடிப்பு மசோதா மீதான விவாதத்தின்போது ரணில் விக்கிரமசிங்கே, அனுர குமார திசநாயக்க உள்ளிட்டவர்கள் ஃபொன்சேகாவுக்கு ஆதரவாக முழங்கப் போகிறார்கள். இதெல்லாமே புதிய காட்சிகளுக்கான திரையை உயர்த்தும்.

அடுத்த தேர்தல் வரை இலங்கையில் இருந்தால் தன் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று எண்ணும் ஃபொன்சேகா, இப்போதைக்கு அமெரிக்கா சென்று தங்கும் யோசனையிலும் இருக்கிறார். அவரை அமெரிக்கா செல்லவிட்டால், அங்கிருந்து ஏதேனும் தலைவலியை உருவாக்குவார் என்று அஞ்சுகிறது அதிபர் தரப்பு!'' என வெவ்வேறு குண்டுகளையும் வெடிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய எம்.பி-யான லஷ்மண் கிரியெல்லவிடம் ''ஃபொன்சேகாவைகளமிறக்கும் திட்டம் உண்டா?'' என்று கேட்டோம்.

''அதிபர் தேர்தலில் எங்களுடைய வேட்பாளராக சரத் ஃபொன்சேகா இருக்கலாம். வேறு யாராகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் தேர்தல் நெருங்கும்போதல்லவா சொல்லமுடியும்!'' என்று பிடிகொடுக்காமல் பதில் தந்தார் அவர்.

எப்படியோ... வினை விதைத்தவர்கள் அதை அறுக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது!

- மு.தாமரைக்கண்ணன்,
இரா.சரவணன்
  
 

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விண்டோஸ் எக்ஸ்புளோரர் என்னும் பைல் மேனேஜர்

  

சென்ற இதழில் கண்ட்ரோல் பேனலை எப்படி நம் கண்ட்ரோலில் வைத்து, கம்ப்யூட்டரின் இயக்கத்தை நாம் கட்டுப்படுத்த முடியும் எனப் பார்த்தோம். அடுத்ததாக முக்கிய ஒரு பகுதியாகவும், நாம் அடிக்கடி பயன்படுத்தும் பகுதியாகவும் உள்ளது விண்டோஸ் எக்ஸ்புளோரர் வசதியாகும். இதன் மூலம் நாம் நம் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைப் பல வழிகளில் கையாளலாம். 



1. விண்டோஸ் எக்ஸ்புளோரரை (Windows Explorer) ஒரு பைல் மேனேஜர் என அழைக்கலாம். விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் இதனை ஒரு அப்ளிகேஷன் புரோகிராம் என அழைக்கலாம். கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ், போல்டர் மற்றும் அவற்றில் உள்ள பைல்கள் குறித்த தகவல்கள் அனைத்தையும் இது தருகிறது. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வகைப் பண்பு இருக்கும். டிரைவ், போல்டர் ஆகியவற்றின் அமைப்பிற்கும், அவற்றில் அமைக்கப்படும் பைல்களின் கட்டமைப் பிற்கும் தனித்தனியான அட்ரிபியூட்கள் இருக்கும். பல அட்ரிபியூட்டுகள் பொதுவான வையாக இருக்கும். இவற்றை அவற்றின் அட்ரிபியூட்டுகள் வழியாகப் பல வகைகளில் பகுத்து அறிய விண்டோஸ் எக்ஸ்புளோரர் உதவுகிறது.



2. நீங்கள் உங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைப் பல வகைகளில் இயக்கலாம். பைல்கள் எந்த வகையில் உங்கள் கம்ப்யூட்டரில் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்ப தனைக் காணலாம். பைல்களை அவை எங்குள்ளன என்று கண்டறிவது, சேவ் செய்வது, நகலெடுப்பது, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்துவது, அழிப்பது மற்றும் பைல்களின் பெயரை மாற்றுவது எனப் பல செயல்பாடுகளை இந்த விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் மேற்கொள்ளலாம். இந்த அனைத்து வேலைகளும் நிச்சயம் நீங்கள் தினந்தோறும் உங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் வேலைகளே. எனவே கம்ப்யூட்டரில் நமக்குக் கிடைக்கும் சிறந்த சாதனம் விண்டோஸ் எக்ஸ்புளோரர் என்றால் அது மிகையாகாது.



