போலீஸ் ஸ்டேஷனில் பெண் வரவேற்பாளர்கள் திட்டம் "சக்சஸ்"
>> Friday, September 26, 2008
சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில்,அறிமுகப்படுத்தப்பட்ட பெண் வரவேற்பாளர் திட்டம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், தற்போது போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுக்க துவங்கியுள்ளனர். பிரச்னைகளை தீர்ப்பதற்காக, பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷன் களை நாடி சென்றால்,அங்கு போலீசார் நடந்து கொள்ளும் விதம் பொதுமக்களை வெறுப் படைய செய்கிறது. இதனால்,பொதுமக்கள் புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் செல்ல பயப்பட்டனர்.போலீஸ் ஸ்டேஷன்களில் ஒரு சில போலீசார் செய்யும் தவறு காரணமாக,ஒட்டு மொத்த காவல்துறைக்கே களங்கம் ஏற்பட்டு விடுகிறது. இதைத் துடைக்கும் வகையிலும், போலீசார் பொதுமக்களின் நண்பன் என்பதை விளக்கும் வகையிலும் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் "போலீஸ் ஸ்டேஷன் களில் பெண் வரவேற்பாளர்"என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். காவல் நிலையங்களில்,புகார் கொடுக்க வரும் பொதுமக்களை இன்முகத்துடன் வரவேற்று,கருணையுடன் அவர்கள் புகார்களை பெற்றுக் கொள்ளும் வகையில்,இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. பொதுமக்களிடம் புகார் பெறும் பெண் வரவேற்பாளர் அதற்கு உரிய உதவிகளை மேற்கொள்வார். இவர்கள் கமிஷனரகத்தின் தனிக்கட்டுப்பாட்டில் செயல் படுவர். இத்திட்டத்திற்காக 39 பெண் போலீசாருக்கு சிறப்பு பயற்சிகள் அளிக்கப்பட்டது. டி.ஜி.பி.,ஜெயின் சமீபத்தில் பெண் வரவேற்பாளர் திட்டத்தை துவக்கி வைத்தார்.இந்தத் திட்டத்தை விரைவில்,தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.இந்தப் பெண் வரவேற்பாளர் திட்டம் தற்போது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து புகார் கொடுக்க வந்த பொதுமக்கள் கூறுகையில்,"போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சென்றால்,போலீசார் எரிந்து விழுவார்கள். உண்மை எதுவென்று தெரியாமல் புகார் கொடுக்க வந்தவர்கள் மீதே ஆத்திரத்தை காட்டுவார்கள்.பெண்கள்,சில நேரங்களில் அவமானப்பட்டு உள்ளனர். ஆனால், இந்த பெண் வரவேற்பாளர்கள் கனிவுடன் எங்களை வரவேற்று புகார்களை பெற்று கொள்கின்றனர். யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கமாக கூறுகின்றனர். படிப்பறிவற்றவர்களுக்கு பெரும் உதவி செய்கின்றனர். இந்த திட்டத்தால், காவல்துறையினர் மீது பொதுமக்களிடம் நன் மதிப்பு ஏற்படும். எக்காரணம் கொண்டும் பெண் வரவேற்பாளர்களை திட்டத்தை கைவிடக் கூடாது,"என்றனர். |
|
0 கருத்துரைகள்:
Post a Comment