சமீபத்திய பதிவுகள்

ஈராக் : குண்டு வெடிப்பில் 33 பேர் பலி

>> Wednesday, October 1, 2008

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே மூன்று இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 33 பேர் பலியானார்கள்.

முதல் குண்டு பாக்தாத்தையடுத்துள்ள ஷுர்தா என்ற இடத்தில் இருக்கும் மசூதி அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ்சில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர் ; 35 பேர் காயமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஹய் - அல் - அமில் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார்; மற்றொருவர் காயமடைந்தார்.

அதனையடுத்து மூன்றாவதாக கர்ராடா மாவட்டத்தின் மையப் பகுதியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர் ; 72 பேர் காயமடைந்ததாக பாக்தாத் உயர் போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

முதல் இரண்டு டெஸ்ட் : இந்திய அணியில் கங்குலி சேர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில், முன்னாள் கேப்டன் கங்குலி சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த்துக்கு, இதுவே முதல் தேர்வுக்குழு கூட்டமாகும்.

அண்மையில் நடந்த இரானி கோப்பையில் கங்குலி சேர்க்கப்படவில்லை.காரணம், அவர் இப்போது உரிய ஃபார்மில் இல்லை என்பதே. இலங்கை தொடரில் அவரது மொத்த ரன்கள் - 100-க்கும் குறைவே. ஆயினும், தனது திறமையை வெகுவாக வெளிப்படுத்த காத்திருப்பதாக, அவர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்தச் சூழலில், இந்திய அணியில் கங்குலி மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அணிக்கு உகந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லை என்ற குறையை கங்குலி போக்கக் கூடும் என்ற காரணத்தால் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், மூத்த வீரர் என்ற முறையில் அணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயதையும், நிலையையும் கங்குலி எட்டிவிட்டார். இதனால், கெளரவமான முறையில் அவர் தனது ஓய்வை அறிவிக்கும் சூழலை ஏற்படுத்தவே, அவருக்கு மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளாதாக, கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு, கங்குலி தனது ஓய்வை அறிவித்துவிடுவார் என்றும் தகவல்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி விபரம்:

கும்ப்ளே (கேப்டன்), சேவாக், கம்பீர், சச்சின், திராவிட், கங்குலி, லஷ்மண், தோனி, இஷாந்த் ஷர்மா, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், முனாப் படேல், பத்ரிநாத், அமித் மிஷ்ரா மற்றும் ஆர்பி சிங்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, அடுத்த மாதம் 9-ம் தேதி பெங்களூரிலும், இரண்டாம் டெஸ்ட் போட்டி 17-ம் தேதி மொஹாலியிலும் தொடங்குகிறது
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

“புலிகளின் வலிந்த தாக்குதல் எப்பொழுது?”

வன்னிக் களம் தொடர்ந்தும் அதிர்ந்து கொண்டிருக்கின்றது. பூநகரியை இலக்காகக் கொண்டு படையினர் புறப்பட்டிருப்பதாக ஆரம்பத்தில் நம்பப்பட்டாலும், தற்பொழுது கிளிநொச்சியை நோக்கி படையினர் தமது கவனத்தை திருப்பியுள்ளனர்.
 
 கிளிநொச்சியை இந்த ஆண்டுக்குள் கைப்பற்றி விடுவோம் என்று சிங்களத் தரப்பு உற்சாகமாக பிரகடனம் செய்து வருகின்றது. மகிந்த ராஜபக்ஸவும் தாம் கிளிநொச்சியில் இருந்து நான்கரை கிலோமீற்றர்கள் தொலைவிலேயே நிற்பதாக கூறுகிறார்.
 
 ஏ32 வீதியில் அமைந்துள்ள நாச்சிக்குடாவில் சில வாரங்களுக்கு முன்பு சிறிலங்காப் படையினர் சந்தித்த பேரிழப்பினை அடுத்து அப் பகுதியில் முன்னேற்ற நடவடிக்கைகளை படையினர் சற்று நிறுத்தி வைத்துள்ளனர். நாச்சிக்குடாவிலிருந்து ஏறக்குறைய 25 கிலோமீற்றர்கள் தொலைவில் பூநகரி அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த் தாக்குதலினால் ஏ32 வீதியுடான பூநகரி நோக்கிய நகர்வு தற்பொழுது சாத்தியம் குறைந்த ஒன்றாக மாறியுள்ளது.
 
 மறுபுறம் அக்கராயன்குளத்திற்கு அருகில் நிலைகொண்டிருக்கும் படையினர் கிளிநொச்சி நோக்கி நகர முற்படுகின்றனர். இங்கிருந்து ஏறக்குறைய 12 கிலோமீற்றர்கள் தொலைவில்தான் கிளிநொச்சி அமைந்துள்ளது. பூநகரியைக் கைப்பற்றுவதை விட கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே படையினருக்கு மிகப் பெரும் வெற்றியாக அமையும்.
 
 கிளிநொச்சி நகரைக் கைப்பற்றினால் அதன் பிறகு பரந்தனும், பின்பு ஆனையிறவும் சிறிலங்காப் படைகளின் கைகளில் வீழ்ந்து விடும். அப்படி ஒரு நிலை நேருமாகில் பூநகரியில் நிலைகொண்டுள்ள விடுதலைப் புலிகளின் அணிகள் சுற்றி வளைக்கப்படும் நிலை ஏற்படும். இதனால் அங்கிருந்து புலிகளின் அணிகள் தாமாகவே பின்வாங்கி விடுவார்கள்.
 
 சண்டைகள் இன்றியே பூநகரி, ஆனையிறவு, பளை என்று அனைத்தும் படையினர் வசமாகி விடும். சிறிலங்கா அரசின் பல ஆண்டுக் கனவான யாழ் குடாவிற்கான தரைப் பாதை திறக்கப்பட்டு விடும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி முல்லைத் தீவுக்குள் சுருங்கிப் போய் விடும்.
 
 சிறிலங்காப் படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதில் இத்தனை ஆபத்துக்கள் இருக்கின்றன. இவற்றை விட மிகப் பாரியதொரு மனிதப் பேரவலம் ஏற்படும். ஏற்கனவே இடம் பெயர்ந்துள்ளவர்களோடு மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களும் இடம் பெயர நேரிடும். தற்பொழுது பல்லாயிரக் கணக்கான மக்கள் வீதிகளிலும் காடுகளிலும் மரங்களின் கீழும் வசித்து வருகின்றார்கள். இவர்கள் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் துன்பப்படுகின்றார்கள்.
 
 சிறிலங்கா அரசு திட்டமிட்டே விவசாய நிலங்களை நோக்கி தனது படை நடவடிக்கைகளை நடத்தி வருகின்றது. வவுனிக் குளம், அக்கராயன் குளம் என்று குளங்களை நோக்கி நகர்வதில் சிறிலங்காப் படையினர் இதுவரை குறியாக இருந்து வருகின்றார்கள். தமிழர்களின் விவசாயத்தை பாழ்படுத்துவதன் மூலம் தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை பட்டினிப் போட்டுக் கொல்ல விரும்புகின்றது.
 
 வளம் குறைந்த யாழ் மண் கூட ஒரு காலத்தில் பல ஆண்டுகாலப் பொருளாதாரத் தடையை தாக்குப் பிடித்து நின்றது. வளம் பொருந்திய வன்னி மண்ணால் சிறிலங்காப் படைகளின் பொருளாதாரத் தடைகளை இலகுவாக தாக்குப் பிடிக்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டு வன்னி மண்ணின் வளங்களை அழித்து ஒழிப்பதில் சிறிலங்காப் படைகள் மும்மரமாக செயற்பட்டு வருகின்றன.
 
 இப்படியான நடவடிக்கைகளின் மூலம் வன்னி மக்களை பேரவலத்தில் சிக்கச் செய்வதற்கு சிறிலங்க அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது. சிறிலங்காப் படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றினால், தற்போது உள்ளதை விட மிகப் பெரும் நெருக்கடியை தமிழ் மக்கள் எதிர்கொள்ள நேரிடும்.
 
 மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்து அவலத்தில் தள்ளுவதன் மூலம் அந்த மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து அந்நியப் படுத்த முடியும் என்று சிறிலங்கா அரசு நம்புகின்றது. புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் சில முகாம்களை அமைத்து வைத்துக் கொண்டு அங்கே வன்னி மக்களை வரும்படி சிறிலங்கா அரசு அழைக்கின்றது. அனைத்து வழிகளிலும் மக்களுக்கு நெருக்கடிகளை கொடுக்கின்ற போது, மக்கள் விடுதலைப் புலிகளை மீறி இந்த முகாம்களை நோக்கி வருவார்கள் என்று சிறிலங்கா அரசு நம்புகின்றது.
 
 கிளிநொச்சியையும் கைப்பற்றி, மக்களையும் தமது கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி இழுப்பதன் மூலம் மிகப் பெரும் இராணுவ அரசியல் வெற்றியை ஈட்டுவதோடு, தமிழீழப் போராட்டத்திற்கும் ஒரு முடிவு கட்டிவிடலாம் என்று மகிந்தவின் அரசு கணக்குப் போடுகின்றது. இதை விடுதலைப் புலிகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதுதான் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு மிகுந்த கேள்வியாக இருக்கின்றது.
 
 சிறிலங்காப் படையினர் அக்கராயன் குளத்தில் இருந்து ஏ9 வீதியில் உள்ள கொக்காவில் நோக்கியும், வன்னி விளாங்குளத்தில் இருந்து மாங்குளம் நோக்கியும் நகர்வதற்கு கடும் முயற்சி எடுத்து வருகின்றார்கள். பாலமோட்டையில் இருந்து படையினர் ஏ9 பாதையை நெருங்கி விடாத வண்ணம் ஒன்றரை ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மறிப்புச் சமர் புரிவது போன்று, ஏ9 வீதியில் அமைந்துள்ள மாங்குளம், கொக்காவில் போன்ற இடங்களையும் படையினர் கைப்பற்றுவதற்கு இலகுவில் அனுமதிக்கப் போவது இல்லை என்பது ஊகிக்க கூடிய ஒரு விடயம்.
 
 ஆனால் நீண்ட காலத்திற்கு தற்காப்புச் சமரை மட்டும் செய்து கொண்டு இருக்க முடியுமா என்ற கேள்வி சில ஆய்வாளர்களுடைய மனங்களில் இருக்கின்றது. வலிந்த தாக்குதலை நடத்தாது விட்டால், சில மாதங்கள் கழித்து என்றாலும் படையினர் கிளிநொச்சியை கைப்பற்றி விடுவார்கள் என்று இவர்கள் அச்சம் தெரிவிக்கின்றார்கள்.
 
 இதே வேளை விடுதலைப் புலிகள் ஒரு பாரிய வலிந்த தாக்குதலுக்கு தயாராகி வருவதாக கொழும்பில் உள்ள பாதூப்பு நிலவரங்களை வெளியிடும் சில ஊடகங்கள் கூறுகின்றன. கொழும்பின் படைத் துறை ஆய்வாளர்களும் அவ்வாறான கணிப்புகளை வெளியிட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் யாழ் குடாவில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று சிறிலங்காப் படையினர் கூறுகின்றனர்.
 
 விடுதலைப் புலிகள் ஒரு பாரிய தாக்குதலை யாழ் குடா நோக்கி ஆரம்பிக்க இருப்பதாகவும், அதை எதிர்கொள்ளும் வகையில் மூன்று நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், அத்தியாவசியமான பொருட்களை மக்கள் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் படையினர் கூறியுள்ளதாக தெரிய வருகின்றது. கனரக ஆயுதங்களையும் பெருமளவிலான படையினரையும் முகமாலை நோக்கி நகர்த்துவதற்காகவே சிறிலங்காப் படையினர் இந்த ஊரடங்கு உத்தரவை அறிவிக்க உள்ளதாக சிலர் கருத்துத் தெரிவிக்கன்றனர்.
 
 ஆயினும் பலர் கூறுவது போன்று விடுதலைப் புலிகள் ஒரு பாரிய தாக்குதலை ஆரம்பிக்கப் போகின்றார்களா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிய வரக் கூடும்.
 
 ஜெயசிக்குறுவை எதிர்கொண்டதை விட, விடுதலைப் புலிகள் படையினரின் தற்போதைய நடவடிக்கைகளை வேறு விதமாக எதிர்கொண்டு வருகின்றார்கள். ஜெயசிக்குறுவின் போது நடத்திய "செய் அல்லது செத்துமடி" போன்ற ஊடறப்புத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் தற்போதைய நடவடிக்கையில் செய்யவில்லை. கடந்த ஆண்டில் விளாத்திக்குளம் பகுதியில் அப்படியான ஒரு தாக்குதலை நடத்தியிருந்தார்கள். இதைத் தவிர சொல்லிக் கொள்ளக் கூடடிய ஊடறப்புச் சமர்களை விடுதலைப் புலிகள் செய்யவில்லை.
 
 ஊடறப்புச் சமர்கள் விடுதலைப் புலிகள் தரப்பிலும் குறிப்பிட்டளவு இழப்புக்களை ஏற்படுத்தக் கூடியவை. தொடர்ச்சியான ஊடறப்புச் சமர்களின் மூலம் ஜெயசிக்குறுச் சமரையும் எதிர்கொண்ட அதே நேரத்தில் ஓயாத அலைகள் இரண்டின் மூலம் கிளிநொச்சி நகரை முன்பு விடுதலைப் புலிகள் கைப்பற்றி இருந்தார்கள். விடுதலைப் புலிகளின் சிறப்புத் தாக்குதற் படையணிகள் கிளிநொச்சி நோக்கி நகர்த்தப்பட்டதால், மாங்குளம் சிறிலங்காப் படைகளிடம் அப்பொழுது விழ நேரிட்டது.
 
 மாங்குளத்தைக் கைப்பற்றிய பொழுது, சண்டை அனுபவம் குறைந்த சில விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிறிலங்காப் படையினரால் உயிரோடு கைதும் செய்யப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றி பெரும் வெற்றி ஈட்டியதால், மாங்குளத்தின் வீழ்ச்சியானது அன்றைய நிலையில் சிறிலங்காப் படையினருக்கு ஒரு வெற்றியாக அமையவில்லை.
 
 ஆயினும் இச் சம்பவம் சில விடயங்களை விடுதலைப் புலிகளுக்கு உணர்த்தியிருக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு வலிந்த தாக்குதலுக்கான படையணிகளை ஊடறப்புச் சமர்களில் ஈடுபத்தாது விடுதலைப் புலிகள் பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள் என்று கொள்ளலாம். இன்றைக்கு விடுதலைப் புலிகள் வலிமையான தற்காப்புச் சமரைச் செய்யக் கூடிய படையணிகளையும், வலிந்த தாக்குதல் செய்யக் கூடிய படையணிகளையும் கொண்டிருக்கின்றார்கள்.
 
 தற்காப்புச் சமருக்கான படையணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வன்னிக் களமுனையில் சிறிலங்காப் படையினரின் நகர்வுகளை தாமதப்படுத்துவதிலும், தடுத்து நிறுத்துவதில் ஈடுபட்டு வருகின்றன. உத்தரவுக்கு காத்திருக்கும் வலிந்த தாக்குதல் படையணிகள் களம் இறங்குகின்ற போது, சிறிலங்காப் படைகளின் கிளிநொச்சிக் கனவு முற்று முழுதாக சிதைக்கப்படும். படையினர் கிளிநொச்சியை நெருங்கி வருவதால், விடுதலைப் புலிகளின் பாரிய வலிந்த தாக்குதலுக்கான காலமும் தவிர்க்க முடியாதபடி நெருங்கி வருகின்றது.
 
 - வி.சபேசன் (25.09.08
 

StumbleUpon.com Read more...

பூசாரிகளை நோக்கி ஒரு அறைகூவல்!

கடந்த சில மாதங்களிற்கு முன்பு சமஸ்கிருத "மந்திரங்கள்" பற்றி நான் எழுதியிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழர்களின் விழாக்களில் சொல்லப்படும் வடமொழி மந்திரங்கள் எவ்வளவு தூரம் ஆபாசமும் அருவருப்பும் கொண்டவை என்பதை அதில் விளக்கியிருந்தேன்.
 
இந்த வடமொழி மந்திரங்களை மேலும் ஆராய்ந்து அதை ஒரு தொடராகவும் (இந்து மதமும் பெண்களும்) எழுதியிருந்தேன். அண்மையில் அதை ஒரு சிறு நூலாகவும் ஜேர்மனியில் வெளியிட்டிருந்தேன். இந்த நூலினைப் படித்த சில தீவிர மதவாதிகள் என்னை ஒரு பகிரங்க விவாதத்திற்கு வரும்படி அழைத்திருந்தார்கள்.
 
ஜேர்மனியில் உள்ள இந்து ஆலயங்களில் பூசை செய்கின்ற பல பூசாரிகள் விவாதத்திற்கு வருவார்கள் என்றும், எனக்கு அவர்கள் விளக்கம் தருவார்கள் என்றும் அவர்கள் எனக்கு அறியத் தந்திருந்தார்கள். அவர்களுடைய சவாலை நான் ஏற்றுக் கொண்டேன். பூசாரிகள் தங்கள் "பொன்னான" நேரத்தை ஒதுக்கி விவாதத்தில் கலந்து கொள்வதற்காக விவாதத்திற்கான நாளும் இடமும் ஒரு மாதத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
 
கடந்த 7.09.08 ஞாயிற்றுக் கிழமை அன்று ஜேர்மனியில் உள்ள டோட்முண்ட் நகரில் விவாதம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. சரியான நேரத்திற்கு நான் சென்றிருந்தேன். எந்த ஒரு பூசாரியும் அங்கு வரவில்லை. இந்து மதத்தைப் பற்றி எள்ளளவு அறிவு கூட இல்லாத சிலர் அங்கு வந்து என்னுடன் அடாவடித்தனமாக நடக்க முற்பட்டார்கள். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பூசாரிகளின் வருகைக்காக நான் காத்திருந்தேன்.
 
ஒரு மணித்தியாலம் தாமதமாக "ஜெயந்திநாதசர்மா" என்கின்ற ஒரே ஒரு பூசாரி மட்டும் வந்தார். ஆனால் அவரால் என்னுடன் விவாதம் செய்ய முடியவில்லை. மந்திரங்களின் அர்த்தத்தை தன்னால் விளங்கப்படுத்த முடியாது என்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்ட அவர் அதற்கு தம்மிடம் வேறு ஆட்கள் இருப்பதாகவும், அந்த "அறிஞர்கள்" அனைவரும் விரைவில் எனக்கு விளக்கத்தை தருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் அவர் தனக்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டு சென்று விட்டார்.
 
ஏழாம் திகதி அன்று அனைத்து ஆலய பூசாரிகளும் என்னுடன் விவாதம் செய்து மந்திரங்கள் பற்றிய "புனிதமான(?)" விளக்கத்தை எனக்கு தருவார்கள் என்று கூறியதால்தான் நான் அன்றைக்கு அங்கு சென்றிருந்தேன். ஆனால் அங்கே வந்த ஒரேயொரு பூசாரியான ஜெயந்திநாதசர்மாவோ இன்னொரு நாள் விளக்கத்தை தருவதாக சொல்லி விட்டு ஓடி விட்டார்.
 
ஜெயந்திநாதசர்மா சென்ற பின்பும் என்னுடன் ஒரு சிலர் அடாவடித்தனமாக நடந்து கொண்டார்கள். அடியாட்கள் போன்று அவர்களின் நடத்தை இருந்தது. என்னை பேசவிடாது தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
 
ஆனால் ஒரு சிலர் ஆரோக்கியமான முறையில் தமது கருத்துக்களை முன்வைத்தார்கள். அவர்களுடன் நான் நடத்திய நீண்ட உரையாடலிற்குப் பின்பு அவர்களாகவே ஒரு தீர்மானத்தை முன்வைத்தார்கள். அதன்படி ஒரு ஆண்டு கால எல்லைக்குள் ஜேர்மனியில் நடைபெறும் ஆலய வழிபாடு, திருமணங்கள் உட்பட தமிழர் நிகழ்வுகள் அனைத்தும் தமிழில் நடைபெறுவதற்கு தாம் ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள். என்னுடைய நோக்கமும் விருப்பமும் அதுவாகவே இருந்தது.

 

இது உண்மையில் நல்ல ஒரு திருப்பமாக அமைந்தது. இந்து மதத்திற்கு ஆதரவாக வாதாட வந்தவர்களே இந்தத் திட்டத்தை முன்வைத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம். இவர்களின் இந்த முயற்சிக்கு என்னால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவதாக நான் வாக்குறுதி அளித்திருக்கிறேன். ஆனால் இங்கே உள்ள பூசாரிகளை மீறி இவர்களால் வெற்றி பெற முடியுமா என்பது இதில் உள்ள மிகப் பெரிய கேள்வி.
 
இப்பொழுது இதை இங்கே எழுதுவதன் மூலம் இரண்டு விடயங்களை பதிவு செய்ய நினைக்கின்றேன். முதலாவது ஜேர்மனியில் டோட்முண்ட் நகரில் கூடிய தமிழர்கள் ஒரு ஆண்டுக்குள் அனைத்து ஆலயங்கள், திருமணங்கள் போன்றவற்றில் தமிழைக் கொண்டு வரவதற்கு முடிவெடுத்துள்ளார்கள் என்பது.
 
மற்றது ஜெயந்திநாதசர்மா எனக்கு அளித்த வாக்குறுதி. இந்து மத அறிஞர்கள் ஒன்று கூடி பொது இடத்தில் பகிரங்கமாக என்னுடன் விவாதித்து என்னுடைய மந்திரங்கள் பற்றிய நூலுக்கு பதில் தருவார்கள் என்பது. இந்த வாக்குறுதியை இவர்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காக நான் இந்தப் பூசாரிகளை நோக்கி பகிரங்கமான சவாலை விடுக்கின்றேன்.
 
மந்திரங்கள் பற்றியும் அதன் பின்புலம் பற்றியும் நான் எழுதியவை மிகச் சரியானவை. இதை எங்கேயும் எந்த மேடையிலும் வந்து சொல்வதற்கு நான் தயார். இந்து மதம் பற்றி எந்தக் கொம்பனுடன் வேண்டுமென்றாலும் விவாதம் செய்வதற்கு நான் தயார். இது என்னுடைய பகிரங்கமான அறைகூவல்.

 

(குறிப்பு: இந்த அறைகூவல் பத்திரிகை, இணையத்தளங்கள், துண்டுப் பிரசுரங்கள் ஊடாக எதிர்தரப்பிற்கு அறிவிக்கப்படுகின்றது)

 

- வி.சபேசன்

 

http://www.webeelam.net/?p=328

StumbleUpon.com Read more...

இந்து மதமும் பெண்களும் (பாகம் 9)

இந்தியாவின் மண்ணின் மைந்தர்களிடம் இருந்த பெண் தெய்வ வழிபாட்டை சிறுமைப்படுத்தும் நோக்கில் ஆரியர்கள் பெண்களை சிறுமைப்படுத்தினார்கள் என்பதை கடந்த பாகத்தில் பார்த்தோம்.

இன்றைக்கு வரைக்கும் தமிழ் மக்களிடம் இந்தப் பெண் தெய்வ வழிபாடு முக்கிய இடம் பிடித்திருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். எத்தனையோ கிராமங்களின் காவல் தெய்வமாக பெண் தெய்வங்களே இருக்கின்றன. பல இடங்களில் "அம்மன் வழிபாடு" ஒரு மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தமிழர்களை கவனித்தால் கூட அங்கும் பெண் தெய்வ வழிபாடு இருப்பதை பார்க்க முடியும். ஈழத்தில் மடுமாதாவும் தமிழ் நாட்டில் அன்னை வேளாங்கண்ணியும் மிக அதிகமாக வழிபடப்படுவதை கவனிக்கலாம்.

இன்றைய நிலையே இப்படி இருக்கின்ற போது, கொற்றவை காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லிப் புரிய வேண்டியது இல்லை. இப்படி உச்சம் பெற்றிருந்த பெண் தெய்வ வழிபாட்டை இல்லாது செய்வதற்காக ஆரியர்கள் பெண்களை மிக மிக இழிவுபடுத்தினார்கள்.

நாம் இந்தத் தொடர் முழுவதும் இரண்டு விடயங்களைப் பார்த்தோம். இந்து மதம் எப்படியெல்லாம் பெண்ணை இழிவுபடுத்துகிறது என்பதையும், ஏன் இழிவுபடுத்துகிறது என்பதையும் பார்த்தோம்.

எப்படியெல்லாம் இழிவுபடுத்துகின்றன என்பதை பல்வேறு சான்றுகளோடு தந்திருக்கிறேன். இந்தச் சான்றுகள் எவையும் எந்த ஒரு கடவுள் மறுப்பு நூல்களில் இருந்து பெறப்பட்டவை அல்ல என்பதை இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அனைத்து சான்றுகளுமே இந்து மதத்தை சேர்ந்த மத நம்பிக்கையாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களில் இருந்தே பெறப்பட்டன.

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். மனுதர்மத்திலிருந்து சில தரவுகளை தந்திருக்கிறேன். இவைகள் 1919ஆம் ஆண்டு இளையவல்லி கௌசிக இராமானுஜசாரியார் என்பவரால் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட "மனுதர்ம சாஸ்திரம்" என்னும் நூலில் இருந்து பெறப்பட்டவை. சமஸ்கிருதபாசையில் இருப்பதால், இதனால் சிலர் மட்டுமே பயன்பெறுகிறார்கள் என்றும், அதனால் எல்லோரும் பயன்படும் வண்ணம் தமிழில் மொழி பெயர்ப்பதாக அவர் எழுதியுள்ளார். இந்த மொழி பெயர்ப்பு சரியானது என்று சமஸ்கிருத பண்டிதராகிய வே. வேதாந்தசாரியார் என்பவர் உறுதி மொழி வழங்கி கையொப்பம் இட்டுள்ளார்.

திராவிட கழகங்கள் போன்ற கடவுள் மறுப்பு இயக்கங்கள் வெளியிட்ட நூல்களில் இருந்து தரவுகளைப் பெறும்போது, அந்தத் தரவுகள் குறித்து கடவுள் நம்பிக்கையாளர்கள் வழமை போன்று சந்தேகம் எழுப்பக்கூடும் என்பதனால், அவ்வாறான நூல்களை தவிர்த்து முற்று முழுதாக கடவுள் நம்பிக்கையாளர்கள் எழுதிய நூல்களை மட்டுமே என்னுடைய தொடருக்கு பயன்படுத்தியுள்ளேன். அதுவும் சமஸ்கிருதம் நன்கு அறிந்த பார்ப்பனர்கள் எழுதிய நூல்களையே பயன்படுத்தியிருக்கிறேன்.

ஆகவே இதிலே உள்ள தரவுகள் குறித்து கடவுள் நம்பிக்கையாளர்கள் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

திருமணத்தில், இறுதிச் சடங்கில் சொல்லப்படுகின்ற மந்திரங்கள் பெண்ணை மிகவும் இழிவுபடுத்துவதன் காரணத்தை ஆராயப் புகுந்ததில் இந்தத் தொடர் உருவாகியது. இந்து மதத்தின் கருத்தின்படி பெண் என்பவள் இழி பிறப்பு. சூத்திரர்கள் என்று தம்மால் அடையாளப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து தமது பெண் துணைகளைப் பெற்றதாலும், பெண் தெய்வ வழிபாட்டை சிறுமைப்படுத்த முனைந்ததாலும், இந்த கருத்தை ஆரிய இந்துமதம் உருவாக்கியது.

மந்திரங்கள் புனிதமானவை என்ற உறுதியான கருத்துருவாக்கம் பார்ப்பனர்கள் மனதில் இன்றும் இருப்பதால், இந்த மந்திரங்களை இன்று வரை தொடர்கிறார்கள். புதிய அர்த்தங்களைக் கொடுத்து தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொண்டு தொடர்கிறார்கள். மற்றவர்களையும் சமாதானப்படுத்துகிறார்கள்.

தாயை கொச்சைப் படுத்துகின்ற மந்திரம் பற்றி ஒருவர் விளக்கம் எழுதியிருந்தார். யார் எவராக வேண்டும் என்றாலும் இருக்கலாம், தாய் என்ற காரணத்திற்காக தவறுகள் மறைக்கப்படக் கூடாது என்ற பக்குவத்தை தருகின்ற உயர்ந்த தத்துவத்தை சொல்கின்ற மந்திரமாம் அது. இப்படியான சமாதானங்களை சொல்லி தம்மையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவர் ஒரு பெண்ணைப் பார்த்து "வர்றியா" என்று அழைத்தால், அந்த "வர்றியா" என்பதன் சரியான அர்த்தம் குறித்து நாம் ஒரு முடிவுக்கு வருவதற்கு அகப் புறச் சூழ்நிலைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். அழைத்தவர் யார், அவர் எப்படிப்பட்டவர், எந்த நேரத்தில் அழைத்தார் போன்றவைகளை எல்லாம் ஆராய வேண்டும்.

"வர்றியா" என்று அழைத்தவர் நான் சும்மா பேசுவதற்குத்தான் அழைத்தேன் என்று விளக்கம் சொல்வது போன்று மந்திரங்கள் குறித்த இந்த பார்ப்பனர்கள் இன்றைக்கு தருகின்ற விளக்கங்கள் இருக்கின்றன. அதனாற்தான் இந்த மந்திரங்களை கொண்டிருக்கின்ற இந்து மதம் பெண்கள் பற்றி என்ன சொல்கிறது என்பதை ஆராய வேண்டி தேவை ஏற்படுகிறது.

மந்திரங்கள் நேரடியாகவே அர்த்தங்களை தெளிவாகச் சொல்கின்றன. அப்படியிருந்தும் மந்திரங்களை காப்பாற்றுவதற்கு பார்ப்பனர்கள் புதிய அர்த்தங்களை தர முனைகிறார்கள். ஆனால் நேரடியான அர்த்தமும் சரி, அது பற்றிய பின்புல ஆய்வும் சரி பார்ப்பனர்கள் தருகின்ற புதிய அர்த்தங்கள் தவறானவை என்று நிரூபிக்கின்றன.

ஆகவே தமிழர்கள் பார்ப்பனர்களை வைத்து புரியாத மொழியில் செய்கின்ற சடங்குகளை புறக்கணிக்க முன்வர வேண்டும். சடங்குகள் செய்துதான் தீரவேண்டும் என்றால், அவற்றை தமிழில் செய்ய வேண்டும். இதுவே மானமுள்ள செயலாகும். இல்லை, உங்களுடைய தாயையும், சகோதரியையும், மனைவியையும் நீங்கள் கொச்சைப்படுத்த விரும்பினால், தாராளமாக சமஸ்கிருதத்தில் தொடர்ந்து சடங்குகளை செய்யுங்கள்.

இந்த தொடரை நீடித்து இந்து மதம் பெண்கள் பற்றி என்ன சொல்கிறது என்பதை மேலும் தோலுரித்துக் காட்ட முடியும். ஆனால் இதுவரை அம்பலப்படுத்தியது போதும் என்று நினைக்கிறேன். இந்து மதத்தில் அம்பலப்படுத்து வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. முக்கியமாக பகவத் கீதை.

இந்து மதம் இடையில் வந்த மதம் என்பதற்கும் மற்றைய மதங்களில் இருந்த மக்கள் அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் இந்து மதத்தில் சேர்க்கப்பட்டார்கள் என்பதற்கும் பகவத் கீதையே ஒரு ஆதாரம். தமிழ் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் கண்டிக்கும் வர்ணாச்சிரமத்தை போற்றிப் பாதுகாக்கும் மனித குல விரோத நூலாக பகவத் கீதை இருக்கிறது.

அடுத்த தொடரில் பகவத் கீதையை வேறொரு கோணத்தில், ஆனால் சரியான கொணத்தில் காட்டப் போகிறேன். ஆவலோடு காத்திருங்கள்.
 

StumbleUpon.com Read more...

இந்து மதமும் பெண்களும் (பாகம் 8)

இந்து மதம் பெண்களை மிருகங்களை விடக் கேவலமாக கருதுவதை இதுவரை சான்றுகளோடு பார்த்த நாம், அதற்கான காரணத்தை இனிப் பார்ப்போம்.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அவைகள் ஆரியர்களின் வருகையோடு சம்பந்தப்பட்டவை. மத்திய ஆசியாவில் இருந்து பாலைவனங்களையும், மலைகளையும் கடந்து நெடிய பயணம் மேற்கொண்டு இந்தியாவிற்கு ஆரியர்கள் வந்த போது, அவர்கள் பெண்களை அழைத்து வரவில்லை.

எந்த மக்களை அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் ஆரியர்கள் இழிவுபடுத்தினர்களோ, அந்த மக்களிடம் இருந்துதான் தமது பெண் துணைகளை பெற்றுக் கொண்டார்கள். அந்த வகையில்தான் பெண்களும் சூத்திரர்களும் ஒன்று என்று இந்து ஆரிய வேதங்கள் குறிப்பிடுகின்றன.

ஆரியர்கள் இந்தியாவிற்கு நுழையும் போது பெண்களை அழைத்து வரவில்லை என்பதை பல வரலாற்று அறிஞர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளார்கள். இந்த ஆய்வுகளை ஆரியர்களின் புராணங்களும் மறைமுகமாக ஒத்துக் கொள்கின்றன.

புராணங்களிலும் வேதங்களிலும் மன்னர்களும், ரிசிகளும் தமது துணைகளை பழங்குடி மற்றும் சூத்திரர் என்று வகைப்படுத்தப்பட்ட மக்களிடம் இருந்தும் பெற்றுக் கொள்கின்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுவதையும் கவனிக்கலாம். ஆரியர்களின் வெற்றியைப் பாடும் இராமாயணத்தின் கதாநாயகியாகிய சீதையும் மண்ணில் இருந்து தோன்றியவள் என்பதையும் இங்கு நினைவுபடுத்துகின்ற பொழுது, இவைகள் சொல்கின்ற உட்கருத்துக்கள் புரியும்.

இப்படி தாம் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தியவர்களிடம் இருந்து பெற்ற பெண்களையும் சூத்திரர்களைப் போன்றே இழிவாக வரையறுக்கு வேண்டிய தேவை ஆரியர்களுக்கு உருவாகிவிட்டது. இதை விட பெண்களை இழிவுபடுத்துவதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது, இந்தியாவில் இருந்த வழிபாட்டு முறைதான் அந்தக் காரணம்.

உலகின் முதலாவது சமூகம் தாய் வழிச் சமூகமாகவே இருந்தது. பெண்களை மதித்து, பெண்களுக்கு கீழ்படிந்து, பெண்களை தெய்வமாக வழிபட்ட சமூகமாகவே அன்றைய சமூகம் இருந்தது. பின்பு ஆணாதிக்க சமூகம் உருவான போது பெண்களை மதிப்பதும், வணங்குவதும் இல்லாது போயின அல்லது குறைந்து போயின.

அதே வேளை பெண்களை சமமாக மதித்தார்களோ இல்லையோ, பெண் தெய்வங்களை முதற் தெய்வமாக வழிபடுவது மட்டும் பல இடங்களில் தொடர்ந்தது. பண்டைய நாகரீகங்களில் பெண் தெய்வ வழிபாடுகளே முதன்மை பெற்றிருந்தன. அதே போன்று சிந்து வெளிநாகரீகத்திலும் பெண் தெய்வ வழிபாடு உச்சம் பெற்றிருந்தது.

சிந்து வெளிநாகரீகத்தை கண்டுபிடித்த தொல்லியல் வல்லுனரான சேர் ஜோன் மார்ஸல் சிந்து வெளியில் பெண் தெய்வ வழிபாடு முதன்மையானதாக இருந்ததற்கான சான்றுகள் பலவற்றை கண்டுபிடித்தார். உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம். ஒரு இலச்சனையில் இரண்டு அரச மரக் கிளைகளுக்கு இடையில் ஒரு பெண் தெய்வம் நிற்கின்றது. அந்தப் பெண் தெய்வத்தை வணங்கியபடி மக்களும் மிருகங்களும் நிற்கின்றன. இப்படி எல்லோரும் வணங்கும் முழு முதற் தெய்வமாக பெண் தெய்வமே இருந்தது என்பதற்கு சான்றாக பல ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சிந்து வெளிநாகரீகத்தை தொடர்ந்து ஆராய்ந்தவர்களும் சிந்து வெளியில் பெண் தெய்வ வழிபாட்டு சமூகமே இருந்தது என்பதை உறுதிப்படுத்தினார்கள்.

அப்படியே தமிழகம் நோக்கி எமது பார்வையை திருப்பினால், அங்கும் பெண் தெய்வ வழிபாடே முதன்மை பெற்றிருந்ததைக் காணலாம். சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்தை "பெருங்கற்படைக் காலம்" என்று அழைப்பார்கள். இக் காலப் பகுதியில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டுத் தெய்வமாக "கொற்றவை" என்கின்ற பெண் தெய்வம் விளங்கி வந்தது.

பெருங்கற்படைக் காலத்து மக்கள் ஆநிரை கவர்கின்ற எயினர்களாகவும், வேட்டுவர்களாகவும் வாழ்ந்தனர். இந்த மக்கள் ஆநிரை கவரச் செல்கின்ற போதும், வேட்டைக்கு செல்கின்ற போதும் முதலில் கொற்றவையை வணங்கிய பின்பே செல்வர். இவர்களுடைய அனைத்து சடங்குகளிலும் கொற்றவை வழிபாடு இடம்பெற்றிருந்தது.

சிந்து வெளிநாகரீகத்தில் மக்களாலும், மிருகங்களாலும் வணங்கப்படுவது போன்று காட்சி தருகின்ற பெண் தெய்வம் ஆநிரை கவர்கின்ற எயினர்கள் வணங்கிய கொற்றவையா என்பது ஆய்வுக்கு உரியது.

சங்க இலக்கியங்கள் கொற்றவையை முருகனின் தாய் என்று குறிப்பிடுகின்றன. முருகனைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களிலும் "கொற்றவை சிறுவ" என்றும் "மலைமகள் மகனே" என்றும் கொற்றவை முதன்மைப்படுத்தப்படுகிறாள். ஆனால் சங்க காலத்தில் கொற்றவை வழிபாடு அருகிவிட்டது. கொற்றவையை வைத்து செய்யப்பட்ட சில வழிபாடுகள் சங்க காலத்தில் முருகனைக் வைத்து செய்யப்பட்டதை காணக் கூடியதாக இருக்கிறது.

சங்க காலத்தில் தமிழர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்களவு ஆரியர்களின் செல்வாக்கு ஊடுருவி விட்டதை இங்கே குறிப்பிட வேண்டும். அதுவரை தாய்வழிச் சமூகமாக இருந்த தமிழர்கள் அதன் பிறகு பெண் தெய்வங்களை தவிர்த்துக் கொண்டு, ஆண் தெய்வங்களை வழிபடத் தொடங்கினார்கள்.

இங்கே ஒரு விடயத்தை நாம் கவனிக்க வேண்டும். ஏறக்குறைய ஒரு ஆயிரம் ஆண்டுகள் கொற்றவையை மக்கள் வணங்கினார்கள். பின்பு கொற்றவை இருந்த இடத்தில் முருகன் வந்து விடுகின்றான். அப்படி முருகனைக் கொண்டு வருவதற்கு "கொற்றவையின் மகனே முருகன்" என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. சில நூறு ஆண்டுகள் கழிந்த பின்பு முருகன் இருந்த இடத்தில் "ஸ்கந்தன்" வந்து உட்கார்ந்து கொள்கிறான். இங்கே "முருகனும் ஸ்கந்தனும் ஒன்றுதான்" என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

(பெண் தெய்வ வழிபாட்டுச் சமூகமாக இருந்த தமிழர்கள், பின்பு ஆண் தெய்வ வழிபாட்டுச் சமூகமாக மாறி, பின்பு ஆரிய வழிபாட்டுச் சமூகமாக மாறிவிட்டதை கொற்றவை, முருகன், ஸ்கந்தன் என்கின்ற மூன்றையும் வைத்து இலகுவாக புரிந்து கொள்ளமுடியும்.)

இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். ஆண் தெய்வ வழிபாட்டினை உடைய ஆரியர்கள் இந்தியாவிற்குள் தமது தெய்வங்களை பரப்புவதற்காக, அந்த மண்ணின் மக்களுடைய தெய்வங்களை இழிவுபடுத்தினார்கள். பெண் தெய்வ வழிபாட்டை கேவலப்படுத்தும் நோக்கோடு, பெண்களையே கேவலப்படுத்தினார்கள். பெண் தெய்வங்கள் பற்றி காமம் சார்ந்த கதைகளையும் புனைந்தார்கள்.

ஆரம்பத்தில் ஆரியர்கள் பெண்கள் விடயத்தில் ஒரு சமரசப் போக்கை கடைப்பிடித்ததை சில இடங்களில் காணக் கூடியதாக இருக்கிறது. இந்திய மண்ணிலே பெண்கள் கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். சங்க இலக்கியங்களை படைத்த புலவர்களில் ஏறக்குறைய 50 பேர் பெண்கள் என்பதை இங்கே நினைவில் கொள்க. பெண்கள் கல்வி கற்றவர்களாக இருந்ததோடு மக்கள் தமது முதற் தெய்வங்களாக பெண் தெய்வங்களையும் வழிபட்டார்கள்.

ஆரியர்களும் இவைகளைப் பார்த்து "பெண் ஆணை விட நான்கு மடங்கு அறிவானவள்" என்று கூட தமது வேதங்களில் எழுதினார்கள். ஆணை விட பெண் பலம் மிக்கவள் என்றும் எழுதினார்கள். பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்த ஆதே ஆரியர்கள் தமது புராணத்தில் வாதில் ஆண்களை வென்ற அறிவு மிக்க ஒரு பெண்ணையும் படைத்திருக்கிறார்கள்.

உலகில் இருந்து வந்த அனைத்து அறிஞர்களையும் வாதம் செய்து வென்று, தன்னுடைய துணையை தானே தேர்ந்தெடுத்து, தன்னுடைய துணைக்கு வழிகாட்டியாக இருந்து, பின்பு கணவனோடு சேர்ந்து துறவும் மேற்கொண்ட மைத்ரேயி என்கின்ற ஒரு பெண் பாத்திரமும் வேதங்களில் வருகிறது. ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது, அங்கே இருந்து அறிவு மிக்க பெண்களைக் கண்டு இப்படி ஒரு பாத்திரத்தை அவர்கள் தமது கதைகளில் உருவாக்கியிருக்கக் கூடும்.

ஆனால் பின்பு மெது மெதுவாக அவர்கள் மைத்ரேயிக்களை இல்லாது செய்து, ஆணுக்கு அடங்கி நடக்கின்ற முட்டாள்தனமான சீதைகளையும் நளாயினிகளையும் உருவாக்கினார்கள். பெண்களுக்கு கல்வியை தடை செய்து அடக்கி ஒடுக்கினார்கள்.

இதற்கான காரணம் தமது மதத்தை (ஆண் தெய்வ வழிபாடு) இந்தியாவில் பரப்புவதுதான். அதற்கு தடையாக நின்ற பெண் தெய்வங்களையும், பெண்களின் அறிவையும் இழிவு செய்து இல்லாது ஒழித்தார்கள். ஒழிக்க முடியாத சில இடங்களில் சமரசம் செய்து கொண்டார்கள். பெண் தெய்வங்களை தம்முடைய ஆண் தெய்வங்களுக்கு அடங்கி நடக்கின்ற மனைவிகளாகவும், துணைவிகளாகவும் மாற்றினார்கள்.

(அடுத்த பாகத்துடன் முடிவுறும்)
 
 

StumbleUpon.com Read more...

இந்து மதமும் பெண்களும் (பாகம் 7)

இந்து மதம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறது என்று சிலர் புருடா விட்டுக் கொண்டு திரிவார்கள். இன்றைக்கு உள்ள பெரிய மதங்களில் பெண் வழிபாடு உள்ள ஒரே மதம் இந்து மதம் என்று பெருமை வேறு பேசுவார்கள். இவர்கள் வணங்குகின்ற இந்தப் பெண் தெய்வங்களையே இந்து மதம் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதை அறிந்தால் இவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்.

வைணவத்தில் உள்ள வடகலை, தென்கலை பிளவிற்கு காரணமும் பெண்தான் என்று சொல்லியிருந்தேன். அப்படிச் சொன்னதற்கான காரணத்தை இனிப் பார்ப்போம். வடகலை, தென்கலை என்கின்ற இந்த இரண்டு பிரிவுகளிலும் ஏறக்குறைய 40 விதமான வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த இரண்டு பிரிவினரும் நிறத்தில் கூட சற்று வேறுபட்டிருப்பார்கள் என்று கூட சிலர் சொல்வது உண்டு.

வடகலை, தென்கலை வேறுபாடுகள் உருவாவதற்கான காரணங்களாக பிரபந்தங்கள் பற்றிய சர்ச்சை, ராமானுஜர் மற்றைய சாதியனரையும் பூணுல் அணிவித்து பார்ப்பனர் ஆக்கியதால் உருவாகிய வேறுபாடுகள் போன்றவைகளை காரணங்களாக சொல்வார்கள். ஆனால் இவைகளை விட இவர்களுக்குள் பிளவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பெருமாளின் துணைவியாராகிய பிராட்டியார் பற்றிய சர்ச்சைதான்.

வைணவர்கள் வணங்கும் பெருமாளோடு பக்கத்திலேயே பிராட்டியார் அமர்ந்திருக்கிறார். இந்தப் பிராட்டியாருக்கு பக்தர்களுக்கு மோட்சத்தை வழங்கும் சக்தி இருக்கிறாதா என்பதில்தான் வைணவர்களுக்குள் சர்ச்சை ஆரம்பமானது. "பரமாத்மா", "ஜீவாத்மா" போன்ற சொற்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். இராமாயணத்தை போதிக்கின்ற சிலர் இராமனை "பரமாத்மா" என்றும் சீதையை "ஜீவாத்மா" என்றும் கூறுவதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

பரமாத்மா என்று கடவுளையும் ஜீவாத்மா என்று மனிதப்பிறப்பையும் சொல்வார்கள். பெருமாளின் துணைவியாக இருந்தாலும், பிராட்டியார் ஒரு ஜீவாத்மா மட்டுமே என்பது ஒரு பிரிவினரின் வாதம். "பிராட்டியாரால் பக்தர்களுக்கு மோட்சத்தை வழங்க முடியாது, அவர் ஒரு பெண், பெண்ணிற்கு மோட்சம் வழங்கும் சக்தி இல்லை, வேண்டுமென்றால் பக்தருக்கு மோட்சம் வழங்கச் சொல்லி பெருமாளிடம் சிபாரிசு செய்யலாம்" என்ற கருத்தோடு அவர்கள் உறுதியாக நின்றார்கள்.

கடவுளின் மனைவியாக இருப்பதால், அவருக்கும் கடவுளின் அம்சம் வந்துவிடுகிறது என்றும், அதனால் அவராலும் பக்தர்களுக்கு மோட்சம் வழங்க முடியும் என்று மறுபிரிவினர் வாதிட்டார்கள். இப்படி ஆரம்பித்த பிரச்சனை வடகலை, தென்கலை என்று பிளவில் போய் முடிந்தது.

கடவுளுக்குப் பக்கத்தில் துணைவியாக அமர்ந்திருந்தாலும், பெண் என்பதால் அவருக்கு மோட்சம் வழங்கும் சக்தி உண்டா என்ற விடயத்தில் இந்து மதத்தால் ஒருமித்த கருத்தை காண முடியவில்லை என்பதைத்தான் இங்கு கவனிக்க வேண்டும். ஒரு புறம் அகிலாண்டேஸ்வரி, லோகநாயகி என்றெல்லாம் பெண் தெய்வங்களை புகழ்ந்து கொண்டே, மறுபுறம் ஒரு மோட்சம் வழங்குகின்ற சக்தி கூட இல்லை என்று சொல்லப்படுகின்ற நிலையில்தான் இந்தப் பெண் தெய்வங்களை இந்து மதம் வைத்திருக்கிறது.

ஆண் தெய்வங்களால் அழிக்க முடியாத அசுரர்களை பெண் தெய்வங்கள் அழித்ததாக புராணங்கள் இருக்கின்றனவே என்ற கேள்வி இந்த இடத்தில் உங்களுக்கு வரலாம். அந்தப் புராணங்களை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். பெண் தெய்வங்கள் ஆண் தெய்வங்களின் பலத்தைப் பெற்றுத்தான் அசுரர்களை அழித்திருப்பார்கள்.

பெண் தெய்வங்களுக்கு என்றே பெரும் எடுப்பில் கொண்டாடப்படுகின்ற நவராத்திரி பற்றிய புராணக் கதையிலும் இந்த விடயம் அடங்கியிருக்கிறது. பெண்ணால் மட்டுமே கொல்லப்படக் கூடிய வரம் பெற்ற மகிசாசுரனை அழிப்பதற்கு பராசக்தி தன்னுடைய பலத்தோடு மட்டும் செல்லவில்லை. ஒரு பெண்ணாகிய அவளால் அது முடியாது என்று, பராசக்தி அனைத்து ஆண் தெய்வங்களின் பலத்தையும் கேட்டுப் பெறுகிறாள். சிவன், விஸ்ணு, பிரம்மன், இந்திரன், தேவர்கள் என்று அனைத்து ஆண்களின் பலத்தையும் பெற்று மகிசாசுரனை அழிக்கிறாள். பெண்ணிற்கு தனித்து எந்த சக்தியும் இல்லை என்பதுதான் இங்கு உணர்த்தப்படுகிறது.

ஆண் தெய்வத்தோடு போட்டி போட்டு பெண் தெய்வங்கள் தோற்றுப் போன கதைகளை சொல்கின்ற ஓராயிரம் புராணங்கள் இந்து மதத்தில் உண்டு. பெண்கள் பொதுவாக நடனத்தில், நளினத்தில் வல்லவர்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் அப்படியான நடனத்திலும் சிவன் பார்வதியை வென்றுவிடுகிறார். அதுவும் எப்படி சிவன் வெற்றி பெறுகிறார் தெரியுமா?

சிவனிற்கும் பார்வதிக்கும் நடனப் போட்டி உச்சக் கட்டத்தை அடைகிறது. பார்வதி வெற்றி பெற்றுவிடும் நிலையில் இருக்கிறார். அப்பொழுது சிவன் வலதுகாலை நிலத்தில் ஊன்றியபடி இடது காலை மேலே தூக்கினார். நடனத்தில் ஒரு வகை என்று பார்வதி நினைத்துக் கொண்டிருக்க சிவனுடைய இடது கால் மேலும் உயர்ந்து கொண்டே போனது.

இடது காலை மேலே உயர்த்தி தன்னுடைய ஆண் குறி பார்வதியின் கண்ணில் படுவது போன்று சிவன் செய்தார். பார்வதி அதைக் கண்டு திகைத்துப் போய் செய்வதறியாது நின்றார். பார்வதி அதிர்ச்சியில் நிற்க, சிவன் இடது காலை தூக்கியபடியே தொடர்ந்து ஆடி வெற்றி பெற்றார். நடராஜர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

பெண் பலவீனமானவள் என்பதையும், பெண்ணை தோற்கடிக்க எந்த வழியையும் கையாளலாம் என்பதையும் இந்து மதம் இந்தப் புராணக் கதையின் மூலம் சொல்கிறது. தன்னுடைய கணவனின் ஆண்குறியைக் கண்டு செய்வதறியாது சிலை போல் நின்ற அதே பார்வதி ஒரு குதிரையின் குறியைக் கண்டு விரகதாபத்தில் துடித்த கதையும் உண்டு.

ஒரு முறை பார்வதி ஒரு குதிரையின் நீளமான குறியைக் கண்டு விட்டார். அதைக் கண்டு மோகித்து விரகதாபத்தில் பார்வதி துடித்தார். பார்வதி நிலையை உணர்ந்த சிவன் தானே ஒரு குதிரையாக மாறி பார்வதியை புணர்ந்து, அவருடைய விரகதாபத்தை தீர்த்து வைத்தார்.

இந்து மதம் சாதரண மானிடப் பெண்களைத்தான் இழிவுபடுத்துகிறது என்று யாரும் நினைத்து விட வேண்டாம். தெய்வங்கள் என்றாலும் அவைகள் பெண்களாக இருக்கின்ற போது, அந்தப் பெண்களையும் சேர்த்தே இந்து மதம் இழிவுபடுத்தி வந்திருக்கிறது.

பெண் தெய்வம் என்பவள் இறந்தவர்களுக்கு மோட்சம் வளங்கும் சக்தி அற்றவள், ஆணின் பலம் இல்லாமல் எதையும் செய்ய முடியாதவள், ஆண் தெய்வத்திற்கு அடங்கி இருக்க வேண்டியவள், கணவனிடமோ, குதிரையிடமோ, அல்லது வேறு யாரிடமோ ஆண்குறியை கண்டு விட்டால் வாய்பிளந்து நிற்பவள்…. இப்படித்தான் இந்து மதம் பெண் தெய்வங்களை "போற்றுகிறது".

பெண் தெய்வங்களுக்கு என்று நடத்தப்படுகின்ற விழாக்கள் கூட அருவருப்பான ஆணாதிக்க சிந்தனையை கொண்டவைதான். விழாக்களுக்கான காரணங்களை தேடிப் பார்த்தால், அவைகள் புரியும். எத்தனையோ கோயில்களில் இன்றைக்கும் ஆண் தெய்வங்களுக்கு விசேடமான நெய்வேத்தியமும், பெண் தெய்வங்களுக்கு மிகச் சாதரண படையலும் படைக்கப்படுகின்றன.

பெண் தெய்வங்களையே இந்து மதம் இழிவு படுத்துகின்ற போது, சாதரண மானிடப் பெண்களை மந்திரங்களிலும், நடைமுறையிலும் இழிவுபடுத்துவது குறித்து இனியும் உங்களுக்கு ஏதும் ஆச்சரியம் உண்டா?

பெண் பற்றி இந்து மதம் என்னவெல்லாம் சொல்கிறது என்பதை இதுவரை ஓரளவு பார்த்தோம். பெண் மீது இந்து மதம் இப்படி வெறுப்பை கொட்டுவது ஏன் என்பதை இனிப் பார்ப்போம்.

தொடரும்……
 

StumbleUpon.com Read more...

இந்து மதமும் பெண்களும் (பாகம் 6)

புராணங்களை கதைகள் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அந்தக் கதைகளின் அடிப்படையில்தான் தமது சடங்குகளையும் விழாக்களையும் இந்துக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து மதம் என்பது வேதங்கள், சாத்திரங்கள், புராணங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் ரிக், யதூர் போன்ற வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. அதன் மூலம் இந்த வேதங்கள் பெண்களை இழிவுபடுத்துவதைக் கண்டோம்.

மனுதர்ம சாத்திரத்தையும் உதாரணம் எடுத்துப் பார்த்தோம். பகவத்கீதையையும் உதாரணத்திற்கு எடுத்தோம். பின்பு ஒரு புராணக் கதையையும் உதாரணத்திற்கு எடுத்தோம். எல்லாமே பெண்களை இழிவுபடுத்துகின்றன. பெண் தாழ்ந்த பிறப்பு என்று சொல்கின்றன. கற்பு அற்றவர்கள் என்கின்றன. தோசம் உள்ளவள் என்கின்றன.

நாம் பார்த்த புராணக் கதையின் படி பெண்ணினுடைய தோசம்தான் மாதவிடாயாக வெளிப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் தீட்டு என்று சொல்லி தள்ளி வைப்பதன் காரணம் இதிலிருந்துதான் வந்தது.

பெண்களை மூன்று நாட்களும் தள்ளி வைப்பதற்கு இன்றைக்கு சிலர் அசுத்தம், ஆரோக்கியம், அது, இது என்று விஞ்ஞான விளக்கங்கள் தருவார்கள். ஆனால் அவைகள் உண்மை இல்லை.

மேற்குநாட்டுப் பெண்கள் வீட்டில் தள்ளி இருப்பது இல்லை. அங்கு யாரையும் எந்தக் கிருமியும் பாதிக்கவில்லை. இன்றைக்கு பெண்கள் தமது மாதவிடாய் காலங்களிலும் பல ஆயிரம் பேர் வேலை செய்யும் தொழிற்சாலைகளிற்கு சென்று வேலை செய்கின்றார்கள். அங்கும் யாரையும் எந்தக் கிருமியும் பாதிக்கவில்லை.

ஆனால் இன்றைக்கும் மாதவிடாய் உள்ள ஒரு இந்துப் பெண்ணால் ஒரு கோயிலிற்கு சென்று வழிபட முடியாது. கோயிலில் யாரும் இல்லாத நேரத்தில் கூட போக முடியாது. தீட்டு என்று சொல்லி தடுத்து விடுவார்கள். மாதவிடாய் என்பது பெண்ணினுடைய தோசத்தின் வெளிப்பாடு என்று இந்து மதம் உறுதியாக நம்புவதே இதற்கு காரணம். ஒரு புராணக் கதை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு இது ஒரு உதாரணம்.

புராணங்களை வெறும் கதைகள் என்று தூக்கி எறியாது, அதை உண்மை என்று நம்பி தொடர்ந்தம் அவைகளை இந்து மதம் கடைப்பிடித்து வருவதாலேயே நாமும் அது குறித்து பேச வேண்டி உள்ளது. இந்து மதம் சொல்வதும் செய்வதும் அனைத்தும் பெண்களுக்கு எதிரானதே.

இந்த மதத்தில் பெண்ணை வைத்து ஒரு பிளவு ஏற்பட்டதாக சொல்லியிருந்தேன் அல்லவா? அதை இப்பொழுது பார்ப்போம்.

இந்து மதத்தில் பல பிரிவுகள் இருப்பதாக சொல்வார்கள். அதிலே சைவம், வைணவம் போன்றவைகள் முக்கியமானவை. சைவத்திலும் வீரசைவம், சிந்தாந்த சைவம் என்ற பிரிவுகள் இருக்கின்றன. வைணவத்தில் தென்கலை, வடகலை என்று பிரிவுகள் இருக்கின்றன.

வீரசைவம், சைவசிந்தாந்தம் போன்ற பிரிவுகளுக்கிடையில் பெரியளவில் சச்சரவுகள் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் வடகலைக்கும் தென்கலைக்கும் நடந்த பிரச்சனைகள் உலகப் பிரசித்தம். இன்றுவரை பல இடங்களில் இவர்களுக்குள் சர்ச்சைகள், பகையுணர்வுகள் உண்டு. ஒரு பிரிவினர் மற்ற பிரிவினருக்குள் திருமணம் செய்து கொள்வது என்பது வெகு வெகு குறைவு.

வடகலை, தென்கலை பிரிவுகளை நாமங்களை வைத்துத்தான் இனம் காண்பார்கள். வடகலையினர் "Y" வடிவத்திலே நாமம் கீறி நடுவில் ஒரு கோடு போடுவார்கள். தென்கலையினர் "U" வடிவத்தில் நாமம் கீறி ஒரு கோடு போடுவார்கள்.

இந்த நாமம் பற்றி இரு தரப்பும் தருகின்ற விளக்கம் ஒன்றுதான். நாமத்தின் இரு கரையும் உள்ள கோடுகள் பெருமாளின் பாதங்களாம். இரண்டு கோடுகளும் பெருமாளின் பாதங்கள் என்றால், நடுவில் சிவப்புக் வண்ணத்தில் உள்ள குறி எதுவென்று உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்.

சைவர்கள் ஆண்குறியை லிங்கம் என்று வணங்குவார்கள். வைணவர்கள் நெற்றியில் பூசுவார்கள். இதை பின்பு சந்தர்ப்பம் வரும் போது தனியாகப் பார்ப்போம்.

இந்த வடகலை, தென்கலை நாமம் பற்றிய ஒரு சர்ச்சை வெகுபிரசித்தம். சிறிரங்கம், காஞ்சிபுரம் பெருமாள் கோயில்களில் நின்ற யானைகளுக்கு எந்த நாமம் போடுவது என்ற பிரச்சனை வந்து அது நீதிமன்றத்தில் நீண்ட காலம் இழுபட்டது.

வெள்ளைக்காரர் காலத்தில் தொடங்கிய வழக்கு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் தொடர்ந்தது. சில நேரங்களில் ஒரு நாமத்திற்கு சார்பாக தீர்ப்பு வரும். ஆனால் அதற்குள் அந்த யானை இறந்து போயிருக்கும். இப்பொழுது புதிய யானைக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி நாமம் சாத்த மறு தரப்பு விடாது. அது பழைய யானைக்குத்தான் பொருந்தும், புதிய யானைக்கு எமது நாமத்தை சாத்தத்தான் வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றம் போவார்கள். அனேகமாக தீர்ப்பு வருவதற்கு முதல் அந்த யானையும் இறந்து போயிருக்கும்.

இங்கிலாந்து நீதிமன்றங்கள் வரை இந்தப் பிரச்சனை போனது. வெள்ளைக்கார நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இதை "Y,U" பிரச்சனை என்றுதான் அழைப்பார்கள்.

இப்படி பல வேடிக்கைகளையும் பகைகளையும் உருவாக்கிய இந்த "Y,U" பிரிவுகள் ஏன் உருவாகின என்று தெரியுமா? இதற்கு காரணம் பெண் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
 

தொடரும்…..
 

StumbleUpon.com Read more...

இந்து மதமும் பெண்களும் (பாகம் 5)”

பார்ப்பனன் ஒருவனுடைய மகனைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோசம் பிடித்து விட்டது என்று கடந்த தொடரில் பார்த்தோம் அல்லவா? இப்பொழுது தன்னுடைய தோசத்தை இந்திரன் எப்படி தீர்த்துக் கொள்கிறான் என்று பார்ப்போம்.

இந்திரன் மிகவும் விகார உருவத்தோடும் செல்வம், பொலிவு அனைத்தும் இழந்து அலைந்து கொண்டிருந்தான். தன்னுடைய தோசத்தை யாரிடமாவது இறக்கி வைத்தால், தன்னுடைய தோசம் போய்விடும் என்று இந்திரனுக்கு தோன்றியது.

முதலில் இந்திரன் பூமாதேவியிடம் போனான். தன்னுடைய தோசத்தை பெற்றுக் கொள்ளும்படி வேண்டினான். பூமாதேவி தோசம் முழுவதையும் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டாள். வேண்டுமென்றால் தோசத்தில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்வதாக கூறினாள். பதிலுக்கு தான் கேட்கும் வரத்தை தரவேண்டும் என்று பூமாதேவி சொன்னாள்.

இந்திரன் சம்மதித்து ஒரு பகுதி தோசத்தை பூமாதேவியிடம் இறக்கி வைத்தான். பூமிக்கு இப்படி பிரம்மஹத்தி தோசத்தில் ஒரு பகுதி வந்ததனால்தான் பூமியில் பல பாலைவனங்கள் உருவாகினதாம். தோசத்தை பெற்றுக் கொண்ட பூமாதேவி பூமி பிளந்தால் மீண்டும் ஒன்றாக சேருகின்ற வரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டாள்.

இந்திரன் அடுத்ததாக மரங்களிடம் போனான். மரங்களிடம் ஒரு பகுதி தோசத்தை கொடுத்தான். மரங்களிற்கு தோசம் வந்ததால்தான் அதில் இருந்து பசை வடிகிறதாம். மரம் தன்னுடைய கிளைகள் வெட்டுப்பட்டால் மீண்டும் முளைக்கும் வரத்தை கேட்டுப் பெற்றது.

கடைசியாக இந்திரன் பெண்களிடம் போகிறான். தன்னுடைய நிலையை சொல்லி பெண்ணிற்கு தன்னுடைய மிகுதி தோசத்தை கொடுக்கிறான்.

பெண் பிரம்மஹத்தி தோசத்தை கொண்டதால் என்ன ஆனது தெரியுமா? பார்ப்பனனின் மகனை கொலை செய்த தோசத்தை பெண்கள் பெற்றுக் கொண்டதால், அவர்களுக்கு மாதவிடாய் வரத் தொடங்கியது.

தோசத்தை பெற்றுக் கொண்ட பெண் கர்ப்பமாய் இருக்கும் காலத்திலும் ஆண் சுகம் வேண்டும் என்ற வரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டாள். வரத்தை இந்திரன் அருளினான். பொதுவாக மிருகங்கள் கர்ப்ப காலத்தில் ஒன்று சேராது. ஆனால் மனிதர்களுக்கு அப்படியில்லை. மனிதர்களால் கர்ப்பமாக இருக்கும் காலங்களிலும் சேர முடியும். இதற்கு காரணம் தோசத்தைப் பெற்றுக் கொண்ட பெண் அதற்கு ஈடாக இந்திரனிடம் பெற்ற வரந்தானாம்.

இந்து மதம் என்று சொல்லப்படுகின்ற பார்ப்பனிய மதத்தில் ஒன்றை நீங்கள் கவனிக்கலாம். அந்த மதத்தில் உள்ள அனைத்து தத்துவங்களுமே பார்ப்பனர் உயர்ந்தவர் என்றும் மற்றவர் இழிபிறப்புகள் என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கும். ஒரு பார்ப்பனனுக்கு தீங்கு செய்ததால்தான் பூமியில் பாலைவனங்கள் உருவாகின என்றும், மரங்களில் பாசை வடிகிறது என்றும், பெண்களுக்கு மாதவிடாய் வருகிறது என்றும் ஒரு செய்தியையும் இந்தப் புராணக் கதை சொல்கிறது.

இந்த இடத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். தொடரைப் படித்த சிலர் இந்து மதத்தின்படி ஆண்கள்தான் உயர்ந்தவர்களா என்று என்னிடம் கேட்டிருந்தார்கள். அது தவறு. பார்ப்பன ஆண்கள் உயர்ந்தவர்கள் என்பதுதான் சரி. இதைத்தான் இந்து மதம் அனைத்து வேதங்களிலும், சாத்திரங்களிலும், புராணங்களிலும் வலியுறுத்துகிறது. பார்ப்பன ஆண்களை தவிர மற்றைய அனைவரும் தாழ்ந்தவர்கள். இழி பிறப்புக்கள். பெண்கள் எந்த வர்ணமாக இருந்தாலும் இழிவானவர்கள்.

மனுதர்மம், பகவத் கீதை, வேதங்கள், சாத்திரங்கள் இந்து மத இதிகாசங்கள் என்று அனைத்தும் பெண்கள் பற்றிச் சொல்கின்ற கருத்துக்களையே மேற்கண்ட புராணக் கதையும் சொல்கிறது.

நாம் மனுதர்மத்திலும் பகவத் கீதையிலும் சில உதாரணங்களைப் பார்த்தோம். அவைகளின் கருத்துப் படி பெண் இழி பிறப்பானவள். காம குணம் உள்ளவள். கற்பு நிலையற்றவள்.

ஏன் பெண் இழிபிறப்பானவள்? அவள் பிரம்மஹத்தி தோசத்தை பெற்றிருக்கிறாள்.
பெண் காம குணம் உள்ளவளா? ஆம், அவள் மாதவிடாயால் மூன்று நாட்கள் ஆண்சுகத்தை பெற முடியாது என்று அறிந்து அதற்குப் பதிலாக, கர்ப்ப காலத்திலும் ஆண்சுகத்தை பெறுவதற்கு வரம் வேண்டியிருக்கிறாள்

ஏற்கனவே நாம் பார்த்த சுலோகங்கள் சொல்கின்ற அதே கருத்தை இந்தக் கதையும் திருப்பிச் சொல்வதை கவனித்துப் பாருங்கள்.

இப்படி பெண்களை இழிபிறப்புகளாகவும் காமப்பிசாசுகளாகவும் இந்து மதம் கருதுவதால்தான், மந்திரங்களில் பெண்ணிற்கு நிறையக் கணவர்கள் உண்டு என்றும், பெண் அவளுடைய பிள்ளையை வேறு ஆடவனுக்கு பெற்றிருக்கக்கூடும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்து மத ஆச்சாரியார்களுக்கு பெண் மீது இத்தனை வெறுப்பு வந்ததற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அது என்ன காரணம் என்ற கேள்வி உங்களுக்கு வரக் கூடும். வர வேண்டும். கேள்விகள் வந்தால்தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம்

அதற்கு பதிலை சொல்வதற்கு முன்பு இன்னும் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். பெண் பற்றிய பிரச்சனையால் இந்து மதத்தில் ஒரு பெரும் பிளவே ஏற்பட்டது. அதை முதலில் பார்ப்போம்

தொடரும்…..
 
 

StumbleUpon.com Read more...

இந்து மதமும் பெண்களும் (பாகம் 4)

மனுதர்மத்தை நல்ல புத்தி உள்ள யாருமே ஆதரிக்க மாட்டார்கள். அதை படிக்கின்ற போது குமட்டிக் கொண்டு வரும். ஆனால் மனுதர்மச் சிந்தனைதான் பார்ப்பனியத்தின் அடிப்படைச் சிந்தனை ஆகும்.

மனுதர்மத்தின் இன்னொரு பிரதியான பகவத் கீதை பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை இப்பொழுது பார்ப்போம். பகவத் கீதையின் 9ஆவது அத்தியாயத்தில் சுலோகம் 32 இப்படிச் சொல்கிறது.

மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு பாப யோனய
ஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபி யாந்திபராம் கதிம்

அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்களாம். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பகவத் கீதைகளில் "பாவ யோனி" என்பதை "கீழான பிறப்பு", "இழி பிறப்பு" என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் நேரடியாகவே "born out of the womb of sin" என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

பகவத் கீதையின் பார்வையிலும் பெண் என்பவள் இழி பிறப்புத்தான். அவள் ஒரு பார்ப்பன வீட்டில் பிறந்திருந்தாலும், அது செல்லுபடியாகாது. கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான உரிமைகள் பெண்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளன.

முற்பிறப்பில் செய்த பாவத்தின் பயனாகத்தான் ஒருவன் பெண்ணாகவோ சூத்திரனாகவோ பிறக்கிறான் என்றுதான் இந்து மத வேதங்கள் சொல்கின்றன. அந்த வகையில் சூத்திரர்களை இழிவுபடுத்துகின்ற வேதங்கள், சாத்திரங்கள், மந்திரங்கள் போன்றவை பெண்களையும் இழிவுபடுத்துவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

"இந்து மதமும் பெண்களும்" என்ற தொடர் முடிந்த பிற்பாடு பகவத் கீதை பற்றியும் தொடராக எழுத இருப்பதால், தற்பொழுது பகவத் கீதையைப் பற்றி நான் அதிகம் எழுதாது மிகுதியை தொடர்கிறேன்.

இந்து மதத்தைப் பற்றி அறிந்தவர்கள் ராமானுஜர் பற்றி அறிந்திருப்பார்கள். குறிப்பாக வைணவ சமய மக்களால் ராமானுஜர் கடவுளின் அவதாரம் என்று போற்றப்படுகிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் போடுவதில் பாரதிக்கு அவர்தான் அனேகமாக முன்னோடியாக இருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் பலரை பூணூல் அணிவித்து பார்ப்பனர்களாக ராமனுஜர் மாற்றுவித்தார் என்று அவரைப் பற்றிச் சொல்வார்கள். அனைவரும் பெருமாளின் குழந்தைகளே என்றும், பெருமாள் பக்தர்களுக்குள் வேறுபாடுகள் கிடையாது என்றும் பிரச்சாரம் செய்தவராக கருதப்படும் ராமனுஜர் பல நூல்களை எழுதியுள்ளார். அவைகள் வைணவத்தின் வேதங்களாக கருதப்படுகின்றன.

அதில் "ஸ்ரீபாஸ்யம்" என்ற நூல் மிக முக்கியமானது. அதில் பெண்கள் பற்றி இப்படி சொல்லப்படுகிறது.

பகவத் பலன தானக்ருதாம்
விஸ்தீரணாம் ப்ரம்ம சூத்ர வ்ருத்திம்
பூர்வாச்சாரியாஹா சஞ்சிக்ஷபூஹி
தன்மதானு சாரேந சூத்ரா அக்ஹதாரீ
வ்யாக்யாஸ்யந்தே….

அதாவது மோட்சம் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் உண்டு. சூத்திரர்களுக்கோ பெண்களுக்கோ இல்லை. சூத்திரர்களும் பெண்களும் முற்பிறப்பில் செய்த பாவத்தின் பலனாகத்தான் அவர்கள் அவ்வாறு பிறந்திருக்கிறார்கள். அவர்கள் இப்பிறப்பில் புண்ணியம் செய்து அடுத்த பிறப்பில் பார்ப்பனராக பிறந்து பின்பு மோட்சம் அடையலாம் என்பதுதான் இதன் பொருள். அத்துடன் இதை பிரம்மசூத்திரத்தை உருவாக்கிய ஆச்சாரியர்கள் சொன்னதையே தான் சொல்வதாகவும் ராமானுஜர் குறிப்பிடுகின்றார்.

பக்தர்களுக்குள் வேறுபாடு இல்லை என்று சொன்ன ராமானுஜர்தான் இப்படி எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். சைவத்துடன் மோதல் இருந்த காலத்தில் வாழ்ந்த ராமனுஜர் சைவத்திற்கு எதிராக ஆள் பிடிப்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணுல் அணிவித்து வைணவப் பார்ப்பனர்களாக மாற்றினாரா என்பது ஆராயத்தக்கது. சிவன் கோயிலாக இருந்த திருப்பதியை ராமனுஜர் பெருமாள் கோயிலாக மாற்றினார் போன்ற விடயங்களும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. இதை சந்தர்ப்பம் கிடைத்தால் தனியாக பிறிதொரு முறை பார்ப்போம்.

ராமானுஜர் "ஸ்ரீபாஸ்யத்தில்" எழுதி வைத்ததுதான் பெண் குறித்த இந்து மதத்தின் உண்மையான பார்வை. அதற்கு இந்து மதத்தின் வேதங்கள், சாத்திரங்கள், புராணங்கள் அனைத்துமே ஆதரங்களாகின்றன.

பெண்களை கீழ்பிறப்பு என்று இழிவுபடுத்துகின்ற இந்து மதம் பெண்களுக்கு கல்வியையும் தடைசெய்தது. ஒரு பெண் மந்திரங்களோ, வேதங்களோ, சாத்திரங்களோ எதுவும் கற்கக் கூடாது என்று பெண்ணுக்கு கல்வியை மறுத்தது. வேத, சாத்திரங்களின் படி ஆணிற்கு மட்டும்தான் கல்வி உண்டு. சொத்து உண்டு. பெண்ணிற்கு எதுவும் இல்லை.

பெண்கள் இழிபிறப்பினர் என்ற இந்து மத கருத்தின்படி மந்திரங்களிலும் பெண் இழிவுபடுத்தப்பட்டாள். பெண்ணுக்கு கல்வி மறுக்கப்பட்டதால், அவளால் அதை புரிந்து கொள்ளவோ தட்டிக் கேட்கவோ முடியவில்லை. இதே நிலையில்தான் சூத்திரர்கள் என்று சொல்லப்பட்டவர்களும் இருந்தனர்.

ரிக், யதூர் போன்ற வேதங்களில் இருந்து பெறப்பட்ட மந்திரங்கள் பெண்ணை இழிவுபடுத்தியதைப் பார்த்தோம். மனுதர்ம சாத்திரத்தை பார்த்தோம். பகவத்கீதையைப் பார்த்தோம். இப்பொழுது இந்து மதத்தின் புராணம் ஒன்றையும். பார்ப்போம்.

ஒரு முறை இந்திரன் விஸ்வரூபன் என்பவனைக் கொன்று விட்டான். விஸ்வரூபன் ஒரு பார்ப்பனத் தந்தைக்கும் அசுர குல தாய்க்கும் பிறந்தவன். விஸ்வரூபன் ஒரு பார்ப்பனின் பிள்ளை என்பதால், அவனைக் கொன்ற இந்தரனுக்கு தோசம் உண்டாகி விட்டது.

தோசம் பிடித்ததால் இந்திரன் மிகவும் விகாரமான உருவோடு மிக அருவருப்பாகக் காட்சி அளித்தான். தன்னுடைய தோசத்தை எங்கே இறக்கி வைக்கலாம் என்று அவன் தேடித் திரிந்தான்.

இந்திரன் தன்னுடைய தோசத்தை எங்கே இறக்கி வைத்தான் தெரியுமா?

தொடரும்…..
 
 

StumbleUpon.com Read more...

இந்து மதமும் பெண்களும் (பாகம் 3)

இந்த மத வேதங்களின் படி பெண் என்பவள் ஒரு கீழான பிறவி. சூத்திரர்கள் எப்படி கீழான பிறவிகள் என்று இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் சொல்கிறதோ, அதே போன்றுதான் பெண்களும் கீழான பிறவிகள். பல இடங்களில் சூத்திரர்களை விடவும் மிகக் கீழான நிலையில்தான் பெண்களை இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் வைத்திருக்கின்றன

இந்த இடத்தில் சுருக்கமாக இன்னும் ஒரு விடயத்தைப் பார்ப்போம்.

இஸ்லாமியர்கள் குர்ரானையும் கிறிஸ்தவர்கள் பைபிளையும் கொண்டு இந்திய துணைக் கண்டத்திற்குள் நுழைந்த பொழுது, பார்ப்பனர்களுக்கு அதைப் போன்று எந்த நூலை தங்களுடைய பார்ப்பனிய இந்து மதத்தின் மதநூலாக காட்டுவது என்று தெரியவில்லை.

பொதுவான இந்து மதம் என்கின்ற ஒன்று இல்லாத பொழுது, அதற்கு என்று எப்படி ஒரு பொதுவான மதநூல் இருக்க முடியும்?

என்றாலும் பார்ப்பனர்கள் மனுதர்மத்தையும், பகவத்கீதையையும் இந்து மத "பைபிள்களாக" முன்வைத்தார்கள். பார்ப்பனிய மதம்தான் இந்து மதம் என்று பார்க்கின்ற போது இது ஒரு சரியான செயல்தான். மனுதர்மம், பகவத்கீதை போன்றவைகள் வேறு மொழிகளிலும் அச்சிடப்பட்டன.

உண்மையில் இன்று வரை இந்து மதம் மனுதர்மத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஆலய வழிபாடுகள், விழக்கள், சடங்குகள் என்று அனைத்துமே மனுதர்மம் வகுத்துக் கொடுத்தன்படிதான் இயங்குகிறது. இதை விட முக்கியமாக அரசுகள் கூட மனுதர்மத்தின் அடிப்படையில் இயங்க வைக்கப்பட்டன.

மனுநீதி சோழன் போன்ற சொற்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். மனுதர்மம்தான் மனுநீதி. மனுதர்மத்தின் படி பார்ப்பனர்களுக்கு கட்டுப்பட்டு, அவர்களின் ஆலோசனைப்படி ஆட்சி செய்த சோழனை "மனுநீதிச் சோழன்" என்று அழைத்தார்கள்.

இந்த இடத்தில் இன்னும் ஒரு சிறு தகவல். பல நாடுகளை வென்று ஆசியாவின் பெரும் வல்லரசாக விளங்கிய சோழப் பேரரசு வீழ்ந்ததும் இந்த "மனுதர்ம" பார்ப்பனர்களினால்தான். பல போர்களைப் புரிந்ததால், பல பாவங்கள் சேர்ந்து விட்டதாக சோழ மன்னன் நம்பவைக்கப்பட்டான். அந்தப் பாவங்களைப் போக்குவதற்கு பார்ப்பனர்களுக்கு நிறைய தானங்கள் கொடுக்க வேண்டும் என்று பார்ப்பனர்களால் அவனிடம் சொல்லப்பட்டது. பார்ப்பனர்களுக்கு பொன்னும், பொருளும், நிலமும் வழங்கி, மிகுதிப் பணத்தில் கோயில்களும் கட்டி சோழப் பேரரசு தன்னுடைய பலத்தை இழந்து வீழ்ச்சி கண்டது. இதை பின்பு தனியாகப் பார்ப்போம்.

இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருகிறேன்.

மனுதர்மம் பலரால் கிழி கிழியென்று கிழிக்கப்பட்டு துவைத்துக் காயபோடப்பட்டு விட்டதால், தற்பொழுது மனுதர்மத்தை முன்னிறுத்துவதைக் குறைத்துக் கொண்டு பகவத் கீதையை முன்னிறுத்தி வருகிறார்கள்.

இந்த மனுதர்மமாக இருக்கட்டும் அல்லது பகவத் கீதையாக இருக்கட்டும் அல்லது மற்ற வேதங்களாக இருக்கட்டும், பெண்ணைப் பற்றி என்ன சொல்கிறது? முதலில் மனுதர்மம் சொல்கின்ற சில விடயங்களைப் பார்ப்போம்.

மனுதர்மமத்தின் தொடக்கம் ஏறக்குறைய பைபிள் போன்றுதான் இருக்கிறது. பைபிளைப் போன்றே உலகம் உருவான கதையில் தொடங்குகிறது. பின்பு ஒவ்வொரு வர்ணத்தினருடைய கடமைகள், குணங்கள், பாவங்கள், தண்டனைகள் என்று விரிகிறது.

இதிலே 9வது அத்தியயாம் பெண்களைப் பற்றி பேசுகிறது. 9வது அத்தியாயத்திலே மனுதர்மம் பெண்கள் பற்றி சொல்கின்ற சில விடயங்களைப் பார்ப்போம்.

பெண்கள் இளமைப் பருவத்தில் தந்தையாலும் பின்பு கணவனாலும், மூப்பில் மைந்தனால் காக்கப்படுபவர்கள். அவர்கள் சுயமாக இயங்கும் தன்மை உடையவர்கள் அல்லர்.
(சுலோகம் 3)

பெண்கள் கற்புநிலை அற்றவர்களாகவும், நிலையான மனம் அற்றவர்களாகவும், நட்புத்தன்மை அற்றவர்களாகவும் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
(சுலோகம் 15)

இந்தச் சுபாவம் பெண்களைப் படைக்கின்ற போதே பிரம்மனால் கொடுக்கப்பட்டிருக்கிறது
(சுலோகம் 16)

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகசிந்தனை போன்றவைகள் பெண்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது
(சுலோகம் 17)

பெண்களுக்கு என்று மந்திரங்கள் இல்லை. பெண்களுக்கு மனச்சுத்தி கிடையாது. பெண்களின் பாவத்தை போக்குவதற்கான மந்திர உபதேசமும் கிடையாது. பெண்கள் பொய்யைப் போன்று பரிசுத்தம் அற்றவர்கள்
(சுலோகம் 18)

பெண்கள் சுயமாக இயங்குகின்ற தன்மை அற்றவர்கள். பெண்கள் இயற்கையாகவே நிலையான மனம் அற்றவர்கள். கற்பு நிலை அற்றவர்கள். காமம், கோபம், துரோகம் அனைத்தும் பெண்களுக்காவே படைக்கப்பட்டிருக்கிறது. இவைகைள எல்லாம் பெண்களைப் படைக்கும் போது பிரம்மன் அவர்களுக்காக உருவாக்கியுள்ளார். இந்தப் பாவங்களை மாற்ற முடியாது. அதற்கான மந்திரங்கள் எதுவும் எல்லை. பெண்கள் மந்திரங்களை ஓதவும் கூடாது. மனுதர்மம் பெண்கள் பற்றிச் இப்படித்தான் சொல்கிறது.

இதை விட ஒரு பெண் ஒவ்வொரு ஜாதிக்காரனுடன் உறவு வைத்தால் என்ன தண்டனை, கணவனுக்கு பணிவிடை செய்யாவிட்டால் என்ன தண்டனை என்று மற்றைய சுலோகங்கள் நீண்டு, பெண்களை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அத்தனை தூரம் மனுதர்மம் அசிங்கப்படுத்துகிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக பெண் குழந்தைகளை பெறுவதையே குற்றம் என்றுதான் மனுதர்மம் சொல்கிறது

ஒரு ஆண் எப்பொழுது தன்னுடைய மனைவியை "விவாகரத்து" செய்யலாம் என்று மனுதர்மம் விளக்குகிறது.

மலடியான மனைவியை எட்டு வருடத்திற்குப் பின்பும், ஊனம் உள்ள பிள்ளையை பெறுபவளை பத்து வருடத்திற்கு பின்பும், பெண்களையே பெறுபவளை பதினொரு வருடத்திற்குப் பின்பும், தீங்கு சொல்பவளை உடனடியாகவே நீக்கி விட்டு வேறு விவாகம் செய்து கொள்க. நீக்கப்பட்ட மனைவியர்களுக்கு எந்தப் பொருளும் கொடுக்கத் தேவை இல்லை.
(சுலோகம் 81)

இந்து மத வேதங்கள், சாத்திரங்களின் படி பெண் இயற்கையாகவே கற்புநிலை அற்றவள். நிலையான மனம் அற்றவள். காமம் உடையவள். பெண் பிறப்பு ஒரு இழிவான பிறப்பு. அதை மந்திரங்களால் மாற்ற முடியாது. பெண் குழந்தையை பெறுவதே குற்றம்.

இப்பொழுது ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். திருமணத்தில், ஈமச் சடங்கில் பெண் கற்பு அற்றவள் என்ற அடிப்படையில் சொல்லப்படும் மந்திரங்களின் அடிப்படை புரிகிறது அல்லவா?

ஆயினும் உங்களுக்கு வேறு சில கேள்விகள் எழக் கூடும். இந்தத் தொடரை தொடர்ந்து படிக்கின்ற போது அவைகளுக்கான பதில்களையும் நீங்கள் பெறுவீர்கள்

தொடரும்……
 

StumbleUpon.com Read more...

இந்து மதமும் பெண்களும் (பாகம் 2)

மணமுடிக்கப் போகின்றவளை ஏற்கனவே பலருக்கு மனைவியாக இருந்தவள் என்றும், அவர்களோடு படுக்கையில் இருந்தவள் என்றும் சொல்லி கொச்சைப்படுத்தும் திருமணங்களை பார்த்தோம்.

இனி எம்மை ஈன்றெடுத்த தாயையே கொச்சைப் படுத்துகின்ற இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம்.

மதத்தை தாய் தந்தையுடன் ஒப்பிட்டுப் பேசுகின்ற பலரை நான் கண்டிருக்கிறேன். அவர்களுடைய பார்வையில் மதம் என்பது தாய் தந்தை போன்றது. எப்படி நாம் தாய் தந்தையை மாற்ற மாட்டோமோ, எப்படி நாம் தாய் தந்தை மீது சந்தேகம் கொள்ள மாட்டோமோ அதே போன்று மதத்தை மாற்றவோ, அதன் மீது சந்தேகம் கொள்ளக் கூடாது என்பது அவர்களுடைய வாதம்.

மதம் மாறுவது எனக்கும் ஏற்புடையது அன்று. ஒரு குப்பையில் இருந்து இன்னொரு குப்பைக்குள் போவது முட்டாள்தனமானது. மதங்கள் என்ற குப்பைகளை விட்டு வெளியே வந்த நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

ஆனால் மதம் மாறக் கூடாது, மதம் பற்றி கேள்வி எழுப்பக் கூடாது என்று சொல்வதற்காக தாய், தந்தையுடன் மதத்தை ஒப்பிடுவது மிக அபத்தமானது.

மதம் குறித்து என்னுடன் வாதிட்ட ஒருவர் "அத்தாட்சிப் பத்திரம் காட்டினால்தான் நீங்கள் உங்களுடைய அப்பா, அம்மாவை நம்புவீர்களா?" என்றெல்லாம் ஆவேசமாக கேள்வியை எழுப்பினார். இன்னொருவர் நான் அப்பாவையே மாற்றி விட்டேன் என்று மறைமுகமாக என்னுடைய தாயை வசைபாடினார். இப்படியானவர்களைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது.

இவ்வாறான கேள்விகளை மதவெறியுள்ளவர்களும் சிந்தனை வறட்சியுள்ளவர்களுமே கேட்பதால், அவர்களுக்கு உண்மையை புரிய வைப்பதும் மிகக் கடினமானதாகவே இருக்கிறது. ஆனால் இவர்கள் எல்லோரும் நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாவது போன்று இவர்களுடைய இந்த மதமே "அப்பன் பேர் தெரியாதவன்" என்று இவர்களை சொல்வதுதான் இதில் வேதனையான வேடிக்கை.

எம்மவர்கள் சம்பிரதாயம் என்ற பெயரில் செய்கின்ற பல முட்டாள்தனமான விடயங்களில் இறந்தவருக்கு திதி கொடுப்பதும் ஒன்று. என்ன செய்வது? பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பார்ப்பான் வந்து சமஸ்கிருதத்தில் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் திட்டிவிட்டுப் போனால்தான் தமிழனுக்கு நிம்மதியாக இருக்கின்றது.

இப்பொழுது இறந்தபின் நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். முதலில் இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண…

இந்த மத்திரத்தின் அர்த்தம்:

என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்கு பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாது என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தை பெறட்டும். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது திதி கொடுப்பவனுடைய தாய் சில வேளைகளில் சோரம் போய் வேறு யாருக்காவது அவனைப் பெற்றிருக்கலாம் என்று இந்த மந்திரம் சொல்கிறது. உன்னுடைய அப்பா வேறு யாராவதாக இருக்கலாம், நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம் என்று இந்த "புனித" மந்திரம் சொல்கிறது.

தந்தைக்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினத்து விடாதீர்கள். இந்து மதம் தாய்க்கு செய்கின்ற திவசத்திலும் வஞ்சகம் வைக்கவில்லை. அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இது

என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம….

என்னுடைய அம்மா யாருடன் படுத்த என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் போய் சேரட்டும்.

உண்மையில் இந்த மந்திரம் அர்த்தம் அற்றது. தாய்க்கு கொடுக்கின்ற திதியில் தந்தை யார் என்ற கேள்வி எழத் தேவையில்லை. தந்தைக்கு திதி கொடுக்கின்ற போதாவது தாய் சோரம் போயிருந்து, அதனால் உண்மையான தந்தை வந்து விட்டால் என்னாவது என்ற கேள்வியோடு அந்த மந்திரத்தை தொடர்புபடுத்தலாம். ஆனால் தாயக்கு கொடுக்கும் திதியிலும் அவள் சோரம் போயிருக்கலாம் என்று சொல்வதற்கு அவசியமே இல்லை. ஆயினும் மந்திரம் அப்படித்தான் சொல்கிறது.

எந்த மதத்தை தாய், தந்தையோடு ஒப்பிட்டு உறுதியாக நம்புகிறீர்களோ, அந்த மதத்தின் சம்பிரதாயங்களே உங்களுடைய அம்மாவை "நம்பத்தகாதவள்" என்கிறது. நடத்தை கெட்டவளாக இருக்கலாம் என்கிறது. நீங்கள் வேறு அப்பனுக்கு பிறந்திருக்கலாம் என்கிறது. சம்பிரதாயம் என்று பிதற்றுபவர்களுக்கும், மதத்தை பெற்றோரோடு ஒப்பிடுபவர்களுக்கும் இதை விட வேறு கேவலம் ஏற்படப் போவதில்லை.

இந்த மந்திரங்கள் பற்றிய விவாதம் ஒன்றில் ஒருவர் என்னிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். "இந்த மந்திரங்களை பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு நிகழ்வுகளில் சொல்ல மாட்டார்களா? அப்படிச் சொன்னால் தங்கள் வீட்டுப் பெண்களை கேவலப்படுத்துவது போன்று இல்லையா? பார்ப்பனர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?" இவ்வாறான கேள்விகளை அடுக்கினார்.

இங்கேதான் நாம் சில விடயங்களை சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். இந்த மந்திரங்களில் ஒரு விடயத்தை கவனித்திருப்பீர்கள். திருமண மந்திரங்கள் மணமகனை கொச்சைப்படுத்தவில்லை. மணமகளைத்தான் கொச்சைப்படுத்துகின்றன. ஈமச் சடங்கின் மந்திரங்கள் தந்தையை கொச்சைப்படுத்தவில்லை. தாயைத்தான் கொச்சைப்படுத்துகின்றன.

இப்படி மந்திரங்கள் பெண்களைத்தான் கொச்சைப்படுத்துகின்றன. இது ஏன்? இந்து மதத்திற்கு பெண்ணின் மேல் அப்படி என்ன வெறுப்பு? இனி இதற்கான காரணங்களைப் பார்ப்போம்
 

தொடரும்….
 

StumbleUpon.com Read more...

இந்து மதமும் பெண்களும் (பாகம் 1)

சில மாதங்களிற்கு முன்பு திருமண மந்திரங்கள் பற்றிய ஒரு பதிவை சில தளங்களில் எழுதினேன். இதையடுத்து நான் எழுதியது சரியா என்று ஒரு விவாதம் ஏற்பட்டது. ஒரு பத்திரிகையில் இந்த மந்திரங்கள் பற்றி எழுதிய போது, யரோ ஒரு பார்ப்பனர் "மந்திரங்கள் புனிதமானவை, அதை குற்றம் சொல்லக் கூடாது" என்று ஒரு கடிதம் மட்டும் எழுதியிருந்தார். வேறு எந்த விளக்கமும் எழுதவில்லை.

ஆனால் கருத்துக் களங்களில் திருமண மந்திரங்கள் பற்றிய என்னுடைய கருத்து தவறு என்று சிலர் வாதிட்டார்கள். சில விளக்கங்களை முன்வைத்தார்கள். அவைகளுக்கு பதில் அளிக்க முனைந்த பொழுதே, அது நீண்டு இப்படியான ஒரு தொடருக்கு வித்திட்டது. அந்த வகையில் இந்தத் தொடருக்கு காரணமான திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பற்றி முதலில் ஒரு முறை பார்ப்போம்.

தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் எந்த ஒரு விடயத்தையும் யாரும் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்வது என்றாலும், சொல்லப்படுவதன் அர்த்தத்தை புரிந்து கொண்டுதான் செய்வார்கள்.

ஆனால் நாமோ பிறப்பில் இருந்து இறப்பு வரை மதத்தின் பெயரில் எமக்கு தெரியாத ஒரு மொழியிலேயே அனைத்து சடங்குகளையும் செய்து வருகிறோம். உண்மையில் இந்தச் சடங்குகளும், அதில் சொல்லப்படும் மந்திரங்களும் எம்மை இழிவுபடுத்துவதை நாம் உணர்ந்து கொள்வதும் இல்லை. உணர்ந்து கொள்ள விரும்புவதும் இல்லை.

திருமணத்தின் போது சொல்லப்படும் சில மந்திரங்களை பார்ப்போம்

'சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோ
விவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதி
துரியஸ்தே மனுஷ்ய ஜாஹ'

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.

நீ முதலில் சொமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு….) வேறு இருக்கிறது.

இதை பல பார்ப்பனர்களே இன்று ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் மக்களை ஏமாற்றி தலையில் மிளகாய் அரைப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ள சிலர் வேறு அர்த்தம் சொல்வார்கள்.

அதாவது மந்திரத்தில் உள்ள "பதி" என்ற சொல் கணவன் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவது இல்லை. பாதுகாவலன் என்ற அர்தத்தில்தான் சொல்லப்படுகிறது. "முதலில் சந்திரன் அவளை பாதுகாத்தான், பின்பு கந்தர்வன் பாதுகாத்தான், பின்பு அக்னி பாதுகாத்தான்" என்று ஒரு விளக்கத்தை இவர்கள் சொல்வார்கள். பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சிக்கு அமைய இந்த மந்திரங்கள் அமைக்கப்பட்டது என்று "அறிவியல்" விளக்கம் வேறு தருவார்கள்.

சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சோமன், கந்தர்வன், அக்னி ஆகியோர் அந்தப் பெண்ணிற்கு தந்தையாக இருந்தார்கள் என்று சொல்வார்கள்.

ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் ஒரு பெண்ணிற்கு "பதி" என்பது அவள் கணவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அத்துடன் அதே வேதங்களிலும் புராணங்களிலும் "பொம்பிளைப் பொறுக்கிகளாக" சொல்லப்படுகின்ற சோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்களின் "பாதுகாப்பில்" தன்னுடைய மனைவி இருந்தாள் என்பது குறித்து எந்தக் கணவன் மகிழ்ச்சி அடைவான் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

திருமண மந்திரங்கள் இவற்றுடன் முடிந்து விடவில்லை. தொடர்ந்து வருகின்ற திருமண மந்திரங்கள் இவர்கள் சொல்கின்ற இந்த மோசடி விளக்கத்தை சுக்கு நூறாக உடைக்கின்றன.

உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வா
அந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ

உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வாவஸீந் நமஸ கீர்ப்பீரிடடே
அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜனுஷா தஸ்ய வித்தி

இந்த மந்திரங்களின் பொருள் என்னவென்று தெரியுமா?

விஷ்வாவஸ் என்னும் கந்தர்வனே! இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக!
உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். நீ வேறு கன்னிகையை விரும்புவாயாக! என் மனைவியை அவளுடைய கணவனுடன் சேர்த்து வைப்பாயாக!

இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக! இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறான் அல்லவா! விஷ்வாவஸாகிய உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பின் வீட்டில் இருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாத கன்னிகையை நீ விரும்பவாயாக! உன்னுடைய அந்தப் பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்று அறிவாயாக!

இப்பொழுது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! மணமகளிற்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து பாதுகாவலனாக விளங்கிய கந்தர்வனுக்கு அந்தப் பெண்ணின் படுக்கையில் என்ன வேலை?

நான் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். சோமன், அக்னி, கந்தர்வன் போன்றவர்களை மணமகளின் கணவர்கள் என்றுதான் மந்திரம் சொல்கிறது. இவற்றை விட மணமகளை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி, பின்பு புரோகிதம் சொல்லும் பார்ப்பானுக்கு மனைவியாக்கி, இவற்றிற்கு எல்லாம் கணவனின் சம்மதம் பெற்று… இப்படி இந்த மந்திரங்கள் நீண்டு செல்கின்றன.

இவைகள் இருக்கட்டும். வேறு சில திருமண மந்திரங்களை பார்ப்போம்.

தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ
யஸ்ஸாம் பீஜம் மனுஸ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்

இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.

இன்னும் ஒரு மந்திரம்:

விஸ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபானி பீமிசது
ஆரிஞ்சது ப்ரஜாபதி
தாதா கர்ப்பந்தாது

இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? )

உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.

ஒன்றிற்கு மூன்று தெய்வங்கள் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து கொண்டு எல்லாம் சரியாக பொருந்துகிறதா என்று காவல் காக்கிறார்கள் என்றால், ஒரு பெண் வல்லுறவிற்கு உட்படுத்தம்படும் போது, அதை தடுத்தால் மிகப் பெரிய உபகாரமாக இருக்குமல்லவா? அதற்கும் ஏதாவது மந்திரங்கள் சொன்னால் நன்றாக இருக்குமே!

இப்படியான மந்திரங்களை சொல்லி நடக்கின்ற திருமணங்களையே எமது தமிழர்கள் செய்கிறார்கள். இவைகளை விட்டு திருக்குறள் சொல்லி திருமணங்கள் செய்யுங்கள் என்றால், "கடவுள், மதம்" என்று அடம்பிடிக்கிறார்கள்.

தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?

திருமண மந்திரங்கள் ஒரு மணமகள் எவ்வளவு தூரம் இழிவுபடுத்தப்படுகிறாள் என்பதை பார்த்தோம். எம்மை ஈன்றெடுத்த தாயையே இந்த மந்திரங்கள் மிக மோசமாக கொச்சைப்படுத்துகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

தொடரும்…….
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP