ஒரிசா கலவர பீதி;கிறிஸ்தவர்கள் வீடு திரும்ப மறுப்பு-முகாம்களில் தஞ்சம்
>> Wednesday, October 8, 2008
ஒரிசா மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் விசுவ இந்து பரிசத்தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி சுவாமி படுகொலை செய்யப்பட்டதால் வன்முறை வெடித்தது.மாவோயிஸ்ட் தீவிர வாதிகளில் உள்ள கிறிஸ்த வர்கள் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்ததால் ஒரிசா மாநில பழங்குடியினத்தவர்கள் குறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அப்போது 35 கிறிஸ்தவர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.இதனால் பய்ந்து போனசுமார் 40 ஆயிரம் கிறிஸ்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி காடுகளுக்குள் தப்பி ஓடினர். குழந்தைகளுடன் அனாதைகளாக தவித்து வரும் அவர்களுக்கு மாநில அரசு முகாம்கள் அமைத்து தங்க வைத்துள்ளது. அங்கு அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது. முகாமைச் சுற்றிலும் மத்திய பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள். இதனால் பழங்குடியின மக்களால் அப்பகுதிக்கு சென்று தாக்குதல் நடத்த இயலவில்லை. இந்நிலையில் முகாம்களில் தங்கியுள்ள கிறிஸ்தவர்களிடம் அரசு அதிகாரிகள் வீடு திரும்பும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் கிறிஸ்தவர்கள் மீண்டும் கலவரம் வெடிக்கலாம் என்ற பீதியில் வீடு திரும்ப மறுத்து விட்டனர். ஒரிசாவில் கந்தமால், உதய்கிரி, ரெய்கியா, நுவாகம் போன்ற பகுதிகளில் தான் வன்முறை அதிக அளவில் நடந்தது. அப்பகுதியை சேர்ந்த ஆஷாலதாநாயக் கூறியதாவது:- நான் குடும்பத்துடன் வீட்டில் இருந்த போது ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்தது. அவர்களை பார்த்ததும் நான் காலில் விழுந்து கெஞ்சினேன். ஆனாலும் அக்கும்பல் கணவரை என் கண் முன்னாலேயே சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனேன். வீட்டை விட்டு வெளியேறி காப்பாத்துங்க, காப்பாத்துங்க என்று கூச்சல் போட்டேன். அப்போது என்னையும் அக்கும்பல் உருட்டுக்கட்டையால் தாக்கியது. இதனால் பயந்துபோன நான் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக காட்டுக்குள் தப்பி ஓடினேன். ஒரிசாவில் இனி கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பே இல்லை. எங்களை அந்த கும்பல் தாக்கிய போது போலீசார் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதனால்தான் நாங்கள் மீண்டும் வீட்டுக்கு போக பயப்படுகிறோம்.இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார். கனகா ரெய்கர்நாயக் என்ற பெண் கூறும்போது, நான் எனது 6 வயது மற்றும் 3 வயதுடைய குழந்தைகளுடன் வீட்டில் இருந்தபோது எங்கள் கண் எதிரே கணவரை ஒரு கும்பல் கோடாரியால் வெட்டி கொன்றது. என் கணவர் தான் உண்டுதான் வேலை உண்டு என்றுதான் இருப்பார். அவர் கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது இழப்பை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார். கிறிஸ்துதாஸ் கூறும் போது, எங்கள் கிராமத் திற்குள் 1500 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வந்தது. பின்னர் வீடுகளில் தீ வைத்தது. இதில் என் மனைவி ரமோனி தீயில் கருகி இறந்து போனார். இதே போல் எங்கள் கிராமத்தில் ஏராளமான குழந்தைகள் கலவரக்காரர்களின் நெருப்புக்கு இரையாகி விட்டன. இந்த இழப்பை யாராலும் தாங்க முடியாது"என்றார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உணவு- உடை வழங்க தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதை மாநில அரசு அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. முகாம்களுக்கு வேறு மாநில கிறிஸ்தவர் அமைப்பை சேர்ந்தவர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.கலவரப்பகுதிகளில் துணை ராணுவம் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகிறது. |
0 கருத்துரைகள்:
Post a Comment