3. விண்டோஸ் எக்ஸ்புளோரரைப் பல வழிகளில் பெறலாம். இவற்றில் மிக எளிய வழி இரண்டு உள்ளன. Start பட்டனில் ரைட் கிளிக் செய்தால் எழுந்து வரும் மெனுவில் Explore  என்ற பிரிவில் கிளிக் செய்து இதனைப் பெறலாம். அல்லது My Computer ஐகான் மீதும் இதே போல ரைட் கிளிக் செய்து பெறலாம். இல்லை கீ போர்டில் ஷார்ட் கட் மூலம் பெற வேண்டும் என்றால் விண்டோஸ் கீயுடன் 'E'யை அழுத்த விண்டோஸ் எக்ஸ்புளோரர் கிடைக்கும். இது தான் மிக மிக எளிய மற்றும் வேகமான வழியாகும். சற்று சுற்று வழி என்றால் Start, All Programs, Accessories, Windows Explorer எனச் செல்ல வேண்டும். எந்த வழியாக இருந்தாலும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் வேகமாக நமக்கு அதன் இரு பிரிவுகளுடன் கிடைக்கும். இந்த பிரிவுகளிலிருந்து எந்த டிரைவிற்கும் போல்டருக்கும் போகும் வழி அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். 

4.விண்டோஸ் எக்ஸ்புளோரர் காட்டும் டிரைவ்கள், போல்டர்கள் மற்றும் பைல்களை ஐந்து வகைககளாகக் காணலாம். இதனை எக்ஸ்புளோரர் விண்டோவில் View  என்னும் பிரிவில் கிளிக் செய்தால் இந்த வகைகள் (Thumbnails, Tiles, Icons, List, Details)  காணப்படும். இதில் ஒவ்வொன்றையும் கிளிக் செய்து பைல்கள் எப்படிக் காட்டப்படுகின்றன என்று பாருங்கள். குறிப்பாக படங்கள், புகைப்படங்கள் உள்ள பைல்களை கூட umbnails  என்ற பிரிவில் பார்த்தால் அவற்றின் சிறிய பதிப்புகள் தெரிவது அழகாக இருக்கும்.



5. இந்த வகையில் View என்ற பிரிவைக் கிளிக் செய்து பார்த்தால் தொடக்கத்தில் நான்கு வகை கிடைக்கும். பைலின் பெயர், வகை, அளவு, இறுதியாக என்று அதனைக் கையாண்டது என்ற பிரிவுகள் கிடைக்கும். சிலர் இவ்வளவுதான் பிரிவுகள் என்று எண்ணுகின்றனர். இதிலேயே காலியாக உள்ள கட்டத்தில் சென்று ரைட் கிளிக் செய்தால் அதில் இன்னும் என்ன என்ன பிரிவுகள் உள்ளன என்று பார்க்கலாம். விண்டோஸ் விஸ்டாவில் இந்த பிரிவுகள் எக்கச்சக்கமாய் உள்ளன. இவற்றில் தேவையானதை டிக் செய்து அந்த பிரிவு தோன்றும் வகையில் செட் செய்து கொள்ளலாம்.



6. முக்கியமான ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் எப்போதும்  Start Menu  என்ற பிரிவில் திறக்கப்படும். இதற்குப் பதிலாக நீங்கள் விரும்பும் டிரைவ் அல்லது போல்டரில் திறக்கும் படியும் இதனை செட் செய்திடலாம். டெஸ்க் டாப்பில் சென்று காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்து அதில் New, Shortcut கிளிக் செய்திடவும். கிடைக்கும் கமாண்ட் பாக்ஸில் எந்த டிரைவ் அல்லது போல்டரில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அதனை அமைக்க வேண்டும். எடுத்துக் காட்டாக சி டிரைவில் ரூட்டில் திறக்கப்பட வேண்டும் என்றால் explorer /n,/e,/root,,/select,C:\   என அமைக்க வேண்டும். இது போல எந்த டிரைவ் அல்லது போல்டருக்கும் அமைக்கலாம். 

7. விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் ஒரு பைலை அதன் வகை வழியாக, பெயர் வழியாக, கடைசியாகப் பயன்படுத்திய நாள் வழியாக, அது உருவாக்கப்பட்ட நாள் வழியாக எனப் பல வழிகளில் பைல்களைக் கண்டுபிடிக்கலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் வேலை செய்யவில்லை என்றால் கம்ப்யூட்டரில் நம் வேலைத்திறன் நிச்சயமாய்ப் பாதிக்கப்படும் என உறுதியாகச் சொல்லலாம்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

புலிகள் இயக்கம் உலகின் மிக வலுவான போராட்ட இயக்கமாவே உலகம் முழுவதிலும் பார்க்கப்பட்டது.


 

 ராணுவங்களுக்குள் பேதமில்லை அவை பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்றன எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக் கூடாது என்பதிலும் ஊடகங்களும் தெளிவாகவே இருக்கின்றன – என உன்னதம் இதழில் சோமிதரன் என்பவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். உலகம் ஊடகம் இலங்கை அரச இராணுவ வன்முறை என்று பல்வேறு விடையங்களை குறிப்பிடும் கட்டுரையாளர். தமிழர்களின் அவலங்களை இந்திய ஊடகங்கள் வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்ததாகவும் குற்றம் சாட்டுகின்றார். அவரது ஆக்கபூர்வனான கருத்துடைய இக் கட்டுரையினை இங்கு மீள் பதிவு செய்கின்றோம்

- இன்போதமிழ் குழுமம் -

  • ஊடக அரசியல் குறித்தும் ஊடகங்கள் ஈழப் போராட்டத்தில் நடந்து கொண்ட முறைமை, இந்திய ஆங்கில ஊடகங்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றியெல்லாம் பேசாமல் இந்த கட்டுரையை எழுதுவதில் எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

கைகள் கட்டப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்ட தமிழர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் காட்சிகள் உலகின் பல தொலைக்காட்சிகளிலும் இணையத் தளங்களிலும் மீள்பதிவாகிக் கொண்டிருக்கிறது. எனது நண்பர் ஒருவர் டெல்லியில் இருந்து தொலைபேசினார். நான் நினைக்கவில்லை இத்தனை கொடுமைக்காரர்களாக சிங்கள ராணுவத்தினர் இருப்பார்கள் என்று. ஈராக்கில் அமெரிக்க படைகள் செய்த கொடுமைகளை விட கொடுமைகளையெல்லாம் செய்வார்கள் போலிருக்கிறதே என்றார் அப்பாவியாக.

என்னுடைய அந்த நண்பர் அத்தனை அரசியல் அறிவு இல்லாத அப்பாவியல்ல. இந்தியாவில் பெண்கள் மற்றும் பழங்குடியினர் உரிமைக்காக போராடிவரும் மராத்திக்காரரான அந்த நண்பருக்கு சிங்கள ராணுவம் இத்தனை கொடுமைகளைச் செய்யும் என்பதை இவ்வளவு தெளிவாக எந்த ஊடகமும் அண்மைக் காலத்தில் சொல்லியிருக்கவில்லைப் போலும்.

ஈராக்கிலும் ஆப்கானிலும் நடந்த கொடுமைகளை அல்ஜசீரா மூலம் உலகம் கண்டது. இப்போது ஈழத்தில் நடந்த கொடுமைகளை சனல் 4 தொலைக்காட்சி கொண்டு வந்திருக்கிறது. உள்நாட்டுப் போர் நடக்கும் நாடுகளில் பல தரப்பு அச்சுறுதல்கள் காரணமாக உள்நாட்டு ஊடகங்களின் நம்பகத்தன்மை தவிர்க்கவியலாதபடி கேள்விக்குள்ளாகும். அப்போது குறைந்த பட்ச நம்பிக்கை தருபவை வெளிநாட்டு ஊடகங்கள் என்பது மறுக்கவியலாத உண்மை.

என் நண்பர் சொன்னது போல் சிங்கள ராணுவம் இத்தனை கொடுமையானது என்பதை உலகுக்கு உணர்த்திய முக்கிய பங்கினை சனல் 4 தொலைக்காட்சி செய்திருக்கிறது. நான் அந்த நண்பருக்கு சொன்னேன். சிங்கள மற்றும் அமெரிக்க ராணுவங்களின் கொடுமைகளை நீங்கள் இப்போது நிறைய அறிந்திருக்கிறீர்கள். ஆனால் என்னைக் கேட்டால் ராணுவங்களுக்குள் பேதமில்லை அவை பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்றன. அதேபோல் எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக் கூடாது என்பதில் ஊடகங்களும் தெளிவாகவே இருக்கின்றன.

உண்மையில் போர்க் காலத்தில் எல்லா ராணுவங்களும் கட்டுப்பாடுகள் இல்லாது போனாலோ அல்லது அரசு வழங்கும் அதிகாரம் எல்லை மீறினாலோ மிகக் கொடுமைகள் செய்பவைகளாகத்தான் இருக்கும். இலங்கை மற்றும் இந்திய ராணுவங்களின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்த ஈழத்த தமிழருக்கு இந்த இரண்டு ராணுவத்தினருக்கும் இடையிலான வித்தியாசம் அதிகம் இல்லை என்பதை தெளிவாகச் சொல்ல முடியும் என அந்த டெல்லி நண்பருக்கு நான் சொன்னேன். அவர் எனக்கு கனத்த மௌனத்தைப் பதிலாகத் தந்தார். அவருக்கு தமிழ் தெரியாது என்பதால் அவர் இந்திய தேசிய ஆங்கில தொலைக்காட்சிகளையே அதிகம் பார்த்திருக்கும் வாய்ப்பு உள்ளது.

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தோழர் ஒருவர் பேசிய கூட்டம் ஒன்றிற்கு சில காலம் முன்பு சென்றிருந்தேன். அவர் ஆப்கானில் ஆரம்பித்து ஈராக், ஜோர்டான் போர்களில் எல்லாம் அமெரிக்கா ஏகாதிபத்தியமும் மேற்குலக அதிகார மையங்களின் அத்து மீறல்களும் எத்தனை கொடுமைகளுக்கு காரணமானவைகளாக இருந்தன. இந்த கொடுமைகளையெல்லாம் மறைத்து அமெரிக்கா விரும்பும் கருத்தை ஓதுபவைகளாகவும் அடிவருடிகளாகவும் மேற்குலக ஊடகங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பதை விளக்கினார்.

மேற்குலகுக்கு எதிரான மாற்று ஊடகங்கள் மற்றும் சில இந்திய ஊடகங்கங்கள் மூலம் இந்த நாடுகளில் நடந்த கொடுமைகளின் உண்மைகளை அறிய முடிந்த போதுதான் இத்தனை மோசமான வன்முறையின் உண்மை நிலவரம் தெரிய வந்ததாகச் சொன்னார்.

அந்த தோழரின் பேச்சின் அடுத்த பகுதியில் ஈழப்பிரச்சினை ஆக்கிரமித்தது. ஈழத்தில் கட்டாய சிறுவர் படையணிகளைப் போராளிகள் வைத்திருப்பது. கட்டாயமாக மக்களைத் தடுத்து வைத்திருப்பது குறித்தெல்லாம் அவர் பேசினார். சிங்கள ராணுவத்தின் கொடுமைகளைப் போல் புலிகளும் சில தவறுகள் செய்தார்கள் என்று சொன்னாலும் அவர் புலிகளைக் குறிவைத்து பல செய்திகளை சொல்லிக் கொண்டே இருந்தார்.

அவர் சொன்ன விடயங்களில் புலிகளின் சில தவறுகள் நமக்கும் தெரிந்தது தான், ஆனால் அதைத் தாண்டி மிகப் பெரும் கொடுமைகள் ஈழ மண்ணில் புதைந்திருப்பது குறித்து அவர் எதுவும் பேசவில்லை. அந்த தோழரிடம் கேட்பதற்கு என்னிடம் ஒரே ஒரு கேள்வி இருந்தது. நான் எழுந்து என்னுடைய கேள்வியைக் கேட்டேன். இத்தனை மக்களின் அவலங்களுக்கும் காரணம் புலிகள் என்பதாக உங்கள் பேச்சு இருக்கிறதே சரி இருக்கட்டும் இந்த தகவல்களையெல்லாம் உங்களுக்கு யார் சொன்னது என்றேன்.

இந்திய ஊடகங்கள் சிலவற்றின் பெயரை அவர் சொன்னார். அவற்றில் எழுதப்பட்ட கட்டுரைகளையும் சில ஆங்கில தொலைக் காட்சிகளையும் கூட அவர் குறிப்பிட்டார். அதில் நிச்சயமாக தி இந்து என்ற ஆங்கில நாளேட்டின் பெயரும் இருந்திருக்கும் என்பதில் இதைப் படிக்கும் யாருக்கும் சந்தேகம் இருக்காது.

தோழரே ஈராக் போரில் அமெரிக்க ஊடகங்களின் பங்கு பற்றி அத்தனை தெளிவாகப் பேசினீர்களே....... ....

என்னுடைய இந்த கேள்விக்கு விடையளித்தால் அது விவாதமாகி அதிகம் நேரம் எடுக்கும் என்பதால் இதுகுறித்து தனியாகப் பேசலாம் அல்லது பிறிதொரு கூட்டத்தில் பேசலாம் என்ற கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் வேண்டுதலை ஏற்று நான் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

என்னுடைய இந்த கட்டுரையின் நோக்கம் சனல் 4 தொலைக்காட்சி மற்றும் அல்ஜசீராவின் பங்கு இலங்கையில் நடந்த வன்முறையின் கொடுமைகளை வெளிக்கொண்டுவருவதில் எவ்வாறானதாக இருந்தது. எதற்காக இவை கடும் அபாயத்துக்கு மத்தியில் இந்த வேலையைச் செய்ய வேண்டும். இந்த ஊடங்களின் பின்புலம். சனல் 4 தொலைக் காட்சி காணொளி; மற்றும் ஆதரங்கள் இலங்கைக்கு எதிரான குற்றவியல்; குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்குமா என்பது குறித்துப் பேசுவதுதான். ஆனால் ஊடக அரசியல் குறித்தும் ஊடகங்கள் ஈழப் போராட்டத்தில் நடந்து கொண்ட முறைமை, இந்திய ஆங்கில ஊடகங்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றியெல்லாம் பேசாமல் இந்த கட்டுரையை எழுதுவதில் எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

சனல் 4 தொலைக்காட்சி ஈழப் போரில் இத்தனை அபாயங்களுக்கு மத்தியில் அபூர்வமான ஆதாரங்களை திரட்டியிருந்தமை ஒருவகையில் அதன் ஊடக வியாபரத்திற்கான ஒரு உத்திதான். அல்ஜசீரா தொலைக் காட்சியை உலக பழமைவாத அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தொலைக்காட்சிகளுக்கு நிகராக மக்கள் விறுவிறுப்போடும் ஆர்வத்தோடும் பார்க்கச் செய்தது எக்ஸ்குளுசிவ்வான அதன் செய்திகளும் ஒசாமாவின் முதல் காட்சிகள் மற்றும் ஈராக்கில் நடந்த கொடுமைகள் குறித்த ஆதாரங்களும்தான்.

இவற்றை அல்ஜசீரா வெளியிட்டதன் மூலம் இலவசமான பிரச்சாரம் இந்த தொலைக்காட்சி செய்தி அலைவரிசைக்கு கிடைத்திருக்கிறது. அதிகம் பேர் இணையம் உட்பட சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்த தொலைக் காட்சியை பார்ப்பதற்கு தலைப்பட்டனர். இன்றைக்கு ஆயுத வியாபாரிகள் மற்றும் கட்டுமான கம்பனிக்காரர்ளைப் போல ஊடகங்களும் வன்முறை மற்றும் போர் மீது ஆர்வம் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு ஹொலிவூட் திரிலர் படங்களைப் போல செய்திகளைத் தருவதற்கு அதிகம் விருப்புக் கொண்டவையாக ஊடகங்கள் இருக்கின்றன.

போர்களத்தில் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு அபாயகரமான சூழ்நிலையில் செய்திகளைத் தருவதற்கு ஊடகங்கள் விரும்புகின்றன. பெரும் போர்களைக் கண்டிராத இந்திய ஆங்கில ஊடகக்காரார்கள் நவம்பர் 26 மும்பாய் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு மும்பாயில் போர் என்று தலைப்பிட்டு 48 மணி நேரடி ஒளிபரப்பில் நாட்டையே தங்கள் பக்கம் திருப்பி வைத்திருந்தார்கள். இந்தனை கொடுமைகள் நடப்பதாக சொல்லிக் கொண்டே இடையிடையே பிரியங்கா சோப்ரா, டோனி வகையறாக்களின் விளம்பரங்களும் ஓடிக் கொண்டிருந்தன.

இதே வேலையை இலங்கைப் போரின் போது முக்கியமான இந்திய ஆங்கில ஊடகங்கள் சில செய்திருந்தன. இலங்கைப் போருக்கு அவர்கள் வைத்திருந்த பெயர் இறுதி அத்தியாயம் அதாவது முடியபோகும் விளையாட்டு. இந்த முடியப்போகும் விளையாட்டை அவர்கள் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். இலங்கை அரசின் அறிவிப்புகளையும் புதிய படக்காட்சிகளையும் அவர்கள் ஒளிபரப்பினார்கள். புலிகளின் தலை நகரமாக இருந்த கிளிநொச்சி வீழ்ந்ததில் இருந்து இந்த ஊடகங்கள் இலங்கை ராணுவத்தோடும் இந்திய உளவுத்துறையோடும் சேர்ந்து பிரபாகரனைத் தேடத்தொடங்கின.

இறுதி அத்தியாயம்? என்று தலைப்பிடப்பட்ட இந்த தேடுதலுக்கிடையில் சுப்பிரமணியசாமி, சோ.ராமசாமி ஆகியோர் இந்த போரின் நியாய தர்மங்களையும் புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்பதற்கான வேத, ஆகம மகாபாரத போதனைகளையும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவற்றை மறக்காமல் ஒளிபரப்பிய இந்த காட்சி ஊடகங்கள் அவ்வப்போது மக்கள் கொல்லப்படுகிறார் என்று வேறு வழில்லாமல் சொன்னார்கள்.

அதுவும் ஒரு கட்டத்தில் இலங்கை இராணுவம் வழங்கிய அல்லது வேறு ஏதோ ஒரு இலங்கையின் நட்பு நாடோ பக்கத்து நாடோ கொடுத்த செய்மதிகளின் மூலம் எடுக்கப்பட்ட இராணுவத்தரப்பு வீடியோக்களை திரும்பத் திரும்ப ஒளிபரப்பினார்கள்.

புலிகள் மக்களை துப்பாக்கி முனையில் தடுக்கும் அந்தக் காட்சிகளை திரும்ப திரும்ப இந்திய தேசிய ஆங்கில தொலைக்காட்சிகள் சிலவற்றில் ஒளிபரப்பட்டன.அதேநேரம் மக்கள் மருத்துவ வசதியின்றி வீதிகளில் பிணங்களாகும் காட்சிகள் வன்னியில் இருந்து எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டன. இந்த காட்சிகளை விட புலிகளின் தலைவர்களின் பரபரப்பு பேட்டிகளை ஒளிபரப்பவும் இந்த ஊடகங்கள் விருப்பப்பட்டன. இராணுவத்தினர் மக்களை விடுவிப்பதற்காக நடத்தும் போராகவே இந்த ஊடகங்களால் முல்லைத்தீவில் நடந்த இறுதிப் போர் சித்திரிக்கப்பட்டது. இதன் போது மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று சொன்னாலும் இவர்களால் எந்த உண்மைகளையும் வெளிக் கொண்டு வரவோ சொல்லவோ முடியவில்லை.

போரக்களம் வரை அழைத்துச் செல்லபட்ட இந்த ஊடகவியலாளர்கள் இராணுவ டாங்கிகளுக்குள் பதுங்கிக் கொண்டும். இடம்பெயரும் மக்கள் கூட்டத்திற்கு முன்னால் இருந்து கொண்டும் நேரடிச் செய்திகள் என்ற பெயரில் இலங்கை இராணுவம் மற்றும் அரசு சொன்ன மூலச் செய்திகளின் அடிப்படையில் தங்கள் தங்கள் ஊடக நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் ஒப்புவித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

அவர்கள் செய்தி வழங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் நகர்ந்து செல்லும் பொது மக்களின் அவலம் குறித்து அவர்களால் பேச முடியவில்லை. அங்கு சென்று வந்த இந்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு நிச்சயமாக நிறைய உண்மைகள் தெரிந்திருக்கும். ஆனால் அவற்றைக் குறித்தோ அல்லது மறுக்கப்படும் ஊடக சுதந்திரம் அவர்களால் குறித்தோ பேச முடியவில்லை.

இதன் உச்சக்கட்டமாக பிரபாகரன் கொல்லப்பட செய்தியும் அவரின் உடல் எனக் காட்டப்பட்ட உடலும் இலங்கையில் பட்டாசு கொளுத்தி நடத்தப்பட்ட வெற்றிக் குதூகலிப்பும் ஒளிபரப்பபட்டது. கொழும்பு நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற களியாட்டங்களின் நேரடி றிப்போட்டுகளும் ஒளிபரப்பப்பட்டது. இதன் முடிவாக இலங்கை அதிபர் ராசபக்சவின் உரை நேரடியாக இந்திய தேசிய ஆங்கில தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டது. இப்படி நான் சொல்வதன் பொருள் இவர்கள் மக்கள் பற்றி பேசவில்லை என்பதல்ல எதை அதிகம் பேசினார்கள் என்பதை.

பெரும்பாலான இந்த ஊடங்களுக்கு போராளிகளின் மீதான தாக்குதலே பிரதானமாக தோன்றியிருக்கும். இந்த நிலையில்தான் பிபிசி யின் மென்போக்கு செய்தியிடலை மீறி இலங்கையின் உண்மை நிலையினை குறைந்தளவிற்க்காவது வெளிக்கொண்டுவரும் வேலையைச் செய்திருந்த பல வெளிநாட்டு ஊடகங்களில் அல்ஜசீராவும் சனல் 4 தொலைக்காட்சியும் குறிப்பிடத் தக்கவை. இவற்றின் செய்திகளின் பின்னரே இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சிகள் சில செய்திகளை வெளியிட்டன.

போர் நடக்கும் காலங்களில் தமது செய்தி அறிக்கையில் தொடர்ச்சியாக இரண்டு பக்கத்து செய்திகளையும் மக்களின் அவலங்கலையும் அல் ஜசீராவும் சனல்4 தொலைக்காட்சியும் பதிவு செய்தன. பாரிய ஆயுதங்களை உபயோகிக்கப் போவதில்லை என இலங்கை அரசு அறிவித்து, அமைச்சர் சிதம்பரம் அந்த தகவலை முதலமைச்சர் கலைஞருக்கு சொல்லி தமிழினத் தலைவர் உண்ணாவிரதத்தை கைவிட்டு வெற்றிக் களிப்போடு வீடு திரும்பிய பின்னர் இலங்கையில் பாரிய மற்றும் இரசாயன ஆயுதங்களின் தாக்குதல்கள் நடந்ததை புகைப்பட ஆதாரங்களோடு அல்ஜசீரா மற்றும் சனல் 4 தொலைக்காட்சிகள் உலகிற்கு அறிவித்தன. சனல்4 மற்றும் அல்ஜசீராவின் ஆதாரங்களுக்கு பொய் சொல்ல முடியாமல் இலங்கை வெளியுறவு செயலர் பாலித கோகண தவித்துப் போனார்.

போர் நடந்து கொண்டிருந்த போது போர்பகுதியில் இருந்து வவுனியாவுக்கு மக்கள் வந்து கொண்டிருந்தனர். இந்த மக்கள் அனைவரையும் திறந்தவெளிச் சிறைக் கூடங்கள் போன்ற முகாம்களுக்குள் இலங்கை ராணுவம் தடுத்து வைத்திருந்தது. உச்சக்கட்டமாக போர் நடந்த போது புலிகளின் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு அதாவது ராணுவப் பகுதிக்கு வருமாறு அரசு அறிவித்தது. அந்த பாதுகாப்பு பகுதி எத்தனை பாதுகாப்பு அற்று இருக்கிறது என்பதை சனல்4 தொலைக்காட்சியே முதன் முதலில் வெளியிட்டது. 2009 ,மே மாதம் ஒளிப்பட ஆதரங்கள் நேர்காணல்கள் என்பவற்றினை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பெண்கள் முகாம்களுக்குள்ளேயே பாலியல் துன்புறுதலுக்கு உள்ளாவதும் கொலை செய்யப்படுவது. அகதி முகாமில் உள்ள தமிழர்கள் காணாமல் போவது என்பவற்றை பொய் என இலங்கை அரசு கூறி வந்த நிலையில் சனல் 4 தொலைக்காட்சி யின் வீடியோ ஆதாரங்கள் உலக அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் இதனை மீள் ஒளிபரப்ப வேண்டிய நிலை உருவானது.

இலங்கை அரசின் முகாம்கள் தங்கு முகாம்களல்ல தமிழர்களின் வதை முகாம்கள் என உலகிற்கு உணர்த்திய இந்த தொலைக் காட்சியைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களையும் திருகோணமலையில் வைத்து இலங்கை அரச படைகள் கைது செய்தனர். இலங்கையின் பாதுகாப்பு துறை செயலர் மட்டதில் இருந்து தங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும். கைது செய்து லண்டனுக்கு அனுப்பப்படும் வரை ஆபத்தான நிலையில் இருப்பதாகவே தாங்கள் உணர்ந்ததாகவும் அந்த ஊடகவியலாளர்கள் கூறினர். இந்த நிலையில் சனல்4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு இலங்கை அரசு தடைகள் விதித்தது. தேச விரோத குற்றச் சாட்டுக்களை முன் வைத்தது. இங்கிலாந்து அரசிடம் முறையிட்டது.

ஆனாலும் தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையினை வெளிக் கொண்டு வருவதில் தனது பங்கினை சனல்4 தொலைக்காட்சி செய்தது. புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் முதல் முதலில் சனல் 4 மூலமே வெளியுலகோடு பேச ஆரம்பித்தார். இதன் மூலம் உலகின் கவனம் சனல் 4 பக்கம் திரும்பியிருந்தது. ஒரு சிறிய நாட்டில் விடுதலைக்காக போராடும் இயக்கமாக இருந்தாலும் புலிகள் இயக்கம் என்பது உலகின் மிக வலுவான போராட்ட இயக்கமாவே உலகம் முழுவதிலும் பார்க்கப்பட்டது. அத்தகைய சூழலில் உலகம் முழுவதில் தன்னுடைய தொலைக்காட்சியின் அறிமுகத்தையும் பிரபலத்தையும் இலங்கை பிரச்சினையினை அதிரடியாகக் காண்பிப்பதன் முலம் சனல் 4 தொலைக் காட்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒருவகையில் ஊடக வியாபாரத்தின் உத்திதான். ஆனால் தமிழர்களின் நியாயங்களைப் புரிந்து கொண்டு இந்த தொலைக்காட்சி செயற்பட்டிருக்கிறது என்பது அடக்கப்படும் மக்களுக்கு சார்பான ஒன்று.

செப்டம்பர் மாதத்தில் வெளியான படக்காட்சி இன்னும் உலகை உலுக்கிப் போட்டது. இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல பலரையும் இலங்கை ராணுவத்தின் கோர முகத்தை உணர வைத்த அந்த காட்சிகளை வெளியிட்டதன் மூலம் தனது தொலைக்காட்சிக்கு பரபரப்பையும் விளம்பரத்தையும் தேடிக் கொண்டது என்ற விமர்சனம் எழுந்தாலும் கூட, இதன் மூலம் அந்த தொலைக்காட்சி செய்திருக்கும் வேலை மிக முக்கியமானது. நிர்வாணப்படுத்தப்பட்டு பின்புறம் கைகள் கட்டப்பட்டு தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் சுடப்படும் அந்தக் காட்சிகள் இலங்கை அரசை ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனாலும் இது போலியாக சித்தரிக்கப்பட்டது என ஆதாரங்களோடு இலங்கை அரசு சொன்னாலும் சனல் 4 தனது செய்தியின் உண்மைத் தன்மையில் உறுதியாக இருக்கிறது.

இதேவேளை சனல் 4இன் தலைமை அதிகாரி அன்டி டன்கன் தமது தொலைக்காட்சி இவ்வீடியோ கிளிப்பை வெளியிட்டமை சரியான முடிவு என்றும், இதனுடைய நம்பகத்தன்மை அல்லது உண்மைத்தன்மை குறித்து எங்களால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், இவ்வாறான ஒரு விடயம் மக்களின் பார்வைக்குச் செல்ல வேண்டும் என்றே நாங்கள் நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சி நிதிப் பற்றாக்குறையில் இருக்கிறது அதனால் தனக்கு சுய விளம்பரம் தேடப் பார்க்கிறது. இதனை இங்கிலாந்து அரசு கண்டிக்க வேண்டும் என இலங்கை அரசு சொன்னாலும், 1982 இல் இருந்து இயங்கி வரும் இந்த தொலைக்காட்சிக்கு இலங்கை பிரச்சினையில் தமிழர்கள் பக்கத்து நியாயத்தைச் சொல்லி சுய விளம்பரம் தேடுவது மட்டும் நோக்கமாக இருக்காது. இது அந்த தொலைக்காட்சிக்கு விளம்பரம் தரக் கூடியதுதான் என்றாலும் ஒரு மனித அவலத்தை உலகிற்கு கொண்டு வருவதில் அந்த தொலைக்காட்சி சிறப்பு கவனம் கொண்டிருக்கிறது எனபதை அதன் தொடர்ச்சியான செய்திகளும் அதன் தலைமை செயல் அதிகாரியின் பேச்சுகளும் உறுதி செய்கின்றன.

மார்க் அன் ஸ்பென்ஸர் நிறுவனத்துக்கு எதிராக சனல் 4 தலைமை அதிகாரியின் பேச்சு அந்த தொலைகாட்சியின் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு பின்னர் அகற்றப்பட்டது. இலங்கைப் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்ற பிரச்சாரம் மேற்குலகில் முன்னெடுக்கப் பட்டது. இதற்கு இலங்கையில் தொழிற்சாலையைக் கொண்டிருக்கும் மார்க் அன் ஸ்பென்ஸர் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து பேசிய சனல் 4 தலைமை அதிகாரி இலங்கையில் உற்பத்தியாகும் ஒவ்வொரு ஆடைக்கு பின்னாலும் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான உடல்களும் குருதியும் முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 300000 மக்களின் அவலமும் இருக்கிறது என்றார். இவரின் இந்தப் பேச்சு வர்த்தக நிறுவனங்களை தாக்குவதாக இருந்ததால் அது நிச்சயமாக சனல்4 இன் விளம்பர முகாமைக்கு சிக்கலானதே.

இங்கிலாந்தின் புகழ்மிக்க தொலைக்காட்சி அலைவரிசையான சனல் 4 தொலைக்காட்சியின் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேவை நடத்தும் பிக் பிரதர் நிகழ்ச்சி மிகப் பிரபலமானதும் நம் இந்தியர்களுக்கும் தெரிந்ததும் தான். இது தவிர இன்னும் சில உப அலைவரிசைகளையும் சனல் 4 கொண்டிருக்கிறது. பழமைவாத பிபிசி போன்ற நிறுவனங்களுக்கு மாற்றான இந்தத் தொலைக்காட்சியின் பார்வையாளர் வீச்சு எப்போதும் அதிகமானதே. அத்தகைய ஒரு மேற்குலக தொலைக்காட்சி தமிழர் உரிமைகள் குறித்து கவனம் செலுத்துவது தமிழர்களின் போராட்டத்துக்கும், அடக்கப்படும் தமிழர்களைக் காப்பதற்கும் மிக அவசியமானது. ஆனால் இந்த தொலைக்காட்சி ஆதாரங்கள் மூலம் மட்டும் இலங்கை அரசை கிரிமினல் குற்றவாளியாக்கிவிட முடியாது. ஆனாலும் உலகின் கவனத்தை திருப்புவதற்கு இது உதவும்.

 source:parantan
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP