சமீபத்திய பதிவுகள்

இன்டர்நெட்டில் பழகறாங்க... கோபத்தையும் கொட்டறாங்க!

>> Friday, January 28, 2011


சில மாதங்களுக்கு முன் பஸ்சில் போனபோது பக்கத்தில் அமர்ந்த ஒருவர் திடீரென என் பக்கம் திரும்பி, 'சார், பல வருஷம் முன்பு நாம பழகியிருக்கோம்...' என்று சொன்னார். அவருக்கும் நடுத்தர வயதுதான். பள்ளியிலா, கல்லூரியிலா என்றெல்லாம் மண்டை குழம்பிக்கொண்டிருந்தபோது, நான் இறங்க வேண்டிய இடம் நெருங்கிவிட்டது. அவரிடம், 'என்கூட படித்தீர்களா?' என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன். என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு, 'டேய், என் பேரு இந்திரன்டா, நானு, ஜோதி, நீ எல்லாம் ஒரே பெஞ்ச், இப்ப தெரியுதா...' என்று தோளைத் தட்டி விடைகொடுத்தார். 

எனக்கு ஒரு பக்கம் வெட்கமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் 'இப்படியும் கூட நண்பர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். வேலை செய்வது, பணம் சம்பாதிப்பது, மனைவி, குடும்பம், வாழ்க்கை என்று மட்டும் இல்லாமல் நட்பை மறக்காத பண்பு மிகவும் சிறந்தது' என்று எனக்கு உணர்த்தியதை எண்ணி அவரை பெருமையுடன் நினைத்தேன். அதன்பின் அவரைப் பார்க்கவே முடியவில்லை. இப்படி பள்ளியிலும், கல்லூரியிலும் பழகிய நண்பர்களை அதன்பின் பார்க்கவே முடியாமல் தொடர்பறுந்து விடுகிறவர்கள் எத்தனையோ பேர்.
ஆனால் இன்றைய தலைமுறையினரை கேட்டுப்பாருங்கள். நம்மைத்தான் கேலி செய்வர். 'இதுக்குத்தான் பேஸ்புக், ஆர்க்குட் போகணும்ங்கறது...' என்று கிண்டலடிப்பார்கள். 

நல்லது அதிகம்; கெட்டது கொஞ்சம்!

சோஷியல் நெட்வொர்க்கிங் என்று சொல்லப்படும் ஆர்க்குட், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன. நல்ல எண்ணத்தில் பரிமாறப்படும் தகவல்கள், படங்களை திரித்து தவறாக பயன்படுத்துவோர் வெகு சிலர்தான். அவர்களை தண்டிக்க சட்டம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படித்த சக மாணவ, மாணவியை தொடர்பு கொள்ள வேண்டுமானால், இதில் போய் பள்ளி பெயரை, நாம் படித்த ஆண்டை பதிவு செய்தால் போதும்; உங்கள் அன்றைய நண்பர்களில் சிலர் கண்டிப்பாக சிக்குவர். அவர்களை 'நெட்' வழியில் தொடர்பு கொண்டு, மற்ற நண்பர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். 

இப்படி நண்பர்களை, உறவினர்களை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் உறவை, நட்பைத் தொடரச் செய்ய முடிகிறது என்றால், இன்னொரு பக்கம் நம் கருத்துகளையும் பதிவு செய்ய முடியும். பொது விஷயமாக இருந்தாலும், தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் மனதில் உள்ளவற்றை கொட்டித் தீர்க்க இந்த பக்கங்கள் பயன்படுகின்றன. நம் ஆதங்கத்தைக் கொட்டவும் முடிகிறது; அதே கருத்தைக் கொண்டவர்களின் அறிமுகமும் கிடைக்கிறது. ஆனால், இப்படி பொது விஷயங்களை பரிமாறிக்கொள்ளும்போது கட்டுப்பாடு தேவை. தனிப்பட்ட விமர்சனங்கள் சட்ட சிக்கல்களில் கொண்டுபோய் விடும். 'ப்ளாக்' எனப்படும் வலைப்பூக்களிலும் இப்படித்தான்!

கருத்து கந்தசாமி சிக்கினாரு!

அவர் எம்டெக், எம்பிஏ படித்தவர். முன்னணி சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றுபவர். சம்பளம் மாதத்துக்கு  70 கே. அதாவது, 70 ஆயிரம் ரூபாய். ஆனால், கார் வாங்க விருப்பமில்லை; பஸ்சில்தான் போவார். கண்டக்டர் 50 பைசா சில்லறை தராவிட்டால் சும்மா விட மாட்டார். 'சே, இந்தியா எப்படி முன்னேறும்...' என்று சலித்துக்கொள்வதுடன், உடனே தன் பிளாக்பெர்ரி மொபைலை எடுத்து, நெட்வொர்க்கில் கருத்தை பதிவு செய்தும் விடுவார். 

இவர் வீட்டு நாய் பக்கத்து வீட்டுக்குப் போய் அசுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. எவ்வளவோ சொல்லியும் இவர் கேட்பதாக இல்லை. அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டு எரிச்சல் அடைய வைத்தார். சண்டை பெரிதானது. அந்த வீட்டிலும் ஒரு சாஃப்ட்வேர் பெண் இருக்கிறார். அவரும் வந்து ஆங்கிலத்தில் தாட்பூட் என்று மல்லுக்கு நிற்க, மனிதர் டென்ஷன் ஆகி விட்டார். கத்தி விட்டு ஆபீசுக்கு போக பஸ்சில் ஏறி உட்கார்ந்தவர், வழக்கம்போல் இந்த சம்பவத்தையும் எழுதி, அந்த சாஃப்ட்வேர் பெண்ணை மட்டரகமாக விமர்சித்திருந்தார். இதை எப்படியோ அறிந்த அந்தப் பெண் போலீசில் புகார் செய்ய, இந்த மனிதர் 'ஙே...' என்று விழித்து மன்னிப்பு கேட்டதால் சும்மா விட்டது போலீஸ்.  

முதல் 'ப்ளாக்' கிரிமினல்!

சைபர் க்ரைமில் எத்தனையோ விதங்கள் உண்டு. கண்டபடி திட்டித்தீர்ப்பது முதல் அடுத்தவர் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடுவது வரை சொல்லலாம். முதன்முதலாக 'ப்ளாக்' விஷமத்தில் இறங்கி இன்னொரு பெண்ணுக்கு அவமானத்தைத் தேடித் தந்தவன் சிக்கியது 2001ல்தான். மனிஷ் கதூரியா என்பவன், ரித்து என்ற பெண்ணின் பெயரை தவறாக பயன்படுத்தி, ரித்து படங்களை, போன், இமெயில் முகவரியைப் பதிவு செய்து, ரித்து படங்களை திரித்து, ஆபாசமாக வெளியிட்டான். பழிவாங்குவதற்காக இப்படிச் செய்தவன், சில நாட்களில் பிடிபட்டான். ப்ளாக் கிரிமினல் நடவடிக்கையில் முதல் முதலாக பிடிபட்டவன் இவன்தான். 

கொட்டித் தீர்; பழி தீர்க்காதே!

நட்பு வட்டத்திற்கு மட்டும் தெரியும் வகையில், ப்ளாக்குகளில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இளைய தலைமுறையினர் பலர் உள்ளனர். இந்தக் கருத்து பரிமாற்றம் நட்பு வட்டத்துடன் முடிந்து விடும். தேவையில்லாமல் சர்ச்சை கிளம்பாது. இதில் கோபம், வருத்தம், மகிழ்ச்சி எல்லாம் இருக்கும். ஆனால், பழி தீர்க்கும் நெடி இருக்காது.  பழி தீர்க்க 'ப்ளாக்'குகளை பயன்படுத்தாமல், கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல பயன்படுத்தலாம். அரசியலில் லாலு முதல் நடிப்பில் அமிதாப் வரை பல பிரபலங்களும் 'ப்ளாக்' வைத்துள்ளனர். அவ்வப்போது தங்கள் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். இப்படி நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். உறவை, நட்பை பேணுவோம்.           

source:dinakaran

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

உங்கள் அடுத்த கம்ப்யூட்டராகும் ""டேப்ளட் பிசி''


கம்ப்யூட்டர் உலகம் தற்போது நான்கு முனைச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் எட்டு எடுத்து வைப்பது என்று புரியாமல் உள்ளது. இன்றைக்கு பலருக்கு, முதல் கம்ப்யூட்டர் எது என்றால் அது பெர்சனல் கம்ப்யூட்டராக இல்லை. ஸ்மார்ட் போனாகத்தான் உள்ளது. ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் நாம் எங்கு சென்றாலும் உடன் வருகின்றன. அதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. எவ்வளவுதான் திறனுடன் செயல்பட்டாலும், ஒரு ஸ்மார்ட் போன், பெர்சனல் கம்ப்யூட்டராக முழுமையாக இடம் பெறாது. எனவே தான் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும், ஸ்மார்ட் போனுக்கும் இடையே ஒரு சாதனம் இரண்டின் பயன்பாட்டினையும் முழுமையாகத் தரும் வகையில் தேவையாய் இருந்தது. அந்த இடத்தில் டேப்ளட் பிசி வந்து நம் தேவைகளை நிறைவு செய்து வருகிறது. இதனால், கம்ப்யூட்டர் பயன்பாடு தற்போது இரு வகை கணினிகளில் மேற்கொள்ளப்பட்டு, எதில் தொடர்வது என்ற கேள்விக் குறியுடன் தொடர்கிறது. ஆனால், அண்மையில் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து முடிந்த தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பட்டயக் கணிப்பொறிகளைக் (Tablet PC) காண்கையில், அதன் மாடல் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்கையில், இவை மொத்தமாக மக்களை சென்றடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது. எனவே நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அதன் சில அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
1. பழைய மாடலில் மாற்றம்: தற்போதைய டேப்ளட் பிசி இதன் முன்னோடிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. முதலில் ஒரு டேப்ளட் பிசி, லேப்டாப் கம்ப்யூட்டரில், சுழலும் திரை ஒன்றை இணைத்தது போல வடிவமைக்கப்பட்டது. ஆனால் மக்களிடம் இவை எடுபடவில்லை. பின்னர், ஸ்மார்ட் போன் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் சாதனம் உண்டாக்கிய சலசலப்பும், மக்களை புதிய கோணத்தில் பார்க்க வைத்தது. ஐ-பேட் இதுவரை டேப்ளட் பிசி குறித்து நிலவி வந்த அம்சங்களை மாற்றிப் போட வைத்தது. அந்நாளைய காம்போசிசன் நோட்டுப் போல தோற்றத்தில் பல டேப்ளட் பிசிக்கள் வடிவமைப்பு கொண்டுள்ளன. அனைத்தும் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. 
2. புதிய ஸ்லேட்கள்: பல டேப்ளட் பிசிக்கள் புதிய டிஜிட்டல் ஸ்லேட்டுகளாகத்தான் வடிவம் பெற்றுள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட். 9.5 அங்குல அகலத்தில், 7.5 அங்குல உயரத்தில், 0.5 அங்குல தடிமனில் இது வெளியான போது, இதுவே டேப்ளட் பிசிக்களின், வரையறுக்கப்பட்ட வடிவமாக அமைந்துவிட்டது. பின்னர் சாம்சங் கேலக்ஸி டேப் 7 அங்குல திரையுடன் அறிமுகமான போது, கைகளுக்குள் அடங்குவதற்கான சரியான அளவு அது என வரையறை செய்யப்பட்டது. தற்போது நாம் விரும்பும் அளவில் திரையுடன் கூடிய டேப்ளட் பிசிக்களை தேர்ந்தெடுக்கலாம். டேப்ளட் பிசிக்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நிச்சயம் இது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். 
3. ஆப்பரேட்டிங் சிஸ்டம்: பிரியமான அளவில் டேப்ளட் பிசிக்கள் தயார் ஆவது மட்டுமின்றி, இவற்றின் இயக்கத்திற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் ஐபோன், ஐபேட், ஐ பாட் டச் ஆகியவற்றில் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முன்னணியில் உள்ளது. அடுத்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இடம் பெறுகிறது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன், 12க்கும் மேற்பட்ட புதிய டேப்ளட் பிசிக்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் 1.6, 2.0, 2.1 மற்றும் 2.2 எனப் பல பதிப்புகளில் கிடைக்கிறது. 
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, டேப்ளட் பிசிக்கானதாகக் கொண்டு வந்துள்ளது. பிளாக்பெரியைத் தயாரிக்கும் ஆர்.ஐ.எம். நிறுவனம், QNX என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு வகையாகும். டேப்ளட் பிசி தயாரிப்பில், பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறிய நிறுவனங்களும், தங்கள் பங்கைப் பிடிக்க பலத்த போட்டியில் இறங்கி உள்ளன. 
4. நிறைய எதிர்பார்ப்புகள்: இத்தனை மாடல் டேப்ளட் பிசிக்களும் போட்டியில் இறங்கியுள்ள நிலையில், இவற்றில் மக்கள் எதிர்பார்க்கும் அம்சங்களும் அதிகரித்து வருகின்றன. எங்கும் எடுத்துச் செல்லுதல், நெட்வொர்க் இணைப்பு பெறுதல் ஆகிய ஸ்மார்ட்போன் வசதிகளுடன், லேப்டாப் ஒன்றின் செயல்பாடுகளையும் இணைத்துத் தருவதால், குறிப்பாக பெரிய திரை, அதிக திறனுடன் கூடிய ப்ராசசர் மற்றும் கேமரா மற்றும் துணை சாதனங்கள் கொண்டு இவை இருப்பதனால், பயன்படுத்துபவர்கள் இதில் இன்னும் பல வேலைகளை முடிக்கப் பயன்படுத்துமா என்று எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, இயங்கும் இடத்திற்கேற்ற வகையில் இணைய தகவல்களைத் தரும் பணிகளில், டேப்ளட் பிசிக்கள் தங்கள் ஜி.பி.எஸ். திறனுடன் செயல்படுவதால், இவற்றின் பயன்களின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. மேலும் முன் பகுதியிலும் தரப்படும் கேமரா, வீடியோ கான்பரன்சிங் வசதியை மிக எளிதாகத் தருகிறது. இவை சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுடனான தொடர்பை இன்னும் எளிதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகின்றன.
டேப்ளட் பிசிக்கள், தற்போது கையாளப்படும் மொபைல் கேமிங் வசதிகளை இன்னும் சிறப்பாக்கும். ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் மார்க்கட் தளங்களில் ஹை டெபனிஷன் முப்பரிமாண விளையாட்டுக்கள் இதற்கெனவே குவிந்து கிடக்கின்றன. பலர் ஒரே நேரத்தில் வேறு வேறான இடங்களிலிருந்தவாறே விளையாடுவது டேப்ளட் பிசிக்கள் மூலம் மிக எளிதாகும்.
குறைந்த கட்டணத்தில், எப்போதும் இணைய இணைப்பில் இருக்கும் வகையிலான கம்ப்யூட்டர்களை, டேப்ளட் பிசிக்கள் தரும். பெரும்பாலான டேப்ளட் பிசிக்கள், வை-பி மற்றும் 3ஜி தொடர்பினைத் தரும் வகையில் வடிவமைக்கப்படுவதால், நெட்வொர்க் இணைப்பு எளிதாகும்.
5. சில தடைகள்: டேப்ளட் பிசிக்கள் மக்களை முழுமையாக அடைவதில் சில தடைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. முதல் தடை வெவ்வேறான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும், அவற்றைத் தரும் மிகப் பெரிய நிறுவனங்களுமே. முதல் மூன்று நிறுவனங்களான, ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் இந்தப் பிரிவில் தங்களின் ஏகாதிபத்தியத்தினை நிறுவ முயற்சிக்கும்.இவர்களின் போட்டியில் வெற்றியைத் தீர்மானிப்பது, ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம் களைப் பொறுத்தே அமையும். இவற்றில் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் தங்களின் சிஸ்டங்களில் இயங்கும், அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு ஒப்புதல் கொடுப்பதுவும் பிரச்சினையைத் தரும் வகையில் இருக்கும். 
6. யார் வாங்க வேண்டும்?: நீங்கள் புதுமை எதனையும் சோதனை செய்து பார்க்க விரும்பாதவராக இருந்தால், இப்போதைக்கு டேப்ளட் பிசியிடம் செல்ல வேண்டாம். எந்த புதிய சாதனம் கிடைத்தாலும், அதன் பலனை உடனே பெற வேண்டும் என்ற வேட்கை உடையவராக இருந்தால், அப்ளிகேஷன் புரோகிராம்கள் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் உடையவராக இருந்தால், தாராளமாக, டேப்ளட் பிசி ஒன்றினை வாங்கிப் பயன்படுத்தலாம். மொபைல் இணைய உலா, அகலமான திரை, இருட்டிலும் நூல்களைப் படிக்கும் வசதி, வீடியோ ஓட்டம், மொபைல் இமெயில் ஆகியவை உங்களுக்கு பிரமிப்பினைத் தரும். பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனும் இயங்கும் வகையில் கிடைக்கின்றன. ஆப்பிள், சாம்சங். எச்.பி. போன்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்களுடன், டெல், ஏசர் நிறுவனங்களின் டேப்ளட்களும் தற்போது மார்க்கட்டில் இறங்குகின்றன. இதில் நெட்புக் கம்ப்யூட்டர் விற்பனையில், உலக அளவில் 36% பங்கினைக் கொண்டுள்ள ஏசர் நிறுவனம் , 4.8 மற்றும் 10 அங்குல திரைகளுடன் இவற்றை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதே வகையில் டெல் நிறுவனமும் இறங்கியுள்ளது. பெயர் பெற்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசியின் விலை ரூ.32,000 முதல் ரூ. 40,000 வரை செல்கிறது. அதிகம் பிரபலமாகாத சீனத்து டேப்ளட் பிசிக்கள், இணைய தளம் மூலமாகவும் சில ஏஜன்சிகள் மூலமாகவும் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ. 9,000 முதல் ரூ.24,000 வரை உள்ளன. பெங்களூரைச் சேர்ந்த நோஷன் இன்க் (Notion Inc) என்ற நிறுவனம், ஐ-பேடில் உள்ளதைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் கொண்ட டேப்ளட் பிசி ஒன்றை ரூ. 20,000 என்ற அளவில் தருவதாக அறிவித்துள்ளது. இதே போல ஆலிவ் பேட் என்ற 3ஜி வசதி கொண்ட 7 அங்குல திரை கொண்ட டேப்ளட் பிசி ரூ. 22,000க்குக் கிடைக்கிறது. இவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தால், நிச்சயம் இந்த சந்தையில் வெற்றி பெறும். முதல் வெற்றி பெற்றால், லாபமும் அடையும். மக்களும் பயன் பெறுவார்கள். பெரிய நிறுவனங்கள், இந்த டேப்ளட் பிசிக்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை அதிக அளவில் சந்தையைப் பிடிக்கும் போட்டியில் இனி பலமாக இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
ஆனாலும், டேப்ளட் பிசி ஒருவரின் இரண்டாவது கம்ப்யூட்டராகத்தான் மக்களால் முதலில் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. பெரும்பான்மை யானவர்களால் இயக்கப்படும் விண்டோஸ் இயக்கம் முழுமையாக, டேப்ளட் பிசியில் இயங்கும் நிலை வரும்போதுதான், டேப்ளட் பிசிக்கள் பெரிய அளவில் பெருகும்


source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP