கன்னடரை உதையுங்கள் என்றேனா நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
>> Tuesday, April 8, 2008
பெங்களூர், ஏப். 7-
ஒகேனக்கல் விவகாரத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ் திரையலகினரின் உண்ணாவிரத போராட்டத்தின் போது, கன்னடர்களின் மனது புண்படும்படியாக பேசவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கன்னட தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், கன்னடர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. கன்னடர்களை இழிவாக பேசும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. ஒகேனக்கல் விவகாரத்தில் அரசியல் லாபம் அடைய முயற்சிப்பவர்களை நீங்களே உதையுங்கள் என்றுதான் கூறினேன். இதையும், திரையரங்குளை தாக்குவது, பஸ்களை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மனதில் வைத்துதான் கூறினேன்.
மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் நடித்த படங்களை திரையிடவிடமாட்டோம் என்று சிலர் கூறி வருகின்றனர். இதனால் எனக்கு எந்த இழப்பும் இல்லை. நான் நடிக்கும் படங்களை தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மக்களும் ரசிக்கின்றனர். கர்நாடகத்தில் நான் நடித்த படங்களை திரையிடாவிட்டால், கன்னட ரசிகர்கள்தான் வேதனையடைவார்கள். நான் தவறிழைத்தாக கன்னட திரையுலகின் அம்பரீஷ், விஷ்ணுவர்தன், அஸ்வத் போன்ற மூத்த நடிகர்கள் மனசாட்சியுடன் கூறினால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன். 5 கோடி கன்னடர்களை உதைப்பேன் என்று நான் கூறியதாக, சிலர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் எனது மனம் புண்பட்டுள்ளது.
இவ்வாறு பேட்டியில் ரஜினிகாந்த் கூறினார்.
கன்னட பட தயாரிப்பாளர் சா.ரா.கோவிந்து, நடிகை ஜெயமாலா ஆகியோர் கூறுகையில்,Ô ரஜினிகாந்த் மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளோம். அதே சமயம் அவர் கன்னடர்களை இழிவாக பேசியதால் கன்னடர்களின் மனம் புண்பட்டுள்ளது. கன்னடர்களை தாக்கி பேசவில்லை என்று கூறி மறுபடியும் தவறிழைக்க வேண்டாம். தேவையானால், அவர் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்சை வரவழைத்து மறுபடியும் பார்க்கட்டும். கன்னடர்களை இழிவாக பேசியது உண்மை. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், ரஜினி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்Õ என்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment