சமீபத்திய பதிவுகள்

உதயமாகுமா தெலுங்கானா? கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை

>> Saturday, December 12, 2009

 

 

Front page news and headlines today  தெலுங்கானா மக்களின் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலான கனவு, தற்போது நனவாகப் போகிறது. ஆந்திராவைப் பிரித்து, தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற அவர்களின் ஆசை, நிறைவேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா என்ற ஒற்றை வார்த்தை கோரிக்கைக்காக, இதுவரை 400க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். போராட்டம், வன்முறை, உயிர்த்தியாகம் என, தெலுங்கானா கடந்து வந்த பாதைகள், சற்று கரடு முரடானவை. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, இந்த பிரச்னை இருந்து வந்தாலும் நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வந்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் மேற்கொண்ட கடுமையான உண்ணாவிரதம் காரணமாக, தேசிய அளவில் இந்த பிரச்னை அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.


தெலுங்கானா என்றால்? தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் நிலம் (லேண்ட் ஆப் தெலுகுஸ்) என்பது தான், தெலுங்கானா என்ற வார்த்தைக்கான அர்த்தம். ஆந்திர மாநிலத்தில் உள்ள அடிலாபாத், நிஜாமாபாத், கரீம்நகர், வாரங்கல், மேடக், ரங்கா ரெட்டி, ஐதராபாத், கம்மம், மகபூப் நகர் மற்றும் நல்லகொண்டா என, பத்து மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப் பரப்பு தான், தெலுங்கானா பகுதி என, அழைக்கப்படுகிறது.



சுதந்திரத்துக்கு முன்: சாதவாகனாஸ், காகடியாஸ் போன்ற மன்னர் பரம்பரையினர், இந்த பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். 14ம் நூற்றாண்டில் தெலுங்கானா பகுதி, டில்லி சுல்தான்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது, ஐதராபாத் என்ற தனி சமாஸ்தானம் உருவானது. இதற்கு பின் பிரிட்டிஷ் ஆட்சி வந்தபோது, ஆந்திராவின் மற்ற பகுதிகள் எல்லாம் அந்த ஆட்சியின் கட்டுப்பாட்டில் வந்தன. ஆனால், தெலுங்கானா பகுதி, பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இல்லை.



சுதந்திரத்துக்கு பின்: நாடு சுதந்திரம் அடைந்ததும், அனைத்து மாகாணங்களும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. தெலுங்கானா பகுதியை ஆட்சி செய்து வந்த ஐதராபாத் நிஜாம், இதற்கு சம்மதிக்கவில்லை. தொடர்ந்து தன்னாட்சி பெற்ற சமஸ்தானமாகவே ஐதராபாத் இருக்க வேண்டும் என, அவர் அடம் பிடித்தார். இருந்தாலும், இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் அப் பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.



ஆந்திராவுடன் இணைப்பு: மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது, தெலுங்கு பேசும் மக்கள் வசித்த பகுதிகளை, ஆந்திர மாநிலமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, 1953ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, மாநில சீரமைப்பு ஆணையத்தை நியமித்தார். மொழி வாரி மாநிலங்களை அமைப்பதில் உள்ள பிரச்னை குறித்து, இந்த ஆணையம் ஆய்வு செய்தது. இந்த ஆணையம், தெலுங்கானா பகுதியை ஆந்திராவுடன் இணைப்பதற்கு ஆதரவாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.



இதற்கிடையே, தெலுங்கானா மக்கள், இந்த இணைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கினர். தெலுங்கானா பகுதி, ஆந்திராவின் மற்ற பகுதிகளை விட வளர்ச்சியில் பின்தங்கிய பகுதியாக உள்ளது. அதே நேரத்தில், வரி மூலம் அதிக வருவாய் கிடைக்கும் பகுதியாகவும் உள்ளது. இந்த வருமானம் அனைத்தும் ஆந்திராவின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் என, தெலுங்கானா பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர். கிருஷ்ணா, கோதாவரி ஆற்றில் கட்டப்படும் அணைகளால், தெலுங்கானா பகுதிக்கு எந்த பயனும் கிடைக்காது என்ற அச்சமும் அவர்களிடம் எழுந்தது. கல்வி, வேலை வாய்ப்புகளில் ஆந்திர மக்களுக்கே முக்கியத்துவம் கிடைக்கும் என்றும் அவர்கள் கருதினர்.



மாநில மறு சீரமைப்பு ஆணையமும், "ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, இரண்டையும் தனித் தனி மாநிலங்களாக அமைப்பதே நல்லது'என, மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. 1956 நவம்பர் 1ல், தெலுங்கானா பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. தெலுங்கானா மக்களை சமாதானப் படுத்தும் வகையில், "ஜென்டில்மேன் ஒப்பந்தம்'ஒன்றும் போடப்பட்டது. இதன்படி, வருவாய், நிர்வாகம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என, கூறப்பட்டது.



தனித் தெலுங்கானா கோஷம் உதயம்: ஆந்திர மாநிலம் உருவான அடுத்த சில ஆண்டுகளிலேயே, தெலுங்கானா பகுதி மக்கள், தாங்கள் ஏமாற்றப்படுவதாக உணர்ந்தனர். "ஜென்டில்மேன்'ஒப்பந்தத்தில் கூறப்பட்ட உத்தரவாதம் எதுவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை என, அவர்கள் ஆவேசப்பட்டனர். தெலுங்கானா பகுதியில், இதை முன்னிறுத்தி 1963ல் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. ஐதராபாத் உஸ்மானியா பல்கலை மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினர்.



360 மாணவர்கள் பலி: மாணவர்களுக்கு ஆதரவாக, அரசு ஊழியர்கள், எதிர்க்கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தெலுங்கானா போராட்டம் என, அறிவிக்கப்பட்டது. தெலுங் கானா கோரிக்கைக்காக 360 மாணவர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். ஆனால், கூடுதலாக மொழி வாரி மாநிலங்களை உருவாக்குவது இல்லை என்ற விஷயத்தில் காங்கிரஸ் அரசு உறுதியாக இருந்தது. சென்னா ரெட்டி, தெலுங்கானா மக்கள் கழகம் என்ற கட்சியை துவக்கினார். பின்னர், இவர் காங்கிரசில் சேர்ந்து, ஆந்திர முதல்வரானார். இதனால், தெலுங்கானா கோஷம் பிசு பிசுத்தது.



பா.ஜ., ஏற்படுத்திய திருப்பம்: இடைப்பட்ட காலங்களில், தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்தாலும், அது பெரிய அளவுக்கு பேசப்படவில்லை. இந்த சூழ்நிலையில் தான்,"நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவோம்' என, 1990ல் பா.ஜ., உறுதி அளித்தது. ஆனால், பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்தும், தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, எதிர்ப்பு தெரிவித்ததே இதற்கு காரணம். இருந்தாலும், பா.ஜ., ஏற்படுத்திய திடீர் திருப்பம் காரணமாக, 2000ல் தெலுங்கானா கோரிக்கைக்கு புது ரத்தம் பாய்ச்சப் பட்டது.



தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி: இந்த சூழ்நிலையில் தான், தெலுங்கு தேசம் கட்சியில் முக்கியத் தலைவராக இருந்த சந்திரசேர ராவ், அந்த கட்சியில் இருந்து விலகி, 2001ல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற புதிய கட்சியை துவங்கினார். தெலுங்கானா தனி மாநிலம் பெறுவது தான், இந்த கட்சியின் ஒரே கொள்கை. 2004ல் நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் டி.ஆர்.எஸ்., கட்சி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அப்போது உருவாக்கப்பட்ட குறைந்தபட்ச பொது திட்டத்தில், தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக, காங்கிரஸ் உறுதி அளித்தது. ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும், காங்கிரஸ் இதை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, காங்கிரசுக்கு அளித்து வந்த ஆதரவை டி.ஆர்.எஸ்., 2006ல் வாபஸ் பெற்றது.



ஒட்டு மொத்த ராஜினாமா: தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், 2008 மார்ச்சில், டி.ஆர்.எஸ்., கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.பி.,க்கள், 16 எம்.எல்.ஏ.,க்கள், மூன்று எம்.எல்.சி.,க்கள், ஒட்டு மொத்தமாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, ஆந்திர அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தினர். காலியான இந்த தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில், டி.ஆர்.எஸ்., கட்சி ஏழு சட்டசபைத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல், நான்கு லோக்சபா தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றது. இதனால், தெலுங்கானா கோரிக்கை, மீண்டும் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனது. கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் டி.ஆர்.எஸ்., கட்சிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. இதனால், அந்த கட்சியின் செல்வாக்கு குறையத் துவங்கியது.



மீண்டும் தெலுங்கானா: கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக, மீண்டும் தெலுங்கானா கோஷத்தை தூசு தட்டினார், சந்திரசேகர ராவ். கடந்தவாரம் அதிரடியாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கிய அவர், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தினர். இறுதியில், சந்திரசேகர ராவின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது. "தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்' என, அறிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஆந்திராவின் ராயலசீமா மற்றும் கடலோர மாவட்டங்களில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



ஐதராபாத் யாருக்கு? தனித் தெலுங்கானா மாநிலம் அமையும் பட்சத்தில், தலைநகர் ஐதராபாத் யாருக்குச் சொந்தம் என்ற மோதல் தற்போதே உருவாகி விட்டது. தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி நகரமாகத் திகழும் ஐதராபாத்தில் ஐ.டி., நிறுவனங்கள் பல முதலீடு செய்துள்ளன. இதன் காரணமாக அந் நகரின் மக்கள் தொகை 70 லட்சத்தையும் கடந்து விட்டது. கடற்கரை ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதி மக்களை, இந்நகரம் வெகுவாக கவர்ந்ததே இதற்கு முக்கிய காரணம். இவர்கள், ஐதராபாத்தை அத்தனை எளிதில் தெலுங்கானாவுக்கு விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் பட்சத்தில், ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என, ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்களும் யூனியன் பிரதேச அந்தஸ்து ஐதராபாத் நகருக்கு கிடைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். காரணம், இப்பகுதியில் மட்டும் 40 சதவீத முஸ்லிம்கள் வசித்து வருவதுதான். எனவே, ஐதராபாத் யாருக்கு சொந்தம் என்ற விவகாரம், தேசிய அளவில் பெரும் புயலை கிளப்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



அடுத்தது என்ன? தனி மாநிலம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என, மத்திய அரசு அறிவித்தாலும், அது அத்தனை எளிதாக நடந்து விடாது என்றே, தற்போதைய ஆந்திரா நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. ராயலசீமா மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதையடுத்து, இந்த பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. இந்த பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் பதவிகளையே தூக்கி எறிந்துள்ளனர். ஆந்திர அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம், கிணறு வெட்டப் போய், பூதம் கிளம்பிய கதையாகி விட்டது மத்திய அரசுக்கு. தெலுங்கானாவுக்கான விடியல் கிடைத்தாலும், அது ஆந்திராவின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கசப்பான விடியலாகத் தான் இருக்கும்.



இன்னும் எத்தனை மாநிலங்கள்? தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கு மத்திய அரசு பணிந்ததை அடுத்து, மேலும் பல மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோஷம் வலுத்துள்ளது. அது குறித்த விவரம்:



1 மேற்கு வங்கத்தை பிரித்து, கூர்க்காலேண்ட் தனி மாநிலம்.
2. உ.பி.,யின் மேற்கு பகுதியை பிரித்து, ஹரித் பிரதேச தனி மாநிலம்.
3. பீகாரை பிரித்து, மிதிலாஞ்சல்.
4. கர்நாடகாவை பிரித்து, கூர்க் மாநிலம்.
5. குஜராத்தை பிரித்து, சவுராஷ்டிரா மாநிலம்.
6. மகாராஷ்டிராவை பிரித்து, விதர்பா மாநிலம்.
7. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளை இணைத்து, கூச் பெகார் மாநிலம்.
இதுதவிர, புதுச்சேரியில் இருந்து காரைக்காலை பிரித்து, தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.



source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இந்த வார இணைய தளம்

  

ஒவ்வொரு நாளும் நாம் இந்த உலகின் சக்தியைத் தான் பயன்படுத்தி வருகிறோம். சக்தியானது நம்மைச் சுற்றி இருக்கிறது. ஒளி, வெப்பம், மின்சக்தி எனப் பல வகைகளில் உள்ளது. நம்முடைய உடம்பு இந்த சக்தி அடங்கி உள்ள பொருட்களைப் பயன்படுத்துகிறது. கார்போஹைட்ரேட், புரொட்டீன் உள்ள பொருள்கள் என்று கூறுவது எல்லாமே நமக்கு சக்தியைத் தருவன ஆகும். இவற்றைப் பயன்படுத்தித்தான் நாம் சுவாசிக்கிறோம்; அலைகிறோம்; வளர்கிறோம்; சிந்திக்கிறோம். வேலை பார்ப்பதற்கும் விளையாடுவதற்கும் இந்த சக்தியைத் தானே பயன்படுத்துகிறோம். 


அடிப்படையில் நாம் பயன்படுத்துவது வெப்பம் மற்றும் மின்சாரம். இரண்டு பொருட்கள் ஒன்றை ஒன்று உராய்வதிலிருந்து கிடைக்கிறது. எவ்வளவு வேகமாக இவை அசைகின்றனவோ, அந்த அளவிற்கு சூடு அதிகமாகிறது. அதே போல மின்சாரம்; எலக்ட்ரான் வேறு ஒரு வயர் போன்ற பொருளில் நகரும்போது மின்சக்தி கிடைக்கிறது. ஆனால் இவை எத்தனை நாட்களுக்கு நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்த உலகம் தன் இயற்கைச் சக்தியைச் சிறிது சிறிதாக இழந்து கொண்டு வருகிறதே. என்றாவது ஒரு நாள் நாம் எந்த சக்தியும் கிடைக்காமல் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுமோமே. அதனால் தான் நாம் பல்வேறு நிலைகளில் நம் இயற்கை சக்திக்கு புத்துணர்ச்சி தரும் வழிகளைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சூரிய ஒளி பயன்படுத்தி அடுப்புகள் போன்றவை நம் முயற்சிகளின் ஓர் எளிய வெளிப்பாடு. காற்றாலைகளைப் பயன்படுத்தி மின்சாரம், ஓடும் நீரைப் பயன்படுத்தி மின்சாரம், இயற்கை தாவரக் கழிவு மற்றும் மனிதக் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் போன்றவை அடுத்த நிலையில் உள்ளன. மேலே சொல்லப்பட்ட முறைகளின் அடிப்படை பொருளான சூரிய ஒளி, காற்று, கழிவு போன்றவை நமக்கு இலவசமாகக் கிடைக்கும் பொருள்களாகும். இவற்றை எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம் என்பதே இன்று நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.


இது குறித்து இணையத்தில் தேடிய போது, அருமையான தளம் ஒன்று நமக்குக் கிடைத்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொறுப்புள்ள குடிமக்கள், எதிர்கால சந்ததியினரைப் பற்றி சிந்தித்து செயலாற்றுபவர்கள் என அனைவரும் ஆழமாகப் படித்துச் செயல்பட வேண்டிய பல வழிகளை இந்த தளம் சுட்டிக் காட்டுகிறது. இந்த தளத்தின் இணைய முகவரி: http://www.reenergy.ca இதில்நுழைந்தவுடனேயே இதன் பல்வேறு பிரிவுகள் நம்மை வரவேற்று வியப்பில் ஆழ்த்துகின்றன. ஏனென்றால் அனைவருக்கும் ஏற்ற வகையில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. நீங்கள் ஓர் ஆசிரியர் என்றால் அவர்கள் மாணவர்களுக்கு புதுப்பிக்கக் கூடிய சக்தி குறித்து என்ன தர வேண்டும் என ஒரு தளப்பிரிவு காட்டுகிறது.
மாணவர்கள் என்ன மாதிரி திட்டங்களை மேற்கொள்ளலாம் என இன்னொரு பிரிவு காட்டுகிறது. 
பொதுவான தகவல்கள் பல தலைப்புகளிலும், குறிப்பிட்ட பிரிவுக்குண்டான தகவல்கள் அவற்றின் தலைப்புகளிலும் தரப்பட்டுள்ளன. Renewable Energy Basics, Solar Electricity, Solar Heat, Wind Energy, Water Power, Biomass Energy, Clean Energy Techniques எனப் பல பிரிவுகள் நம்மை புதிய தளப்பிரிவுகளுக்கு எடுத்துச் சென்று தகவல்களைத் தருகின்றன. 
நாம் எதிர்கொள்ளும் காலத்தின் தேவையை மிகச் சிறப்பாக விளக்குகின்றன. அனைவரும் பார்த்து, அறிந்து சிந்திக்க வேண்டிய தகவல்களைக் கொண்டுள்ள இந்த தளம் ஒரு சிறப்பான தளமாகும்.



source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நீ எப்படி தலைவன் ஆனாய்? கிளர்ச்சியாளன்


 

karunaநீ எப்படி தலைவன் ஆனாய்? – கிளர்ச்சியாளன்!!எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர்; ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும் ; குறைந்தபட்சம் ; இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும் ;

இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும் ; மேலே சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ "தமிழீழம்" வென்றெடுப்பது ஒன்றுதான் தீர்வு என்பதை இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, அந்த இலட்சியத்தித்தை எந்தவொரு சூழ்நிலையிலும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவன் நீ. இவ்வாறு ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் இன்றுவரை உறுதியாக, நேர்மையாக இருக்கின்ற காரணத்தினால் உன்னை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் "தமிழீழத் தேசியத் தலைவர்" என்று அன்போடு அழைக்கிறார்கள்.

இப்படி உலகத் தமிழர்களே ஏற்றுக் கொண்டாலும், எங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு உரிய எந்தவொரு தகுதியும் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? பொதுவாக எங்கள் நாட்டில் நேர்மை, ஒழுக்கம் என்பதெல்லாம் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும்தான். அரசியலுக்கு வரும்போது அன்றாட உணவுக்கும், மாற்றுத்துணிக்கும் அல்லல் பட்டவர்கள்தான் எங்கள் தலைவர்கள் என்றாலும், இன்றைக்கு அவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஆனால் நீயோ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனாக இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் உனக்குச் சொத்துக்கள் இல்லை. ஆடம்பர மாளிகைகள் இல்லை. அட சுவீஸ் வங்கியில்கூட உனக்கு ஒரு கணக்கு இல்லையே. அதுதான் போகட்டும்! மது, புகை என்று உனக்கு ஒரு பழக்கமும் இல்லையாமே.

அதுமட்டுமல்ல! உன் இயக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்தப் பழக்கங்கள் கூடாதென்று கட்டுப்பாடாமே! இதுவெல்லாம் பரவாயில்லை. உனக்கு ஒரேயொரு மனைவிதான் என்று உறுதியாகச் சொல்லுகிறார்களே! எங்களைப் பொறுத்தவரை தலைவன் என்றால், குறைந்தது இரண்டு மனைவிகள் ; அங்கங்கே பல தொடர்புகள் இருக்க வேண்டும். இவையெல்லாம் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? எங்கள் வாழும் வள்ளுவரின் மகளுக்கும், மகன்வழிப் பேரனுக்கும் ஒரே வயதுதான். எங்களுக்கு அதில் எவ்வளவு பெருமிதம் தெரியுமா? ஆனால் உனது மூத்த மகனுக்கும் அடுத்த மகளுக்கும் உள்ள இடைவெளி பத்து வருடங்கள் என்கிறார்கள். இந்த பத்து வருடங்களும், ஈழ விடுதலைப் போராட்டம் மிகவும் நெருக்கடியில் இருந்த காலகட்டம் என்றும், உனது பிள்ளைகளுக்கிடையே உள்ள இந்த வயது வேறுபாடு, அந்தக் காலகட்டத்தில், நீயும், உன் மனைவியும், சாதாரண கணவன், மனைவி என்ற உறவையும்; கடந்து, போராளிகளோடு, போராளிகளாய் போர்க்களத்தில் நின்றதை உணர்த்துகிறது.

இப்படி தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சொந்த சுகதுக்கங்களை மறந்து, போராட்டத்தில் ஈடுபடுபவன் ஒரு தலைவனா? நீ எப்படி தலைவன் ஆனாய்? சிங்கமே வா! புலியாய் புறப்படு! இருப்பது ஓர் உயிர்! அது தமிழுக்காக போகட்டும்! தமிழனுக்காக போகட்டும்! இப்படியெல்லாம் மேடையில் பேசுவதோடு நின்றுவிட வேண்டும். அதுதான் தலைவனுக்கு அழகு! அதிகம் போனால், காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கலாம்! ஏன் ஆயுதப் போராட்டத்திற்கும் கூட ஒருவன் தலைமை ஏற்கலாம். ஆனால், போர் நடக்கின்ற இடத்தில் கூட அல்ல, நாட்டிலேயே இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு வெளிநாட்டில் சுகமாக மனைவி, பிள்ளைகளோடு இருந்து கொண்டு, போராட்டத்தை வழி நடத்த வேண்டும்.

nee eppadi thalavannay - 02அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு! ஆனால் பாவி நீ செய்தது என்ன? தாய்த்தமிழகத்தில் தங்கியிருப்பதுக்கூட, மற்றவர்கள் உனது விடுதலை இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க காரணமாகவிடும் என்று, களத்திற்கு சென்றுவிட்டாய். சென்றது சென்றாய்! தனியே செல்லக்கூடாதா? உன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விட்டுசெல்லவில்லையே! எங்கள் தலைவர்களை பார்! வாரிசுகள் என்று வந்துவிட்டால், சின்னவீடு, பெரியவீடு என்ற பேதமெல்லாம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரு பதவி! அனைவருக்கும் ஒரு அடைமொழி! இதையெல்லாம் கற்றுக்கொள்ளாத நீ எப்படித் தலைவன் ஆனாய்! தற்கொலைப் படையில் முதல் பெயர் உன் பெயர்! கழுத்தில் கட்டப்படும் நச்சுக் குப்பிக்கும் நீ விதிவிலக்கல்ல! காடுதான் உறைவிடம் என்று ஆன பிறகு, உணவிலும் கூட உனக்கும், இதர போராளிகளுக்கும் இடையே பாகுபாடு இல்லை.

இவையெல்லாம் போகட்டும்! வீட்டுக்கொருவரை இயக்கத்திற்கு தாருங்கள் என்றாய். தந்தார்கள் ஆயிரக்கணக்கில். தங்கள் பிள்ளைகளைத் தந்தவர்கள் எல்லாம் தாங்கள் போரில் ஈடுப்பட இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் தந்தார்கள். தமிழீழ விடுதலைக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட உன்னிடம் யார் கேட்டார்கள்? பாவி! உன் மூத்தப்பிள்ளையை, இனித் திரும்பமாட்டான் என்று தெரிந்தும் களத்திற்கு அனுப்பினாயே! எப்படித் துணிந்தாய்? மொத்த ஈழத் தமிழினமும் இன்று முள்வேளிக்குள் அகதிகளாய் அடைப்பட்டு இருக்கிறது.

போகட்டும்! அதன் தலையெழுத்து அப்படி! ஆனால் உன் வயதான தந்தையையும், தாயையும் மற்ற அகதிகளோடு, அகதிகளாய் விட்டு வைத்திருக்கிறாயே? ஏனய்யா இப்படி! உன்னைப் போன்ற உறுதியும், வீரமும் மிக்க தியாக உள்ளம் படைத்த ஒருவன் பிறப்பதற்கு யோக்கியதை உடைய இனம் இந்தத் தமிழினம் அல்லவே! எங்களுக்கு திரைப்படங்களே வாழ்க்கையாகிப் போயின! தேர்தல்களோ திருவிழாக்கள் ஆகிவிட்டன! உனது அருமை நமது மக்களுக்கு இன்றைக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ஆனால் உன்னைப் பற்றிய சரியான மதீப்பீட்டை வரலாறு சரியாகவேச் செய்யும். இன்றைக்கு உன்னையும் உனது இயக்கத்தையும் ஒழித்துக்கட்டி விட்டதாக இறுமாந்து நிற்கும் இனவெறி நாய்களும், அவர்களுக்கு உதவி செய்த குள்ளநரிக்கூட்டமும் இன்றைக்கு வேண்டுமானால், மனம் மகிழ்ந்து, தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளாலாம்.

ஆனால் எதிர்கால சரித்திரமோ, இந்த இனவெறியர்களையும், இணைந்து நின்ற குள்ளநரிகளையும், நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள்; சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்த துரோகிகள் என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது, தன் இன விடுதலைக்காய், தன் இனத்தின் சுதந்திரமான, சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய் போராடிய உன்னை "மாமனிதன்" என்று என்றென்றும் பாராட்டும். ஏனென்றால் மரணம் என்பது தன் பெண்டு. தன் பிள்ளை, தன் குடும்பம் என்று வாழும் தற்குறிகளுக்குத்தான். உன்னைப்போன்ற மாமனிதர்களுக்கு மரணம் என்பது இல்லை. நீ இருந்தாலும், இல்லையென்றாலும், இனி, தன் இன விடுதலைக்காக உலகில் எந்த இனம், எங்கு போராடினாலும், அந்தப் போராட்டத்திற்கு அடையாளமாக இருக்கபோவது உன் முகம்தான்!

வாழ்க நீ எம்மான்!

கிளர்ச்சியாளன் வழக்கறிஞர்-சேசுபாலன்

மற்றும் குழுமம்.

"தாய்த் தமிழ்நாடு"

source:tamilspy
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கொஞ்சம் கூகுள் தேடல்

  


கூகுள் தேடல் இஞ்சினில் நாளுக்கு நாள் ஏதாவது சிறப்பு வசதிகள் தரப்படுகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய பிங் சர்ச் இஞ்சின் மக்களிடையே மெதுவாக இடம் பிடிப்பதால், கூகுள் தன் வசதிகளைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. கூகுள் 64.6% பேரிடமும், அடுத்த இடத்தில் உள்ள யாஹூ 19.3% பேரிடமும் உள்ளது என்றாலும், கூகுள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதுவரை வந்த கூகுள் கூடுதல் வசதிகள் நாம் மனதில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சில கூறுகளை இங்கு காணலாம்.


வழக்கமான தேடுதல் விடைகளுடன், கூகுள் அப்போதைய நேரத்தைக் கூறும் திறன் கொண்டது. நாம் இருக்கும் இடத்தின் நேரம் மட்டுமல்ல; உலகின் எந்த ஊரின் நேரத்தையும் காட்டும். எடுத்துக்காட்டாக time madurai என்று கொடுத்தால் மதுரை நேரத்தையும், time tokyo என்று கொடுத்தால் அதே நேரத்தில் டோக்கியோ நகரின் நேரத்தையும் காட்டும். இது மட்டுமின்றி அந்த ஊரில் நிலவும் சீதோஷ்ண நிலையையும் காட்டும். weather delhi எனக் கொடுத்தால் அந்த ஊரின் சீதோஷ்ணநிலை மற்றும் வர இருக்கும் சீதோஷ்ணநிலை மாற்றங்கள் குறித்தும் தகவல் கிடைக்கும். 


கூகுள் தேடல் விண்டோவினை, கால்குலேட்டர் விண்டோவாகவும் பயன் படுத்தலாம். சயின்டிபிக் கால்குலேட்டராகப் பயன்படுத்தக் கூடிய வகையில் இது தரப்படுத்தப்பட்டுள்ளது.94/36* (sqrt 34)^3 என்று கொடுத்தாலும் சரியான விடை கிடைக்கும். சில கணக்கிடும் அடையாளங்களுக்குச் சொற் களையும் தரலாம். எடுத்துக் காட்டாக 96 divided by 36 times (sqrt34)^3 என்றும் தரலாம். 
சில அலகுகளுக்கிடையே மாற்றங்களையும் இதில் கண்டறியலாம்.mm to inch, Fahrenheit to Celsius எனக் கொடுத்து யூனிட் மாற்றத்தையும் அறியலாம். 
ஒரு சிலர் அலுத்துக் கொள்ளலாம். நாம் எதனைக் கொடுத்தாலும், சரியாக அதனை மட்டும் கொடுக்காமல், சார்ந்த அனைத்தையும் தருகிறதே என்று பலர் இது குறித்து சொல்வதைக் கேட்கலாம். நம் தேடல்களைக் குறிப்பிட்ட ஒன்றின் அடிப்படையில் மட்டும் கிடைக்கும்படி தேடலை அமைக்கலாம். அவற்றில் சில:


+ கொடுத்தால் சில குறிப்பிட்ட சொற்களைக் குறிப்பாகத் தேடும்படி அமைக்கலாம். எ.கா

––netbook +11.6 +ion  – (மைனஸ் அடையாளம்) கொடுத்தால் குறிப்பிடும் சொற்களைத் தவிர்த்து தேடுக என்று பொருள். எ.கா. – gaming keyboard logitech இதனை wild card என கம்ப்யூட்டர் சார்ந்த சொற்களுடன் குறிப்பிடுவார்கள். அதாவது தெரியாத சொற்களுக்கான அடையாளம். traditional * foodஎன்று கொடுத்தால் (*) இந்த அடையாளம் உள்ள இடத்தில் வேறு எந்த சொல்லையும் சேர்த்து தேடிக் கொடு என்று பொருள்.



 இந்த அடையாளம் கொடுத்தால் அடுத்துள்ள சொல் வழக்கமாக எந்த சொற்களுடன் ஜோடியாகப் பயன்படுத்தப்படுமோ அவை எல்லாவற்றையும் தேடி எடுத்துக் கொடு என்று கட்டளை அமைக்கிறோம். எ.கா. first computer build ~help  எனக் கொடுத்தால் அது அனைத்து வகையான ஹெல்ப் வகைகளும் பட்டியலிடப்படும்.
.. குறிப்பிட்ட எண் வரிசை தொடர்ச்சியாக வேண்டுமா? எடுத்துக் காட்டாக விலை ரேஞ்ச், தேதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எ.கா. – halo pc $0..$15 ஏதேனும் ஒரு சொல், முதல் எழுத்துக்கள் அடங்கிய சுருக்குச் சொல் போன்றவற்றின் சிறப்பு விளக்கம் பெற



define  என்ற சொல்லைக் கொடுத்துப் பின் பொருள் தேடும் சொல்லைக் கொடுக்கலாம். எடுத்துக்காட்டாக define algorithm / define WHO என்று கொடுக்கலாம்.
குறிப்பிட்ட பைல் வகைகளை மட்டும் தேடிக் கொடுக்கும்படி filetype: என்ற சொல் கொண்டு தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக filetype: pdf எனத் தரலாம். 
ஓர் இணைய தளத்தினைத் தேடக் கட்டளை கொடுக்கையில் அதே பொருளில் உள்ள மற்ற தளங்களைக் காட்டும்படியும் தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக related:sciencetv.com  என அமைக்கலாம். 
ண்டிtஞு: என்ற சொல் கொடுத்து குறிப்பிட்ட தளத்தில் மட்டும் ஒன்றைத் தேடும்படி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக mango site:vegetables.com எனக் கொடுத்து அந்த தளத்தில் மட்டும் இந்த சொல் எங்கு உள்ளது எனத் தேடலாம். 



மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பரேட்டர் அடையாளங்களை இ�ணைத்தும் கொடுத்துத் தேடலாம். எடுத்துக்காட்டாக +microsoft +yahoo ~talks "Matthew DeCarlo" site:techspot.com எனக் கொடுக்கலாம். 



சாம்சங் தரும் விண்டோஸ் 7 நோட்புக்
என் 140 என்ற பெயரில் சாம்சங் நிறுவனம் புதிய நெட்புக் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆறு செல்கள் அடங்கிய இதன் பேட்டரி 11 மணி நேரம் தொடர்ந்து பவர் அளிக்கும் என சாம்சங் அறிவித்துள்ளது.
இதன் திரை 10.1 அங்குல அகலத்தில் பள பளப்பில்லாமல் எல்.இ.டி. டிஸ்பிளேயுடன் இருக்கிறது. 3 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன. யு.எஸ்.பி.2, புளுடூத் 2.1, 3 இன் 1 மெமரி கார்ட் ரீடர், நெட்புக் கம்ப்யூட்டரை ஆப் ஷட் டவுண் செய்த பின்னரும் மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களை சார்ஜ் செய்யக்கூடிய யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் 250 ஜிபி திறன் கொண்டது. இந்த நெட்புக் கம்ப்யூட்டருக்கு சர்வீஸ் தேவைப்பட்டால் சாம்சங் நிறுவனம் வாடிக்கையாளர் இடத்திற்கே வந்து எடுத்துச் செல்லும் சேவையை மெட்ரோ நகரங்களில் வழங்கி வருகிறது.
ஓராண்டு வாரண்டியுடன் வரும் இந்த நெட்புக் கம்ப்யூட்டர் விலை ரூ. 24,990


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP