சமீபத்திய பதிவுகள்

Happy New Year

>> Thursday, December 31, 2009

photo code

StumbleUpon.com Read more...

புலிகள் இடத்தில் புதிய படையா?

 

''இலங்கையில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எல்லாப் போராளிக் குழுக் களும் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டன. இனிமேல் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் யாரும் ஈடுபட முடி யாது!'' - இது வடக்கே போர் முடிவடைந்ததும் நாட்டு மக்களுக்கு ராஜபக்ஷே அளித்த வெற்றி உரை!

ஆனால், புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு சந்தடியே இல்லாமல் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டு, அதே விடுதலைப் போராட்டத்தைத் தொடரும் முடிவோடு ஆயுங்களை உயர்த்தி இலங்கை அரசை அதிர வைத்துள்ளது 'மக்கள் விடுதலை ராணுவம்'.

பிரபாகரனுக்குப் பிறகு புலிகள் அமைப்பின் எதிர்காலம் குறித்து பலவித சர்ச்சைகள் அரங்கேறும் நிலையில், இலங் கையின் சரித்திரப் போக்கை மறுபடி மாற்றி அமைக்கும் வலிவு கொண்டதா இந்த அமைப்பு என்று அவசர ஆராய்ச்சி தொடங்கியுள்ளது அங்கே!

'கோணேஸ்' என்னும் புனைபெயரைக் கொண்டவர்தான் இந்த புதிய இயக்கத்தின் தளபதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்தியிருக்கிறார். ஏற்கெனவே, புலிகள் அமைப்பில் இருந்த கோணேஸ், 1983-ம் வருட வாக்கில் உத்தரப் பிரதேசக் காடுகளில் புலிகளுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டபோது, பயிற்சி பெற்றவர். பின்னாளில் புலிகள் அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அமைப்பிலிருந்து விலகி, தனியாகச் செயல்படத் தொடங்கினார். தொடர்ந்து கிழக்கில் அரசுக்கெதிரான போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட கோணேஸ், பிறகு சிறையிலிருந்து தப்பி ஐரோப்பிய நாட்டில் தஞ்சமடைந்திருக்கிறார். அங்கிருந்து பாலஸ்தீனம் மற்றும் கியூபா சென்றவர் அங்கிருக்கும் போராளிக் குழுக்களிடம் சிறப்புப் பயிற்சியையும், கெரில்லா போர் முறையையும் கற்றுக்கொண்டு, தற்போது இலங்கைக்குத் திரும்பியிருக்கிறார்.

புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து, தனியாக இருந்து தன்னுடன் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட சிலரை இணைத்து, 10 பேர் கொண்ட செயற்குழுவை உருவாக்கி இருக்கிறார் கோணேஸ். இறுதிக்கட்டப் போரின்போது தப்பித்த விடுதலைப் புலிகளில் 300 பேர் இந்த இயக்கத்தில் தற்போது உறுப்பினர்களாக இருப்பதாகவும்... இது தவிர, வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த... 16 வயதிலிருந்து 20 வயதுக்கு உட்பட்ட 500 தமிழ் இளைஞர்களைத் தேர்ந் தெடுத்து அவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக கிழக்குப் பகுதியின் அடர்ந்த வனப் பகுதியில் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை ராணுவ உளவுப் பிரிவு குறிப்பு அனுப்பியுள்ளதாம். ராஜபக்ஷே மறுபடி தூக்கம் இழந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது!

கடந்த 2004-ல் புலிகள் அமைப்பிலிருந்து கேணல் கருணா தலைமையில் 6,000 புலிகள் பிரிந்தனர். தற்போது அவர்களில் பாதிப்பேர் கிழக்கு மாகாண முதல்வர் சிவனேசத்துரை பிள்ளையானிடம் இருக்க... மீதிப் பேரை கருணா கண்டுகொள்ளவில்லை. இவர்களில் பலரும் தற்போது என்ன செய்வதென்று திகைத்து நிற்கும் நிலையில் அவர்களையும் மக்கள் விடுதலை ராணுவத்தில் படிப்படியாக இணைத்து வருவதாகக் கூறியிருக்கிறார் கோணேஸ். அதோடு, முகாம்களில் இருக்கும் இரண்டரை லட்சம் தமிழர்களில் இருந்து 10,000 பேர் இயக்கத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கோணேஸ் தெரிவித்திருக்கிறார். தற்போது இயக்கத்தைச் சேர்ந்த 50 பேர் பாலஸ்தீன விடுதலை இயக்கம், கியூபா கெரில்லா குழுக்கள் மற்றும் இந்தியாவிலுள்ள மாவோயிஸ்ட்களிடம் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள கோணேஸ், ''இலங்கையில் இன்னும் யுத்தம் முடியவில்லை...'' என அழுத்தமாக அறிவித்திருக்கிறார்.

கடந்த வாரத்தில் லண்டனில் இருந்து வெளிவரும் 'த டைம்ஸ்' பத்திரிகையின் நிருபரை கிழக்குப் பகுதியின் ஒரு மறைவிடத்தில் சந்தித்திருக்கிறார் கோணேஸ்.

''மே மாதத்தில் இலங்கையில் புலிகள் வீழ்ந்த பிறகு தமிழர்களுக்கான எந்தவிதத் தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் மக்கள் விடுதலை ராணுவத்தைக் கட்டியெழுப்பி யுத்த களத்தில் இறங்குவதற்கான ஆரம்ப வேலைகளில் இறங்கியிருக்கிறோம். தனி ஈழம் என்ற வடகிழக்கு சோஷலிச உரிமையே எங்களது குறிக்கோளாக இருக்கும். இதற்கு தென்னிலங்கை சம்மதிக்காத பட்சத்தில், ராணுவம் மற்றும் அரசு தரப்புகளின் மீது எங்களது ஆயுதத் தாக்குதல்கள் இருக்கும். புலிகள் அமைப்பு கடைப்பிடித்த யுத்த தந்திரங்களை நாங்கள் எந்தக் கட்டத்திலும் கடைப்பிடிக்க மாட்டோம். அதே நேரத்தில் புலிகளைவிட பல மடங்கு அழிவுகளை இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் உண்டாக்குவோம்!'' என டைம்ஸ் பத்திரிகையிடம் விரிவாகப் பேசியிருக்கிறார் கோணேஸ்.

தற்போது இந்த இயக்கத்தின் வரவு, ஈழத் தமிழ் ஆர்வலர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. ''விடுதலைப் புலிகளது வீழ்ச்சியின்போது எஞ்சி இருந்த சுமார் 4,000-க்கும் அதிகமான பயிற்சி பெற்ற போராளிகளை கிழக்குப் பகுதிக்கு அனுப்பி வைத்து விட்டார் பிரபாகரன். தற்போது, எந்தப் புகலிடமும் இல்லாமல் காட்டுப்பகுதியில் இருக்கும் அவர்கள், அரசாங் கத்திடமும் சரணடைய முடியாமல் சாப்பாட்டுக்கே திண்டாடி வருகின்றனர். சரணடைந்தாலும் இவர்களை ராணுவம் கொன்று விடும். இவர்களே நினைத்தாலும்கூட ஆயுதங்களைக் கீழே போட முடியாது. இவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கேணல் ராமு ராணுவத்திடம் சிக்கித் தற்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. இந்தச் சூழலில்தான் பழைய புலித் தளபதியாக இருந்த கோணேஸ் இவ்வாறு அறிவித்திருக்கிறார். கடந்த வாரத்தில் நடந்த இந்த இயக்கத்தின் முதல் சந்திப்புக் கூட்டத்தில் ஜனவரி முதல் வாரத்திலிருந்து தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வருகிறது. மரபு வழி ராணுவப் போராக இல்லாமல் கெரில்லா தாக்குதல் களையே தொடுப்பார்களாம். முதல் கட்டமாக, தமிழ் துரோகத் தலைவர்களான கருணா, டக்ளஸ் தேவானந்தா, சரத் ஃபொன்சேகா என நீளும் இந்தப் பட்டியலில் நிறைய தமிழ் மற்றும் சிங்களத் தலைவர்கள் பெயர்களும் இருக்கிறதாம். மொத்தத்தில் இந்த இயக்கத்தின் வரவு இலங்கையில் இன்னும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ?'' எனப் பேசுகிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

'அரசாங்கம் போராளிக் குழுக்களை முற்றிலும் ஒழித்து விட்டதாகக் கூறி வந்த நிலையில், தற்போது மக்கள் விடுதலை ராணுவம் என்ற பெயரில் மீண்டும் போராளிக் குழுக்கள் கிளம்பியிருக்கின்றன!' என இந்த விஷயத்தை வைத்து அரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வருகின்றன எதிர்க்கட்சிகள். உடனே அவசர அவசரமாக மீடியாக்களை சந்தித்த இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகப் பேச்சாளர் கேகெலிய ரக்புக்வெல, ''கிழக்கில் மக்கள் விடுதலை ராணுவம் உதயமானது அரசுக்கும் தெரியும். விரைவில் அவர்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!'' என பேசியிருக்கிறார். இதற்கிடையில், ''எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் ஃபொன்சேகா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை போட்டுத் தள்ளுவதற்காக அரசாங்கமே உருவாக்கியுள்ள அமைப்புதான் மக்கள் விடுதலை ராணுவம்'' என கொழும்பில் கருத்து தெரிவித்து பல புருவங்களை உயரச் செய்துள்ளார் தமிழ் தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன். ''விடுதலை வேட்கையைத் தொடரும் ஒரு அமைப்பை கூலிப்படை ரேஞ்சுக்கு கொச்சைப் படுத்துவதா?'' என்று இதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

புலிகளின் பணம், ராஜபக்ஷேவின் வெற்றி!

இலங்கை பொன்னம்பல ஆனேஸ்வரர் கோயிலில் தொடங்கி முள்ளிவாய்க்கால், வாகரை, தோணி தாண்டமடுவில் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புலிகளின் டன் கணக்கிலான தங்கம் மற்றும் பணத்தை ராணுவம் தொடர்ந்து கைப்பற்றி வருவதாக ஜூ.வி. ஏற்கெனவே சொல்லியிருந்தது. இன்னொரு பக்கம் கே.பி-யிடம் நடத்திய விசாரணையில் புலிகளுக்கு சொந்தமான ஐந்து கப்பல்கள், ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் இருக்கும் 183 பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட சொத்துகள், உலகம் முழுவதும் கே.பி-க்கு இருக்கும் 147 வங்கிக் கணக்குகள் தொடர்பாகவும் வெளியில் தெரியாமல் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது அரசுத் தரப்பு. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்ரம சிங்கே, ''2005-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்ற ராஜபக்ஷே, இம்முறை தேர்தலில் விடுதலைப் புலிகளிட மிருந்து கைப்பற்றப்பட்ட பெரும் பணத்தைக் கொண்டு வெற்றி பெற முயற்சிக்கிறார். இவரது விளையாட்டுக்கு நாங்கள் பயப்படப் போவதில்லை. புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை நாட்டின் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும். அது தொடர்பான முறையான கணக்குகளும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்!'' என மீடியாக்களிடம் கொதித் திருக்கிறார்.

அதோடு, இந்த விவகாரம் அடங்காமல் உஷ்ணத்தைக் கிளப்ப... நாடாளுமன்றத்திலேயே விளக்கம் அளித்தார் பிரதமர் ரட்சணசிறி விக்கிரமநாயக்க. ''2008 மே 18-ம் தேதிக்கு பிறகு புலிகளிடமிருந்து ஏராளமான சொத்து கள், தங்கம், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது உண்மைதான். தொடர்ந்து அது பற்றிய விசாரணைகள் நடந்து வருகிறது. கே.பி-யின் வெளிநாட்டு சொத்துகள் தொடர்பாகவும் தகவல்கள் திரட்டப்படுகின்றன. 3 கப்பல்கள் நாட்டை நோக்கி இழுத்து வரப்படுகின்றன. சில கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன. விரைவில் எல்லா விவரங்களும் சபைக்கு தெரிவிக்கப்படும். இந்த பணம் மற்றும் சொத்துகள், எமது மக்களின் சொத்துகள். அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்!'' என விளக்க மளித்திருக்கிறார். இருந்தும், ''கிட்டத்தட்ட 2,000 கோடி வரை புலிகளின் பணத்தை ராஜபக்ஷே சகோதரர்கள் தனதாக்கிக் கொண்டுள்ளனர். அதை வைத்துதான் தாராளமாக அதிபர் தேர்தலை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்!'' என தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன எதிர்க் கட்சிகள்.

சவால் ராஜபக்ஷே, தயார் ஃபொன்சேகா!

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக வலிமையாக நிற்கும் ஃபொன்சேகாவை பலமிழக்கச் செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கிறது ராஜபக்ஷே தரப்பு. முதல் கட்டமாக யுத்த காலத்தில் ராணுவத்துக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ததில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகக் கூறி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. அதிபரின் நண்பரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, ''யுத்தம் முடிந்த பிறகும் நாட்டில் அமைதி வருவதை ஃபொன்சேகா விரும்பவில்லை. அதனால்தான் யுத்தம் முடிந்த பிறகும் செக்கோஸ்லேவக்கியாவில் இருந்து 30 ஆயிரம் பல்குழல் பீரங்கி ராக்கெட்டுகளை ராணுவத்துக்காக ஆர்டர் செய்திருந்தார். இந்த ஆயுதங்களும் அவரது மருமகன் கம்பெனியின் மூலமாக கப்பலில் வந்தபோது பாதுகாப்பு செயலர் அதைத் திருப்பி அனுப்பி விட்டார். அதோடு, சீனாவிலிருந்தும் பெருமளவு ஆயுதங்களுடன் ஒரு யுத்தக் கப்பல் இலங்கைக்கு வந்தது. இதையும் கோத்தபய திருப்பி அனுப்பி விட்டார். இதன் பிறகு ஏற்கெனவே நடந்த சில ஆயுதப் பரிவர்த்தனைகளைப் பார்த்தபோது பெரிய அளவில் ஊழல் நடந்தது தெரிய வந்தது. தற்போது இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் அதிபர்!'' என நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாகப் பேசியிருக்கிறார்.

இதையே இன்னும் வெளிப்படையாகச் சொன்ன அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, ''இதில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதால் ஃபொன்சேகாவை கைது செய்யக்கூட வாய்ப்பிருக்கிறது!'' என அவரை மிரட்டியிருக்கிறார். ஆனால், இது எதைப் பற்றியும் கவலைப்படாத ஃபொன்சேகா, ''ராஜபக்ஷே சகோதரர்கள் தேவையில்லாத பொய் பரப்புரையில் ஈடுபடுகிறார்கள். பதிலுக்கு நானும் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த சில விவரங்களை பற்றிப் பேச வேண்டியிருக்கும். அந்த விவரங்கள் வெளியே வந்தாலும் அவர்களின் நிலை என்னவென்பது அவர்களுக்கே தெரியும்!'' என பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதற்கிடையில் சமீபத்தில் அமெரிக்க விசிட் சென்றி ருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஃபொன்சேகாவுக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி யிருக்கிறார் அதிபர் ஒபாமா. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் அவசர அழைப்பின் பேரில் கடந்த 3-ம் தேதி டெல்லி வந்த ஃபொன்சேகா, பிரணாப் முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்துவிட்டு நாடு திரும்பியிருக்கிறார். இந்த சந்திப்பின் போது, தான் அதிபராகும் பட்சத்தில் சீனாவுடனான இலங்கையின் தொடர்பை முற்றிலும் உதறுவதாக வாக்களித்திருக்கிறாராம். தொடர்ந்து நாடு திரும்பிய ஃபொன்சேகா இனி இந்தியாவின் ஆதரவு எனக்குத்தான் என கூட்டணியினரிடம் பேசி வருகிறாராம்.

இதற்கிடையில் திடீர் திருப்பமாக, இலங்கையில் உள்ள ஐ.தே. கட்சியின் முக்கியஸ்தரும், மத்திய மாகாண அமைச்சருமான எஸ்.பி.திசாநாயக்க, எதிர்க்கட்சியிலிருந்து விலகி ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு செல்வதாக அறிவித்திருக்கிறார். கடந்த வாரத்தில் ஒரு நாள் இவரது வீட்டுக்கு திடீரென ஹெலிகாப்டரில் கிளம்பிப் போன ராஜபக்ஷே, தேர்தல் முடிந்து, தான் அதிபரானதும் இவரை பிரதமராக்குவதாக உறுதியளித்து மசிய வைத்தாராம். இதன் தொடர்ச்சியாக எஸ்.பி.திசாநாயக்க ஆளுங்கட்சிக்குத் தாவியதில் ரணிலுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.

தமிழ் கட்சிகளின் நிலை!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எஃப். (பத்மநாபா அணி), ரி.எம்.வி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய தமிழ் கட்சிகள் அதிபர் ராஜபக்ஷேவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டன. மலையகத்தைச் சேர்ந்த மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி மட்டும் ஃபொன்சேகாவுக்கு ஆதரவு தந்திருக்கிறது. ஆனால், 22 எம்.பி-க்களை வைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் ஆசி பெற்ற, தமிழ் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது வரை தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கூட்டமைப்பிடம் இரண்டு தரப்புமே ஆதரவைக் கோரி வரும் நிலையில்... கடந்த வாரம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இருவரையும் சந்தித்தார். அதன் பின் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்த சம்பந்தன், ''ராஜபக்ஷே தமிழர்களுக்கு ஆதரவான எந்த உறுதி மொழியும் வழங்க மறுக்கிறார், ஃபொன்சேகா தமிழர் களுக்குச் செய்வதாக நிறைய உறுதி மொழிகளைக் கூறுகிறார். அவற்றை நிறைவேற்றுவாரா என்பது சந்தேகம்தான்!'' என சில விஷயங்களை தமிழ் எம்.பி-க்களிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், கூட்டமைப்பிலேயே சிவநாதன் கிஷோர் போன்ற தமிழ் எம்.பி-க்கள் சிலர் ராஜபக்ஷேவுக்கு ஆதர வளிக்க வேண்டும் என வெளிப்படையாகப் போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள்.

பிறக்கப் போகும் புத்தாண்டு இலங்கைத் தமிழர்களுக்கு எப்படி அமையுமோ... ஆனால், சிங்கள தலைவர்களைப் பொறுத்தவரை தலைவலி வருடமாகவே அமையும் போல..!

- மு. தாமரைக்கண்ணன்   
 

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சின்ன சின்ன செய்திகள்

   


கம்ப்யூட்டர் விற்பனை உயர்வு எச்.பி.முதலிடம்
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாத காலத்தில் பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை, அதற்கு முந்தைய காலாண்டினைக் காட்டிலும் 24% உயர்ந்திருந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது. மொத்தம் 21 லட்சத்து 90 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் விற்பனை செய்யப்பட்ட கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையைக் (22.59 லட்சம்) காட்டிலும் குறைவுதான். இந்த காலாண்டில் தான், லேப்டாப் கம்ப்யூட்டர்களின் விற்பனை, முதல் முதலாக 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 
லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களின் மொத்த விற்பனையில் முதலிடத்தை எச்.பி.நிறுவனம் பெற்றுள்ளது. கம்ப்யூட்டர் விற்பனைச் சந்தையில் 17.4 சதவீதம் பங்கினை இது கொண்டுள்ளது. அடுத்ததாக டெல் நிறுவனம் 11.3 சதவீதம், ஏசர் 11.1சதவீதம் பங்கைப் பெற்று, முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் விற்பனையை மட்டும் கணக்கிடுகையிலும், எச்.பி.நிறுவனமே முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக எச்.சி.எல்., மற்றும் ஏசர் இடம் பெற்றுள்ளன. நோட்புக் கம்ப்யூட்டர்களில் எச்.பி., டெல் நிறுவனங்களை அடுத்து ஏசர் இடம் பெற்றுள்ளது.



ட்ரான்ஸெண்ட் தரும் 64 ஜிபி மெமரி கார்ட்
நொடிக்கு 90 எம்பி தகவல்களைப் படிக்கவும், 60 எம்பி தகவல்களை எழுதவும் திறன் கொண்ட 400 x  காம்பாக்ட் பிளாஷ் மெமரி கார்டுகளை, இந்தத் துறையில் சிறப்பு பெற்ற ட்ரான் ஸெண்ட் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. அதிக பட்சம் 64 ஜிபி கொள்ளளவு கொண்ட கார்ட்கள் உள்ளன. இதில் 13 ஆயிரம் படங்களைப் பதிந்து வைக்கலாம். மூன்று மணி நேரம் ஓடக் கூடிய முழு எச்.டி. வீடியோ படத்தினைப் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகளில்ECC (Error Correction Code)  என்னும் வசதி அமைக்கப்பட்டு உள்ளதால் டேட்டா பரிமாறப்படுகையில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், உடனே அவை சரி செய்யப்படும். இவை டிஜிட்டல் கேமரா பயன்படுத்துபவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். கார்டினை மாற்றாமல் அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து படங்களை எடுத்துப்பதிவு செய்து கொண்டே இருக்கலாம். புளு ரே டிஸ்க்குகள் கூட அதிக பட்சம் 50 ஜிபி அளவு தான் மெமரி கொள்ளும்; எனவே இந்த பிளாஷ் மெமரி கார்டுகள் நிச்சயம் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கலாம். 64 ஜிபி திறன் கொண்டது ரூ.27,000, 32 ஜிபி கொண்டது ரூ. 12,800 மற்றும் 16ஜிபி கொண்டது ரூ.6,250 என விலையிடப்பட்டுள்ளது.



கூகுள் மியூசிக் சர்ச்
ஆன்லைனில் பாடல்களுக்கான ஸ்டோர்களைத் தொடங்கி நடத்துவதில் இப்போது கூகுள் நிறுவனமும் சேர்ந்துள்ளது. இதற்கென ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. லாலா டாட் காம் ( Lala.com)  மற்றும் மை ஸ்பேஸ் தொடர்புடைய ஐ லைக் ( iLike) நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பாடல்களைக் கேட்டு வாங்குவதற்கான வழிகளை இவை மிக எளிதாக மாற்றி அமைத்துள்ளன. கூகுள் வழங்கும் இந்த மியூசிக் சேவை ஒன்பாக்ஸ் (One Box) என அழைக்கப்படுகிறது. இந்த தேடல் மூலம் முதலில் உங்களுக்குக் கிடைக்க இருக்கும் பாடல் நீங்கள் தேடும் பாடல் தானா என்பதனை, அதனை இயக்கிப் பார்த்து அறிந்து கொள்ளலாம். மற்ற தளங்கள் இது போன்ற சோதனையாக பாடலைக் கேட்பதை 30 வினாடிகள் என வரையறை செய்துள்ள நிலையில், கூகுள் அதிக நேரம் தருவது தன் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து அனைத்து வழிகளிலும் தன்னிடத்தே வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக கூகுள் மேற்கொள்கிறது என்று கூறலாம்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இணைய வேகம் கணக்கிடுவது எப்படி?

 
 

பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் கண்டிஷன்களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம். உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின்http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.

அடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட் மோடம் தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை; அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பாகிஸ்தான் கிரிக்கெட் அழிந்துவிடும் அபாயம்

அதிகமான 20 ஓவர் போட்டி பாகிஸ்தான் அணிக்கு ஆபத்து: கேப்டன் யூசுப் எச்சரிக்கை
மெல்போர்ன், டிச.31-
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 170 ரன்னில் தோற்றது. இதுகுறித்து அந்த அணி கேப்டன் முகமது யூசுப் கூறியதாவது:-
 
அதிகமான 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மோசமாக போவதற்கு 20 ஓவர் போட்டிதான் காரணம். எந்த வீரராலும் நிலைத்து நின்று ஆட முடியவில்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இங்கிலாந்தில் இந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தொழில் நுட்பத்தின் பெயர்கள்

 
 


சில வாரங்களுக்கு முன் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பெயர் வந்த பின்னணி நிகழ்ச்சிகளைப் பார்த்தோம். பல வாசகர்கள் இது போன்ற தகவல்களைப் பெரிதும் வரவேற்று எழுதி இருந்தனர். இந்த வாரம் தொழில் நுட்பங்கள் மற்றும் அவை தரும் சாதனங்கள் சிலவற்றிற்குப் பெயர் வந்த நிகழ்வுகளைக் காணலாம்.
1. பென்டியம் (Pentium): ஐ 286, 386 மற்றும் 486 என்று இன்டெல் நிறுவனம் தான் வடிவமைத்த சிப்களுக்கு வரிசையாகப் பெயர் சூட்டி வந்தது. 486 ஐ அடுத்து வர இருந்த சிப்பிற்கு ஐ 586 என்று தான் பெயர் வைக்க இன்டெல் எண்ணியிருந்தது. இதனைத் தனக்கு மட்டும் சொந்தமான ஒரு ட்ரேட் மார்க்காக வைக்கத் திட்டமிட்டிருந்தது. ஏனென்றால் பிற நிறுவனங்கள் (ஏ.எம்.டி. ஏ.எம்486 என) இதே போல பெயரினைத் தங்கள் சிப்களுக்கு வைக்கத் தொடங்கி இருந்தன. ஆனால் அமெரிக்காவின் நீதி மன்றங்கள் எண்களை தனிப்பட்ட நிறுவனம் ஒன்றின் ட்ரேட் மார்க்காக வைத்துக் கொள்ள அனுமதி தரவில்லை. எனவே இன்டெல் நிறுவனம் லெக்ஸிகன் பிராண்டிங் என்னும் அமைப்பினைத் தனக்கு ஒரு பெயர் தருமாறு கேட்டுக்கொண்டது. அப்போதுதான் பென்டியம்  (Pentium)என்ற பெயர் சொல்லப்பட்டது. இதில்"Pente" என்ற சொல் கிரேக்க மொழியில் ஐந்து என்ற பொருளைத் தரும். "ium" என்ற சொல் பின் ஒட்டு; ஆண், பெண் பெயர்ச்சொல் என்ற பேதமின்றி பொதுவான ஒரு ஒட்டாகும். இந்த இரண்டு சொற்களும் சேர்க்கப்பட்டு பென்டியம் (Pentium) உருவானது. 
2. வாக்மேன் (Walkman): இப்போது வாக் மேன் என்றால் யாரும் நடக்கும் மனிதனை நினைக்க மாட்டார்கள். சட்டைப் பை அல்லது இடுப்பு பெல்ட்டில் மாட்டிக் கொண்டு இயர் போனைக் காதில் வைத்துப் பாட்டுக் கேட்கும் சாதனத்தைத்தான் மனதில் கொள்வார்கள். அந்த அளவிற்கு அச்சாதனத்தினை மட்டுமே குறிக்கும் சொல்லாக வாக்மேன் உருவாகிவிட்டது. 
வாக்மேன் 1979ல் அறிமுகப்படுத்தப் பட்டது. இதனை சோனி நிறுவனம் அதிக நேரம் தன் நிறுவனத் துணைத் தலைவர் விமானப் பயணம் மேற்கொள்ளும்போது கேட்பதற்காக வடிவமைத்தது. நடக்கும்போது சுதந்திரமாக இசையைக் கேட்பதற்காக இது பின்னர் உருவானது. அதனால் தான் வாக்மேன் என்ற பெயரை இதற்குத் தந்தனர். ஆனால் ஜப்பானில் தான் இது வாக்மேன். அமெரிக்காவில் சவுண்ட் அபவுட் (Soundaboutஎன்று அழைக்கப்பட்டது. ஸ்வீடனில் ப்ரீஸ்டைல்(Freestyle) எனவும், பிரிட்டனில் ஸ்டவ் அவே (Stowaway) என்றும் பெயரிடப்பட்டன. ஆனால் காலப் போக்கில் வாக்மேன் என்ற பெயரே நிலைத்தது.
3. ஐபாட் (iPod) : ஆப்பிள் நிறுவனம் தன் ஸ்டைலில் எம்பி3 பிளேயர் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதன் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் நிறுவனத்தின் எம்பி3 பிளேயர் ஒரு ஹப் (Hub)ஆக செயல்பட வேண்டும் என விரும்பினார். எனவே இதற்குப் பெயர் வைத்திட முயற்சிக்கையில் பலவகையான ஹப்களை வைத்துப் பார்த்தனர். இறுதியில் ஸ்பேஸ் ஷிப் போன்ற ஒன்றை வடிவமைத்தனர். ஸ்பேஸ் ஷிப் விட்டவுடன் மேலே சென்று இயங்கும்; பின் எரிபொருளுக்குக் கீழே வரும். இந்த ஸ்பேஸ் ஷிப்பின் முன் வடிவம் ஒரு Pod   மாதிரி இருந்தது. எனவே தன் நிறுவனத்தின் தனி அடையாளமான ஐ (டி) சேர்த்து அதனை ஐபாட் என பெயர் சூட்டினார்கள். 
4. பிளாக்பெரி (BlackBerry) : 2001 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த ரிசர்ச் இன் மொபைல்(Research in Mobile) நிறுவனம்,தன் புதிய இமெயில் சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு லெக்ஸிகன் பிராண்டிங் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது. பெயரில் இமெயில் என்பது இருக்கக் கூடாது என்றும் திட்டமிட்டது. இமெயில் என்பது எதிர்பார்ப்பில் ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும் சொல் என்று கருதியது. சந்தோஷத்தையும் அமைதியையும் தரும் சொல்லாக இருக்க வேண்டும் என விரும்பியது. அப்போது ஒருவர் அந்த இமெயில் சாதனத்தின் கீகள் ஒரு பழத்தின் விதைகள் போல இருப்பதாகக் குறிப்பிட்டார். உடனே லெக்ஸிகன் பிராண்டிங் பழங்களின் பெயர்களை ஆய்வு செய்தது. மெலன், ஸ்ட்ரா பெரி போன்ற அனைத்து பெயர்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இறுதியில் பிளாக்பெரி ((BlackBerry) என்ற பெயர் சாதனத்தின் நிறத்தை ஒத்து வருவதாக முடிவு செய்து அந்த பெயர் தரப்பட்டது. 
5. ஆண்ட்ராய்ட் (Android) : கூகுள் நிறுவனத்தின் மொபைலுக்கான புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பெயர் ஆண்ட்ராய்ட். இந்த சிஸ்டத்திற்கான வேலையை 2005ல் தொடங்குகையில் இந்த பெயர் உருவாகவில்லை. ஆனால் கூகுள் மிகவும் மர்மமான முறையில் இந்த பெயரைத் திடீரென அறிவித்தது. ஏனென்றால் கூகுள் மொபைல் போனுக்கான சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரிப்பதே மர்மமான முறையில் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அந்த ரகசியம் வெளியான நிகழ்வு, இன்டர்நெட்டில் கூகுள் நிறுவனத்தின் புரட்சி ஆகியன சேர்ந்து இந்த பெயரை உலகம் ஏற்றுக் கொள்ள வைத்தது.
6. பயர்பாக்ஸ் (Firefox) : எல்லா நிறுவனங்களைப் போல மொஸில்லாவும் தன் பிரவுசர் தொகுப்பிற்கு என்ன பெயர் வைப்பது என்று சிறிது காலம் திண்டாடியது. முதலில் பயர்பேர்ட் (Fire Bird)  என்றுதான் இதற்குப் பெயர் சூட்டியது. ஆனால் இந்த பெயர் இன்னொரு ஓப்பன் சோர்ஸ் திட்டத்திற்கு வைக்கப் பட்டிருந்ததால் பயர்பாக்ஸ் எனப் பெயர் சூட்டப் பட்டது. பயர்பாக்ஸ் என்பது செங்கரடிப் பூனையின் பெயர். ஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள் என மொஸில்லாவின் மூத்த அறிஞர்களைக் கேட்டபோது, இந்தப் பெயர் நினைவில் வைத்துக் கொள்ள எளிதாகவும் அதே போல நல்லதாகவும் உள்ளது என்று கூறினார்கள்.
7. ட்விட்டர் (Twitter) : சிறிய பறவைகள் SUT  எனத் தங்களுக்குள் கூவி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். ஜாக் டோர்சி (Jack Dorsey) இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை உருவாக்கிய போது மக்கள் சிறிய அளவில் தகவல்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள இதனை வடிவமைத் ததாகக் குறிப்பிட்டார். உடன் பணியாற்றிய பிஸ் ஸ்டோன் (Biz Stone) பறவைகள் பரிமாறிக் கொள்ளும் ஒலிக்கான சொல்லை இந்த அப்ளிகேஷனுக்கு வைத்தார். நாடு, கண்டம் சாராத அனைத்து பறவைகளும் பேசிக் கொள்ளும் மொழியின் ஒலி இன்று அனைத்து நாட்டு மக்களும் பேசிப் பகிர்ந்து கொள்ளும் தளத்தின் பெயராக அமைந்தது பொருத்தமே. 
8.திங்க்பேட் (Thinkpad): 1992 ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனம் மக்களின் நம்பிக்கைக்குரிய லேப் டாப் கம்ப்யூட்டராக இதனை வடிவமைத்தது. இதற்குப் பெயர் தர முனைந்த போது, ஐபிஎம் நிறுவனத்தின் ஒரு பிரிவினர் திங்க்பேட் என்ற எளிய சொல்லால் இதனைக் குறிப்பிடலாம் என்று கருத்து தெரிவித்தது. ஆனால் ஐபிஎம் தன் உற்பத்திப் பொருட்களுக்கு எப்போதும் எண்களைக் கொண்டே பெயர்களை அமைத்ததனால் அப்படியே இதற்கும் வைத்திட வேண்டும் என எண்ணியது. மேலும் திங்க்பேட் மற்ற மொழிகளில் எப்படி மொழி பெயர்க்கப்படுமோ என்று கவலையும் கொண்டது. ஆனால் எந்தக் குழப்பமும் இன்றி மிக அழகான பெயராக மக்கள் மனதில் திங்க் பேட் என்ற பெயர் ஊன்றியது. 


9. விண்டோஸ் 7 (Windows7): விண்டோஸ் விஸ்டா மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஏமாற்றியதனால், விண்டோஸ் பெயரினையே விட்டுவிடலாமா என்று மைக்ரோசாப்ட் சில காலம் எண்ணியது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொருட்களின் பெயரின் பின்னால் எண்கள் இருந்தால் அது அந்நிறுவனத்தின் தனித் தன்மையைக் காட்டுவதாக இருப்பதாக மைக்ரோசாப்ட் எண்ணியது. ஆனால் இந்த பெயரை தாமஸ் நாஷ் அறிவித்த போது இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏழாவது சிஸ்டம்; எனவே இந்த பெயர் இப்படித்தான் இருக்கும்; இந்த பெயரில் தான் இந்த சிஸ்டம் அழைக்கப்படும் என அறிவித்தார். இதுவரை இதற்குக் கிடைத்த வரவேற்பினைப் பார்க்கையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கிடைத்த வெற்றி எனவே எண்ணத் தோன்றுகிறது.


10. அமேஸான் கிண்டில் (Amazon Kindle): இ–புக் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக் நூல்கள் படிக்கும் வழக்கத்தில் ஒரு மாபெரும் புரட்சியைக் கொண்டுவந்த சாதனம் இது. இதனை வடிவமைத்த குழுவைச் சேர்ந்த ஒரு தம்பதியரை, மைக்கேல் க்ரோனன் மற்றும் கரேன் ஹிப்மா, அமேஸான் நிறுவனம் இந்த சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சாதனம் எதற்கெல்லாம், எந்த வழிகளில் எல்லாம் பயன்படும் என்று இவர்கள் ஆழ்ந்து சிந்தித்தனர். எந்த தொழில் நுட்பத்தையும் நினைவு படுத்தும் வகையில் பெயர் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், பல நல்ல பொருளைத் தருவதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினார்கள். எனவே Kindle  என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தனர். இதற்கு எரிவதைத் தூண்டுவது, ஒளிறச் செய்வது, நல்லவற்றிற்குத் தூண்டுவது, கொழுந்துவிட்டு எரியச் செய்வது என்று பல பொருள் உண்டு. பழைய நார்ஸ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு இந்த சொல் வந்தது. இந்த சொல்லின் மூலப் பொருள் மெழுகுவத்தி என்பதாகும். இந்த சொல்லைத் தந்து ஹிப்மா கூறுகையில், "நூல்களில் நாம் பெறும் தகவல்களும் செய்திகளும் தீயைப் போன்றவை; பக்கத்திலிருப் பவர்களிடமிருந்து இதனைப் பெறுகிறோம். மேலும் அதனைத் தூண்டுகிறோம். பின் அவற்றை மற்றவர்களுக்குத் தருகிறோம். இப்படியே அது அனைவரின் சொத்தாக மாறுகிறது" என்றார். உண்மைதான், பொருத்தமான பெயர்தான்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP