சமீபத்திய பதிவுகள்

இந்து மதமும் பெண்களும் (பாகம் 9)

>> Wednesday, October 1, 2008

இந்தியாவின் மண்ணின் மைந்தர்களிடம் இருந்த பெண் தெய்வ வழிபாட்டை சிறுமைப்படுத்தும் நோக்கில் ஆரியர்கள் பெண்களை சிறுமைப்படுத்தினார்கள் என்பதை கடந்த பாகத்தில் பார்த்தோம்.

இன்றைக்கு வரைக்கும் தமிழ் மக்களிடம் இந்தப் பெண் தெய்வ வழிபாடு முக்கிய இடம் பிடித்திருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். எத்தனையோ கிராமங்களின் காவல் தெய்வமாக பெண் தெய்வங்களே இருக்கின்றன. பல இடங்களில் "அம்மன் வழிபாடு" ஒரு மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தமிழர்களை கவனித்தால் கூட அங்கும் பெண் தெய்வ வழிபாடு இருப்பதை பார்க்க முடியும். ஈழத்தில் மடுமாதாவும் தமிழ் நாட்டில் அன்னை வேளாங்கண்ணியும் மிக அதிகமாக வழிபடப்படுவதை கவனிக்கலாம்.

இன்றைய நிலையே இப்படி இருக்கின்ற போது, கொற்றவை காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லிப் புரிய வேண்டியது இல்லை. இப்படி உச்சம் பெற்றிருந்த பெண் தெய்வ வழிபாட்டை இல்லாது செய்வதற்காக ஆரியர்கள் பெண்களை மிக மிக இழிவுபடுத்தினார்கள்.

நாம் இந்தத் தொடர் முழுவதும் இரண்டு விடயங்களைப் பார்த்தோம். இந்து மதம் எப்படியெல்லாம் பெண்ணை இழிவுபடுத்துகிறது என்பதையும், ஏன் இழிவுபடுத்துகிறது என்பதையும் பார்த்தோம்.

எப்படியெல்லாம் இழிவுபடுத்துகின்றன என்பதை பல்வேறு சான்றுகளோடு தந்திருக்கிறேன். இந்தச் சான்றுகள் எவையும் எந்த ஒரு கடவுள் மறுப்பு நூல்களில் இருந்து பெறப்பட்டவை அல்ல என்பதை இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அனைத்து சான்றுகளுமே இந்து மதத்தை சேர்ந்த மத நம்பிக்கையாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களில் இருந்தே பெறப்பட்டன.

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். மனுதர்மத்திலிருந்து சில தரவுகளை தந்திருக்கிறேன். இவைகள் 1919ஆம் ஆண்டு இளையவல்லி கௌசிக இராமானுஜசாரியார் என்பவரால் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட "மனுதர்ம சாஸ்திரம்" என்னும் நூலில் இருந்து பெறப்பட்டவை. சமஸ்கிருதபாசையில் இருப்பதால், இதனால் சிலர் மட்டுமே பயன்பெறுகிறார்கள் என்றும், அதனால் எல்லோரும் பயன்படும் வண்ணம் தமிழில் மொழி பெயர்ப்பதாக அவர் எழுதியுள்ளார். இந்த மொழி பெயர்ப்பு சரியானது என்று சமஸ்கிருத பண்டிதராகிய வே. வேதாந்தசாரியார் என்பவர் உறுதி மொழி வழங்கி கையொப்பம் இட்டுள்ளார்.

திராவிட கழகங்கள் போன்ற கடவுள் மறுப்பு இயக்கங்கள் வெளியிட்ட நூல்களில் இருந்து தரவுகளைப் பெறும்போது, அந்தத் தரவுகள் குறித்து கடவுள் நம்பிக்கையாளர்கள் வழமை போன்று சந்தேகம் எழுப்பக்கூடும் என்பதனால், அவ்வாறான நூல்களை தவிர்த்து முற்று முழுதாக கடவுள் நம்பிக்கையாளர்கள் எழுதிய நூல்களை மட்டுமே என்னுடைய தொடருக்கு பயன்படுத்தியுள்ளேன். அதுவும் சமஸ்கிருதம் நன்கு அறிந்த பார்ப்பனர்கள் எழுதிய நூல்களையே பயன்படுத்தியிருக்கிறேன்.

ஆகவே இதிலே உள்ள தரவுகள் குறித்து கடவுள் நம்பிக்கையாளர்கள் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

திருமணத்தில், இறுதிச் சடங்கில் சொல்லப்படுகின்ற மந்திரங்கள் பெண்ணை மிகவும் இழிவுபடுத்துவதன் காரணத்தை ஆராயப் புகுந்ததில் இந்தத் தொடர் உருவாகியது. இந்து மதத்தின் கருத்தின்படி பெண் என்பவள் இழி பிறப்பு. சூத்திரர்கள் என்று தம்மால் அடையாளப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து தமது பெண் துணைகளைப் பெற்றதாலும், பெண் தெய்வ வழிபாட்டை சிறுமைப்படுத்த முனைந்ததாலும், இந்த கருத்தை ஆரிய இந்துமதம் உருவாக்கியது.

மந்திரங்கள் புனிதமானவை என்ற உறுதியான கருத்துருவாக்கம் பார்ப்பனர்கள் மனதில் இன்றும் இருப்பதால், இந்த மந்திரங்களை இன்று வரை தொடர்கிறார்கள். புதிய அர்த்தங்களைக் கொடுத்து தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொண்டு தொடர்கிறார்கள். மற்றவர்களையும் சமாதானப்படுத்துகிறார்கள்.

தாயை கொச்சைப் படுத்துகின்ற மந்திரம் பற்றி ஒருவர் விளக்கம் எழுதியிருந்தார். யார் எவராக வேண்டும் என்றாலும் இருக்கலாம், தாய் என்ற காரணத்திற்காக தவறுகள் மறைக்கப்படக் கூடாது என்ற பக்குவத்தை தருகின்ற உயர்ந்த தத்துவத்தை சொல்கின்ற மந்திரமாம் அது. இப்படியான சமாதானங்களை சொல்லி தம்மையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவர் ஒரு பெண்ணைப் பார்த்து "வர்றியா" என்று அழைத்தால், அந்த "வர்றியா" என்பதன் சரியான அர்த்தம் குறித்து நாம் ஒரு முடிவுக்கு வருவதற்கு அகப் புறச் சூழ்நிலைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். அழைத்தவர் யார், அவர் எப்படிப்பட்டவர், எந்த நேரத்தில் அழைத்தார் போன்றவைகளை எல்லாம் ஆராய வேண்டும்.

"வர்றியா" என்று அழைத்தவர் நான் சும்மா பேசுவதற்குத்தான் அழைத்தேன் என்று விளக்கம் சொல்வது போன்று மந்திரங்கள் குறித்த இந்த பார்ப்பனர்கள் இன்றைக்கு தருகின்ற விளக்கங்கள் இருக்கின்றன. அதனாற்தான் இந்த மந்திரங்களை கொண்டிருக்கின்ற இந்து மதம் பெண்கள் பற்றி என்ன சொல்கிறது என்பதை ஆராய வேண்டி தேவை ஏற்படுகிறது.

மந்திரங்கள் நேரடியாகவே அர்த்தங்களை தெளிவாகச் சொல்கின்றன. அப்படியிருந்தும் மந்திரங்களை காப்பாற்றுவதற்கு பார்ப்பனர்கள் புதிய அர்த்தங்களை தர முனைகிறார்கள். ஆனால் நேரடியான அர்த்தமும் சரி, அது பற்றிய பின்புல ஆய்வும் சரி பார்ப்பனர்கள் தருகின்ற புதிய அர்த்தங்கள் தவறானவை என்று நிரூபிக்கின்றன.

ஆகவே தமிழர்கள் பார்ப்பனர்களை வைத்து புரியாத மொழியில் செய்கின்ற சடங்குகளை புறக்கணிக்க முன்வர வேண்டும். சடங்குகள் செய்துதான் தீரவேண்டும் என்றால், அவற்றை தமிழில் செய்ய வேண்டும். இதுவே மானமுள்ள செயலாகும். இல்லை, உங்களுடைய தாயையும், சகோதரியையும், மனைவியையும் நீங்கள் கொச்சைப்படுத்த விரும்பினால், தாராளமாக சமஸ்கிருதத்தில் தொடர்ந்து சடங்குகளை செய்யுங்கள்.

இந்த தொடரை நீடித்து இந்து மதம் பெண்கள் பற்றி என்ன சொல்கிறது என்பதை மேலும் தோலுரித்துக் காட்ட முடியும். ஆனால் இதுவரை அம்பலப்படுத்தியது போதும் என்று நினைக்கிறேன். இந்து மதத்தில் அம்பலப்படுத்து வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. முக்கியமாக பகவத் கீதை.

இந்து மதம் இடையில் வந்த மதம் என்பதற்கும் மற்றைய மதங்களில் இருந்த மக்கள் அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் இந்து மதத்தில் சேர்க்கப்பட்டார்கள் என்பதற்கும் பகவத் கீதையே ஒரு ஆதாரம். தமிழ் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் கண்டிக்கும் வர்ணாச்சிரமத்தை போற்றிப் பாதுகாக்கும் மனித குல விரோத நூலாக பகவத் கீதை இருக்கிறது.

அடுத்த தொடரில் பகவத் கீதையை வேறொரு கோணத்தில், ஆனால் சரியான கொணத்தில் காட்டப் போகிறேன். ஆவலோடு காத்திருங்கள்.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Anonymous October 6, 2008 at 9:05 AM  

VERY GOOD ARTICLE

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP