சமீபத்திய பதிவுகள்

இந்து மதமும் பெண்களும் (பாகம் 8)

>> Wednesday, October 1, 2008

இந்து மதம் பெண்களை மிருகங்களை விடக் கேவலமாக கருதுவதை இதுவரை சான்றுகளோடு பார்த்த நாம், அதற்கான காரணத்தை இனிப் பார்ப்போம்.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அவைகள் ஆரியர்களின் வருகையோடு சம்பந்தப்பட்டவை. மத்திய ஆசியாவில் இருந்து பாலைவனங்களையும், மலைகளையும் கடந்து நெடிய பயணம் மேற்கொண்டு இந்தியாவிற்கு ஆரியர்கள் வந்த போது, அவர்கள் பெண்களை அழைத்து வரவில்லை.

எந்த மக்களை அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் ஆரியர்கள் இழிவுபடுத்தினர்களோ, அந்த மக்களிடம் இருந்துதான் தமது பெண் துணைகளை பெற்றுக் கொண்டார்கள். அந்த வகையில்தான் பெண்களும் சூத்திரர்களும் ஒன்று என்று இந்து ஆரிய வேதங்கள் குறிப்பிடுகின்றன.

ஆரியர்கள் இந்தியாவிற்கு நுழையும் போது பெண்களை அழைத்து வரவில்லை என்பதை பல வரலாற்று அறிஞர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளார்கள். இந்த ஆய்வுகளை ஆரியர்களின் புராணங்களும் மறைமுகமாக ஒத்துக் கொள்கின்றன.

புராணங்களிலும் வேதங்களிலும் மன்னர்களும், ரிசிகளும் தமது துணைகளை பழங்குடி மற்றும் சூத்திரர் என்று வகைப்படுத்தப்பட்ட மக்களிடம் இருந்தும் பெற்றுக் கொள்கின்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுவதையும் கவனிக்கலாம். ஆரியர்களின் வெற்றியைப் பாடும் இராமாயணத்தின் கதாநாயகியாகிய சீதையும் மண்ணில் இருந்து தோன்றியவள் என்பதையும் இங்கு நினைவுபடுத்துகின்ற பொழுது, இவைகள் சொல்கின்ற உட்கருத்துக்கள் புரியும்.

இப்படி தாம் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தியவர்களிடம் இருந்து பெற்ற பெண்களையும் சூத்திரர்களைப் போன்றே இழிவாக வரையறுக்கு வேண்டிய தேவை ஆரியர்களுக்கு உருவாகிவிட்டது. இதை விட பெண்களை இழிவுபடுத்துவதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது, இந்தியாவில் இருந்த வழிபாட்டு முறைதான் அந்தக் காரணம்.

உலகின் முதலாவது சமூகம் தாய் வழிச் சமூகமாகவே இருந்தது. பெண்களை மதித்து, பெண்களுக்கு கீழ்படிந்து, பெண்களை தெய்வமாக வழிபட்ட சமூகமாகவே அன்றைய சமூகம் இருந்தது. பின்பு ஆணாதிக்க சமூகம் உருவான போது பெண்களை மதிப்பதும், வணங்குவதும் இல்லாது போயின அல்லது குறைந்து போயின.

அதே வேளை பெண்களை சமமாக மதித்தார்களோ இல்லையோ, பெண் தெய்வங்களை முதற் தெய்வமாக வழிபடுவது மட்டும் பல இடங்களில் தொடர்ந்தது. பண்டைய நாகரீகங்களில் பெண் தெய்வ வழிபாடுகளே முதன்மை பெற்றிருந்தன. அதே போன்று சிந்து வெளிநாகரீகத்திலும் பெண் தெய்வ வழிபாடு உச்சம் பெற்றிருந்தது.

சிந்து வெளிநாகரீகத்தை கண்டுபிடித்த தொல்லியல் வல்லுனரான சேர் ஜோன் மார்ஸல் சிந்து வெளியில் பெண் தெய்வ வழிபாடு முதன்மையானதாக இருந்ததற்கான சான்றுகள் பலவற்றை கண்டுபிடித்தார். உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம். ஒரு இலச்சனையில் இரண்டு அரச மரக் கிளைகளுக்கு இடையில் ஒரு பெண் தெய்வம் நிற்கின்றது. அந்தப் பெண் தெய்வத்தை வணங்கியபடி மக்களும் மிருகங்களும் நிற்கின்றன. இப்படி எல்லோரும் வணங்கும் முழு முதற் தெய்வமாக பெண் தெய்வமே இருந்தது என்பதற்கு சான்றாக பல ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சிந்து வெளிநாகரீகத்தை தொடர்ந்து ஆராய்ந்தவர்களும் சிந்து வெளியில் பெண் தெய்வ வழிபாட்டு சமூகமே இருந்தது என்பதை உறுதிப்படுத்தினார்கள்.

அப்படியே தமிழகம் நோக்கி எமது பார்வையை திருப்பினால், அங்கும் பெண் தெய்வ வழிபாடே முதன்மை பெற்றிருந்ததைக் காணலாம். சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்தை "பெருங்கற்படைக் காலம்" என்று அழைப்பார்கள். இக் காலப் பகுதியில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டுத் தெய்வமாக "கொற்றவை" என்கின்ற பெண் தெய்வம் விளங்கி வந்தது.

பெருங்கற்படைக் காலத்து மக்கள் ஆநிரை கவர்கின்ற எயினர்களாகவும், வேட்டுவர்களாகவும் வாழ்ந்தனர். இந்த மக்கள் ஆநிரை கவரச் செல்கின்ற போதும், வேட்டைக்கு செல்கின்ற போதும் முதலில் கொற்றவையை வணங்கிய பின்பே செல்வர். இவர்களுடைய அனைத்து சடங்குகளிலும் கொற்றவை வழிபாடு இடம்பெற்றிருந்தது.

சிந்து வெளிநாகரீகத்தில் மக்களாலும், மிருகங்களாலும் வணங்கப்படுவது போன்று காட்சி தருகின்ற பெண் தெய்வம் ஆநிரை கவர்கின்ற எயினர்கள் வணங்கிய கொற்றவையா என்பது ஆய்வுக்கு உரியது.

சங்க இலக்கியங்கள் கொற்றவையை முருகனின் தாய் என்று குறிப்பிடுகின்றன. முருகனைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களிலும் "கொற்றவை சிறுவ" என்றும் "மலைமகள் மகனே" என்றும் கொற்றவை முதன்மைப்படுத்தப்படுகிறாள். ஆனால் சங்க காலத்தில் கொற்றவை வழிபாடு அருகிவிட்டது. கொற்றவையை வைத்து செய்யப்பட்ட சில வழிபாடுகள் சங்க காலத்தில் முருகனைக் வைத்து செய்யப்பட்டதை காணக் கூடியதாக இருக்கிறது.

சங்க காலத்தில் தமிழர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்களவு ஆரியர்களின் செல்வாக்கு ஊடுருவி விட்டதை இங்கே குறிப்பிட வேண்டும். அதுவரை தாய்வழிச் சமூகமாக இருந்த தமிழர்கள் அதன் பிறகு பெண் தெய்வங்களை தவிர்த்துக் கொண்டு, ஆண் தெய்வங்களை வழிபடத் தொடங்கினார்கள்.

இங்கே ஒரு விடயத்தை நாம் கவனிக்க வேண்டும். ஏறக்குறைய ஒரு ஆயிரம் ஆண்டுகள் கொற்றவையை மக்கள் வணங்கினார்கள். பின்பு கொற்றவை இருந்த இடத்தில் முருகன் வந்து விடுகின்றான். அப்படி முருகனைக் கொண்டு வருவதற்கு "கொற்றவையின் மகனே முருகன்" என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. சில நூறு ஆண்டுகள் கழிந்த பின்பு முருகன் இருந்த இடத்தில் "ஸ்கந்தன்" வந்து உட்கார்ந்து கொள்கிறான். இங்கே "முருகனும் ஸ்கந்தனும் ஒன்றுதான்" என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

(பெண் தெய்வ வழிபாட்டுச் சமூகமாக இருந்த தமிழர்கள், பின்பு ஆண் தெய்வ வழிபாட்டுச் சமூகமாக மாறி, பின்பு ஆரிய வழிபாட்டுச் சமூகமாக மாறிவிட்டதை கொற்றவை, முருகன், ஸ்கந்தன் என்கின்ற மூன்றையும் வைத்து இலகுவாக புரிந்து கொள்ளமுடியும்.)

இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். ஆண் தெய்வ வழிபாட்டினை உடைய ஆரியர்கள் இந்தியாவிற்குள் தமது தெய்வங்களை பரப்புவதற்காக, அந்த மண்ணின் மக்களுடைய தெய்வங்களை இழிவுபடுத்தினார்கள். பெண் தெய்வ வழிபாட்டை கேவலப்படுத்தும் நோக்கோடு, பெண்களையே கேவலப்படுத்தினார்கள். பெண் தெய்வங்கள் பற்றி காமம் சார்ந்த கதைகளையும் புனைந்தார்கள்.

ஆரம்பத்தில் ஆரியர்கள் பெண்கள் விடயத்தில் ஒரு சமரசப் போக்கை கடைப்பிடித்ததை சில இடங்களில் காணக் கூடியதாக இருக்கிறது. இந்திய மண்ணிலே பெண்கள் கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். சங்க இலக்கியங்களை படைத்த புலவர்களில் ஏறக்குறைய 50 பேர் பெண்கள் என்பதை இங்கே நினைவில் கொள்க. பெண்கள் கல்வி கற்றவர்களாக இருந்ததோடு மக்கள் தமது முதற் தெய்வங்களாக பெண் தெய்வங்களையும் வழிபட்டார்கள்.

ஆரியர்களும் இவைகளைப் பார்த்து "பெண் ஆணை விட நான்கு மடங்கு அறிவானவள்" என்று கூட தமது வேதங்களில் எழுதினார்கள். ஆணை விட பெண் பலம் மிக்கவள் என்றும் எழுதினார்கள். பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்த ஆதே ஆரியர்கள் தமது புராணத்தில் வாதில் ஆண்களை வென்ற அறிவு மிக்க ஒரு பெண்ணையும் படைத்திருக்கிறார்கள்.

உலகில் இருந்து வந்த அனைத்து அறிஞர்களையும் வாதம் செய்து வென்று, தன்னுடைய துணையை தானே தேர்ந்தெடுத்து, தன்னுடைய துணைக்கு வழிகாட்டியாக இருந்து, பின்பு கணவனோடு சேர்ந்து துறவும் மேற்கொண்ட மைத்ரேயி என்கின்ற ஒரு பெண் பாத்திரமும் வேதங்களில் வருகிறது. ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது, அங்கே இருந்து அறிவு மிக்க பெண்களைக் கண்டு இப்படி ஒரு பாத்திரத்தை அவர்கள் தமது கதைகளில் உருவாக்கியிருக்கக் கூடும்.

ஆனால் பின்பு மெது மெதுவாக அவர்கள் மைத்ரேயிக்களை இல்லாது செய்து, ஆணுக்கு அடங்கி நடக்கின்ற முட்டாள்தனமான சீதைகளையும் நளாயினிகளையும் உருவாக்கினார்கள். பெண்களுக்கு கல்வியை தடை செய்து அடக்கி ஒடுக்கினார்கள்.

இதற்கான காரணம் தமது மதத்தை (ஆண் தெய்வ வழிபாடு) இந்தியாவில் பரப்புவதுதான். அதற்கு தடையாக நின்ற பெண் தெய்வங்களையும், பெண்களின் அறிவையும் இழிவு செய்து இல்லாது ஒழித்தார்கள். ஒழிக்க முடியாத சில இடங்களில் சமரசம் செய்து கொண்டார்கள். பெண் தெய்வங்களை தம்முடைய ஆண் தெய்வங்களுக்கு அடங்கி நடக்கின்ற மனைவிகளாகவும், துணைவிகளாகவும் மாற்றினார்கள்.

(அடுத்த பாகத்துடன் முடிவுறும்)
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP