சமீபத்திய பதிவுகள்

தமிழ் மக்களின் விடுதலைப்போரை இருபது வருடங்கள் காப்பாற்றியது ராஜீவ் காந்தியின் மரணமே

>> Friday, July 24, 2009

"சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன எல்லாம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அர்த்தமற்ற சொற்பதங்களாக, யதார்த்த மெய்ந்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன.

சமாதானச் சூழலில் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தம், போர்நிறுத்த விதிகளுக்கு முரணாகத் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, சமரசப் பேச்சுக்களைப் பயன்படுத்திப் பின்னப்படும் சர்வதேச சதிவலைப் பின்னல் – இப்படியாக அமைதி முயற்சி திரிவுபடுத்தப்பட்டுத் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது மக்களுக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை இழந்துவிட்டது".

மகிந்த பதவியேற்ற பின்னர் மோதல்கள் உக்கிரமடைந்த காலகட்டத்தில் நடைபெற்ற மாவீரர்தின உரையின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்ட வார்த்தைகள் மேல் உள்ளவை.

தொடர்ச்சியாக பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் அனைத்தும் இதனை தான் செய்துவந்தன. உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்களின் உரிமை போரை முற்றாக சிதைத்துவிட சிறீலங்கா அரசுகள் முனைந்து வந்தனவே தவிர தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதற்கு அவர்கள் முற்படவில்லை.

தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சா ஏறுக்கு மாறாக மேற்கொண்டுவரும் கருத்துக்களில் இருந்து இன்றும் நாம் அதனை உணரமுடிகின்றது. தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வையோ அல்லது அவர்களுக்கு சிறீலங்காவில் வாழும் உரிமைகளையோ சிங்கள தேசம் ஒரு போதும் வழங்கப்போவதில்லை என்பது தான் உண்மையானது.

இதனை உலகமும் தமிழ் மக்களின் ஆயுதப்போருக்கு எதிரான போக்கை கொண்டவர்களும் தற்போதும் உணரவில்லை என்றால் அதனை நாடகம் என்றே கொள்ள முடியும். தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என அரச தலைவராக பதவியேற்க முன்னர் பேசி வந்த முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கா, யாழ்ப்பாணம் வந்து கேணல் கிட்டுவுடன் பேச்சுக்களை மேற்கொண்டு நட்புறவுடன் பழகிய அவரது கணவர் விஜய குமாரணதுங்கா ஆகியோரின் அரசியல் நாடகங்கள் சந்திரிகா அரச தலைவர் ஆனதும் காற்றில் பறந்துவிட்டன.

சிங்கள தேசத்தின் அடக்கி ஆட்சிபுரியும் மனப்பான்மைக்கு முன்னால் சிங்கள தேசத்தில் பதவிக்கு வரும் எந்த அரசுகளும் தப்பி பிழைத்தது கிடையாது. பெரும்பான்மை சிங்கள மக்களின் மனவோட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தியே சிங்கள அரசுகளும் தமதுபதவி சுகங்களை தக்கவைப்பதுண்டு. இது தான் கடந்த அறுபது வருடங்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள்.

1948 ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரம்அடைந்த பின்னர் 1976 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக தோற்றம் பெறும் வரையிலும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக அகிம்சை வழியில் பல போராட்டங்களை «ம்றகொண்டு வந்திருந்தனர். ஏறத்தாள மூன்று தசாப்தங்கள் அகிம்சை வழியில் அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் தோல்வியடைந்த காரணத்தினால் தான் அது பின்னர் ஆயுதப்போராக உருவெடுத்தது.

ஆயுதப்போரும் பல வடிவங்களின் ஊடாக 1976 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஏறத்தாள மூன்று தசாப்தங்களுக்கு மேலாக (33 வருடங்கள்) பயணித்துள்ளது. இருந்த போதும் தற்போது நாம் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் நிற்கின்றோம். அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தொடர்பாகவும் பல குழப்பங்கள் உள்ளன.

எமது போராட்ட வரலாற்றை பொறுத்தவரையில் முன்னைய மூன்று தசாப்தங்களை விட பின்னைய மூன்று தசாப்தங்களும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை பல வலிகளையும், இழப்புக்களையும் எமக்கு ஏற்படுத்தியிருந்தாலும், எமது இனத்தின் பிரச்சனைகளையும், வேதனைகளையும் உலகறியச்செய்த பெருமை தமிழ் மக்கள் வரித்துக்கொண்ட ஆயுதப்போருக்கு உண்டு.

'ஆயிரம் மேடைப் பேச்சுக்களை விட ஒரு கெரில்லா தாக்குதல் மிகச்சிறந்த பிரச்சாரம்' என்ற கியூபாவின் முன்னாள் விடுதலைப்போராட்ட வீரரும் அதிபருமான பிடல் கஸ்ரோவின் வார்த்தைகளின் யதார்த்தத்தை இந்த காலம் மீண்டும் ஒரு தடவை உலகிற்கு உணர்த்தியிருந்தது.

இந்தக் காலப்பகுதி சிங்கள தேசத்திற்கும் பெருமளவான இழப்புக்களையும், பொருளாதாரச் சீரழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஒரு இனத்தை அடக்கி ஆட்சிபுரிவதற்கு என்ன விலையை செலுத்த வேண்டும் என்ற யதார்த்தத்தையும் அவர்களுக்கு உணர்த்தியிருந்தது. அகிம்சை வழியில் போரிட்ட போது நாம் தான் இழப்புக்களை சந்தித்திருந்தோம் ஆனால் எமது ஆயுதப்போர் சிங்கள தேசத்திற்கும் இழப்புக்களினதும், வேதனைகளினதும் வலியை உணர்த்தியிருந்தது.

ஆனாலும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பூகோள அரசியல் நகர்வுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதில் சிறீலங்கா அரசுகள் அதிக முனைப்பை காட்டியிருந்தன. 1980 களில் ஏற்பட்டிருந்த மேற்குலகம் – சோவியத்து ஒன்றியம் என்ற முனைவாக்கத்?தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது போல, 2009களில் ஏற்பட்டுள்ள சீனா – மேற்குலகம் என்ற இந்துசமுத்திர பிராந்திய முனைவாக்கத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்
களின் விடுதலைப் போரின் படை வலுவை மிகப்பெரும் படை வலுக்கொண்டு சிறீலங்கா அரசு முறியடித்துள்ளது.
ஆனால் கடந்த மூன்று தசாப்தங்களில் நடைபெற்ற போர்களில் சந்தித்த இழப்புக்களை விட பல மடங்கு அதிகமான இழப்புக்களை சிங்கள தேசம் சந்தித்திருந்தது என்பதும் உண்மை. வெற்றி பெறுபவர்களுக்கே வரலாறு சொந்தம் என்ற தத்துவத்திற்குள் சிங்களம் தனது இழப்புக்களை மறைத்துவிட்டது.

ஆனால் சிறீலங்காவை அனுசரித்து போவதன் மூலம் கூட தனது பிராந்தியத்தின் உறுதித்தன்மையை பேண
முடியாது என்பதை இந்தியா உணர்ந்து கொண்ட போதும் தமிழ் மக்களின் உரிமைப் போரை நயவஞ்சகமாக அழிக்கத் துணைபோனது தான் மிகவும் வேதனையானது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு முன்னரும் தனது படை வலு கொண்டு சின்னஞ் சிறிய ஒரு அமைப்பை இந்தியா முற்றாக துடைத்தளிக்க முற்பட்டிருந்தது. அவரின் மரணத்திற்கு பின்னரும் இந்தியா அதனையே மறுபடியும் மேற்கொள்ள முயன்றுள்ளது. ஆனால் 1987களில் இந்தியாவின் முயற்சிகளை விடுதலைப் புலிகளின் கெரில்லா போர்முறை உத்திகள் எவ்வாறு முறியடித்தனவோ அதனைபோலவே தற்போது இந்திய அரசின் முயற்சிகள் இடை நடுவில் தொங்கிபோய் உள்ளன.

அதாவது விடுதலைப் புலிகளின் மரபுவழியிலான படைக் கட்டுமானங்களை இந்திய – சிறீலங்கா படையினரால் முறியடிக்க முடிந்ததே தவிர உலகெங்கும் பரந்திருக்கும் தமிழ் மக்களின் விடுதலை வேட்கைகயையும், விடுதலைப் புலிகளின் வலையமைப்பையும் அவர்களால் முறியடிக்க முடியவில்லை.

ஒருவேளை 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் அவர் மீண்டும் பதவிக்கு வந்திருந்தால் 1992 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த வருடங்களிலோ தற்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை போன்றதொரு மிகப்பெரும் படுகொலைகளுடன் விடுதலைப் புலிகளை இந்திய மீண்டும் ஒருதடவை அழிக்க முற்பட்டிருக்கலாம்.

அன்று அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அதனை எதிர்கொண்டு எமது விடுதலைப்போரை முன்னெடுக்க வேண்டிய முதிர்ச்சியும், வளர்ச்சியியும் புலம்பெயர் நாடுகளில் இருக்கவில்லை. எனவே தற்போதைய அழிவை விட மிகப்பெரும் பேரழிவை தமிழ் மக்களின் விடுதலைப்போர் அன்று சந்தித்திருக்கும்.

ஒரு வகையில் பார்த்தால் ராஜீவ் காந்தியின் மரணம் தமிழ் மக்களின் விடுதலைப்போரை 18 வருடங்கள் காப்பாற்றி உள்ளது என்றே கொள்ள முடியும். இந்த 18 வருடங்களில் தமிழ் மக்களின் போராட்டம் கண்ட வளர்ச்சிகள் அதிகம்.

மேலும் 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது உடனடியாகவே 25,000 இந்திய இராணுவ கொமோண்டோக்களை யாழ்நகரத்தில் தரையிறக்கி மிகப்பெரும் படுகொலை ஒன்றை நிகழத்தி பழிதீர்த்துக்கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ திட்டமிட்டிருந்தது.

அதற்கு ஏதுவாக 25,000 படையினரை திருவானந்தபுரம் விமானநிலையத்திற்கு கொண்டுவரும் ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் என்ன காரணமோ தெரியாது இறுதி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டிருந்தது. எனவே வட இந்தியர்களும், தென்இந்திய பார்பானியர்களும் ஈழத்தமிழ் மக்கள் மீதான படுகொலை உணர்வுகளில் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு எப்போதும் சலித்தவர்கள் அல்ல.

ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் அமைப்புக்களையும், பிரதிநிதிகளையும் அழித்துவிட முற்படும் இவர்கள் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதிலும் சிங்கள தேசத்திற்கு ஒப்பான போக்கையே கையாண்டு வருகின்றனர்.

2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட சமாதான காலத்தில் கூட விடுதலைப் புலிகள் சுயாட்சி அதிகாரத்திற்கான திட்டம் ( Interim self governing authority proposal) ஒன்றை முன்வைத்திருந்தனர். ஆனால் அன்றைய சிங்கள அரசு அதனை விவாதிக்க கூட முற்படாமல் குப்பை தொட்டியில் போட்டதுடன், அதற்கு எதிராக ஜே.வி.பி, ஜாதிக கெல உறுமய போன்ற பேரினவாத கட்சிகளை ஏவிவிட்டிருந்தது.

சுயாட்சிக்கான அதிகாரம் என்பது தனிநாட்டிற்கான முதற்படி என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் காலஞ்சென்ற கதிர்காமர் சிங்கள மக்களுக்கும், வெளி உலகிற்கும் போலியான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். போர் நிறுத்தம் என்பது அரசியல் தீர்வை காண்பதற்கு மேற்கொள்ளப்படும் சமாதான பேச்சுக்களுக்கான ஒரு திறவுகோல் அதனை வீணாக இழத்தடிப்தை விடுத்து ஆக்கபூவமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது விடுதலைப் புலிகளின் குறிக்கோளாக இருந்தது.

விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட திர்வுத்திட்டமானது 1978 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களை ஒத்ததாகும். ஆனால் அவையாவும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வழங்கக்கூடிய 13 ஆவது திருத்தச்சட்டத்தை கூட நிறைவேற்றுவதற்கு சிறீலங்கா அரசு முன்வரவில்லை. தமிழ் மக்களின் மீதான தனது படை நடவடிக்கையை நியாயப்படுத்த இந்திய அரசு 13 ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்ற 1988 களில் முற்பட்டிருந்தது. அதன் ஓரங்கமாக வடக்கு – கிழக்கு இணைப்பையும் மேற்கொண்டிந்தது. ஆனால் அதனையும் தற்போதைய அரசு இல்லாது செய்துவிட்டது.
மீண்டும் 13 ஆவது திருத்த சட்டத்தையாவது நிறைவேற்ற வேண்டும் என தற்போது அமெரிக்காவும் குரல் கொடுத்துள்ளது. ஆனால் சிறீலங்கா அரசினை பொறுத்தவரையில் அது தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை கொடுப்பதற்கு எப்போதும் முன்வந்ததில்லை. தற்போது அவ்வாறனதாகவே அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

தமிழ் மக்களின் பிரதேசங்களை முற்றுமுழுதாக இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதுடன், அவர்களின் பூகோள பாரம்பரியத்தையும், இன விகிதாசாரங்களையும் மாற்றியமைக்கும் திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.

அண்மையில் சிறீலங்கா இராணுவத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் அதனை தான் தெளிவுபடுத்தி நிற்கின்றன. மூன்று தடவை பதவி நீடிப்பு பெற்ற சிறீலங்காவின் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் இடத்திற்கு வவுனியா மாவட்ட கட்டளை தளபதியும், வன்னி படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயசூரியா இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என கடந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் ஏனெனில் பொதுவாக யாழ் மாவட்டம் அல்லது வவுனியாமாவட்ட கட்டளை தளபதிகளே இராணுவத்தளபதிகளாக நியமிக்கப்படுவதுண்டு. எனினும் ஜெயசூரியாவுக்கு சம நிலையில் இருந்த முன்னாள் யாழ்மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறீ வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக றியர் அட்மிரல் மோஹான் ஜெயவிக்ரமா நியமிக்கப்பட்டதும் நினைவுகொள்ளத்தக்கது. வடக்கு கிழக்கு மாகாணங்களை முற்று முழுதாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள சிறீலங்கா அரசு அதன் நிர்வாகங்களையும் இராணுவமயப்படுத்தி வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் மாவட்டங்களின் எல்லையில் உள்ள சிங்கள கிராமங்களை தமிழ் மாவட்டங்களுடன் இணைப்பதற்கும் சிறீலங்கா அரசு முற்பட்டு வருகின்றது. இதன் மூலம் அந்த மாகாணங்களில் உள்ள இனவிகிதாசாரத்தை மாற்றவும் முற்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் உரிமைப் போரை முற்றுமுழுதாக புதைத்துவிடுவதற்கு தனது வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி செயற்பட்டு வருகின்றது. இந்த வளங்களில் தமிழ் இனத்திற்கு எதிரான தமிழ் குழுக்களும், அமைப்புக்களும், கட்சிகளும் அடக்கம்.

வேல்ஸில் இருந்து அருஷ்

ஈழமுரசு (24.07.09)

StumbleUpon.com Read more...

யுத்த க்ளைமாக்ஸ்! பிரபாகரனை நேரில் கண்ட எழுத்தாளரின் பேட்டி!

 


ஈழத்து எழுத்தாள ரான திருநாவுக்கரசு, நக்கீரன் வாசகர்களுக்குப் புதியவர் அல்ல. நன்கு அறி முகமானவர்தான். மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிவரும் சுற்றும்- முற்றும் தொடரில் திருநாவுக்கரசுவின் படைப்பாற்றல் குறித்து பதிவு செய்திருக்கிறார். தமிழீழத்தில் நடந்த இறுதிகட்டப் போர்வரை அங்கிருந்துவிட்டு, தற்போது தமிழகத்திற்கு தப்பித்து வந்திருக்கிறார் திருநாவுக்கரசு. அவரை சந்தித்தபோது, இறுதிநாள் நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சு முழுக்க ஈழத்தமிழர்களின் பாஷையிலேயே இருந்தது.


தடுப்பு முகாம்களைச் சுற்றி இலங்கை ராணுவத்தின் கடுமையான பாதுகாப்பும் ஏக கெடுபிடிகளும் இருக்கும் சூழலில் எப்படி தப்பித்து வந்தீர்கள்?


பணம்.. பணம்.. பணம்... எல்லாம் பணம்தான். இலங்கை பணத்தில் 2 லட்ச ரூபாய் தந்துவிட்டுத்தான் தப்பித்து வந்தோம். நள்ளிரவில் போட்டில் ஏற்றிக்கொண்டு வந்த சிங்களவன் விடியற்காலையில் ஒரு திட்டில் இறக்கிவிட்டுட்டு போய்விட்டான். பிஸ்கட் மட்டும் இருந்தது. குடிக்கிற தண்ணீரும் தீர்ந்துபோச்சு. திக்கு தெரியாத திட்டில் பசியோடு எப்படி தமிழகத்திற்கு போவது என்று தெரியாமல் விழித்தோம். இந்த திட்டில் சிக்கித் தவிக்கிறோம் என்று அறிந்துகொண்ட முதல்வர் கலைஞர், காவல் துறையினரை அனுப்பி எங்களை காப்பாத்தச் சொல்லி யிருக்கிறார். காவல் துறையினரும் கடலில் இருந்த ஒவ்வொரு திட்டு திட்டாகத் தேடித்தேடி களைத்துப் போனார்கள். ஒரு வழியாக மறுநாள் மாலை 5 மணி சுமாருக்கு எங்களை கண்டுபிடித்து அழைத்து வந்தனர் தமிழக போலீஸார்.

தடுப்பு முகாம்களில் தமிழர் களின் நிலைமை எப்படி இருக்கிறது?

நினைச்சாலே திகிலடிச்ச மாதிரி இருக்கு. முள் வேலிகள் சூழப்பட்டிருக் கிறது தடுப்பு முகாம்கள். கூண்டுக்குள் அடைத்த விலங்குகள்போல மக்கள். பெரிய பெரிய பள்ளங்களும் காடுகளுமாக இருந்த பகுதியை சமப்படுத்தி, சின்னச் சின்ன டெண்ட் அமைத்திருக்கிறார்கள். ஒவ் வொரு டெண்டிலும் 18 பேர் தங்கியிருக் கோம். படுக்க முடியாது. உட்கார்ந்து கொள்ளத்தான் இடமிருக்கும். இந்தியா மற்றும் வெளி நாடுகளிலிருந்து வந்த நிதி உதவிகளையெல்லாம் மந்திரிகளும் ராணு வமும் கொள்ளை அடித்துக்கொண்டது. முகாம்களில் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்துதரப்படவில்லை. உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள், கழிப்பிட வசதிகள் என எதுவுமே சரிவர இல்லை. கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் கொண்டு வந்து கொடுக் கிற சாப்பாட்டில்தான் பருப்பு இருக்கும், உப்பு இருக்கும். காய்கறிகள் கொஞ்சமேனும் இருக்கும்.

இந்த சாப்பாட்டு பொட்டலங் களை வாங்குவதற்கு மக்கள் தவியாய் தவிப்பார்கள். ரெண்டு கைகளையும் ஏந்திக்கொண்டு இங்க கொடுங்க... இங்க கொடுங்க.. என்று கெஞ்சுவதை பார்த் தால் நம் நெஞ்சு வெடித்துவிடும். போதிய கழிப்பிட வசதிகள் இல்லாத தால் கழிவறைகள் எல்லாம் நிரம்பி வழியும். வெளிநாடுகளில் இருந்து வந்த துணிகள் எதுவும் பயன்படுத்தமுடியவில்லை. எல்லாமே "அன்-சைஸ்'களாக இருந்தன.

குழந்தைகளுக்குரிய ஆடைகள் தொளதொளவென இருந்தன. அதேபோல ஆண்களுக்கு வந்த ஆடைகளும் பெண்களுக்கான சுடிதார், சல்வார் கம்மீஸ்களும் பெரிய சைஸ்களில் இருந்ததால் யாருமே பயன்படுத்தமுடியவில்லை. சேலைகள் வந்திருந்தால் ஒரு வேளை பயன்பட்டிருக்கும். முகாமில் நான் இருந்த போது "சிக்கன் பாக்ஸ்' நோய் தாக்கி 200 குழந்தைகள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். போதிய மருந்துகள், சிகிச்சைகள் இல்லாததால் 60 குழந்தைகள் இறந்து போனார்கள். நம்மை காப்பாத்த யாரும் இல்லை என்கிற முடிவுக்கு மக்கள் வந்துவிட் டார்கள். கடவுளைக் கூட அவர்கள் நம்ப தயாரில்லை. அந்தளவுக்கு விரக்தியின் விளிம்பில் நிற்கின்றனர். ஜனங்களிடம் சாவு பயம் அதிகரித்து கிடக்கிறது. தாங்கள் செத்துவிடுவோம்ங்கிற பயத்தைக் காட்டிலும் தங்கள் உறவுகளைத் தேடிச் சென்றவர்கள் திரும்பி வராது போனால்... அவர்களை பற்றிய பயம்தான் அதிகம்.

* இறுதிக்கட்டப் போரின்போது என்ன நடந்தது?

மே 10-ந் தேதி நடேசனை சந்தித்து யுத்தத்தின் போக்கு குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது, ""ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள், அப்போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறோம். அதற்கு ஏற்பாடு செய்வதாக இந்தியாவிடமிருந்து தகவல் வந்துள்ளது'' என்று சொன்னார்.

மறுநாள் மீண்டும் அவரை நான் சந்தித்தபோது, ""இந்தியாவிடமிருந்து வந்த தகவலை தேசியத் தலைவரிடம் சொன்னேன். "சரணடைய முடியாது, இறுதிவரை யுத்தம்தான்' என்று கூறிவிட்டார். இதற்கு காரணம் அமெரிக்காவில் இயக் கத்தைச் சேர்ந்த பாபியிடமிருந்து, மனிதாபிமான அடிப்படை யில் தனது படைகளை அனுப்பி அமெரிக்கா உதவி செய்ய விருக்கிறது என்று தேசியத் தலைவருக்கு தகவல் கிடைத் ததுதான்'' என்று என்னிடம் விவரித்தார் நடேசன்.

* அப்பறம் எப்படி இலங்கை ராணுவத்திடம் நடேசனும் புலித்தேவனும் சரண டையச் சென்றனர்?

தேசியத் தலைவர் பிரபாகரன் நம்பியதுபோல எதுவும் நடக்கலை. 16-ந் தேதி "உங்களின் சுய முடிவை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்' என்று அனைவ ருக்கும் இயக்கம் அறிவித்தது. அந்த சூழலில் பணயக் கைதிகளாக தங்கள் வசமிருந்த 9 சிங்கள ராணுவத்தினரை அழைத்துக்கொண்டு நடேசன், அவரது மனைவி, புலித்தேவன் ஆகியோர் ராணுவத்தினரை நோக்கிச்சென்றனர். 9 ராணுவ கைதிகளையும் விடுவித்தனர். ராணுவ கைதிகள் தங்கள் பக்கம் வந்ததும் கொஞ்சம் கூட தாமதிக்காமல் ஈவு இரக்கமின்றி மிருகத்தனமாக அவர்களை சுட்டுக்கொன்றது ராணுவம்.

* பிரபாகரனைப் பற்றி?

13-ந் தேதி விடியற்காலை புதுமாத்தளை கடற்கரையோரம் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்பட 150 பேர் நின்று கொண்டி ருந்ததைப் பார்த்தேன். 13-ந்தேதி இரவு அந்த பகுதிக்கு சென்றபோது யாருமே அங்கு இல்லை. 14-ந்தேதி அதி காலையில் அதே பகுதியில் பொட்டுவை மட்டும் பார்த்தேன். அப்போது அவரிடம், "என்னாச்சு?' என்று கேட்டபோது, "ராத்திரி சிக்கல் ஆயிடுச்சு, கிளம்ப முடியலை' என்று பொட்டு சொன்னார். 15-ந்தேதி மீண்டும் நான் அங்கு போய்ப் பார்த்தபோது 200 பேருடன் தேசியத்தலைவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பொட்டு, "இன்னைக்கு நாங்கள் போய்விடுவோம்' என்று சொன்னார். அதன்பிறகு மறுநாள் மீண்டும் போய்ப் பார்த்தபோது அங்கு யாருமே இல்லை. கிளம்பிப் போயி ருப்பார்கள்.

* அப்படியானால்.. பிரபாகர னின் உடல் என்று இலங்கை ராணுவம் காட்டியதே, அது...?

புலம் பெயர்ந்த தமிழர்களும் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களும் இதனை நம்பவில்லை.

* தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவிட மிருந்து ஈழத் தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன?

ஈழத் தமிழர்களின் பாதுகாப்பில்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது. இந்தியாவின் அனுசரிப்பில்தான் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு இருக்கிறது. இதனை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்.

சந்திப்பு : இளையசெல்வன்
படம் : அசோக்

நன்றி நக்கீரன்

StumbleUpon.com Read more...

பாம்!பே! மும்பைத் தாக்குதல் சொல்லித் தருகின்ற பாடம்

 

 

 

 


நவம்பர் 27ல் கடல் வழி பாகிஸ்தானிய தீவிரவாதிகள் மும்பையை களோபரப்படுத்தியதை வரிந்துகட்டிக் கொண்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டதால் மீண்டும் ஒருமுறை அவைகளை அலசத் தேவையில்லை. இந்தக் களோபரங்கள் சில உண்மைகளை மீண்டும் உரக்க அம்பலப்படுத்தி ஓய்ந்துள்ளது.

மும்பை தீவிரவாத தாக்குதலில் ஏற்பட்ட இழப்பு நாலாயிரம் கோடியென பொருளாதார வல்லுநர்கள் கணிப்புச் சொல்கின்றனர். இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 40 சதவீதம் மும்பையை மையமாகக் கொண்டுள்ளது என்பதால் வெளிநாட்டு முதலீடுகள் குறையும் என்று அஞ்சுகின்றனர்.

சர்வதேச அளவிலான நெருக்கடிகளால் பங்குச் சந்தை குறியீட்டு எண் வீழ்ச்சி கண்டு தொழில் துறை சக்கரங்கள் காற்று இறங்கிக் கிடக்க மும்பைத் தாக்குதல் அந்த சக்கரங்களைப் பஞ்சராக்கிவிட்டது என வர்ணிக்கின்றனர், பொருளாதார வல்லுனர்கள்.

வெளிநாட்டினர் வந்து தங்கிச் செல்லும் நட்சத்திர விடுதிகளான தாஜ் மற்றும் ஓப்ராய் ஹோட்டல்கள் தாக்குதலுக்கு உள்ளானது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வரத்தை வெகுவாய் குறைத்துவிடும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.

இப்படி மும்பைத் தாக்குதலை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மட்டும் அளந்து பார்த்து ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு என்று சொன்னார்களேயொழிய அந்த தாக்குதலில் பலியான அப்பாவி உயிர்களைப் பற்றியும், காயப்பட்டவர்கள் பற்றியும் யாரும் அதிகம் பேசாதது அதிர்ச்சி தரும் ஒரு விஷயம்.

ஹோட்டல் தாஜ், ஓப்ராய் மற்றும் நாரிமன் ஹவுஸ் ஆகியவற்றில் இறந்துபோன தன்வந்தர்கள் மற்றும் வெளிநாட்டவர் பற்றி குறிப்பிட்ட மீடியாக்கள் மும்பை மத்திய ரயில் நிலையத்தில் பலியான அப்பாவிகளைப் பற்றி அதிகம் கண்டு கொள்ளவே இல்லை. இத்தனைக்கும் உயிர்பலிகள் (78 பேர்) அங்கு தான் அதிகம்.

பலியானவர்கள் உயர் தரப்பினர் என்றால் முக்கியத்துவம் பெறுவதும் பாமரர்களின் சாவு சர்வசாதாரணமாக பார்க்கப்படுவதும் ஜனநாயக இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் அதிர்ச்சிக்குரிய விஷயங்களாகும்.

சோமாலியாவுக்கும் சூடானுக்கும் அடுத்து பட்டினிச் சாவுகள் இந்தியாவில் தான் அதிகம் என்பது பாமரரைப் பற்றி கவலைப்பட இங்கு ஆட்களே இல்லை என்தைதானே வெட்ட வெளிச்சமாக்குகிறது.

ஊழல், லஞ்சம் இவைகளுக்கு அடுத்து இன்று இந்திய எதிர் நோக்கி வரும் முக்கியப் பிரச்சனை தீவிரவாதம். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் (2008ல்) 300 பேர் தீவிரவாதத்திற்கு பலியாகியுள்ளனர். 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கோடிவரை பொருளாதார சேதாரம் மற்றும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கில் மனித நேர உழைப்புகள் விரயமாகியுள்ளது. தவிர தாக்குதலில் நேரடியாக சிக்கிக் கொண்டதின் மூலம் பலர் அச்சத்துக்கும், மன அச்சத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இப்படி தீவிரவாதம் விளைவித்த சேதாரப்பட்டியல் நீள்கிறது.

இஸ்லாமியத் தீவிரவாதம், இந்துத்துவா அடிப்படை வாதம் இவை இரண்டும் தான் இன்று இந்தியரை அச்சுறுத்தும் முக்கிய விஷயங்கள்.

இந்தியாவி;ல் தீவிரவாதம் தலைதூக்கும் போதெல்லாம் மதத்தோடு அது சம்பந்தப்படுத்தப்பட்டு அந்த குறிப்பிட்ட மதத்தினர் அனைவருமே தீவிரவாதிகள் என்பது போல சித்தரிக்கும் தவறுகள் இன்று துணிந்து அரங்கேற்றப்படுகிறது. உண்மையில் தீவிரவாதிகள் எந்தவொரு மதத்திற்கோ அல்லது இனைத்திற்கோ ஒட்டு மொத்த பிரதிநிதிகள் அல்ல. அவர்கள் சர்வதேச துரோகிகள்.

மதவாதிகள் மத்தியில் தீவிரவாதத்திற்கான ஆதரவும் தீவிரவாதிகளின் எண்ணிக்கையும் பெருகத் தொடங்கி இருந்தாலும் எல்லா இந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல. அதேப் போல் எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதிகள் அல்ல.

ஒரிசாவில் மதக்கலவரம் வெடித்தபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடமையாக நிவராண உதவி கிடைக்கும்படி புவனேஸ்வரில் இந்துக்கள் போராடியதும் மும்பை சமீபத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு என சர்வதேச சமுதாயம் அதனை ஒதுக்கி வைக்க வேண்டுமென மும்பைவாழ் இஸ்லாமியர் பதாகை பிடித்து போராடியதும் இதற்கு போதுமான சான்றுகள்.

ஆன்மீகத்தில் அரசியல் கலப்புதான் இந்தியாவில் தீவிரவாதம் பெருகுவதற்கான முக்கிய காரணம். மாட்டுத் தீவனம் போல இன்று இந்தியாவிலும் மதம் என்பது அரசியலுக்கு தீணியாகி வருகிறது. அதாவது சமயம் சாரா இந்தியாவிலே மதம் அரசியலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசியலில் இந்த ஆன்மீகக் கலப்புதான் இன்று இந்தியாவில் தீவிரவாதம் திமிறுவதற்கான முதற்காரணம்.

பாகிஸ்தானில் ராணுவம் அட்டகாசம் புரிகிறது. இந்தியாவில் அரசியல்வாதிகள் அத்துமீறல் புரிகிறார்கள். பாகிஸ்தானில் ஆட்சியாளர்களால் ராணுவத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இந்தியாவில் அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த முடிவதில்லை. ஜனநாயக ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் இரு நாடுகளிலும் காணப்படும் முரண்பாடே இது.

கட்சியை வளர்க்கவும் ஆட்சி கட்டிலை கைப்பற்றவும் இன்று சில அரசியல் கட்சிகள் அடிமட்ட காட்டுமிரண்டித் தனத்தை கூட கடைபிடிக்கத் துவங்கிவிட்டன.

ஒரிசாவில் தொழுநோயாளிகளின் சமூக சேவகர் கிரஹாம் ஸ்டேன்ஸ் தீயிட்டுப் பொசுக்கிய தாராசிங், டாங் மாவட்ட ஆலய இடிப்பிற்கு காரணமான சுவாமி அசிமானந்தா சமீபத்திய மாலேகாவ்ன் குண்டு வெடிப்பின் முதல் கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் துறவி பிரயாக் சிங் தாக்கூர், மாடாதிபதி தாயனந்த பாண்டே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ரோகித் சர்மா மற்றும் டுபே இவைகளெல்லாம் ஆன்மீகத்தில் அரசியல் கலப்பு வந்து விட்டதற்கான தீர்க்கமான அடையாளங்களாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்!

ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் குண்டு வெடிப்புகளும் மதக் கலவரங்களும் பற்றிக் கொள்ளும் பட்டியலை பார்க்கும்போது தீவிரவாதம் அரசியல்வாதிகளின் மறைமுக ஆதரவு பெற்றிருப்பதை தோலரித்துக் காட்டுகிறது.

1993ல் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பிற்கு பின் நிகழ்ந்த பாராளுமன்றத்திற்கான பொது தேர்தலில் தமிழ்நாட்டில் பி.ஜே.பி 5 இடங்கள் வென்றதும்.

2002ல் குஜராத்தில் கோத்ரா சம்பவத்தை தொடாந்து நிகழ்ந்த வன்முறையை அடுத்த நடத்தப்பட்டு சட்ட மன்றத் தேர்தலில் பி.ஜே.பி பெரும்பாண்மை பலம் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதும்

2008ல் கர்நாடகாவில் பெங்களுரில் தேசிய அறிவியல் கல்வி கழகத்தில் நிகழ்ந்த வன்முறைத் தாக்குதலை தொடர்ந்து அம்மாநிலத்தில்
பி.ஜே.பி வெற்றி பெற்றதும் ஒவ்வொரு தீவிரவாத செயலை தொடர்ந்து கட்சிகளுக்கு அரசியல் லாபம் கிடைப்பதையே காட்டுகிறது.

இவைகளை வைத்து அரசியல் நோக்கர்கள் தீவிரவாதத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் மறைமுக கூட்டு இருக்கிறது என ஆருடம் சொல்கிறார்கள்.

ஐந்தாண்டு காலம் தாங்கள் ஆட்சியில் அமர்ந்து உல்லாச வாழ்வு புரிய வேண்டும் என்பதற்காக இந்தியர்கள் மத்தியில் நிரந்தரப் பிரிவிiனை ஏற்படுத்த அரசியல்வாதிகள் முனைவது கேட்பதற்கே அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்லா உலகில எங்கெல்லாம் தீவிரவாதம் கொடிகட்டிப் பறக்கிறதோ அங்கெல்லாம் ஆட்சியாளர்களின் அரவணைப்பு துவக்க காலங்களிலாவது தீவிரவாதிகளுக்கு கிடைக்கவே செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானத்தில், ரஷ்யாவின் ஆதிக்கத்தை எதிர்க்க அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற பின்லேடன் தான் பின்நாளில் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தாக்கி அழித்து தீவிரவாதத்திற்கு முக்கிய காரணமானான்.

இந்திரகாந்தி அம்மையரால் வளர்ந்து விடப்பட்ட பிந்தரன்வாலேதான் மத்திய அரசுக்கு சவால் விடுத்து சீக்கியத் தீவிரவாதத்திற்கு வித்திட்டார்.
இந்தியாவிற்குள் ஊடுருவி நாச செயல்களை விளைவிக்க ஊக்கப்படுத்திய பாகிஸ்தான் இப்போது அதன் தேசிய எல்லைக்குள் நிகழும் தீவிரவாதச் செயல்களால் திணறிக் கொண்டிருக்கிறது. பட்டயத்தை எடுப்பவர்கள் பட்டயத்தாலே சாவார்கள் என்ற வேத கூற்று ஒருபோதும் பொய்த்து போகாதே.

நாம் எல்லோரும் இந்தியர் என்ற பொது அடையாளம் மறக்கப்பட்டு, இந்துக்கள, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர் என மத அடையாளங்களங்களை தேவைக்கு மிஞ்சி வெளிப்படுத்துவதும் இன்று அதிகரித்து வரும் அவலம். என்னை பொருத்தமட்டில் இது இந்தியாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சனை.

ஈ.வெ. ராசாமி பெரியார் போன்றவர்களின் தாக்கத்தினால் ஜாதி மத அடையாளங்களை பெரிதுபடுத்தி வெளிப்படுத்தாது வாழ்ந்த காலம் போய் மக்கள் இன்று தங்களது தனி சமூக மத அடையாளங்களை வெளிப்படுத்தி அவைகள் கொண்டாடும் அவலம் மீண்டும் தலைதூக்கி விட்டது. அது பெரும் வேதனைக்குரியது!

பிரித்தாளும் சூழ்ச்சியினால் இந்தியர்கள் சமூக மற்றும் மத ரீதியாக தனித் தீவுகளாக உடைத்து காலம் காலமாக ஆட்சி சுகத்தை தாங்கள் மட்டும் அனுபவிக்க இந்தியாவின் ஒரு சாரார் செய்யும் சூழ்ச்சி இது. இதனை இந்தியர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அது இனக் கலவரம் என்றாலும் சரி அல்லது மதக் கலவரம் என்றாலும் சரி மேல் தட்டு ஜாதியினர் எவரும் சாவதில்லை. சாமானிய ஏழைகள் தான் தங்களை கூறுபோட்டுக் கொண்டு ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்கின்றனர்.

எனவே இனமத ரீதியாக துவேஷம் விதைத்து இந்தியரைத் துண்டாட இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைக்க முயற்சி செய்யும் எவருக்கும் நாம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

அது மதமோ, இனமோ துவேஷம் எப்போதும் நெருப்பைத் தேடும், தோழமை அன்பைத் தேடும்.
தீவிரவாதம் எங்கு நிகழ்ந்தாலும் அது ஒரு மனித ஜாதிக்கு எதிரான துரோகம். தீவிரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மனுக்குல கொலை பாதகர்கள்.

இஸ்லாம் மற்றும் இந்துத்துவம் ஆகிய இரண்டிலும் உள்ள தீவிரவாத அமைப்புகள் எல்லாம் அழிவுத் தொழிலை கைவிட்டு ஆக்கல் சக்திகளாக உருவெடுக்கும் என்றால் நம் நாட்டில் மாபெரும் மலர்ச்சி ஏற்பட்டுவிடும். இதை அவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

அரசியல்வாதிகள் தங்கள் கட்சியினருக்கு சூலாயுதம் வழங்குவது, மக்கள் தங்கள் கட்சித் தலைவருக்கு வீரவாளை பரிசாக அளிப்பது போன்றவை எல்லாம் இந்தியரைக் காட்டு மிராண்டிதனத்திற்கும் கற்காலத்திற்கும் இழுத்துச் செல்லும் முயற்சியே தவிர அவை முன்னோக்கி அழைத்துச் செல்லும் செயல்களல்ல.

இன்று இந்தியா இளைஞர்கள் பெருத்த ஒரு நாடாக இருக்கிறது சுமார் 65 சதவீதம் இளைஞர்கள் இருக்கிறார்கள். கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் சொல்கேட்டு ஆடும் மகுடி பாம்புகாளகவே இவர்களில் பலர் உள்ளனர். இந்த அடிமைத் தனத்திலிருந்து இந்திய இளைஞர்கள் மீண்டாலேபோதும் இந்தியா சுபிட்சம் பெற்றுவிடும் தீவிரவாதம் அதன் எல்லைகளிலிருந்து தீவிரமாய் ஓடி ஒழிந்துவிடும்.

தேர்தல் காலத்தில் உங்கள் வாக்கினை பயன்படுத்தி சரியான அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களாக தெரிந்தெடுப்புச் செய்யுங்கள் அதனை தவிர்த்து அவர்கள் பின்னால் ஒரு போதும் போகாதீர்கள். இந்தியரை மத இனப் பெயரால் துண்டாட உங்களை அடியாட்களாகவோ தங்களது ஆதரவாளர்களகவோ அவர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்ள ஒரு போதும் இடம் தராதீர்கள்.

மும்பையில் உள்ளுர்காரர் உதவிகளின்றி இவ்வளவு பெரிய தீவிரவாதச் செயலை திட்டமிட்டு நிகழ்த்தியிருக்க முடியாது என்பது இந்தியாவின் உளவுப் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி ஒருவரின் கூற்று. மும்பை தாக்குதலில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் இந்தியராக கண்விழிப்பு பெற்று விட்டால் எந்த நாசகாரிகளும் இந்தியாவை அழிக்க முடியாது.

2001 செப்டம்பர் 11ல் நியூயார்க் பட்டணத்தின் இரட்டை கோபுரங்கள் சிதைக்கப்பட்டதைத் தொடாந்து அப்பட்டணத்தின் மேயரான ரூடி கொய்லானி தனது அதிரடி நடவடிக்கை மூலம் அந்த நகரையே அழகுபடுத்தி விட்டார். போதை மருந்து கடத்தலின் சர்வதேச தலைமையிடமாக விளங்கிய அந்நகரின் சீர்கேட்டினை சீழ்பிதுக்கி ஊழல் அதிகாரிகளை ஒழித்துக் கட்டி நியுயார்க் நகரில் பசுமையும், சுத்தமும் பூத்துக் குலுங்கச் செய்து அழகு படுத்திவிட்டார்.

மும்பையிலும் இது நிகழ வேண்டும் சர்வதேச நிழல் உலக தாதாக்களின் அடிவருடிகளாக இருப்போர் அகற்றப்பட வேண்டும். சொற்ப காசுக்காக நாட்டைக் காட்டி கொடுக்கும் துரோக அதிகாரிகள் மற்றும் ஆன்மீகப் போர்வையில் மக்களை கொன்று குவிப்போர் அடையாளம் காணப்பட்டு அப்புற்ப்படுத்தப்பட வேண்டும். அதற்கு எல்லா மதத்தினரும் ஒத்துழைப்பு தர, இந்த மதவேலி கடந்த ஒற்றுமையினால் இந்தியாவையே பாதுகாக்க முடியும்.

ஒரு நாடு நாகரீகம் பெற்றுள்ளது என்பது அது எந்த அளவு தொழில் வளம் பெற்றுள்ளது என்பதாலோ அல்லது பணப் புழக்கத்தாலோ அளக்கப்படுவதில்லை. அதின் குடிமக்கள் எத்தனை புனிதமானவர்கள் என்பதினாலேயே அளக்கப்படுகிறது. இந்த அளவுகோலின்படியே இந்தியாவும் நாகரீக நாடாக விரைந்து மிளிரட்டும்.

மும்பை தீவிரவாத தாக்குதலின் போது மஹாராஷ்டிரா காவல்துறை ஊழியர்களும் புதிய அதிரடிப்படை வீரர்களும் துணிவாக தீவிரவாதிகளிடம் சண்டையிட்டு அமைதிக்காத் தங்கள் உயிரையும் பொருட்டுப்படுத்தாது இந்த நாட்டினை காக்க முன்வந்துள்னர். அவர்களுக்கு எங்கள் வீர வணக்கங்கள். இவர்கள் விட்டுச் சென்ற காலியிடத்தை நிரப்புவதற்கு நேர்மையும் துணிவும் கொண்ட இந்தியக் கிறிஸ்தவ இளைஞர்கள் முன்வரட்டும்.

மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதற்காக ஒட்டு மொத்த பாகிஸ்தானியரும் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்துவது முட்டாள்தனம் இந்தியாவோடு கைகோர்க்க வேண்டும், இந்தியாவைப்போல ஜனநாயக நாடாக பாகிஸ்தானும் மாற வேண்டும் என்ற ஆதங்கம் கொண்ட பாகிஸ்தானியரும் அங்கு நிரம்பவே உள்ளனர். எனவே தீவிரவாதத்தை எதிர்க்கும் பெரும்பான்மை பாகிஸ்தானியரோடு கைகோர்த்து பாகிஸ்தானில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்துவிடுவதின் மூலம் எல்லை தாண்டிய பயங்கரவாதமே இந்தியாவில் இல்லாமல் பண்ணிவிடலாம். அன்புக்கும் சகோதரத்துவத்துக்கும் வேலிகள் இல்லையே! 

வானமுதம் ஜனவரி 09

StumbleUpon.com Read more...

மீண்டும் ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் மக்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்


சிங்களத்தின் "இனக்கொடூர முகம்" வெளிப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 26 ஆண்டுகளாக ஒரு இனத்தை இன்னொரு இனம் அழித்துக் கொண்டிருக்கின்றது. இன்று அந்த இனத்தை அளிவின் விழிம்பிற்கு கொண்டு வந்துவிட்டிருக்கின்ற நிலையிலும், சர்வதேசம் அழிப்பவர்களின் பக்கம் நின்று அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றமை இன்னும் தொடர்கின்றது.

கடந்த ஒன்றை மாதங்களாக எந்தக் குற்றமும் செய்யாத மூன்று இலட்சம் மக்கள்தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றார்கள். படையினரின் கடும் தாக்குதல்களில் காயமடைந்து பலருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படாமல், அரைகுறையான சிகிச்சையுடன் முகாம்களில் கொண்டுவந்து விடப்பட்டுள்ளனர். மிகக் குறைவான இடத்துக்குள் அளவுக்கு அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட போதிய அளவில் அமைக்கப்படவில்லை. சுகாதாரமான குடிநீர், உணவுகிடைக்காததால் பலருக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. சிறீலங்கா கூறும் நிவாரண முகாம்கள் அனைத்தும் தமிழ் மக்களின் மரண முகாம்களாக மாறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் எச்சரிக்கின்றன.

ஆனால், அந்த மக்களின் நடமாடும் அடிப்படைச் சுதந்திரத்தைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் நிற்கின்றது சர்வதேசம். போரில் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை இதனை தட்டிக்கேட்காது மௌனமாக வேடிக்கை பார்க்கின்றது. அகதி முகாம்கள் சிறைச்சாலை போன்ற இடங்களாக இருப்பதாக, இந்த அகதிகளை பராமரிப்பதற்கு நிதியுதவி வழங்கும் நாடுகள் கூறுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஐ.நா. பொதுச் செயலர், அதற்கு நான் பொறுப்பில்லை என்று தன்னிலை விளக்கம் கொடுக்கின்றார்.

வன்னியில் போர் நடைபெற்றபோது மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்று ஓயாது குரல்கொடுத்த, வலியுறுத்திய ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் எவையும் இப்போது வாய் திறப்பதில்லை. விடுதலைப் புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்துக் கொல்கின்றார்கள் என்று கண்ணீர் வடித்த எந்த மனித உரிமைவாதிகளும் அமைப்புக்களும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகிக்கொண்டிருக்கும் போது கண்ணீரும் வடிப்பதில்லை. அறிக்கையும் விடுவதில்லை.

வாரத்திற்கு 1400 பேர் நோயால் பலியாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்று இலண்டனில் இருந்து வெளியாகும் 'ரைம்ஸ்` பத்திரிகை ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. தடை முகாம்களில் போதிய சுகாதார வசதிகள் இல்லை. இதனால் வயிற்றுப் போக்கால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். தண்ணீரின் மூலம் பரவும் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைக்காததால் உயிரிழக்கின்றனர். போரினால் இடம் பெயர்ந்து நிவாரண முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட சிறீலங்கா அரசு செய்து கொடுக்கவில்லை என்றும் அந்த பத்திரிகை குற்றம்சாட்டியுள்ளது. ஒரு பத்திரிகை குற்றம்சாட்டும் அளவிற்கு கூட ஐ.நாவினால் குற்றச்சாட்டு சுமத்தமுடியாத நிலையில், அந்த மக்களை தங்கள் வாழ்விற்கு மீளவும் கொண்டு செல்லமுடியாத நிலையில்தான், இந்தவாரம் அந்த முகாமில் நடந்த சம்பவம் ஒன்று அங்குள்ள மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மெனிக் முகாமில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் இடத்திற்கு சென்ற பெண் ஒருவர் அங்கு படித்துக்கொண்டிருந்த பிள்ளைகளை விரட்டி விரட்டிக் கடித்துள்ளார். இதனால், இரண்டு நாட்கள் வகுப்புக்கள் நடைபெறவில்லை எனக் கூறும் அளவிற்கு நிலைமை இருந்துள்ளது. கடித்த பெண்ணை கைது செய்த சிறீலங்கா காவல்துறையினர், அவருக்கு பேய் பிடித்துள்ளது என்று குற்றம்சாட்டி அதனையே அங்குள்ளவர்களும் நம்பும்படி செய்துள்ளனர். ஆனால், அந்தப் பெண் சிறீலங்காவின் இன அழிப்புப் போரில் தனது கணவனையும் குழந்தைகளையும் இழந்துவிட்டு தனிமரமாக விரக்தியோடு அந்த முகாமிற்கு வந்து சேர்ந்த ஒரு தாய் என அறியமுடிந்தது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை கூட வழங்காமல் பேய் பிடித்ததாகக் கூறி, அந்தத்தாயின் அவலத்தை மூடி மறைக்க முயன்றுள்ளது சிறீலங்கா.

இவ்வாறு தங்கள் உறவுகளை, நேசத்துக்குரியவர்களை இழந்துவிட்டு நிர்க்கதியாக எத்தனையோ மக்கள் அந்த முகாமில் அடைபட்டுக் கிடக்கின்றார்கள். அந்த மக்களை மீட்டெடுத்து உரிய சிகிச்சை வழங்காது போனால், இவ்வாறான சம்பவங்கள் மேலும் தொடரும் என்பதுடன், தடை முகாமிலுள்ள அனைத்து மக்களுமே மனதளவில் பாதிப்படைகின்ற நிலையே ஏற்படும்.

இந்த மக்களை மீட்டெடுக்க இந்த சர்வதேசம் என்ன செய்யப் போகின்றது..? எதுவுமே செய்யாது இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் மக்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.

ஆசிரியர் தலையங்கம்

ஈழமுரசு (24.07.09)

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP