சமீபத்திய பதிவுகள்

'நேர்மையின் சம்பளம் மரணமா?’

>> Monday, January 31, 2011

உயிரோடு கொளுத்தப்பட்ட கலெக்டர்!


நேர்மைக்கு நெருப்பு
 'நேர்மையின் சம்பளம் மரணமா?' என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது மகாராஷ்​டிரா மாநிலத்தில் நடந்த குரூர சம்பவம்!

நாசிக் மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராக இருந்தவர் யஷ்வந்த் சோனாவானே. நேர்மையான அதிகாரியான யஷ்வந்த், கடந்த செவ்வாய்க்கிழமை நந்துகோன் என்ற இடத்துக்கு தாசில்தாருடன்அலுவலக காரில் சென்றார். வழியில் கெரசின் நிரப்பப்பட்ட சில டாங்கர்கள், ஆயில் டிப்போ அருகில் நின்று இருந்தன. ஏற்கெனவே, இந்த இடம் கெரசின் திருட்டுக்குப் பிரபலமானது. ஹெச்.பி.சி.எல்., பி.பி.சி.எல்., ஐ.ஓ.சி. போன்ற நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகள் அருகே, 'எதற்கு இத்தனை டாங்கர்கள்?' என்ற சந்தேகம் யஷ்வந்த்துக்குத் தோன்றவே... காரில் இருந்து இறங்கி விசாரித்தார்.
அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்தான் இந்தியாவை உலுக்கின. நடந்தது என்ன என்பது பற்றி கூடுதல் டி.ஜி.பி-யான ரகுவன்ஷி, ''சிலர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் டாங்கர்களில் இருந்து கெரசினை திருட்டுத்தனமாக நிரப்பிக்கொண்டு இருந்தனர். அங்கு போன யஷ்வந்த், ஒருவனிடம் கேள்வி கேட்கவே, அவன் உடனே ஓடிவிட்டான். மற்றவர்களிடம் விசாரித்து, அதனைத் தன் செல்போன் கேமராவில் படம் எடுத்திருக்கிறார். மேலும், உடனடியாக இந்தஇடத்தில் 'ரெய்டு' நடத்தவும் உள்ளூர் அதிகாரி​களுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.
அப்போது அந்தக் கும்பலுக்கும் கூடுதல் கலெக்டருக்கும் இடையே விவாதம் காரசாரமாக... ஒருவன் போபட் ஷிண்டேவுக்குத் தகவல் சொல்லி இருக்கிறான். இவன் கெரசின் கடத்தல் வழக்குகளில் ஏற்கெனவே பல முறை கைது செய்யப்பட்டவன். உடனே வந்த அவனுக்கும் கூடுதல் கலெக்டருக்கும் தீவிரமான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் நிலைமை சிக்கலாவதை அறிந்த ஷிண்டே திடீரென யஷ்வந்த மீது கெரசினை ஊற்றித் தீவைத்துவிட்டான்.ஷிண்டே நெருப்பு பற்றவைத்ததும் அவன் ஓடிவிடாமல் இருக்க வேண்டும் என்பதால் அவனையும் கட்டிப்பிடித்து இருக்கிறார் யஷ்வந்த். இதனால் தீக்காயங்களுடன் அவன் மருத்துவமனையில் இருக்கிறான்.  ஷிண்டே, மகன் குனால், மச்சான் சீதாராம் பலேரோ மற்றும் அவன் கூட்டாளி ராஜு ஷிர்சாத் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்கள் போலீஸார்!'' என விவரித்தார்.
நாசிக் மாவட்ட கலெக்டர் வேலரசு, ''யஷ்வந்த் மிகஅமைதியானவர். கடின உழைப்பாளி. அவருக்கு இப்படி ஒரு சம்பவம் நேர்ந்தது கொடுமையானது. உடல் முழுக்க அவர் எரிந்துகொண்டு இருந்த சமயத்தில் அவரது டிரைவரும், உதவியாளரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிவிட்டனர். உள்ளூர் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டும் அவர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை...'' என்றார் சோகத்துடன். நேர்மையாக இருந்த அதிகாரிக்கே இந்த நிலை என்றால்..?
- ந.வினோத் குமா


source:vikatan
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

100 -100 வாங்கித் தரும் பத்துக் கட்டளைகள் !

எக்ஸாம் சீஸன் ஸ்டார்ட்ஸ்..
வருடம் முழுக்க விழுந்து விழுந்து படித்தாலும், தேர்வுக் காலத்தை ஒட்டிய இந்த முக்கிய நாட்களில் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்துப் படிப்பதன் பலனை ரிசல்ட்டில் உணரலாம்... மகிழலாம்! ஆனால்... குழப்பம், பதற்றம், கவலை, பயம் என்று அனைத்தும் சேர்ந்து மாணவர்களை சுழற்றியடிப்பதும் இந்த நாட்களில்தா''நன்றாகப் படிப்பவர், சுமாராகப் படிப்பவர், இத்தனை நாளாக நத்தையாக இருந்துவிட்டு, இனிமேல்தான் வேகம் கூட்டப் போகிறவர்... என மாணவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி... குழப்பம், பதற்றம் போக்கும் வழிகளையும், தேர்வுக்கான சரியான பிரிபரேஷன் முறைகளையும் தெரிந்து கொண்டால், நிச்சயம் கணிசமான மதிப்பெண்களைக் கூடுதலாகப் பெறலாம். போட்டிகள் நிறைந்த உலகில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் தங்கமாச்சே!'' என்று சொல்லும் சமயபுரம், எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் க.துளசிதாசன், அந்த 'தங்க' சேமிப்புக்கான பத்து வழிமுறைகளை, தனது அனுபவ வீச்சிலிருந்து இங்கு பகிர்கிறார்!
1. Day's Schedule:  உணவு, படிப்பு, எழுத்து, தூக்கம் அனைத்துக்குமான நேரத்தை பிரித்து வைத்துக்கொண்டு அதை ஃபாலோ செய்வதுதான் இந்த தினசரி அட்டவணை. இத்தனை நாட்கள் படித்ததில் அறிந்தோ... அறியாமலோ ஒரு அஜாக்கிரதை ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால், கவுன்ட் டவுன் துவங்கிவிட்ட கடைசி கட்டத்தில், ஒவ்வொரு மணித்துளியையும் இப்படி திட்டமிடலுக்குள் கொண்டுவந்து விடுவது, நேரத்தின் இழுபறியால் ஏற்படும் பதற்றத்தை முளையிலேயே கிள்ளியெறியும்.
2. Time Management:  நேர நிர்வாகம் என்பது திட்டமிடுதலை தொடர்ந்ததுதான். எது முக்கியம், எது அவசரம் என்ற அலசலுடன் கூடிய இந்த நேர நிர்வாகம்... அமைதியையும், நிதானத்தையும் தரும்.
3. Material Collection:   முந்தைய வருடங்களின் வினாத்தாள்களை சேகரித்து ஆராய்ந்து, அவற்றில் அடிக்கடி கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பது, நிச்சயம் ஏமாற்றாது.
4. Blue Print:  அரசே தயாரித்து வழங்கும் இந்த முதனிலை திட்டப்படிவம், அதிக மதிப்பெண் எடுக்க விரும்புபவர்களுக்கு முக்கியமானது. எந்தப் பாடத்திலிருந்து... எந்த மார்க் கேள்வி எத்தனை வரும் என்ற தெளிவை இந்த 'ஙிறீuமீ றிக்ஷீவீஸீt' தரும்.
5. Model Paper:  வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவனின் விடைத்தாள், அல்லது ஆசிரியரின் கோப்பிலிருக்கும் முன்னாள் 'டாப்பரி'ன் விடைத்தாள் போன்றவற்றை பார்வையிட்டு, தன்னைத் திருத்திக் கொள்வதும், மெருகேற்றிக் கொள்வதும் நல்லதொரு வழிமுறை.
6. Self Test:  வீட்டிலேயே சில வினாத்தாள்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எழுதிப் பார்க்கும் சுயபரிசோதனை, சிறப்பானதொரு பயிற்சி. அந்த வினாத்தாள்கள் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளானதாக இருப்பது நல்லது.
7. Presentation:   உயிரை உருக்கி படித்தவற்றை எல்லாம் கொடுக்கப்பட்ட நேரம், கேள்விகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான மதிப்பெண்கள் என்ற வரையறைகளுக்குள் தேர்வுத்தாளில் நிரூபிக்கும் தருணம் இது. தேர்வுக்கான 180 நிமிடங்களில் 170 நிமிடங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்தந்த பகுதியை இத்தனை நிமிடங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். முதலாவது... போதுமான இடம் விடுவது, அடிக்கோடிடுவது, விடைத்தாள் பக்கங்களை மாற்றி, இறுக்கமாக இணைத்துவிடாமல் சரியாகச் செய்வது... போன்றவை (Physical Presentation). இரண்டாவது... விடைத்தாள் திருத்துபவர் எதிர்பார்ப்பதை கேள்விக்கேற்றவாறு சரியாக அனுமானித்து, அதை விடைத்தாளில் தெளிவாக வெளிப்படுத்துவது (Mental Presentation)
8. Paper Analysis: தன்னுடைய விடைத்தாளை தானே அலசி ஆராய்ந்து பகுத்தறியும் மாணவனுக்கு தனது நிறை, குறைகள் தெளிவாகத் தெரிந்துவிடும். தன்னால் எந்த கேள்விகளுக்கு மதிப்பெண் அள்ள முடிகிறது, வழக்கமாக தான் சொதப்பும் பகுதி எது என்ற இந்த பகுப்பாய்வு, பறிபோகும் மதிப்பெண்களை மீட்க உதவும். உதாரணத்துக்கு, ஒரு சிலர் பெரிய வினாக்களுக்கு பர்ஃபெக்ட்டாக விடையளிப்பார்கள். ஆனால், ஒரு மதிப்பெண் வினாக்களில் தடுமாறுவார்கள். ஆக, தாங்கள் கவனம் செலுத்த வேண்டியது ஒரு மதிப்பெண் வினாக்களில்தான் என்ற உண்மை அவர்களுக்கு புரிபட இந்த 'பேப்பர் அனாலிஸிஸ்' உதவும்.
9. SWOT: Strength (பலம்), Weakness (பலவீனம்), Opportunities (வாய்ப்புகள்), Threat(அச்சுறுத்தல்) இந்த நான்கு ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தைச் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இது, தன்னை உணர்வதற்கான நான்கு படிகளைக் குறிக்கிறது. படம் வரைவது, ஈக்குவேஷன் சால்வ் செய்வது என்று தன் பலத்தைப் பொறுத்து கேள்விகளைத் தேர்வு செய்வது, தன்னுடைய பலவீனங்கள் எந்த வகையிலும் விடைத் தாளில் வெளிப்படாதபடி பார்த்துக்கொள்வது, டியூஷன், ஆசிரியர், நண்பர், கைடு என்று தன்னைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது, கவனச் சிதறலுக்கான வாய்ப்புகள், தனது குறைகள் போன்ற அச்சுறுத்தல்களைத் அறிந்து தவிர்ப்பது.
10. Food And Relaxation: தேர்வு சமீபமாகப் பார்த்து, உடலைத் தேற்றுகிறேன் என்று எசகுபிசகாக சாப்பிட்டு முதலுக்கு மோசம் செய்யக்கூடாது. அசைவம், ஆயிலி அயிட்டங்கள், செரிமானத்துக்குத் தொந்தரவானவை போன்றவற்றை பரீட்சை நாட்களில் தவிர்த்துவிட வேண்டும். தினமும் இரவு போதிய உறக்கம் அவசியம். ஆனால், பகலில் தொடர் படிப்பின் இடையே தூக்கமோ, ஓய்வோ தேவை இல்லை. காலாற நடப்பது, சப்ஜெக்ட்டை மாற்றிப் படிப்பது போன்றவை இறுக்கத்தைத் தவிர்க்கும்.
இறுதியாக, ஆசிரியர், பெற்றோர் இவர்களுக் காகவோ... வேலை, சம்பாத்தியம் இவற்றுக்காகவோ வெற்று இயந்திரமாக படிக்க முயற்சிக்காமல்... தனக்காக, தன் மேம்பாட்டுக்காக என்ற அர்ப்பணிப்புடன் முழுமையாக மனம் இசைந்து படித்தால்... பரீட்சை சுலபமாகும், சுகமாகும்!

- எஸ்.ஜானவிகா
  படம்: கே.குணசீல
source:vikatan

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

சபரிமலையில் தெரியும் மகரஜோதியும், மகர விளக்கும்

>> Sunday, January 30, 2011



                   பரிமலையில் தெரியும் மகரஜோதியும், மகர விளக்கும் வேறு வேறென கூறப்படுவது உண்மையா?

மகரஜோதி தானாகவே தெரிகிறதா? அல்லது எப்படி உருவாகிறது?

மகரஜோதி  காண்பதற்காக புல்மேட்டுப் பகுதிக்குப் போய் 104 பக்தர்கள் பலியான சம்பவத்தின் வழக்கு குறித்து கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது... விழி பிதுங்கிப்போன சபரிமலை தேவசம் போர்டு, ""மகர விளக்கும் மகரஜோதியும் பக்தர்களின் நம்பிக்கையாக கருதப்பட்டு வருவதால் இதில் எந்த விளக்கமும் அளிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்'' என பணம் கொழிக்கும் சபரிமலையைத் தற்காத்துக்கொள்ளும் பதிலையே தந்தது.

கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும் ""மகரஜோதி என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மகரஜோதி வடிவில் பக்தர்கள் கடவுளைக் காண்கிறார்கள். எனவே இதை மதத்தலைவர்களை வைத்தோ, விஞ்ஞானிகளை வைத்தோ விசாரணை செய்ய அவசியமில்லை...'' என பத்திரிகைகளிடையே பேட்டிளித்தார்.

ஆனால் கேரள கூட்டுறவுத்துறை அமைச்சர் சுதாகரனோ...  ""மகரஜோதியை பொன்னம்பம்பல மேட்டில் அங்குள்ள ஆதி வாசிகள்தான் ஏற்றுகிறார்கள். அது மத நம்பிக்கைக்குரிய பிரச்சினை என்பதால் தலையிட விரும்பவில்லை'' என்று ஒதுங்கிக் கொண்டார்.

இதைக் கேட்டு சபரிமலை மூத்த தந்திரி கண்டரரு மகேஸ்வரரோ, ""மகர விளக்கு வேறு மகர ஜோதி வேறு.  மகர ஜோதி என்பது வானில் அந்நாளில் உதிக்கின்ற நட்சத்திரம். மகர விளக்கு என்பதுதான் பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுவது...'' என கொடுத்த புது விளக்கம் மூலமாய் மகர ஜோதியை அய்யப்ப பக்தர்கள் தம் நம்பிக்கையிலிருந்து வெளியேற்றிவிடக் கூடாது என்ற தன் அக்கறையை ரகசியமாக வெளிப்படுத்தினார்.

இப்படியான நிகழ்வுகளுக்குப் பிறகு... "ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ந் தேதி மாலை 6.40 மணியளவில் பொன்னம்பல மலையில் தோன்றும் ஒளியைத்தானே மகர ஜோதி என நாம் தொலைக்காட்சிகளிலும், நேரடியாகவும் பார்த்தோம்' என நாடெங்கும் உள்ள அய்யப்ப பக்தர்களும், பொதுமக்களும் குழம்பிப்போனார்கள்.

உண்மையில் சபரிமலை மகர ஜோதியின் ரகசியம் என்ன? மகர விளக்கு  என்பது என்ன?  என்ற கேள்விகளோடும், மகர ஜோதியின் உண்மையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற தவிப்போடும் -இதுவரை மகர ஜோதி காண வந்து பலியாகிப் போன பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறதே என உயிர்களின் மீதான  கரிசனத் தோடும், சபரிமலை பொன்னம்பல மேட்டிற்குள் செல்ல நக்கீரன் உறுதியெடுத்தது, களமிறங்கியது. தொடர்ந்து பல வருடங்களாய் மகர ஜோதி பொய்யான ஜோதி என போராடிக்கொண்டிருக்கும் சுகுமாரனும் நம்மோடு வருவதாய்ச் சொல்ல... லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் "சாமியப்பா  அய்யப்பா... சரணமப்பா அய்யப்பா...' என சரணம் சொல்லியபடியே கேரளாவில் எந்த பத்தினம்     திட்டா வழியாக சபரிமலையின் பம்பைக்குச் செல்கிறார்களோ... அதே வழியிலேயே  நாம் பயணித்தோம்.
இந்தப் பயணம் நக்கீரனின் அசாத்தியமானப் பயணம். அய்யப்பன் மீதான பக்தியில், எங்கிருந்தோ விரதம் இருந்து, குழந்தை  குட்டி களோடு வரும் மனித உயிர்கள் ஒரு புழுவாக நெரிசலில் மிதிபட்டு மடிவதைக் காணச் சகியாமலேதான், இந்தப் பயணத்தை நக்கீரன் தேர்ந்தெடுத்தது. விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுது பயணம் கடும் பனிக் கிடையே ஆரம்பித்தது. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை காரில் பயணிக்க முடியும் என்பதால், கேரள -மலையாள நண்பர்களையும் கூட்டிக்கொண்டு, வாடகைக் காரை அமர்த்திக் கொண்டு சென்றோம்.

சபரிமலை -பம்பைக்குப் போகும் வழியில் பிலாப்புள்ளி என்ற இடத்திலிருந்து வலது புறமாய் பிரியும் பாதைதான்  மகர ஜோதி தெரியும் பொன்னம்பல மேட்டிற்கு செல்லும் வழி. அதன் ஊடாக அந்த அடர்காட்டுக்குள்  பயணத்தைத் தொடர்கிறோம்.


அந்த குறுகலான பாதையில் கார் லைட் வெளிச்சத்தில் தெரிகின்றன, பாதையெங்கும் கொட்டிக் கிடக்கும்  யானைகளின் சாணிகள். இடையிடையே குரங்குகளும், சில வகையான பாம்புகளும் நாம் கடக்கும் பாதையை மறித்து கடக்கின்றன. அந்தக் குறுக்குப் பாதையில் நின்று மறிக்கிறது ஒரு காட்டெருமை. பிரேக்கை அழுத்திக்கொண்டு ஆக்ஸிலேட்டரை முறுக்கும் நம் கார் டிரைவரின் சாமர்த்திய சப்தத்தில்  பாதையை விட்டு விட்டு மரங்களுக்குள் ஓடிப்போனது காட்டெருமை.

வெகு தூரத்தில் கேட்கும் யானைகளின் பிளிறல்கள் அடிக்கடி நம் காரின் பின்னாலும் கேட்கிறது. திடீரென ஒரு வளைவில் நம் கார் நிறுத்தப்படுகிறது. அந்த இடம் ஃபாரஸ்ட் செக் போஸ்ட். "எவிடே நிங்களு போறது' என கேட்கும் செக்போஸ்ட் ஃபாரஸ்ட்காரனிடம் "குமுளியா'னு என டக்கென சொல்கிறார் நம் நண்பர்.

காரினுள்ளான அந்த ஃபாரஸ்ட்காரரின் தேடலுக்குப் பிறகு அவரிடமிருந்து அனுமதிச் சீட்டு வாங்கிக்கொண்டு மறுபடியும் பயணம் தொடர்ந்தது.

போகப்போக அந்த அடர்காடு ஒரு பெரும் மலையாகிவிட்டது. மலையேற முடியாமல் திணறிக்கொண்டு மலையேறும் நம் கார், ஒரு மாட்டு வண்டியின் வேகத் திற்குக் குறைந்து போனபோது மலையில் வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது. மலைக்குள்ளான அந்தப் பயணத்தில் எந்த விலங்கு நின்று நம்மை மறிக்குமோ என நமக்குள்  ஒரு பயம் படரும் போதெல்லாம் தூர தெரியும் பாறைகள் எல்லாம் யானைகளாகத் தெரிந்தன.


காக்கி டேம், யானைத்தோடு டவர், பச்சைக்காணம், பாம்படம் செக்போஸ்ட் என 120 கி.மீ. கடந்து போய்க்கொண்டிருக்க... கொச்சு பம்பா என்ற இடத்தோடு நம் வண்டி நின்றது.  அந்தப் பொன்னம்பல மேட்டிற்குப் போக குறுக்கு வழி இங்கேதான் இருக்கிறது என்ற சுகுமாரனின் தகவலோடு காரை விட்டு இறங்கினோம்.

பொன்னம்பல மேட்டின் கீழ் நிற்கும் நாம்... ஆகாசம் தொடும் பொன்னம்பல மேட்டு மலையை பிரமிப்பாய்  பார்த்தபடி, அந்த மலைக்குக் கீழ் வசிக்கும் மனிதர் களிடம் மகர ஜோதியைப் பற்றி கேட்க ஆரம்பித்தோம்.

கோணிப் பையில் விறகுகளை திணித்துக் கொண்டிருந்த அந்த அம்மா, ஏதோ ஒரு ஜந்துவைப்போல நம்மைப் பார்த்துவிட்டு அந்த குடிலினுள் நுழைந்து விட்டார். 

தன் நண்பர்களோடு மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்த  சிஜு என்ற இளைஞனிடம்,  "இந்த மகர ஜோதியைப் பற்றி இங்குள்ள நீங்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்' என்க... ""இதேபோலதானு இவுடே ஒரு லோக்கல் டி.வி.காரு வந்து மூணு  ஆளுக்காருகிட்ட மகர ஜோதியின்டே மர்மம் குறிச்சு கேட்டுட்டுப் போயி. அது டி.வி.ல வந்தப்போ, ஆ மூணு ஆளுக்காரையும் அடிச்சு போலீஸ்  கேஸாயிட்டு ஜெயில்ல அடைச்சு. அதுகொண்டு இப்போ  நிங்களிடத்து நான் எந்தெங்கிலும் பரைஞ்சா போலீஸ் என்னை  கொன்னு களையும்'' என்று ஒதுங்கிக்கொண்டான். 

இலங்கையிலிருந்து அகதியாய் வந்து பொன்னம்பல மேட்டின் கீழ்  குடியிருக்கும் தமிழரான  முதியவர் சிவலிங்கத்திடம் கேட்டபோது...  ""30 வருஷமா இங்கேதான் குடியிருக்கேன்.  மகர ஜோதியோட  உண்மைய சொல்லியே ஆகோணும்.  ஏன்னா... மகர ஜோதிய நம்பி நெரிசல்ல சிக்கி நிறைய பேரு செத்துப்போறத பாத்தா கஷ்ட மாயிருக்கு'' என்கிறவர்... ""ஜனவரி 14-ந் தேதி காலையில  பெரிய பெரிய அலுமினியப் பாத்திரங்களோடு நாலஞ்சு ஜீப்ல ஆளுக போவாங்க. பொன்னம்பல மேட்டு உச்சிக்குப் போய் தங்கிக்குவாங்க. மாலையில அந்தப் பாத்திரங்கள்ல கற்பூர கட்டிகளைப் போட்டு நாலஞ்சு பேரு  சேர்ந்து கற்பூர ஒளி தெரியற அந்த அலுமினியப் பாத்திரத்தத் தூக்கிப் பிடிப்பாங்க. அதுதான் மகர ஜோதி. 

பொன்னம்பல மேட்டில் அய்யப்பன்  ஒளியா இப்படித்தான் தோன்றி சபரிமலையிலும்,  புல்மேட்டிலும்  மகர ஜோதி காண காத்துக் கிடக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு காட்சியளிக்கிற அநியாயம் நடக்கிறது. இதெல்லாம் பணத்துக்காக செய்யறாங்க. நீங்கதான் இதை அப்பாவி மக்களுக்குத் தெரியப்படுத்தணும்'' என்று  ஒரு பெரும் உண்மையைப் போட்டு உடைத்தபோது நாம் பெரும்  அதிர்ச்சிக்குள்ளானோம்.

அவரிடம் பேசிவிட்டு, தலை தெரியாத பாம்பொன்று நெட்டுக்குத்தலாய் தொங்கிக் கொண்டிருப்பதைப் போல  கிடக்கும் பொன்னம் பல மேட்டின் நுனி வாலைப்பிடித்துக் கொண்டு ஏறத் தொடங்க முயற்சித்தபோது நம்மை மறித்த மலையாள ஆள் ஒருவர்... "இதுக்குள்ள போகாம் பெற்றில்லா... மீறி போனா ஃபாரஸ்ட்காரங்க சுட்டுக் கொல்லும்' என மிரட்டியதுடன்... நாம் என்ன செய்கிறோம் என கண்காணிக்க  மரத் திற்குப் பின்னால் நின்றுகொண்டார்.  நாமும் பொன்னம்பல மேட்டிற்குள்  நுழையாதது      போல் பாவ்லா காட்டிவிட்டு  திரும்பவும்  பாம்பின் நுனி வாலைப் பிடித்து வனத்துறையால் போடப்பட்டிருக்கும் "நோ என்ட்ரி' போர்டைத் தாண்டினோம். நாம் நடக்கும் அந்தக் குறுகலான  பாதையில் நம் மீது தேரைகள் எகிறி எகிறிக் குதிக்கின்றன.

தின்று செரிக்க முடியாமல், நெளிய முடியாமல் ஊர்ந்து போனது பெரிய பாம்பொன்று.  மிதிபடும் இலைகளின் சத்தத் தோடும், யாரும் பேசாமல் மிக ரகசியமாகச் சென்று கொண்டிருந்தோம். கொஞ்ச தூரம் நடந்தபோது, அந்த மலையாள ஆள், நம்மை மிரட்டிய... "சுட்டுக் கொல்லும்' என்ற வார்த்தை எங்களுக்குள் செரிக்க முடியாமல், அந்தப் பாம்பைப் போலவே  ஊர்ந்துகொண்டிருந்தது என்பதுதான் உண்மை.

இந்த பயத்தோடு நடக்கிற நமக்கு இன்னும் பயத்தை  கூட்டவோ என்னவோ ஒரு மேட்டில்   நின்று காடே அதிரப்  பிளிறியது ஒரு யானை. அவ்வளவுதான்... ஏற்கனவே நடப்பதையே ஓடுவது போல  செய்துகொண்டிருந்த நாம் இப்போது ஓட்டமெடுத்தோம். பாவம் நம்முடன் வந்தவர்களில் இரண்டு பேர் வயதானவர்கள். அவர்களும் நமக்கு சரி சமமாகவே ஓடிவந்தார்கள்.  மலை மீது நடப்பது  தெரியும். மலையில் ஓடுவது என்பது புதிதுதான்.  கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் நடந்து பொன்னம்பல மேட்டு பாம்பின் முக்கால்வாசி உடலைத் தொட்டாகிவிட்ட சமயம் ஒரு இடத்தில் பதுங்கினோம்.

அங்கே கண்காணிப்புக் கோபுரம்  ஒன்று இருந்ததுதான் நம் பதுங்கலுக்குக் காரணம். சிறிது நேரம் நோட்டம்விட்ட நாம் கண்காணிப்புக் கோபுரத்தில் யாரும் இல்லாததை உறுதிபடுத்திய பின்பே பாம்பின்  தலையைப் பார்க்க  மேற்கொண்டு மிக மிக நெட்டுக்குத்தலாய் இருக்கும் மலையில் ஏறினோம். அங்கிருந்துதான் எங்களுக்குள் பேச்சுக் கிளம்பியது.

நம்மிடையே பேசத் தொடங்கிய சுகுமாரன்,  ""பொன்னம்பலமேடு  மனுஷங்க யாரும் போக முடியாத மலை. அங்கே அய்யப்பனின்  வாகன      மான புலிகள் நிறைய இருக்கிறதுன்னு சொல்லிக் கிட்டிருக்கறவங்க எதுக்கு இந்த மலைப்பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைச்சிருக்காங்க. இங்க நான் வர்றது அஞ்சாவது தடவ''  என அதிர்ச்சி கொடுக்கிறவர்... "இதோ... இதோ... இதுதான் பொன்னம்பல மேடு உச்சி' என்றபோது  நடந்து வந்த கால்வலியெல்லாம், பயமெல்லாம் காணாமல் போக... பாம்பின் தலையைப் பார்த்தோம். சபரிமலையிலிருந்து பொன்னம்பல மேட்டைப் பார்த்தவர்களே  இருக்கிற நிலையில் நாம் மட்டும்தான் பொன்னம்பல மேட்டிலிருந்து 2000 அடிக்கு  கீழ் ஒரு வெளிச்சப் புள்ளியாய் தெரிகிற சபரிமலையைப் பார்த் தோம்.

பொன்னம்பல மலையின் நுனிப்பகுதியில் ஒரு சின்ன திட்டு கட்டப் பட்டிருந்தது. அந்தத் திட்டை கை நீட்டிக் காட்டும் சுகுமாரன்,  ""இந் தத் திட்டுதான் சபரிமலை தேவசம் போர்டுக்கும் கேரள அரசுக்கும் பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது'' என்றவரிடம்... ""முத        லில் மகர ஜோதி என்பது என்ன? மகர விளக்கு என்பது என்ன? அதைச் சொல்லுங்கள்'' என்றபோது...
""ஆதி காலத்திலிருந்தே மகர மாசம் பிறக்கும் ஜனவரி  14-ந் தேதி பொன்னம்பல மேட்டில்  ஒரு நட்சத்திரம் தோன்றும். அந்த நட்சத்திரம் வருவதற்கு முன்னால் கிருஷ்ண பருந்து வட்டமிடும்... பின்வரும் அந்த நட்சத்திரமே மகர விளக்கு. அதான் அய்யப்பன்னு சொல்லப்பட்டது. பின்னாளில்  பொன்னம்பல மேட்டில் ஆதிவாசிகள்  இருந்தபோது  அவர்கள் ஏதோவொரு  நிகழ்வுக்காக  அங்கே மலையுச்சியில்  குறிப்பிட்ட அதே நாளில் தீபம் ஏற்றியிருக்கிறார்கள்.


இதை சபரிமலையில் நட்சத்திரத் தைப் பார்க்க வந்திருந்தவர்கள்  அய் யப்பன் ஒளியா  காட்சி தர்றாரு. இது    மகர ஜோதின்னு கன்னத்துல  போட்டுக் கிட்டத தேவசம் போர்டு பார்த்தாங்க. அதையே மகர ஜோதியாவே வச்சுக் கிட்டவங்க முதல்ல செய்த காரியம், பொன்னம்பல மேட்டிலிருந்த ஆதிவாசிகளை விரட்டி  னாங்க. 2000 அடிக்கும் மேலாக இருக்கும் சபரிமலையிலிருந்து பொன்னம்பல மேட்டைப் பார்த்தால் வானத்தை முட்டுவது போல இருக்கும். அதனால்  ஜோதி ஏற்றும் போது அது வானத்திலிருந்து  வருவதாகவே பக்தர்கள் நம்புவார்கள் என தேவசம் போர்டு பிளான் செய்தது. அதன்பின்னரே அந்த மலை யாரும் நுழைவதற்குத் தடை செய்யப்பட்டு தேவசம்போர்டோட பண மலையாகிப் போனது.

இப்போ இந்தப் புல்மேட்டுல 104 பேர் பலியான சம்பவத்திற்குப் பிறகே தங்கள் கற்பூர ஜோதி குட்டு வெளியாகறதனாலேயே தங்கள் மலை வருமானத்தைத்     தக்க வைத்துக்கொள்ள... புதிதாய்ச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். மகர ஜோதி என்பது  நட்சத்திரம், மகர விளக்குங்குறதுதான் பொன்னம்பல மேட்டில்  ஏற்றப்படுவதுன்னு...'' என சிரிக்கிறவர் ""இதிலும் ஒரு         பொய் என்னன்னா..  ஆதிவாசிகள்தான் மகர விளக்கு ஏத்தறாங்கன்னு.. ஆனா  யார், ஏத்தறாங்கன்னு  நான் சொல்றேன்.

1980-ல் மகரஜோதி பொய்னு  சொல்லி நானும், என் ஃப்ரெண்ட் பாபுவும் இந்த பொன்னம்பல மேட்டுக்கு ரகசியமாய் வந்தபோது... நாங்கள்  நினைத்தது போலவே இங்கே ஆதிவாசிகள் வசிக்கவில்லை. இங்கே வந்த ஜீப்புகளில் ஒரு ஜீப்பில் சபரிமலை தேவசம்போர்டு என்று எழுதப் பட்டிருந்தது. அந்த வண்டி எண் கூட கே.ஆர்.பி.2951, இன்னொரு ஜீப்பில்  போலீஸ் எஸ்கார்ட்ஸ் என்று எழுதப்பட்டிருந்தது. அந்த வண்டி எண் கே.சி.எப்.2672. கூடவே வனத்துறை வண்டி, எலக்ட்ரிசிட்டி போர்டு வண்டி என்று இன்னும் சில ஜீப்புகளில் பெயர் இருந்தது. அவர்கள் எல்லோரும் இணைந்து பெரிய பெரிய அலுமினிய பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு  மேலே நடந்தார்கள். அவர்கள் பின்னாலேயே நடந்த நாங்கள் இந்த உச்சிக்கு அவர்கள் வந்த பின் அவர்களின் செயல்களைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட் டோம். மது பாட் டில்களை எடுத்து அருந்தத் தொடங் கியவர்கள் இங்கேயே படுத்துக்கொண்டார் கள். நாங்கள் வெகு நேரம் காத்திருந்தோம்.

மாலை 5 மணிக்கெல்லாம் எழுந்தவர்கள் அந்த அலுமினியப் பாத்திரங்களில்  கற்பூரக் கட்டிகளைக் கொட்டி கற்பூர மலையை அந்த அலுமினியப் பாத்திரத்திற்குள் உரு வாக்கினார்கள். சரியாய் 6.40 மணிக்கு மலையின்  நுனியில் நின்று (இதோ நான் செய்வது போல...) தீபத்தை உயர்த்திப் பிடித்தார்கள்.  பின்பு இன்னொரு அலுமினியப் பாத்திரத்தை எடுத்து எரியும் தீபத்தின் மீது கவிழ்த்தார்கள். பின்பு சில நொடிகள் கழித்து கவிழ்த்த அலுமினியப் பாத்தி ரத்தை எடுத்தார்கள்.  இதேபோல இன்னும் இரண்டு முறை செய்தார்கள். அவ்வளவுதான்... ஆகப்பெரும் வேலை யொன்றை  முடித்த நிம்மதியோடு மலையை விட்டு இறங்கத் தொடங்கி னார்கள்.

அப்போது இந்தத் திட்டு கட்டப்படவில்லை. சபரிமலையில் அய்யப்பனுக்கு  தீபாராதனை காட்டும் போது...  பொன்னம்பல மேட்டு மலையில் ஓடும் ஆற்றில் குளித்து எழுந்து அய்யப்பன் ஒளியாய் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்ற புராணக் கதையை நம்பி பல மூலை களிலிருந்தும் சபரிமலைக்கு ஜோதி பார்க்க வரும் லட்சக்கணக்கான மக்களிடமிருந்து வசூல் செய்வதற் காகவே இந்த பொன்னம்பல மலையை கேரள அரசு பயன்படுத்துவதைப் பார்த்து மனம் நொந்து போனோம். அதுவும் எப்படி... மகர ஜோதி யினுடைய ஒளி புனிதம் என்று  "சாமியே சரணம் அய்யப்பா' என்று பக்தர் கள் கன்னத்தில் போட்டுக் கொண்டிருக்க... "இவர் களோ கிண்ணத்தில் மது ஊற்றி குடித்துக் கொண் டாடி கற்பூரக் கட்டி களைப் போட்டு தானாய் வரும் ஜோதி என பக்தர்களை ஏமாற்று கிறார்களே' என வருந்தி னோம். அதற்கடுத்த வருடம் 25 பேராய் வந்தபோது...  பொன்னம்பல மலையுச்சி யில் துப்பாக்கி முனையில் போலீஸ்காரர்கள் எங்களைப் பிடித்தார்கள். அடித்துத் துவைத்தார்கள். மிகக் கொடூரமாய்  துன்புறுத்தினார்கள்.

என்னை அடிக்கும்போது அவர்கள் சொன்னார்கள். "மலையாளத்துக்காரனான  நீங்க ஒரு பைசா கூட  உண்டியல்ல போடமாட்டீங்க. ஆனா தமிழுக்காரனுகளும், தெலுங்குக் காரனுகளும், கன்னடக்காரனுகளும் கொண்டு வந்து காசு கொட்றத  நீங்க எதுக்குடா  தடுக்கறீங்க'ன்னு  சொல்லியே அடிச்சாங்க.

அடிச்சுக் கொண்டுவந்து மலைக்கு வெளியே தூக்கி வீசிட்டுப் போனாங்க.  3 மாசம்  ஆஸ்பத்திரியில கிடந்த நான் திரும்பவும் மகரஜோதின்னு கற்பூர தீபத்தை காட்றத படம் எடுக்கணும்னு வெறியோட போய் படம் புடுச்சு லோக்கல் பத்திரிகைகளிடம் கொடுத்தபோது யாரும் பிரசுரிக்கலை. மக்களோட நம்பிக்கைய  முதலீடா வச்சு கோடிகள்ல கொழிக்கிற கேரளா அரசையும்,  தேவசம் போர்டோட முகத் திரையையும் எப்படியாவது கிழிக்கணும்னு போராடிக்கிட்டு இருந்தேன்.

அதுக்குள்ள 1999-ல 54 பக்தர்கள் பலியான சம்பவம் அறிந்து ஸ்பாட்டுக்கு ஓடினேன். நிஜமாய் நான் அழுதுவிட்டேன். தான் மட்டுமில் லாமல் தன்னுடைய 4 வயது சிறுவனை கூட்டிக்கொண்டு பொய்யான  இந்த ஜோதியை உண்மை என நம்பி  வந்த ஒரு அப்பாவையும்,  அந்த 4 வயது சிறுவனையும் ஓலைப்பாயில் சடலமாய் சுற்றி அனுப்பி னோம். இதற்குக் காரணம் மகர ஜோதிதான். அப்போதைய சம்பவத்தைப் போலவே தான் இப்போது புல்மேட்டில் 104 பேர் பலியானதுக்கு காரணமும் இந்தப் பொய்யான மகர ஜோதிதான். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இது உங்களுக்கு ரகசியம். எங்களுக்கு இல்லை. இந்த மகர ஜோதி தானா வர்றதில்லை. ஏற்றப்படுதுன்னு எங்க மலையாளிக எல்லாத்துக்கும் தெரியும். அதனாலதான் சபரிமலையில் இதுவரைக்கும் இறந்தவங்கள்ல மலையாளிக ரெண்டோ, மூணோதான். அதுகூட அவங்க பக்தருக இல்லை. உங்களுக்கு வழிகாட்டி சம்பாதிக் கிற கைடுக. "பணத்த வந்து எங்க மாநிலத்துல கொட்ற உங்ககிட்ட  எதுக்கு மகரஜோதி உண்மைய சொல்லணும்'னுதான் மலை யாளிக பலரும் நெனைக்கிறாங்க'' என்று கொந்தளிக்கிறவர்... ""கேரள அரசும், தேவசம் போர்டும் இனியும் பொன்னம்பல மலையை வைத்துக்கொண்டு பிசினஸ்  பண்ண முடியாது.  பணத்திற்காக உயிரை மதிக்காத இவர்கள் மீது எங்கள் அமைப்பு ஐகோர்ட்டில வழக்குப் பதிவு செய்திருக் கிறது.  தண்டனை வாங்கித் தரும்வரை ஓயமாட்டோம்'' என அந்தப் பொன்னம்பல மேட்டிலேயே  நம்மிடம் சத்தியம்  செய்தார் சுகுமாரன்.

""நாங்க மலையாளப் பத்திரிகைகளை நம்பறது இல்லை.  நீங்க தமிழ்  பத்திரிகை. அதுவும் நக்கீரன்ங்கிறதாலதான் உங்ககூட வந்தோம்.  நாங்க கைகூப்பி, கேட்டுக்கறது என்னன்னா... தயவு செய்து இனியும் உங்க தமிழ் மக்களும்,  ஆந்திர மக்களும், கன்னட மக்களும் மகரஜோதி உண்மைன்னு நம்பி இங்க வரவேணாம். வந்து மரிக்க வேணாம். உங்க மாநிலத்துலயே ஒரு அய்யப்பன் கோயில் கட்டி கும்பிடுங்க.  அதையேதான் நாங்க கேட்டுக்கிறோம்'' என்கிறார்கள் குருவிலானும், புருஷோத்தமனும்.

மலையைவிட்டு இறங்கத் தொடங்கியிருந்தபோது... இருள் பிடித்துக் கொண்டிருந்தது எங்களை.  மலைவிட்டு கீழிறங்கி அந்த மலையைத் திரும்பிப் பார்த்தோம். "கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை'  என்கிற அய்யப்ப பக்தர்களின் சரணத்தில்  நமக்கு ஒரு கேள்வி எழும்பியது. கல்லும் முள்ளும் யார் காலுக்கு மெத்தை என்பதுதான் அது? அதற்கான  பதில் கேரள அரசிடமும், சபரிமலை தேவசம்போர்டிடமும் மட்டுமே இருக்கிறது.

பக்தியில் திளைக்கும் மக்களை  பணம்காய்க்கும் மரமாக நினைப்பதைத் தடுத்து உண்மையை மக்களிடையே எடுத்துச் சொல்வதற்காகவே  இந்தப் பயணத்தைச் செய்தது நக்கீரன்.  கேரள அரசு வேண்டுமானால் தடை செய்யப்பட்ட பகுதி என்று பொன்னம்பல மேடுவை பொன் மேடு தயாரிக்கப் பயன்படும் மெத்தையாக்கிக் கொள்ளலாம். ஆனால் உண்மைகளுக்காக எங்கேயும்  நடக்கும் நக்கீரனின் கால்களுக்கு அந்தப் பொன்னம்பல மேடு வெறும் சொத்தைதான்.

-அருள்குமார்
படங்கள் : ஞானசேகரன்


source:nakkheeran
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இன்டர்நெட்டில் பழகறாங்க... கோபத்தையும் கொட்டறாங்க!

>> Friday, January 28, 2011


சில மாதங்களுக்கு முன் பஸ்சில் போனபோது பக்கத்தில் அமர்ந்த ஒருவர் திடீரென என் பக்கம் திரும்பி, 'சார், பல வருஷம் முன்பு நாம பழகியிருக்கோம்...' என்று சொன்னார். அவருக்கும் நடுத்தர வயதுதான். பள்ளியிலா, கல்லூரியிலா என்றெல்லாம் மண்டை குழம்பிக்கொண்டிருந்தபோது, நான் இறங்க வேண்டிய இடம் நெருங்கிவிட்டது. அவரிடம், 'என்கூட படித்தீர்களா?' என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன். என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு, 'டேய், என் பேரு இந்திரன்டா, நானு, ஜோதி, நீ எல்லாம் ஒரே பெஞ்ச், இப்ப தெரியுதா...' என்று தோளைத் தட்டி விடைகொடுத்தார். 

எனக்கு ஒரு பக்கம் வெட்கமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் 'இப்படியும் கூட நண்பர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். வேலை செய்வது, பணம் சம்பாதிப்பது, மனைவி, குடும்பம், வாழ்க்கை என்று மட்டும் இல்லாமல் நட்பை மறக்காத பண்பு மிகவும் சிறந்தது' என்று எனக்கு உணர்த்தியதை எண்ணி அவரை பெருமையுடன் நினைத்தேன். அதன்பின் அவரைப் பார்க்கவே முடியவில்லை. இப்படி பள்ளியிலும், கல்லூரியிலும் பழகிய நண்பர்களை அதன்பின் பார்க்கவே முடியாமல் தொடர்பறுந்து விடுகிறவர்கள் எத்தனையோ பேர்.
ஆனால் இன்றைய தலைமுறையினரை கேட்டுப்பாருங்கள். நம்மைத்தான் கேலி செய்வர். 'இதுக்குத்தான் பேஸ்புக், ஆர்க்குட் போகணும்ங்கறது...' என்று கிண்டலடிப்பார்கள். 

நல்லது அதிகம்; கெட்டது கொஞ்சம்!

சோஷியல் நெட்வொர்க்கிங் என்று சொல்லப்படும் ஆர்க்குட், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன. நல்ல எண்ணத்தில் பரிமாறப்படும் தகவல்கள், படங்களை திரித்து தவறாக பயன்படுத்துவோர் வெகு சிலர்தான். அவர்களை தண்டிக்க சட்டம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படித்த சக மாணவ, மாணவியை தொடர்பு கொள்ள வேண்டுமானால், இதில் போய் பள்ளி பெயரை, நாம் படித்த ஆண்டை பதிவு செய்தால் போதும்; உங்கள் அன்றைய நண்பர்களில் சிலர் கண்டிப்பாக சிக்குவர். அவர்களை 'நெட்' வழியில் தொடர்பு கொண்டு, மற்ற நண்பர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். 

இப்படி நண்பர்களை, உறவினர்களை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் உறவை, நட்பைத் தொடரச் செய்ய முடிகிறது என்றால், இன்னொரு பக்கம் நம் கருத்துகளையும் பதிவு செய்ய முடியும். பொது விஷயமாக இருந்தாலும், தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் மனதில் உள்ளவற்றை கொட்டித் தீர்க்க இந்த பக்கங்கள் பயன்படுகின்றன. நம் ஆதங்கத்தைக் கொட்டவும் முடிகிறது; அதே கருத்தைக் கொண்டவர்களின் அறிமுகமும் கிடைக்கிறது. ஆனால், இப்படி பொது விஷயங்களை பரிமாறிக்கொள்ளும்போது கட்டுப்பாடு தேவை. தனிப்பட்ட விமர்சனங்கள் சட்ட சிக்கல்களில் கொண்டுபோய் விடும். 'ப்ளாக்' எனப்படும் வலைப்பூக்களிலும் இப்படித்தான்!

கருத்து கந்தசாமி சிக்கினாரு!

அவர் எம்டெக், எம்பிஏ படித்தவர். முன்னணி சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றுபவர். சம்பளம் மாதத்துக்கு  70 கே. அதாவது, 70 ஆயிரம் ரூபாய். ஆனால், கார் வாங்க விருப்பமில்லை; பஸ்சில்தான் போவார். கண்டக்டர் 50 பைசா சில்லறை தராவிட்டால் சும்மா விட மாட்டார். 'சே, இந்தியா எப்படி முன்னேறும்...' என்று சலித்துக்கொள்வதுடன், உடனே தன் பிளாக்பெர்ரி மொபைலை எடுத்து, நெட்வொர்க்கில் கருத்தை பதிவு செய்தும் விடுவார். 

இவர் வீட்டு நாய் பக்கத்து வீட்டுக்குப் போய் அசுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. எவ்வளவோ சொல்லியும் இவர் கேட்பதாக இல்லை. அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டு எரிச்சல் அடைய வைத்தார். சண்டை பெரிதானது. அந்த வீட்டிலும் ஒரு சாஃப்ட்வேர் பெண் இருக்கிறார். அவரும் வந்து ஆங்கிலத்தில் தாட்பூட் என்று மல்லுக்கு நிற்க, மனிதர் டென்ஷன் ஆகி விட்டார். கத்தி விட்டு ஆபீசுக்கு போக பஸ்சில் ஏறி உட்கார்ந்தவர், வழக்கம்போல் இந்த சம்பவத்தையும் எழுதி, அந்த சாஃப்ட்வேர் பெண்ணை மட்டரகமாக விமர்சித்திருந்தார். இதை எப்படியோ அறிந்த அந்தப் பெண் போலீசில் புகார் செய்ய, இந்த மனிதர் 'ஙே...' என்று விழித்து மன்னிப்பு கேட்டதால் சும்மா விட்டது போலீஸ்.  

முதல் 'ப்ளாக்' கிரிமினல்!

சைபர் க்ரைமில் எத்தனையோ விதங்கள் உண்டு. கண்டபடி திட்டித்தீர்ப்பது முதல் அடுத்தவர் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடுவது வரை சொல்லலாம். முதன்முதலாக 'ப்ளாக்' விஷமத்தில் இறங்கி இன்னொரு பெண்ணுக்கு அவமானத்தைத் தேடித் தந்தவன் சிக்கியது 2001ல்தான். மனிஷ் கதூரியா என்பவன், ரித்து என்ற பெண்ணின் பெயரை தவறாக பயன்படுத்தி, ரித்து படங்களை, போன், இமெயில் முகவரியைப் பதிவு செய்து, ரித்து படங்களை திரித்து, ஆபாசமாக வெளியிட்டான். பழிவாங்குவதற்காக இப்படிச் செய்தவன், சில நாட்களில் பிடிபட்டான். ப்ளாக் கிரிமினல் நடவடிக்கையில் முதல் முதலாக பிடிபட்டவன் இவன்தான். 

கொட்டித் தீர்; பழி தீர்க்காதே!

நட்பு வட்டத்திற்கு மட்டும் தெரியும் வகையில், ப்ளாக்குகளில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இளைய தலைமுறையினர் பலர் உள்ளனர். இந்தக் கருத்து பரிமாற்றம் நட்பு வட்டத்துடன் முடிந்து விடும். தேவையில்லாமல் சர்ச்சை கிளம்பாது. இதில் கோபம், வருத்தம், மகிழ்ச்சி எல்லாம் இருக்கும். ஆனால், பழி தீர்க்கும் நெடி இருக்காது.  பழி தீர்க்க 'ப்ளாக்'குகளை பயன்படுத்தாமல், கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல பயன்படுத்தலாம். அரசியலில் லாலு முதல் நடிப்பில் அமிதாப் வரை பல பிரபலங்களும் 'ப்ளாக்' வைத்துள்ளனர். அவ்வப்போது தங்கள் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். இப்படி நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். உறவை, நட்பை பேணுவோம்.           

source:dinakaran

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

உங்கள் அடுத்த கம்ப்யூட்டராகும் ""டேப்ளட் பிசி''


கம்ப்யூட்டர் உலகம் தற்போது நான்கு முனைச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் எட்டு எடுத்து வைப்பது என்று புரியாமல் உள்ளது. இன்றைக்கு பலருக்கு, முதல் கம்ப்யூட்டர் எது என்றால் அது பெர்சனல் கம்ப்யூட்டராக இல்லை. ஸ்மார்ட் போனாகத்தான் உள்ளது. ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் நாம் எங்கு சென்றாலும் உடன் வருகின்றன. அதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. எவ்வளவுதான் திறனுடன் செயல்பட்டாலும், ஒரு ஸ்மார்ட் போன், பெர்சனல் கம்ப்யூட்டராக முழுமையாக இடம் பெறாது. எனவே தான் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும், ஸ்மார்ட் போனுக்கும் இடையே ஒரு சாதனம் இரண்டின் பயன்பாட்டினையும் முழுமையாகத் தரும் வகையில் தேவையாய் இருந்தது. அந்த இடத்தில் டேப்ளட் பிசி வந்து நம் தேவைகளை நிறைவு செய்து வருகிறது. இதனால், கம்ப்யூட்டர் பயன்பாடு தற்போது இரு வகை கணினிகளில் மேற்கொள்ளப்பட்டு, எதில் தொடர்வது என்ற கேள்விக் குறியுடன் தொடர்கிறது. ஆனால், அண்மையில் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து முடிந்த தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பட்டயக் கணிப்பொறிகளைக் (Tablet PC) காண்கையில், அதன் மாடல் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்கையில், இவை மொத்தமாக மக்களை சென்றடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது. எனவே நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அதன் சில அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
1. பழைய மாடலில் மாற்றம்: தற்போதைய டேப்ளட் பிசி இதன் முன்னோடிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. முதலில் ஒரு டேப்ளட் பிசி, லேப்டாப் கம்ப்யூட்டரில், சுழலும் திரை ஒன்றை இணைத்தது போல வடிவமைக்கப்பட்டது. ஆனால் மக்களிடம் இவை எடுபடவில்லை. பின்னர், ஸ்மார்ட் போன் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் சாதனம் உண்டாக்கிய சலசலப்பும், மக்களை புதிய கோணத்தில் பார்க்க வைத்தது. ஐ-பேட் இதுவரை டேப்ளட் பிசி குறித்து நிலவி வந்த அம்சங்களை மாற்றிப் போட வைத்தது. அந்நாளைய காம்போசிசன் நோட்டுப் போல தோற்றத்தில் பல டேப்ளட் பிசிக்கள் வடிவமைப்பு கொண்டுள்ளன. அனைத்தும் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. 
2. புதிய ஸ்லேட்கள்: பல டேப்ளட் பிசிக்கள் புதிய டிஜிட்டல் ஸ்லேட்டுகளாகத்தான் வடிவம் பெற்றுள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட். 9.5 அங்குல அகலத்தில், 7.5 அங்குல உயரத்தில், 0.5 அங்குல தடிமனில் இது வெளியான போது, இதுவே டேப்ளட் பிசிக்களின், வரையறுக்கப்பட்ட வடிவமாக அமைந்துவிட்டது. பின்னர் சாம்சங் கேலக்ஸி டேப் 7 அங்குல திரையுடன் அறிமுகமான போது, கைகளுக்குள் அடங்குவதற்கான சரியான அளவு அது என வரையறை செய்யப்பட்டது. தற்போது நாம் விரும்பும் அளவில் திரையுடன் கூடிய டேப்ளட் பிசிக்களை தேர்ந்தெடுக்கலாம். டேப்ளட் பிசிக்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நிச்சயம் இது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். 
3. ஆப்பரேட்டிங் சிஸ்டம்: பிரியமான அளவில் டேப்ளட் பிசிக்கள் தயார் ஆவது மட்டுமின்றி, இவற்றின் இயக்கத்திற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் ஐபோன், ஐபேட், ஐ பாட் டச் ஆகியவற்றில் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முன்னணியில் உள்ளது. அடுத்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இடம் பெறுகிறது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன், 12க்கும் மேற்பட்ட புதிய டேப்ளட் பிசிக்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் 1.6, 2.0, 2.1 மற்றும் 2.2 எனப் பல பதிப்புகளில் கிடைக்கிறது. 
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, டேப்ளட் பிசிக்கானதாகக் கொண்டு வந்துள்ளது. பிளாக்பெரியைத் தயாரிக்கும் ஆர்.ஐ.எம். நிறுவனம், QNX என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு வகையாகும். டேப்ளட் பிசி தயாரிப்பில், பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறிய நிறுவனங்களும், தங்கள் பங்கைப் பிடிக்க பலத்த போட்டியில் இறங்கி உள்ளன. 
4. நிறைய எதிர்பார்ப்புகள்: இத்தனை மாடல் டேப்ளட் பிசிக்களும் போட்டியில் இறங்கியுள்ள நிலையில், இவற்றில் மக்கள் எதிர்பார்க்கும் அம்சங்களும் அதிகரித்து வருகின்றன. எங்கும் எடுத்துச் செல்லுதல், நெட்வொர்க் இணைப்பு பெறுதல் ஆகிய ஸ்மார்ட்போன் வசதிகளுடன், லேப்டாப் ஒன்றின் செயல்பாடுகளையும் இணைத்துத் தருவதால், குறிப்பாக பெரிய திரை, அதிக திறனுடன் கூடிய ப்ராசசர் மற்றும் கேமரா மற்றும் துணை சாதனங்கள் கொண்டு இவை இருப்பதனால், பயன்படுத்துபவர்கள் இதில் இன்னும் பல வேலைகளை முடிக்கப் பயன்படுத்துமா என்று எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, இயங்கும் இடத்திற்கேற்ற வகையில் இணைய தகவல்களைத் தரும் பணிகளில், டேப்ளட் பிசிக்கள் தங்கள் ஜி.பி.எஸ். திறனுடன் செயல்படுவதால், இவற்றின் பயன்களின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. மேலும் முன் பகுதியிலும் தரப்படும் கேமரா, வீடியோ கான்பரன்சிங் வசதியை மிக எளிதாகத் தருகிறது. இவை சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுடனான தொடர்பை இன்னும் எளிதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகின்றன.
டேப்ளட் பிசிக்கள், தற்போது கையாளப்படும் மொபைல் கேமிங் வசதிகளை இன்னும் சிறப்பாக்கும். ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் மார்க்கட் தளங்களில் ஹை டெபனிஷன் முப்பரிமாண விளையாட்டுக்கள் இதற்கெனவே குவிந்து கிடக்கின்றன. பலர் ஒரே நேரத்தில் வேறு வேறான இடங்களிலிருந்தவாறே விளையாடுவது டேப்ளட் பிசிக்கள் மூலம் மிக எளிதாகும்.
குறைந்த கட்டணத்தில், எப்போதும் இணைய இணைப்பில் இருக்கும் வகையிலான கம்ப்யூட்டர்களை, டேப்ளட் பிசிக்கள் தரும். பெரும்பாலான டேப்ளட் பிசிக்கள், வை-பி மற்றும் 3ஜி தொடர்பினைத் தரும் வகையில் வடிவமைக்கப்படுவதால், நெட்வொர்க் இணைப்பு எளிதாகும்.
5. சில தடைகள்: டேப்ளட் பிசிக்கள் மக்களை முழுமையாக அடைவதில் சில தடைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. முதல் தடை வெவ்வேறான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும், அவற்றைத் தரும் மிகப் பெரிய நிறுவனங்களுமே. முதல் மூன்று நிறுவனங்களான, ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் இந்தப் பிரிவில் தங்களின் ஏகாதிபத்தியத்தினை நிறுவ முயற்சிக்கும்.இவர்களின் போட்டியில் வெற்றியைத் தீர்மானிப்பது, ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம் களைப் பொறுத்தே அமையும். இவற்றில் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் தங்களின் சிஸ்டங்களில் இயங்கும், அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு ஒப்புதல் கொடுப்பதுவும் பிரச்சினையைத் தரும் வகையில் இருக்கும். 
6. யார் வாங்க வேண்டும்?: நீங்கள் புதுமை எதனையும் சோதனை செய்து பார்க்க விரும்பாதவராக இருந்தால், இப்போதைக்கு டேப்ளட் பிசியிடம் செல்ல வேண்டாம். எந்த புதிய சாதனம் கிடைத்தாலும், அதன் பலனை உடனே பெற வேண்டும் என்ற வேட்கை உடையவராக இருந்தால், அப்ளிகேஷன் புரோகிராம்கள் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் உடையவராக இருந்தால், தாராளமாக, டேப்ளட் பிசி ஒன்றினை வாங்கிப் பயன்படுத்தலாம். மொபைல் இணைய உலா, அகலமான திரை, இருட்டிலும் நூல்களைப் படிக்கும் வசதி, வீடியோ ஓட்டம், மொபைல் இமெயில் ஆகியவை உங்களுக்கு பிரமிப்பினைத் தரும். பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனும் இயங்கும் வகையில் கிடைக்கின்றன. ஆப்பிள், சாம்சங். எச்.பி. போன்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்களுடன், டெல், ஏசர் நிறுவனங்களின் டேப்ளட்களும் தற்போது மார்க்கட்டில் இறங்குகின்றன. இதில் நெட்புக் கம்ப்யூட்டர் விற்பனையில், உலக அளவில் 36% பங்கினைக் கொண்டுள்ள ஏசர் நிறுவனம் , 4.8 மற்றும் 10 அங்குல திரைகளுடன் இவற்றை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதே வகையில் டெல் நிறுவனமும் இறங்கியுள்ளது. பெயர் பெற்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசியின் விலை ரூ.32,000 முதல் ரூ. 40,000 வரை செல்கிறது. அதிகம் பிரபலமாகாத சீனத்து டேப்ளட் பிசிக்கள், இணைய தளம் மூலமாகவும் சில ஏஜன்சிகள் மூலமாகவும் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ. 9,000 முதல் ரூ.24,000 வரை உள்ளன. பெங்களூரைச் சேர்ந்த நோஷன் இன்க் (Notion Inc) என்ற நிறுவனம், ஐ-பேடில் உள்ளதைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் கொண்ட டேப்ளட் பிசி ஒன்றை ரூ. 20,000 என்ற அளவில் தருவதாக அறிவித்துள்ளது. இதே போல ஆலிவ் பேட் என்ற 3ஜி வசதி கொண்ட 7 அங்குல திரை கொண்ட டேப்ளட் பிசி ரூ. 22,000க்குக் கிடைக்கிறது. இவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தால், நிச்சயம் இந்த சந்தையில் வெற்றி பெறும். முதல் வெற்றி பெற்றால், லாபமும் அடையும். மக்களும் பயன் பெறுவார்கள். பெரிய நிறுவனங்கள், இந்த டேப்ளட் பிசிக்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை அதிக அளவில் சந்தையைப் பிடிக்கும் போட்டியில் இனி பலமாக இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
ஆனாலும், டேப்ளட் பிசி ஒருவரின் இரண்டாவது கம்ப்யூட்டராகத்தான் மக்களால் முதலில் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. பெரும்பான்மை யானவர்களால் இயக்கப்படும் விண்டோஸ் இயக்கம் முழுமையாக, டேப்ளட் பிசியில் இயங்கும் நிலை வரும்போதுதான், டேப்ளட் பிசிக்கள் பெரிய அளவில் பெருகும்


source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

சமையல்:30 வகை சப்பாத்தி

>> Thursday, January 27, 2011

''இன்னிக்கு, ஸ்கூலுக்கு சப்பாத்திதான் வெச்சிவிட்டிருக்கேன். மிச்சம் வைக்காம சாப்பிடணும். புரிஞ்சுதா?''
''போம்மா, எப்பப் பார்த்தாலும் அதே சப்பாத்திதானா. நான் சாப்பிட மாட்டேன்..?''
வீட்டுக்கு வீடு ஒலிக்கும் இந்த 'டிஷ்யூம்... டிஷ்யூம்'... இத்தோடு விடைபெறப் போகிறதுபின்னே..! புதினா, வெந்தயக்கீரை, கம்பு, சோளம், காய்கறி, ட்ரைஃப்ரூட் என்று 30 வகையான சப்பாத்திகளை 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன் பரிமாறும்போது, இனி என்ன கவலை!
''பச்சைக் குழந்தையில ஆரம்பிச்சு, பாட்டிங்க வரைக்கும் சப்பாத்தி சாப்பிடலாம். அதுவும் ஒபிஸிட்டி, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், ஹார்ட் பிராப்ளம்னு பாதிக்கப்பட்டவங்களுக்கு வரப்பிரசாதம் சப்பாத்திதான்'' என்று சொல்லும் சாந்தி விஜயகிருஷ்ணன்,
''கோதுமையை தவிட்டோட அரைச்சு, சப்பாத்தி செய்தா, சத்து வீணாகாம உடம்புல சேர்ந்துடும். மாவை தண்ணி விட்டுப் பிசைஞ்சதும், மெல்லிசான துணியால நாலு மணி நேரத்துக்கு மூடி வெச்சுட்டா, சப்பாத்தி மிருதுவா இருக்கும். அவசரமா செய்யணும்னா... மிதமான சுடுநீர் இல்லனா, வெதுவெதுப்பான பாலை விட்டு தளர்வா பிசைஞ்சுகிட்டா போதும்'' என்று டிப்ஸும் கொடுக்கிறார்.

பிறகென்ன... ஜமாயுங்க!
ஸ்வீட் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை, நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் - கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கோதுமை மாவில் உப்பு, பால், தண்ணீர் சேர்த்து, மாவை கெட்டியாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். கோதுமை மாவு கலவையில் சிறிது எடுத்து சிறிய வட்டமாக தேய்க்கவும். அதன் மேல்புறம் நெய் தடவி, பொடித்த சர்க்கரையைத் தூவி நான்காக மடித்து, மாவு தொட்டு மீண்டும் தேய்த்து, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்
மிக்ஸட் வெஜ் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - இரண்டு கப், துருவிய கேரட், துருவிய கோஸ் - தலா கால் கப்,  துருவிய குடமிளகாய், துருவிய வெங்காயம் - தலா இரண்டு டீஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவில் உப்பு, துருவிய காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவில் சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் தடவி சுட்டெடுக்கவும்.
 வாழைக்காய் கார சப்பாத்தி
தேவையானவை: வாழைக்காய் - 1, கோதுமை மாவு - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - இரண்டு டீஸ்பூன், தனியா - இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயைத் தோலுடன் வேக வைத்து, பிறகு தோலை உரித்து மசித்துக் கொள்ளவும். தனியா, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து, பொடித்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் உப்பு, மசித்த வாழைக்காய், பொடித்த தனியா - மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து சிறிது மாவை எடுத்து மெல்லிய சப்பாத்தியாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்
மிளகு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முக்கால் டீஸ்பூன் நெய்யில் மிளகை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அதை கோதுமை மாவில் சேர்த்து... உப்பு, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
மசாலா சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய், விரலி மஞ்சள் - தலா 1, காய்ந்த மிளகாய் - 2, துருவிய வெங்காயம் - முக்கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடாயில் முக்கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும். இவற்றுடன் விரலி மஞ்சளை சேர்த்துப் பொடித்து, கோதுமை மாவுடன் கலக்கவும். உப்பு, துருவிய வெங்காயம் சேர்க்கவும். இதை தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்,
 ட்ரை ஃப்ரூட் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், முந்திரி, பாதாம் பிஸ்தா சேர்ந்த கலவை - முக்கால் கப், பேரீச்சை துண்டுகள் - 5, உலர்ந்த திராட்சை - 10, நெய் - தேவையான அளவு.
செய்முறை: பாதாம், முந்திரி, பிஸ்தா கலவையை நைஸாக பொடித்துக் கொள்ளவும், பேரீச்சை, திராட்சையை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கோதுமை மாவில், பொடித்த பொடி, அரைத்த விழுது சேர்த்து, சிறிது நெய் விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிது பால் சேர்த்துக் கலக்கலாம். பிசைந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் தடவி சுட்டெடுக்கவும்.
 புதினா சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய புதினா - கால் கப், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, இஞ்சி, புதினா, நெய் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் ஒவ்வொரு சப்பாத்தியாக போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
கடலை மாவு சப்பாத்தி
தேவையானவை: கடலை மாவு - அரை கப், கோதுமை மாவு - ஒரு கப், ஓமம், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், நெய், ஆம்சூர் பொடி - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவுடன் கோதுமை மாவு, ஓமம், கரம் மசாலாத்தூள், நெய், ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இதை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
க்ரீன் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லியுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதில் கோதுமை மாவைப் போட்டு, தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்
வெந்தயக்கீரை சப்பாத்தி
தேவையானவை: பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, கோதுமை மாவு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... வெந்தயக்கீரை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற விடவும். இதில் கோதுமை மாவைப் போட்டு தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
 முள்ளங்கி சப்பாத்தி
தேவையானவை: துருவிய முள்ளங்கி - அரை கப், கோதுமை மாவு - ஒரு கப், சோள மாவு - கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துருவிய முள்ளங்கியுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், உப்பு சேர்த்து, கோதுமை மாவு, சோள மாவைப் போட்டு (தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கவும்), கெட்டியாகப் பிசையவும்.
மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்
 பயறு சப்பாத்தி
தேவையானவை: ஊற வைத்த பயறு - கால் கப், கோதுமை மாவு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2,  சீரகத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஊற வைத்த பயறுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, சீரகத்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
முந்திரி கார சப்பாத்தி
தேவையானவை: முந்திரி - 15, கசகசா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கோதுமை மாவு - ஒரு கப், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முந்திரியுடன் கசகசா, காய்ந்த மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும். கோதுமை மாவுடன், பொடித்த முந்திரி கலவை, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இதை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
எள் சப்பாத்தி
தேவையானவை: வெள்ளை எள், மைதா மாவு - தலா கால் கப், கோதுமை மாவு - ஒரு கப், தனியா - 2 டீஸ்பூன், மிளகு, சீரகம், நெய் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எள்ளை வெறும் கடாயில் வறுக்கவும். தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, இதனுடன் வறுத்த எள்ளை சேர்த்துப் பொடிக்கவும். கோதுமை மாவுடன் மைதா மாவு, வறுத்து பொடித்த பொடி, உப்பு, நெய் சேர்த்துக் கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
தேங்காய் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை - சிறிதளவு,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, தடிமனான சப்பாத்திகளாக இடவும். தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
வேர்க்கடலை சப்பாத்தி
தேவையானவை: வேர்க்கடலை - கால் கப்,  கோதுமை மாவு - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் - தலா 4, சிறிய மாங்காய் துண்டு - 1, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், மாங்காய் துண்டு, இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இந்த விழுதை கோதுமை மாவுடன் கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
உருளைக்கிழங்கு சப்பாத்தி
தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு - 1, கோதுமை மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள்  - கால் டீஸ்பூன்,  பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, துருவிய பனீர் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, துருவிக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு, மிளகாய்த்தூள், வெங்காயம், பனீர், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
ரெட் சப்பாத்தி
தேவையானவை: பழுத்த தக்காளி - 2, கோதுமை மாவு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிளகாயை கொதி நீரில் போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மிளகாயுடன் தக்காளி, உப்பு சேர்த்து அரைத்து, கோதுமை மாவை சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்
பேபிகார்ன் சப்பாத்தி
தேவையானவை: துருவிய பேபிகார்ன் - கால் கப், கோதுமை மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பச்சை மிளகாய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துருவிய பேபிகார்னுடன், குடமிளகாய், பச்சை மிளகாய், உப்பு, கோதுமை மாவு சேர்த்து கெட்டியாகக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
தால் சப்பாத்தி
தேவையானவை: பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு குக்கரில் குழைய வேக வைக்கவும். ஆறியதும் பருப்பை எடுத்து மசித்து... பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேங்காய் துருவல், கோதுமை மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
மக்காச்சோள சப்பாத்தி
தேவையானவை: மக்காச்சோள மாவு, கோதுமை மாவு - தலா அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, சீரகத்தூள் - கால் டீஸ்பூன், சாட் மாசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மக்காச்சோள மாவுடன் கோதுமை மாவு, உப்பு, கொத்தமல்லி, சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
அரிசி சப்பாத்தி
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், கோதுமை மாவு - கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவுடன், கோதுமை மாவு, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, தேங்காய் எண்ணெய் விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது பிசைந்த மாவைப் போட்டு, குழவியால் தேய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக தட்டி, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
பிரெட் சப்பாத்தி
தேவையானவை: பிரெட் துண்டுகள் - 2, கோதுமை மாவு - ஒரு கப், துருவிய பனீர் - கால் கப், பால் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தாள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பிழிந்து... துருவிய பனீர், வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, கோதுமை மாவு சேர்த்துக் கலந்து, பால் விட்டு கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
ஷவ்வரிசி சப்பாத்தி
தேவையானவை: மாவு ஜவ்வரிசி - கால் கப், கோதுமை மாவு - ஒரு கப், கரகரப்பாக பொடித்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் துகள்கள் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை 8 மணி நேரம் ஊற வைத்து, கோதுமை மாவு, வேர்க்கடலைப் பொடி, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் துகள்கள், உப்பு, நெய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
ரவை சப்பாத்தி
தேவையானவை: ரவை - அரை கப், கோதுமை மாவு - அரை கப், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், புதினா - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ரவையில் கொதிக்கும் தண்ணீர் விட்டு... இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, கோதுமை மாவு, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
சீரக சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு - தலா அரை கப், சீரகம் - 2 டீஸ்பூன், தயிர் - கால் கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
 
செய்முறை: மைதா மாவுடன், கோதுமை மாவு, சீரகம், உப்பு, தயிர் சேர்த்து... எலுமிச்சைச் சாறை விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.  காரம் தேவைப்பட்டால் துருவிய இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்.
கம்பு சப்பாத்தி
தேவையானவை: கம்பு மாவு, கோதுமை மாவு - தலா அரை கப், துருவிய சௌசௌ - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய், ஓமம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கம்பு மாவு, கோதுமை மாவு, துருவிய சௌசௌ, தேங்காய், ஓமம், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
சேமியா சப்பாத்தி
தேவையானவை: சேமியா - கால் கப், கோதுமை மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேமியாவில் சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்
சாக்கோ சப்பாத்தி
தேவையானவை: பால் பவுடர் - கால் கப், சாக்கோ பவுடர், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், கோதுமை மாவு - ஒரு கப், பால் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - தேவையான அளவு, முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகள் - சிறிதளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் சாக்கோ பவுடர், பால் பவுடர், வெண்ணெய், பால் சேர்த்து கெட்டியாகக் கலந்து... முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளை சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
ஃப்ரூட் சப்பாத்தி
தேவையானவை: ஆப்பிள் - 1, கோதுமை மாவு - ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஆப்பிளை தோல் சீவி துருவி... உப்பு, நெய், மிளகுத்தூள், கோதுமை மாவு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
தொகுப்பு: ரேவதி, படங்கள்: து.மாரியப்பன்




source:vikatan
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP