ப.சிதம்பரத்துக்கு மூக்கறுப்பு: தலைவர் பிரபாகரனின் மரண சான்றிதழை இதுவரை வழங்கவில்லை:சி.பி.ஐ
>> Wednesday, February 10, 2010
புதுடெல்லி, பிப்.10- விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு இதுவரை வழங்கவில்லை என்று சி.பி.ஐ. இயக்குனர் தெரிவித்துள்ளார். சான்றிதழ் கிடைத்ததா? இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் தேடப்படும் குற்றவாளி ஆவார். எனவே, இந்த வழக்கு விசாரணைக்காக, பிரபாகரனின் மரண சான்றிதழை அளிக்குமாறு இலங்கை அரசிடம் சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது. சமீபத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்த சி.பி.ஐ., பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு இன்னும் அனுப்பவில்லை என்று கூறியது. ஆனால், மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் பேட்டி அளித்தபோது, பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு அனுப்பி விட்டதாக கூறினார். இதனால் இவ்விவகாரத்தில் குழப்பம் நிலவியது. சி.பி.ஐ. இயக்குனர் தகவல் இந்நிலையில், பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு அளிக்கவில்லை என்று சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வினி குமார் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:- பிரபாகரனின் மரண சான்றிதழை அளிக்கும்படி இலங்கை வெளியுறவு அமைச்சகத்திடம் சி.பி.ஐ. கோரியுள்ளது. விரைவில் அது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு எந்த ஆவணமும் அளிக்கப்படவில்லை. இலங்கை அரசு அளிக்கும் எந்தவொரு ஆவணத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்வோம். அதன்பிறகு வழக்கை முடித்துக்கொள்வது பற்றி கோர்ட்டு இறுதி முடிவு எடுக்கும். நளினி விடுதலை ராஜீவ் கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி நளினியின் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை நளினி விடுதலை செய்யப்பட்ட பிறகு, அவரது நடமாட்டத்தை கண்காணிக்கும்படி கோர்ட்டு அறிவுறுத்தினால், அதற்கான நடவடிக்கைகளை புலனாய்வு அமைப்புகள் மேற்கொள்ளும். இவ்வாறு அஸ்வினி குமார் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment