சமீபத்திய பதிவுகள்

விரைவில் மக்கள் முன் தோன்றுவார்: பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்;

>> Tuesday, January 19, 2010

விரைவில் மக்கள் முன் தோன்றுவார்: பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்; விடுதலைப்புலிகள் இணையதளம் தகவல்
 கொழும்பு, ஜன. 19-
 
இலங்கை இறுதிகட்ட போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் அவர் உடல் எதையும் காட்டவில்லை. எனவே அவர் கொல்லப்பட்டரா? இல்லையா? என்பது மர்மமாக இருந்தது.
 
ஆனால் மே 18-ந்தேதி பிரபாகரன் உடலை காண்பித்தனர். முகம், உருவம் எல்லாமே பிரபாகரன் போலவே இருந்தது. எனவே பிரபாகரன் இறந்து விட்டதாகவே எல்லோரும் கருதினார்கள்.
 
ஆனால் விடுதலைப்புலிகள் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பத்மநாதன் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கூறினார். விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்களான பழ.நெடுமாறன், வைகோ போன்றவர்களும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறி வந்தனர்.
 
இந்த நிலையில் கே.பத்மநாதன் திடீரென பிரபாகரன் போரில் இறந்துவிட்டார். இது உறுதியான தகவல் என்று கூறினார். எனவே அனைவருமே பிரபாகரன் இறந்து விட்டதாகவே நம்பினார்கள்.
 
ஆனால் பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் இன்றுவரை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் எங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல் அடிப்படையில்தான் இதை சொல்கிறோம். பாதுகாப்பு கருதி அவர் இருக்கும் இடத்தை சொல்ல முடியாது என்று கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் விடுதலைப்புலிகள் அதிகாரபூர்வ இணையதளமாக அறிவிக்கப்பட்டுள்ள lttepress.com என்ற தளத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 
விடுதலைப்புலிகள் செய்தி தொடர்பாளர் தமிழ்மாறன் விடுத்துள்ள இந்த அறிக்கையில் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
 
தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாக உள்ளார் என்று தலைப்பிட்டு இந்த அறிக்கை வெளியிட்டு உள்ளது.
 
அறிக்கை முழு விவரம் வருமாறு:-
 
எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.
 
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப்போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
 
அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகு விரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார். சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.
 
எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம். இழப்புகள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.
 
சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது. சிங்கள பேரினவாத அரசு எமது மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன் எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப் போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
 
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
விடுதலைப்புலிகள் இன்னொரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர். அதில் 19.5.2009-க்கு பின்பு எமது தாயகத்தில் ஏற்பட்ட சோகமான சம்பவத்தின் காரணமாக செயல்படாமல் இருந்த மாவீரர் பனிமனை ஆவண காப்பகம், தொடர்பகம் ஆகிய முக்கிய அங்கங்கள் 8.1.2010 முதல் செயல்படுகிறது என்று குறிப்பிட்டு உள்ளனர்.

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சிவப்புப் பைககுள் என்ன இருக்கு ?

 

தெருவெங்கும் தோரணங்கள், ஒளி விளக்குகள்... பிரபல தொழிலதிபர் ஒருவருக்கு, 'மதிப்புக் குரிய குடிமகன்' என்ற பட்டம் வழங்கும் விழா. பெருமிதமாக மேடையேறி மைக் பிடித்த தொழில திபர், ''30 வருடங்களுக்கு முன், இந்த நகருக்குள் தனி ஆளாக நான் நுழைந்த தினம் இன்றும் என் நினைவில் இருக்கிறது. கிழிந்த பேன்ட்-சட்டை, சேறு சகதி அப்பிய ஷு, ஒரு சிவப்புப் பை... அவ்வளவுதான்! ஆனால் இன்று ஹோட்டல்கள், அபார்ட்மென்ட்கள், கிளப்கள் என்று ஏகப்பட்ட சொத்துக்கள். ஆம் நண்பர்களே! உங்கள் நகரம் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டது. லெட்ஸ் பார்ட்டி!'' என்று விருந்தைத் துவக்கிவைத் தார். விதவிதமான உணவுகள், உற்சாக பானங்கள் என்று திளைத்து மகிழ்ந்த மக்கள் கூட்டத்தில், 'ஏழையாக இருந்தாலும் அபாரத் திறமை, விடாமுயற்சி காரணமாக வாழ்க்கையில் எவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறார்!' என்று ஆச்சர்யக் கிசுகிசுப்புகள். ஓர் இளைஞன் மட்டும் அந்தத் தொழிலதிபரைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தான். ஒரு தனிமைத் தருணத்தில் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டான்... '30 வருடங்களுக்குமுன், நீங்கள் ஒற்றை ஆளாக இந்த ஊருக்குள் வந்தபோது, உங்கள் கையில் இருந்த சிவப்புப் பையில் என்ன இருந்தது?'

உதடுகளில் சின்ன புன்னகையைப் படரவிட்ட அந்தத் தொழிலதிபர், 'கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் பணமாகவும், 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பத்திரங்களும் இருந்தன!' என்றார்.

உங்களின் எந்த ஒரு முயற்சிக்கு முன்னும் 'அந்த சிவப்புப் பையில் என்ன இருந்தது?' என்ற கேள்வி யைக் கேட்டுப் பழகுங்கள்; அவ்வளவுதான் சக்சஸ் ஃபார்முலா என்கிறார் ஜான்.சி.மேக்ஸ்வெல். 'அவர் சாதனையாளர். அவர் சாதித்ததுபோல நம்மாலும் சாதிக்க முடியும்!' என்ற அதீத நம்பிக்கையை மட்டுமே துணையாகக்கொண்டு மனதில் எந்தத் திட்டமும் இல்லாமல் செக்கு மாடுபோல உழைத்துக்கொண்டு இருப்பவர் களுக்கு இந்தக் கதை சமர்ப்பணம். ஒவ்வொரு வெற்றியாளரிடமும் அவருக்கே உரித்தான சக்சஸ் ஃபார்முலா இருக்கும். அந்த ஃபார்முலா என்னவென்று தெரிந்துகொண்டு, அதை நமக்கு ஏற்றாற்போல மாற்றி அமைத்துக்கொள்வதில் இருக்கிறது சக்சஸ் சூட்சுமம். மேக்ஸ்வெல்லின் 'ஙிமீ கிறீறீ சீஷீu சிணீஸீ ஙிமீ' புத்தகம் முழுக்க பைபிளில் இருந்து சின்னச் சின்ன மேற்கோள்கள்.

உங்கள் திறமையை எப்படி 
வெளிக்கொணருவது?

உலகின் நம்பர் ஒன் சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ தன் வாழ்நாளில் செதுக்கியது மொத்தம் 44 சிற்பங்கள். அவற்றில் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டிய 14 சிற்பங்களுள், முழுமையாகவும் கச்சிதமாகவும் செதுக்கப்பட்ட 'டேவிட்' மற்றும் 'மோசஸ்' சிற்பங்கள் இன்று உலகப் பொக்கிஷங்கள். மைக்கேல் ஏஞ்சலோ தன்னுள் இருந்த திறமையை உணராமல் போனதால், இந்த உலகத்துக்கு அபாரமான 42 சிற்பங்கள் கிடைக்காமல் போயின. நம்மில் பலரும் அந்த முற்றுப்பெறாத சிற்பங்களைப்போலத்தான் இருக்கிறோம். நம்மைச் செதுக்கும் உளி எது அல்லது யார் என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறோம். சரி, நம்மை நாமே செதுக்கிக்கொண்டால்?! எப்படிச் செதுக்குவது? மிக மிக எளிமையான ஒரு பயிற்சியை மேற்கொள்வோமா?

உங்கள் பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில், வீட்டில் என எங்கேனும் உங்களைவிடச் சிறப்பாகச் செயல்படுபவர் என்று எவரேனும் இருப்பார் அல்லவா? உங்களைவிட அதிக மார்க், சிறந்த ரேங்க், உயர்ந்த பதவி, அதிக ஃப்ரெண்ட்லி என ஏதேனும் ஓர் அம்சம் அல்லது குணத்தில் நீங்கள் ஆசைப்படும் அல்லது பொறாமைப்படும்விதத்தில் இருப்பார் அல்லவா? அவரை ரோல் மாடலாக வைத்துக்கொள்ளுங்கள். தினமும் அவரைக் காட்டிலும் ஏதோ ஒரு விஷயத்தை நீங்கள் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற குறைந்தபட்சக் கொள்கையுடன் செயல்படுங்கள். ஏதோ ஒரு விஷயம்... அது எவ்வளவு மினிமமான சாதனையாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் உங்கள் கவ னத்தைக் குவித்துச் செயல்படுங்கள். வகுப்புத் தேர்வு, ஆபீஸ் மீட்டிங், பிறருக்கு உதவுவது என எங்கேனும் ஏதேனும் ஓர் இடத்தில் உங்களுக்கு நீங்களே சபாஷ் சொல்லிக்கொள்ளும் அளவுக் குச் செயல்படுங்கள்.

இந்திய கிரிக்கெட் அணி, தன்னைவிட வலுவான ஆஸ்திரேலிய அணியுடன் மோதும்போதுதான் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தும். கத்துக்குட்டி கனடா, பெர்முடா அணிகளுடன் மோதும்போது கொஞ்சம் விட்டேத்தியான மனப்போக்குடன்தானே விளையாடும்! அதே லாஜிக்தான். உங்களைவிட உயர்ந்தவருடன் போட்டியிடும்போதுதான் நீங்கள் மலைக்கு மேலே ஏறத் தொடங்குகிறீர்கள். விரைவாக ஏறுங்கள்!

வெற்றிகரமாகத் தோல்வியடையுங்கள்!

கிட்டத்தட்ட உலகை இயக்கிக்கொண்டு இருக்கும் கணிப்பொறி நிறுவனங்களுள் முக்கியமான நிறுவனம் ஐ.பி.எம். அதன் நிறுவனர் டாம் வாட்ஸன் தனது நிறு வனத்தின் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்விடம் புராஜெக்ட் ஒன்றை ஒப்படைத்தார். மாதக்கணக்கில் நீண்ட அந்த புராஜெக்ட், கிட்டத்தட்ட 12 மில்லியன் டாலர்கள் செலவு வைத்தது. முடிவில் ரிசல்ட் சைபர்.

இத்தனை செலவுவைத்துத் தோல்வி அடைந்ததால் நிச்சயம் தன்னை வேலையைவிட்டு அனுப்பிவிடுவார்கள் என்று தானாகவே ராஜினாமா கடிதத்தை எழுதிக்கொண்டு சென்றார் அந்த ஜூனியர். 'நான் இப்போது உனது ராஜினாமாவை எதிர்பார்க்கவில்லை. 12 மில்லியன் டாலர்கள் செல வழித்து நீ ஒரு பாடம் கற்றுக்கொண்டு இருக்கிறாய். 'எங்கே, எது, எப்படித் தப்பு?' என்று இப்போது உனக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும். இப்போதுதான் இந்த நிறுவனத்துக்கு நீ 'மோஸ்ட் வான்டட்'. போ... போய் உன் வேலைகளைத் தொடர்!' என்றார் டாம்.

இதுதான் தோல்வியின் ப்ளஸ். நமது தவறுகளை உணர்ந்து அதைத் திருத்திக்கொள்ள முயற்சிக்கும்போது... நமது பலம், பலவீனம், திறமை குறித்து நமக்கே ஒரு தெளிவு கிடைக்கும்போது நாம் வெற்றிகரமாகத் தோல்வியடைகிறோம்.

வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசம். ஆனால், வெற்றி உணர்த்தாத பல பேருண்மைகளைத் தோல்வியின் அந்த நூலிழை வித்தியாசம் பளீரென நமக்குப் புரியவைக்கும். முன்னர் தங்கள் முயற்சிகளில் தோற்றவர்கள்தான் பின்னர் இந்த உலகத்தையே தேற்றியிருக்கிறார்கள்.

சாதாரண பிளாஸ்டிக் ரப்பர்பேண்ட்கள் ஒவ்வொன்றும் விதவித நிறங்களில், வித்தியாசமான நீளங்களில் அமைந்திருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட எலாஸ்டிசிட்டி (நெகிழ்ச்சித்தன்மை) இருக்கும். ஒவ் வொரு மனிதரும் அந்த ரப்பர்பேண்ட்கள்போலத்தான். உங்கள் முழுத் திறனுக்கும் நீங்கள் வளைந்துகொடுத்தால்தான் இந்த உலகில் சாதிக்க முடியும். நீங்களும் சாதிக் கப் பிறந்தவர்தான்!

 source:vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அலங்கார ஊர்திகள் சொல்லும் செய்தி!

 

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை முடிவுக்கு வந்த இறுதிநாளில், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா.

கோத்தபய ராஜபக்ஷேவின் நேரடி உத்தரவின் பேரில்தான், அந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்கிறார் அவர். மறுநாளே 'யூ' டர்ன் அடிக்க முயற்சித்தாலும், முதல் நாள் கூறியதை அவர் திட்டவட்டமாக மறுக்கவில்லை. நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய அந்த மூன்று தலைவர்களும் அவர்களுடன் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்றவர்களும் காக்கை குருவியைப்போல சுட்டுத்தள்ளப்பட்டதை ஒருவரும் மறந்திருக்கமுடியாது. கொல்லப்பட்டவர்களில் நடேசனின் மனைவியும் ஒருவர். சிங்களப் பெண்மணியான அவர், 'சரணடைய வருபவர்களைப் சுடுகிறீர்களே?' என்று சிங்கள மொழியில் நியாயம் கேட்டபோதே சுடப்பட்டார். சரியான தகவல் தொடர்பு இல்லாததாலும், 'சரணடையச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம்' என்கிற தகவல் ராணுவத்தை உரிய நேரத்தில் போய்ச் சேராததாலும், அவர்கள் உயிரைக் காப்பற்ற இயலாது போனதாக அப்போது சிறீலங்கா அரசு சொன்னது.

அந்தப் பொய்யைத்தான் இப்போது தோலுரித்திருக்கிறது பொன்சேகாவின் குற்றச்சாட்டு. இப்போது குற்றம் சுமத்தும் பொன்சேகா, அப்போது என்ன செய்துகொண்டிருந்தார்? என்கிற கேள்வி நியாயமானது. அதைவிட நியாயமானது இன்னொரு கேள்வி. ஆம்! இரண்டு மாதங்களுக்கு முன், கண்களைக் கட்டிய நிலையில் நிர்வாணப்படுத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படும் வீடியோ படம், பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது பழைய படம் மாதிரி தெரிகிறது' என்று அவசர அவசரமாகக் கருத்து சொன்ன நம்ம ஊர்ப் பெரியவர், இப்போது சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டைப் பற்றி மூச்சே விடவில்லையே ஏன்? என்கிற கேள்வி அதைவிட நியாயமானது. நடேசன் முதலானோர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முன்தினம் இரவு, பிரிட்டிஷ் பத்திரிகையாளர் மேரி கோல்ட்வின்னுடன் சட்லைட் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய புலித்தேவன், சரணடையும்போது சர்வதேச நடைமுறைகள் மீறப்படாதிருக்க ஏற்பாடு செய்யும்படி கோரியிருக்கிறார்.

ஜ.நா. பிரதிநிதிகள் உள்பட பலரிடம் இது தொடர்பாகப் பேச முயன்றிருக்கிறார் அந்த பிரிட்டிஷ் பெண் பத்திரிகையாளர். அந்த நெருக்கடியான இரவிலும், பதுங்குக் குழிக்கு உள்ளேயிருந்த புலித்தேவன், தனது சட்லைட் போனில் புன்னகையுடன் தனது புகைப்படத்தைத் தானே எடுத்து மேரி கோல்ட்வின்னுக்கு அனுப்பியிருக்கிறார். அந்தப் பெண்மணியை மட்டுமல்ல, கேள்விப்பட்ட ஒவ்வொருவரையும் உறையவைத்த உருக்கமான புகைப்படம் அது. அந்தப் பெண்மணியும் சாதாரணமானவர் அல்ல. இலங்கையின் வடகிழக்கில் தமிழர் தாயகத்தில் சிங்கள இனவெறி ராணுவம் நடத்திய காட்டு தர்பாரை அம்பலப்படுத்த, பலவகையிலும் முயன்றவர்.

ஒருமுறை, சிங்கள ராணுவத்தின் பார்வையில் படாமலேயே தமிழர் பகுதிக்குள் போய்விட்டார். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அந்தச் சகோதரியின் ஒரு கண்ணைக் குண்டு துளைத்தது. அந்தக் கண்ணின் பார்வையே போய்விட்டது. அதற்குப் பிறகும் சளைக்காமல் சகோதரத் தமிழர்களுக்காக எல்லா விதத்திலும் முயற்சிகளை மேற்கொண்டார் அவர். இங்கேயிருந்த அரசியல்வாதிகள், பக்கம்பக்கமாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிக் கொண்டேயிருக்கிற அரசியல்வாதிகள், மேரி கோல்ட்வின் என்கிற அந்த வீரமிக்க வரலாற்றையெல்லாம் படித்துப் பார்க்க வேண்டும். ஒருபுறம், சரத்பொன்சேகா பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறார். தமிழர்கள் ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்களே தவிர, அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படவில்லை' என்று புகார் சொல்கிறார், இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க.

பிரபாகரனால்தான் தமிழர்கள் பொதுத் தேர்தலைப் புறக்கணித்தனர். அதனால்தான் ராஜபக்ஷே ஆட்சிக்கு வர முடிந்தது என்று ரணில் சொன்னவுடன், அவசர அவசரமாக ஒரு நீண்ட அறிக்கையைத் தயாரித்து, பிரபாகரன் மீது புழுதிவாரித் தூற்றிய முதல்வர் கருணாநிதியிடமிருந்து, ரணிலின் இப்போதைய புகார் குறித்து ஒரு நாலுவரி அறிக்கை கூட இன்றுவரை வெளிவரவில்லை. தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் குழு இலங்கையிலிருந்து சென்னை வந்து சேரும் முன்பே, 'நான்கே நாளில் முள்வேலி முகாமிலிருந்து தமிழர்களை விடுவித்த கலைஞர் வாழ்க' என்றெல்லாம் சுவர் ஒட்டிகள் அடித்து வைத்திருந்தார்கள் உடன்பிறப்புகள். அந்த சுவர் ஒட்டிகள் ஒட்டிய ஈரம் காய்வதற்கு முன்பே, ரணில் விக்ரமசிங்க சென்னைக்கு வந்து அதைக் கிழித்துக்கொண்டிருக்கிறார்.

வாய்திறந்து ஏதாவது பேச வேண்டாமா முதல்வர் கருணாநிதி? இதெல்லாம் போதாதென்று, ராமேஸ்வரம் – தங்கச்சி மடத்தில் நடந்த பொது விசாரணையில் தங்களது வலியையும், வேதனையையும் ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார்கள், மீனவச் சகோதரர்கள். 1994ல் சிங்களப் கடற்படையினரால் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவனின் மனைவி ரவீணா ராணி, இன்றுவரை அந்தப் படுகொலைக்கு நியாயம் கிடைக்கவில்லை என்கிறார். கணவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது அந்தச் சகோதரிக்கு 19 வயது. கடலிலிருந்து மீனோடு திரும்புவார் என்று அந்த இளம் மனைவி காத்திருக்க… கடலிலிருந்து திரும்பியது கணவரின் உடல். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவராகவே, பொது விசாரணையில் பேசியிருக்கிறார் ரவீணா ராணி.

சிங்களக் கடற்படையின் தாக்குதலால் கொல்லப்பட்ட பாதிக்கப்பட்ட மீனவர்கள் கொடுத்த புகார்கள் பல காவல் நிலையங்களில் அப்படியே இருக்கின்றன. இன்றுவரை, தாக்கியவர்கள் மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இப்படியரு கையாலாகாத நிர்வாகம் இருக்கும் வரை, கையறு நிலையில்தான் நமது மீனவச் சொந்தங்கள் நிற்க வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை நிலவரம்.''சிங்களக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டின்போது, என் உடலைத் துளைத்த குண்டுகளை அகற்ற பலமுறை அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன். இப்போதும் தலையில் ஒரு குண்டு அப்படியே உள்ளது. அதை அகற்றினால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்" என்று காரைக்காலைச் சேர்ந்த சௌந்தர்ராஜ் என்கிற மீனவர் கண்ணீர் மல்க சொன்னபோது, இதயமுள்ள அத்தனைபேரையும் கண்ணீர் சிந்த வைத்தது.

பாழாய்ப்போன அரசு இயந்திரம் மட்டும் ''நீ பாட்டுக்குப் பேசு…நான் பாட்டுக்கு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறேன்" என்கிற ஊசிப்போன உளுத்தம் வடையையே இன்னமும் விற்றுக்கொண்டிருந்தால், அந்த மீனவச் சகோதரர்களை வேறு எவர்தான் காப்பாற்றுவது? சிங்கள கடற்படை மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும். மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பாயிருக்க வேண்டிய இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை எல்லாம் என்ன கிழித்துக் கொண்டிருக்கின்றன என்ற கேள்வி எழுமா, எழாதா? எங்கள் கடல்தாயின் புத்திரர்களைப் பாதுகாப்பதற்காக அல்லாமல் வேறெதற்காக வங்கக் கடலில் மக்கள் வரிப்பணத்தில் இவர்கள் ரோந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்? எங்கள் மீனவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட பிறகும், மீண்டும் மீண்டும் கொல்லப்பட்ட பிறகும், தாக்கியவர்கள் மீது ஒருமுறையேனும் எதிர்த்தாக்குதல் நடத்த முடியாத ஒருபடை, எங்கள் கடலில் ரோந்து போனால்தானென்ன, போகாவிட்டால்தான் என்ன?

இவையெல்லாம் நாம் மட்டுமே கேட்கக் கூடாது… கருணாநிதியும் சேர்ந்து கேட்க வேண்டும். இதுபற்றி ஒரு நாலு வரி கடிதத்தைத் தட்டினாரென்றால், அது காங்கிரஸின் தலையில் தட்டுவதாக இருக்கும். தட்டுவாரா கருணாநிதி அவர்தான் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் ஓய்வில்லாமல் இருக்கிறாரே? உலகத் தமிழ் செம்மொழி மாநாடே வேண்டாம் என்று எவரும் சொல்லவில்லை. தமிழண்ணல் போன்ற ஆன்ற தமிழ் சான்றோர்கள் பலரும், 'இப்போதுள்ள துயரச் சூழலில் ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்ற குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்க வழிவகைகள் செய்யாத நிலையில் மூன்று லட்சம் தமிழர்கள் முள்வேலியில் முடங்கிக் கிடக்கும் நிலையில், தமிழ் மாநாட்டை நடத்துவது பொருத்தமாயிராது. கொஞ்சம் தள்ளிப்போடுங்கள்' என்றுதான் கோருகின்றனர்.

அவையெல்லாம் பொருட்படுத்தாமல், செம்மொழி மாநாட்டுக் கனவில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. பக்கம் பக்கமாக அறிக்கை விடுகிறார். ஊர்வலக் காட்சி இப்போதே அவரது மனக்கண் முன் விரிகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழியைக் காப்பாற்ற ஆற்காடு வீராச்சாமி, சுதர்சனம் போன்றவர்களையெல்லாம் மாநாட்டுக் குழுக்களில் இடம் பெற வைத்துவிட மாநாட்டு களம் சூடாகிவிட்டது. மாநாட்டை நடத்திவிட்டு பின் மனிதர் ஓய்வார் போலிருக்கிறது.'இப்படியொரு அவலச் சூழலில் நடக்கும் மாநாட்டுக்கு வராதீர்கள்' என்று உலகெங்கிலுமுள்ள தமிழறிஞர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் பா.செயப்பிரகாசம் முதலான தமிழ் எழுத்தாளர்களும், தமிழ் உணர்வாளர்களும்.

இவர்களது அறைக்கூவலைக் கேட்டு, உலகின் பல நாடுகளிலுமிருந்து தமிழறிஞர்கள் வராமல் இருந்துவிடக் கூடாதே என்கிற கவலை எனக்கு! உலகத் தமிழறிஞர்களே! கோவையில் மாபெரும் அலங்கார ஊர்தி அணிவகுப்புடன் கோலாகலமாக நடக்க இருக்கும் தமிழ் மாநாட்டுக்கு வராமல் இருந்துவிடாதீர்கள். எங்கள் தொப்புள் கொடி உறவுகள் ஒரு லட்சம் பேர் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டபோது கூட வீதிக்கு வரத் தயங்கியவர்கள் நீங்கள். தமிழைக் காக்கவாவது நீங்கள் வீதிக்கு வர வேண்டும் என்று உரிமையுடன் அழைக்கிறேன். உலகெங்கிலுமிருந்து நீங்கள் வராமல் போனால் தமிழரைக் காப்பாற்ற பதவியைக்கூட உதறாமல் கவிழ்த்த எங்கள் தலைவர்கள், தமிழையும் சேர்த்து கவிழ்த்துவிடக் கூடும். அதற்காகவாவது நீங்கள் வந்தே ஆக வேண்டும்.

நீங்கள் வரவில்லையென்றால், ' தமிழ் வெறும் வாழ்த்துப்பாடல் மொழிதான்' என்று போட்டி போட்டுக் கொண்டு நிரூபிக்க முயல்வார்கள் எங்கள் கவிஞர்கள். எழுதுகோலால் பதவியில் இருப்பவர்களின் முதுகு சொரிவதுபோல்தான் தமிழ் படிப்பவர்கள் என்கிற தீராத களங்கத்தில் இருந்து தமிழைக் காப்பதற்காகவாவது நீங்கள் கோவை மாநாட்டுக்கு வரவேண்டும். தமிழரைக் காப்பாற்ற முடியவில்லை. குறைந்தபட்சம் தமிழையாவது காப்பாற்றுங்கள். கோவை மாநாட்டு அலங்கார ஊர்திகளின் பேரணியை நீங்கள் பார்ப்பதற்காக, நான்கு இடங்களில் சிறப்பு மேடைகள் அமைக்கப்படுகின்றன. அந்த மேடைகள் நீங்கள் இல்லாமல் பொலிவிழந்து விடக் கூடாது. நீங்கள் எங்களைப்போல உணர்ச்சிவசப்படுகிற மனிதர்கள் இல்லை. வாடிய பயிர்களைக் கண்டு நீங்கள் வாடவேண்டியது அவசியமில்லை.

அதெல்லாம் வள்ளலார்கள் வேலை! அதனால் ஆறே மாதத்தில் கொல்லப்பட்ட எங்கள் ஒரு லட்சம் சொந்தங்களின் உடல் அந்த அலங்கார ஊர்திகளில் எடுத்துச் செல்லப்படுவதாகக் கருதும் எங்களது மனநிலைதான் உங்களுக்கும் இருக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் அறிஞர்கள். ஆய்ந்து அறிந்து தெளிந்த அறிவாளிகள் என்றாலும், தமிழன் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, அந்த அலங்கார ஊர்திகளை பார்வையிடுவதற்காகக் கலைஞருடன் அமைக்கப்பட இருக்கும் சிறப்பு மேடைகளில் ஏறி நிற்கும்போது, இங்கிருந்து 26வது மைலில் கொல்லப்பட்ட எங்கள் சொந்தங்களின் நினைவாக ஒரு சொட்டு கண்ணீராவது சிந்துங்கள். உங்களைப் போன்ற மகத்தான அறிஞர்களின் ஒரு சொட்டுக் கண்ணீர், தங்களது தாய் மண்ணைக் காப்பதற்காக, கடைசிச் சொட்டு ரத்தம் வரை சிந்திய மாவீரர்களின் தியாகத்தைக் கௌரவிப்பதாக இருக்கும்.

கண்டிப்பாக நீங்கள் கண்ணீர் வடிப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு அலங்கார மேடையில் நின்றபடி வாண வேடிக்கைகளைப் பார்க்கும் வாய்ப்பும் உங்களுக்குத் தரப்படலாம். அந்த வாண வேடிக்கைகளை, சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து நடத்திவந்த 'வான' வேடிக்கைகளோடு ஒப்பிட முடியாது என்பது மட்டும் எங்களுக்கு உறுதியாகத் தெரியும் என்றாலும் உலகெங்கிலுமிருந்து வருகிற உங்களை வரவேற்க வாணவேடிக்கைகள் இல்லாவிட்டால் எப்படி? விருந்தினரை மகிழ்விப்பதல்லவா தமிழரின் மரபு! அதைக் கைவிட முடியுமா? தமிழர்கள் தாக்கப்பட்டபோதெல்லாம் மத்திய அரசுக்குக் கடிதங்கள் எழுதிய கருணாநிதி உங்களை அழைக்கிறார்.

தமிழர்கள் கொல்லப்பட்டபோதெல்லாம் கண்ணீர்க் கவிதைகளைப் படைத்து எங்களை உருக வைத்த கருணாநிதி உங்களை அழைக்கிறார். ஓய்வுபெறுவதற்கு முன், தமிழருக்காக ஓர் ஆடம்பர, அலங்கார, கோலாகல மாநாட்டை, செலவைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிரமாண்டமாக நடத்தும் அவரது விருப்பத்தை நிறைவேற்ற அவசியம் வாருங்கள். உங்கள் அறிவையும், புலமையையும் கோவையில் வந்து கடைவிரிக்கும் போதே அழுகை மழையில் நனைந்து கொண்டிருக்கும் எட்டுக் கோடி தமிழருக்கும் குடை விரிக்கும் விதத்தில் ஒரே ஒரு அனுதாபத் தீர்மானமும் ஒரே ஒரு கண்டனத் தீர்மானமும் மட்டும் நிறைவேற்றுங்கள். கருணாநிதியும் உங்களை மறக்க மாட்டார்… நாங்களும் உங்களை மறக்க மாட்டோம்!

குறிப்பு; 18.12.2009 தேதியிட்ட தமிழக அரசியல் வார இதழில் வெளியான கட்டுரை


source:tamilspy

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இலங்கை - அடுத்த சர்வாதிகாரி யார் ?

 

யுத்த வாசமும் ரத்த வாசமும் மாறுவதற்கு முன்பே ஆதாயம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் இலங்கை அரசியல்வாதிகள்!

இலங்கை நாட்டின் ஜனாதிபதி தேர்தல் இம்மாதம் 26-ம் தேதி நடக்க இருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து வர வேண்டிய தேர்தல் இது. ஆனால், வெற்றியை அறுவடை செய்ய உடனே நடக்கிறது. ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி சார்பில் இப்போதைய ஜனாதி பதியான மகிந்தா ராஜபக்ஷேவும், பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் முன்னாள் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும் தமிழ் எம்.பி-க்களில் ஒருவரான சிவாஜிலிங்கமும், புதிய இடதுசாரி முன்னணியின் வேட்பாளர் டாக்டர் விக்ரமபாகு கருணாரட்னவும் போட்டியில் இருக்கிறார்கள். ஆனாலும், முக்கியப் போட்டி மகிந்தாவுக்கும் ஃபொன்சேகாவுக்கும்தான்!

"30 ஆண்டுகளாக இலங்கையை அச்சுறுத்தி வந்த பயங்கரவாத இயக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்னுடைய சாதனை" என்று மகிந்தா சொல்ல, "அந்தச் சாதனையைச் செய்துகாட்டிய ராணுவத் தளபதி நான்தான்" என்று ஃபொன்சேகா உரிமை கொண்டாட... "இதற்கு எந்தத் தனி மனித னும் உரிமை கொண்டாட முடியாது" என்று மகிந்தா மறுபடி பாய, தேர்தலின் முக்கியப் பிரச்னையே வடகிழக்கில் நடந்த யுத்தமாகத்தான் இருக்கிறது. மகிந்தா, ஃபொன்சேகா இருவரையும் சிங்கள வர்கள் தங்களுக்கு இணக்கமான சக்திகளாகத்தான் பார்க்கிறார்கள். 'சிங்கள மன்னன் துட்டகைமுவின் வாரிசு' என்று மகிந்தா சொல்லப்படுகிறார். அதே சமயம், யுத்தம் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சுணக்கம், அந்நிய நாடுகளின் உதவிகள் மறுப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், இறுதிக்கட்ட யுத்த காலத்தில் மட்டும் 6 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் மரணம், 20 ஆயிரம் வீரர்கள் உடல் ஊனமானது எனச் சிங் களவர்கள் கவலைப்பட எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கேவைவிட ஒரு லட்சம் வாக்குகள்தான் மகிந்தா கூடுதலாகப் பெற்றிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் அசைக்க முடியாத வாக்குகளை வைத்துள்ள கட்சிகளாக உள்ளன. எனவே, சிங்களவர் வாக்குகள் சரிபாதியாகப் பிரிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கொழும்பு பத்திரிகையாளர்கள் நினைக்கிறார்கள்.

"தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 391 உறவினர்களையும், 115 அமைச்சர்களையும்கொண்ட ஆட்சி இது" என்று முன்னாள் பிரதமர் ரணில் குற்றம்சாட்டுகிறார். "ஜனாதிபதியாக வருவதற்கு முன்னால் சொல்லிக்கொள்வது மாதிரி, சொத்துக்கள் இல்லாத மகிந்தாவுக்கு இன்று கொழும்புவைச் சுற்றிலும் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன" என்று ஜே.வி.பி. சொல்கிறது. 'நியூயார்க்கில் 70 கோடி ரூபாய் செலவில் சொகுசு மாளிகை ஒன்று மகிந்தா குடும்பத்தினர் தங்குவதற்காகக் கட்டப்பட்டுள்ளது' என்று சிங்களப் பத்திரிகையான 'லங்க இரித' கூறுகிறது. சுனாமி நிதி மோசடிகள், மாவிலாறு நஷ்டஈடு முறைகேடுகள், தேசிய அடையாள அட்டை டெண்டர் ஆகிய ஊழல் குற்றச்சாட்டுகளை ஃபொன்சேகாவின் ஊடகப் பேச்சாளர் அனுர குமார திஸாநாயக்க பகிரங்கமாகச் சொல்கிறார். இலங்கையில் உள்ள முக்கியமான வருவாய் இனங்களை மகிந்தா குடும்பம் கைப்பற்றியுள்ளதாக அங்குள்ள பத்திரிகைகள் எழுதுகின்றன.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஃபொன் சேகா மீதும் வைக்கப்படுகிறது. அவர் தன் மனைவிக்கு 40 லட்சம் மதிப்பிலான காரை வாங்கித் தந்ததாகவும், இலங்கைக்கு கோடிக்கணக்கான மதிப்பு ஆயுதங்கள் வாங்கியதற்கான தரகராக அமெரிக்காவில் இருக்கும் ஃபொன்சேகாவின் மருமகன் செயல்பட்டு பல கோடிகள் சம்பாதித்த தாகவும் குற்றப்பத்திரிகை வாசிக்கப் படுகிறது.

இந்த இரண்டு தரப்பும் கிளப்பும் பீதி, 'இலங்கையில் ராணுவ ஆட்சி வர இருக் கிறது' என்பதுதான். "ஃபொன்சேகாவை ஜனாதிபதி ஆக்கினால், அடுத்த ஆறாவது நிமிஷத்தில் நாட்டில் ராணுவ ஆட்சியைக் கொண்டுவந்துவிடுவார். இன்று அவரோடு வலம் வரும் ரணில் உட்பட அனைவரை யும் கைது செய்து சிறையில் அடைத்துவிடு வார்" என்று மகிந்தா கட்சி மந்திரிகள் மேடைதோறும் தூசி கிளப்பி வருகிறார் கள். "ராணுவ ஆட்சியைக் கொண்டுவர வேண்டும், இவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால், நான் ராணுவத் தளபதியாக இருந்தபோதே செய்திருப்பேன். ஜனாதிபதி ஆகித்தான் அதைச் செய்ய வேண்டும் என்பதல்ல. ராணுவ ஆட்சியை மறைமுகமாகக் கொண்டுவரப்போவது மகிந்தாதான். ஜனாதிபதி தேர்தல் முடிந்து, அடுத்து நடக்கப்போகிற பொதுத் தேர்தலில் ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்த நான்கு பேர் மகிந்தா கட்சி சார்பில் போட்டியிடப்போகிறார்கள். ஓய்வுபெற்ற 24 ராணுவ அதிகாரிகளுக்கு அரசாங்கத்தில் பதவிகள் தரப்பட்டுள்ளன. இதுதான் ராணுவ ஆட்சிக்கான மறைமுக அடையாளங்கள்" என்று ஸ்கூப் நியூஸை அமைதி யாகத் தட்டிவிடுகிறார் ஃபொன்சேகா.

"கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை யாளர்களை யார் கொன்றது என்பதை நான் ஜனாதிபதி ஆன 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து வழக்கு தாக்கல் செய்வேன்" என்றும் இவர் சூடு ஏற்றுகிறார் .

இவர்கள் இருவருக்கும் மத்தியில் புதுச் சிக்கலாக வந்தவர் சிவாஜிலிங்கம். தமிழ்த் தேசக் கூட்டமைப்பு என்ற பெயரால் ஒன்றுபட்டு இயங்கிய தமிழ் எம்.பி-க்கள் 22 பேருக்குள் குழப்பம் ஏற்பட்டு, இவர் மட்டும் தனியாகப் பிரிந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். "தமிழர்கள் வாக்கு, ரணிலுக்கு ஆதரவான ஃபொன்சேகாவுக்குத்தான் விழும். ஃபொன்சேகா நல்லவரா, கெட்டவரா என்பதைவிட, மகிந்தா வெற்றிபெறக் கூடாது என்றுதான் தமிழர்கள் நினைக்கிறார்கள். இந்த அடிப்படையில் தமிழர் வாக்குகளை மொத்தமாக ஃபொன்சேகா வாங்கிவிடுவதைத் தடுப்பதற்காகத்தான் மகிந்தா தூண்டுதலில் சிவாஜிலிங்கம் போட்டியிடுகிறார்" என்கிறார்கள் அங்குள்ள பத்திரிகையாளர்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-க்களை அலரி மாளி கைக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் மகிந்தா. இதில் இரா.சம்பந்தன், சேனாதிராஜா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். "கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனையோ தடவை உங்களைச் சந்திக்க நேரம் கேட்டோம். ஒருதடவைகூட நீங்கள் எங்களைச் சந்தித்ததில்லையே?" என்று இவர்கள் சொல்ல, "அடுத்து ஆட்சிக்கு வந்ததும் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதையே நான் தமிழர்களுக்கு நிச்சயமாகச் செய்வேன்" என்று மகிந்தா வாக்குறுதி தர, "இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நம்பி ஏமாந்ததுதான் தமிழர்களின் வரலாறு" என்று இவர்கள் பதில் தர, மோதலில் முடிந்தது அந்தச் சந்திப்பு.

"தடுப்புக் காவலில் கனகரட்சனம் என்ற தமிழ் எம்.பி. இருக் கிறார். அவரையாவது விடுதலை செய்யுங்கள்" என்று கோரிக்கை வைத்துவிட்டு, இவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள். "அடுத்த முறை உங்கள் இருவரையும் அமைச்சர்களாகப் பார்க்க வேண் டும்" என்று மகிந்தா ஆசை வலையும் வீசியிருக்கிறார். "நாங்கள் இப்படியே இருக்கிறோம்" என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். அப்படியே இருப்பார்களா என்று தெரியவில்லை. இவர்களை ஃபொன்சேகா அணி சார்பில் ரணிலும் அழைத்துப் பேசி இருக்கிறார். அநேகமாக, இந்த அணியை தமிழ்க் கூட்டமைப்பு ஆதரிக்கும் சூழ் நிலை இருக்கிறது.

இடதுசாரிகள் வேட்பாளராக நிற்கும் விக்ரமபாகு கருணாரட்ன குரல் கொஞ்சம் கம்மியாகவே ஒலிக் கிறது. "மகிந்தா, ஃபொன்சேகா இருவரும் தேச பக்தி இல்லாதவர்கள். இரண்டு பேருமே அந்நிய நாடுகளின் கூலிகள்" என்கிறார் இவர். சிங்களர், தமிழர் என இரண்டு தரப்பிலும் உள்ள கொள்கைவாதிகள் சிலரது ஆதரவு மட்டுமே விக்ரமபாகுவுக்கு இருக்கிறது.

இந்தக் கொண்டாட்டங்களுக்கும் தமிழர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முள்வேலி முகாமில் இருந்த வர்களில் சுமார் ஒரு லட்சம் பேர், தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட் டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பலர் வேறு முகாம்களிலும் தங்கவைக் கப்பட்டுள்ளனர். அரசாங்கக் கணக் கின்படி 88 ஆயிரம் பேர் முள்வேலி முகாம்களில் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிக்க 68 வாக்குச்சாவடிகள் கிளிநொச்சிப் பகுதியில் அமைக்கப்பட் டுள்ளன. இவர்கள் தங்களது பெயர் களைப் பதிவுசெய்ய டிசம்பர் 24-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டது. ஆனால், மொத்தமே 22 ஆயிரத்துக்கும் குறைவானவர்கள்தான் இந்த விண்ணப்பத்தைக் கொடுத்துள் ளார்களாம். சாப்பாடு இல்லை, மாற் றுத் துணி இல்லை, மருந்து மாத்திரை கள் இல்லை, கடத்திச் செல்லப்பட்ட உறவினர்கள் - பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த மக்களுக்கு வாக்களிக்க விருப்ப மும் இல்லை. 'யாரு ஜனாதிபதியாக வந்தாலும், எங்க வாழ்க்கை மாறப் போறதில்லை. இப்படி எத்தனையோ தேர்தல்களை நாங்களும் பார்த்தாச்சு. எத்தனையோ ஜனாதிபதி மாறியாச்சு. எங்க வாழ்க்கை மட்டும் மாறவே இல்லை' என்ற வருத்தக் குரல், கடல் அலைகளைத் தாண்டி வருகிறது.

அடிப்பவன் மாறலாம். வாங்குபவன் ஒருவனே


source:vikatan


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கிரிக்கெட் வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலம் போயினர் : விற்காமல் போன பாகிஸ்தான் வீரர்கள்


 
 

Top world news stories and headlines detail 

 மும்பை: இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடருக்கான ஏலம் இன்று மும்பையில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கெய்ரான் போலார்டு அதிகபட்சமாக ரூ. 3 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் வரை விலை போயுள்ளார். இவரை மும்பை இந்தியன் அணி விலைக்கு வாங்கியுள்ளது.  பாகிஸ்தான் வீரர்கள் அப்ரிதி மற்றும் அக்மால் ஆகிய இருவரும் ஏலத்தில் விலைக்கு போகவில்லை. ஐ.பி.எல்., அமைப்பின் சார்பில், மூன்றாவது "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 12 முதல் ஏப்., 25 ம் தேதி வரை இந்தியாவில் நடக்க உள்ளது. இத்தொடருக்கான வீரர்கள் ஏலம், இன்று மும்பையில் நடந்தது. மொத்தம் உள்ள 8 அணிகள் ஏலத்தின் மூலம் வீரர்களை ஒப்பந்தம் செய்ய உள்ளன. மொத்தம் 97 பேர், முதற் கட்டமாக ஐ.பி.எல்., ஏலத்துக்கு விண்ணப்பம் செய்தனர்.



வீரர்களின் திறமையை அடிப்படையாகக் கொண்டு 66 பேர் மட்டுமே இறுதியில் தேர்வாயினர். அதிக பட்சமாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா தரப்பில் 11 வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றனர். வெஸ்ட் இண்டீஸ் (8 பேர்), இலங்கை (8 பேர்), இங்கிலாந்து (9 பேர்), நியூசிலாந்து (4 பேர்) வீரர்களும் ஏலத்தில் பங்கேற்றனர். வங்கதேசம், கனடா, நெதர்லாந்து, ஜிம்பாப்வே தரப்பில் தலா ஒரு வீரர் வாய்ப்பு பெற்றனர்.



கடந்த 2008 ம் ஆண்டு முதல் ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடந்தது. அப்போது நடந்த ஏலத்தில் 3 ஆண்டுகளுக்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அவர்களது ஒப்பந்த காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. தற்போது 3 வது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், இந்த ஆண்டு (2010) மட்டுமே பங்கேற்க முடியும்.



வெஸ்ட் இண்டீசின் கெய்ரன் போலார்டு, கெமர் ரோக், பாகிஸ் தானின் அப்ரிதி, உமர் அக்மல், நியூசிலாந்தின் ஷேன் பாண்ட், ஆஸ்திரேலியாவின் ஹாடின், பிலிப் ஹியுஸ் உள்ளிட்ட ஒரு சிலரை மட்டுமே ஏலத்தில் ஒப்பந்தம் செய்ய அணிகள் விரும்புகின்றன.



யார் ? எவ்வளவுக்கு விலை போயினர் : ஏலத்தில் வீரர்கள் விலை போன விவரம் வருமாறு : வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ரான் போலார்டு என்பவர் 7 லட்சத்து 50 ஆயிரம் டாலர் ( இந்திய ரூபாயில் : 3 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ) , இவரை மும்பை இந்தியன் அணி வாங்கியுள்ளது. தென் ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் வீரர் வெயர்ன் பார்னர் என்பவர் 6 லட்சத்து 10 ஆயிரம் டாலருக்கு ( இந்திய ரூபாயில் : 2 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் ) இவரை டில்லி டேர்டெவில்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது. நியூஸிலாந்து வீரர் ஷேன் பாண்ட் என்பவர் 7 லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கு ( இந்திய ரூபாயில் : 3 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம்) , இவரை கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேமர் ரோச் 7 லட்சத்து 20 ஆயிரம் டாலர் ( இந்திய ரூபாயில்: 3 கோடியே 24 லட்சம் ). இவரை டெக்கான் சார்ஜர்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஒரே வீரரை 2 அணிகள் கேட்கும் பட்சத்தில் டைம் பிரேக்கர் முறையில் விற்று கொடுக்கப்பட்டது. அந்தந்த அணி ஓனர்கள் ஏலம் கேட்டனர்.



இந்திய வீரர் முகம்மது கைப், பாகிஸ்தான் வீரர் அப்ரிதி , ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹெடின் ஆகியோர் முதல் கட்ட ஏலத்தில் யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை. இந்திய வீரர் முகம்மது கைப் 2 லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கு ( இந்திய ரூபாயில்: ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம்) இவரை கிங்ஸ் 11 பஞ்சாப் அணி விலைக்கு வாங்கியுள்ளது.இவர் முதலில் ஏலம் விடுக்கப்பட போது யாரும் ஏலம் கேட்கவில்லை. 2 வது ரவுண்டுக்கு வந்தபோதுதான் இவர் விற்கப்பட்டார். பாகிஸ்தான் வீரர்கள் அப்ரிதி, கம்ரன் அக்மால் ஆகிய இருவரையும் கடைசிவரை யாரும் விலைக்கு வாங்கவில்‌லை என்பது குறிப்பிடத்தக்கது.



source:dinamalar--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வீரம் விதைத்த வேலுப்பிள்ளை !

 

''14 வயதில் வீட்டைவிட்டு வெளியேறித் தலைமறைவு வாழ்க்கையில் நான் ஈடுபட்டேன். அதில் இருந்தே பெற்றோருடன் தொடர்பைத் துண்டித்துவிட்டேன். அந்தக் காலத்தில் நான் வீட்டில் மிகவும் கட்டுப்பாடான சூழலில் தான் வளர்ந்தேன். வெளியாரோடு கலந்து பழக எனக்கு அனுமதி இல்லை. இளம்பெண்களைக் கண்டால் வெட்கப் படுவேன். என் தந்தையின் நல்லொழுக்கம் என்னை நெறிப்படுத்தியது. அவர் வெற்றிலைகூடப் போட மாட்டார். அவரைப் பார்த்தே நான் ஒழுக்கங்களை உருவாக்கிக் கொண்டேன். ஒளிவுமறைவு இல்லாதவர். நேர்மையானவர். 'அந்த மனிதர் நடந்தால், அவர் காலுக்குக் கீழே உள்ள புல்லுக்குக்கூட நோகாது. அப்படிப்பட்ட தந்தைக்கு இப்படிப்பட்ட மகன் பிறந்திருக்கிறானா?' என்று என் வீட்டின் அருகே இருந்த மக்கள் பேசிக்கொண்டார்கள். அவர் கண்டிப்பானவர். அதேவேளை, நெஞ்சைத் தொடுகிற ஓர் ஆற்றலும் அவரிடம் இருந்தது. நண்பன் ஒருவனைப்போல பக்கத்தில் உட்கார்ந்து நியாயங்களை எடுத்துச் சொல்லிச் சொல்லி, அவர் என்னை வழிப்படுத்தினார்!''-தந்தை வேலுப்பிள்ளைபற்றி மகன் பிரபாகரன் கொடுத்த வாக்குமூலம் இது! 

உலகம் உன்னிப்பாகக் கவனித்த மனிதர்களில் ஒருவரான பிரபாகரனைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கிய அவரது தந்தை வேலுப்பிள்ளை, கடந்த ஆறாம் தேதி இரவு எட்டு மணிக்கு இறந்துபோயிருக்கிறார். கடந்த மே மாதக் கொடூரப் படுகொலைகளுக்குப் பிறகு தப்பியிருந்த பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளையும் பார்வதியும் ராணுவம் வசம் இருந்தார்கள்.

வல்வெட்டித்துறையில் 'திருமேனியார் குடும்பம்' என்று இவர்களுக்குப் பெயர். அங்கே உள்ள மாரியம்மன், வைத்தீஸ்வரன், பிள்ளையார் கோயில்களைக் கட்டிய குடும்பம். முதன்முதலாக கிருபானந்தவாரியாரை அங்கு அழைத்துப்போனதும் இவர்கள் தான். 19 வயதில் அரசு குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்த வேலுப்பிள்ளை, 1983-ம் ஆண்டு நில அதிகாரியாக ஓய்வுபெற்றார்.

''பிரபாகரனுக்குத் தாய் செல்லம் அதிகம். நான் கொஞ்சம் கண்டிப்பாக இருந்தேன். நான் பல ஊர்களுக்கு வேலைக்கு மாற்றலாகிப்போனாலும் ஞாயிறன்று வீட்டுக்கு வருவேன். அப்போது பிரபாகரன் என்னோடுதான் இருப்பான். என்னுடன் தூங்குவதுதான் அவன் பழக்கம். 56-ம் ஆண்டு தனிச் சிங்களச் சட் டம் வந்தது. அதுவரை ஆங்கிலம்தான் ஆட்சி மொழியாக இருந்தது. அரசாங்கப் பதவியில் இருப்பவர்கள் மூன்று ஆண்டுகளுக்குள் சிங்களப் பாடத்தை எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், வேலையைவிட்டு நீக்கப்படுவார்கள். நான் அரசாங்கத்தின் சட்டத்தை விமர்சிப்பேன். அதுதான் அவன் மனதில் தீயாகச் சுடர்விட் டிருக்கிறது'' என்று வேலுப்பிள்ளை முன்பு சொல்லியிருந்தார்.

அப்பாவின் தூண்டுதல் மகனை ஆவேசம்கொண்டவராக மாற்றியது. சரியாக வீட்டுக்கு வருவதைக் குறைத்தார். வீட்டில் இருந்த போட்டோக்களை அகற்றிய பிரபாகரனிடம் காரணம் கேட்டார் வேலுப்பிள்ளை. 'கரையான் அரிச்சிருச்சு' என்று கதைவிட்டிருக்கிறார். சில நாட்களிலேயே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். காட்டுக்குள் நிரந்தரமாகத் தலைமறைவாகிவிட்ட பிரபாகரனை மீண்டும் வீட் டுக்கு அழைத்து வர வேலுப்பிள்ளையும் ஒருநாள் காட்டுக்குள் நடந்துபோனார். ''அப்பா! இனி நான் உங்களுக்கோ, வீட்டுக்கோ பயன்பட மாட்டேன்'' என்று மறுத்துவிட்டார் பிரபாகரன். அதன்பிறகே வேலுப்பிள்ளையின் நிம்மதி பறிபோனது.

திருச்சியில் 20 ஆண்டுகளுக்கு மேல் வேலுப்பிள்ளையும் பார்வதியும் இருந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் மகனை இவர்கள் பார்த்ததில்லை. பிரபா கரன் - மதிவதனி திருமணம் நடந்து, மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி பிறந்து ஓர் ஆண்டு ஆன பிறகு தான் அப்பா முன் தோன்றினார். 2002-ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் சமாதானப் பேச்சு தொடங்கிய பிறகு, இவர்கள் ஈழம் சென்றனர். மறுபடி போர் தொடங்கியதும், இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்று சொல்லிவிட் டார்கள்.

மூத்த மகன் மனோகரன், மனைவி வனஜாதேவி மற்றும் குழந்தைகளுடன் டென்மார்க்கில் வசிக்கிறார். மூத்த மகள் ஜெகதீஸ்வரி, கணவர் மதிஆபரணத்துடன் தமிழகத்தில் இருக்கிறார். இளைய மகள் வினோதினி, கணவர் ராஜேந்திரனுடன் கனடாவில் வசிக்கிறார். எனவே, வல்வெட்டித்துறையில் பிறந்த வேலுப்பிள்ளை அவர் பிறந்த மண்ணில் தமிழ் மக்களே உறவினர்களாகச் சூழ்ந்து நிற்க... கடந்த 10-ம்தேதி அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

'என்னை என் மண்ணில் புதைத்தாய்

என் மண்ணை எங்கே புதைப்பாய்?'-என்ற

காசி ஆனந்தனின் கவிதை வரிகளை மனதில்கொண்டு பூமிக்குள் போயிருப்பார் வேலுப்பிள்ளை


source:vikatan



--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இந்துவாக மாறிய நெதர்லாந்து ஆசிரியர் : ராம்தாஸ் என பெயர் மாற்றம்

 
 

Human Intrest detail news 

 















ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் வந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஆசிரியர் ரெம்கோ சுனோய்ஷ், ராம்தாஸ் என பெயர் மாற்றம் செய்து இந்து மதத்துக்கு மாறினார். நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ரெம்கோ சுனோய்ஷ்(27). அந் நாட்டில் வரலாறு ஆசிரியராக பணியாற்றும் இவர், இந்து மதசம்பிரதாயங்களின் மீது பற்று ஏற்பட்டதால், கிறிஸ்தவ மதத்திலிருந்து மாறி, இந்து மதத்தை பின்பற்ற விரும்பினார். இதை தொடர்ந்து , கடந்த டிசம்பரில் இந்தியா வந்த இவர், தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு சென்று விட்டு ராமேஸ்வரம் வந்தார். நேற்று மாலை அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய இவர், இதன் அருகில் அமைந்துள்ள காஞ்சி சங்கர மடத்தில், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில், முறைப்படி இந்துவாக மாறினார். இந்துமத சம்பிரதாயப்படி அவருக்கு சடங்குகள் செய்து ராம்தாஸ் என பெயரும் சூட்டப்பட்டது. இதன் பின் ராமநாதசுவாமி கோயில் சென்று சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.



அவர் கூறியதாவது: இந்துமத சம்பிரதாயங்கள், கலாசாரம், ஆன்மிக விசயங்களில் நீண்ட நாட்களாக ஈடுபாட்டுடன் இருந்தேன். இதற்கு முன் இரண்டு முறை இந்தியா வந்துசென்றபோதும், இந்து மதத்திற்கு மாறுவதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இன்று, ராம்தாஸ் என்ற பெயருடன் நான் இந்துவாக மாறியதில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இந்துவாக மாறியபின் முதன்முதலில், ராமநாதசுவாமியை தரிசனம் செய்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம், என்றார்.


source:dinamalar


எந்த சாதியில் சேர்த்தாங்கன்னு கேக்கதீங்க!!!!

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP