|
சமீபத்திய பதிவுகள்
“ஒரு கோடியே 5லட்சம் சதுர மைல்” வான மண்டலத்தில் விழுந்த பெரிய “ஓட்டை”;பூமிக்கு ஆபத்தா?
அமெரிக்காவில் உள்ள "நாசா" விண்வெளி ஆய்வு மையம் வான மண்டலத்தில் ஏற்பட்டுள்ள "ஓட்டை" குறித்து ஆய்வு செய்து வருகிறது."நாசா"வை சேர்ந்த விஞ்ஞானி பால் நியூமன் தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சியில்,கடந்த ஆண்டு 97லட்சம் சதுர மைல் அளவுக்கு வானவெளியில் ஓட்டை ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இது பரப்பளவில் வடக்கு அமெரிக்காவுக்கு இணையானது ஆகும்.
இந்த வான மண்டல ஓட்டை மென் மேலும் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த ஓட்டை ஒரு கோடியே 5லட்சம் சதுர மைல் அளவுக்கு பெரிதாகி உள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வான மண்டல ஓட்டையின் பரப்பளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் "அல்ட்ரா" கதிர்கள் பூமியை தாக்கும் அபாயம் இருக்கிறதா? என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
http://www.tamilmann.com/2008/11/11/220
பிரான்ஸ் மீது தாக்குதல்: அல்-கய்டா எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானில் உள்ள பிரான்ஸ் படைகளை உடனடியாக அந்நாடு திரும்பப் பெறாவிட்டால் பாரீஸ் நகரில் தாக்குதல் நடத்துவோம் என அல்-கய்டா எச்சரித்துள்ளது.
துபாயில் இயங்கி வரும் அல்-அரேபியா தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பான வீடியோவில், ஆப்கனில் உள்ள படைகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கான பலனை பிரான்ஸ் அனுபவிக்க வேண்டியிருக்கும். அது தலைநகர் பாரீஸின் மீது நடத்தப்படும் தாக்குதலாகக் கூட இருக்கலாம் என அல்-கய்டா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஃபரூக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி காபூலில் இருந்து தெற்கே 60 கி.மீ தொலைவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 10 பிரான்ஸ் வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் அல்-கய்டா பொறுப்பேற்றுக் கொள்வதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நேட்டோ தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு படையில் 2,600 பிரான்ஸ் வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilmann.com/2008/11/19/286
குஞ்சுப்பரந்தன் பகுதி மோதல் காட்சி நிழற்படங்கள்: விடுதலைப் புலிகள்
உருத்திரபுரம் - குஞ்சுப்பரந்தன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 43 படையினர் கொல்லப்பட்டும் 70 படையினர் காயமடைந்தும் உள்ளனர். அத்துடன் படையினரது 8 உடலங்களையும் மீட்டிருந்தனர்.
மீட்கப்பட்ட 8 படையினரின் உடலங்களில் ஒருவரின் உடலம் 20 வயதுடைய கமேவெல அங்கட பொல்ஹகமுல்ல என்னும் முகவரியை உடைய இந்திக ருவான்குமார என அடையாளப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட நிழற்படங்கள்:-
http://www.tamilmann.com/2008/11/25/308#more-308
நாம் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல; உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; நாம் இந்தியாவின் நண்பர்கள்: தேசியத் தலைவர்
நாம் உலகின் எந்த நாட்டினதும் தேசிய நலன்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம் என்றும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை:
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2008.
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள்.
தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.
ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.
எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.
எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.
இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.
சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்
எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.
மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.
மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.
எனது அன்பான மக்களே!
என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.
சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.
தனித்து நின்று போராடுகிறோம்
இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.
சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.
நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்
இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.
எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.
பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.
இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.
இந்த மண் எங்களின் சொந்த மண்
சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.
இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.
ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.
சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.
ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.
அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.
சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.
சமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார்
தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.
அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.
எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.
அனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்
பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.
போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.
இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.
உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.
புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.
பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.
பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.
சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை
இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.
எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.
தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.
இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.
அனைத்துலக நாடுகளின் பாராமுகம்
சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.
மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.
இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.
தமிழினத்துக்கு எதிரான போர்
தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.
இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.
இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.
பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.
சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.
வரலாறு காணாத கொடூர அடக்குமுறை
எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.
உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.
சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.
இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.
கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.
எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது
இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.
எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.
பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.
எமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல
உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.
எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.
உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்
எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.
இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்
இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.
எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.
அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.
இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.
இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.
நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.
எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழக உறவுகளுக்கு நன்றி
காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
எனது அன்பான மக்களே!
சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.
போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்
அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.
போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.
தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.
எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.
சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.
வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.
மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.
சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?
தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.
புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?
தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.
சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.
ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை
பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.
இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.
தொடர்ந்து போராடுவோம்
எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு
இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.
அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
http://www.tamilmann.com/2008/11/27/312#more-312
மாவீரர்கள் அனைவருக்கும் தமிழீழ தேசியத் தலைவர்- தளபதிகள் முதன்மைச் சுடரேற்றி வணக்கம்
தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்கள் அனைவருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களும் முதன்மைச்சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.
தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மாவீரர் நாள் உரையை இன்று வியாழக்கிழமை பிற்பகல் 5:40 நிமிடத்துக்கு நிகழ்த்தினார். தொடர்ந்து மாவீரர்கள் அனைவரையும் ஒன்று சேரப்போற்றும் தூயவேளை 6.05 நிமிடத்துக்கு நினைவொலி எழுப்பல் மூலம் தொடங்கியது. எங்கும் எழுப்பப்பட்ட நினைவொலியில் மாவீரர்களின் வீரம் ஒலித்து தாய் மண்ணை நிரப்பியது.
தொடர்ந்து 6.06 நிமிடத்துக்கு மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. 6.07 நிமிடத்துக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மாவீரர்களுக்கான முதன்மைச்சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தினார். சமவேளையில் மாவீரர் துயிலுமில்லங்கள், மாதிரி மாவீரர் துயிலுமில்லங்கள், மாவீரர் மண்டபங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் முதன்மைச்சுடர்களை ஏற்றினர். அதேவேளை, மக்களும் சுடர்களை ஏற்றி எங்கள் தாயக விடுதலைக்காக தம்மை ஈந்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர். மக்களின் வீடுகளிலும் சுடர்களை ஏற்றப்பட்டன. சிறிலங்கா படை வல்வளைப்புப் பகுதிகளில் மக்கள் தமது அகங்களில் சுடர்களை ஏற்றினர். இதேவேளை, புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் மாவீரர்களுக்கு நினைவொலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர்கள் ஏற்றப்பட்டன.
கிளிநொச்சி நகர் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தளபதி கேணல் தீபன்
மட்டக்களப்பில் தரவை துயிலுமில்லத்துக்கு தளபதி உமாராம் தாண்டியடி துயிலுமில்லத்துக்கு மாவடி மும்மாரிக் கோட்ட படையப் பொறுப்பாளர் கலைமருதன் மாவடி மும்மாரியில் மாவடி மும்மாரிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பொன்மதன் வாகரைப்பகுதியில் ஆண்டாங்குளம் துயிலுமில்லத்துக்கு ஆண்டான்குளம் கோட்டப் படையப் பொறுப்பாளர் புஸ்பன் கரடியனாற்றுப் பகுதியில் கரடியனாற்று கோட்ட படையப் பொறுப்பாளர் மோகன் ஆகியோர் முதன்மைச்சுடர்களை ஏற்றினர். விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத்தளபதி கீர்த்தி
முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் தளபதி கேணல் சொர்ணம்
அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத்தளபதி பூரணி உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் முல்லைத்தீவு கடலில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை வட்டக்கச்சி மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் செஞ்சோலைப் பொறுப்பாளர் சுடர்மகள் கண்டாவளை மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி சிறப்புத்தளபதி விமல்
உடையார்கட்டு மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் படைய தொடக்கப் பயிற்சிக்கல்லூரி சிறப்புத்தளபதி கேணல் ஆதவன் புதுக்குடியிருப்பு மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழ்க்குமரன் ஒட்டுசுட்டான் மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் தளபதி கேணல் ஜெயம் மட்டக்களப்பு-அம்பாறை மாவீரர் மண்டபத்தில் ஜெயந்தன் படையணி ஆளுகைப் பொறுப்பாளர் பவான் இம்ரான்-பாண்டியன் படையணி மாவீரர் மண்டபத்தில் கிளிநொச்சி கட்டளைத்தளபதி வேலவன் லெப். கேணல் குட்டிசிறீ மோட்டார் படையணி மாவீரர் மண்டபத்தில் படையணி நிர்வாகப் பொறுப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் முதன்மைச்சுடர்களை ஏற்றினர்.
சிறிலங்கா படை வல்வளைப்பால் தமது மண்ணை இழந்து இடம்பெயர்ந்த மக்கள் மாதிரி மாவீரர் துயிலுமில்லங்களில் தமது உறவுகளுக்காக உணர்வெழுச்சியுடன் சுடர்களை ஏற்றி வழிபட்டனர். தாய்மண்ணில் தமது உறவுகளுக்கு சுடர்களை ஏற்ற வேண்டும் என்ற உறுதியை எடுத்து அவர்கள் மாவீரர்களின் உணர்வில் கலந்திருந்தனர். சுடர்களின் ஒளியில் மாவீரர்களின் ஈகம் சுடர்விட்டது. கிளிநொச்சி நகரினை இன்று கைப்பற்றி தமது சிங்கக்கொடியினை ஏற்றுவதற்கு சிறிலங்கா படைத்தரப்பு திடசங்கற்பம் பூண்டு கடந்த சில நாட்களாக கடுமையாக பல முன்நகர்வு முயற்சிகளினை மேற்கொண்டிருந்தது.
இம் முயற்சிகள் யாவற்றினையும் விடுதலைப் புலிகள் முறியடித்து புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் தீபன் கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் முதன்மைச் சுடரினை ஏற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"மினி சுனாமி"!:கடலூர் முதல் நாகை வரை புயல் கோர தாண்டவம்
|
தாஜில் மீண்டும் குண்டுவெடிப்பு
மும்பையில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள தாஜ் ஓட்டலில் இன்று மீண்டும் குண்டு வெடித்தது.ஓட்டலுக்குள் பதுங்கியுள்ள பயங்கரவாதிக்கும்,பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று காலை மீண்டும் துப்பாக்கி சண்டை மூண்டுள்ளது. இதனிடையே ஓபராய் ஓட்டலில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து 93-பேர் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.மும்பையில் நேற்று முன்தினம் இரவு நட்சத்திர ஓட்டல்கள் தாஜ் மற்றும் ஓபராய்க்குள் பயங்கரவாதிகள் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாஜ் ஓட்டலுக்குள் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்தவர்கள் நேற்று மீட்கப்பட்டனர்.ஒரே ஒரு பயங்கரவாதி மட்டும் ஓட்டலுக்குள் இன்னும் பதுங்கியுள்ளான்.அவனுடன் இன்று காலை பாதுகாப்பு படையினர் மீண்டும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் தாஜ் ஒட்டலின் பழைய கட்டிடத்தின் தரை தளத்தில் இன்று மீண்டும் குண்டு வெடித்துள்ளது.அந்த பயங்கரவாதியின் பிடியில் 2-பேர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.இந்த நடவடிக்கை சிலமணி நேரங்களுக்குள் முடிவடைந்து விடும் என்று பாதுகாப்பு படையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே மும்பையில் ஓபராய் ஓட்டலுக்குள் பயங்கர வாதியின் பிடியில் இருந்த 93-பேர் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு பயணிகள் ஆவர்.ஓட்டலுக்குள் இருந்து மீட்டு வரப்பட்ட அவர்கள்,கார்களில் ஏற்றப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். தாஜ் மற்றும் ஓபராய் ஓட்டல்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக மும்பை போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1227863974&archive=&start_from=&ucat=1& |
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல்:20-ஓவர் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் பாண்டிங் சொல்கிறார்
மும்பையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சாம்பியன் "லீக்" 20-ஓவர் போட்டி அங்கு நடைபெறுமா?என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அங்கு நடைபெற இருந்த போட்டிகள் பெங்களூருக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.அங்கு 3-ஆட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையே மும்பை குண்டு வெடிப்பை தொடர்ந்து சாம்பியன் லீக் 20-ஓவர் போட்டியை இந்தியாவில் நடத்த பாண்டிங் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.வேறு நாட்டுக்கு போட்டியை மாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.விக்டோரியா,மேற்கு ஆஸ்திரேலியா அணிகள் இந்தியாவில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சாம்பியன் "லீக்" 20-ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியாவில் இருந்து 2-அணிகள் பங்கேற்கின்றன. மேலும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹைடன் மைக்கேல் ஹஸ்சி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும்,வார்னே,வாட்சன் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் விளையாடுகிறார்கள். http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1227771071&archive=&start_from=&ucat=4& |
கல்லூரி மாணவர் தோற்றத்தில் பயங்கரவாதிகள்:"டெக்கான் முஜாகிதீன்" பொறுப்பேற்பு
இதுவரை வெளியில் தெரியாத, "டெக்கான் முஜாகிதீன்" என்ற பயங்கரவாத அமைப்பு, மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளில், ஏ.கே., 47 ரக துப்பாக்கிகளுடன், டி-ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் சகிதம் இளைஞர்களாக, "டெக்கான் முஜாகிதீன்" பயங்கரவாதிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் கறுப்பு நிறத்தில் டி-ஷர்ட்டும், நீல நிறத்தில் ஜீன்ஸ் பேன்ட்டும், அணிந்திருந்தனர். தப்ப உதவிய அவசர வழி: மும்பை தாஜ் ஓட்டலில் பயங்கரவாதிகள் புகுந்த உடனேயே, அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தப்புவதற்கு, தீ விபத்தின் போது தப்புவதற்கு பயன்படும் அவசர வழி பெரிதும் உதவியுள்ளது. பயங்கரவாதிகள் நுழைந்ததுமே, ஓட்டல் அறைகளில் தங்கியிருப்பவர்கள் எச்சரிக்கப்பட்டு, அவசர வழியில் தப்பிக்கும் படி தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெளிநாட்டினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், அவசர வழியைப் பயன்படுத்தி தப்பினர். தப்பி வெளியேறியவர்களின் முகத்தில் பீதி தென்பட்டது. சேதமடைந்த பகுதிகளை புதுப்பிக்க தாஜ் முடிவு: பயங்கரவாதிகளின் தாக்குதலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள தாஜ் ஓட்டல், முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, அதன் பழைய பொலிவு கொண்டு வரப்படும் என்று ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது. டாடா குழும இந்திய ஓட்டல்கள் உரிமையாளர் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்தியாவின் ஒரு சின்னமாக விளங்கும் தாஜ் ஓட்டல், ஒவ்வொரு அங்குலமும் புதுப்பிக்கப்படும். தற்போதைய பதட்டமான நிலையை மாற்றி,முழு அமைதியை ஏற்படுத்த எங்களின் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீ அமெரிக்கனா?பிரிட்டீஷா? பயங்கரவாதிகள் கூச்சல்: மும்பை தாஜ், ஓபராய் ஓட்டல்களில், தங்கியிருந்த அமெரிக்க, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களை தான், பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். ஓபராய் ஓட்டலில் இருந்து தப்பி வந்த சிலர் கூறியதாவது: ஓட்டலில் திடீரென அடுத்தடுத்து குண்டு மழை பொழிந்தது. சரமாரியாக துப்பாக்கியால் சுடும் சத்தம் தொடர்ந்து கேட்டபடி இருந்தது. எங்கும் புகை மூட்டம் காணப் பட்டது; பதட்டமும் உச்சநிலையில் இருந்தது. பயங்கரவாதிகள் நள்ளிரவில் கூச்சல் போட்டபடி இருந்தனர். அறைகளில் புகுந்த அவர்கள், "நீ அமெரிக்கனா... பிரிட்டீஷ்காரனா" என்று கேட்டபடியே இருந்தனர். இந்த இரு நாட்டவர் என்று பாஸ்போர்ட்களை வைத்து தெரிந்து கொண்ட பின், அவர்களை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து வைத்துக் கொண்டனர். அதிரடிப்படையினர் ஓட்டலில் நுழைந்த பின், பல அறைகளில் இருந்து , அங்கு தங்கியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். ஆனால், சில அறைகள் காலியாக இருந்தன. அங்கு தங்கியவர்கள் வெளிநாட்டவர் என்று தெரியவந்தது. அறை வாரியாக கணக்கெடுத்து, வெளிநாட்டவர் பற்றிய பட்டியல் எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேடுதல்பணியும் நடந்து வருகிறது. நேற்று பிற்பகலிலும், பயங்கரவாதிகள் ஓட்டலில் துப்பாக்கியால் சுட்டபடி இருந்தனர். தாஜ், ஓபராய் ஓட்டல்களில் குண்டு சத்தம் கேட்டபடி இருந்தது. டெக்கான் முஜாகிதீன் : பயங்கரவாதத்தின் புதிய பெயர்!: மும்பையில் நேற்று நடந்த பயங்கரவாத சம்பவத்துக்கு "டெக்கான் முஜாகிதீன்" எனும் புதிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு "இந்திய முஜாகிதீன்" அமைப்புடன் தொடர்புள்ளதாக இருக்கலாம் என்று உளவுத்துறை சந்தேகிக்கிறது. இந்த ஆண்டில் பெரிய அளவிலான தொடர் குண்டு தாக்குதல்களை இந்திய முஜாகிதீன் அமைப்பு நடத்தியது. ஜெய்ப்பூர், ஆமதாபாத், பெங்களூரு, டில்லி உள்ளிட்ட பல்வேறு இந்திய நகரங்களில் நடந்த இக்குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு "இந்திய முஜாகிதீன்' பொறுப்பேற்றது. தடைசெய்யப்பட்ட "சிமி' மற்றும் "லஷ்கர்- இ-தொய்பா" அமைப்பினரைக் கொண்டு துவக்கப்பட்டதுதான் "இந்திய முஜாகிதீன்' அமைப்பு. "சிமி' அமைப்பினர் கைதாகி இருப்பதால், அவ்வப்போது இந்த அமைப்பு புதிய பெயரில் செயல்படுகிறது. அதுபோன்று தற்போது "டெக்கான் முஜாகிதீன்" என்ற புதிய பெயரை சூட்டிக்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பொதுவாக விசாரணை அதிகாரிகளை குழப்புவதற்காக ஒரு அமைப்பு செய்த பழியை இன்னொரு அமைப்பு ஏற்றுக் கொள்வது இந்தியாவில் இதற்கு முன்பு நடந்திருக்கிறது. இதற்காகவே பல அமைப்புகள் தங்கள் பெயரை அடிக்கடி மாற்றிக் கொள்கின்றன. இந்த சம்பவத்தில்தான் முதன்முறையாக "டெக்கான் முஜாகிதீன்" அமைப்பு வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. இந்த அமைப்பின் பெயரில் உள்ள டெக்கான் எனும் வார்த்தை, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் பகுதிகளை குறிக்கும். தக்ஷிண எனும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்ட ஆங்கில சொல் இது. முஜாகிதீன் எனும் அரபு சொல்லுக்கு "போராளிகள்" என்பது பொருள். "ஜிகாத்" எனும் வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை பெறப்பட்டது. ஆகவே மத்திய மற்றும் தெற்கு மாநிலங்களில் தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த அமைப்பு தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வருகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உளவுத் துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு திட்டமிடும் அளவுக்கு செயல்பட்டுள்ள இந்த அமைப்பு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் செயல் படும் பிற பயங்கரவாத அமைப்புகளிடமிருந்தும் உதவிகளைப் பெற்றுள்ளது. இஸ்லாமியர்கள் மீது பழிவாங்கல் மற்றும் அவமானப்படுத்துதல் நடவடிக்கைகளுக்காகத்தான் இந்த சம்பவம் என்று டெக்கான் முஜாகிதீன்கள் அனுப்பிய இ-மெயிலில் குறிப்பிட்டுள்ளனர். இதில் மவுலானா முகமது அல் ஹசன் காஸ்மி (49) என்பவரது பெயரை குறிப்பிட்டு அவரை இழிவு படுத்தியதற்காகத்தான் இந்த தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளனர். காஸ்மி, மும்பை அந்தேரியில் கடை நடத்தி வருகிறார். அஞ்சுமான் மினேஸ் ரசூல் எனும் இஸ்லாமிய கமிட்டியை நடத்தி வருகிறார். இவரது முகவரியில் ஒரு பயங்கரவாதியை தேடி பயங்கரவாத எதிர்ப்பு குழுவினர் சென்றனர். அப்போது நடந்த சம்பவத்தை முஜாகிதீன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், எனக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை என்று காஸ்மி கூறியிருக்கிறார். http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1227861690&archive=&start_from=&ucat=1& |