வருகிற வாரங்களில் 3,500 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈராக்கை விட்டு வெளியேறுகிறார்கள்
பாக்தாத், மே.9-
ஈராக்கில் தீவிரவாதிகளை எதிர்த்து போர் புரிந்து வரும் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 3,500 ராணுவ வீரர்கள் வருகிற வாரங்களில் ஈராக்கை விட்டு வெளியேற இருக்கிறார்கள்.
ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள்
ஈராக்கில் சர்வாதிகாரி சதாம் உசேனை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக அமெரிக்க ராணுவம், ஈராக் மீது தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ராணுவம் ஈராக்குக்குள் நுழைந்ததும் சதாம்உசேன் ஆட்சியை விட்டு ஓடி ஒளிந்தார். அவரை அமெரிக்க ராணுவம் கைது செய்து விசாரணை நடத்தி தூக்கிலிட்டது. அவரது ஆதரவாளர்கள் மற்றும் அல்கொய்தா இயக்கத்தினர் இப்போது அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு உள்ளது.
அல்கொய்தா தாக்குதல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு மேலும் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈராக் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டனர். தற்போது ஈராக்கில் இப்போது ஒரு லட்சத்து 70 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை ஒரு லட்சத்து 40 ஆயிரம் என்ற அளவுக்கு குறைக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.
3 ஆயிரத்து 500 பேர்
கடந்த 10 மாதங்களில் அல்கொய்தா தாக்குதல் குறைந்து விட்டது. இதனால் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது என்ற முடிவுக்கு வலுசேர்ந்து உள்ளது. எனவே வருகிற வாரங்களில் 3 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களை திரும்பப்பெறுவது என்று அமெரிக்க ராணுவம் முடிவு செய்து உள்ளது.
வருகிற ஜுலைக்கு பிறகு 45 நாட்களுக்கு பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் எதிர்காலத்துக்கு தேவையான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை பற்றி தீர்மானிக்கப்படும் என்று பிரிகேடியர் ஜெனரல் அல்லின் தெரிவித்தார்.
இதற்கிடையில் ஈராக் நாட்டில் நிறுத்தப்பட்டு உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களை அதிவிரைவில் திரும்பப்பெறவேண்டும் என்று அமெரிக்கர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=411616&disdate=5/9/2008
Read more...