சமீபத்திய பதிவுகள்

பெண் ஜேம்ஸ்பாண் ட்:நடத்தையில் சந்தேகம்: கணவரை துப்பறியும் பெண்கள்

>> Thursday, November 12, 2009


 இப்போதெல்லாம் பெண்கள்- நிறையவே மாறிவிட்டார்கள்.கணவன் சொல்லே மந்திரம் என்று அவர் சொல்லுக்கு மறுவார்த்தை சொல்லாமல் அடங்கி கிடந்ததெல்லாம் அந்த காலம்.
 
தற்போது கணவன் வீட்டிற்கு தாமதமாக வந்தாலோ, அலுவலக வேலை என்று கூறி வெளியூரில் தங்கி வந்தாலோ... அவர்களிடம் கேள்வி கேட்க தவறுவதில்லை.
 
இன்னும் சொல்லப்போனால் கணவர் நடத்தையில் சிறிது மாற்றம் தெரிந்தாலே போதும். உடனே சுதாரித்துக் கொண்டு தனியார் துப்பறியும் நிறுவனங்களுக்கு சென்று கணவரின் நடத்தை சரி இல்லை. அவர் ஒழுங்காக வீட்டுக்கு வராமல் என்ன செய்கிறார் என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள் என்று படையெடுக்கிறார்கள் என்கிறார் சென்னையின் பிரபல துப்பறியும் நிபுணர் மாலதி.
 
தென்னிந்தியாவின் முதல் பெண் ஜேம்ஸ்பாண்ட் என்று வர்ணிக்கப்படும் இவர் ஏராளமான பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். இவரது கணவர் அருள்மணிமாறன். இவர் சென்னை மவுண்ட் ரோட்டில் "ஸ்டார் டிடக்டிவ்" என்ற துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
 
இருவரும் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்பறிந்து சாதனை படைத்துள்ளனர்.
 
இவர்கள் தற்போது திருமணத்திற்கு முன்பே மணமகன் நல்லவரா? கெட்டவரா? என்று கண்டறிவது, மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கும் கணவரை கையும்- களவுமாக பிடிப்பது, கல்லூரி மாணவ- மாணவியரின் மீது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவர்களது அன்றாட நடவடிக்கைகளை துப்பறிந்து பெற்றோரிடம் அறிக்கை தருவது... என்று உயிரை பணயம் வைத்து துப்பறிந்து வருகிறார்கள்.
 
இவர்களிடம் துப்பறிவதற்கான மைக்ரோ கேமரா, ரிக்கார்டர், அதிநவீன பைனாகுலர், அதிக தூரத்தில் இருந்து கண்காணிக்கும் நவீன கருவிகள்... என்று ஏராளம் உள்ளன. துப்பறிவதற்கென்று 10-க்கும் மேற்பட்ட ஆண்- பெண் ஊழியர்களும் உள்ளனர்.
 
இதனால் எப்பேர்பட்ட கில்லாடி மனிதர்களையும் இந்த ஜேம்ஸ்பாண்ட் தம்பதிகளால் எளிதில் துப்பறிந்து உண்மையை கண்டறிய முடிகிறது.
 
சமீப காலமாக இவர்களிடம் ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் வருகிறார்கள். அவர்கள் அனைவருமே தங்கள் கணவரின் நடத்தையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவருக்கு வேறு எந்த பெண்ணுடனாவது தொடர்பு இருக்கிறதா? என்று துப்பறிந்து சொல்லுங்கள். அவரது நடத்தையைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள். நாங்களும் அவர்கள் சொன்னபடியே துப்பறிந்து அறிக்கை கொடுக்கிறோம் என்கிறார், மாலதி.
 
இந்த தம்பதி உயிரை பணயம் வைத்து துப்பறிந்த சில சம்பவங்களை நம்மிடம் திக்... திக்... திகிலுடன் விவரித்தார் அருள்மணிமாறன்.
 
இதோ....
 
சென்னை அண்ணாநகரை சேர்ந்த டாக்டர் சேகர் (பெயர் மாற்றம்). அவருக்கு 40 வயது. 12 வயது மகன், 10 வயது மகள் என 2 குழந்தைகள் உள்ளனர். பெங்களூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு மாதம் ஒரு தடவை சேகர் சிறப்பு மருத்துவராக செல்வது வழக்கம்.
 
அப்போது ஒரு மாடல் அழகி ஸ்வீட்டிக்கு ஆபரேசன் செய்தபோது அவர் மீது காதல் வயப்பட்டார்.  இதனால் ஸ்வீட்டியிடம் ஆபரேசனுக்கு பணம் கூட வாங்கவில்லை. ஸ்வீட்டியும், டாக்டருடன் நெருங்கிப் பழகினார். டாக்டரும் பெங்களூர் போகும்போதெல்லாம் 4 நாட்கள் தங்கி விடுவார்.
 
அவளது அழகில் கிறங்கிப்போன டாக்டர் சில மாதங்களுக்கு பிறகு ஸ்வீட்டிக்கு தாலி கட்டி மனைவியாக்கி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்க வைத்தார். சேகரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது மனைவி எங்களிடம் வந்து கணவரின் பெங்களூர் "விசிட்" பற்றி துப்பறிந்து சொல்லுங்களேன் என்றார்.
 
நாங்களும் முதலில் இது சாதாரணமானதுதானே என்று நினைத்தோம். ஆனால், நாங்கள் பெங்களூர் சென்று டாக்டரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தபோதுதான் அவரது லீலைகள் தெரிய வந்தது. இதுதவிர இன்னொரு அதிர்ச்சியான தகவலும் எங்களுக்கு கிடைத்தது. ஸ்வீட்டிக்கு டாக்டர் தவிர வேறு சில வி.ஐ.பி.க்களுடனும் தொடர்பு இருந்தது எங்களுக்கு தெரிய வந்தது.
 
நான் உடனே டாக்டர் சேகரின் மனைவிக்கு கணவரின் 2-வது மனைவி பற்றி சொன்னதுதான் தாமதம் பொங்கி எழத்தொடங்கி விட்டார். அப்போது அவரை நாங்கள் சமாதானம் செய்தோம்.
 
அடுத்ததாக டாக்டர் சேகருக்கு மாடல் அழகி ஸ்வீட்டியின் கெட்ட நடத்தைகள் தெரிய வேண்டும் என்பதற்காக அவரை ஒருநாள் நைசாக பெங்களூர் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, ஸ்வீட்டி தனது வேறு சில ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உல்லாசமாக இருப்பதை காட்டினோம்.
 
இதைப்பார்த்ததும் டாக்டர் சேகர் 2-வது மனைவி ஸ்வீட்டியை அந்த நிமிடமே கைகழுவினார். பின்னர் அவரை முதல் மனைவியிடம் அழைத்து வந்தோம். அவர் மனைவியிடம், தனது தவறான செயலுக்கு மன்னிப்பு கேட்டு கொண்டார். மனைவியும் அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார். தவறான பாதையில் சென்ற என்னை சரியான நேரத்தில் கண்டுபிடித்ததுடன், ஸ்வீட்டியின் தவறான நடத்தையை நேரில் காண்பித்து திருந்த வைத்தீர்கள்.
 
இல்லை என்றால் என் மீதும் குழந்தைகள் மீதும் உயிரையே வைத்திருக்கும் அன்பு மனைவியை அல்லவா பிரிந்திருப்பேன் என்றார், டாக்டர் சேகர் கலங்கிய கண்களுடன். கடந்த மாதம் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் மல்லிகா என்பவர் எங்களிடம் வந்து, எனது கணவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடம் 6 இளம்பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 2 பேருடன் அவர் தவறான உறவு வைத்திருப்பாரோ என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.
 
இது பற்றி அவரிடம் கேட்டு தகராறு செய்தேன். ஆனால், அவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். அவர் சொன்னபடியே அவரது டிராவல்ஸ் நிறுவனத்திற்கு எங்கள் ஊழியர்களை பயணிகள் போல் அனுப்பி ஒரு வாரம் பின் தொடர்ந்தோம்.
 
அவர் தொழில் விஷயமாக எங்கு சென்றாலும் ஊழியர்கள் ஒருவர் மாறி ஒருவர் கண்காணித்தனர். அப்போது அவர் குணத்தில் சுத்த தங்கம் என்பது தெரிந்தது. உடனே நாங்கள் மல்லிகாவை சாந்தி தியேட்டரின் எதிரில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு வரச்சொன்னோம்.
 
அவரிடம் நீங்கள் சந்தேகப்படுவது போல் உங்கள் கணவர் சபலபுத்தி உடையவர் அல்ல. தொழிலில் அக்கறையுடன செயல்படுகிறார். அவரை எளிதில் எந்த பெண்ணாலும் கவர்ச்சியை காட்டி ஏமாற்ற முடியாது.
 
உங்கள் கணவருடன் வீண் தகராறு செய்யாமல் விட்டுக்கொடுத்து வாழுங்கள். நாம் இந்த உலகத்தில் நன்றாக வாழப்போவதென்னவோ அறுபதோ எழுபதோ ஆண்டுகள்தான். வாழும் நாட்களில் முடிந்தவரை கணவருடன் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.
 
அவரை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை தூக்கி எறியுங்கள் என்று "அட்வைஸ்" செய்து அனுப்பி வைத்தோம் என்றார்.
 
மாலதி கூறும்போது, சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் விவேக் (பெயர் மாற்றம்) தொழில் அதிபர். இவரது மனைவி லதா (பெயர் மாற்றம்) இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
 
இந்நிலையில் விவேக்குக்கும், அவரது நிறுவனத்தில் பணியாற்றிய 21 வயதே ஆன ஷீலாவுக்கும் காதல் மலர்ந்தது. ஷீலா மிகவும் அழகாக இருந்ததால் அவளுக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ள கொட்டி வாக்கத்தில் தனி வீடு வாங்கி குடியமர்த்தினார்.
 
இதனால் அவர் அடிக்கடி வீட்டுக்கு வருவதில்லை. அலுவலக வேலையாக வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு ஷீலா வீட்டில் தங்கி உல்லாசமாக இருந்தார். அவர் நடத்தையில் சந்தேகம் அடைந்த லதா என்னிடம் வந்தார். நாங்கள் விவேக்கை பின் தொடர்ந்து சென்று ஷீலா வீட்டை கண்டுபிடித்தோம்.
 
பின்னர் நான் எனது கணவர் அருள்மணிமாறன், லதா மற்றும் மனநல ஆலோசகர்கள் ஆகியோர் ஷீலா தனியாக இருக்கும் போது சுற்றி வளைத்தோம். அவளிடம், "விவேக்குக்கு 15 வயதில் மகள், இருக்கிறாள். அவரது மனைவிக்கு கணவர்தான் உயிர் நீ தயவு செய்து அவரை விட்டுவிட்டு உன் வயதுக்கு பொருத்தமான நல்ல மணமகனை தேடிக்கொள். அனாவசியமாக அடுத்த பெண் வாழ்க்கையில் நுழைந்து கெடுக்காதே. இதையும் மீறி நீ விவேக்குடன் வசித்தால் உன்னை ஜெயிலுக்கு அனுப்புவோம் என்று கூறிவிட்டு வந்தோம்.
 
இதனால் பயந்து போன ஷீலா மறுநாளே தனது சொந்த ஊரான மைசூருக்கு ஓடிவிட்டாள். அதன் பிறகு விவேக் ஷீலாவை மறந்து மீண்டும் மனைவியுடன் சேர்ந்தார். அவர்களது குடும்பத்தில் வீசிய புயல் மறைந்து தென்றல் காற்று வீசுகிறது. லதா கடந்த வாரம் எங்களிடம் வந்து, "சரியான நேரத்தில் உங்களிடம் வந்தேன். எனது வாழ்க்கையில் புகுந்த ஷீலாவை சாமார்த்தியமாக செயல்பட்டு விரட்டி விட்டீர்கள். இதற்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை என்றபோது என்னையும் மீறி கண்களில் ஆனந்த கண்ணீர்!
 
துப்பறியும் துறை மூலம் பிரிந்திருந்த பல குடும்பங்களை எங்களால் சேர்க்க முடிகிறது. இதில் நிறைய சவால்கள் இருந்தாலும் முழுமையான மனநிறைவும் கிடைப்பது நிஜம் என்கிறார் மாலதி.--


source:maalaimalar  

StumbleUpon.com Read more...

மட்டக்களப்பில் மீண்டும் அதிசயம் காதில் பூவைக்கும் சில இணையங்கள்

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிவேம்பு எனும் கிராமத்தில் நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் (10.11.2009) மாலை 4.00 மணியளவில் ஓர் அதிசயம் இடம்பெற்றுள்ளது எனவும் அம்மன் பிள்ளை ரூபத்தில் வந்து விளையாடி விட்டு பின்னர் நாக பாம்பாக மாறி, அரைவாசி வால், உள் நுழைந்தும், மீதி உள் நுழையாமலும் ஒரு பாம்புச் சிலையாக மாறி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. முதலில் நாம் அப்பகுதி மக்களை விசாரித்தபோது இது குறித்து அவர்கள் அறியவில்லை எனத் தெரிவித்தனர். பின்னர் இணையத்தளச் செய்தியை வாசித்துவிட்டு பலர் தமது உறவினர்களை தொடர்புகொண்டு கேட்டதற்கமைவாகவே பலர் அவ்விடத்திற்குச் சென்று பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட நாக பாம்பின் சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது எவ்வாறு அங்கு வந்தது என்று யாருக்கும் தெரியாது எனவும் கூறப்படுகிறது. சில இணையத்தளங்கள் கற்பனையின் உச்சத்திற்கே போய், கல்லான பாம்பிற்கு இதயத்துடிப்பும் கொஞ்ச நேரம் இருந்ததாக புலுடா விட்டுள்ளது. சமீபத்தில் 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட கடல் கன்னி போன்ற உருவமுடைய மீன் ஒன்றையும் கிழக்கு மாகாண மீனவர்கள் பிடித்தார்கள் என்ற பெரும் பொய்யான செய்திகளை பரப்பி இருந்தனர் என்பது யாவரும் அறிந்ததே. அச் செய்தி பொய்யானது எனச் சுட்டிக்காட்டியபோது, அதனை உடனே அகற்றிவிட்டனர். தமிழர்களின் காதில் பூ சுத்த நினைக்கும் இது போன்ற இணையங்கள் தற்போது செய்திகள் ஏதுமின்றி அலைவதால், ஏதாவது ஒரு செய்தியை பரபரப்பாக்க முற்படுகின்றன. அத்துடன் அவர்கள் பரப்பிய அப்பொய்யான செய்திக்கு இதுவரை தமிழர்களிடம் மன்னிப்பும் கோரவில்லை.

ஆக்கபூர்வமான எவ்வளவோ செய்திகள் இருக்கின்றன, வரும் மாவீரர் தினம் பற்றி ஒரு கட்டுரை எழுதலாம், இறந்த மாவீரருக்கு ஒரு கவிதைப் போட்டி நடத்தலாம், இல்லையேல் தமிழீழ சுய நிர்ணய உரிமை பற்றி எழுதலாம், இதை விடுத்து, கிழக்கில் அதிசயம் நடப்பதாக மக்கள் மத்தியில் ஏன் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும், கருணாவிடம் கையூட்டம் எதுவும் பெற்றுவிட்டதா சில இணையங்கள்?. ஏன் பிரதேசவாதத்தை இங்கு புகுத்தவேண்டும்? புலம்பெயர் தமிழர்கள் ஒரு போராட்டப் பாதையில் செல்லும் போது, பிரதேசவாதத்தை தோற்றுவித்து வீண் குழப்பங்களை தோற்றுவிக்கிறது சில இணையங்கள்.

சமீபத்தில் சரத் பொன்சேகா அமெரிக்கா சென்றபோது, அவரைக் காட்டிக்கொடுத்த துரோகச் செயலைச் செய்தவர் ஒரு சிங்கள இனத்தவர் என்ற பொருட்பட ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது ஒரு இணையம். அதாவது சரத் பொன்சேகாவை அமெரிக்கா விசாரணை செய்யப்போகிறது என்றால் அது நல்ல செயல்தானே... அவரை காட்டிக் கொடுப்பது ஏன் துரோகம்? அது சிங்கள ஆதரவாளர்களுக்கு துரோகமாக இருக்கலாம், தமிழர்களுக்கு ஏன் துரோகமாகும்... இதன் பொருள் என்ன, தமிழர்களின் மத்தியில் இவ் வகையான இணையங்கள் எதைச் சொல்ல வருகின்றது, அவர்கள் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தவேண்டும்.

முருகனால் பணமூடை கிடைத்த சம்பவம், கடவுள் தோன்றிய சம்பவம், கடல்கன்னி சம்பவம், தற்போது பிள்ளை பாம்பான சம்பவம் என அனைத்தையும் கிழக்கில் நடக்கிறது என்று பொய்கூறும் இணையங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என நாம் விவாதிக்கவில்லை. கடவுள் இல்லை என நாம் கூறவும் இல்லை. நமக்கு மிஞ்சிய சக்தி ஒன்று இருக்குமாயின், இந்த பூமியில் மாவடிவேம்பு எனும் கிராமத்தில் ஒரு சிறு பிள்ளையாக வந்து விளையாடிவிட்டு பின்னர் பெரியவர்களை கண்ட உடன் பாம்பாக மாறவேண்டிய அவசியம் என்ன? இச் செயல் மூலம் கடவுள் நமக்கு என்ன சொல்ல வருகிறார். இறைவனின் ஒவ்வொரு திரு விளையாடலிலும் ஒரு அர்த்தம் இருக்கும், அது ஒரு வரலாறாகவோ காவியமாகவோ, அல்லது ஒரு கெட்டதை அழிக்கும் நோக்கமாகவோ இருக்கும், ஆனால் இங்கு நடந்த சம்பவம் எதனை நமக்கு உணர்த்துகிறது? கடவுள் சிறு பிள்ளைகளுடன் விளையாடுவார் என்றா? அது தான் ஞானசம்பந்தர் விடயத்தில் நடந்துவிட்டதே...

கடவுளாக இருந்தாலும் இப்படி ஒரு சிறுபிள்ளைத்தனமாக விளையாடுவாரா கடவுள்.. இதைத்தவிர அவருக்கு வேறு ஒன்றும் வேலை இல்லையா? சமயமும் கடவுள் நம்பிக்கையும் மனிதரை மேம்படுத்தும், நல்ல மனிதராக வாழவைக்கும். அதனை பயன்படுத்தி திருப்பதிகோவில் போல சொத்துகளைச் சேர்க்கிறார்கள் சிலர். அதனைப் பயன்படுத்தி போலிச் சாமியாராகி பணம் சம்பாதிக்கின்றனர் சிலர், அதற்கு மேலே ஒரு படி போய் தம்மையே கடவுள் தமக்கே பாலபிஷேகம் செய்ய வேண்டும் என டென்மார்க்கில் சிலர் அலைகிறார்கள்... அதனைப் போல அந்த வழியை சில இணையத்தளங்களும் கைகளில் எடுத்துள்ளது. ஆக்க பூர்வமான செய்திகளை வெளியிட்டு இக்கட்டான சூழ் நிலையில் உள்ள எம் தமிழீழ மக்களின் போராட்டங்களுக்கு உரம்சேர்க்க நினைக்காமல், பணம் சேர்க்க நினைக்கும் இது போன்ற இணையத்தளங்களை இனம் கண்டு நாம் தவிர்க்கவேண்டும்.

தமிழன் காதில் இதுபோன்ற இணையங்கள் பூ சுத்தப் பார்க்கின்றதை நாம் அனுமதிக்கலாமா ?


source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பிளீஸ்...மிஸ்டர் போலீஸ் கமிஷனர், காணாமல் போன என் சட்டை எங்கே?

பிளீஸ்...மிஸ்டர் போலீஸ் கமிஷனர், காணாமல் போன என் சட்டை எங்கே? குடிகாரர் நடத்திய கூத்து
 கோபம் ஒரு பக்கம் வந்தாலும், மறுபக்கம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒரு காமெடி காட்சி பின் வருமாறு:-
 
திசையன்விளையை சேர்ந்த கோவில்ராஜ் மகன் செல்லத்துரை (வயது40). நெல்லை டவுணில் உள்ள லாரி சர்வீஸ் ஒன்றில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார்.
 
நேற்று மாலை பணி முடிந்ததும் நேராக "டாஸ்மாக்" சென்று ஒரு "குவார்ட்டரை" உள்ளே தள்ளினார். போதையில் லேசாக "லம்பி"யபடியே அங்கிருந்து கிளம்பி கொக்கிரகுளம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு வந்தார்.
 
கரையோரத்தில் தனது சட்டையை கழற்றி வைத்து விட்டு குளிக்கச் சென்றார். சுமார் அரை மணி நேரம் நன்றாக குளித்துவிட்டு கரைக்கு வந்த அவருக்கு ஒரு "ஷாக்" காத்திருந்தது. சினிமாவில் வருகிற மாதிரி அவரது மேல் சட்டையை யாரோ எடுத்து சென்றுவிட்டார்கள்.
 
டேய் எவன்டா என் சட்டையை எடுத்தது? என்று தள்ளாடியபடியே அருகில் இருந்த போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு போனார்.
 
"வாசலில் நின்ற காவலர் நீங்க யாரு? என்ன வேணும்? என்று கேட்டார்".
 
நான் இம்மீடியட்டா கமிஷனரை பார்க்கணும். என் சட்டை காணாம போச்சு. அத கண்டு புடிச்சு தரணும். முடியுமா? முடியாதா?  என்றார் செல்லத்துரை.
 
காவலர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் செல்லத்துரை கேட்காததால் மேலும் சில போலீசார் சேர்ந்து அவரை "அலேக்"காக தூக்கிக் கொண்டு வந்து நடுரோட்டில் விட்டனர்.
 
ஆனால் செல்லத்துரை விடுவதாக இல்லை. ஒரு கை பார்த்து விட முடிவு செய்தார்.
 
"என்னய்யா நாடு இது? ஒரு சட்டையை கண்டு புடிச்சு தர முடியல. இவங்கள்லாம் பெரிய கொள்ளையை எப்படி கண்டுபுடிக்க போறாங்கே?"
 
"என் சட்டையில் 125 ரூபா இருந்துச்சு. ஒரு கட்டு பீடியும், தீப்பெட்டியும் கூட காணாம போச்சு... டேய் எவண்டா எடுத்தது?" என்றபடியே மீண்டும் கமிஷனர் அலுவலகத்துக்குள் புகுந்தார்.
 
கடுப்பாகி போன போலீசார் அவரை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து போட்டனர்.
 
"கமிஷனரை பத்தி நான் கலெக்டர்கிட்ட உட்கார்ந்து பேசப்போறேன்" என்றபடி செல்லத்துரை அருகில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்தார்.
 
அங்கு கலெக்டர் இல்லை என்றதும் அருகில் இருந்த டி.ஆர்.ஓ. அறைக்குள் புகுந்தார்.
 
செல்லத்துரையின் நிலைமையை புரிந்த அவர்கள் "சார்.. உங்க புகாரை மனுவா எழுதிக்குடுங்க" என்றனர்.
 
"ஆங்... இதுதான் ரைட்" என்றபடியே ஒரு பேப்பரும், பேனாவும் கேட்டு அருகில் இருந்த வினாயகர் கோவில் முன்பாக உட்கார்ந்து தனது காணாமல் போன சட்டை பற்றிய விபரங்களை எழுதி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.
 
"இன்னும் ஒரு வாரத்தில உங்க சட்டை எப்படியும் கிடைச்சுடும்" என்று அவரை ஊழியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க... செல்லத்துரை "அடுத்த வாரம் நான் வர்றேன்" என்றபடி கிளம்பி போயிருக்கிறார்.

source:maalamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP