சமீபத்திய பதிவுகள்

ஒரு வினாடிக்கு ஒரு காசு' கட்டண முறை வாடிக்கையாளருக்கு பயன் அளிக்குமா?

>> Tuesday, November 10, 2009


Mobil Cell Phone Royalty Free Stock Photo டாட்டா டோகோமோ நிறுவனம், அதன் ஜி.எஸ்.எம். செல்போன் சேவையில் ஒரு வினாடிக்கு ஒரு காசு கட்டணம் வசூலிக்கும் புரட்சித் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து இத்துறையைச் சேர்ந்த இதர நிறுவனங்களும் இதே திட்டத்தை அறிமுகம் செய்தன. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் இத்திட்டத்தை புரியாத சில `சூட்சுமங்களுடன்' அறிமுகம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் இத்திட்டம் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் ஆதாயமளிப்பதாக இருக்காது என்று கூறப்படுகிறது. சலசலப்பு டாட்டாவின் புரட்சித் திட்டம் அறிமுகமானதும் செல்போன் சேவை துறையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிறுவனம் இத்திட்டத்தால், குறைந்த காலத்தில் அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. உடனே இதர செல்போன் சேவை நிறுவனங்கள் அனைத்தும் அலறியடித்துக் கொண்டு, அவற்றின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் `இனி உங்களுக்கும் ஒரு விநாடிக்கு ஒரு காசுதான்' என்று எஸ்.எம்.எஸ். அனுப்பின. பொதுத் துறை நிறுவனமான பீ.எஸ்.என்.எல்.லும் இத்திட்டத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்தது. செல்போன் வாடிக்கையாளர்கள் அனைவரும் பூரித்துப் போயினர். இத்திட்டத்தில், நிறுவனங்களின் `சூட்சுமத்தை' சரிவர புரிந்து கொள்ளாமல், நாடு முழுவதுமாக ஏராளமான வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட தொகைக்கு ரீசார்ஜ் செய்து கொண்டு புதிய கட்டண முறைக்கு மாறிக் கொண்டனர். ஆனால் இத்திட்டத்தில் பல குழப்பங்கள் உள்ளன என்பதை இப்போதுதான் வாடிக்கையாளர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். முருகன் என்ற ஒரு பலசரக்கு கடை உரிமையாளரின் செல்போனில் இனி ஒரு விநாடிக்கு ஒரு காசுதான் என்று எஸ்.எம்.எஸ். வந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்த அவர் உடனே அந்த திட்டத்துக்கு மாறிக் கொண்டார். பிறகு பேசப் பேசத்தான் `சூட்சுமம்' புரிந்தது. தான் செய்த தவறும் புரிந்தது. மேலும் 90 காசுகள் முருகன் முதலில் ஒரு நிமிடத்துக்கு 30 காசு அடிப்படையில் செல்போனில் மணிக்கணக்கில் பேசிக் கொண்ருந்தவர். அப்போது அவர் 3 நிமிடங்கள் (180 வினாடிகள்) பேசினால், அதற்கான கட்டணம் 90 காசுகள்தான். இப்போது அவர் 3 நிமிடத்துக்கு ரூ.1.80 காசுகள் செலுத்த வேண்டும். அதாவது இப்போது மேலும் 90 காசுகள் `பறி' கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். இதே போல் செல்போன் சேவையில் முன்னணியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் ஒரு குறிப்பிட்ட திட்டத்தில், அந்நிறுவனத்தின் நெட்வொர்க்கில் ஒரு நிமிடத்துக்கு 39 காசுகளும், இதர நெட்வொர்க்கில் ஒரு நிமிடத்துக்கு 59 காசுகளும் கட்டணம் வசூலிக்கும் முறை முன்பு ஒரு சமயம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள், பழைய முறையின் கீழ் ஒரு நிமிடத்துக்கு (60 வினாடிகள்) 39 அல்லது 59 காசு செலுத்தினால் போதும். ஆனால் இப்போது அனைத்து நெட்வொர்க்கிலும் ஒரு நிமிடத்துக்கு 60 காசுகள் செலுத்த வேண்டும். தொல்லை புதிய திட்டத்தில் சேருவதற்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு உங்களது செல்போனை `உயிரூட்டிக்' கொள்ள வேண்டிய தொல்லையும் உண்டு. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத்தான். மறுபடியும் உயிர் கொடுக்கவில்லை என்றால் திட்டம் `செத்து' விடும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஏறக்குறைய எல்லா திட்டமும் ஒன்றுதான் என்ற நிலை உருவாகி உள்ளது. டாட்டா டோகோமோவின் திட்டம், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) கவனத்தையே ஈர்த்தது. விநாடி அடிப்படையிலான கட்டண முறையை பொதுவாக்கவும் திட்டமிட வைத்தது. ஒரு விநாடிக்கு ஒரு காசு திட்டத்தில் சேர்வதற்கு முன்பாக ஒரு வாடிக்கையாளர் தற்போது எந்த திட்டத்தில் உள்ளார் என்பதையும், எது ஆதாயமளிப்பது என்பதையும் நன்கு ஆராய்ந்து அதன் பின்பு முடிவு செய்வது நல்லது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், `ஒரு வினாடிக்கு ஒரு காசு' திட்டம் என்பது குறைந்த நேரம் பேசுபவர்களுக்கே ஆதாயம் அளிக்கும். அதே சமயம், செல்போனில் அதிக நேரம் பேசும் வாடிக்கையாளர்களுக்கு இது அதிக செலவினம் ஏற்படுத்தும் என பலர் கருத்து தெரிவித்தனர்.


source:daily thanthi
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP