சமீபத்திய பதிவுகள்

KIDS Zone tamil and english videos:குழந்தைகள் கதைகள், பாட்டு வீடியோ பகுதி

>> Monday, November 23, 2009






StumbleUpon.com Read more...

வரலாறு ஒரு நாளும் வாழ்த்தாது!!!



'மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது' என்று 'பூம்புகார்' திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது. 'மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்' என்று எழுதினார் ஜெயகாந்தன். 'அழுதால் கொஞ்சம் நிம்மதி' என்றார் கண்ணதாசன். வீழ்ந்துவிட்ட இனத்துக்காக அழுதாலும், தாழ்ந்துவிட்ட தன் பெருமைக்காகஅழுதாலும் அழுவது நல்லதுதான். ஆனால், கலைஞர் கண்ணீர் விடுவதோடு நிறுத்தாமல், 'விடுதலைப் புலிகளின் அவசர முடிவால் ஏற்பட்ட விளைவுகளை' விளக்கியிருக்கிறார். அந்த விளக்கத்தில் நேர்மையின் நிறமில்லை என்பதுதான், பொய்யின் நிழல் படாத நிஜம்.

மகிந்தா ராஜபக்ஷேவும், ரணில் விக்கிரமசிங்கேவும் 2005-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகள் ரணிலை ஆதரிக்க மறுத்தது ஒரு பெரிய அரசியல் பிழை என்பது கலைஞரின் கருத்து. ஒரு லட்சத்து

81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்ரணில் தோல்வியைத் தழுவினார். ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்குப் பணிந்து தேர்தலைப் புறக்கணிக்காமல், ரணிலுக்கு ஆதரவாக வாக்குகளைவழங்கியிருந்தால், ராஜபக்ஷே அதிபராக வந்திருக்க முடியாது என்பதே நம் முதல்வரின் வாதம். 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் பிரபாகரன் தமிழர்களை வாக்களிக்க அனுமதித்திருந்தால், ரணில் வெற்றிபெற்று அமைதிப் பேச்சைத் தொடர்ந்திருப்பார் என்பது கலைஞரின் நம்பிக்கை.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 1998 மற்றும் 1999-ல் ஆற்றிய 'மாவீரர் தின' உரைகளில், 'சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் சமாதானப் பேச்சுகளில் பங்கேற்க நாம் தயார்!' என்று பிரகடனம் செய்தார். நவம்பர் 2001-ல் மாவீரர் நாள் உரையில், 'ஆயுத பலத்தினால் எமது மக்களை அடிமை கொள்ள முனையும் அரசுக்கும், அரசுப் படைகளுக்கும் எதிராகவே நாம் போர் புரிந்து வருகிறோம். இக்கொடிய போருக்கு முடிவு கட்டி, நிரந்தர அமைதியை நிலைநாட்டுவதாயின், போர் வெறி கொண்ட இனவாத சக்திகளை இனங்கண்டு ஒதுக்கிவிடுவதோடு, தமிழ் மக்களுக்கு நிதி வழங்கவும் சிங்கள மக்கள் முன் வர வேண்டும்' என்று பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார். ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகளும் இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகளிடம் அமைதியான அரசியல் தீர்வை எதிர்பார்த்து ஒவ்வொரு முறையும் ஏமாற்றமுற்றனர் என்பதுதான் வரலாறு. இதை நம் முதல்வர் நன்றாகவே அறிவார். ஆனால், பதவி நாற்காலிப் பற்றுதான் அவர் நினைப்பதை வெளியில் சொல்லி, 'நெஞ்சுக்கு நீதி' தேடுவதைத் தடுத்துவிடுகிறது.

ஈழத் தமிழர்கள் 1987-ல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணத் தெருக்களில் வீதியுலா வந்தபோது, 'நிரந்த அமைதியையும், உரிமை மிக்க வாழ்வையும் வழங்க வானத்து தேவர்களே வரமளிக்க மண்ணில் வந்து இறங்கியதுபோல்' மகிழ்ந்து வரவேற்றனர். ஆனால், அந்த அமைதிப் படையால் தங்கள் அமைதி முற்றாகக் குலைந்தபோது அவர்கள் திகைத்து நின்றனர். அப்போதும் நம் முதல்வராக இருந்த கலைஞர் அந்த 'அமைதிப் படை' நாடு திரும்பியபோது தேடிச் சென்று வரவேற்க மறுத்தார். அன்று கலைஞருக்கு இனம் முக்கியமாகப் பட்டது. இன்று...?

சந்திரிகா குமாரதுங்காவால் இனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தனர். அவர் 1994-ல் வெற்றி பெற்றபோது, 'காரிருள் கலைந்து வெளிச்ச விழுதுகள் ஈழ நிலத்தில் இறங்கியதாக' தமிழர் நெஞ்சம் மீண்டும் நம்பிக்கை கொண்டது. வளையல்களுக்கும், புடவைகளுக்கும் அது சந்திரிகாவின் பெயர் சூட்டி மகிழ்ச்சியில் மிதந்தது.

ஆனால், வாக்களித்தபடி ஈழத்தமிழர் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படவுமில்லை; போரை நிறுத்த சந்திரிகா அரசு சம்மதிக்கவுமில்லை. அவருடைய ஆட்சியில்தான் 'ஜெய சுக்குறு' (வெற்றி நிச்சயம்), 'தீச்சுவாலை' போன்ற மோசமான ராணுவ நடவடிக்கைகள் தமிழருக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டன. ரஷ்யா, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து நவீன போர்க் கருவிகளையும், படை விமானங்களையும் சந்திரிகா அரசு வாங்கிக் குவித்தது. யாழ் நகரை, சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து, ஐந்து லட்சம் தமிழர் இடம் பெயர்ந்தனர். இந்த மாபெரும் மனித அவலத்தை உலகநாடுகள் அன்றும் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தன. 'சமாதான தேவதை' சந்திரிகாவின் சுயமுகம் வெளிப்பட்டபோது ஈழத்தமிழர்கள் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடந்தனர்.

சந்திரிகாவிடம் ஏமாற்றமடைந்த தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கேவிடம் நம்பிக்கை கொண்டனர். அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி சமாதானப் பேச்சு வார்த்தை மூலம் இனப் பிரச்னைக்கு உரிய தீர்வை வழங்குவதாகவும், பொருளாதாரத் தடை, பயணத் தடை போன்ற முட்டுக் கட்டைகளை முற்றாக நீக்குவதாகவும் 2001-ல் நடந்த பொதுத்தேர்தலின்போது வாக்குறுதி வழங்கியது. 'சமாதானம் வேண்டி நிற்கும் சக்திகளுக்கும், அதற்கு எதிரான தீவிரவாத சக்திகளுக்கும் இடையில் போட்டியாக இத்தேர்தல் நடக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இத்தீவில் சமாதானம் நிலவ வேண்டுமா... போர் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு பொதுமக்களிடம் விடப்பட்டிருக்கிறது!' என்று கூறிய பிரபாகரன், சந்திரிகாவின் சுதந்திரா கட்சிக்கு எதிராக ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். 'ரணிலின் கட்சி விடுதலைப் புலிகளுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டது' என்று சந்திரிகா குற்றம் சாட்டினார். தமிழர் ஆதரவுடன் தேர்தலில் ரணில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த ரணிலிடமும் தமிழர் நம்பிக்கை துரோகத்தையே சந்தித்தனர்.

நார்வே நட்டின் முயற்சியால் இலங்கையில் போர் நிறுத்தம் வந்தது. பிப்ரவரி 22, 2002 அன்று வன்னியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிரபாகரன் முதலில் கையப்பமிட்டார். பிரதமர் ரணில் கையப்பம் இட்ட பின்பு யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோவிலுக்கும் சாவகச்சேரிக்கும் சென்றார். வீதியெங்கும் தமிழர் கூடிப் புதிய நம்பிக்கையுடன் ரணிலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் முதல் பேச்சு வார்த்தை தாய்லாந்தில் 2002 செப்டம்பரில் நடந்தது. அங்கேயே அக்டோபர் - நவம்பரில் இரண்டாவது பேச்சு வார்த்தையும் தொடர்ந்தது. சமாதானம் நாடிய பிரபாகரன், தனித் தமிழீழம் என்ற கோரிக்கையிலிருந்து கூட்டாட்சி முறைக்கு இறங்கி வந்தார்.

'உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்துக்கு இசைவாக நாமும் எமது போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே. சமாதானத்தில் எமக்கு உண்மையான பற்றுண்டு என்பதை உலகுக்கு உணர்த்தவே, நாம் ராணுவ மேலாதிக்க நிலையில் நின்றுகொண்டு அமைதி வழியைத் தழுவினோம். எமது மக்களின் தேசிய இனப் பிரச்னைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின், அதனை முயன்று பார்ப்பதில் முழு மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம்' என்றார் பிரபாகரன். ஆனால், ரணில் தமிழினத்தைத் திட்டமிட்டு வஞ்சகமாக ஏமாற்றினார். தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி, ஜப்பான் என்று ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த நிலையிலும் தமிழினம் எந்த உரிமையையும் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டது.

கலைஞர் இன்று கொண்டாடும் இந்த ரணில் விக்கிரமசிங்கே, பேச்சுவார்த்தை நடக்கும்போதே கருணாவை, பிரபாகரனிடமிருந்து பிரித்து 2004-ல் விடுதலைப் புலிகளிடையே பிளவை உண்டாக்கியவர். கிழக்கு மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் வலிமையைப் பலவீனப்படுத்த கருணாவை ரணில் அரசுபயன் படுத்திக் கொண்டது ஒருமலினமான வஞ்சகப் படலம்.இலங்கை அதிபராக இருந்த சந்திரிகாவின் அரசியல் சூழ்ச்சியை எதிர்க்க, விடுதலைப்புலிகளைத் தன் அரசியல் சதுரங்கத்தில் வெட்டுக் கொடுத்தவர் ரணில். போர் நிறுத்த ஒப்பந்தப்படி யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்றாமல் அதைத் திறந்த வெளிச் சிறைச்சாலையாக வைத்திருந்ததன் விளைவாகவே பிரபாகரன் ரணிலிடம் நம்பிக்கைஇழந்தார்; பேச்சு வார்த்தை முறிந்தது.

சிங்களத் தலைவர்கள் அனைவரும் நிரந்தர அமைதி யையும், அரசியல் தீர்வையும் உருவாக்குவதற்கான நேர் மையும், உண்மையான அர்ப் பணிப்பும் உள்ளவர்கள் இல்லை என்பதையும்தங்கள் பதவியைத்தக்க வைத்துக் கொள்ள தமிழினத்துக்கு எதிராக சிங்களப் பேரின வாதத்தை வளர்க்கவும், பௌத்த பிக்குகளின் ஏவல் கூவல்களாகச் செயற்படவும் சித்தமாக உள்ளவர்கள் என்பதையும் கலைஞர் அறியாதவரா? எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆய்வு இன்று அவசியந்தானா? இந்திய அரசுதான் ஈழத்தமிழரை அழிப்பதில் ராஜபக்ஷே அரசுக்கு முழுமையாக உதவியது என்பதை சரத் ஃபொன்சேகா போட்டுடைத்த பின்பும், மத்திய அரசின் அத்துமீறிய தமிழின அழிப்பு ஆதரவு நடவடிக்கைகள் குறித்து வாய் திறக்க முடியாத நம் முதல்வர், இன்னும் எத்தனை காலம் 'சகோதர யுத்தம்' குறித்து விதம் விதமாக வியாசம் எழுதி பிரச்னையை திசை திருப்பப் போகிறார்?

போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், நிலங்களை விட்டு ரணில் ஆட்சியில் ராணுவம் வெளியேறவில்லை. மக்கள் வாழிடங்கள் ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்ததால் மீள்குடியேற்றம் நிகழவில்லை. 800 ச.கி.மீட்டர் பரப்புள்ள யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் சிங்களப் படையை நிரந்தரமாகக் குவித்து வைத்திருந்த ரணிலுக்கு, பிரபாகரன் மீண்டும் தேர்தலில் ஆதரவு தர மறுத்ததைக் கலைஞர் அரசியல் பிழை என்கிறாரா? 'அந்த அரசியல் பிழையினால்தான் ராஜபக்ஷே ஆட்சி மகுடம் தாங்கினார்; தமிழினத்தைக் கொடூரமாக அழித்தார்' என்று கலைஞர் கருதினால், ராஜபக்ஷேவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய அரசை இவர் ஏன் எதிர்த்து எழவில்லை? இந்திய அரசுக்கு அன்றும் இன்றும் தலைமை தாங்கும் காங்கிரஸை ஏன் எதிர்த்துப் போர் முழக்கம் செய்யவில்லை? பதவி நாற்காலி பறிபோய்விடுமே என்ற அச்சம் காரணமாகவே புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்துவிட்டதா?

வன்னி மக்கள் வாழ் நிலத்தில் பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகள், எரிகுண்டுகள், வான்வெளித் தாக்குதல்கள் என்று சர்வதேசப் போர்விதிகளுக்கு மாறாக இரக்கமிலா ஓர் அரக்க ஆட்சி பல்லாயிரம் தமிழரைக் கொன்று குவித்ததை எதிர்த்து ஐ.நா. மனித உரிமை அமைப்பில் விவாதிக்க ஜெனிவாவில் மே 25, 2009 அன்று சிறப்புக் கூட்டம் நடந்தபோது இந்தியா வெளிநடப்பு செய்தபோதும், இலங்கை அரசுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு திரட்டியபோதும் இனவுணர்வுடன் அவற்றை எதிர்த்து எழுத ஏன் கலைஞர் பேனாவைக் கையில் எடுக்கவில்லை? அசோக சக்கரத்தைத் தேசியக் கொடியில் வைத்திருக்கும் காந்தி தேசத்தை ஆளும் அரசு, தமிழினத்துக்கு எதிராக ராஜபக்ஷே சகோதரர்கள் நடத்திய ரத்தக் குளியலுக்கு ரகசிய ஆதரவு வழங்கியதோடு, அழித்தவன் கைகளிலேயே புனர்வாழ்வு தர ஆயிரம் கோடியை அள்ளிக் கொடுத்த கொடுமைக்கு உடந்தையாக நின்ற கலைஞரை வரலாறு எப்படி வாழ்த்தும்?

சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா? பெரியாரின் பொருந்தாத திருமணத்தை அரசியலாக்கி, அவரிடமிருந்து விலகி தனிக் கழகம் உருவாக்க அண்ணாவுடன் புறப்பட்ட சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஒவ்வொருவரோடும் சகோதர யுத்தம் நடத்தியது யார்? எம்.ஜி.ஆரோடும், வைகோவுடனும் சகோதரயுத்தம் நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியது யார்? வேலூர் செயற்குழுவில் சம்பத் தாக்கப்பட்டதும், திருச்சி பொதுக்கூட்டத்தில் கண்ணதாசன் மீது செருப்பு வீசப்பட்டதும் சகோதர யுத்தத்தின் சமிக்ஞைகளன்றி வேறென்ன?

'மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தினைத் திருடும் ஆணையோ, பெண்ணையோ சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளியை விட்டுவிடுகிறது' என்றார் ஹென்றி மெய்ன்.

விடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது.

இதுதானோ கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!

 

source:vikatan
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஒன்றாய் எழுவோம்

 

ezhuvom1945ல் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்த வேளையில் பிரித்தானிய மக்கள் ஒரு மிகப் புத்திசாலித்தனமான முடிவை எடுத்தனர். போர்மந்திரி வின்ஸ்டன் சேர்ச்சில் (Winston churchil) அவர்களை அரசியலிலிருந்து ஓய்வு நிலைக்கு அனுப்பிவிட்டு கிளெமன்ட் அட்லீயை (Clemnt Attee) பிரதமராகத் தேர்ந்தெடுத்தனர்.

இவர் இராணுவ அதிகாரியாக இருந்திருந்தாலும் இவரிடமிருந்து மக்களிற்கான சுதந்திர எழுச்சியை பிரித்தானியர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல் இவரது காலத்திலேயே காலனித்துவ நாடுகளிற்கு சுதந்திரம் வழங்கினார். இவரது காலத்திலேயே இந்தியாவும் இலங்கையும் பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றன. இவருக்கான தேர்தலில் உலகெங்கிலும் போர்களில் ஈடுபட்ட பிரித்தானிய இராணுவத்தினர் அந்தந்த நாட்டு மக்களோடு தாம் பெற்ற அனுபவங்களில் அடிப்படையில் இவருக்கே தபால் மூலம் வாக்களித்து காலனிய விடுதலைக்கு வழிவகுத்தனர்.

n-19112009-onray eluvam-02

ஆனால் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறீலங்காவின் யுத்தம் அதன் பெரும்பான்மை மக்களிடமோ அல்லது சர்வதேச அரங்கிலோ எந்த விதமான ஆக்கபூர்வமான நம்பிக்கைகளையும் எழுப்பவில்லை. மாறாக எல்லோரும் சேர்ந்து எமது தேசிய விடுதலையை, எமது இனத்தின் விருப்பை மேலும் மேலும் இல்லாதொழிக்கவே அழுத்தம் ஏற்படுத்துகின்றன. சிறீலங்காவின் ஜனாதிபதிக்கும் இராணுவத் தளபதிக்குமான அரசியல் போட்டியில் கூட அவர்களில் யார் திறம்பட தமிழர் அபிலாசைகள் அழித்துத் தமிழரை அடிமை கொள்வது என்ற போட்டியே நிலவுகின்றது. குற்றம்புரிந்த மனநோயாளியான அரசிடமிருந்து நாம் ஒரு அரசியல் நீதியைப் பெறமுடியாது.

இவர்கள் புத்தரினதும், அசோக தர்மச் சக்கரத்தின் சீடர்களாக இருப்பினும் இவர்களிடமிருந்து நீதி கிடைக்கப்போவதில்லை. அசோகர் கூட தான் நடத்திய கலிங்கப் போரின் அழிவுகளைக் கண்டு தன் துயரத்தையும், கண்ணீரையும் வெளிப்படுத்தியிருந்தபோதும் கூட அந்தப் போரினால் அடிமையாக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரம் கொடுக்கவேண்டும் என்று எண்ணவில்லை. இவரின் சீடர்கள் இன்று கண்ணீர் வடிக்கவுமில்லை, சுதந்திரத்திற்கான சிந்தனையை வளர்க்கவுமில்லை. எங்கள் போராட்டமானது தீர்க்கமான முன்னெடுப்புகளுடன் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சக்திகள் மூலமே ஒடுக்கப்பட்டது. புவிசார் அரசியல் முயற்சியின் மூலம் அவர்கள் சாதிக்க நினைத்ததும் அல்லது சாதித்ததாக நினைத்ததும் ஈழத்தமிழர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் ஈழத்தமிழரின் தேசிய விடுதலை வினாவுக்கு பதிலாக அளிக்க முடியவில்லை.

அவர்களின் புவிசார் அரசியல் தீர்வு என்பது வெறும் குழம்பிப்போன, எந்த முடிவுமற்ற முயற்சியாகவே உள்ளது. உலகின் ராஜதந்திர வட்டங்கள், பூகோள சக்திகள் மூலம் எதையும் சாதிக்கும் வல்லமையற்று, தீர்வுகள் ஏற்படுத்தும் சிந்தனைத் திறமைகள் அற்ற வறண்ட சிந்தனையாளர்களாகவே உள்ளனர். இவர்களைப் பொறுத்தவரையில் சிறீலங்காவானது அவர்களின் "பிழையானதும் பரீட்சார்த்தகரமானதுமான' 21ம் நூற்றாண்டின் புவிசார் அரசியலின் சோதனைக்களமாகவே உள்ளது. சீனா தவிர்ந்த ஏனைய நாடுகள் "ஒரு அசாதாரண தீர்க்கதரிசனத்தோடு' போரை நடாத்தி அதன் விளைவுகளைப் "பெறுபேறுகளாகக்' காட்டிப் போரை முடித்து வைத்துள்ளனர்.

ஆனால் இவர்களின் புவிசார் அரசியலின் செயற்பாட்டுத் திட்டங்கள் மேலும் மேலும் குழப்பமானதும், தோல்விகரமானதுமாகவே அமைந்துவிட்டது. தமது தீர்வாக "ஆற்றுப்படுத்துகை' என்றொரு விடயத்தைப் புதிதாகப் புகுத்த முயல்கின்றனர். உயிர்க்கொடை கொடுத்துப் போராடி, கொடூரமான சிறீலங்கா இராணுவத்தின் இனப்படுகொலைக்குள் குடும்பங்களை இழந்து, சொந்தங்களை இழந்து சிதறிப்போய்க்கிடக்கும் மக்களுக்கு வெறும் பொருளாதார நிவாரணம் வழங்குவதன்மூலம் தமிழீழ தேசிய விடுதலைத் தாகத்திற்குத் தீர்வு கண்டுவிடலாம் என்ற அர்த்தமற்ற, செயற்திறனற்ற கொள்கைகளையே சிறீலங்காவிற்கு முட்டுக்கொடுக்கும் நாடுகள் புகுத்த முயல்கின்றன. ஒரு இனத்தின் சுதந்திர தாகத்திற்கு வெறும் மனிதாபிமானத் தீர்வுகளும், வெற்று ஒத்தடத் தீர்வுகளும் பதிலளித்துவிடமுடியாது.

ஈழத் தமிழ் இனத்தை ஆற்றுப்படுத்த முயலுவதாயின் அவர்களின் தேசிய அவாவான தனித்தமிழீழக் கோரிக்கையை, தமிழர் என்ற தனித்துவ அடையாளத்தை அங்கீகரிக்க வேண்டும். இதன் மூலமே பல தசாப்தங்களைக் கடந்து நிற்கும் விடுதலைப்போராட்டத்திற்கு ஒரு தீர்வுகொண்டு வரும் முயற்சியின் முதற்படியைத் தாண்ட முடியும். ஹிலாரி கிளிண்டன் கூடத் தனது தேர்தல் பிரச்சாரங்களில் உலகின் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு அந்தந்த இனங்களின் விடுதலைக் கோரிக்கையை முதலில் அங்கீகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். சிறீலங்காவின் போரும் போரின் பின்னான இனவழிப்பு நடவடிக்கைகளும் சர்வதேசத்திற்கு, ஈழத்தமிழர் விடுதலைப் போருக்கு வெறும் மனித உரிமைகள் விடயங்களும், அபிவிருத்திகளும் சிறீலங்கா போன்ற ஒரு தேசத்தில் எந்தத் தீர்வையும் வழங்க முடியாதென்பதை உணர்த்தியுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் மூலம் இன்று தமது தீர்வுகளைக்கொண்டுவர முயலும் சர்வதேச அரசுகள், தமிழீழம் என்ற கோரிக்கைக்குப் பதில் சொல்லாமல் எந்தப் பயனையும் பெறப்போவதில்லை. இந்தியா இப்படியான விடயங்களில் தீர்வு காண்பதற்கு ஏற்ற தகுதியை தனது அரசியல், வெளிவிவகாரக் கொள்கைகளில் கொண்டிருக்கவில்லை. அவர்களின் அதிகாரவர்க்கமும், புலனாய்வு அமைப்புக்களும் மேற்கொள்ளும் அவர்களின் "பாரம்பரிய' முயற்சிகள் எவையும் இனியும் பலன்தரப்போவதில்லை. இனியும் இந்தியா சொல்லிக்கொண்டிருக்கும் "பயங்கரவாதம்' என்ற திரைக்குள் மறைந்து நிற்க முடியாது. கருணாநிதியும் மத்திய அரசும் தாங்களே கட்டியம் கூறிப் பயங்கரவாதம் சிறீலங்காவில் அழிந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். எமது சுதந்திரவேட்கையை அங்கீகரித்து, ஒரு திறந்த நேர்மையான அரசியலின் மூலமே இந்தியா தன் பாவமன்னிப்பைக் கோரமுடியும்.

இதன் மூலமே இந்தியா தனது உண்மையான பாதுகாப்பைத் தேடிக்கொள்ள முடியும். எப்படி பங்களாதேசின் விடுதலைக்குத் தோள்கொடுத்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார்களோ, அந்த மன நிலைக்கு, கொள்கை வகுப்பாளர்களின் பிழையான வழிகாட்டிலிலிருந்தும், தனி நபர் பழிவாங்கல்களிலிருந்தும் வெளியேறி இந்திய அரசு செயற்படவேண்டும். சிறீலங்காவின் இனப்படுகொலைகளைத் தண்டிக்கும் வல்லமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் இந்திய எல்லைகள் எல்லாமே சிறீலங்காவின் உபயத்தில் எதிரிகளின் கூடாரமாவதைத் தடுக்கமுடியாது."ஒரு இனத்தின், மக்களின் அடிப்படை உரிமை, அவர்களுக்கு என்ன வேண்டுமென்பதை அரசியல் ரீதியாகச் சொல்லவதாகும். ஆனால் சிறீலங்கா அரசு 1983ல் தனது 6வது திருத்தச் சட்டம் மூலம் இந்த அடிப்படை உரிமையையும் தமிழர்களிடமிருந்து பறித்து விட்டது.

இன்று இவர்களின் கூட்டு நாடுகளும் தமிழர்களின் அரசியல் அவாவை நசுக்கிக் குரலடக்கி விட கங்கணம் கட்டியுள்ளன. கருணாநிதி மட்டுமல்லாது, இந்தியாவின் கிழக்கு மாநிலங்களும் 'ஈழம்' என்ற சொல்லையே அழித்துவிட முயல்கின்றன. இன்று "உலகமயமாக்கல்' என்று ஊறிக்கொண்டு தம்மை அரசியல் நிறுவனங்களாக மாற்றிக்கொண்டு "நாடுகள்' என்ற போர்வையில் மறைந்துகொண்டு, நாடுகடந்த அரசியல் கருத்துக்களிற்கும் உலக மக்களிடையே சகோதரத்துவத்திற்கும் பெரும் முட்டுக்கட்டைகளாகவே தம்மை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். ஆனாலும் அதையும் தாண்டியுள்ள விடுதலை உணர்வுள்ள சுதந்திர உலகம் நோர்வேயில் நிகழ்ந்ததுபோலான தமிழீழ அரசிற்கான மீள் ஆணையை வரவேற்கத் தவறாது.

இந்த ஆணை உலகெங்கும் வாழும் தமிழரால் வழங்கப்படல் வேண்டும். ஒவ்வொரு நாடுகளிலும் பேரவைகள் அமைக்கப்பட வேண்டும். இப் பேரவைகளில் சுதந்திர தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளும் புத்திஜீவிகள், தொழிலதிபர்கள், மாணவர்கள் பங்குபெறல் வேண்டும். இந்தப் பேரவைகள் ஒரு திடமான அடித்தளமாக கட்டியெழுப்பப்படல் வேண்டும். அடுத்து ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஈழத்தமிழர் அவைகள் எங்கும் உருவாக்கப்படல் வேண்டும். இந்த அவைகள் தமிழீழத் தேசிய விடுதலையை அடிநாதமாகக் கொண்டு, அரசியல் முன்னெடுப்புக்களையும் அந்தந்த நாடுகளுடனான முழுமையான அரச தொடர்புகளையும் பேணி, ஒரு பலமான அரசியல் செல்வாக்குச் செலுத்தக்கூடியதாக ஒவ்வொருநாட்டிலும் செயல்படல்வேண்டும்.

இந்த அவைகளின் அங்கத்துவத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசு கட்டியெழுப்பப்படல் வேண்டும். இந்த மூன்று அமைப்புக்களும் ஒன்றுக்குள் ஒன்று செயற்பாடுகளில் ஒன்றிணைந்து, ஒன்றுக்கொன்று பாதுகாப்பாக ஒரு உடைக்க முடியாத கட்டமைப்பாக வளரவேண்டும். இந்த மூன்றில் ஒன்றில் ஏற்படும் பாதிப்புக்கூட மொத்தக் கட்டமைப்பையும் அபாயநிலைக்குத் தள்ளிவிடும். எனவே இந்தக் கட்டமைப்புககுள் ஈழத்தமிழர்களின் தேசியக் குரலான, அவாவன தமிழீழத்தை ஏற்படுத்துவதற்குத் தம்மை சகல வழிகளிலும் ஒன்றிணைக்கவேண்டும். போராட்டத்தை தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பொறுப்பும், கடமையும் புலம்பெயர் தமிழர் எம்மிடமே வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களாகிய நாம், எமது தமிழீழத் தனியரசிற்கான விருப்பினை ஒன்றிணைந்து வெளிப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். மேற்கூறப்படும் கட்டமைப்புக்களில் எம்மை இணைத்துக்கொண்டு அரசியல், அறிவு பூர்வமான செயற்பாடுகளில் எமது சக்தியைத் திரட்டவேண்டிய தருணமிது. நடைபெற இருக்கும் மக்கள் விருப்பு வாக்கெடுப்பில் எல்லோரும் எமது கடமையையுணர்ந்து செயற்படல் வேண்டும். இந்த அடிப்படைச் செயற்பாடே நாடுகடந்த தமிழீழ அரசைப் பலம் பெறவைக்கும் அடிப்படைக் கட்டுமானத்தை பலப்படுத்தும் பணியாகும். ஜனநாயகம் பேசும் எந்த வல்லரசு நாடுகளிடம் நாமும் எமது தேசிய விருப்பை, ஜனநாயக முறையில் சொல்வோம். இதன் மூலமே நாம் எமது சுதந்திர தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும். எனவே அனைவரும் ஒன்றாய் எழுந்து அரசியல் பணிகளில் எம்மை இணைத்துக்கொண்டு அந்த நாடுகளில் அந்தந்த அரசுகளிற்கு எமது நியாயத்தை அரசியல், ஜனநாயக ரீதியில் அவர்கள் மொழியிலேயே புரியவைப்போம்.

-சோழ.கரிகாலன்

நன்றி:ஈழமுரநசு


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழகத்தில் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் சுவரொட்டியால் பரபரப்பு



சென்னை: 

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிரந்தநாள் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 27 ஆம் தேதி தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவுநாள் மாவீரர் தினமாக  அனுசரிக்கப்பட்டுவருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளில் பொதுமக்கள் மத்தியில் தோன்றி பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம். இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒடுக்கிவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு மாவீரர் நாளில் பிரபாகரன் உரையாற்றுவாரா என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர். 

இந்நிலையில் பிரபாகரனின் பிறந்த நாளான 26ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் நாடுகளில் பிறந்தநாள் விழா, மாவீரர் நாள் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் பல வண்ண சுவரொட்டிகள் ஏராளமாக ஒட்டப்பட்டுள்ளன. 

நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில்...' எங்கள் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள்வாழ்த்துக்கள்  இலை உதிர்வது இயற்கை சுழற்ச்சி வேர்கள் உதிர்வதில்லை வேர்கள் இருப்பதை நாளை இயற்கை மீண்டும் உறுதி செய்யும்"என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. 

இந்த சுவரொட்டியினால் உளவுத்துறை போலீசாரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை அமலில் உள்ள நிலையில் அதன் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

source:thenaali.-- 


StumbleUpon.com Read more...

இதுபோலவே தமிழீழத்தின் வருங்கால 1000 ரூபா கட்சியளிக்கலாம்

 

தமிழீழம் ஒரு நாள் உருவாகும் போது, ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் என அதிவின் வாசகர் ஒருவர் வரைந்து அனுப்பியுள்ளார். இது ஒரு கற்பனையாக இருந்தாலும் அவர் உணர்ச்சிகளிற்கு மரியாதை கொடுக்கின்றோம். மகிந்தவின் உருவப்படத்துடன் வெளியான 1000 ரூபா தாளை எமது மக்கள் எவ்வளவு தூரம் வெறுக்கின்றனர் என்பதற்க்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வரவிருக்கும் தமிழீழத்தின் 1000 ரூபா தாளை முன்னமே அறிவிக்கிறோம் என்ற தலைப்பில் வாசகர் ஒருவர் இப் புகைப்படத்தை எமக்கு அனுப்பிவைத்துள்ளார். 





--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

Back to TOP