சமீபத்திய பதிவுகள்

இந்து மதமும் பெண்களும் (பாகம் 7)

>> Wednesday, October 1, 2008

இந்து மதம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறது என்று சிலர் புருடா விட்டுக் கொண்டு திரிவார்கள். இன்றைக்கு உள்ள பெரிய மதங்களில் பெண் வழிபாடு உள்ள ஒரே மதம் இந்து மதம் என்று பெருமை வேறு பேசுவார்கள். இவர்கள் வணங்குகின்ற இந்தப் பெண் தெய்வங்களையே இந்து மதம் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதை அறிந்தால் இவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்.

வைணவத்தில் உள்ள வடகலை, தென்கலை பிளவிற்கு காரணமும் பெண்தான் என்று சொல்லியிருந்தேன். அப்படிச் சொன்னதற்கான காரணத்தை இனிப் பார்ப்போம். வடகலை, தென்கலை என்கின்ற இந்த இரண்டு பிரிவுகளிலும் ஏறக்குறைய 40 விதமான வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த இரண்டு பிரிவினரும் நிறத்தில் கூட சற்று வேறுபட்டிருப்பார்கள் என்று கூட சிலர் சொல்வது உண்டு.

வடகலை, தென்கலை வேறுபாடுகள் உருவாவதற்கான காரணங்களாக பிரபந்தங்கள் பற்றிய சர்ச்சை, ராமானுஜர் மற்றைய சாதியனரையும் பூணுல் அணிவித்து பார்ப்பனர் ஆக்கியதால் உருவாகிய வேறுபாடுகள் போன்றவைகளை காரணங்களாக சொல்வார்கள். ஆனால் இவைகளை விட இவர்களுக்குள் பிளவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பெருமாளின் துணைவியாராகிய பிராட்டியார் பற்றிய சர்ச்சைதான்.

வைணவர்கள் வணங்கும் பெருமாளோடு பக்கத்திலேயே பிராட்டியார் அமர்ந்திருக்கிறார். இந்தப் பிராட்டியாருக்கு பக்தர்களுக்கு மோட்சத்தை வழங்கும் சக்தி இருக்கிறாதா என்பதில்தான் வைணவர்களுக்குள் சர்ச்சை ஆரம்பமானது. "பரமாத்மா", "ஜீவாத்மா" போன்ற சொற்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். இராமாயணத்தை போதிக்கின்ற சிலர் இராமனை "பரமாத்மா" என்றும் சீதையை "ஜீவாத்மா" என்றும் கூறுவதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

பரமாத்மா என்று கடவுளையும் ஜீவாத்மா என்று மனிதப்பிறப்பையும் சொல்வார்கள். பெருமாளின் துணைவியாக இருந்தாலும், பிராட்டியார் ஒரு ஜீவாத்மா மட்டுமே என்பது ஒரு பிரிவினரின் வாதம். "பிராட்டியாரால் பக்தர்களுக்கு மோட்சத்தை வழங்க முடியாது, அவர் ஒரு பெண், பெண்ணிற்கு மோட்சம் வழங்கும் சக்தி இல்லை, வேண்டுமென்றால் பக்தருக்கு மோட்சம் வழங்கச் சொல்லி பெருமாளிடம் சிபாரிசு செய்யலாம்" என்ற கருத்தோடு அவர்கள் உறுதியாக நின்றார்கள்.

கடவுளின் மனைவியாக இருப்பதால், அவருக்கும் கடவுளின் அம்சம் வந்துவிடுகிறது என்றும், அதனால் அவராலும் பக்தர்களுக்கு மோட்சம் வழங்க முடியும் என்று மறுபிரிவினர் வாதிட்டார்கள். இப்படி ஆரம்பித்த பிரச்சனை வடகலை, தென்கலை என்று பிளவில் போய் முடிந்தது.

கடவுளுக்குப் பக்கத்தில் துணைவியாக அமர்ந்திருந்தாலும், பெண் என்பதால் அவருக்கு மோட்சம் வழங்கும் சக்தி உண்டா என்ற விடயத்தில் இந்து மதத்தால் ஒருமித்த கருத்தை காண முடியவில்லை என்பதைத்தான் இங்கு கவனிக்க வேண்டும். ஒரு புறம் அகிலாண்டேஸ்வரி, லோகநாயகி என்றெல்லாம் பெண் தெய்வங்களை புகழ்ந்து கொண்டே, மறுபுறம் ஒரு மோட்சம் வழங்குகின்ற சக்தி கூட இல்லை என்று சொல்லப்படுகின்ற நிலையில்தான் இந்தப் பெண் தெய்வங்களை இந்து மதம் வைத்திருக்கிறது.

ஆண் தெய்வங்களால் அழிக்க முடியாத அசுரர்களை பெண் தெய்வங்கள் அழித்ததாக புராணங்கள் இருக்கின்றனவே என்ற கேள்வி இந்த இடத்தில் உங்களுக்கு வரலாம். அந்தப் புராணங்களை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். பெண் தெய்வங்கள் ஆண் தெய்வங்களின் பலத்தைப் பெற்றுத்தான் அசுரர்களை அழித்திருப்பார்கள்.

பெண் தெய்வங்களுக்கு என்றே பெரும் எடுப்பில் கொண்டாடப்படுகின்ற நவராத்திரி பற்றிய புராணக் கதையிலும் இந்த விடயம் அடங்கியிருக்கிறது. பெண்ணால் மட்டுமே கொல்லப்படக் கூடிய வரம் பெற்ற மகிசாசுரனை அழிப்பதற்கு பராசக்தி தன்னுடைய பலத்தோடு மட்டும் செல்லவில்லை. ஒரு பெண்ணாகிய அவளால் அது முடியாது என்று, பராசக்தி அனைத்து ஆண் தெய்வங்களின் பலத்தையும் கேட்டுப் பெறுகிறாள். சிவன், விஸ்ணு, பிரம்மன், இந்திரன், தேவர்கள் என்று அனைத்து ஆண்களின் பலத்தையும் பெற்று மகிசாசுரனை அழிக்கிறாள். பெண்ணிற்கு தனித்து எந்த சக்தியும் இல்லை என்பதுதான் இங்கு உணர்த்தப்படுகிறது.

ஆண் தெய்வத்தோடு போட்டி போட்டு பெண் தெய்வங்கள் தோற்றுப் போன கதைகளை சொல்கின்ற ஓராயிரம் புராணங்கள் இந்து மதத்தில் உண்டு. பெண்கள் பொதுவாக நடனத்தில், நளினத்தில் வல்லவர்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் அப்படியான நடனத்திலும் சிவன் பார்வதியை வென்றுவிடுகிறார். அதுவும் எப்படி சிவன் வெற்றி பெறுகிறார் தெரியுமா?

சிவனிற்கும் பார்வதிக்கும் நடனப் போட்டி உச்சக் கட்டத்தை அடைகிறது. பார்வதி வெற்றி பெற்றுவிடும் நிலையில் இருக்கிறார். அப்பொழுது சிவன் வலதுகாலை நிலத்தில் ஊன்றியபடி இடது காலை மேலே தூக்கினார். நடனத்தில் ஒரு வகை என்று பார்வதி நினைத்துக் கொண்டிருக்க சிவனுடைய இடது கால் மேலும் உயர்ந்து கொண்டே போனது.

இடது காலை மேலே உயர்த்தி தன்னுடைய ஆண் குறி பார்வதியின் கண்ணில் படுவது போன்று சிவன் செய்தார். பார்வதி அதைக் கண்டு திகைத்துப் போய் செய்வதறியாது நின்றார். பார்வதி அதிர்ச்சியில் நிற்க, சிவன் இடது காலை தூக்கியபடியே தொடர்ந்து ஆடி வெற்றி பெற்றார். நடராஜர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

பெண் பலவீனமானவள் என்பதையும், பெண்ணை தோற்கடிக்க எந்த வழியையும் கையாளலாம் என்பதையும் இந்து மதம் இந்தப் புராணக் கதையின் மூலம் சொல்கிறது. தன்னுடைய கணவனின் ஆண்குறியைக் கண்டு செய்வதறியாது சிலை போல் நின்ற அதே பார்வதி ஒரு குதிரையின் குறியைக் கண்டு விரகதாபத்தில் துடித்த கதையும் உண்டு.

ஒரு முறை பார்வதி ஒரு குதிரையின் நீளமான குறியைக் கண்டு விட்டார். அதைக் கண்டு மோகித்து விரகதாபத்தில் பார்வதி துடித்தார். பார்வதி நிலையை உணர்ந்த சிவன் தானே ஒரு குதிரையாக மாறி பார்வதியை புணர்ந்து, அவருடைய விரகதாபத்தை தீர்த்து வைத்தார்.

இந்து மதம் சாதரண மானிடப் பெண்களைத்தான் இழிவுபடுத்துகிறது என்று யாரும் நினைத்து விட வேண்டாம். தெய்வங்கள் என்றாலும் அவைகள் பெண்களாக இருக்கின்ற போது, அந்தப் பெண்களையும் சேர்த்தே இந்து மதம் இழிவுபடுத்தி வந்திருக்கிறது.

பெண் தெய்வம் என்பவள் இறந்தவர்களுக்கு மோட்சம் வளங்கும் சக்தி அற்றவள், ஆணின் பலம் இல்லாமல் எதையும் செய்ய முடியாதவள், ஆண் தெய்வத்திற்கு அடங்கி இருக்க வேண்டியவள், கணவனிடமோ, குதிரையிடமோ, அல்லது வேறு யாரிடமோ ஆண்குறியை கண்டு விட்டால் வாய்பிளந்து நிற்பவள்…. இப்படித்தான் இந்து மதம் பெண் தெய்வங்களை "போற்றுகிறது".

பெண் தெய்வங்களுக்கு என்று நடத்தப்படுகின்ற விழாக்கள் கூட அருவருப்பான ஆணாதிக்க சிந்தனையை கொண்டவைதான். விழாக்களுக்கான காரணங்களை தேடிப் பார்த்தால், அவைகள் புரியும். எத்தனையோ கோயில்களில் இன்றைக்கும் ஆண் தெய்வங்களுக்கு விசேடமான நெய்வேத்தியமும், பெண் தெய்வங்களுக்கு மிகச் சாதரண படையலும் படைக்கப்படுகின்றன.

பெண் தெய்வங்களையே இந்து மதம் இழிவு படுத்துகின்ற போது, சாதரண மானிடப் பெண்களை மந்திரங்களிலும், நடைமுறையிலும் இழிவுபடுத்துவது குறித்து இனியும் உங்களுக்கு ஏதும் ஆச்சரியம் உண்டா?

பெண் பற்றி இந்து மதம் என்னவெல்லாம் சொல்கிறது என்பதை இதுவரை ஓரளவு பார்த்தோம். பெண் மீது இந்து மதம் இப்படி வெறுப்பை கொட்டுவது ஏன் என்பதை இனிப் பார்ப்போம்.

தொடரும்……
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP