சமீபத்திய பதிவுகள்

தினமும் அவன் என்னை தனியே அழைத்து செல்கின்றான்:பெண்ணின் அவலக்குரல்

>> Sunday, February 15, 2009

உயிர்காக்க அகதியாகி அடிமையாகிப்போய் அழும் ஒரு பெண்ணின் அவலக்குரல்


வன்னியில் சிறீலங்கா படையினர் பொதுமக்கள் மீது மேற்கொண்டுவரும் கண்மூடித்தனமான தாக்குதல்களாலும், அத்தியாவசியப் பொருள்களின் தடைகள் காரணமாகவும் விரும்பியோ, விரும்பாமலோ பலர் சிறீலங்கா படையினரிடம் தஞ்சம் கோரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு உயிர் தஞ்சம் கோரிய இளையோர்களில் பலர் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பல இளம் பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, அந்த அவலங்களை வெளியே சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

இவ்வாறான பின்புலத்தில் உயர் தஞ்சம் கோரி, அகதி முகாமில் தங்கியுள்ள அவலப் பெண்ணொருவர் எமது பதிவு செய்தியாளருக்கு எழுதிக்கொடுத்துள்ள கடிதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

 

வணக்கம்,


உயிர் காக்கவென்று கூறி காடு கடந்து உயிரை பணயம் வைத்து இன்று அகதி முகாமில் சிறைவைக்கப்பட்ட நிலையில் குடிக்கும் கஞ்சிக்கும், தண்ணீருக்கும் யாரையும் காத்திருக்கும் நிலையில் நான் யாரை நோவது.

 

உன்னில்தான் கோபம் தாயே. வேண்டாம் அவள் பாவம். அவள் வாழ்க்கை அடுப்பை சுற்றியும், வீட்டு வளவைச் சுற்றியும்தான் இருந்தது.

 

தந்தையே நீங்கள் தான் நாடறிந்தவர்கள். உலகம் புரிந்தவர். பல ஊர் தெரிந்தவர். கயவரையும் தெரியும் நல்லவர்களையும் தெரியும் என்று சொன்னவரும் நீங்கள் தான். இவ்வுலகில் நாம் நின்மதியாய் வாழ்ந்து சாவதற்கு பிறந்தவர்கள் என்று தத்துவம் பேசியதும் நீங்கள் தான்.

 

அன்றும் நீங்கள் சிங்களப்பிடிக்குள் இருந்ததும் தெரியும். அது இன்னும் முடியவில்லை எனவும் தெரியும். 50, 60, 70, 80 களில் என தொடரும் தமிழின அழிப்பும் தெரியும். பின்னர் உருவான தமிழரின் போர்படையும் அதனால் சிங்களவன் தமிழர் மீது கொண்ட காழ்ப்புணர்சியின் விளைவுகளும் நன்கு தெரியும்.

 

தமிழச்சியாய் பிறந்தது என் தவறா? இம்மண்ணில் உங்களின் பிள்ளையாய் பிறந்தது என் தவறா? அதனால்தானே எனக்கு தமிழச்சி என அடையாளம் வந்தது.

நான் பிறந்தபோது நீங்கள் மகிழ்ந்து சிரித்திருப்பீர்கள். பிரசவ வலிகண்டு அழுத அம்மாகூட சிரித்திருப்பார் எனது முதல் அழுகை கேட்டு.

 

நான் இன்றுவரை அழுகின்றேன். எனக்காக அல்ல உங்களுக்காகவும் அல்ல. யாருக்காக என்று தெரியாமல் எதற்காக என்றும் புரியாமல் அழுகின்றேன். இது தொடருமா அதுவும் தெரியாமல். அன்று முதல் தொடர்கின்றது எனது அழுகை மட்டுமல்ல. என்போல் தமிழராய் பிறந்த ஒவ்வொரு பிள்ளையின் அழுகையும் வாழ்க்கையும் தான்.

 

83 கலவரத்தில் தமிழனை கொன்றார்கள், எரித்தார்கள், புதைத்தார்கள், உயிருடன் புதைத்தார்கள், குழந்தையை எண்ணையிலிட்டு வறுத்தார்கள்... இது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும்.

 

தன் ஒரு உரோமத்தினை கவர்ந்தாலும் இறக்கும் கவரிமான் என்று நீங்கள்தான் சொல்லிக் கொடுத்தீர்கள். இல்லாத ஒரு விலங்கு பற்றி எதற்கு சொன்னீர்கள்?.. அதன் தன்மானம் பற்றி எனக்கு கூறத்தானே!. நாம் காணாத கட்டைபொம்மனைப்பற்றி கூறி பெருமிதப்படடீர்கள், எதற்கு அவன் தன்மானத்தை எனக்கு சொல்லித்தரத்தானே.

 

இன்று என்மானம் கவர காத்திருப்பவன் காலடியில் நீங்களும் சரணாகதியடைந்து என்னையும் எங்கள் வழியில் இட்டுவிட்டீர்கள் நான் இருப்பதா இறப்பதா?

 

இருமணம் முடித்த எம் ஊர் விதானையின் வீட்டுப்பக்கமே என்னை செல்லவேண்டாம் எனப்பணித்தீர்கள் ஏன்?

 

மாணவியை கரம்பிடித்த ஆசிரியர் வீட்டு வகுப்புக்களை தடுத்தீர் எதற்கு? நீ அங்கு சென்றால் எம் மானம் போய்விடும் என்று கூறித்தானே. இன்று என் நிலையென்ன?

 

காமக்கண் கயவர் சுற்றிநிற்க, சந்தர்ப்பம் பார்த்து எம்மை அழிக்க காத்திருக்கும் முகாம் எனக்கூறப்படும் சிறையில் குடும்பமாய் நாம்..

 

விசாரணை என்று பத்து முறை தினமும் அவன் என்னை தனியே அழைத்து செல்கின்றான். பார்த்து சும்மாதானே இருக்கின்றீர்கள்?

 

அன்று சந்தியில் பரப்புரை நடக்கின்றது என்று எனக்கு காவலுக்காய் பலமுறை நடந்திருப்பீர்கள் நான் மறக்கவில்லை. இன்று அந்த சிங்களவன் தப்பாய் என்னை தொட்டிட முனைகையில் கூனிக் குறுகி ஏன் உள்ளுக்குள் அழுகின்றீர்.

 

ஏறிகணை வீழ பதுங்ககழியில் அங்கு இருந்தாலும் ஆறுதல் கூற சுற்றம் இருந்தது. மாமா, மாமி, மச்சான், மச்சாள் எறிகணை வீழ்ந்தபின் காயம் பட்டவர் உண்டா எனத் தேடிவரும் அண்ணன்கள், அக்காக்கள், மருந்து இல்லாவிடிலும் ஆறுதல் வார்த்தைகளால் மருந்திடும் அந்த வைத்திய குழுவினர் என இப்படி பலர்...

 

இங்கு பக்கத்தில் உள்ளவருடன் பேசுகிலும் அனுமதி வேண்டும். காலைக்கடன் கழிக்க காவலுக்கு அவன் வரவேண்டும். காயத்துக்கு மருந்து போடவும் கேட்க வேண்டும். காய்ச்சல் கடுமையானால் பெரியதுரை அனுமதி வேண்டும். மருந்தெடுக்க.. அதைக்குடிக்க தண்ணீர் எடுக்கவும்தான்.

 

எனது பாட்டி, பாட்டன் இன்புற வாழ்ந்திருந்த வீடு அது. அனாதையாய் நிற்கின்றது. நினைக்கவே நெஞ்சு அடைக்கின்றது. பூட்டன் விளைத்து விதைந்த நிலமது இன்று மலடாய் கருகிக்கிடக்கின்றது. அவர் சொன்னாரா அதை கருக விடச் சொல்லி. அல்லது இயற்கைதான் ஏமாற்றி நின்றதா விதைப்பை கைவிடச் சொல்லி.

 

தந்தையே நீ நம்பிய சிங்கள அரசுகளும் அரசியல் வாதிகளும்தான் காரணம். இப்போது புரிந்திருக்கும் உனக்கு. மாதச்சம்பளத்துக்காய் நீ ஏமாறிவிட்டாய் ஏமாற்றப்பட்டாய்.

 

அன்று அயல்வீட்டு எல்லை ஒரு இஞ்சி நகர்ந்துபோது காவல்துறைக்கு பல மாதம் நடையாய் நடந்தீர்கள். இன்று யாரோ எல்லை தாண்டி எம்மை வீட்டைவிட்டு கலைத்த பின்னரும் அமைதியாய் எம்மை நடுத்தெருவில் விட்டு நிற்கின்றீர் நீங்களும்.

 

வழி தவறி வயலுக்கு வந்த பசுக்கன்றைக் கட்டிவைத்து, காசு கேட்டு பலநாள் சண்டைக்கு அலைந்தீர்கள். இன்று என்னையே கட்டி வைத்து உங்களிடம் காசு கேட்க காத்திருக்கின்றார்கள் என்ன செய்ய போகின்றீர்.

எல்லாம் உனக்காக என இதுவரை சொல்லி வந்தீர்.. இன்று எனக்காக எது என எனக்கு புரியவில்லை...

 

இந்த அகதி முகாம் வாழ்க்கை..... எப்போது கொல்லுவார்கள் எனத் தெரியாது காத்திருக்கும் கசாப்புக்கடை ஆட்டின் வாழ்க்கையாக இருக்கின்றது. சூறையாடப்படுமா என மானம் என ஏங்கி நிற்கும் எனது வாழ்க்கை வெளியே புரிகிறதா?

 

இதுதான் நீங்கள் எனக்கு சேர்த்து வைத்த இறுதிச் சொத்தா. வீடு உண்டு விதைக்க நிலமுண்டு எனக்கு என்ன கவலை என அடிக்கொரு தடைவ சொல்லி வந்தீர்கள். இன்று அவை எல்லாமே சேர்ந்து கவலை தருகின்றது எங்களுக்கு. யார் நிலத்தில் யார் வாழ வந்தாய் என்று சிங்களவன் எமைப்பார்த்து கேட்கின்றான்.

 

உண்மையில் நீங்கள் வந்தேறு குடியா, இல்லை சிங்களவன்தான் விஜயனின் வழியா? உண்மையை கூறிவிடுங்கள். அவன் தன் வரலாற்றில் தெளிவாக விஜயனின் வழி என்று சொல்லிவிட்டு, நாட்டுக்காய் சண்டைசெய்ய..... இன்றும் வீட்டுக்குள் உயிர் காக்க வேண்டும் என்று நீங்கள் பதுங்கியிருக்கின்றீர். கேட்டால் வீண் வம்பு எதற்கு என்றும் சொல்லுகின்றீர்கள? நேற்றுவரை அது வீண் வம்பாக இருக்கலாம். அவன் எம் வீட்டில் இருந்து எம்மை கலைத்த பின்னரும்  அது ஊர் வம்பா?

 

உங்களுக்கு உங்கள் வாழ்க்கையின் முக்கால் பகுதி முடிந்து விட்டது. இனித்தான் என்வாழ்வு ஆரம்பிக்க உள்ளது. எந்த நம்பிக்கையில் நான் வாழ்வது. யாரை நான் நம்புவது.எதற்காக இனி வாழ்வது?

 

இறுதியாக ஒன்று சொல்லுகின்றேன். நாம் அன்று எறிகணையில் அகப்பட்டு இறந்திருந்தால், அல்லது விடுதலைப்புலிப் போராளியாக குண்டுபட்டு இறந்திருந்தால் வீரமரணம் ஆகியிருக்கும் எமது முடிவு. இன்று நிச்சயம் எம் மரணம் அடிமை மரணம் ,கோழைச்சாவு மறக்காதீர்.

 

இது நானாக தேடிக் கொண்டதல்ல... நீங்களாக, சிறியவள் எனச்சொல்லி உடன்பாடு இன்றி என்னிடம் திணித்தது. என்னை சிந்திக்கவிடாது தடுத்து நீங்கள் கொடுத்தது. எனது கருத்தை கேட்காது உங்கள் சொல்லுக்கு கீழ்ப்படியச் செய்து எனக்கு தந்துவிட்ட நான் வேண்டாத பரிசு.

 

இப்பூமியில் உயிரிழந்து வீழ்ந்தாலும் நாம் பிணம். ஏன் தற்போதும் நாங்கள் எல்லோரும் நடைபிணம்தான். குறிப்பாக உங்கள் போன்ற பெற்றோரால் பாசம் என்னும் போர்வையில் அடைகு வைக்கப்பட்டுள்ள நானும் என்போன்ற பல பெண் பிள்ளைளும், ஏன் ஆண்களும் கூடத்தான் இன்று நடை பிணங்கள்.

 

எம்மை சுதந்திரமாய் நீங்கள் செயற்பட விடவுமில்லை, நாம் செயற்பட்டதும் இல்லை. விடுதலைப்போராட்டத்தில் எங்களை துளிகூட பங்கெடுக்க நீங்கள் விட்டதும் இல்லை... இன்று முகாமில் நடக்கும் பதிவுகளில் என் பெயர் எங்கு இணைப்பட்டு்ள்ளது என உங்களுக்கு தெரியுமா? ..... பயிற்சி பெற்ற போராளியின் பட்டியலில்தான் நானும்.

 

ஏன் நீங்கள் சிங்களப் படைக்கு உண்மையைச் சொல்லவில்லை?  இதனால் தான் சொல்கின்றேன்... என்னை நீங்கள் சிங்களவனிடம் அடகு வைத்து விட்டீர்கள். என் இறப்பு உங்கள் முன்னால்தான் கோரமாக நிகழும். அதைப்பார்த்த பின்னராவது ஏனைய பெற்றோருக்கு சொல்லுங்கள்... எம் இனத்திற்கு விடிவு வேண்டும். அதற்கு உயிர்காத்து மட்டும் போதாது, உணர்வுடன் எமது எல்லையையும் காக்கவேண்டும் என்று.

 

யார் பிள்ளையும் எல்லை காத்து நிற்க, என் பிள்ளை மட்டும் வாழ வேண்டும் என எண்ணி உங்கள் பிள்ளைகளை தன்மானம் இழந்து காட்டுமிராண்டிகளிடம் அடகு வைக்காதீர். தயவுசெய்து உயிர் காக்கவென்று கூறி, உயிரை பணயம் வைத்து மிதிவெடிகளுக்குள்ளாலும், காடுகள் வழியாகவும் இனியும் உங்கள் பிள்ளைகளை அழைத்து வராதீர்கள்.

 

உயிரோடு வாழவென்று எண்ணி, உங்கள் பிள்ளைகளின் உயிரையும், தன்மானத்தையும் உயிரிலும் மேலாக போற்ற வேண்டும் என்று நீங்கள் சொல்லித்தந்த மானத்தினையும் அடகு வைக்காதீர்.

 

குறிப்பாக... எவனிடம் இருந்து எமக்கு அதிகம் துன்பம் வரும் என்று நீங்கள் கூறினீர்களோ, அவர்களிடம் எம்மை அடகு வைக்காதீர்கள்.

 

என் இனிய தமிழ் இளைய நண்பர்களே இனியாவது நியாத்தினை புரிந்து செயற்படுங்கள்.

 

இது எனது சுடலைஞானமாக இருக்கலாம். ஆனால் இதனால் நீங்கள் விழிப்படையுங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எதிர்காலத்தினையும் காத்து, நின்மதியாய் வாழ வழி தேடுங்கள் தேடிச் செல்லுங்கள்.

 

இறுதி நாட்களை எண்ணி முகாமில் வாடும் ஒரு இளம் தமிழ் பெண்

http://www.pathivu.com/news/342/54/.aspx

StumbleUpon.com Read more...

புலிகளின் முழு பெலத்தையும் வைத்து போரிடாத மர்மம் என்ன? ஒரு சிறிய ஆய்வு

புலிகள் தமது முழுப் பலத்தையும் பாவிக்கின்றார்களா?
 
.வழுதி என்பவர் அண்மையில் எழுதிய மூன்று கடிதங்கள் பலர் மத்தியில் பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன. இணையத்தளங்களின் ஊடாக பல மக்களைப் போய்ச் சேர்ந்த இந்தக் கடிதங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன. இந்தக் கடிதங்களில் வரவேற்கத்தக்க அம்சங்கள் பல உண்டு. ஆயினும் ஓரிரு விடயங்கள் எனக்கு சற்று நெருடலை ஏற்படுத்தி விட்டன.

இரண்டாவது கடிதத்தில் ""புலிகள் தம்மிடம் உள்ள எல்லாவற்றையும் பாவித்துப் போராடுகிறார்கள், தமது சக்திக்கு மீறி எல்லாவற்றையும் செய்து போரிடுகின்றார்கள், தமது எல்லாப் போராளிகளையும், எல்லாப் படையணிகளையும் எல்லா முனைகளிலும் களத்தில் இறக்குகின்றார்கள்" என்கின்ற ஒரு "செய்தியை" குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாவது கடிதத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தமது நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களை முற்றுகையிட வேண்டும் என்றும், "தமிழீழமே இந்தியாவின் உண்மையான நட்பு நாடு" என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று ஒரு "ஆலோசனையையும்" கூறியிருந்தார். இந்த இரண்டு விடயங்கள் பற்றியும் என்னுடைய சில கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

விடுதலைப் புலிகள் தமது அனைத்து பலத்தையும், வளங்களையும் பயன்படுத்தி போரிடுகின்றார்கள் என்னும் செய்தியை தன்னுடைய ஊகிப்பின் அடிப்படையில் கூறவதாகச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால் "வன்னியின் உண்மை நிலை இதுதான்" என்று உறுதியான முறையில் கூறுகின்றார். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. எதிரியின் திட்டத்தை நிறைவேற்றுவது போன்று விடுதலைப் புலிகள் ஒரு போதும் போரிடுவது இல்லை.

இன்றைய நிலையில் விடுதலைப் புலிகள் அனைத்து பலத்தையும் வளங்களையும் பயன்படுத்தி போரிட்டால், அது எதிரியின் திட்டத்தை நிறைவேற்றுவதாகவே இருக்கும். தமது பலத்தை பாதுகாப்பதை முதன்மையாகக் கொண்டே விடுதலைப் புலிகள் போரை எதிர்கொள்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் தமது அனைத்து பலத்தையும் வளங்களையும் பயன்படுத்தி நடத்திய போர்களும் உண்டு. உதாரணமாக ஓயாத அலைகள் மூன்றைச் சொல்லலாம். அதில் விடுதலைப் புலிகளின் அனைத்துப் படையணிகளும், அனைத்து விதமான ஆயுதங்களும், வளங்களும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இறுதி நிகழ்வில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் ஒரு செய்தியைக் குறிப்பிட்டிருந்தார்.

குடாரப்பு தரையிறக்கத்திற்கான தயார்படுத்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 1500 போராளிகளையும் அவர்களின் ஆயுதங்களையும், அவர்களுக்கு தேவையான மற்றைய பொருட்களையும் கடலால் கொண்டு சென்று இறக்க வேண்டும். இந்தப் பணிகளை செய்வதற்கு நுற்றுக் கணக்கான படகுகள் பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன் பல சண்டைப் படகுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

இந்த நிலையில் சிறப்புத் தளபதி சூசை பிரிகேடியர் பால்ராஜிடம் கூறிய தகவல் இதுதான். "உங்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு மட்டுதான் எம்மிடம் உள்ள எரிபொருள் போதும்". அதாவது குடாரப்பில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளுக்கு ஏதும் பிரச்சனை என்றால், அவர்களை மீண்டும் கடலால் அழைத்து வர முடியாது. தம்மிடம் உள்ள கடைசி வளங்களையும் பயன்படுத்தி ஓயாத அலைகள் மூன்றை விடுதலைப் புலிகள் நடத்தினார்கள்.

அனைத்து வளங்களைப் பயன்படுத்தினாலும், அடி வாங்கித் தோற்றோடிய சிறிலங்காப் படைகளால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பதில் தாக்குதல் எதையும் பெரியளவில் செய்ய முடியாது என்பதை சரியாக கணித்தே அதைச் செய்தார்கள். அதே வேளை அனைத்து வளங்களையும் பாவித்து விட்டு நிற்கின்றோம் என்னும் எச்சரிக்கை உணர்வே விடுதலைப் புலிகளை யாழ் குடாவிற்குள் தொடர்ந்தும் முன்னேறாது தடுத்தது.

பின்பு சிறிலங்கா அரசு உலகநாடுகளிடம் இருந்து பல்குழல் பீரங்கிகள் உட்பட பல நவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்து சாவகச்சேரி, அரியாலை போன்ற இடங்கள் மீது படைநடவடிக்கையை மேற்கொண்டது. இதில் இழப்புக்களை சந்தித்த விடுதலைப் புலிகள் அப் பகுதிகளில் இருந்து பின்வாங்க வேண்டி நேர்ந்தது.

ஆயினும் சில மாதங்கள் கழித்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட தீச்சுவாலை நடவடிக்கையை விடுதலைப் புலிகள் சிறந்த திட்டமிடலோடு எதிர்கொண்டு சிறிலங்காப் படைகளை ஒரு பொறிக்குள் வீழ்த்தி பெரும் அழிவுக்கு உள்ளாக்கி முறியடித்தார்கள். ஏற்கனவே ஓயாத அலைகள் மூன்றில் ஏற்பட்ட இழப்போடு, தீச்சுவாலை முறியடிப்பும் கட்டுநாயக்க விமானத்தளத் தாக்குதலும் சேர்ந்து சிறிலங்காப் படையினரை முடக்கிப் போட்டது.

தம்முடைய நடவடிக்கை சிறிலங்காப் படைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் எழ விடாமல் செய்யும் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே, விடுதலைப் புலிகள் தமது முழ வளங்களையும் ஒருங்கிணைத்து பெரும் சமர்களை செய்வார்கள். சிறிலங்காப் படைகள் முடங்கிக் கிடக்கும் அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் தமது படையணிகளை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்பதே இதற்குக் காரணம்.

இன்றைய நிலையில் தற்காப்புச் சண்டைகள் என்றாலும் சரி, வலிந்த தாக்குதல்கள் என்றாலும் சரி, விடுதலைப் புலிகள் தமது அனைத்து வளங்களையும் பலத்தையும் பயன்படுத்துவது சரியான உத்தியாக அமையாது என்றே கருதப்படுகின்றது. இன்றைக்கு விடுதலைப் புலிகள் தமது அனைத்து படையணிகளையும், வளங்களையும் பயன்படுத்தி சிறிலங்காப் படைகள் மீது தாக்குதல் தொடுத்தால், விடுதலைப் புலிகளால் பல பகுதிகளை மீட்க முடியும். சிறிலங்காப் படைகளும் பின்வாங்கி ஓடும்.

ஆனால் சிறிலங்காவிற்கு முண்டுகொடுத்து போரை நேரடியாக நடத்தும் இந்தியாவும், மற்றைய உதவிகளை செய்து வரும் வல்லரசு நாடுகளும் உடனடியாகவே சிறிலங்காப் படைகளை மீளப் பலப்படுத்தி விடும். தன்னுடைய படையினரை நேரடியாக களத்தில் இறக்கியிருக்கும் இந்தியாவும் உடனடியாகவே மேலதிக படையினரை தருவித்து ஆட்பலப் பிரச்சனையையும் தீர்த்து வைக்கும்.

தமது அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, அனைத்துப் படையணிகளையும் களம் இறக்கி பெரும் சண்டையை நடத்திய விடுதலைப் புலிகள் ஆட்பலத்திலும் ஆயுதபலத்திலும் கண்டிருக்கக் கூடிய சேதங்களை சரி செய்வதற்குள் சிறிலங்காப் படைகள் மீண்டும் அசுர பலத்தோடு எழுந்து நிற்கும். இப்பொழுது மீண்டும் தாக்குதல் நடத்தி பலவீனப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளை முழுமையாக தோற்கடித்தும் விடுவார்கள்.

ஆகவே அனைத்து வளங்களையும் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் நடத்தக் கூடிய சண்டை, கடைசியில் அவர்களுக்கு பாதகமாக முடியக் கூடிய நிலையே தற்பொழுது காணப்படுகின்றது. விடுதலைப் புலிகள் தமது கடைசிப் பலத்தையும் பயன்படுத்தி போரிட வேண்டும் என்றுதான் சிறிலங்காவும், அதன் நட்பு சக்திகளும் விரும்புகின்றன. ஆனால் அதை விடுதலைப் புலிகள் ஒரு போதும் செய்ய மாட்டார்கள்.

விடுதலைப் புலிகள் தமது பலத்தை முடிந்தளவு பாதுகாத்தபடியே, போரின் எல்லைகளை விரிவுபடுத்தி, எதிரிக்கு பெரும் இழப்பைக் கொடுத்தபடி போரை நீடித்துக் கொண்டு போவார்கள் என்பதே இன்றைக்கு எதிர்பார்க்கக் கூடிய ஒன்று. இந்திய அரசு இந்தப் போரில் இருந்து விலகும் வரை இதைத் தவிர வேறு வழியேதும் இருக்கப் போவதில்லை. அந்த வகையில் இந்திய அரசை இந்தப் போரில் இருந்து விலகச் செய்வதற்கான வேலைகளில் இறங்க வேண்டியதே அனைத்துத் தமிழர்கள் முன் உள்ள பெரும் பணியாக இருக்கின்றது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களை முற்றுகை இடலாம் என்று திரு வழுதி அவர்கள் யோசினை சொல்லியுள்ளார். அதையும் செய்யலாம். ஆனால் அது மட்டுமே போதுமானது அன்று. உலகில் உள்ள இந்தியத் தூதரகங்கள் என்பவை இந்திய அதிகார மையத்தை பிரதிநிதித்துவம் செய்பவையாக இருப்பவை. இந்தியாவின் ஆட்சியில் உள்ள அரசாங்களை பிரதிநிதித்துவம் செய்பவை அல்ல. அரசாங்கங்கள் மாறிக் கொண்டிருப்பன. அரசு என்பது மாறுவது இல்லை. இந்திய அரசை இயக்கிக் கொண்டிருக்கும் இந்திய அதிகார மையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரகங்களை முற்றுகையிடுவது ஒரு அளவுக்கு மேல் பலனைத் தரப் போவது இல்லை.

ஒரு நாடு தன்னுடைய நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடாக இந்திய அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கலாம். ஆனால் அந்த நாட்டில் வாழும் ஒரு சிறு தொகையைக் கொண்ட புலம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தினால் குறிப்பிடக் கூடிய அழுத்தம் எதையும் கொடுக்க முடியாது. மின்னஞ்சல்கள் அதற்கான குப்பைத்தொட்டிக்குள் போனால், கடிதங்களும் அதற்கென்று உள்ள குப்பைத்தொட்டிக்குள் போகும். அவ்வளவுதான்.

"தமிழீழம்தான் இந்தியாவின் உண்மையான நண்பன்" என்று இந்தியாவிற்கு விளங்கப்படுத்தலாம் என்று நம்புவதும் அர்த்தமற்றதாகவே இருக்கின்றது. நாம் சொல்லும் காரணங்கள் இந்தியாவிற்கு புரியவில்லை என்று உண்மையிலேயே யாராவது நம்புகின்றீர்களா? இந்தியாவில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் அத்தனை முட்டாள்களா?

தன்னுடைய நலன்களை முன்னிலைப்படுத்தும் இந்திய அதிகார மையம் இந்திய அரசை வழிநடத்துவதே இன்றைய பிரச்சனைகளுக்கு காரணம். இவர்களுடைய நலன்கள் வேறு வகையானவை. பனிப்போர் காலத்தில் இருந்த இந்திய நாட்டின் நலன்களைப் பற்றி நாம் இன்றைக்கும் இவர்களோடு பேசிக் கொண்டிருப்பதில் பலன் ஏதும் இல்லை.

"நாங்கள்தான் உங்கள் நண்பன்" என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தால், அவர்களிடம் இருந்து ஒரு நமுட்டுச் சிரிப்புத்தான் வருமே தவிர, வேறு ஒன்றும் நடக்கப் போவது இல்லை.

தமிழீழம் உருவாவது இந்திய அதிகார மையத்தின் நலன்களுக்கு எதிரானது என்று அவர்கள் கருதுகிறார்கள். நீண்ட கால நோக்கில் தமது இருப்பைப் தமிழீழத்தின் உருவாக்கம் பாதிக்கும் என்று அவர்கள் கருதுகின்றார்கள். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் ஆட்சியைக் குழப்புவதற்கு இவர்கள் செய்கின்ற சதி வேலைகளும் இது போன்ற கருத்தின் அடிப்படையிலானதே.

இந்திய அதிகார மையத்தின் நலன்களுக்கு ஏற்றபடி எம்மால் நடக்க முடியாது என்பதும், அப்படிச் செய்வதானது எமது விடுதலைப் போராட்டத்தையே காவு கொடுப்பதற்கு ஒப்பானது என்பதுமே யதார்த்த நிலையாக இருக்கின்றது.

இந்த நிலையில் இந்திய மக்களினதும், உலக மக்களினதும் மனச் சாட்சியைத் தட்டியெழுப்பும்படியான அறப் போராட்டங்களை தொடர்வதோடு, தமிழ்நாட்டிலும் உலகின் மற்றைய நாடுகளிலும் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து இந்திய சிறிலங்கா அரசுகளின் இனவழிப்பு யுத்தத்தை எதிர்கொள்வதுதான் இன்று எமக்கு முன் உள்ள வழி.

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

134 தமிழர்கள் படுகொலை; 208 பேர் காயம், படுபாதக செயல்

 

மரண வலயமான புதிய "பாதுகாப்பு வலயம்": வன்னியில் நேற்றும் இன்றும் 134 தமிழர்கள் படுகொலை; 208 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு , புதுமாத்தளன், ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர்.
கோம்பாவில்

கோம்பாவில் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10:15 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் கொத்துக் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் மகேந்திரன் மற்றும் பத்மநாதன் ஆகியோரின் குடும்பங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

மகேந்திரன் சுபாஜினி (வயது 14)

மகேந்திரன் சஞ்சீவன் (வயது 20)

செல்லையா மகேந்திரன் (வயது 80)

மகேந்திரன் சுலோசனாதேவி (வயது 51)

மகேந்திரன் சோபிதா (வயது 26)

மகேந்திரன் தயாளினி (வயது 25)

செல்லையா இராசம்மா (வயது 69)

வி.பத்மநாதன் (வயது 38)

பத்மநாதன் தமிழனி (வயது 01

பத்மநாதன் ரேணுசா (வயது 03)

பத்மநாதன் கோகிலராணி (வயது 06)

பத்மநாதன் சோதிஜா (வயது 09)

பத்மநாதன் கேதீஸ்வரி (வயது 31)

ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் உடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
புதுமாத்தளன் - சனிக்கிழமை இரவு

சிறிலங்கா படையினரின் "பாதுகாப்பு வலயம்" என்ற அறிவிப்பை அடுத்து புதுமாத்தளன் பகுதியில் மக்கள் மிகச் செறிவாக அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் அவர்களை கொன்றொழிக்கும் நோக்குடன் தாக்குதகள் சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

புதுமாத்தளன் நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்தும் அப்பகுதி மக்கள் வாழ்விடங்களை இலக்கும் வைத்தும் சிறிலங்கா படையினர் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 12 சிறுவர்கள் உட்பட 78 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 132 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுமாத்தளன் - ஞாயிற்றுக்கிழமை காலை

புதுமாத்தளன் "மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுமாத்தளன் - ஞாயிற்றுக்கிழமை மாலை

இதே பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழைமை பிற்பகல் 3:00 மணியளவில் பொதுமக்களை நோக்கி சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் -

யோ.ஜெகதீபன் (வயது 16)

செல்வராசா செல்வகுமார் (வயது 32)

சி.திருச்செல்வம் (வயது 33)

சு.குகாஜினி (வயது 35)

பு.இராசம்மா (வயது 55)

சோ.யோகானந்தராசா (வயது 47)

வ.நிசாந்தன் (வயது 26)

சி.காமினிதேவி (வயது 63)

சி.நாகவதனி

ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் - இரண்டு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரின உடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் மக்கள் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியில் உள்ள மக்கள் வாழ்விடம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலவன்பொக்கணை

அம்பலவன்பொக்கணை "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதி மீது இன்று ஞாயிறு இரவு 7:35 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியதில் ஒரு சிறுவன் உட்பட 5 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு

புதுக்குடியிருப்பு பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து நேற்று சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத்தாக்குதலில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 5 சிறுவர்களும் 4 பெண்களும் அடங்குவர்.

பூநகரியைச் சேர்ந்த இவர்களின் 3 குடும்பத்தினரும் ஒன்றாக இடம்பெயர்ந்து பல இடங்களில் தங்கியிருந்து, கடைசியாக புதுக்குடியிருப்புக்கு வந்து தற்காலிக கொட்டகை கட்டி தரித்திருந்த வேளையில் சிறிலங்கா படையினர் இவர்கள் மீது கொத்துக்குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உடலங்கள் அந்த இடத்திலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் அவர்கள் தற்காப்புக்காக வெட்டியிருந்த திறந்த காப்பகழிகளில் அடக்கம் செய்யப்பட்டன.



http://www.tamilwin.com/view.php?2a46QVb4b3bP9ES34d3IWnT2b02V7GGe4d24YpDce0ddZLuIce0dg2hr2cc0lj0W3e

StumbleUpon.com Read more...

பிரபாகரனின் மகன், தலைமை தாங்கி போரை நடத்துகிறார்: இலங்கை அரசு பத்திரிகை

 





வன்னி பகுதியில், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி தலைமை தாங்கி போரை நடத்துவதாக இலங்கை அரசு பத்திரிகையான சண்டே அப்சர்வரில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது, விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுக்கு மதிவதினி என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் உள்ளனர்.

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி, அயர்லாந்தில் ஏரோ நாட்டிக்கல்' என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து திரும்பியவர். விடுதலைப்புலிகள் அமைப்பில் விமானப்படை பிரிவை (வான் புலிகள்) தொடங்கி அதன் தலைவராக வழிநடத்தி வருகிறார். விடுதலைப்புலிகளின் கணினி பிரிவு தலைவராகவும் சார்லஸ் செயல்பட்டு வருகிறார்.


வான் புலிகள், கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், கொழும்பில் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் உள்ள சிங்கள விமானப்படை தளத்தில் நடத்திய விமான தாக்குதல் உலகை வியக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது வன்னி பகுதியில் நடைபெறும் போரை, பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணிதான் தலைமை தாங்கி நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜனவரி 28ஆம் தேதி அன்று, இரணை மடு அணையின் கரையை நீருக்கு அடியில் குண்டு வைத்து தகர்க்க முயன்ற விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையை சேர்ந்த இரண்டு கரும்புலிகள் ராணுவத்தினரிடம் பிடிபட்டதாகவும், இலங்கை அரசு பத்திரிகையான சண்டே அப்சர்வர்' அவர்கள் இருவரிடமும் பேட்டி கண்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி தலைமை தாங்கி போரை நடத்தும் தகவல் இடம் பெற்றுள்ளது. பிரபாகரன் போர் முனை பகுதியில் (வன்னி) இருக்கிறார் என்றும், விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளான பானு, லட்சுமணன் ஆகியோர் சார்லஸ் அந்தோணிக்கு உதவியாக இருந்து வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பிரபாகரன், அவருடைய மனைவியையும், 10 வயதான பாலச்சந்திரன் என்ற இளைய மகனையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் அந்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பிரபாகரனின் 20 வயதான ஒரே மகள் துராஹா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.

மேலும் அந்த பேட்டியில், சிங்கள ராணுவத்துக்கு ஆதரவாக, விடுதலைப்புலிகள் பொது மக்களை கேடயமாக பயன்படுத்தி போரிடுவதாகவும் சிறுவர்களை மூளைச்சலவை செய்து கரும்புலிகளாக மாற்றுவதாகவும், பிடிபட்ட இருவரும் கூறியிருப்பதாக  சண்டே அப்சர்வர் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

அணையை தகர்ப்பது பற்றி சார்லஸ் அந்தோணியும், கடற்புலிகள் பிரிவு தலைவர் சூசையும் தங்களுக்கு விளக்கியதாகவும், அணை உடைக்கப்பட்டு இருந்தால், சிங்கள ராணுவத்துக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டு இருக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3562

StumbleUpon.com Read more...

ஈழப்பிரச்சனை: தேவாலயங்ளில் மெழுகுவர்த்தி ஏந்தி பிராத்தனை

 







இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பாளையங்கோட்டை மறைமாவட்டத்தை சேர்ந்த 9 கத்தோலிக்க தேவாலயங்கள் சார்பில் பாளை. மார்க்கெட் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
 

இதேபோல் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமேஸ்வரம், சென்னை என தமிழகத்தின் பெரும்பாலன இடங்களில் கத்தோலிக்க தேவாலயங்கள் சார்பில் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் பிராத்தனை செய்தார்கள்
 
 

StumbleUpon.com Read more...

ஜுனியர் விகடன் கவர் ஸ்டோரி:'தாய் தமிழகம் எப்படியாவது தங்களைக் காப்பாற்றிவிடும்'

இலங்கையில் உருவாகும் வதை முகாம்கள்?: 
''முல்லைத் தீவில் இருக்கும் தமிழர்களை யெல்லாம் கடலில் தள்ளுகிற நாளில் நீங்கள் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை ஏற்றுங்கள்!'' என்று ராஜபக்ஷ சிங்களர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த நாளுக்கான ஏற்பாடுகளை இப்போது சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. முல்லைத்தீவில் உள்ள தமிழர்களில், படுகொலை செய்ததுபோக மிச்சம் மீதி இருப்பவர்களை வதை முகாம்களில் நிரந்தரமாகத் தங்கவைப்பதற்கு சிங்கள அரசு திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக ஐந்து வதை முகாம்கள் அமைக்கப்பட இருக்கின்றன. ஹிட்லர் உருவாக்கியது போன்ற இந்த வதை முகாம்களில், தமிழர்கள் நிரந்தரமாக சிறை வைக்கப்படுவார்கள். இதற்காக இரகசிய ஆவணம் ஒன்றைத் தயாரித்து சர்வதேச நாடுகளில் உள்ள தொண்டு நிறுவனங்களிடம் சிங்கள அரசு சுற்றுக்கு அனுப்பியிருக்கிறது. அதற்காக நிதி திரட்டும் முயற்சியில் அது ஈடுபட்டிருக்கிறது.

முல்லைத் தீவில் கடைசிக்கட்டத் தாக்குதலை நடத்துவதற்கு சிங்கள அரசு தயாராகிவிட்டது. அப்படி தாக்குதல் நடத்தப்பட்டால், குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் தமிழர்களாவது கொல்லப்படுவார்கள் என்று எல்லோருமே அச்சம் தெரிவிக்கிறார்கள். அவ்வளவு பேர் கொல்லப்பட்டால், அது சர்வதேச நாடுகளில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தும், அதனால் சிங்கள அரசுக்கு நெருக்கடி உருவாகும் என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பு.

தமிழர்கள் கொல்லப்படுவது வெளியே தெரிந்தால்தானே பிரச்சினை. அதை மூடி மறைத்துவிட்டால், சர்வதேச சமூகம் என்ன செய்யப்போகிறது என்ற ரீதியில் ராஜபக்ஷ திட்டம் தீட்டி வருகிறார். முல்லைத்தீவில் நடப்பதை வெளியே தெரிவிக்கும் அளவுக்கு இப்போது புலிகளின் தகவல் தொடர்பு பலமாக இல்லை. சிங்கள இராணுவம் என்ன சொல்கிறதோ, அதுமட்டும்தான் இப்போது வெளியே வருகிறது. இதனால்தான் ராஜபக்ஷ தன்னுடைய கடைசி 'கவுன்ட் டவுனை' ஆரம்பித்திருக்கிறார்.

உண்மை பேசினால் உதை:

போர் நடக்கும் இடங்களில் செஞ்சிலுவை சங்கத்தினரை அனுமதிக்க வேண்டும் என்பது சர்வதேச விதி. அதைக்கூட இப்போது சிங்கள அரசு மதிப்பதற்குத் தயாராக இல்லை. வன்னியில் இருந்து காயம்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பலோடு, அங்கு தங்கியிருந்த செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் இரண்டு பேர் வந்துவிட்டார்கள். அவர்கள் இருவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். வன்னியில் சுமார் இருபது பேர் அளவுக்குத்தான் செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் இருந்தார்கள். தற்போது வெளியேறியுள்ள அந்த இரண்டு பேரைத் தவிர, மற்ற எல்லோரும் உள்ளூர்க்காரர்கள்.

இராணுவத்தின் தாக்குதல்களைப் பற்றி உள்ளூர்க்காரர்கள் எவ்வளவுதான் சொன்னாலும், அதை சர்வதேச சமூகம் நம்பாது. வெளிநாட்டவர்கள் சொன்னால்தான் உண்மையென்று நினைப்பார்கள். மருத்துவமனைகளில் குண்டு வீசப்படுவதை செஞ்சிலுவை சங்கத்தினர்தான் வெளியுலகுக்கு எடுத்துச் சொன்னார்கள். அதுவும், தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை இலங்கை இராணுவம் பயன்படுத்துகிறது என்ற தகவல், அவர்கள் மூலம்தான் வெளி உலகுக்கே தெரிந்தது. இதே செய்தியை ஏற்கெனவே விடுதலைப் புலிகள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை சர்வதேச நாடுகள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. செஞ்சிலுவை சங்கம் இப்படி உண்மைகளை எடுத்துச் சொன்னதும் சிங்களவர்களுக்கு ஆத்திரம் வந்துவிட்டது.

ராஜபக்ஷவின் தூண்டுதலால் செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலகம் கொழும்பில் தாக்கி நொறுக்கப்பட்டது. இப்போது செஞ்சிலுவை சங்கத்தினரை இலங்கையை விட்டே விரட்டியடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சிங்கள அரசின் அச்சுறுத்தலால், இப்போது வன்னியைவிட்டு வெளியேறுவதென்று செஞ்சிலுவைச் சங்கம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் வெளியேறக்கூடாது என்று தமிழர்களெல்லாம் கெஞ்சிக் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை சிங்களப் பத்திரிகையாளர்கள் சிலர் வெளியுலகுக்குத் தெரிவித்து வந்தார்கள். அதில் ஒருவர்தான் லசந்த. அவருடைய படுகொலைக்குப் பிறகு, அங்கிருந்த சிங்களப் பத்திரிகையாளர்கள் பலரும் நாட்டைவிட்டு வெளியேறி, அயல்நாடுகளில் தஞ்சம் புகுந்துவிட்டார்கள்.
நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்த 'லங்கா டிசன்ட்' என்ற இணையத்தளம் மூடப்பட்டு விட்டது. இந்நிலையில், சிங்கள அரசின் இன அழித்தொழிப்பு பற்றிய செய்திகள், சர்வதேச செய்தி நிறுவனங்கள் மூலமாகத்தான் வெளியில் கசிந்து கொண்டிருந்தன.

அதிலும் குறிப்பாக பி.பி.சி., சி.என்.என் போன்ற நிறுவனங்கள் நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்தன. பி.பி.சி. 'தமிழோசை'யின் செய்திகள் இலங்கை வானொலி மூலம் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டு வந்ததால், இலங்கையின் பிற பகுதிகளில் உள்ள தமிழர்கள் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருந்தது. இதைத் தடுக்கவேண்டும் என்று முடிவு செய்த சிங்கள அரசு, இப்போது பி.பி.சி மறு ஒலிபரப்பை ரத்து செய்து விட்டது. அது மட்டுமல்லாமல் பி.பி.சி., சி.என்.என். போன்ற செய்தி நிறுவனங்களுக்கும் தடை விதித்து விட்டது.

சிங்கள இராணுவம் கொடுக்கின்ற செய்திகளைத் தவிர, இப்போது தனிப்பட்ட முறையில் யாரும் இலங்கையில் செய்தி சேகரிக்க முடியாது என்ற நிலை! அப்படி யாராவது முயற்சித்தால், அவர்களை காலி செய்வதற்கும் சிங்கள அரசு ஏற்பாடு செய்துவிட்டது. இந்தியாவிலிருந்து இலங்கை அரசாங்கத்தால் அழைத்துச் செல்லப்படுகிற பத்திரிகையாளர்கள்கூட, அங்கே சிங்கள இராணுவம் என்ன செய்தியைக் கொடுக்கிறதோ, அதை மட்டுமே வெளியிட வேண்டிய நிலை. இப்படி இப்போதே முழுமையான இருட்டடிப்பு. முல்லைத்தீவில் நடக்கவிருக்கும் மாபெரும் இனப்படுகொலை இனிமேல் வெளியுலகுக்கு தெரியவருவது என்பது சந்தேகமே.

'ஹிட்லரின் மறு உருவம்' என்று ராஜபக்ஷவை தமிழர்கள் வர்ணிப்பதுண்டு. அது பொய்யில்லை. அவர் தன்னுடைய டெக்னிக்குகளை ஹிட்லரிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறார். முல்லைத்தீவில் தற்போது சிக்கிக்கொண்டிருக்கும் தமிழர்களில் குறைந்தது ஐம்பதாயிரம் பேரையாவது கொல்வது... மிச்சமிருப்பவர்களை சிறைப்பிடித்து, நிரந்தரமாக வதை முகாம்களில் அடைத்து வைப்பது என்பதுதான் அவருடைய திட்டம். இதற்காக ஐந்து வதை முகாம்களை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். வவுனியா மாவட்டத்தில் நான்கு வதை முகாம்களையும், மன்னார் மாவட்டத்தில் ஒரு முகாமையும் அமைப்பதற்கு சிங்கள அரசு முடிவு செய்திருக்கிறது.

இதற்காக வவுனியாவில் ஆயிரம் ஏக்கர் நிலமும், மன்னாரில் நூறு ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வதை முகாம்களில் முப்பத்தொன்பதாயிரம் தற்காலிக வீடுகள், ஏழாயிரத்து எண்ணூறு கழிவறைகள் மற்றும் தபால் அலுவலகம், வங்கி முதலானவற்றைக் கட்டப்போவதாக சிங்கள அரசு கூறியிருக்கிறது. நாற்பது பள்ளிகளை உருவாக்கப்போவதாகவும் அது சொல்லியிருக்கிறது. இந்தப் பள்ளிகளை கட்டுவதற்காக மட்டும் பதினான்கு மில்லியன் டாலர் நிதியுதவி தேவையென்று சிங்கள அரசு தொண்டு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

வதை முகாம் என்பது என்ன?

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹிட்லரால் உருவாக்கப்பட்டதுதான் 'வதை முகாம்' என்ற திறந்தவெளிச் சிறைச்சாலை. யூதர்களையும், ரஷ்யர்களையும் சிறைப்பிடித்து அந்த முகாம்களில் ஹிட்லர் அடைத்து வைத்தான். முகாம்களைச் சுற்றி மின்சார வேலி அமைக்கப்பட்டது. அங்கிருந்து எவரும் வெளியேறவோ, தப்பித்துச் செல்லவோ முடியாது. அங்கு அவர்களிடம் கட்டாய வேலை வாங்கப்பட்டது. போதுமான உணவுகூட தரப்படவில்லை. பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த முகாம்களிலேயே செத்து மடிந்தார்கள். அப்படிச் சாகிறவர்களை குப்பை கூளங்களைப்போல அள்ளிச்சென்று மொத்தமாகக் குழியில் போட்டுப் புதைத்தார்கள். அங்கிருப்பவர்களில் யாரேனும் சிறிய அளவில் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவர்களைப் பிடித்து விஷவாயுக் கிடங்குகளில் போட்டுக் கொன்றார்கள்.
உலக யுத்தம் முடிந்த பிறகுதான் ஹிட்லரின் இந்த கொடூரச் செயல் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. உலகமெங்கும் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத் தியது. அந்தப் படுபாதகமான டெக்னிக்கைத்தான் இப்போது ராஜபக்ஷே பின்பற்ற விரும்புகிறார்.

தமிழர்களுக்கான வதை முகாம்கள்:

ராஜபக்ஷ அமைக்கப்போகும் வதை முகாம்கள் 'மறுவாழ்வுக் கிராமங்கள்' என்ற பெயரில் அழைக்கப்படுமாம். 'அப்படிச் சொன்னால்தான் உலக நாடுகளிடமிருந்து உதவி பெறலாம்' என்பது அவருடைய நரித் திட்டம். இந்தத் திட்டத்துக்கு இந்தியாவின் ஏகோபித்த ஆதரவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 'இந்த முகாம்களை நிர்வகிக்கப்போவது யார்?' என தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், இலங்கை அரசிடம் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

அதற்கு பதிலளித்த இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ''அங்கே இருக்கப்போகிறவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாதா? அவர்களால் எங்கள் பாதுகாப்புக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை நீங்கள் உணரவில்லையா? சிங்கள மக்களின் உயிர்களோடு நாங்கள் ஒருபோதும் விளையாட முடியாது. எனவே, இந்த முகாம்களை இராணுவம்தான் நிர்வகிக்கும்...'' என்று கூறியிருக்கிறார். இந்த முகாம்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும் என்றும் அதற்காக நிதியுதவி வேண்டுமென்றும் சிங்கள அரசு கேட்டிருக்கிறது.

ஏற்கெனவே, இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாகத்தான் இருக்கிறார்கள். இனி அவர்கள் திறந்தவெளிச் சிறைகளான வதை முகாம்களில் நிரந்தர அடிமைகளாக வைக்கப்படப் போகிறார்கள். நமக்காக வாதாட யார் இருக்கிறார்கள் என்று பரிதவிக்கிறது தமிழினம்.

தற்போது பெயரளவுக்கு தமிழர் பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டணியையும் தடை செய்து, அந்த எம்.பி-க்களையும் பதவியிழக்கச் செய்வதற்கு இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. 'தாய் தமிழகம் எப்படியாவது தங்களைக் காப்பாற்றிவிடும்' என்பதுதான் ஈழத்தமிழர்களுக்கு இப்போ திருக்கும் ஒரே நம்பிக்கை!

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dlj0W0ecGG7B3b4P9Ei4d2g2h3cc2DpY3d436QV2b02ZLu3e

StumbleUpon.com Read more...

தொழில்நுட்ப வட்டாரங்களில் பேரதிர்ச்சி அலை:இந்திய தொழிலதிபர் மகிந்தவின் ஆலோசகர் ஆகின்றார்:

 
 
இந்திய தொழிலதிபரான என்.ஆர்.நாராயணமூர்த்தி சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தொழில்நுட்ப ஆலோசகராக நியமனம் பெறுகின்றார். நாராயணமூர்த்தியின் இந்தச் செயலானது பெரும் அதிர்ச்சி அலைகளை அரசியல், வர்த்தக, நிதித்துறை வட்டாரங்களில் தோற்றுவித்துள்ளது. 
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகிய "இன்ஃபோசிஸ்" நிறுவனத்தின் தலைவர் என்.ஆர்.நாரயணமூர்த்தி, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயற்படுவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
நாராயணமூர்த்தி உருவாக்கிய "இன்ஃபோசிஸ்" நிறுவனம் இன்று அனைத்துலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் விலகினாலும், தொடர்ந்தும் இயக்குநர் குழுவில் ஒருவராக அவர் விளங்குகின்றார்
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு நாராயணமூர்த்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் நாராயணமூர்த்தியின் ஒத்துழைப்பைப் பெற்று முன்னேற சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது என அறிவித்தார்.
"இது விவகாரமான நிறுவனப் பங்களிப்புக்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், சிறிலங்கா அரசு - "இன்ஃபோசிஸ்" நிறுவன வர்த்தக உடன்படிக்கையே" இது என கொழும்பு ஆய்வாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழினப் படுகொலைப் போரின் அதிகரித்த செலவீனம் மற்றும் தவறான கையாடல்கள் காரணமாக சிறிலங்கா அந்நிய செலவாணி பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கும் வேளையில் -  இவ்வாறாக மனித நேயங்களை புறக்கணித்து, இந்திய தொழில் அதிபர்களும், தொழில் நிறுவனங்களும் சிறிலங்காவில் முதலீடு செய்து வருவது விசனத்திற்குரியது என தமிழக தொழில்நுட்பவியல் வட்டாரங்களைச் சேர்ந்த ஒருவர் புதினத்தின் சென்னை செய்தியாளரிடம் சுட்டிக்காட்டினார்.
முக்கியமாக, பொதுமக்களை பங்குதாரர்களாகக் கொண்ட நிறுவனமாகிய "இன்ஃபோசிஸ்" (நியூயோர்க் பங்கு சந்தை குறியீடு INFY) அதன் இயக்குனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தியுடன் கூட்டிணைந்து, தமிழின அழிப்பில் ஈடுபடும் சிறிலங்கா அரசுடன் கை கோர்த்து நிற்பதனை உலகு எங்கும் வாழும் பங்குதாரர்கள் நல்ல விதமாகப் பார்க்கமாட்டார்கள் என வர்த்தக-நிதித்துறை வட்டாரங்கள் சில கருத்து வெளியிட்டன.
இது தொடர்பாக "புதினம்" செய்தியாளரிடம் நியூயோர்க்கில் கருத்து வெளியிட்ட அரசியல் அவதானி ஒருவர், சூடான் இனப்படுகொலை விவகாரத்தை சுட்டிக்காட்டினார்.
சூடான்,  டாஃபூர் இனப் படுகொலையினை, கனடா, கல்கரியில் உள்ள பங்குதாரர்களைக்கொண்ட கனடிய நிறுவனமாகிய "ரலிஸ்மன் எனெர்ஜி"யின் (Talisman Energy: NYSE TLM) முதலீடுகள் ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி - கனடாவிலும், உலகு எங்கும் இருக்கும் அதன் பங்குதாரர்கள் தொடர் எதிர்ப்பு காட்டியதால், அந்த நிறுவனம் சூடானில் இருந்து சில வருடங்களுக்கு முன்பாக விலகிக்கொள்ள நேர்ந்தது குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்தார்.
"இன்ஃபோசிஸ்" நிறுவனத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்படுள்ள அதன் கோட்பாடுகளுக்கு அமைய நடப்பதாயின், மகிந்த ராஜபக்ச போன்றவர்களின் அரசுடன் நாரயணமூர்த்தி எந்தவொரு தொடர்பினையும் கொண்டிருக்கக் கூடாது என மனித உரிமை ஆர்வலர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
"தமிழினப் படுகொலை புரியும் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை நாரயணமூர்த்தி நிராகரிக்க வேண்டும்" எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

http://www.puthinam.com/full.php?2bXPtRe0dfk6n0ecCD4X3b4PcFV4d2g2d3cc2BmU2d439SP3b026Sp3e

StumbleUpon.com Read more...

துணை தூதரின் மிரட்டல் எமக்கு கால்தூசு.-நக்கீரன் ஆசிரியர்




கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுகின்றன ஈழத்தமிழர்களின் உயிர்கள். இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நம்பி வந்த ஒருசில தமிழர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். அங்குள்ள மருத்துவமனைகளிலும் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச செஞ்சிலுவை சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது. ராணுவக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பகுதியில் மருத்துவமனைகள்-தொண்டு நிறுவனங்களின் முகாம்கள் இருந்தாலும் அதனையும் தாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார் இலங்கை ராணுவத்தின் செயலாளரும் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே. அமெரிக்கா- இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா, நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஐ.நா.சபை என அனைத்துத் தரப்பிலிருந்தும் போர் நிறுத்தம் வலியுறுத்தப்பட்டாலும் அத்தனையையும் புறக்கணித்துவிட்டு கொடூர யுத்தத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே.






இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்கள் இன அழிப்புச் செய்யப்படுவதை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் தாய்த்தமிழகத்தினர். வரலாற்று வழியாகவும், புவியியல் ரீதியாகவும் தங்களின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்காக தாய்த்தமிழகத்தினரால் செய்ய முடிந்ததெல்லாம் ஆதரவுக்குரல் எழுப்புவது மட்டும்தான். அந்தக் குரலைப் பதிவுசெய்வது பத்திரி கைகளின் தார்மீக கடமை. தமிழ் மக்களின் இதயத்துடிப்பாக விளங்கும் நக்கீரன் அந்தக் கடமையிலிருந்து இம்மியளவும் விலகாமல் தனது பணியைச் செய்துவருகிறது. அதன் சிறு பகுதிதான் பிப்ரவரி 11 -2009 தேதியிட்ட இதழின் அட்டையில் இடம்பெற்றிருந்த, "ராஜபக்சே நாசமா போவான்-சபிக்கும் தமிழகம்' என்ற செய்திக் கட்டுரை.

சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் தமிழக மக்கள் வெளிப்படுத்திய அடிமனதின் குரல்தான் அந்தக் கட்டுரையின் தலைப்பு. ராஜபக்சே தொடர்பாக அவர்கள் வெளிப்படுத்தியுள்ள இன்னும் பல தீவிரமான கருத்துகளை பிரசுரிப்புத்தன்மை கருதித் தவிர்த்திருந்தோம். ராஜபக்சேவை தமிழகம் எப்படி பார்க்கிறது என்பதன் அடையாளமாக அட் டைப்படமும் (காண்க) வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், சென்னையில் உள்ள ஜனநாயக சோஷலிச (!) ஸ்ரீலங்கா குடியரசின் துணை உயர் ஸ்தானிகர் பி.எம். அம்சா நமது நக்கீரனுக்கு ஓர் ஓலை அனுப்பியிருக்கிறார்.

பிப்ரவரி 11 தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், "அதிமேதகு ராஜபக்சே அவர்களை தரக்குறைவாக உருவகப்படுத்தி பிரசுரித்ததன் மூலம் தங்களுடைய இதழ் இலங்கை மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது மட்டுமல்லாமல், அவர் வகிக்கும் உயர் பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளது' என தெரிவித்திருப்பதுடன், "இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென்றும், அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இவ்விஷயத்தை அணுகப்போவதாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துணை தூதரகத்தின் உயர் ஸ்தானிகரான அம்சா, இந்திய பத்திரிகை ஒன்றிற்கு விடுத்திருக்கும் மிரட்டலாகவே இந்தக் கடிதம் அமைந்துள்ளது. இருநாடுகளின் நட்புறவுக்கான பணியில் ஈடுபடவேண்டிய துணைத்தூதர், தனது அதிகாரவரம்பை மீறி பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதும் மிரட்டுவதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அதிகாரத்தின் மிரட்டலுக்கு நக்கீரன் ஒருபோதும் பணிந்ததில்லை என்பதே அதன் 21 ஆண்டுகால வரலாறு. துணை தூதரின் மிரட்டல் எமக்கு கால்தூசு. சட்டரீதியான நடவடிக்கை என்கிறாரே, எங்கே வழக் குத் தொடரப் போகிறார்? உள்ளூர் நீதிமன்றத்திலா? உலக நீதிமன்றத் திலா? எங்கே இருந்தாலும் "வழக்கே வா' என வரவேற்கிறது நக்கீரன்.

போரை நிறுத்தச் சொன்ன ஒரே பாவத்திற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மிலிபேண்டையும் விடுதலைப்புலிகள் போல சித்தரித்து இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததே, அது அவர்களின் பதவிக்கு செய்யப்பட்ட மரியாதையா? அவமரியாதையா? அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்த சிங்கள அரசை எந்த நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றுவது? எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கும் ராஜபக்சேவின் கழுத்தில் கபால மாலை அணிவிக்காமல் கரன்சி மாலையா அணிவிப்பார்கள் தமிழ் மக்கள்! அவர்களின் உணர்வைத்தான் நக்கீரன் வெளிப்படுத்தியிருக் கிறது.

நாங்கள் வெளியிட்ட செய்தியும் அட்டைப் படமும் ராஜபக்சேவின் பதவிக்கு இழுக்கு என நினைத்தால் ராஜபக் சேவின் அரசாங்கம் வழக்குத் தொடுக்கட் டும். எதிர்கொள் கிறோம். தூதருக்கு ஏன் இந்த மிரட்டல் வேலை? இதே பாணி யில் அவர் யாரை, யாரையெல்லாம் மிரட்டியிருக்கிறார் என்பதை அறிவோம். இப்போது நக்கீரனை நோக்கிப் பாய்ந்திருக்கிறார்.



சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் தனது வரம்புக்குமீறி என்னென்ன செயல்பாடுகளை செய்து வருகிறது, என்னென்ன மாதிரியான ரகசிய வேலைகளையும் கீழ்த்தரமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்பதையெல்லாம் சர்வதேச சமுதாயத்தின் முன் அம்பலப்படுத்து வதற்கு இந்த வழக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றே நக்கீரன் கருதுகிறது. தமிழினத்தைக் கொன்றொழிக்கும் இலங்கை அதிபரை பற்றிய செய்தியை வெளியிட்டதற்காக நக்கீரன் ஒருபோதும் மன்னிப்பு கேட்காது. சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார் என அறைகூவல் விடுக்கிறோம்.

தூதரா, ஒற்றரா என இனம் பிரிக்க முடியாதவகையில் செயல்பட்டுக்கொண்டி ருக்கும் இலங்கை துணை தூதரகத்தின் உயர் ஸ்தானிகர் அம்சாவின் நடவடிக் கைகள் இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழினத்திற்கு எதிராகவும் இருப்பதை அரசியல் தலைவர்கள், பொதுநல அமைப் பினர், மனித உரிமை ஆர்வலர்கள், நேர்மை யான பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதே நக்கீரனின் வேண்டுகோளாகும்.

-ஆசிரியர்
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3529

StumbleUpon.com Read more...

சிங்கள மக்களே போரை எதிர்க்கிறார்கள்: ஜெயசூர்யா

 



இலங்கையில் நடந்து வரும் போரை சிங்கள மக்களே எதிர்க்கிறார்கள் என்று ஐக்கிய சோசலிச கட்சியின் பொதுச்செயலாளரும், ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டவருமான ஸ்ரீதுர்கா ஜெயசூர்யா கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், அதிபர் ராஜபக்சேவின் ஆட்சியை சிங்கள மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. ராணுவ நடவடிக்கையால் இலங்கையில் வடக்குப் பகுதியில் உள்ள தமிழர்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய சர்வதேச நாடுகள் நிர்பந்திக்க வேண்டும். சிங்கள மக்களே போரை எதிர்த்தே வருகிறார்கள். தங்களுடைய கருத்தை சொல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மீறி முயன்றால், அவர்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இலங்கையில் பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளதாகவும், பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3546

StumbleUpon.com Read more...

கஞ்சிகுடிச்சாற்றில் குண்டு வெடிப்பு - 12 விசேட அதிரடிப்படையினர் பலி

 
அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மிகவும் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் அதிகாரி ஒருவர் உட்பட 12ற்கும் மேற்பட்ட சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் பௌத்த விகாரை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டுவிழா பெருமெடுப்பில் விசேட அதிரடிப் படையினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.


இதேவேளையில் பிற்கல் 2.40 மணியளவில் அப்பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்ததாகவும், இதில் அதிகாரி ஒருவர் உட்பட 12ற்கும் மேற்பட்ட சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.


இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தினையும், 12ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதனையும்;, மேலும் சிலர் காயமடைந்ததனையும் உறுதிப்படுத்தியுள்ள அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள், இச்சம்பவத்தினை அடுத்து அப்பகுதியில் பெருமெடுப்பிலான தேடுதல் ஒன்றும் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.


இக்குண்டு வெடிப்பின் சத்தம் பல மைல்கள் தூரத்திற்கு உணரப்பட்டதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளையில், நேற்றைய தினம் அப்பகுதியில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக காணப்பட்டதாகவும் குடிசார் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

சிறீலங்காப் படையினரால் 190 இளைஞர்கள் படுகொலை! 130 யுவதிகள் படையினரின் பாலியல் வல்லுறவுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்!

 
சிறீலங்காப் படையினரால் அண்மைய வாரங்களில் 190 ஆண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 130 இளம் பெண்கள் படையினரின் பாலியல் வல்லுறவுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்துரைக்கும் போது:-

வன்னியில் சிறீலங்காப் படையினரால் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்குள் அகப்படும் தமிழர்கள் விசுவமடுப் பகுதியில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே, இளைஞர்கள் ஒரு பகுதியிலும், யுவதிகள் ஒரு பகுதியிலும், ஏனைய தமிழர்கள் இன்னொரு பகுதியாகவும் பிரிக்கப்படுகின்றனர்.

இங்கே வகைப்படுத்தப்படும் இளைஞர்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே கொடூர வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். பின்னர் சாகடிக்கப்படும் உடலங்களை அங்கிருந்து அனுராதபுரத்திற்கு கொண்டு சென்று புதைக்கப்படுகின்றனர். இவ்வாறு அண்மைய வாரங்களில் 190 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று வகைப்படுத்தப்படும் இளம் யுவதிகள் சிறீலங்காப் படையினரின் பாலியல் வல்லுறவுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற தமிழர்களின் பாதுகாப்புத் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அனைத்துலக கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் யூகோசிலாவியாவில் இடம்பெற்றவை போன்று சிறீலங்காவிலும் பாரிய மனித அழிவுகள் இடம்பெறும் அபாயம் உள்ளது.

1995 ஆம் ஆண்டு யாழ் குடாநாடு படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் பல இளைஞர்கள் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டு பின்னர் செம்மணி வெளியில் புதைக்கப்பட்டமை அனைவருக்கும் வெளிச்சமாகியது.

செம்மணியில் படுகொலைகள் மற்றும் பாலியல் வல்லுறவுப் படுகொலைகள் ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்ட போதும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறிலங்கா பயங்கரவாத அரசாங்கம் படையினருக்கு சீருடைகளையும் கொடுத்து, கொலை,கற்பழிப்பு ஆகிய கொடுமைகளைச் செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரத்தையும் கொடுத்து, வன்னிப் போர்முனைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு "மஹிந்த சிந்தனை, மனிதாபிமானம்" பற்றி பிதற்றிக் கொண்டிருக்கின்றது. சர்வதேச சமூகமே! அடக்கி ஒடுக்கப்படும் தமிழினத்தைக் காப்பாற்ற உலகில் எவரும் இல்லையா?

 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP