சமீபத்திய பதிவுகள்

12 நாட்களில் தமிழீழத் தேசியத் தலைவருக்கு மீசை அடர்த்தியாக வளர்ந்தது எப்படி?

>> Friday, July 3, 2009

வன்னிக் களமுனையில் இறுதியாக என்ன நடந்தது? தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து உண்மை நிலை என்ன என்பவற்றை இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு வெளியிட்டுள்ளது.

தங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், 'மக்கள் அறிந்த போராளி' ஒருவர் ஊடாக இந்தத் தகவல்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈழமுரசு, இதுதொடர்பாக விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

ஈழமுரசு வெளியிட்டுள்ள அந்தச் செய்தியை இங்கே தருகின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் வாதப்பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இருக்கின்றார் என நம்பும் ஒரு பகுதியினரும் இல்லை என மறுத்து அறிக்கைவிடும் கூட்டத்தினருக்கும் மத்தியில் தலைவர் தொடர்பான உண்மைத் தகவல்களையும், களமுனையில் இறுதியாக என்ன நடந்தது என்பது பற்றியும் அறிந்துகொள்வதற்கு ஈழமுரசு கடந்த பல நாட்களாக எடுத்த பல்வேறு முயற்சிகளின் வெற்றியாக களமுனையில் இருந்து நம்பகத்தகுந்த பல தகவல்களைப் பெற்றுள்ளோம்.

களமுனையில் கடந்த 18.05.2009 அன்றுவரை போராடிக்கொண்டிருந்த போராளி ஒருவருடன் ஈழமுரசு அண்மையில் தொடர்புகளை ஏற்படுத்தி நடந்த சம்பவங்களை அறிந்துகொண்டுள்ளது. அந்தத் தகவல்களை வழங்கிய 'மக்கள் அறிந்த அந்தப் போராளியை' தற்போதையை சூழ்நிலையில் எம்மால் இனம்காட்டிக்கொள்ள முடியவிட்டாலும், கால ஓட்டத்தில் ஒருநாள் அவரை அடையாளம் காட்டமுடியும் என்றே நம்புகின்றோம்.

சிறீலங்கா இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட எந்த நிழற்படங்களையும் இதுவரையும் அவர் பார்த்திராதபோதும், தலைவரை இறுதியாக தான் கண்டபோது இருந்த அவரது தோற்றம் தொடர்பாக, அந்தப் போராளி வழங்கிய தகவல்கள் தலைவர் எனக்கூறி சிறீலங்கா வெளியிட்ட நிழற்படங்கள் போலித்தனமானவை என்பதை அப்பட்டமாகப் புரியவைத்தன.

அவருடனான எமது உரையாடிலின்போது பகிர்ந்துகொண்ட விடயங்களை இங்கே தொகுத்து தருகின்றோம்.

மே மாதம் 4ம் திகதி அல்லது 5ம் திகதியா என்பது சரியாக நினைவில் இல்லை. இந்த இரண்டு தினங்களில் ஒன்றில்தான் தலைவரை இறுதியாக நான் சந்தித்திருந்தேன். அன்றைய தினம் தலைவருடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. உண்டியலடிக்கு வருமாறு வந்த அழைப்பை அடுத்து போராளிகள் அங்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு சுமார் ஒன்பது வரையான உந்துருளிகளில் ஒரு அணியொன்று வந்து சேர்ந்தது.

ஒரு உந்துருளியில் தலைவரும் பொட்டம்மானும், ஏனையவற்றில் அவர்களது மெய்ப்பாதுகாவலர்களும் இருந்தனர். தலைவர் தலைக்கவசம் (கெல்மட்) அணிந்திருந்தார். வழமைபோலவே போராளிகளுடன் உரையாடியவர், தாக்குதலுக்கான திட்டங்களையும் வழங்கினார். அப்போது தலைவர் முழுமையாக முகச்சவரம் செய்திருந்தார். அவரது மீசை கூட மளிக்கப்பட்டிருந்ததை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

ஆனால், நீங்கள் சொல்லவதுபோல் சிறீலங்கா இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட படத்தில் அடர்த்தியாக மீசை உள்ள தலைவரின் உருவம் வந்திருக்க வாய்ப்பில்லை. பத்து, பன்னிரண்டு நாட்களில் அவ்வளவிற்கு மீசை வளர்ந்திருக்கும் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அத்துடன், அன்றைய சந்திப்பின் பின்னர் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி தலைவர் அந்த முற்றுகைப் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டார்.

சுமார் 45 முதல் 50 வரையான கரும்புலித் தாக்குதல்கள் நடத்தப்பட்டே படையினரின் முற்றுகைகள் உடைக்கப்பட்டு நந்திக்கடல் ஊடாக இந்த வெளியேற்றம் நிகழ்ந்ததாகவும், இதன்போது ஆயிரம் வரையான படையினர் கொல்லப்பட்டிருந்ததாகவும் களமுனையில் போராளிகளிடையே பரவலாக செய்திகள் இருந்தன.

தலைவர் இறுதி வரையும் நின்று போராடப் போவதாகவே கூறிக்கொண்டிருந்தார். ஆனால், போராளிகளும் தளபதிகளும் அவரை அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றே வலியுறுத்தி கேட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் தலைவர் வரவிட்டால் மயக்க மருந்து செலுத்தித்தான் கொண்டுபோவோம் என்று சொல்கின்ற அளவிற்கு நிலைமை இருந்தது.

இதேவேளை, சண்டை மிகவும் இறுக்கமடைந்திருந்த நிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து இரண்டு அணிகளுடன் வரவுள்ளதாக தலைவருக்கு தளபதி ஒருவரிடம் இருந்து தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தலைவர், அணிகளைச் சிதைக்காமல் அந்ததந்த இடங்களிலேயே தக்க வைத்துக்கொண்டிருக்குமாறு பணித்திருந்தார்.

தலைவர் அங்கிருந்து வெளியேறியிருந்தபோதும், தம்பிதான் இறுதிவரை எங்களுடன் களமுனையில் நின்றிருந்தார். தலைவரின் மகன் சாள்சைத்தான் அவர் தம்பி என்று குறிப்பிட்டார். அவரது மகள் துவாரகாவும் கையில் காயமடைந்த நிலையிலும் களமுனையில் போரிட்டுக்கொண்டிருந்தார் என்பதை அறியமுடிந்தது.

ஆனந்தபுரம் தாக்குதலில் கேணல் தீபனும், கேணல் கடாபியும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இறுதிச்சமர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது காயமடைந்த கேணல் சொர்ணம் அவர்களும் சயனைட்டை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். கேணல் ஜெயமும் கேணல் சூசையும் களமுனையில் இருந்து போராளிகளை பெரும் கடல் வழியாக படகுகளில் வெளியேற்றிக்கொண்டிருந்தனர்.

கேணல் ஜெயம் அவர்கள் அரைக் காற்சட்டையுடன் (ஜம்பர்) கடற்கரையில் நின்று பணிகளில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. தலைவர் வெளியேறிச் செல்வதற்கு வசதியாக அவர்கள் படையணிகளை முன்னதாகவே வேறு பகுதிகளில் கடலால் கொண்டு சென்று தரையிறக்கி வழியமைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறியமுடிந்தபோதும், அவர்கள் எங்கே தரையிறக்கப்படுகின்றார்கள் என்பதை என்னால் அறியமுடியவில்லை. எனினும், கொக்குத்தொடுவாய் பக்கமே அவர்கள் சென்று தரையிறங்கியிருக்க வேண்டும். பின்னர் ஜெயமும் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக என்னால் அறியமுடிந்தது.

கேணல் பானு அவர்களும் களமுனையில் நின்றிருந்தார். எனினும், அவர் கையில் காயமடைந்திருந்ததால் அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார். (கேணல் பானு எனக்கூறி வெளியிடப்பட்டிருந்த படத்தில் அவரது கையில் எந்தக் காயமும் இருக்கவில்லை. அத்துடன், அவர் ஏற்கனவே வயிற்றுப் பகுதியிலும் காயமடைந்திருந்தார். வெளியிடப்பட்டிருந்த படத்தில் அந்தக் காயமும் இருக்கவில்லை.)

இறுதியாக, 15ம் திகதி முள்ளிவாய்க்காலில் இருக்கும் விடுதலைப் புலிகளின் அனைத்து ஆவணங்களையும், கணினிகளையும் அழித்துவிடுமாறு எங்களுக்கு தகவல் வந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் தொடர்பான ஆவணங்களை முற்றாக அழிக்குமாறு தலைவர் அந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தியிருந்தார்.

இதனால், இராணுவத்தினர் எப்போதும் முள்ளிவாய்காலில் நுழையலாம் என்ற நிலையில், இருக்கின்ற அனைத்துப் பொருட்களையும் கொண்டுபோய் ஒரு இடத்தில் குவித்து வைத்து தீ வைத்தோம். பெரும் பிரதேசத்தில் அந்தத் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

அப்போது இராணுவத்தினர் எமக்கு மிக அருகில் நெருங்கியிருந்தனர். இந்நிலையில், வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த இன்னொரு ஆவணத் தொகுதியையும் அழிக்கவேண்டியிருந்தது. அந்த வாகனத்தில் ஏற்றப்பட்ட ஆவணங்களுக்கு தீ வைத்துவிட்டு திரும்பியபோது, இராணுவத்தினர் ஏற்கனவே தீ வைக்கப்பட்டு எரிந்த பகுதிக்குள் நுழைந்துவிட்டிருந்தனர். இறுதியாகவே நான் அங்கிருந்து வெளியேறினேன்.

StumbleUpon.com Read more...

புத்தம் கஷ்டம் கச்சாமி! இப்போ புரியுதா பிரபாகரன் தமிழீத்தை மட்டுமே தீர்வாக ஏன் வைத்தார் என்று?

 
இலங்கை ஒரு ரத்தவாடை வீசும் பிணபூமியாக சிங்களர்களால் மாற்றப்பட்டு பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது. இப்போ பிரபாகரன் ஒழிந்துவிட்டார் என்று கொக்கரித்த ராசபக்சே அதைவிட சிக்கலான சூழலில் மாட்டியிருக்கிறார் என்பதே நிசம்! அப்படி என்ன ஆகிவிட்டது அங்கே அவருக்கு என்று அப்பாவியாகக் கேட்பவராக நீங்கள் இருந்தால் அந்நாட்டின் தலைமை மதகுரு சமீபத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்று படியுங்கள் கீழே...

++++++++

அதிகாரப் பகிர்வுத் திட்டம் தொடர்பான அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தொடர் மெளனம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் தேசிய பிக்கு முன்னணி, நாட்டையும் தங்களை ஏமாற்ற அரசு நினைத்தால் போராட்டத்தினால் இந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளது.

இன நெருக்கடிக்குத் தீர்வாக அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தேசிய பிக்கு முன்னணி இந்த எச்சரிக்கையை விடுத்தது.

"அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இல்லை எனில் வரலாறு காணாத போராட்டத்தை அரசாங்கம் சந்திக்க வேண்டியிருக்கும்" எனவும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தமர அமில தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

"அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி தமிழீழத்தைக் கொடுப்பதாயின் எதற்காக விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும்? எதற்காக இந்தளவுக்கு இராணுவத்தினரைப் பலிகொடுக்க வேண்டும்? பிரபாகரனிடமே தமிழீழத்தை கையளித்திருக்கலாமே?

அரச தலைவரை மாமன்னர் என அழைப்பது தொடர்பாகவும் 30 வருடங்களுக்கு அவரிடம் ஆட்சியை ஒப்படைப்பது தொடர்பாகவும் பல்வேறு தரப்புக்களிடம் இருந்தும் கருத்துக்கள் வெளியாகி வண்ணம் உள்ளது. ஆனால் அரச தலைவரோ வாயையே திறக்காமல் அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளைப் பயன்படுத்தி கோமாளித்தனமான நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார்.

நாட்டைப் பிரிக்கும் திட்டம் 1987 ஆம் ஆண்டில் இருந்தே அரங்கேற்றப்பட்டு வருகின்றது. இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் மூலமாக திணிக்கப்பட்டதுதான் 13 ஆவது திருத்தம். அன்று வித்திட்ட விதையே இன்று பயங்கரவாதப் பயிராக வளர்ந்திருக்கின்றது.

தனி ஈழத்துக்கான விடுதலைப் போராட்டமும் இந்தியா மற்றும் அனைத்துக் கட்சிக் குழுவின் அதிகாரப் பரவலாக்கல் திட்டமும் ஒன்றேயாகும். இந்தியா அறிவிக்கும் அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் மெளனமாக இருந்துகொண்டே நடைமுறைப்படுத்தக்கூடிய ஆபத்தும் உள்ளது. இல்லை எனில் இந்தியாவுக்கு ஏற்றவாறு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது.

இந்த விடயத்தில் அரச தலைவரின் தொடர் மெளனம் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. தமிழர்களின் உண்மையான பிரச்சினையை அரச தலைவர் அடையாளம் கண்டுள்ளாரா? அப்படியானால் அதற்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் தனது தொடர் மெளனத்தைக் கலைத்துவிட்டு அரச தலைவர் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். 2005 ஆம் ஆண்டில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அவர் மறந்துவிட முடியாது.

நாட்டையும் மக்களையும் ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முற்பட்டால் தேசிய பிக்கு முன்னணி மேற்கொள்ளப் போகும் போராட்டத்தினால் ஆட்சியை விட்டுவிட்டு ஓட வேண்டிய நிர்ப்பந்தம்தான் இந்த அரசாங்கத்துக்கு ஏற்படும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

+++ இப்போ தலைப்பை மறுபடியும் வாசியுங்கள்.. நன்றாக புரியும்! புத்தம் கஷ்டம் கச்சாமி!

StumbleUpon.com Read more...

மைக்கல் ஜாக்சன் என்ற அமெரிக்கத் தொழுநோயை, ஏகாதிபத்திய அமெரிக்கா உலகுக்கும் ஏற்றுமதியாக்கியது

 






 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
உடல் அசைவை, உடலின் மொழியாக்கியவன் மைக்கேல் ஜாக்சன். இந்த திறமையை கடைவிரித்து, நுகர்வாக விற்றது அமெரிக்கா ஏகாதிபத்தியம். அவனின் வேகமான அசைவை, மாறி வந்த உலக ஒழுங்குக்கு ஏற்ப அமெரிக்கா வடித்தெடுத்தது. இப்படி மைக்கேல் ஜாக்சன் அமெரிக்காவின் கதாநாயகனானான். இதனால் பணத்தில் மிதக்கத் தொடங்கியவன், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் துணையுடன் உலகப் புகழ் பெற்றான்.

இதன் மூலம் உழைக்கும் மனித வர்க்கத்தின் போராடும் ஆற்றல் சீரழிக்கப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையுடன், அதை தன் உடலுக்குள் அவன் வடியவிட்டான். அமெரிக்க ஏகாதிபத்தியம் மனிதர்களின் ஆற்றல்களையும் திறமைகளையும் மக்கள் நலனுக்காக அல்லாது, மக்களை சுரண்டிச் சூறையாடும் வண்ணம் அவைகளை தெரிந்தெடுத்து முன்னுக்குத் தள்ளியது. இக்காலத்தில் தான் பொப் மாலி மக்கள் பற்றி பாடிய பாடல்கள் புகழ்பெற்று இருந்தது. இது ஏகாதிபத்திய நலனுக்கு எதிரானதாக இருந்தது.

இந்த இடத்தில் தான் மைக்கேல் ஜாக்சனை ஏகாதிபத்தியங்கள் உலகுக்கு அறிமுகம் செய்து வைத்;தது. மக்களுக்காகவல்லாத பாடல்கள், நடனங்கள் என்று, ஒரு சீரழிவை இசை உலகில் மைக்கேல் ஜாக்சன் மூலம் ஏகாதிபத்தியங்கள் புகுத்தியது. மைக்கேல் ஜாக்சனிடம் இருந்த திறமையான வேகமான உடல் அசைவைக் கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் இசை உலகத்தை தனக்கு ஏற்ப சீரழிய வைத்தது.

மனித வாழ்வுக்கும், மனித உழைப்புக்கும் அன்னியமான வகையில், இசையை வெறும் நுகர்வாக்கியது. இதன் மூலம் இசையையும் நடனத்தையும் சந்தைப் பொருளாக்கி, அற்பமான கற்பனையில் கனவுலகில் மனிதனை நீட்டிப் படுக்கக் கோரியது. போதை வஸ்துகள் மனிதசிந்தனையை எப்படி சுயமற்றதாக்குகின்றதோ, அதையே மைக்கேல் ஜாக்சனின் இசையும் நடனமும் செய்தது.

மனிதகுலத்தை இசை மற்றும் நடனம் மூலமான போதைக்குள் ஆழ்த்தி, அதை நுகர்வு வெறிக்குள் தள்ளினர். மனிதனின் உழைப்பையும், அவனின் ஓய்வையும், அற்ப சேமிப்பையும், இசைக்குள் கிறுங்கி அழிய வைத்து, நடனத்துக்குள் மயங்க வைத்துச் சூறையாடினர், சுரண்டினர்.

இப்படி சுரண்டிய, தனிமனிதர்களோ வீங்குகின்றனர். இப்படி மக்கள் பணம், மைக்கேல் ஜாக்சனிடம் மலையாக குவிந்தது. இதன் மூலம் இந்த சீரழிவுவாதி தன் தனிமனித வக்கிரங்களை எல்லாம், சமூக வக்கிரமாக்கி விடுகின்றான். இதில் குறிப்பாகவும், எடுப்பாகவும்

1. தன் வக்கிரத்துக்கு ஏற்ப தோலின் நிறத்தையே மாற்றினான்

2. இயற்கையை மறுக்கும் ஒரினச்சேர்க்கையை தன் பாலியலாக கையாண்டு, அதற்கு சிறுவர்களையே பலியிட்டான்.

3. பணக்காரனுக்குரிய அனைத்து மனிதவிரோத வக்கிரத்தையும், தன் சொந்த வாழ்வாக்கினான்.

தனிமனித திறமைக்கு பின், அவனின் வாழ்வு இதற்குள் முடங்கியது. அவன் தன் தோல் பற்றி கொண்ட இழிவு, கறுப்பினமக்கள் மேலான அவனின் சொந்த இழிவான கண்ணோட்டமாகவே அவனோடு வாழ்ந்தது. அதுவே இசையாக, நடனமாக, எல்லாமாக மாறியது. இது அவனைச் சுற்றி வினோதமான பழக்கவழக்கமாக மாறியது.

கறுப்பு மனிதன், அதைத் தீர்மானிக்கும் தோல் மீதான மைக்கேல் ஜாக்சன் வெறுப்பு எப்படிப்பட்டது. வெள்ளை நிறம் மீதான, வெள்ளைத் தோல் மீதான, மதிப்பு சார்ந்தது. கறுப்பு என்பது இழிவானது, தாழ்வானது, அசிங்கமானது என்று மைக்கேல் ஜாக்சன் கருதினான்.  இந்த சிந்தனை வெள்ளை மேலாதிக்கவாதிகளின் அதிகாரத்ததைச் சார்ந்தது. இதையே  மைக்கேல் ஜாக்சன், தன் இசை மூலம், நடனம் மூலம், நுகர்வுச் சந்தையில் பரப்பினான்.

கறுப்பு மீதான வெள்ளையின அதிகாரத்தையும், அது செய்யும் இழிவையும் எதிர்த்து, கறுப்பாக மைக்கேல் ஜாக்சன் குரல் கொடுக்கவில்லை. கறுப்பின மக்களை, கறுப்புத் தோலை போற்றி, அதற்காக பாடவில்லை, நடனமாடவில்லை.

மாறாக தன் தோலின் நிறத்தை மாற்றுவதன் மூலம், கறுப்பு மீதான இழிவை அகற்றமுடியும் என்ற எல்லைக்குள், தன் மனித கேவலங்களுடன் வக்கிரமடைந்தான். சமூகம் மீதான இழிவை எதிர்த்து, பாடல் மூலம் பதிலடி கொடுக்கவில்லை. தன் தோலை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்கியதன் மூலம், அந்த தோலுக்குரிய சமூக இழிவை தன் சொந்த செயலால் மீள உலகறியச் செய்தான்.

இதன் மூலம் கறுப்பு என்பது இழிவு, இது தான் மைக்கேல் ஜாக்சன் சொன்ன செய்தி. இதை மாற்ற, தோலை அறுவைசிகிச்சை மூலம் மாற்றுங்கள். இதைத்தான் கறுப்பின மக்களுக்கு இந்த சீரழிவுவாதி சொன்ன மையச் செய்தி.

இதன் மூலம் ஒவ்வொரு தனிமனிதனும் தன் உடல் சார்ந்த ஒன்றை இழிவாகவோ, அழகற்றதாகவோ கருதினால், அறுவைச் சிகிச்சை மூலம் செயற்கையாக மாற்றி  போலியாக வாழ முடியும் என்ற செய்தியை எடுத்துச்சென்றான். அதாவது மற்றவன் பார்வை பற்றி தன் சொந்த போலிப் பார்வை மூலம் அளந்து, அதுவே உலகப்பார்வையாக கருதக் கோரினான். இதையே தன் இசை நடனம் மூலம் திணித்தான்.

இன்று பெண்கள் தம் மார்பகத்தை எடுப்பாக காட்டவும், பெண்ணின் பின்புறத்தை, முகத்தை அழகுபடுத்தவும், இதுபோன்று நடக்கும் போலியான உடல் மாற்று முறைகள், இந்த சீரழிவுவாதியான மைக்கேல் ஜாக்சன் வழியில் முன்னேறியது. போலியான தன் உலகை நோக்கி, மனிதர்கள் வாழ்தலையும், வாழ வைத்தலுக்கும் மைக்கேல் ஜாக்சன் இசையும் நடனமும் உதவியது. அதை அவனே முன்னின்று செய்த ஒரு போலி.

மக்களை இசை நடனம் மூலம் ஏமாற்றிக் குவித்த பணம், அதற்கேற்ற அவன் கொண்ட இழிவான சீரழிவு வாழ்வு தான், அவன் வாழ்வு. மனிதகுலத்தையும், அதன் இயற்கையையும், எள்ளி நகையாடிய ஏகாதிபத்திய தொழுநோய் தான் இந்த மைக்கேல் ஜாக்சன்.

பி.இரயாகரன்



StumbleUpon.com Read more...

“புலிகளின் குரல்” வானொலி 5ஆம் நாள் முதல் மீண்டும் வானிலையில்

 
"புலிகளின் குரல்" வானொலியின் இணையத்தள ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5ஆம் நாள் கரும்புலிகள் நினைவு தினத்தன்று இணயத்தள ஒலிபரப்பினை, புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்க முடியும் என, இந்த வானொலியின் பணியாளர் ஒருவர் பதிவு இணையத்திற்குத் தெரிவித்தார்.

1990 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட "புலிகளின் குரல்" வானொலிச் சேவை, உலக வரலாற்றில் எந்தவொரு வானொலியும் சந்திக்காத இன்னல்களைச் சந்தித்த போதிலும், துவண்டு விடாது நிமிர்ந்து நின்றது.

"புலிகளின் குரல்" வானொலியை இலக்கு வைத்து 23 தடவைகள் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. இருந்த போதிலும் தாக்குதல் இடம்பெற்ற சில நிமிடங்களில் அந்த வானொலிச் சேவை மீண்டும் வானலைகளில் தவழ்ந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வன்னியில் மிக மோசமான இன அழிப்புத் தாக்குதல் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போதும், தனது ஒலிபரப்பை தொடர்ந்து நடத்தி வந்த இந்த வானொலி, பல்லாயிரக் கணக்கான மக்களின் மூச்சு நிறுத்தப்பட்ட, கடந்த மே மாதம் 16ஆம் நாள், தனது ஒலிபரப்;பை நிறுத்திக்கொண்டது.

தற்பொழுது இணையத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் சேவை, பின்னர் செய்கோள் ஒலிபரப்பாக விரிவாக்கம் பெறும் என, புலிகளின் குரல்" வானொலி நிலைய கலையகத்தினர் தெரிவித்துள்ளனர்

StumbleUpon.com Read more...

நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர் மக்களே தூண்களாக தாங்கி நிற்க வேண்டும்: உருத்திரகுமாரன்

 

நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்துள்ள மக்கள்தான் தூண்களாக தாங்கி நிற்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாடு கடந்த அரசு குறித்த சிறிய விளக்கத்தை தெரிவிக்க முடியுமா?

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை சரித்திரப் பின்னணியோடு நாங்கள் பார்க்க வேண்டும். சிறிலங்கா தீவு சுதந்திரமடைந்த பின்னர் தமிழ்த் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் மூலமும் சாத்வீகப் போராட்டத்தின் மூலமும் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முனைந்தனர். ஆனால் அந்தப் போராட்டங்கள் படையினரால் மிலேச்சத்தனமாக முறியடிக்கப்பட்டதோடு, இனவாதம் தலைதூக்கியதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மூலமூம் அந்த உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் போனது. இதன் விளைவாகவே தமிழ்மக்களின் இந்தப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்மக்களின் இந்த பிரச்சினை அனைத்துலக அரங்கில் முன்வைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது, அங்கு ஒரு கட்டுமானமும் இருந்தது. சிறிலங்கா அரசு இன்று மாறிவரும் பூகோள அரசியல் நிலைமையை தனக்கு சாதகமாக வைத்து அனைத்துலக சட்டங்களுக்கு முரணாக அந்த இராணுவப் போராட்டங்களை முறியடித்து விட்டது. எனவே அடுத்த கட்டமாக தமிழர்களின் போராட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசு என்ற வகையில் முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்.

"போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலட்சியம் ஒன்றுதான்" என்று சுதுமலையில் இடம்பெற்ற பிரகடனத்தில் தலைவர் கூறினார். அதேபோன்றுதான் போராட்ட வடிவங்கள் மாறினாலும் எமது இலட்சியம் ஒன்றுதான். அனைத்துலக சட்டங்களுக்கும் அனைத்துலக ஒழுங்குகளுக்கும் இணைவாக தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வைக் காண்பதற்காகத்தான் இது அமைக்கப்படவுள்ளது.

பேச்சுவார்த்தை மூலமான தீர்வைக் காண்பதற்கு சமபலநிலை அத்தியாவசியமானது. நோர்வேயின் அனுசரணையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது சமபலநிலை எங்களுடைய இராணுவ பலத்தை மையப்படுத்தியிருந்தது. இன்று சமபலமற்ற நிலையில் இருக்கின்றோம். எனினும் சமபலநிலை என்பது இராணுவ பலத்தை மட்டும் கொண்டதல்ல. சமபலநிலை என்பதற்கு பல்வெறு வடிவங்கள், பரிமாணங்கள் உண்டு.

தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு அந்த சமபல நிலையை - தற்போதுள்ள சமபல இடைவெளியை - நிரப்பும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இதனடிப்படையில் பேச்சுவார்த்தையின் மூலம் சுயநிர்ணய அடிப்படையில் ஒருதீர்வைக் காண்பதற்கு இது அடிப்படையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

நாடு கடந்த அரசு குறித்து கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆராய்ச்சிகள் இடம்பெற்று வந்தன. புறநிலை அரசுக்கும் (Government in Exile) நாடு கடந்த அரசுக்கும் (Transnational Government) பல ஒற்றுமைகள் இருந்தாலும் சில வேறுபாடுகள் உள்ளன. புறநிலை அரசு (என்பது ஒரு நாட்டில் ஆட்சியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் அனைத்துலக சமூகத்தில் இன்னொரு நாட்டின் அனுசரணையுடன் புறநிலை அரசு (Government in Exile) அமைத்துக் கொள்வார்கள். உதாரணமாக ஏஎன்சி, பலஸ்தீனர்கள், இந்தியாவில் தலாய்லாமா அப்படிச் செய்தார்கள்.

மேற்படி இரண்டு விடயங்களிலும் அதாவது நாடு கடந்த அரசிலும் புறநிலை அரசிலும் அரசியல் இடைவெளி என்பது இல்லை. ஒரு நாட்டில் இதற்குரிய இடமளிப்புக்கள் இல்லாத காரணத்தினால்தான் அனைத்துலகில் இதனை அமைக்க வேண்டியுள்ளது.

அத்துடன், நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தாயகத்தில் உள்ள மக்களை மட்டுமன்றி புலம்பெயர்ந்துள்ள மக்களின் சமூக, அரசியல், பொருளாதார நலன்களையும் பேணும். எனவே, புலம்பெயர் தமிழ்மக்கள் ஒரு குழுவாக இருந்தால்தான் அந்த பலத்தின் மூலம் நாங்கள் எமது மக்களின் விடிவிற்கு உதவ முடியும்.

தமிழர்களின் இராணுவ பலம் சமநிலையில் இருந்தபோது அனைத்துலக சமூகத்தால் எமக்கு ஒரு தீர்வையும் வழங்க முடியவில்லை. இன்றைய நிலையில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசின் ஊடாக எவ்வாறு இலக்கினை அடைய முடியும் எனக் கருதுகின்றீர்கள்?

தமிழர்களின் தேசியப் பிரச்சினையானது பூகோள அரசியலுடன் பின்னிப் பிணைந்துவிட்டது. தென்னாசியாவில் எப்படி அரசியல் மாற்றமடைகிறதோ அதன் மையத்தில்தான் தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வும் இருக்கின்றது. எமக்கு என ஒரு இராணுவ பலம் இல்லாவிட்டாலும் இன்று மாறிவரும் பூகோளஅரசியல் நிலையில் - நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு அதிகார மையமாக திகழ்ந்து, அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் அங்கு எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு சூழ்நிலை உருவாகும் என்று நான் கருதுகிறேன்.

கடல் கடந்த தமிழீழ அரசுக்கு அனைத்துலக நாடுகளின் ஆதரவு வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கின்றதா?

நாடு கடந்த தமிழீழ அரசு இன்னும் அமைக்கப்படவில்லை. தற்போது அதனை அமைப்பதற்கான செயற்குழுவே அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைப்பது தொடர்பாக பல்வேறு இராஜதந்திரிகளுடனும், அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் உட்பட பல தரப்புகளுடனும் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றோம். நாங்கள் தயாரித்த அறிக்கையை இராஜதந்திரிகளுக்கும், தொண்டு நிறுவன பிரிதிநிதிகளுக்கும் அனுப்பி அவர்களுடன் கருத்து பரிமாறுவதற்கு கோரியுள்ளோம். அவர்கள் அத்தகைய கருத்து பரிமாறலுக்கு இணங்கியுள்ளனர். அவர்களுடனான சந்திப்புக்கும் ஏற்பாடாகியுள்ளது. விரைவில் ஒரு ஆலோசனைக்குழுவையும் அமைப்போம்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது. எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது எந்தவொரு தொண்டு நிறுவனமோ இந்த கடல் கடந்த தமிழீழ அரசு குறித்த அறிக்கையை நிராகரிக்கவில்லை. மாறாக இதைப்பற்றி முக்கியமெடுத்து கலந்துரையாட வேண்டும் என்று கூறியுள்ளனர். தனிப்பட்ட முறையில் இத்தகைய கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. விரைவில் முறையான ஒரு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

ஆலோசனைக்குழு அமைக்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறீர்கள்?

செயற்குழு அமைப்பது தொடர்பாக கலந்துரையாடி வருகிறோம். குறிப்பாக ஒவ்வொரு நாடுகளுக்குமான செயற்குழுக்களையும் அமைக்கவிருக்கிறோம். அத்துடன் எமது செயற்குழுவில் மேலும் சிலரையும் சேர்க்கவிருக்கிறோம். குறிப்பாக சிறிலங்காவைச் சேர்ந்த முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் தற்போது உள்ளார். அவர் எமக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். இது ஒரு வரலாற்று சந்தர்ப்பம் என்றும் இதில் தானும் இணைந்து தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு சரியான தீர்வைக் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அதேபோல இந்தியாவிலிருந்தும் சிலர் தொடர்பு கொண்டு எதற்காக இந்தியாவிலிருந்து எவரையும் செயற்குழுவில் இணைக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு செயற்குழுவை விரிவுபடுத்தவிருக்கிறோம். அதன்பின்னர் இந்த குழுக்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடாத்தவிருக்கிறோம்.

தமிழ்மக்களுக்கான தீர்வு விடயத்தில் சிறிலங்கா மற்றும் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு செல்வது குறித்த உங்களது கருத்து என்ன?

தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கை கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்கள் எமக்கு தெட்டத்தெளிவாக காட்டியது. தமிழ்த்தேசியப் பிரச்சினையில் இந்தியா முக்கிய வகிக்கின்றது. அது நன்மையாகவோ அல்லது தீமையாகவோ இருக்கலாம். எதுஎப்படியிருப்பினும் இந்தியாவுடனும் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

சிறிலங்காவிற்கான கதவுகளையும் நாங்கள் இன்னமும் மூடவில்லை. பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்வை எட்டுவதென்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

அந்தவகையில் சிறிலங்கா அரசுக்கான கதவுகளை திறந்தே வைத்திருக்கின்றோம். இந்தியாவுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றோம். இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கோ அல்லது இந்தியாவின் பூகோள நலன்களுக்கோ எமது செயற்பாடுகள் பாதிப்பாக அமையாது என்பதை வலியுறுத்தி இந்தியாவுடனான எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவிருக்கின்றோம்.

இரண்டு விடயங்களை நாங்கள் தொடர்ந்து முன்னெடுக்கவிருக்கிறோம். ஒன்று - சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் (Relevant Stake Holders) தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்துவது. இரண்டாவது நிறுவனமயப்படுத்தலையும் (Institution Building) முன்னெடுத்துச் செல்வது.

கடல் கடந்த தமிழீழ அரசு பற்றிய விளக்கத்தை புலம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டிய தேவை உள்ளது. அதனை நீங்கள் எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்?

மக்களை இந்த தகவல் சென்றடைய வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் எடுத்திருக்கின்றோம். செயற்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் எமது நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துவார்கள்.

நாடு கடந்த அரசு என்பது எமது மக்களுக்கு புதிய விடயம். எனவே இதனை எமது மக்களுக்கு எவ்வாறு தெரிவிப்பதென்பது குறித்து நாங்கள் கவனமெடுத்து வருகிறோம். குறிப்பாக கேள்வி பதில் வடிவில் புத்தகமாக இந்த விளக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவிருக்கிறோம். ஓரிரு மாதங்களில் இந்த புத்தகம் வெளியாகும்.

நடந்து முடிந்த துயரச் சம்பவங்களிலிருந்து மீண்டெழுந்து மக்கள் எவ்வளவு விரைவாக அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த அறிவிப்பு வெளியாகியதும் அதனை அவசரப்பட்டு மெற்கொண்ட முடிவாக சிலர் கருதினர். மே மாதம் 15, 17 ஆம் திகதிகளில் முள்ளிவாய்க்காலில் நடந்த இராணுவத் தாக்குதல்களின் கொடூரம் எங்களுக்கு தெரியும். அந்த ஒருமாத காலத்தில் சிறிலங்கா அரசிற்கு நாங்கள் ஒரு செய்தியை அனுப்ப விரும்பினோம். இராணுவ ரீதியில் போரியல் சட்டங்களுக்கு மாறாக எங்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அழித்தாலும் அரசியல் ரீதியாக நாங்கள் அழியவில்லை, அழிக்கவும் முடியாது என்ற செய்தியை சிறிலங்கா அரசிற்கு தெரியப்படுத்தவே காலங் கடந்த தமிழீழ அரசை நாங்கள் அறிவித்தோம்.

அத்துடன், அடுத்து என்ன என்று இருந்த மக்களுக்கு ஒரு வழியைக் காட்டுவதற்காகத்தான் நாங்கள் அவசரப்பட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டோம்.

புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் தற்போது செய்யவேண்டிய பணிகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

நாடு கடந்த தமிழீழ அரசிற்கு புலம்பெயர்ந்துள்ள எமது மக்களின் ஆதரவு நிச்சயமாகத் தேவை. புலம்பெயர்ந்துள்ள மக்களின் அமைப்புகள்தான் இந்த அரசை தூண்களாகத் தாங்கி நிற்க வேண்டும். அனைத்துலக நாடுகளில் பரந்து வாழும் புலம்பெயர் மக்களால் தெரிவு செய்யப்படும் இந்த அரசுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதியாக (Authentic Voice) வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

எந்தவொரு குழுவையோ அல்லது எந்தவொரு நபரையோ இது முன்னுரிமைப்படுத்தவில்லை. நாங்கள் தேர்தல் நடத்த இருக்கின்றோம். அது ஜனநாயக முறைப்படி நடக்கும். அதில் எவரும் பங்குகொள்ளலாம். அப்படி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ள எமது அரசு தான் அனைத்துலகில் தமிழ் மக்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட குரலாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

அதற்கு முன்னர் மூன்று இலட்சம் மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே முக்கியமாக ஒவ்வொரு தமிழனும் இதில் ஒன்றுபட்டு இது எனது அரசு என்ற நோக்கில் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP