ஆங்கிலம் தெரியாதவர்கள் தயவு செய்டு இனிமேல் இங்கு வரவேண்டாம்
>> Thursday, May 8, 2008
ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய தடை! |
லண்டன்: போதிய ஆங்கில அறிவு இல்லாமல் யாரும் இனிமேல் இங்கிலாந்துக்குச் செல்ல முடியாது. குறிப்பாக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கட்டாயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களால் இங்கிலாந்துக்குள் வர முடியாது என அந்த நாட்டு அரசு தடாலடியாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்துக்குள் வர விரும்புவோருக்கு புதிய சட்ட திட்டங்களை அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி போதிய ஆங்கில அறிவு இல்லாவிட்டால் இனிமேல் இங்கிலாந்துக்குள் நுழைய முடியாதாம். இந்தப் புதிய உத்தரவின் மூலம் ஆண்டுக்கு 20 ஆயிரம் வெளிநாட்டினரை தடுக்க முடியும் என அந்நாட்டு அரசு கருதுகிறது.
இந்த புதிய விதிமுறைக்கு சர்வதேச விளையாட்டு வீரர்களும் விதி விலக்கல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் பெரும் பாதிப்படைவார்கள் என்று கருதப்படுகிறது.
குறிப்பாக பிரேசில் நாட்டு கால்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ, அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. எனவே இவர்களால் இங்கிலாந்துக்குள் நுழைவது இயலாத காரியமாகியுள்ளது.
யாருக்காகவும் இந்த விதிமுறையை விலக்கிக் கொள்ள முடியாது என்றும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து வகை விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் இங்கிலாந்து தெளிவுபடுத்தியுள்ளது.
சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்தால்தான் இங்கிலாந்துக்குள் இனி நுழைய முடியும் என்றும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளதால், பல நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், பல நட்சத்திர வீரர்கள் தங்களது நாட்டு அணியில் இடம் பெற முடியாத நிலை ஏற்படலாம் என கருதப்படுகிறது.
இந்தப் புதிய விதிமுறையை இங்கிலாந்து நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் லியாம் பைர்ன் நேற்று அறிமுகப்படுத்தினார்.
http://thatstamil.oneindia.in/news/2008/05/08/world-ronaldinho-may-be-debarred-from-british-visi.html
0 கருத்துரைகள்:
Post a Comment