சமீபத்திய பதிவுகள்

பிரபாகரனின் மரணம் பற்றி ஏன் சந்தேகம்?

>> Friday, August 21, 2009

 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றி பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் திரைப்படம் இயக்கவுள்ளார். படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.


விடுதலைப் புலிகளின் தற்கொடையாளிகளைப் பற்றி ஏற்கனவே இவர் இயக்கிய 'சயனைட்' திரைப்படம் விருதுகளையும் பெற்றுள்ளது.

பிரபாகரனைப் பற்றிய படத்துக்கான திரைக்கதை தயாராகி விட்டது. ஆனால், பிரபாகரனாக யார் நடிப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படம் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகவுள்ளது.

அந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கு மிகத் திறமையுள்ள நடிகரை நான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே தமக்கு என 'இமேஜ்' ஒன்றைக் கொண்டிருக்கும் நடிகர் எவரும் வேண்டாம் என்றார் இயக்குநர் ரமேஷ்.

இருந்தாலும் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் நாளுக்குப் பின்னர் தான் படப்பிடிப்பை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நவம்பர் 27 ஆம் நாளை கடந்த இரு பத்தாண்டு காலமாகப் புலிகளின் தலைவரும் தமிழ் மக்களும் மாவீரர்கள் நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த நாளில் பிரபாகரன் தனது உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் உரையாற்றுவது வழக்கம்.

எதிர்வரும் நவம்பர் 27 ஆம் நாளில் பிரபாகரன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவில்லை எனில் அது, பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக சிறிலங்காப் படையினர் கூறுவதை மேலும் உறுதிப்படுத்திவடும் என உலகு எங்கும் உள்ள புலிகள் ஆதரவாளர்கள் கவலைப்படுகிறார்கள்.

அப்படி அவர் நவம்பர் 27 ஆம் நாள் மக்கள் முன் வரவில்லை என்றால், எனது திரைக்கதையிலும் உச்சக்கட்டக் காட்சியிலும் நான் மாற்றங்களைக் கொண்டுவருவேன் என்றார் ரமேஷ்.

அவரேதான் இந்தத் திரைப் படத்தைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார். மலேசியா வாழ் தமிழர்கள் இருவர் படத்துக்கு நிதி வழங்குவார்கள் எனத் தெரிவித்த அவர், நிதி வழங்குனர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டார்.

பிரபாகரனின் மரணம் பற்றி ஏன் சந்தேகம் என்று ரமேஷிடம் கேட்கப்பட்டதற்கு, பிரபாகரன் தனது கழுத்தில் சயனைட் அணிந்திருக்கவில்லை. அத்துடன், தனது அடையாள அட்டையையும் வைத்திருந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் உளவியலை அறிந்தவர்கள் இவை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறார்கள் என்று பதிலளித்தார்.

 
 

StumbleUpon.com Read more...

சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே... . நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.

கி.மு.5-ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த யோபு என்ற நீதிமானைப் பற்றி பைபிள் நீண்டதொரு பதிவு செய்துள்ளது. மனித இனம் பூமியில் தடம் பதித்த நாள்தொட்டு இன்றுவரை விடையின் றித் தொடரும் கேள்வியான ""துன்பங்கள் ஏன்?'' என்பதற்கு பதில் தேட முயன்ற பதிவு அது. நம்பிக்கையில் நிலைத்து நின்றால் எத்துன்பத்தையும் வெல்லலாம் என்பதாக செய்தி சொல்லப்பட்டாலும் "துன்பம் ஏன்' என்ற கேள்விக்கு விடை காணாமலேயே யோபு குறித்த நூல் முடியும். ஆனால் அந்நூலில் வேதனை வெளிப்பாடுகள் பதிவு செய்யப்படும் விதம் யார் படித்தாலும் மறக்க முடியாதது.

யோபுவை மாசற்றவர், நேர்மையுள்ளவர், இறைவனுக்கு அஞ்சி தீமையை விலக்கி நடந்தவர், அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் ஏழாயிரம் ஆடுகளும் மூவாயிரம் ஒட்டகங்களும் ஐநூறு ஏர் மாடுகளும் ஐநூறு பெட்டைக் கழுதைகளும் உடைமைகளா யிருந்தன என்றெல்லாம் அந்த ஆகம நூல் அறிமுகம் செய்யும். காலத்தின் கோலத்தில் செல்வங்களை யோபு இழந்து பராரியாகிறார், பத்து பிள்ளைகளையும் மண் வீடு இடிந்து மூடிக் கொள்கிறது. உச்சமாக அவருக்கு உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை அருவருப்பான அழி புண் நோய் பற்றிக் கொள்கிறது.


ஆறுதல் சொல்ல நெடுந்தூரத்திலிருந்து வரும் தன் நண்பர்களான ஏலிப்பாஸ், பால்தாத், சோப்பார் மூவரிடமும் யோபு இவ்வாறு புலம்புவார்: ""நான் பிறந்த அந்த, நாள் அழிக! "ஆண் குழந்தையொன்று கருவாகியுள்ளது' என்று சொல்லிய அந்த இரவு தொலைக! பேயிருட்டு அந்த நாளை பீடிக்கட்டும்! ஆண்டுக் கணக்கின் நாட்களுடன் அவ்விரவு எண்ணப் படாதொழிக! அவ்விரவின் விடிகாலை விண்மீன்கள் இருண்டொழிக! பிறக்கும்போதே நான் ஏன் சாகாமற் போனேன்? கருப்பையினின்று வெளிப் பட்ட உடனேயே நான் அழிந்து போயிருக் கக்கூடாதா? உள்ளம் கசந்து போனவனுக்கு உயிர் எதற்கு? என் வேதனைக் குரல் நீராய் ஓடுகிறது. பெருமூச்சுக்களே எனது உண வாயிற்று!''.

ஆம், வன்னிப் பகுதியின் வதை முகாம் களில் எமது மக்களுக்கும் இன்று பெருமூச்சுக் களே அனுதின உணவு. அக்டோபரில் பெருமழை வரும், பேரவலம் அம்மக்களைச் சூழும் என்று கடந்த வாரம் நாம் எழுதி முடிக்கவில்லை- கால் தடுக்கி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக ஆகஸ்ட் மாதத்திலேயே கடந்த வெள்ளிக்கிழமை மழை பெய்தது. மூன்று மணி நேர மழையில் கோழி-முயல் கூடுகள்போல் தமிழ் மக்களுக்குத் தரப்பட்ட பாலித்தீன் குடிசைகள் நீரில் மிதந்தன. கூரைகள் காற்றோடு போயின. பல்லாயிரம் மக்கள் ஆடு, மாடுகள் போல் அடையுண்டு கிடக்கும் அத்திறந்த வெளிச் சிறையின் மலக்கிணறுகளும் குடிநீர் கிணறு களும் ஒன்றாய் கலந்தன. இரண்டு நாட்களாய் தீ மூட்டி அடுப்பமைக்க முடியாமல் எம் மக்கள் பெருமூச்சை உணவாக்கினார்கள். பாம்பு, பூரான், புழுக்களின் படையெடுப்பு, நோய்களின் அணிவகுப்பு. மூன்று மணி நேர மழைக்கே இந்நிலையென்றால் அக்டோபர் மாத பெருமழைக் கொடுமை எவ்வாறிருக்குமென எண்ணிப் பாருங்கள்!?

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் இது தொடர்பாக அக்கறையுடன் கடந்த திங்கட்கிழமையன்று பிரதம ருக்கு எழுதிய கடிதத்தில், உள்நாட்டு அகதிகளாய் வாழும் அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவந்திட இந்தியா அரசு அளவிலும் அரசியல்ரீதியாகவும் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்' என்று எழுதியுள்ளார். முதல்வரின் கவன ஈர்ப்பு மற்றும் வேண்டுதல் கடிதம் மிகவும் வரவேற்கத்தக்கது. இறையருளை நாம் மன்றாடி யாசிப்பது ஒன்றே: முதல்வரது கடிதத்தின் தொடர்ச்சியாக தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள், முக்கிய அமைப்பு களின் தலைவர்கள் ஓரணியாக பிரதமரை சந்தித்து எக்குற்றமும் செய்யாத அப்பாவி மக்களை யுத்தக் குற்றவாளிகள்போல் அடைத்து வைத்திருக்கும் கொடுமைக்கு முடிவு கட்டி, உடனடியாக விடுதலை செய்து அவர்கள் தம் வாழ்விடங்களுக்குத் திரும்பிட வழி செய்திடும் அரசியல் அழுத்தம் கொணர வேண்டும். மாண்புமிகு முதல்வரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும், ஏனைய முக்கிய தலைவர்களும் இது விஷயத்தில் ஓரணியாக புதுடில்லி சென்றார்களென்றால் அது, ஈழப்பிரச்சனை அனைத்துலகமயமாக்கப்பட்டிருக்கிற இன்றைய சூழலில் மிகப்பெரிய தாக்கத்தை உலக அளவில் உருவாக்கும்.

வன்னிப் பகுதியெங்கும் கண்ணி வெடிகளால் நிறைந்துள்ளது, ஆதலால்தான் இம்மக்களை உடனடியாக வாழ்விடங்களுக்கு அனுப்ப முடியவில்லை, கண்ணி வெடிகளை முற்றிலுமாய் அகற்ற ஆறு மாதங்கள் ஆகலாம், ஓராண்டு மூன்றாண்டு கள்வரை ஆகலாம் என்ற இலங்கை அரசின் மோசடி நிறைந்த இன அழித்தல் தொடர்திட்டப் பொய்யினை முதலில் உடைத்தெறிந்து அம்பலப் படுத்துகிற அவசரக் கடமை நமக் கிருக்கிறது. இலங்கை அரசின் கேவலமான இப்பொய்க்கு இந்திய அதிகார வர்க்கமும் இணைந்து பக்க வாத்தியம் வாசிக்கிறதென்பதுதான் கொடுமையிலும் கொடுமை. பயங்கரவாதப் பூச்சாண்டி அச்சுறுத்தல் களுக்கெல்லாம் அப்பால் அறநெறித் திமிறலும் மீறலும் நடத்த வேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் நாம் நிற்கிறோம்.

வன்னி நிலத்தின் 75 சத பகுதிகளில் கண்ணிவெடிகள் இல்லை. கிளிநொச்சியில் வாழ்ந்த மக்கள் புதுக்குடியிருப்பு, முள்ளி வாய்க்கால் நந்திக்கடல் வரை சென்றதெப்படி? மூன்றரை- நான்கு லட்சம் மக்கள் மீண்டும் தப்பித்து வவுனியா வரை வந்ததெப்படி? நிலமெலாம் கண்ணி வெடிகளென்றால் நான்கு லட்சம் மக்கள் எப்படி நீண்ட நெடும்பயணம் செய்திருக்க முடியும்? கண்ணிவெடிப் பொய் பாதித் தமிழர்களை கொன் றழிக்கவும் மீதிபேரை வாழ முடியாதவர்களாகவும் ஆக்கும் கோத்தபய்யா கொலை சேமிப்புத் திட்டம்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அவை உயர் ஆணையமும், அனைத்துலக மன்னிப்பு சபை யும் (Amnesty International) கடந்த வாரம் மிகத் தெளிவாக தம் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன : Freedom of movement is the first and fundamental right of the internally displaced people. ""உள்நாட்டு அகதிகளைப் பொறுத்தவரை தாங்கள் விரும்பும் இடத்திற்கு நகர்கின்ற உரிமை முதலானதும், அடிப்படையானதும் ஆகும்.'' ஏனென்றால் வதைமுகாம்களில் அடைக்கப் பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்கள் அப்பாவி மக்கள், யுத்தக் குற்றவாளிகளல்ல. ஏனென்றால், ராஜபக்சே-கோத்தபய்யா கொலைகாரக் கும்பல் தமிழ் மக்களை அடைத்து வைத்திருப்பது இன அழித்தல் திட்டத்தை முழுமை செய்வதற்காக. ஏனென்றால், தமிழர்களை அடைத்து வைத்துக் கொண்டு சிங்களவர்களை வன்னிப்பகுதியில் ராணுவம் குடியமர்த்தத் தொடங்கியுள்ளதாக உறுதி செய்யப்படாத செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே நண்பர்களே புலிகளின் பாதுகாப்புக் கவசத்தை இழந்து ஏதிலிகளாய் நிற்கும் அம்மக்களுக்கு தமிழர்களாகிய நாம் அரசியல் கவசமாய் எழுவோம்.

1997-ல் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வன்னி விளாங்குளம் காட்டுப்பகுதியில் வாழ்ந்த எமது வானொலி நேயர் பேதுருப் பிள்ளை எழுதிய மறக்க முடியாத கடித வரிகள் நினைவுக்கு வருகின்றன. மனிதருக்கு அப்போதே வயது 70-க்கு அருகில். சர்க்கரை, இதய வியாதிகளெல்லாம் உள்ளவர். அவரைப் பற்றி ஒரு தருணத்தில் விரிவாகச் சொல்ல வேண்டும். அவர் எழுதியிருந்தார், ""பருத்தித்துறை என் சொந்த ஊர். சொந்த மண்ணிலேயே அகதியாகி வன்னி விளாங்குளம் வந்துள்ளோம். காட்டு வாழ்க்கை கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் சுதந்திரக்காற்றை சுவாசிக்க நான் கொடுக்க வேண்டிய விலை அதுவென்றால் நான் காட்டுவாசியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.'' -எழுபது வயதில் இந்தத் திமிறலென்றால் உங்களுக்கும் எனக்கும் எப்படி இருக்க வேண்டும்? சுதந்திரத்திற்கு இணையாக உலகில் வேறெந்த விழுமியங்களும் இல்லை.

இந்த வன்னி மக்கள் இறுதிவரை களம்நின்று போராடியது உண்மையில் அமெரிக்கா போல் வளம் கொழித்துப் பெருவாழ்வு வாழ வேண்டுமென்ற கனவுகளோடல்ல. சிங்களவனின் அதிகாரமும் அழிச்சாட்டியமும் இல்லாமல் தங்கள் குடிசையில், வளவில் சுதந்திரமாய் காற்றை சுவாசித்துக்கொண்டு தன்மதிப்புடன் வாழும் விருப்போடு மட்டும்தான். ஆனால் அதற்காக அவர்கள் கொடுத்த விலை நினைத்துப் பார்க்க முடியாதது. சிவரூபன் இதுவரை சொன்னது கொஞ்சமே. இதோ மேலும் தொடர்கிறார்.

""என் மனைவி, பிள்ளை, தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். "கடவுளே' என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாக, உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.

""தம்பி... உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ'' என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும், ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.

தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலை, கால், கை, உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.

சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே... எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)

(நினைவுகள் சுழலும்)

StumbleUpon.com Read more...

கண்டுகொள்ளப்படாத கண்டுபிடிப்பு...

''ஏழை சொல் அம்பலம் ஏறாது...'' என்பார்கள். சேவியர்ராஜா கதையும் அப்படித்தான்! தன்னுடைய அரிய கண்டுபிடிப்புக்காக உரிய அங்கீகாரம் கிடைக்காமல் வருடக் கணக்காக அலைந்து கொண்டிருக்கிறார் இவர்!

குமரி மாவட்டம் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சேவியர்ராஜா, மெக்கானிக்கல் டிப்ளமோ படித்தவர். படிக்கும்போதே எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தவருக்கு, கல்வித் துறையில் சாதாரண கிளார்க் வேலை கிடைத்தது. ஆனாலும், ஓய்வு நேரங்களில் அறிவியல் சார்ந்த சர்வதேசப் புத்தகங்களை வாசித்து, ஆய்வுகளில் ஈடுபடுவதுமாக இருந்தவர், 'ஃப்ரீக்வென்ஸி டிரேஸ் மூவர்' (Frequency Trace Mover) என்ற கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார். சர்வதேச தொலைத் தொடர் புகள் அனைத்தையும் இந்தக் கருவியின் மூலமாக நொடிப்பொழுதில் முடக்கி வைத்துவிடலாம் என் கிறார் இவர். போர்க் காலங்களில் எதிரி நாட்டின் வயர்லெஸ் சேவை, தொலைபேசி, செல்போன், இன்டெர்நெட் ஆகியவற்றையும் முடக்கி வைக்கும் திறன் கொண்டது என்று சொல்லப்படும் சேவியர் ராஜாவின் இந்தக் கண்டுபிடிப்புக்கு, இந்திய அர சாங்கம் உரிய அங்கீகாரம் வழங்கி கௌரவிக்காமல் இழுத்தடிப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்!

சேவியர்ராஜாவை சந்தித்துப் பேசினோம். ''வேலைக்கு போய்க்கிட்டே, ஓய்வு நேரங்கள்ல வீட்டில் உட்கார்ந்து எதையாவது புதுசா ஆராய்ச்சி செஞ்சு கட்டுரைகளை எழுதிக்கிட்டே இருப்பேன். நான் எழுதுன ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச அளவில் அறிவியல் ஆராய்ச்சிகள் சம்பந்தமான 'சயின்டிஃபிக் அமெரிக்கன்' என்ற ஜர்னலுக்கு அனுப்பினேன். முதன்முதலா என்னுடைய கட்டுரை அதில் பிரசுரமா னப்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அந்த உந்து சக்தியால தொடர்ந்து ஆய்வுகளை செஞ்சேன். என்னிடம் ஏழு விதமான புதிய கண்டுபிடிப்புகள் இருந்துச்சு. 2003-ல் அப்போதைய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்திச்சு என்னுடைய கண்டு பிடிப்புகளைப் பற்றி பேசி னேன். ஆச்சர்யப்பட்ட அவர், அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரான ஜார்ஜ் பெர்னாண்டஸை சந்திக்க ஏற்பாடு செஞ்சார். இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச் சிப் பிரிவுக்கு என்னோட ஆராய்ச்சிகளை அனுப்பி வச்சு என்னுடைய கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து அவார்டும் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைத்தார் அமைச்சர்...'' - சொல்லிக் கொண்டே வந்த சேவியர்ராஜா, நினைவுகளின் அலைக்கழிப்பில் சட்டெனத் துவண்டு போனார். அதிலிருந்து மெதுவாக மீண்டுவந்து, ''பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஆட்டோமேட்டிக் ஏர்கிராஃப்ட் சிஸ்டம், இசட்.எக்ஸ்.புல்லட் உள்ளிட்ட என்னுடைய ஆறு விதமான கண்டுபிடிப்புகளை, 'ஏற்கெனவே இது மாதிரியான ஆய்வுகள் எங்களிடம் இருக்கு'னு சொல்லி நிராகரிச்சுட்டு, 'ஃப்ரீக்வென்ஸி டிரேஸ் மூவர்' ஆய்வை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கிட்டாங்க. இந்தக் கருவி மூலமா இங்கிருந்தபடியே உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் சிறிய பகுதியிலும் தொலைத்தொடர்பு சேவையையும் எட்டிப் பிடித்து துண்டிக்கலாம். அரசாங்கத்தின் கையில் மட்டும் இது இருந்தால், சர்வதேச அளவில் இதற்கான அங்கீகா ரமும் பெற்றுவிட்டால், உலகத்தின் எந்தவொரு தவ றான தகவல் தொடர்பு சேவையையும் முடக்கிப் போடலாம். கார்கில் போர் மாதிரியான சமயங்களில் எதிரி ராணுவத்தின் தகவல் தொடர்பு வசதியை செயலி ழக்கச் செய்யக்கூடிய இந்தக் கருவியின் மகத்து வத்தை புரிந்துகொண்டு, பல தனியார் நிறுவனங்கள் இதற்கான உரிமையை என்னிடம் விலை பேச வந்தன. நான் உடன்படவில்லை. எங்கப்பா அமிர்தராஜ், ராணுவத்தில் வேலை பார்த்தவர். அதனாலதான் என்னுடைய கண்டுபிடிப்பை இந்திய ராணு வத்துக்குத் தரவே விரும்புறேன். எப்படியும் இதை ராணுவத்திடம் சேர்த்துவிடணும் என்பதில்தான் ஆர்வமா இருக்கேன்!'' என்றவர்,

''ராணுவ ஆராய்ச்சியாளர்கள் பல முறை என்னை அழைத்து விளக்கம் கேட்டாங்க. நானும் உரிய விளக்கங்களைச் சொல்லியிருக்கேன். எல்லாத்தையும் கேட்டுட்டு, 'இந்தக் கருவிக்கு காப்புரிமை வாங்கிட்டு வாங்க. நாங்க இதை ராணுவத்துக்கு எடுத்துக்கிட்டு, உங்க கண்டுபிடிப்புக்கு அவார்டு தருவோம்'னு சொன்னாங்க. காப்புரிமையும் வாங்கிட்டு, ரெண்டு வருசத்துக்கு முந்தி அதிகாரிகள் அழைத்ததின் பேரில் ஹைதராபாத் சென்று ஆராய்ச்சி யாளர்கள், விஞ்ஞானிகள் மத்தியில என்னுடைய கண்டுபிடிப்பு குறித்து விளக்கினேன். என்னோட கருத்தில் அவங்க எல்லாருக்குமே முழுத்திருப்தி இருந்துச்சு. ஆனாலும், ஏனோ எனக்கு அங்கீகாரம் குடுக்கலை. இதனால நொந்துபோய், கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிரதமருக்கு விளக்கமா கடிதம் எழுதினேன். அப்படியும் என்னுடைய கோரிக்கை நிறைவேறலை. அதனால்தான், என்னுடைய பதினைந்து வருட உழைப்பில் வந்த இந்த அரிய கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கொடுக்க மறுப்பதின் மர்மத்தை, நாட்டு மக்கள் தெரிஞ்சுக்கணும்கிறதுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புத் துறை மீது வழக்கு போட் டிருக்கேன்!'' என்றார்.

சேவியர்ராஜா தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் சமுத்திரக்கனி, அலெக்ஸ் பென்ஸிங்கர் ஆகியோரிடம் கேட்டதற்கு, ''நாட்டுக்கு பயன்படக் கூடிய புதிய கண்டுபிடிப்பை பயன்படுத்த ராணுவம் தயங்குவதற்கான காரணம் புரியவில்லை. அதனால், கருவியைக் கண்டுபிடித்த சேவியர்ராஜாவை கௌரவப்படுத்தாமல் இருந்ததற்காக பத்து கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டிருக்கு. பாதுகாப்புத் துறையின் கருத்தை அறிந்த பின்னர், முடிவை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருக்கிறார். பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதும், இந்தப் பிரச் னையில் முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்!'' என்றார்கள்.

சேவியர்ராஜாவின் கண்டுபிடிப்பை பாதுகாப்புத் துறை அமைச்சர் வரைக்கும் கொண்டு சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் நாம்கேட்டதற்கு, ''பொதுவாகவே, என்னிடம் யாராவது அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக உதவி கேட்டு வந்தால், அவர்களுக்கான உதவிகளைத் தட் டாமல் செய்வேன். காரணம், அவர்களிடம் என்ன திறமை இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. அதை சோதிக்கும் சக்தியும் நமக்குக் கிடையாது என்பதால், உரிய துறைகளுக்குப் பரிந்துரைப்பேன். அப்படித்தான் சேவியர்ராஜாவையும் பாதுகாப்புத் துறைக்குக் கூட் டிச் சென்றேன். அவருடைய அறிவைப் பரிசோ திக்க வேண்டியது அங்குள்ள அறிஞர்களின் கடமை. அவரிடம் நிஜமாகவே தகுதியும் திறமையும் இருக்கு மானால், அதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியது அந்தத் துறையின் கடமை. ஈகோ கார ணமாக அவருடைய திறமையை பயன்படுத்தாமல் விட்டால், அது நாட்டுக்குப் பேரிழப்பாகிவிடும் என்பதை அறிவியல் அறிஞர்களும் அரசாங்கமும் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று அவரும் ஆதங்கம் காட்டிப் படபடத்தார்.

- ஆண்டனிராஜ்
படம்: ஆ.வின்சென்ட் பால்
  
  

StumbleUpon.com Read more...

நாஜி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட யூதர்களின் நிலையில் முகாம் அகதிகள்

ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் கொல்லப்படுவதற்காக யூதர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைப் போல இன்று வடக்கில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா  எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழைக் காலத்தில் சந்திக்கப் போகும் அதைவிட பாரிய பேரவலத்தை தவிர்க்க அம் மக்கள் உடனடியாக சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்ய இலங்கை அரசாங்கம் மட்டுமல்லாது இந்தியா, ஐ.நா. என முழு சர்வதேச சமூகமும் செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். 


பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வவுனியா முகாம்களிலுள்ள மக்கள் கடும் மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை விவாதத்துக்கென சமர்ப்பித்து பேசும் போதே மாவை சேனாதிராஜா இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.


அவர் இங்கு மேலும் பேசுகையில்;


யுத்தத்தினால் இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இன்று முகாம்களில் மழை, வெள்ளம் காரணமாக இன்று பெரும் கஷ்டங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர். நிலைமை நாளுக்கு நாள் அங்கு மோசமடைந்து வருகிறது. தொற்று நோய் பரவி உயிரிழக்கும் நிலைமைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மிகவும் கொடூரமான முறையில் இந்த மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.


அங்கு சட்டபூர்வமான நிலைமை இல்லை. சட்டபூர்வமாக அகதிகளை தடுத்து வைக்க முடியாது. சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் மூன்றரை இலட்சம் மக்கள் இருப்பதாக நாம் கூறியபோது அதை ஏற்காத அரசாங்கம் அங்கு 70 ஆயிரம் மக்களே இருப்பதாக கூறியது. 


எனினும் மே மாதம் இறுதித் தருணத்தில் அனைத்து மக்களும் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்தபோது அரசாங்கமே 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வந்திருப்பதாகக் கூறியது.


இந்த மக்கள் அனைவரும் வன்னியில் அவர்களது சுய உழைப்பில் வாழ்க்கை நடத்திய மக்கள். ஆனால் இன்று முட்கம்பி வேலிகளுக்கு நடுவே இராணுவ சுற்றி வளைப்புக்கு மத்தியில் மரணத்தை தழுவும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 


முகாம்களின் நிலைமை மோசமாக இருப்பதாக ஐ.நா.செயலாளர் நாயகம் உட்பட உலகில் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். எனவே இம் மக்கள் கூடிய விரைவில் மீள்குடியேற்றப்பட வேண்டுமென்பதே இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தலாக இருக்கிறது.


கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் முகாம்களிலிருக்கும் சுமார் 20 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வயோதிபர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், சிறுபிள்ளைகள் என பலரும் இருக்கின்றனர். இப்படி அனைவருமே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருப்பது பெரும் சதுப்பு நிலமும் கூட. உணவுகளை கூட கொண்டு செல்ல முடியாத நிலைமை நிலவுகிறது.


இதேநேரம், முகாம்களில் வெள்ளம் ஏற்பட்டமைக்கு ஐ.நா.வேகாரணமென மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் ஐ.நா.வோஅதை மறுத்திருக்கிறது.


எது எப்படியிருப்பினும் இந்த இடத்தை தெரிவு செய்தது யார்? ஐ.நா.அரசின் நடவடிக்கைகளுக்கு உதவி ஒத்துழைப்புகளையே வழங்கி வருகிறது. இன்று முகாம்களில் மக்கள் உயிரிழப்பின் விளிம்பில் இருக்கின்றனர். சில நாட்களாக பெய்த மழையிலேயே இவ்வளவு பெரிய ஆபத்து என்றால், எதிர்வரும் மாதம் பருவப் பெயர்ச்சி மழைக்காலம் ஆரம்பமாகவுள்ளது.


வன்னியானது நீர் நிலைகளையும் குளங்களையும் சதுப்பு நிலங்களையும் கொண்ட நிலப் பிரதேசம். எனவே அந்த மக்கள் எதிர்வரும் நாட்களில் பெரும் மழை, வெள்ளத்தில் சிக்கி நோய்வாய்ப்பட்டு சாகப் போகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.


நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூட மக்கள் முகாம்களிலிருந்து உடைத்துக் கொண்டு வெளியேற முற்பட்டுள்ளனர். இதனால் அங்கு இராணுவத்தினர் அதிகமாக வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். 


எதிர்வரும் நாட்களில் ஏதேனும் நடக்கப் போகிறதோ என எச்சரிக்கிறோம். குழுந்தைகளுக்கான மருந்துகளை வெளியிலிருந்து பெறுமாறு வைத்தியர்கள் கூறும் போதும் இராணுவத்தினர் அதற்கு அனுமதிக்க மறுக்கின்றனர்.


நாம் இந்த மக்களின் நிலைமைகள் குறித்து ஜனாதிபதியுடனும் ஐ.நா.அதிகாரிகளுடனும் ஏனைய தரப்பினருடனும் பேசியுள்ளோம். இதேநேரம் முகாம்களிலுள்ள மக்களை கூடிய விரைவில் மீள்குடியேற்றம் செய்வதாக ஜனாதிபதி ஐ.நா.செயலாளர் நாயகத்துடன் இணைந்து விடுத்த கூட்டறிக்கையில் உறுதியளித்திருக்கிறார்.


இதேநேரம், 180 நாட்களில் மீள் குடியேற்றம் செய்வதாக அரசாங்கம் இந்தியாவிடம் உறுதியளித்திருக்கிறது. ஆனால் 3 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அடுத்த 3 மாதங்களில் பருவப்பெயர்ச்சி மழைக் காலம் நிலவப் போகிறது. 


இந்த மக்களின் வரலாற்று உரிமையுள்ள பிறந்த பூமியில் வாழும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஹிட்லர் காலத்தில் கொல்வதற்காக யூதர்களை அடைத்து வைத்திருந்தது போல் தமிழ் மக்களும் இன்று முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.


அந்த மக்கள் இன்று ஈர நிலங்களில் தங்கியிருக்க முடியாமல் துன்பம் அனுபவிக்கின்றனர். குழுந்தைகள் பாலுக்காக துடிக்கின்றன. எமது இந்த மக்களின் பேரழிவை தடுக்கும் அதிகாரம் உங்களிடம் இருக்கிறதா? நாம் இன்று அழிக்கப்படும் சமூகமாகிவிட்டோம் அதுதான் இன்றைய நிலைமை.


எனவே, இந்த மக்களை மழை, வெள்ளத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமெனில் அம்மக்களின் வாழும் உரிமையையும் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேறும் உரிமையையும் ஏற்று அவர்களை வெகுவிரைவில் மீள்குடியேற்றம் செய்யவேண்டும். இதை செய்யுமாறு நாம் இலங்கை அரசாங்கத்தையும் அத்துடன் இந்தியாஇ ஐ.நா. உள்ளிட்ட முழு சர்வதேச சமூகத்தையும் கேட்கிறோம் என்றார்.

  

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP